Friday, December 21, 2012

தமிழினத்தந்தையின் இறுதி மணித்துளிகள் 

நன்றி: ஆனந்த விகடன்


 
வேப்பேரியில்  காலை 9 மணி. ஓர் ஓரத்தில் பெரியார் கடைசியாகப் பயன்படுத்திய 9595 எண் உள்ள வேன் நிற்கிறது. வேனுக்கு மேல் சக்கர நாற்காலி மடங்கிக்கிடக்கிறது. ஆகஸ்ட் மாதம் பெரியாருக்கு இந்த வேன் வழங்கப்பட்டது. வேனின் ஒரு கதவை மேடைபோல மாற்றி, பொதுக் கூட்டங்களில் அதிலேயே அமர்ந்து அவர் பேச வசதி செய்யப்பட்டு இருந்தது. 19-ம் தேதி தி.நகரில் கடைசியாக நடந்த பொதுக் கூட்டத்தில், இந்த வேனில் அமர்ந்துதான் பேசினார் பெரியார்.பேச்சின் இடையில் திடீரென்று அவர், ''ஐயோ... அம்மா...'' என்று உரத்த குரலில் வலி தாங்காமல் வேதனையுடன் கூவினார். கூட்டமே திடுக்கிட்டு ''என்ன... என்ன?'' என்று வேனை நோக்கிப் பாய்ந்தது. ஆனால், பிறகு பெரியார் எப்படியோ சமாளித்துக்கொண்டு நீண்ட நேரம் பேசினார்.
 சிந்தாதிரிப்பேட்டையிலும் பெரியாருக்கு ஒரு வீடு இருக்கிறது. அங்கே சந்தடி அதிகம் என்று அவர் தங்குவதற்காகப் பெரியார் திடலிலேயே பெரிய பங்களா ஒன்று கட்டப்பட்டது.பெரியார் அந்த பங்களாவை ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டார். ''இவ்வளவு பெரிய பங்களா எனக்கு எதற்கு?'' என்று அங்கே தங்க மறுத்துவிட்டார். பிறகு, விடுதலை அலுவலகத்தின் ஒரு பகுதியே இல்லமாயிற்று. பெரியார் தங்கியிருந்த இடம் எளிமையாகக் காட்சி தருகிறது. காலியாக உள்ள பெரியார் கட்டிலின் எதிரே, சோகமே உருவாக மணியம்மை அமர்ந்திருந்தார்.
 
பொதுக் கூட்டங்கள் இல்லாத நாட்களில் இரவு 7-30 மணிக்குப் படுக்கச் சென்றுவிடுவார் பெரியார். காலையில் சீக்கிரம் எழுந்துவிடுவார். கொதிக்கக் கொதிக்க ஒரு கப் காபி சாப்பிடுவார். பிறகு, சற்று நேரம் கழித்து இரண்டு இட்லி, மலைப்பழம் சாப்பிடுவார். பழங்களில் மலைப்பழம்தான் பெரியாருக்குப் பிடித்தது. பிற்பகல் 12 மணிக்குக் குறைவான சோறுடன் மட்டன் சாப்பிடுவார். சாதம் குழைவாக இருக்க வேண்டும். மட்டன் நன்றாகப் பக்குவம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இரண்டு மூன்று கறி வகைகள் கூடாது. ஏதாவது ஒன்றுதான் இருக்க வேண்டும்.
 
சரியாக 2.30 மணிக்கு 'அம்மா’ என்று மணியம்மைக்குக் குரல் கொடுப்பார். காபி வர வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு காபிதான். இடையே வேறு எதுவும் சாப்பிட மாட்டார். ஆனால், கழகத் தொண்டர்கள் அன்புடன் கொடுப்பதை மட்டும் சாப்பிடுவது உண்டு. ஒரு வேளைதான் சாப்பாடு. உணவுக்குப் பிறகு, கட்டித் தயிரில் சர்க்கரை போட்டுச் சாப்பிடுவார். இனிப்புகளை பெரியார் நிறையச் சாப்பிடுவார். இறுதி வரை அவருக்கு சர்க்கரை வியாதியோ, ரத்த அழுத்தமோ வரவில்லை. ஹெர்னியா தொல்லை மட்டும் பல ஆண்டுகளாக இருந்தது.
பெரியாருக்குப் பற்கள் கிடையாது. ஆனால், அவர் பேசுவதையோ, சாப்பிடுவதையோ பார்த்தால் அது தெரியாது. ஈறு பலமாக இருந்தது. முறுக்குகளைக்கூட பெரியார் மென்று சாப்பிடுவார்.
 
கடைசி நாட்கள்...
டிசம்பர் 21-ம் தேதி வட ஆற்காடு பயணம் தொடங்க இருந்தார் பெரியார். ஆனால், 20-ம் தேதி பிற்பகல், ஹெர்னியா தொல்லையால் வலி கண்டு சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அச்சமே இல்லாத பெரியாருக்கு, ஊசி குத்திக் கொள்வது என்றால் மட்டும் குழந்தைகளைப் போலப் பயம். ''பார்த்துக் குத்துங்க...'' என்று சொல்வார். சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவுடன், அந்த அறையில் இதற்கு முன்பு யார் இருந்தார்கள், அந்த நபருக்கு என்ன சிகிச்சை நடந்தது என்றெல்லாம் விசாரித்துஇருக்கிறார். ஏனோ, வேலூருக்குச் சென்று சிகிச்சை பெறவே அவர் விரும்பினார். அவர் விருப்பப்படியே, 21-ம் தேதி பிற்பகல் வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள்.
 
வேலூரில் சேர்த்தவுடன் ஓர் இன்ஜெக்ஷன் போட்டிருக்கிறார் டாக்டர் பட். உணவு, ஊசி மூலம் செலுத்தப்பட்டது. அன்று இரவு நன்றா கத் தூங்கியிருக்கிறார். மறுநாள் 22-ம் தேதி காலை 8.30 மணிக்கு எழுந்து, பேப்பர்களைப் படித்திருக்கிறார். ஹார்லிக்ஸ் சாப்பிட்டார். தூங்குவதற்காகத் தூக்க மருந்து கலந்த ஊசி போடப்பட்டது.
 
பிற்பகல் 2 மணிக்கு 'வீரமணி’ என்று அழைத்து, வயிற்றில் வலி மிகுதியாக இருப்பதாக டாக்டரிடம் சொல்லும்படி கூறி இருக்கிறார். வீரமணி டாக்டரை அழைத்து வந்தார். வாயு வினால் வலி இருக்கலாம் என்றும், எனிமா கொடுத்து வயிற்றைக் காலிசெய்தால் சரியாகும் என்றும் கூறிய டாக்டர், எனிமா கொடுத்தார். வயிறு சுத்தமான பிறகு, பெரியாருக்கு வலி குறைந்திருக்கிறது. அன்று இரவு 8 மணி வரை சரியாக இருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு பெரியாருக்குத் திடீரென்று மூச்சு வாங்கியது. தூங்கும்போது வாய் மூலம் சுவாசிக்கும் பழக்கம் உள்ளவர் பெரியார். அதனால் தொண்டைச் சளி கட்டிக்கொண்டு சிரமப்பட்டு இருக்கிறார். டாக்டர் இன்ஜெக்ஷன் கொடுத்தவுடன் சற்று சரியாயிற்று.
 
23-ம் தேதி தூக்க மருந்து கொடுக்கப்பட்டதால் தூக்க நிலையில் இருந்திருக்கிறார். ஆனால், உணர்வு இழக்கவில்லை. மணியம்மை குளுகோஸ் கொடுத்தபோது, 'என்ன அய்யா, வாயில ஊத்தணுமா? நீங்களே கையில எப்பவும் மாதிரி வாங்கிச் சாப்பிடுங்களேன்’ என்று கூறியபோது, பெரியார் கையில் வாங்கி குளுகோஸ் குடித்தார். புரை ஏறியிருக்கிறது. தலையில் தட்டிக்கொண்டார். 'எதையாவது சாப்பிட்டால் தாடியை அழுத்தமாகத் துடைத்துக்கொள்வதுபோல அப்போதும் துடைத்துக்கொண்டார்’ என்றார் வீரமணி.
23-ம் தேதி இரவு மூச்சு வாங்க ஆரம்பித்தது. பல முறை பேசி கெஞ்சிக் கெஞ்சி ஆக்ஸிஜன் டியூப்பை பெரியாரின் மூக்கில் வைத்தார் டாக்டர் ஜான்சன். ஆனால், பெரியார் அதைப் பிடுங்கி எறிந்துவிட்டார். கடைசியில் முகமூடி போன்று இருக்கும் ஆக்ஸிஜன் குழாயைப் பொருத்தினார்கள்.
 
24-ம் தேதி துயரம் மிக்க அந்தப் பொழுது விடிந்தது. 'பல்ஸ்’ குறைந்து டாக்டர்கள் நம்பிக்கை இழந்தார்கள். காலை 7-10 மணிக்கு மசாஜ் செய்து, இதயத்தை இயங்கச் செய்ய முயன்றார்கள். நேரிடையாக இதயத்துக்கு ஊசி போட்டார்கள். 7.22-க்கு பெரியாரின் உயிர் மெதுவாகப் பிரிந்தது.
 
''யார் இறந்தாலும் அழக் கூடாது என்பது அய்யாவின் கொள்கை. உயிர் பிரிந்த அய்யாவின் சடலத்தை அம்மா (மணியம்மை) அவர்கள் அப்படியே சற்று நேரம் பார்த்துக்கொண்டு இருந்தார். பின்னர், 22 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம் அய்யா அவர்கள் அவருக்கு அளித்த புடவையை எடுத்துவந்து, அவர் கால் மீது வைத்துவிட்டு அப்படியே நின்றார். அவர்கள் அப்படி நிற்பதைக் கண்டு சம்பத் உட்பட நாங்களும் கண்ணீரை அடக்கிக்கொண்டு நின்றோம். அங்கே பேரமைதி நிலவியது. பிறகு, அந்தப் புடைவையைக் காலடியில் இருந்து எடுத்து உடனே உடுத்திக்கொண்டார். எல்லோ ரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு, பெரியாருடைய கறுப்புச் சட்டையையும் கைலி யையும் கொண்டுவரச் செய்து, அவற்றை அய்யா அவர்களுக்கு அணிவித்தார். பெரியார் உடல் அருகே அசையாமல் அமர்ந்திருந்த அம்மா, வேனில் உடலை ஏற்றி வேலூரைவிட்டுப் புறப்பட்டவுடன் துக்கம் தாளாமல் கணவரின் காலடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு கதறித் தீர்த்துவிட்டார்.''
 
உணர்ச்சிமிக்க இந்த நிகழ்ச்சியைக் கண்கள் கலங்கக் கூறினார் விடுதலை வீரமணி

Friday, December 14, 2012

இ-மெயில் தமிழன்!
மெயிலைக் கண்டுபிடித்தது யார்? இதுவரை தெரியவில்லை என்றால் விடுங்கள்... இனி, தலை நிமிர்ந்து சொல்லுங்கள்...
 
இமெயிலைக் கண்டுபிடித்தது ஒரு தமிழன் என்று.
http://www.vikatan.com/av/2012/12/zjuyja/images/avp84b.JPG
தென் தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த அந்தக் கறுப்புத் தமிழனின் பெயர் சிவா அய்யாதுரை.இந்த ராஜபாளையத்துக் காரர் இப்போது வசிப்பது அமெரிக்காவில்.
'டைம்பத்திரிகை இவரை 'டாக்டர் இமெயில்என்று அழைக்கிறது. 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல், 'வாஷிங்டன் போஸ்ட், 'நியூயார்க் டைம்ஸ்எனப் பிரபல மீடியாக்கள்'இமெயிலைக் கண்டுபிடித்தவர்எனக் கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, 'டாக்டர் சிவாதான் இமெயிலைக் கண்டுபிடித்தவர்என்று செல்லும் இடங்களில் எல்லாம் பேசுகிறார். உலகின் பிரசித்தி பெற்றதும், மிகப் பெரியதுமான அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆவணக் காப்பகம் (Smithsonian museum), ''மின்சார விளக்கு, செயற்கை இதயம் போன்ற மிக முக்கியமான கண்டுபிடிப்புகளின் வரிசையில் இமெயிலையும் மதிப்பிட வேண்டும்!'' என்று வர்ணிக்கிறது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் சிஸ்டம்ஸ் விஷ§வலைசேஷன் (Systems Visualization) மற்றும் கம்பேரடிவ் மீடியா ஸ்டடீஸ்(Comparative Media Studies) ஆகிய இரு துறைகளில் பேராசிரியராக இருக்கும் சிவா அய்யாதுரை,நோம் சாம்ஸ்கி தலைமையில், இந்தியாவின் சாதிய அடுக்குநிலை தொடர்பாக ஆய்வுசெய்தவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் ஏழு நிறுவனங்களைத் தொடங்கி நடத்திவருபவர். (அதில் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்... அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை).
 
ஓர் அதிகாலை நேரத்தில் சிவா அய்யாதுரையுடன் நடத்திய மிக நீண்ட 'ஸ்கைப்உரையாடல் ஆச்சர்யங்களால் நிரம்பியது. ''ஹாய் பாரதி... வணக்கம்'' என்று அன்புத் தமிழுடன் வந்து அமர்கிற சிவா அய்யாதுரைக்கு 48 வயது.
 
''நீங்கள் யார்? இத்தனை நாளும் எங்கு இருந்தீர்கள்?''
''ஹா...ஹா... என் அப்பா அய்யாதுரைக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர். அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் பரமன்குறிச்சி. இருவரும் அந்தக் காலத்திலேயே நன்றாகப் படித்தவர்கள். ஆறு வயதுக்குள்ளாகவே எனக்குப் படிப்பின் மீது மிகப் பெரிய ஆர்வம் உண்டாகியது.மும்பையில் வசித்த எங்கள் குடும்பம், என்னை மேற்கொண்டு நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தது. இந்தியாவில் கோடை காலத்தில் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதைப் போன்ற... ஒரு சம்மர் கிளாஸில் 'ஃபோர்ட்ரான் 4 ­(FORTRAN IV) என்ற புரொகிராமிங் மொழியைக் கற்றுக்கொண்டேன். அப்போது எனக்கு பள்ளிப் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துகொண்டே வந்ததால், பள்ளியைவிட்டு நிற்கப்போவதாக அம்மாவிடம் சொன்னேன். அப்போது அம்மா 'யுனிவர்சிட்டி ஆஃப் மெடிசின் அண்ட் டென்டிஸ்ரியில் (University of Medicine and Dentistry of New Jersey) டேட்டா சிஸ்டம் அனலிஸ்ட்டாகப் பணிபுரிந்துகொண்டு இருந்தார். தன்னுடன் பணிபுரிந்த பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனிடம் என்னை அழைத்துச் சென்றார். மைக்கேல்சன், அப்போது அந்த மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகளைக் கணினி வழியாக ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியும் முயற்சி யில் இருந்தார். அவர் என்னைத் தன் ஆராய்ச்சி உதவியாளர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டார். சவால் நிறைந்த அந்தப் பணி என் மனதுக்குப் பிடித்திருந்தது.
 
அப்போது அந்த மருத்துவ மனையில் ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக 'மெமோரண்டம்எழுதுவார்கள். நோயாளிபற்றிய விவரம், மருத்துவர்பற்றிய விவரம், டூ, ஃப்ரம்,சப்ஜெக்ட் எல்லாம் எழுதப்பட்ட அந்த மெமோ ரண்டத்தை அங்கு இருக்கும் தபால் பெட்டி மூலம் மருத்துவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வார்கள். இதை அப்படியே மின்மயப்படுத்த வேண்டும்.அந்த மெமோரண்டத்தை மருத்துவமனையில் உள்ள எந்த ஒரு கணினியில் இருந் தும், மற்றொரு கணினிக்கு எலெக்ட்ரானிக் வடிவத் தில் அனுப்ப முடிய வேண்டும். இதுதான் எங்கள் நோக்கம்.
 
இந்த ஆராய்ச்சியில் நான் உருவாக்கியதுதான் இமெயில் சிஸ்டம். 'ஃபோர்ட்ரான் 4மொழியில் 50 ஆயிரம் வரிகள்கொண்ட அந்த புரொகிராமை எழுதியபோது எனக்கு வயது14. அது 1978-ம் ஆண்டு. அதற்கு இமெயில் (email) என்று பெயரிட்டேன். எலெக்ட்ரோ மெயில் என்பதன் சுருக்கம் அது. 'ஃபோர்ட்ரான் 4மொழியில் ஒரு புரொகிராமில் அதிகபட்சம் 5 எழுத்துருக்கள்தான் பயன் படுத்த முடியும் என்பதாலும்,இமெயில் என்ற சொல் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்ததாலும் அந்தப் பெயரை வைத்தேன்.அகராதியில் அதற்கு முன்பு இமெயில் என்ற வார்த்தையே கிடையாது!''
 
''ஆனால்,டேவிட் க்ராக்கர், ரே டாமில்சன் ஆகியோர் பெயர்கள்தான் இமெயில் கண்டுபிடித்தவர்கள்பற்றிய ஆய்வுகளில் பேசப்படுகின்றனவே?''
''அதெல்லாம் அப்போது. நான்தான் இ மெயிலைக் கண்டுபிடித்தேன் என்பதை ஸ்மித் சோனியன் ஆவணக் காப்பகம் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு, இந்த சர்ச்சை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.1978-ம் ஆண்டு உலகின் முதல் இமெயிலை எனது வழிகாட்டியான பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனுக்கு அனுப்பினேன். அது ஒரு டெஸ்ட் மெயில். அதன் ஒரிஜினல் புரொகிராமிங் கோடு, இப்போதும் ஸ்மித் சோனியன் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. பேராசிரியர் நோம் சாம்ஸ்கி என் ஆய்வுகளின் நேரடிச் சாட்சியாக இருக்கிறார்.
டேவிட் க்ராக்கர் கண்டுபிடித்தது 'டெக்ஸ்ட் மெசேஜ்அனுப்பும் தொழில்நுட்பத்தை.ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறோம் இல்லையா?அதைப் போல அவர் வெறுமனே டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாறிக்கொள்வதைக் கண்டறிந்தார். அதை இமெயில் என்று சொல்ல முடியாது. அதோடு ஒப்பிடுவதானால், நாம் தந்தி அனுப்புவதைத்தான் இமெயில் என்று அழைக்க வேண்டியிருக்கும். மாறாக, இமெயில் என்பது ஒரு முழுமையான சிஸ்டம். இன்று நாம் பயன்படுத்தும் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், டிராஃப்ட்ஸ், டு, ஃப்ரம், சப்ஜெக்ட், டேட்,பாடி, சிசி, பிசிசி, கம்போஸ், அட்டாச்மென்ட்ஸ், க்ரூப்ஸ், உள்ளிட்ட 86 வகையான இ மெயில் புரொகிராம்களை எழுதி, வடிவமைத்தது நான்தான். இதுதான் முழுமையான இமெயில் சிஸ்டம்.ரே டாமில்சன் இமெயிலில் இன்று பயன்படுத்தும் '@குறியீட்டைக் கண்டுபிடித்தார். அதற்கு மேல் அவரது பங்களிப்பு இதில் எதுவும் இல்லை.''
 
''ஆனால்,இமெயிலைக் கண்டறிந்தவர் நீங்கள்தான் என்பது ஏன் பெரிய அளவுக்கு வெளியே தெரியவில்லை?''
''அமெரிக்காவில் பலருக்குத் தெரியும். ஒருவேளை தமிழ்நாட்டுக்குத் தெரியாமல் இருக்கலாம். 1981-ம் ஆண்டு அமெரிக்க அரசிடம் இருந்து பெற்ற இமெயிலுக்கான 'காப்பிரைட்ஸ்இன்றும் என்னிடம்தான் இருக்கிறது. இங்கு கண்டுபிடிப்பு என்பது வேலையின் ஒரு பகுதி. ஆனால், எனது கண்டுபிடிப்பை இவர்கள் ஒப்புக்கொள்ளாமல் சர்ச்சை ஏற்படுத்தக் காரணம், புலம் பெயர்ந்த; கறுப்பு நிறத் தோல் உடைய; 14 வயதுச் சிறுவன் ஒருவன்... இமெயிலைக் கண்டுபிடித்தான் என்பதை இவர்கள் நம்ப மறுப்பது தான். 50 ஆயிரம் வரிகளைக்கொண்ட ஒரிஜினல் புரொகிராமிங் கோட் வெள்ளைத் தோல் உடைய ஒருவரிடம் இருந்தால், இந்தச் சர்ச்சைகளுக்கு வாய்ப்பே இல்லை!''
 
''இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தீர்கள்?''
''1993-ம் ஆண்டு நான் பி.ஹெச்டி. ஆய்வில் ஈடுபட்டு இருந்தபோது, கிளின்டன் அமெரிக்க அதிபர். அப்போது வெள்ளை மாளிகைக்கு நாள் ஒன்றுக்கு 5,000 இமெயில்கள் வந்து குவியும். அதை நிர்வகிக்கும் வேலை சிக்கலானதாக இருந்தது. ஆகவே, அந்த மெயில்களை வகைவாரியாகப் பகுத்துப் பிரிக்கும் தானியங்கித் தொழில்நுட்பத்தைக் கண்டறிவதற்கான போட்டி ஒன்றை அறிவித்தது வெள்ளை மாளிகை.147 பேர் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் நான் கண்டறிந்த 'எக்கோ மெயில் (Echo Mail) என்ற தொழில்நுட்பம் வெற்றிபெற்றது. பிறகு, இந்த 'எக்கோ மெயிலைஒரு நிறுவனமாகத் தொடங்கினேன். இன்று 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த நிறுவனம், உலகின் மிக முக்கியமான நிறுவனங்களைத் தனது வாடிக்கையாளர்களாகக்கொண்டு இருக்கிறது. அதுபோக, வேறு சில நிறுவனங்களையும் நடத்துகிறேன். கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட மூடப்படும் நிலையில் நஷ்டத்தில் இயங்கிய அமெரிக்கத் தபால் துறையில் எனது புதிய இமெயிலிங் சிஸ்டத்தை நடைமுறைப்படுத்தியபோது, அது லாபகரமாக மாறியது. அப்போது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பில் இருந்து தப்பினார்கள். அமெரிக்க ஊடகங்கள் என்னைக் கொண்டாடின.ஆனால், எனக்கு இந்தியாவில் பணிபுரியவே விருப்பம். அதே சமயம், அங்கு எனக்குக் கிடைத்தவையோ கசப்பான அனுபவங்களே...'' 
 
''என்ன நடந்தது இந்தியாவில்? நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டீர்கள் என்று அறிகிறேன்...''
''ஆம்,உண்மைதான். 2007-ம் ஆண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான சி.எஸ்.ஐ.ஆர். (கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்) துறையில் என்னைக் கூடுதல் செயலாளராக நியமித்தார் மன்மோகன் சிங். சில காலம் அங்கு இருந்தேன். அந்த சி.எஸ்.ஐ.ஆர்.நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆனால், 60 ஆண்டுகளில் அதில் உள்ளவர்கள் எதுவுமே செய்யவில்லை. எங்கும் லஞ்சம், ஊழல். அறிவியல் கண்டுபிடிப்புக்கான சூழலே அங்கு இல்லை.இதைப் பற்றி 'கண்டுபிடிப்புகளுக்குச் சுதந்திரம் வேண்டும்என்ற தலைப்பில் 47 பக்கத்துக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதை உலகின் முக்கியமான 4,000 விஞ்ஞானிகளுக்கு மெயில் அனுப்பினேன். உலக அளவில் அது பெரிய விவாதமானது.உடனே, இந்தியாவின் சட்டத்தை நான் மீறிவிட்டதாகச் சொல்லி, திடீரென ஒரு நாள் என் வீடு முடக்கப்பட்டது. நான் நேபாளம், கத்தார் வழியே அமெரிக்கா வந்தேன். 'சிவா அய்யாதுரையை வெளியேற்றியது இந்தியா செய்த பெரிய தவறுஎன்று பல விஞ்ஞானிகள் எழுதினார்கள். அதைப் பற்றி இந்தியா கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.இப்போதும் அங்கு சூழல் மாறிவிடவில்லை. அங்கு இருக்கும் நேர்மையற்ற அரசியல் சூழலில் அறிவியல் ஒருபோதும் வளராது!''
 
''உங்கள் பேச்சை வைத்துக் கேட்கிறேன்... நீங்கள் சயின்டிஸ்ட்டா, கம்யூனிஸ்ட்டா?''
''எம்.ஐ.டி-யில் படிக்கும்போது மாணவர் சங்கத்தில் இணைந்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.இலங்கையில் நம் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கொண்டு இருந்த சமயத்தில், அப்போது இலங்கை அதிபராக இருந்த பிரேமதாசாவை எதிர்த்து இங்கு போராடியது உட்பட. 'த ஸ்டூடன்ட்என்ற பெயரில் நான்கு ஆண்டுகள் பத்திரிகை நடத்தினேன். அதனால், நான் அடிப்படையில் கம்யூனிஸ்ட். பிறகுதான் சயின்டிஸ்ட். இன்று தொழில்நுட்பத்தையும் அறிவியல் வளர்ச்சியையும் பெரும் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற இணைய நிறுவனங்களும் செல்போன் கம்பெனிகளும் மக்களை அன்றாடம் கண்காணிக்கின்றன. சந்தர்ப்பம் வரும்போது மக்களுக்கு எதிராகக் கைகோத்துக்கொள்கின்றன. சமீபத்தில், எகிப்தில் நடந்த மக்கள் புரட்சியை, எஸ்.எம்.எஸ். அனுப்புவதைத் தடைசெய்து ஒடுக்க முயன்றதே இதற்குச் சிறந்த உதாரணம்!''
 
''உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?''
''எனது முழு வாழ்க்கையும் அறிவியலில்தான் செலவாகும். அதில் சந்தேகம் இல்லை. அமெரிக்காவிலும் இந்தியாவிலுமாக மாறி மாறி இயங்கவே விரும்புகிறேன். இந்திய சித்த மருத்துவத்தின் மேன்மைகளை ஆராய்ச்சி செய்து, அதைக் கிழக்குலகின் பாரம்பரிய மருத்துவத்துடன் இணைத்து, மருத்துவத் துறையில் புதிய புரட்சியை உருவாக்குவதுதான் என் அடுத்த இலக்கு. இன்றைய கார்ப்பரேட் உலகம், தொழில்நுட்பங்களையும், அறிவியலை யும், அறிவையும் மேலும் மேலும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது. அது எல்லோ ருக்கும் கைவராத கலை என்பதைப் போலச் சித்திரிக்கிறது.ஆனால், அப்படி அல்ல. உலகத்தில் ஆயிரமாயிரம் சாம்ஸ்கிகள், சிவாக்கள் இருக்கிறார்கள்.அவர்கள் அனைவரையும் வெளியே கொண்டுவர வேண்டும். நான் அடிக்கடி சொல்லும் வாசகத்தையே இங்கும் சொல்கிறேன்: புதுமைகளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், யாராலும் நிகழ்த்த முடியும்!''