Saturday, September 2, 2023

 குழந்தைகளைக் கவனியுங்கள்!


இணையம் என்பது கட்டற்ற பெருவெளி. அதில் தேடுதல் கடினம். ஆனால், தடயம் எப்போதும் உண்டு. ஒருமுறை பதிவு செய்துவிட்ட எதையும் எளிதாக அழித்துவிடாது. ஒரு பக்கம் மத்திய அரசு சமூக வலைதளப் பக்கங்களுக்குத் தரும் நெருக்கடிகளுக்கு எதிராக கருத்துச் சுதந்திரத்தின் பக்கம் நிற்க வேண்டியதிருக்கிறது. இன்னொரு பக்கம், இப்படியான வசவுச் சொற்களால் சூழும் அபாயங்களை எதிர்த்தும் குரல் எழுப்ப வேண்டியதிருக்கிறது. இணைய பாலியல் அத்துமீறல்களும், வசவுச் சொற்களும் எந்தச் சூழலிலும் கருத்துச் சுதந்திரத்தில் வராது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளுதல் அவசியம்.

சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் மதுமிதாவிடம் பேசினேன். ‘‘முதலில் நாம் இந்த விஷயத்தில் குழந்தைகளைக் குறை சொல்ல முடியாது; கூடாது. ஏனெனில், அவர்களுமே இத்தகைய பிரச்னைகளில் தங்களை அறியாமலே பாதிக்கப்பட்டவர்கள்தான். அனைத்துமே பெற்றோர்களின் வளர்ப்பில்தான் இருக்கிறது. அவர்கள் ஒரு பக்குவப்படும் மனநிலைக்கு வரும்வரையில் (டீன் ஏஜ் தாண்டும் வரை) அவர்களைக் குற்றவாளிகளாக்குவது அபத்தம். குடும்பத்திலும் சமுதாயத்திலும் நடக்கும் விஷயங்கள்தான் ஒரு குழந்தையை உருவாக்குகின்றன. தனக்கான தனித்துவம் உருவாகும் வரை, ஒரு குழந்தை கற்றுக்கொள்வது எல்லாமே இந்த மாதிரியான புறக்காரணிகள் மூலம்தான். ஆரோக்கியமான மனநிலையை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களிடம் ஒரு விஷயத்தைத் திணிப்பதால், இங்கு எதுவும் மாறப்போவதில்லை. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மனநலம் சார்ந்த விஷயங்களையும் சேர்த்துக் கற்றுத்தருவது அவசியம்.

CyberSpace என்பது நம்மால் கற்பனை செய்ய முடியாதது. வதந்திகள் செய்திகளாக வருவது தொடங்கி, எல்லா ஆபத்துகளுமே இணையவெளியில் அதிகம். நேரில் ஒருவர் இதுமாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபடும்போது, அவரை நாம் கண்காணிக்க முடியும். அதுவொரு தொடர்ச்சியான நிகழ்வா, அல்லது ஒருமுறை மட்டுமே நடந்த அசம்பாவிதமா, அதிலிருந்து எப்படித் தப்பிப்பது போன்றவற்றை ஒருமாதிரி கணிக்க இயலும். ஆனால், இணையவெளியில் இது சாத்தியமில்லாத ஒன்று. அநாமதேய நபர்கள் அதில் அதிகம். இந்த எல்லாவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். குழந்தைகளைத் தனிமையில் அதிக நேரம் விடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் Private Space என்பது முக்கியம்தான் என்றாலும், அதிக நேரம் தனிமையில் இருப்பது, அதுவும் அந்த வயதில் ஆபத்தானது. குழந்தைகளிடம் சின்னச் சின்ன விஷயங்கள் பற்றி உரையாடுங்கள். அவர்களிடம் ஒரு சூழலைக் கொடுத்து, அதுகுறித்துக் கருத்துக் கேளுங்கள். பெற்றோர்கள் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டிய நேரமிது.

சிறுவர்களின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். திடீரென கோபப்படுவார்கள். தொடர்ச்சியாக இணையத்தில் சில விஷயங்களைப் பார்ப்பதுகூட இதற்கான காரணிகளாக இருக்கலாம். PUBG, free fire போன்று வன்முறையைத் தூண்டும் விளையாட்டுகள் இங்கு எக்கச்சக்கம். ஒரு குழந்தை எத்தனை மணி நேரம் இந்த விளையாட்டுகளுக்கு ஒதுக்குகிறது என்பதையும் யோசிக்க வேண்டும். பெற்றோர்கள் சில விஷயங்கள் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். அந்தரங்க உறுப்புகள் பற்றிப் பேசக்கூடாது என்கிற காலத்தை எல்லாம் நாம் கடந்து பல யுகங்கள் ஆகிவிட்டது. இப்போது யாரும் பிரவுசிங் சென்டர் செல்வதுமில்லை. எல்லாமும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. குழந்தைகளுக்கு இணையாக பெற்றோர்களும் அப்டேட் ஆக வேண்டிய சூழலிது. செமினார், புத்தகங்கள் என இன்னும் அவர்களுக்கு விளக்கவுரை கொடுத்துக்கொண்டிருப்பது வீண். பத்து வயது வரை, தன் அப்பாதான் சூப்பர் ஹீரோ என நம்பும் ஒரு சிறுவன், அதன் பின் தன் அப்பா நல்லவர் என நம்ப ஆரம்பிப்பது முப்பது வயதைக் கடந்த பின்னர்தான். இடைப்பட்ட காலத்தில்தான் எல்லாமும் தலைகீழாக மாறிவிடுகின்றன. நல்லதைக் கண்டாலே வெறுத்து ஒதுக்கும் காலமது.

நான் பெரிய ஆள்’ என்கிற நிலையிலிருந்து குழந்தைகளை அணுகுவதே தவறானது. அதுவும் எதிர்மறைக் கருத்துகள் எளிதாகச் சென்றடையும் இக்காலத்தில், இம்மாதிரியான அணுகுமுறை தவறான பாதைக்கே இட்டுச் செல்லும். ‘சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக்கூடாது’ என முற்றிலுமாக அவர்களுக்கு நீங்கள் தடா சொன்னால், வேறு வழிகளில் அவர்களால் இதை எளிதாகவே அணுக முடியும். அதில் பாதிப்பு இன்னும் அதிகம். முதலில் பெற்றோர்கள், குழந்தைகளின் மொழியைப் புரிந்துகொள்ளுதல் அவசியம். ‘எம்டன் மகன்’ டைப் அப்பாவில் இருந்து யாரையும் சட்டென எஸ்.பி.பி பாணி அப்பாவாக மாறச் சொல்லவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் இருக்கும் நல்லதோடு, கெட்டவற்றையும் சொல்லிப் புரியவையுங்கள்’’ என்கிறார் அவர்.

ஒரு சிறுவன் செய்யும் தீய செயலை ஆயிரம் பேர் ஊக்குவிக்கும்போது, அவனுக்கு அதில் இருக்கும் தவறு கண்ணைவிட்டு மறைந்து, மரத்துப்போகும். ஆகவே பெற்றோர்களே, உரையாடத் தொடங்குங்கள்

 கலைஞர் எனும் பேராளுமை

இந்தியாவில் கலைஞருக்கு நிகரான ஆட்சியாளர்கள் மிகச்சிலரே. கலைஞரின் பலம் பெரியாரின் சமூகநீதி சிந்தனைகளையும் அண்ணாவின் அரசியல் சிந்தனைகளையும் முற்றாகச் செரித்து தனது ஆளுமையின் பகுதியாக்கிக்கொண்டதுதான். அவரால் எந்த நிலையிலும் இவர்களின் சிந்தனைப் புலம் துறந்தோ, மறந்தோ இயங்கவே முடிந்ததில்லை. அரசியல் சமரசங்களிலும் அவர்களின் அடிப்படைகளை அவர் கைவிட்டாரில்லை.


ஆட்சியாளராக கலைஞரின் சாதனைகளைப் பட்டியலிட முயல்வது வியர்த்தம். ஒற்றை வரியில் சொல்லலாம். இன்று தமிழ்நாடு கண்டிருக்கும் அரசியல், சமூகப் பொருளாதார மாற்றங்களின் ஒவ்வொரு இழையிலும் அவரது பங்களிப்பு இல்லாமல் இருக்கவே இருக்காது. 
மாநில சுயாட்சி, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், 
ஜாதி மறுப்பு திருமணங்களுக்குச் சலுகை, 
மகளிர் 30% (இப்போது 50%) உள்ளாட்சி ஒதுக்கீடு சிறப்புரிமைகள், 
மூன்றாம் பாலினத்தவர் அங்கீகாரம், 
துறைசாரா தொழிலாளர் நல வாரியங்கள் என்று அது நீளும். 

மாற்று ஆட்சியாளர்களது ஓரிரு மக்கள் நலம் சார்ந்த முன்னெடுப்புகளைச் செழுமைப்படுத்துவதே அவர் பாணி/ பணி. குறிப்பாக சமூகநீதி- இடஒதுக்கீடு தளத்தில் அவர் செய்த மாற்றங்கள் பெரிது. உண்மையைச் சொன்னால் சமூகநீதிக் கோட்பாட்டின் வேரில் வெந்நீர் ஊற்ற முனைந்த பிற ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, மக்களைத் திரட்டியும், சட்டப் போராட்டங்களை நடத்தியும் தடுத்தவர் கலைஞர். ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தபோது செயல்பட்டும், ஆட்சியில் இல்லாதபோது ஆட்சியாளர்கள் பெரியார்/ அண்ணா கோட்பாடுகளை விட்டு விலகியபோது தடுத்தும் ஐம்பதிற்கும் மேலான ஆண்டுகளாக ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தொடர்ச்சியை உறுதி செய்தவர் கலைஞர்.

சமூகநீதி ஆட்சியென்பதால் ஒரு சாராருக்கு மட்டுமான ஆட்சியல்ல கலைஞருடையது. 

பொது விநியோகத் திட்டம், 

பேருந்துகள் அரசுடைமையாக்கம், 

கூட்டுறவுத்துறை விரிவாக்கம், 

கிராமப்புறம் முழுதும் ஆரம்ப சுகாதார மையங்கள், 

மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி, 

அனைத்து ஜாதியினருக்குமான சமத்துவபுரம், 

தொழில்துறை வளர்ச்சிக்காக ஐம்பது கிலோமீட்டருக்கு ஒரு தொழிற்பேட்டை, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், 

ஸ்பிக் போன்ற அரசு-தனியார் கூட்டுத்துறை, 

எல்காட், 

மாநில அரசின் கணினிக் கொள்கை, 

சென்னை - மதுரை - கோவை என டைடல் பார்க்குகள், 

கிராமப்புற மாணவர்களுக்கு சலுகை, 

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை, 

தமிழில் கற்றோருக்கு முன்னுரிமை... 

இலவசங்கள் என இழித்துரைத்துவிட்டு இன்று இந்தியாவே பின்பற்றும் திராவிட மாடல் ஆட்சிக்கு வலுவான அடித்தளமிட்டவர் கலைஞர் எனும் திராவிட சிந்தனைச் சிற்பியே. வாய் ஓயாமல் பெரியார், அண்ணா பெயரை உச்சரித்து ஈரமுள்ள / நன்றியுள்ள மக்கள் நெஞ்சில் தனக்கும் அவர்களுக்குமான நீங்காத இடம் பிடித்தவர் கலைஞர்.

Sugar Free - Health free 

உடல் பருமனாக இருப்பவர்கள், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுடன் வாழ்பவர்கள் சர்க்கரை கலந்த பானங்கள் குடித்தாலோ, உணவுகளைச் சாப்பிட்டாலோ, அவர்களது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். அதனால் இன்சுலின் எதிர்ப்பு நிலை இன்னும் அதிகமாகும். எனவே அவர்கள் சர்க்கரை அல்லாத செயற்கை இனிப்புச் சுவைகூட்டிகளை உணவிலும் பானங்களிலும் கலந்து உட்கொள்வது வழக்கம். இவை தங்களுக்கு ஆரோக்கியமானவை என்றும், நன்மை தருபவை என்றும் இவர்கள் நம்பிவந்தனர். இந்த நம்பிக்கையைத் தகர்த்திருக்கிறது, சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்.


‘குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் உடல் பருமனைக் குறைப்பதற்கோ, நீரிழிவு போன்ற தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கோ சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் பயன் தருவதில்லை. இவற்றால் உடலுக்குப் பாதகமான விளைவுகள் உருவாகக்கூடும். இவற்றைத் தொடர்ந்து உபயோகிப்பதால் நீரிழிவு மற்றும் இதய நோய் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் தன்மையும் அதிகரிக்கிறது' என்கிறது அந்த அறிவுறுத்தல்.

சுகர் ஃப்ரீ
‘கலோரி இல்லாதது' என்றும் ‘சுகர் ஃப்ரீ' என்றும் அடையாளப்படுத்தி, இனிப்புச் சுவையைக் கூட்டுவதற்காக சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் பல உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. ஜீரோ கலோரி உணவுகள்/பானங்கள், சாக்லேட்கள், பபுள் கம், ஸ்வீட் வகைகள், கேக்குகள், பிஸ்கட்டுகள், பிரெட் போன்றவற்றிலும் இவை சேர்க்கப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தால் சாக்கரின், அஸ்பார்டேம், அசிசல்ஃபேம், சுக்ராலோஸ், நியோடேம், ஐசோமால்டோஸ் போன்ற சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை கலக்கப்பட்ட உணவை உண்ணும்போதும், பானங்களைப் பருகும்போதும், உடல் எடை ஏறாது என்றும் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்காது என்றும் நம்பி மக்கள் இவற்றை நுகர்கின்றனர்.

ஆனால், கலோரிகள் இல்லாத இத்தகைய இனிப்புச் சுவை கூட்டப்பட்ட உணவுகளையும் பானங்களையும் உட்கொள்ளும் ஒருவர், இவற்றில் வரம்பு மீற அதிக வாய்ப்புள்ளது. இதுவரை இத்தகைய இனிப்புச் சுவைகூட்டிகளை வைத்துச் செய்யப்பட்ட ஆய்வுகளில், இவை பாதுகாப்பானவை என்று அறியப்பட்டாலும், வரம்பு மீறி தொடர்ந்து நீண்ட நாள்கள் இவற்றை உட்கொள்ளும்போது கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளுக்கும் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடும் என்பது தெரியவந்துள்ளது.

இத்தகைய கலோரி இல்லாத உணவுகளை உண்பதால் ஒருவருக்கு வயிறு நிரம்பாத நிலையே இருக்கும். அதனால் அவர் மேலும் பசி கொண்டு மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதற்கு வாய்ப்பு அதிகம். அதிலும் சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் சேர்க்கப்பட்ட ஸ்வீட், கேக், பானங்களால் பிரச்னை இல்லை என்று நம்பி அவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது உடலில் மாவுச்சத்து அளவு அதிகரித்து அதனால் உடல் பருமன் மற்றும் நீரிழிவு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.

இந்த இனிப்புச் சுவைகூட்டிகளில் நாம் உண்ணும் இயற்கையான சர்க்கரையைவிட 200 முதல் 13,000 மடங்கு வரை அதிக தித்திப்பு இருக்கிறது. இவை கலந்த உணவுகளை உண்பதன் மூலம் மூளையில் இனிப்புச் சுவைமீது எப்போதும் ஒருவித போதைத் தன்மை இருந்துகொண்டே இருக்கும். இதன் விளைவாகத் தொடர்ந்து இனிப்பை உண்ணும் உந்துதல் ஏற்பட்டபடி இருக்கும். இந்த உந்துதலால், இவற்றைத் தொடர்ந்து பருகுவதும் உண்பதும் தொடரும். எடையும் கூடும், நீரிழிவும் கட்டுப்பாடற்றுப் போகும்.

ஒருவர் எடையைக் குறைக்க எண்ணினால் அல்லது நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினால், சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி, தேன், பனங்கற்கண்டு ஆகியவற்றை நிறுத்துவதுடன் செயற்கையான சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகளையும் கட்டாயம் நிறுத்த வேண்டும். இனிப்புச் சுவை தரும் அனைத்து உணவுகளையும் முழுவதுமாக நிறுத்துவதன் மூலம் மட்டுமே மூளையை சர்க்கரை உந்துதல் இல்லாதபடி முழுவதுமாக டீ-அடிக்‌ஷன் செய்ய முடியும். மாறாக சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதால் க்ரேவிங் அதிகமாகவே செய்யும்.

இனிப்பு க்ரேவிங் ஏற்படுவதைத் தவிர்க்க புரதச்சத்தும், நன்மை செய்யும் கொழுப்புச்சத்தும் நிரம்பிய உணவுகளான முட்டை, மாமிசம், மீன், பயறு வகைகள், கடலை, பனீர் போன்றவற்றை உண்ணலாம். புரதச்சத்து மிக்க உணவுகளை உண்ணும்போது அவை இரைப்பையில் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் வயிறு நன்றாக நிரம்பும். அடிக்கடி பசிக்காது என்பதால் மீண்டும் மீண்டும் உண்ணும் தேவையும் இருக்காது. தினசரி ஒரு மணி நேரமேனும் வாக்கிங், சைக்கிளிங் போன்ற உடல் உழைப்பு செலுத்துவதன் மூலம் இன்சுலின் எதிர்ப்பு நிலையைச் சரிசெய்ய முடியும்.

சுகர் ஃப்ரீ
மெக்னீசியம் குறைபாட்டினால் அதிக இனிப்பு உண்ணும் உந்துதல் ஏற்படக்கூடும். மெக்னீசியம் சத்து நிரம்பிய நட்ஸ் வகைகள், சியா விதை, பூசணி விதை, கீரை வகைகள், வாழைப்பழம், அவகாடோ, மீன்களை உண்பதன் மூலம் இந்த உந்துதலைக் கட்டுப்படுத்த முடியும். இனிப்புச் சுவையுடன் சத்துகளும் வேண்டுமென்றால், அவ்வப்போது மிதமான அளவில் பழங்கள் உண்பது நல்லது. பழங்களிலும் வரம்பு மீறுவது நன்மையன்று. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் அதிகம் பழுக்காத பதத்தில் பழங்களை உண்பது சிறந்தது.


சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் மூலம் நன்மையைவிடத் தீமைகளே அதிகம் என்பதால், அவற்றைக் கைவிடுமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

Friday, September 1, 2023

 பாம்புகளிடம் எச்சரிக்கை
















பாம்புகளைப் பொறுத்தவரையில் அவை மனிதர்களின் சகவாசம் இல்லாமலே வாழ விரும்புகிறது. மனிதர்களுக்கு அருகில் இருக்க பாம்புகள் விரும்புவதில்லை. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக மனிதர்களின் வாழ்விடங்களை நோக்கி வர வேண்டியதாகிறது. பாம்புகளை கையாளத் தெரியாதவர்கள் பாம்புகளை நசுக்கும்போது, அது பயப்படும். அப்போது கடுமையாகத் தாக்கும் அல்லது கடிக்கும்.

பாம்புகள் கடிக்கையில், அது என்ன பாம்பு என்பதை அறிந்து அதற்கேற்ற விஷ முறிவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் பாம்புகளைப் பிடிப்பதற்கு கருவிகள் வந்துள்ளன. கையால் பாம்புகளைப் பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

நாகன், கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் போன்ற விஷமுள்ள பாம்புகள் இருக்கின்றன. இவற்றில்  கண்ணாடி விரியன் அதிகமாகத் தென்படுவதாகக் கூறுகின்றனர்.  கண்ணாடி விரியன் ஆள்கள் முன்னே வர வர பின்வாங்கும். எந்தளவு பின்வாங்குகிறதோ, அந்தளவு வேகமாக பாயும். கண்ணாடி விரியன் பின்வாங்குவதைப் பார்த்தால், ஐந்தடி ஆறடி தள்ளி நிற்க வேண்டும்.

பாம்புகளைப் பொறுத்தவரையில் அவை மனிதர்களின் சகவாசம் இல்லாமலே வாழ விரும்புகிறது. மனிதர்களுக்கு அருகில் இருக்க பாம்புகள் விரும்புவதில்லை. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக மனிதர்களின் வாழ்விடங்களை நோக்கி வர வேண்டியதாகிறது. பாம்புகளை கையாளத் தெரியாதவர்கள் பாம்புகளை நசுக்கும்போது, அது பயப்படும். அப்போது கடுமையாகத் தாக்கும் அல்லது கடிக்கும்.

பாம்புகளுக்கான இனப்பெருக்க காலத்தில் ஒரு வித திரவத்தை கசிய விட்டுக்கொண்டே இருக்கும். அவை துணையைத் தேடி வரும்போது அடித்து விடுவோம். அது தன்னுடைய உடலில் இருந்த இனப்பெருக்க திரவத்தை எங்கே அடித்தோமோ அங்கேயே கசிய விட்டுவிடும். இந்த வாசம் மற்றொரு பாம்புக்குச் சென்று, அந்தப் பாம்பு அங்கே வரும். இதை பழிவாங்க பாம்பு வருகிறது என நினைத்துக் கொள்கிறோம்.

கறையான் புற்றில் பாம்பிருப்பதாகக் கருதி, பலர் பால் ஊற்றுவார்கள். பாம்புக்கு பால் உணவல்ல. கறையான் புற்று பாம்புக்கான வாழ்விடமும் அல்ல. பாம்பு எப்போதாவது நீர் அருந்தும் பழக்கமுடையது.


பாம்பு மகுடிக்கு ஆடுவதாக கூறுவார்கள். பாம்புக்கு காதுகள் இல்லை. காதுகள் இல்லாதபோது இசை எப்படி கேட்கும். மகுடி ஊதுபவரை கவனித்து அதற்கேற்றாற்போல ஆடுமே தவிர, அவை இசைக்கு ஆடுவதில்லை. பாம்புகள் அதிர்வுகள் மூலமாகவே அதை  உணர்கிறது. 

நல்ல பார்வை பாம்புகளுக்கு கிடையாது. இரட்டை நாக்கால் காற்றில் வருகிற வாசத்தை வைத்து தன் இரையை பாம்புகள் தேடிக்கொள்ளும். எனவே, பாம்புகளிடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' என்று தெரிவித்தார்.

Tuesday, August 29, 2023

நீட் தேர்வு - அடுத்த தலைமுறைக்கு நல்ல மருத்துவர்கள் கிடைக்கப்போவதில்லை

கல்வியாளர் தா.நெடுஞ்செழின்

நீட் தேர்வை முன்வைத்துத் தற்கொலைச் செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றன. சமீபத்தில் ஒரு மாணவனும் அவரின் தந்தையும் தற்கொலை செய்துகொண்ட செய்தி என்னை அதிகம் பாதித்தது. ஒரு பக்கம் நீட் எதிர்ப்புக் குரல்கள்; இன்னொரு பக்கம் ஆதரவுக் குரல்கள்; இடையில் மாணவர்களின் தற்கொலைகள்... இதுபற்றி நாம் தீவிரமாக ஆராய வேண்டியிருக்கிறது.


நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதன் அடிப்படை நோக்கமே, தகுதியான மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்க வேண்டும் என்பதுதான். அதன்மூலம் மருத்துவப் படிப்பின் தரத்தை அதிகரிப்பது. பிரதமர் நரேந்திர மோடி தொடக்கத்திலிருந்தே அதைத்தான் சொல்லிவருகிறார். நீட் தேர்வு வந்தபோது உண்மையிலேயே நாங்களெல்லாம் பெரிய மாற்றம் வரப்போகிறது என்று நம்பினோம். மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடக்கும் எல்லாத் தவறுகளையும் நீட் தேர்வு மாற்றிவிடப்போகிறது என்று மகிழ்ந்தோம். வரவேற்றோம்.

2010-ல் பெங்களூரு ஐ.ஐ.எம்-க்காக என் வகுப்புத்தோழர் சந்திரசேகர் ஒரு புராஜெக்ட் செய்தார். அந்த புராஜெக்டில், நான் வெளியிலிருந்து உதவும் வழிகாட்டியாகப் பங்காற்றினேன். ‘தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கை எப்படி நடக்கிறது' என்பதே அந்த ஆய்வின் அடிப்படை. நிறைய கள ஆய்வுகள் செய்தோம். ஆவணங்கள் சேகரித்தோம். ஆர்.டி.ஐ மூலம் தகவல்கள் பெற்றோம். அந்தக் காலகட்டத்தில் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டிருந்தது. நிறைய மருத்துவக் கல்லூரிகளில் தகுதியற்ற பலர் சேர்க்கப்பட்டிருந்தனர். தகுதியான மாணவர்கள் நிராகரிக்கப்பட்டிருந்தனர். இந்த மோசடிகளை யெல்லாம் முன்வைத்து நாங்கள் உருவாக்கிய ஆய்வறிக்கை தேசிய அளவில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டது. மத்திய அரசும் அதைப் பெருமளவு கவனத்தில் கொண்டது.


கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்கல்வித் துறையில் இயங்கி வருகிறேன். மாற்றங்களைக் கூர்ந்து அவதானிக்கிறேன். பிரதமர் சொன்னதுபோல, நாங்கள் எதிர்பார்த்தது போல நீட் தேர்வு பயனளிக்கவில்லை. நல்மாற்றங்களைக் கொண்டுவரவில்லை. மாறாக அது மருத்துவப் படிப்பின் தரத்தை மேலும் மோசமாக்கியிருக்கிறது. வெளிப் படையாகவே அது கல்வியைப் பாகுபடுத்தியிருக்கிறது.


நீட் தேர்வு வருவதற்கு முன்பு இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகள்தான் அதிகமிருந்தன. தனியார் கல்லூரிகள் மிகவும் குறைவு. நீட் வந்தபிறகு தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிகமாகிவிட்டன. எம்.பி.பி.எஸ் படிப்பில் அரசுக் கல்லூரிகளில் இருக்கும் இடங்களும் தனியார் கல்லூரிகளில் இருக்கும் இடங்களும் சமமாகிவிட்டன. 2006-ல் இந்தியாவில், அரசு தனியாரெல்லாம் சேர்த்து 233 கல்லூரிகள் மட்டுமே இருந்தன. எம்.பி.பி.எஸ்-ஸுக்கு சுமார் 26,500 இடங்கள் இருந்தன. இன்று 355 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 299 தனியார் கல்லூரிகளும் செயல்படுகின்றன. அரசுக் கல்லூரிகளில் 52,333 இடங்களும் தனியார் கல்லூரிகளில் 50,150 இடங்களும் இருக்கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் இது வளர்ச்சிதானே என்று தோன்றும். ஆனால், கல்வியைப் பொறுத்தவரை வளர்ச்சி என்பது தனியாரின் திசைநோக்கி நீள்வது மக்களுக்கு வீழ்ச்சி.

பெரும்பாலும் எல்லா அரசியல்கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் மருத்துவக் கல்லூரிகள் வைத்திருக்கிறார்கள். அதனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கல்லூரிகளுக்குப் பங்கம் வந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். தனியார் கல்லூரிகளில் ஓராண்டு மருத்துவப் படிப்புக்கான கட்டணம் சுமார் 20 லட்சம். ஏறத்தாழ ஓராண்டுக்கு 250 முதல் 300 கோடி ரூபாய் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு வருகிறது. முன்பு திரைமறைவில் நடந்த இந்தக் கட்டணப் பரிவர்த்தனை நீட் தேர்வுக்குப் பிறகு சட்டபூர்வமாகியிருக்கிறது. இந்த 300 தனியார் கல்லூரிகளும் ஆண்டுக்கு 10,000 கோடிக்கும் அதிகமாக மாணவர்களிடம் இருந்து வசூலிக்கின்றன.

அரசுக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக்கு 18,000 ரூபாய் கட்டணம். இதையே தனியார் கல்லூரிகளும் வாங்கவேண்டும் என்று சொல்ல முடியாது. ஆனால் நூற்றாண்டு கடந்த கல்லூரியான வேலூர் கிறித்தவக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கே ஆண்டுக்கு 55,000 ரூபாய்தான் கட்டணம். அதன் அருகிலேயே இருக்கும் இன்னொரு சுயநிதிக் கல்லூரியில், எல்லாம் சேர்த்து ஆண்டுக்கு 20 லட்சம் கட்டணம். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 25 லட்சம். ஏன் இவ்வளவு இடைவெளி? சேவை செய்வதாகச் சொல்லி டிரஸ்ட் உருவாக்கித்தானே இந்தக் கல்வி நிறுவனங்கள் எல்லாம் தொடங்கப்படுகின்றன? ஒரு கல்லூரியில் 55,000, இன்னொரு கல்லூரியில் 25 லட்சம் என்பதை அரசு எந்த அடிப்படையில் வகைப்படுத்துகிறது? வேலூர் கிறித்தவக் கல்லூரிக்கு 100 இடங்களை மட்டும் தந்துவிட்டு பிற கல்லூரிகளுக்கு 200 முதல் 250 இடங்களுக்கு மேல் அனுமதியளிக்கும் அரசின் நோக்கம்தான் என்ன?

இந்தக் கேள்வியை ஒரு பக்கம் தள்ளி வைத்துவிடுவோம்.

நீட் தேர்வு எந்த அடிப்படையில் மருத்துவப் படிப்பின் தரத்தைக் குறைக்கிறது என்பதையும் எந்த அளவுக்கு அது கல்வியில் பாகுபாட்டை உருவாக்குகிறது என்பதையும் வரிசையாகப் பார்ப்போம்.

முதலில் நீட் தேர்வு நடத்தும் முறை. நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை நடக்கிறது. எல்லாத் தேர்வுகளுக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு தேர்வறைக்கு வந்தால் போதும். ஆனால், 2 மணிக்கு நடக்கும் நீட் தேர்வுக்கு மாணவர்களைப் பிரித்து 11 மணிக்கு ஒரு பிரிவையும் 12.30 மணிக்கு ஒரு பிரிவையும் 1.30 மணிக்கு ஒரு பிரிவையும் வரச்சொல்கிறார்கள். இதை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள் என்பதும் ரகசியம். எல்லோரையும் ஒரே நேரத்தில் வரச்சொன்னால் குழப்பமாகிவிடுமாம்.

2 மணித் தேர்வுக்கு ஒரு மாணவனை 11 மணிக்கு வரச் சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம்? கற்றறிந்த எவரும் இந்தத் தவற்றைச் செய்யமாட்டார்கள். தேர்வு மையம் பெரும்பாலும் நகரத்துக்கு வெளியேதான் இருக்கிறது. 11 மணிக்குத் தேர்வு மையத்தில் இருக்கவேண்டும் என்றால் 9 மணிக்காவது கிளம்ப வேண்டும். சாப்பாடு 8 மணிக்குச் சாப்பிட்டிருப்பார்கள். தேர்வு 5.20-க்கு முடியும் எனறால் கிட்டத்தட்ட 9 மணி நேரம். இவ்வளவு நேரம் சாப்பிடாமல் அமர்ந்திருக்கும் ஒருவரால் எப்படி ஒரு தேர்வை நல்லவிதமாக எழுதமுடியும்?

அதிலும் ஆரம்பத்திலிருந்தே மாணவர்களைப் பதற்றத்தில் வைத்திருக்கிறார்கள். வாகா எல்லையில் பிடிபட்ட தீவிரவாதி மாதிரி சோதிக்கிறார்கள். தலைமுடியிலிருந்து உள்ளாடை வரைக்கும். அதேநேரம் பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் சர்வசாதாரணமாக காப்பி அடிக்க முடிகிறது. இதெல்லாம் ஆதாரத்தோடு அம்பலமாகியிருக்கிறது.

உள்ளே வாட்டர் பாட்டிலை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அதுவும் டிரான்ஸ் பரன்டாக இருக்கவேண்டும். நீட் தேர்வுக்கு மட்டும் ஏன் இவ்வளவு நெருக்கடி? யு.பி.எஸ்.சி, ஜே.இ.இ, நாட்டா உட்பட எந்தத் தேர்வுக்கும் இவ்வளவு களேபரங்கள் இல்லை. இப்படியெல்லாம் சோதிப்பதற்குப் பதிலாக தேர்வறைக்குள் இன்னும் இரண்டு கண்காணிப்பாளர்களைப் போட்டு கண்காணிக்கலாமே? தவறு செய்த மாணவர்களைப் பிடித்து நடவடிக்கை எடுக்கலாமே?

நீட் வருவதற்கு முன்பெல்லாம் பிளஸ் டூ-வில் 95% மதிப்பெண் எடுப்பவர்களுக்கு மட்டும்தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும். மற்றவர்கள் மனதளவில் மருத்துவப் படிப்பை யோசிக்கக்கூட மாட்டார்கள். இன்று பெர்சண்டைல் முறையில் நீட் தேர்ச்சி தீர்மானிக்கப்படுகிறது. 720 மதிப்பெண் கொண்ட நீட் தேர்வில் 110 மதிப்பெண் எடுத்தால் நீங்கள் மருத்துவம் படிக்கத் தகுதியானவராகி விடுவீர்கள். இதுதான் பிரதமர் குறிப்பிடுகிற தரமா? மருத்துவப் படிப்பில் மொத்தமிருக்கும் இடமே ஒரு லட்சம்தான். ஏன் 10 லட்சம் பேருக்கு ரேங்க் தருகிறீர்கள்?

ஐ.ஐ.டி-யில் 20,000 சீட் இருந்தால் 40,000 பேருக்குத்தான் ரேங்க் தருவார்கள். இரண்டில் ஒருவருக்கு சீட் கிடைத்துவிடு்ம். அதே நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி நடத்தும் நீட்டுக்கு மட்டும் ஏன் வேறொரு நீதி? தனியார் கல்லூரிகளுக்கு ஆள்பிடித்துத் தருவதற்கா?

ஒரு மாணவர் 720-க்கு 600 மதிப்பெண் பெற்றிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 601 மதிப்பெண்ணோடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் நிறைந்துவிட்டால், அந்த மாணவருக்கு அரசு ஒதுக்கீட்டில் சுயநிதிக் கல்லூரியில் சீட் கிடைக்கும். அரசு மருத்துவக் கல்லூரியில் 18,000 ரூபாய் ஆண்டுக் கட்டணம் என்றால் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு சுயநிதி மருத்துவக் கல்லூரியில் 4.5 லட்சம் ஆண்டுக்கட்டணம். இதர செலவுகளெல்லாம் சேர்த்து 10 லட்சம் வரும். அந்தப் பணம் இல்லையென்றால் அவர் சீட்டை விட்டுக்கொடுத்துவிட்டுப் போய்விடுவார். அந்த சீட் 110 மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்ற பணம் வைத்துள்ள ஒருவருக்குக் கிடைக்கும். இதுதான் மெரிட்டா?

தமிழக மருத்துவ கவுன்சிலிங்கில், ரேங்க் அடிப்படையில் மாணவர்களுக்கு மூன்றுவிதமாக இடங்கள் ஒதுக்கப்படும். அரசுக் கல்லூரிகள், அரசு ஒதுக்கீட்டில் சுயநிதிக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு. இந்த மூன்றுக்கும் அரசே கவுன்சிலிங் நடத்தும். அரசுக் கல்லூரிகளுக்கு 500 ரூபாயும் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 30,500 ரூபாயும், சுயநிதிக் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டுக்கு 1 லட்சம் ரூபாயும் கலந்தாய்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தைக் கட்டமுடியாவிட்டாலும் அந்த மாணவர் சீட்டை விட்டுக்கொடுக்க நேரிடும். இதுதான் மெரிட்டா?

கற்பது உலகளவு
கற்பது உலகளவு

720 மதிப்பெண்ணுக்கு 650 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பு என்றால் மருத்துவப் படிப்பு தரமாக இருக்கும். ஆனால் 110 மதிப்பெண் எடுத்தவருக்கும் சீட் கொடுத்தீர்கள் என்றால் மருத்துவத்தை நீ்ட் தேர்வு தரம் குறைக்கிறது என்றுதானே பொருள்.

நீட் தேர்வு வருவதற்கு முன்பு, மத்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் 15% இடங்களுக்கு AIPMT தேர்வு நடத்தப்பட்டது. அந்தத் தேர்வை சி.பி.எஸ்.இ நடத்தியது. அதில் குறிப்பிட்ட ரேங்குக்குக் கீழே இருப்பவர்களைப் பரிசீலிக்கவே மாட்டார்கள். ஆனால் நீட், ‘பிளஸ் டூ-வில் 50% எடுத்தாலும் வா, நீட்டில் 110 எடுத்தாலும் வா' என்று அழைக்கிறது. பணம் இருப்பவர்களுக்கு மதிப்பெண் குறைவாக இருந்தாலும் சீட். பணம் இல்லாதவர்கள் அதிக ரேங்க் எடுத்தாலும் சீட் இல்லை.

தேர்வு முறையிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். விலங்கியலில் 45, தாவரவியலில் 45, இயற்பியலில் 45, வேதியியலில் 45 கேள்விகள் கேட்கப்படும். 180 கேள்விகளுக்கான பதில்களை 180 நிமிடங்களில் எழுதவேண்டும். எல்லாம் சரியான விடையைத் தேர்வு செய்யும் வகையிலான கேள்விகள். இதுதான் பழைய நடைமுறை. கொரோனா வந்தபிறகு, சி.பி.எஸ்.இ அவர்களது பாடத்தில் 30% நீக்கிவிட்டது. பிற பாடத்திட்டங்களிலும் 30 முதல் 40% பாடங்களை நீக்கிவிட்டார்கள். இன்று வரைக்கும் அப்பாடங்கள் சேர்க்கப்படவில்லை. ஆனால் எந்தெந்தப் பாடங்களையெல்லாம் நீக்கினார்கள் என்று இப்போது நீட் தேர்வை நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி எந்த போர்டு சேர்மனையும் கூப்பிட்டுப் பேசவில்லை. ஒவ்வொரு பாடத்திலும் 50 கேள்விகள் தருவோம். 45 கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். ஒவ்வொன்றிலும் 5 கேள்விகளை வேண்டுமானால் விட்டுவிடுங்கள் என்கிறது.

இன்னொரு பெரிய விபரீதமும் நீட் தேர்வில் இருக்கிறது. மருத்துவப் படிப்புக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் மூன்றும் மிகவும் முக்கியமானவை. பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தபோது மூன்றிலுமே 95% மதிப்பெண் பெற்றவர்களுக்குத்தான் கட்-ஆப் அடிப்படையில் சீட் கிடைக்கும்.

நீட் தேர்வில் ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண். தேர்ச்சி மதிப்பெண் வெறும் 110. ஆண்டுக்காண்டு இதில் சற்று கூடலாம், குறையலாம். "எனக்கு இயற்பியலும் வேதியியலும் வராது சார்" என்று கோச்சிங் சென்டருக்குப் போகும் மாணவனை அமரவைத்து, "நீ அந்த இரண்டையும் தொட்டுக்கூடப் பார்க்காதே, உயிரியலில் கவனம் செலுத்திப் படி... 110 மதிப்பெண் எடுத்துவிடலாம்... நீ பாஸ்" என்று டெக்னிக்கைக் கற்றுக்கொடுத்துவிடுகிறார்கள். உயிரைக் கொடுத்துப் படித்து, பணமில்லாததால் கல்லூரியில் சேரமுடியாத எவரோ ஒருவர் தன் சீட்டை விட்டுக்கொடுத்துவிட்டுப் போவார். அல்லது யாருமே சேராத நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் லட்சங்களைக் கொட்டி மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிடலாம். இதுதான் நீட் ஏற்படுத்தியிருக்கும் விளைவு.

இப்படித் தேர்ச்சி பெற்றுவரும் மாணவன் மருத்துவப் படிப்பில் எப்படி பயோகெமிஸ்ட்ரி படிப்பார், பிசியாலஜி படிப்பார் என்பதெல்லாம் இமாலயக் கேள்வி. என் கவலையெல்லாம் அடுத்த தலைமுறைக்கு நல்ல மருத்துவர்கள் கிடைக்கப்போவதில்லை என்பதுதான்.

Monday, June 26, 2023

 நீட் தேர்வு கோச்சிங் - பெற்றோர்களுக்கான சில நடைமுறை உபயோகக் குறிப்புகள்!

+2 தேர்வுடன் சேர்த்து நீட் தேர்வுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்கும் உறைவிடப்பள்ளிகள்தான் இப்போது சென்னையில் டிரெண்டிங். இந்தப் பள்ளிகளில் +2 தேர்வு என்பது ஒப்புக்குத்தான். அதற்கான தனிப்பட்ட பயிற்சிகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது. முழுக்கவனமும் நீட் தேர்வு கோச்சிங்கில்தான் இருக்கும். ஒரே மாணவரின் நீட் மதிப்பெண், +2 மதிப்பெண் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும்.


உறைவிடப் பள்ளிக்கான கட்டணம் வருடத்திற்கு 3.5 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கும். தடங்கல் இன்றிப் படிக்க குறைந்த மாணவர்களுடன் அறையைப் பகிர்ந்துகொள்ளும் வசதி வேண்டுமென்றால் வருடத்திற்கு 6 லட்சம் வரை ஆகலாம். நீட் கோச்சிங் கட்டணம் வருடத்திற்கு 1.36 லட்சம் (இது போன வருடம், இந்த வருடம் இன்னும் அதிகரிக்கலாம்.)


இவை இல்லாமல் பேனா, பென்சில், பள்ளியில் தரப்படாத நோட்டு புத்தகங்களுக்கான செலவு, துணையாக வேறு ஆன்லைன் கோச்சிங், நீட் தயாரிப்பு மெட்டீரியல் வாங்கும் செலவுகள் தனி. சென்னையில் வசிக்காத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்க்க வரும் செலவுகள், ஊருக்கு அழைத்துச் செல்லும் செலவுகள், ஆடை, அணிகலன் செலவுகள் கூடுதலாக இருக்கும்.

தேர்வு நெருங்கும்போது அதாவது நீட் தேர்வுக்கு இரண்டு, மூன்று மாதங்கள் முன்பு, கோச்சிங் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், விடுதியில் போதிய கவனிப்பு இருக்காது என்பதால் அப்போது மட்டும் பள்ளிக்கு அருகில் தனியாக வீடு எடுத்துத் தங்கிப் படிப்பது அல்லது சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கிப் படிப்பது என்பது பொதுவாகப் பின்பற்றப்படும் நடைமுறை (நினைத்த நேரத்திற்கு காபி, தேநீர் போட்டுத்தர / படிக்க தொந்தரவு இல்லாத சூழலை அமைக்க / பழங்கள், சூப் கொடுத்துத் தேர்வுக்குத் தயார்படுத்த விடுதிகள் ஒத்துவராது). இதற்காகவே இரண்டு, மூன்று மாதங்கள் வாடகைக்கு விடப்படும் வீடுகள் (Furnished homes) கிடைக்கின்றன. இதன் செலவு தனி.

இவை இல்லாமல் லேப்டாப், தேசிய அளவில் பிற நிறுவனங்கள் நடத்தும் ஆன்லைன் ‘மாக் எக்ஸாம்’ போன்றவற்றிற்கான செலவுகள்...

இதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள் ஒரு வருடத்திற்கானவை. அவற்றை இரண்டு வருடங்களுக்குக் கணக்கிட்டுக்கொள்ளவும்.

Thursday, June 15, 2023

 அரசு சார்பாக மட்டும் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்காக 80-க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்தத் தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால் புகழ்பெற்ற பல கல்வி நிறுவனங்களில் மிகக்குறைந்த செலவில் படிக்க முடியும். இவற்றில் சுமார் 75 தேர்வுகளுக்கு பிளஸ் டூ மதிப்பெண் முக்கியமில்லை. சில நுழைவுத்தேர்வுகள், பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாகவே நடந்து முடிந்து விடுகின்றன. பல தேர்வுகளுக்கான விண்ணப்ப நடைமுறைகள் பிளஸ் டூ தேர்வுக்கு முன்பாகவே முடிந்துவிடுகின்றன. இந்தத்தேர்வுகள் பற்றியெல்லாம் நம் பிள்ளைகளுக்குத் தெரிவதேயில்லை. ஏன்... ஆசிரியர்களே அறிவதில்லை. எல்லாம் நம் வரிப்பணத்தில் இயங்கும் கல்வி நிறுவனங்கள்தான். பல தேர்வுகள் 50-60 வருடங்களாக நடந்துவருகின்றன. நாம்தான் அறியாமல் இருக்கிறோம். நம் தேடல் என்பது நம் மாவட்டத்துக்குள்ளாகவே முடிந்து போகிறது என்பதுதான் சோகம்.

இந்த இடத்தில் சுந்தர்ராஜனை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். உசிலம்பட்டி அருகேயுள்ள எழுமலை என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த தம்பி. அரசுப்பள்ளியில் படித்தவன்.

பிளஸ் டூ-வில் 1088 மதிப்பெண் எடுத்தான். கடுமையான வறுமையைக் கடந்து படித்தவன். மதுரையில் ஒரு கல்லூரியில் பி.எஸ்சி சேர்ந்திருக்கிறான். விடுதிக்கட்டணம் கட்ட முடியாமல் பாதியில் அந்தப் படிப்பை விட்டுவிட்டான். எங்கிருந்தோ முகவரி வாங்கி எனக்கொரு கடிதம் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தில் இருந்த நேர்த்தியும் வார்த்தைகளும் என்னை ஈர்த்தன. அவனை அழைத்துப் பேசி கிண்டி பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்த்தேன். மாணவர்களுக்கு உதவி செய்யும் ஒரு அமைப்பிடம் பேசி அவனுக்கு ஒரு லேப்டாப்பும் வாங்கித்தந்தேன்.


இரண்டாம் வருடம் படித்தபோது சுந்தர்ராஜன் ஆப்பிள் நிறுவன மென்பொருளில் இருக்கும் பிழை ஒன்றைக் கண்டுபிடித்தான். அதையறிந்த ஆப்பிள் நிறுவனம் 5,000 டாலர் அவனுக்குப் பரிசாக வழங்கியது. இன்று படிப்பை முடித்து பெங்களூரில் பிலிப்ஸ் நிறுவனத்தில் மிகப்பெரிய சம்பளத்தில் வேலை செய்கிறான்.


இத்தனைக்கும் சுந்தர்ராஜன் தமிழ் மீடியத்தில் படித்தவன். தமிழ் மீடியத்தில் படித்தால் பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்குப் போகமுடியாது என்ற எண்ணம் இங்கே அழுந்த விதைக்கப்பட்டு விட்டது. பலபேர் பின்வாங்கி மிகப்பெரிய வாய்ப்புகளையெல்லாம் இழந்துவிடுகிறார்கள். உண்மையில் இது பெரிய மூடநம்பிக்கை. மொழியோ, பணமோ, உங்கள் பயணத்திற்கு ஒருகாலும் தடையாக இருக்காது. அவ்வளவு வாய்ப்புகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. ஆங்கிலம் பேசும் சூழலில் மூன்று மாதங்கள் நீங்கள் இருந்தால் சரளமாக ஆங்கிலம் பேசிவிடுவீர்கள். ஜப்பானிய மொழி பேசும் இடத்தில் இருந்தால் அந்த மொழி உங்களுக்கு எளிதாக வந்துவிடும். மனிதன் சூழலுக்கேற்ப வாழப்பழகும் ஆற்றல் கொண்டவன்.

தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு நகரத்துக்கு வரும் மாணவர்களுக்கு முதல் ஆறு மாதங்கள் சற்று சிரமமாக இருக்கலாம். மிக எளிதில் இந்த சூழலையும் தேவைக்கேற்ப பழகிவிடலாம். நானே இதற்கு உதாரணம். இதுபோன்ற சின்னச் சின்ன இடர்களில் சோர்ந்துவிடாமல் நீங்கள் செய்யப் போகும் பெரிய செயலுக்கான வாசலைத் தேடவேண்டும். அதுதான் வெற்றிக்கான சூத்திரம். சுந்தர்ராஜனை நான் ஆகச்சிறந்த உதாரணமாக செல்லுமிடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.


நம்மிடமிருக்கும் பிரச்னை, நாம் வைரங்களைத் தேடாமல் மேலிருக்கும் மண்ணைக் கிளறிக் கொண்டிருக்கிறோம். நம்மிடம் பரந்துபட்ட பார்வை இல்லை. பத்தாம் வகுப்பிலேயே நாம் பிள்ளைகளை தரம் பிரித்துவிடுகிறோம். ‘நீ மருத்துவம் படி’, ‘நீ வணிகம் படி’, ‘நீ தொழிற்கல்வி படி’ என்று பாகுபடுத்திவிடுகிறோம். உலகில் வேறெங்கும் இந்தப் பாகுபாடு இல்லை. கல்வி என்பது தொடர் பயணம். அந்தப் பயணத்தில் எங்கேனும் தோன்றும் சிறு பொறி, உங்களை எதிர்பாராத ஒரு இடத்துக்கு நகர்த்திச் சென்றுவிடும். மருத்துவக் கனவை விதைத்து, அந்த ஒற்றை இலக்கில் நாம் தயார்படுத்தும் ஒரு மாணவன், அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறபோது மனம் உடைந்துவிடுகிறான். அடுத்து என்ன என்று தெரியாமல் நிலைகுலைந்து நிற்கிறான்.


நம் கல்விக்கூடங்கள் பரந்துபட்ட வாய்ப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ‘நான் முதல்வன்' திட்டத்தை நான் இதற்காகவே வரவேற்கிறேன். ஆனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசின் ஆவலை எத்தனை ஆசிரியர்கள் முழுமையாக உள்வாங்கியிருக்கிறார்கள்? இத்திட்டத்தின் கருத்தாளர்களாக, பயிற்றுநர்களாக இருக்கும் ஆசிரியர்களில் எத்தனை பேர் மாணவர்களுக்குத் திறம்பட வழிகாட்டுகிறார்கள்? இந்தக் கேள்விகளை நான் என் சொந்த அனுபவத்திலிருந்தே முன்வைக்கிறேன்.

மருத்துவப் படிப்பென்றால் வெறும் எம்.பி.பி.எஸ் மட்டுமல்ல. இங்கே பொறியியல் படித்தவர்கள் முதுகலையில் மருத்துவப் படிப்பைப் படிக்கலாம். ஐ.ஐ.டி-க்களில் சட்டம் படிக்கலாம். நாம் தமிழ்நாட்டில் உள்ள வாய்ப்புகளையே நம் பிள்ளைகளுக்கு உணர்த்தவில்லை. தமிழகத்தைத் தாண்டி ஏராளமான அரசுக்கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. சரியான நேரத்தில் தயாரானால் வெகு எளிதாக அந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துவிட முடியும்.

நேஷனல் ஃபாரன்சிக் சயின்ஸ் பல்கலைக்கழகம் என்று ஒன்று இந்தியாவில் இருக்கிறது. அதை மத்திய அரசுதான் நடத்துகிறது. 1972-ம் ஆண்டில் இருந்து ஜெயப்ரகாஷ் நாராயணன் பெயரில் இயங்கிய இந்த நிறுவனம், 2020-ல் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் பற்றி நாம் அறிந்ததில்லை. தமிழகத்திலிருந்து இந்தப் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் செல்வதேயில்லை. தடய அறிவியலுக்கென்றே இயங்கும் உலகின் முதல் பல்கலைக்கழகம் இது. காந்தி நகர், டெல்லி, கோவா, புனே உட்பட பல நகரங்களில் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு வளாகங்கள் உள்ளன.

கற்பது உலகளவு - 3
கற்பது உலகளவு - 3

Criminology and Forensic Science, Criminology, Clinical Psychology, Cyber Security, Digital Forensics and Information Security, Artificial Intelligence and Data Science, Computer Science & Engineering என பல இரண்டாண்டு முதுநிலை, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளை இந்த நிறுவனம் வழங்குகிறது. கணிதம், இயற்பியல், உயிரியல் மற்றும் வேதியியல் பாடங்களைப் படித்து 60 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இப்படிப்புகளில் சேரலாம். B.B.A.; LL.B.(Hons.) என்ற படிப்பும் இங்கே இருக்கிறது. பிளஸ் டூ-வில் 50% மதிப்பெண் எடுத்து CLAT தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் படிக்கலாம்.

IIM-களை நாம் மேலாண்மைக் கல்வி தரும் நிறுவனங்களாக மட்டுமே அறிந்து வைத்திருக்கிறோம். ஹரியானாவில் உள்ள ROHTAK IIM-ல் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு Integrated Programme in Law (IPL) என்ற சட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. நவீனத் தொழில்நுட்பங்கள், வங்கி நடைமுறைகள், உளவியல் அனைத்தும் அடங்கிய இந்த ஐந்தாண்டுப் படிப்பில் நம் பிள்ளைகளும் படிக்கமுடியும். இதற்கு CLAT அல்லது IPMAT தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். IIM படிப்புகள் சற்று காஸ்ட்லிதான். இந்தச் சட்டப்படிப்பை முடிக்க குறைந்தது 30 லட்சம் வரையிலும் செலவாகலாம். ஆனால் இந்தக் கட்டணத்தைக் கண்டு மலைக்கத் தேவையில்லை. உங்களுக்கு இடம் கிடைத்துவிட்டால் ஸ்டேட் பேங்க் உங்களுக்கு முழுக் கட்டணத்தையும் கடனாக வழங்கக் காத்திருக்கிறது.

இதேபோல, LLB - Intellectual Property Law என்ற சட்டப்படிப்பை காரக்பூர் ஐ.ஐ.டி வழங்குகிறது. பி.இ, பி.டெக்., எம்.பி.பி.எஸ், இளநிலை சயின்ஸ், ஃபார்மஸி படித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேரமுடியும். காப்புரிமை, கண்டுபிடிப்புகள் தொடர்பான சட்டப்படிப்பு இது. ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இவற்றையெல்லாம் தமிழ்நாட்டு மாணவர்கள் ஏறெடுத்துப் பார்ப்பதேயில்லை. தெரிந்தாலும் நமக்கு எட்டாத உயரத்தில் இருப்பதாகக் கருதுகிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் இரண்டு மாதங்கள் நேரம் ஒதுக்கி நுழைவுத்தேர்வு எழுதினால் நிச்சயம் இடம் கிடைத்துவிடும்.


அருப்புக்கோட்டை அருகேயுள்ள வீரசோழம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சையது அன்சாரி, 100% விழித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி. அரசு பார்வையற்றோர் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவர். அங்கு உரையாற்றச் சென்றபோது இவரைக் கண்டடைந்தேன். ‘‘சட்டம் படிக்க வேண்டும்’’ என்றார். CLAT எழுத வைத்தேன். தேர்ச்சி பெற்றார். கொச்சியில் உள்ள National University of Advanced Legal Studies என்ற கல்வி நிறுவனத்தில் இடம் கிடைத்தது. அந்நிறுவனத் துணைவேந்தரைத் தொடர்பு கொண்டு பேசினேன். ‘அவருக்கான முழுக் கல்விச்செலவையும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார். எந்த அரியரும் இல்லாமல் படிப்பை முடித்தார். நெதர்லாந்து பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கான பணத்தைத் திரட்ட எவ்வளவு முயன்றும் முடியாமல் போனதால், நம் உச்ச நீதிமன்றத்தில் உள்ள Indian Law Institute-ல் சேர்ந்து முதுநிலை படித்து, திருச்சி சட்டக் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். இன்னும் அவர் தாகம் அடங்கவில்லை. தற்போது பிஹெச்.டி ஆய்வு செய்கிறார்.


எல்லோருக்கும் இங்கே ஒரே சாலைதான். முனைப்புதான் இலக்கு நோக்கி அழைத்துச் செல்லும். இதோ நம் கைக்கெட்டும் தொலைவில் இருக்கிற யாருமறியாத இன்னொரு வாய்ப்பைச் சொல்கிறேன்.

எம்.பி.பி.எஸ் படிக்கும் கனவோடு இருக்கும் மாணவர்கள் அந்தப் படிப்பு கிடைக்காவிட்டால் மனமொடிந்துபோகிறார்கள் அல்லவா... அவர்களுக்குத்தான் இந்தச் செய்தி. எம்.பி.பி.எஸ் கிடைக்காவிட்டால் என்ன? பொறியியல் படித்துவிட்டுக்கூட மருத்துவர்களோடு இணைந்து மருத்துவப் படிப்பைப் படிக்கலாம். அதுவும் புகழ்பெற்ற மூன்று கல்வி நிறுவனங்களில்... M.Tech Clinical Engineering என்ற ஒரு படிப்பு. மொத்தம் இரண்டு ஆண்டுகள். ஐ.ஐ.டி மெட்ராஸில் ஆறு மாதம், வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியில் ஆறு மாதம், திருவனந்தபுரத்தில் உள்ள  சித்திரைத் திருநாள் இன்ஸ்டிட்யூட் ஃபார் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் ஆறு மாதம் படிக்க வேண்டும். புராஜெக்ட்டுக்கு ஆறு மாதம்.

இதேபோல ஐ.ஐ.டி டெல்லி, எய்ம்ஸ் டெல்லி, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து இரண்டாண்டுக் கால பயோ டிசைன் படிப்புகளை வழங்குகின்றன. இதுவும் டாக்டர்களும் இன்ஜினீயர்களும் சேர்ந்து படிக்கும் படிப்பு. மூன்று கல்வி நிறுவனங்களிலும் அடுத்தடுத்து படிக்கவேண்டும். பி.இ அல்லது எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள் இந்தப் படிப்புகளில் சேரலாம்.


இன்று மருத்துவத் துறையில் பயன்படுத்தும் 80% மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றோம். நம் நாட்டிலேயே அவற்றையெல்லாம் உருவாக்கும் நோக்கில் மருத்துவர்களையும் பொறியாளர்களையும் ஒரே இடத்தில் பயிற்றுவிக்கும் இந்தப் படிப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன.


மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் Wild Life Institute of India என்ற கல்வி நிறுவனத்தை 1982-ம் ஆண்டு முதல் நடத்திவருகிறது. இந்தக் கல்லூரி டேராடூனில் உள்ளது. இங்கு M.Sc Wildlife Science, M.Sc Heritage Conservation என்ற இரு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்தப் படிப்புகளில் சேர ஏதாவது ஒரு பட்டப்படிப்பு போதும். இதற்குத் தனி நுழைவுத் தேர்வு உண்டு. M.Sc Heritage Conservation படிப்பு யுனெஸ்கோ அமைப்போடு இணைந்து வழங்கப்படுகிறது. புராதன சின்னங்கள், அதற்கான வரையறைகள், தொல்லியல் எனப் பல பாடப்பிரிவுகள் கொண்ட இந்தப் படிப்பை முடித்தவர்கள் யுனெஸ்கோ வரை சென்று பணியாற்ற முடியும்.

இன்னொரு வித்தியாசமான படிப்பையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். Cognitive Science என்று ஒரு துறை உண்டு. நம் மூளையைப் பகுத்தாய்ந்து படிக்கும் படிப்பு. எதிர்காலம் இனி இதில்தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குஜராத்தில் உள்ள ஐ.ஐ.டி காந்திநகர் நிறுவனம், MSc in Cognitive Science என்ற படிப்பை வழங்குகிறது. இந்தப் படிப்பில் B.A, B.Sc, B.Tech, M.B.B.S, B.Com உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் 50% மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சிபெற்றவர்கள் சேரலாம். ஆன்லைன் நுழைவுத்தேர்வு வழியாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சுந்தர்ராஜன், உஷா, சையது அன்சாரி
சுந்தர்ராஜன், உஷா, சையது அன்சாரி

நான் கூறியுள்ள இந்தப் படிப்புகளுக்கெல்லாம் போட்டி குறைவு. NEET போல, JEE போல லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டி போடுவதில்லை. சில ஆயிரம் மாணவர்களே நுழைவுத்தேர்வு எழுதுவார்கள். கொஞ்சம் நடைமுறைப் புரிதலோடும் தெளிவான சிந்தனையோடும் முயன்றால் வெகு எளிதாக இந்தத் தேர்வுகளை ஜெயிக்கலாம்.


உற்சாகப்படுத்தினால் நம் பிள்ளைகள் நிச்சயம் சாதிப்பார்கள். பலநேரம் நம் பிள்ளைகளின் திறன் கண்டு நான் அதிசயத்திருக்கிறேன். அரவக்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த உஷா பிளஸ் டூ-வில் 68% மதிப்பெண் பெற்றிருந்தார். அவரைப் பல நுழைவுத்தேர்வுகள் எழுத வைத்தேன். அகமதாபாத்தில் உள்ள National Institute of Design-ல் அவருக்கு இடம் கிடைத்தது. உஷாவின் அம்மா அவரை அனுப்ப ரொம்பவே பயந்தார். அம்மாவை தைரியப்படுத்திவிட்டு B.Des Exhibition Design படிப்பில் சேர்ந்த உஷா, மூன்றாம் ஆண்டில் ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட் நகருக்குச் சென்று அங்கு இரண்டு அருங்காட்சியகங்களை டிசைன் செய்துவிட்டுத் திரும்பினார். இன்று அவர், இந்தியாவின் மிகப்பெரிய டிசைனர்.

இத்தனை ஆண்டுக்கால அனுபவத்தில் எனக்குக் கிடைத்த பாடம், மாணவர்களைச் சுருக்கக்கூடாது. அவர்களுக்கான பாதையை நாம் போடக்கூடாது. எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் காட்டினால் போதும். ஆசிரியர்கள் முதலில் அப்டேட் ஆக வேண்டும். மாணவர்களை அவர்களால் மட்டுமே தயார்படுத்த முடியும். தேடலை விரிவு செய்தால் வாய்ப்புகள் தேடிவரும்!

- கற்போம்...

*****

உலகின் ஆகப்பெரிய கண்டுபிடிப்புகள் பலவும் உயர்கல்வி் நிறுவனங்களில்தான் நடந்துள்ளன. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி மையங்களில் பல ஸ்டார்ட் அப்கள் உருவாகி இன்று மிகப்பெரும் நிறுவனங்களாக வளர்ந்துள்ளன. அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில்தான் முதல் கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டது. அங்கு படித்த காலத்தில்தான் லாரி பேஜ், செர்ஜி பிரின் இருவரும் கூகுள் நிறுவனத்தைத் தொடங்கினார்கள். இன்று அதுதான் உலகை ஆள்கிறது. கூகுளின் வருமானத்தில் ஒரு பங்கு இப்போதும் ராயல்டியாக ஸ்டான்போர்டுக்கு வருகிறது. இந்தப் பணத்தைக் கொண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதோடு கல்விக்கட்டணத்தையும் குறைவாகப் பெறுகிறது ஸ்டான்போர்டு.

ஐ.ஐ.டி டெல்லி, எய்ம்ஸ் டெல்லி, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து பயோ டிசைன் படிப்புகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன. சமீபத்தில் இங்கு படிக்கும் மூன்று மாணவர்கள் இணைந்து ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள். இதயப் பிரச்னை இருப்பவர்களுக்குப் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் கருவி, காலப்போக்கில் வேறு இடத்துக்கு நகர்ந்துவிடும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்கும் விதமாக popsicle stick ஒன்றைக் கண்டறிந்துள்ளார்கள். அதுவும் 10 டாலர் என்ற மலிவான விலையில். உலகம் முழுவதும் ஓராண்டுக்கு 4 லட்சம் பேஸ்மேக்கர் கருவிகள் பொருத்தப்படுகின்றன. அவற்றுக்கான மொத்த popsicle stick-குகளையும் இவர்களது ஸ்டார்ட் அப் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இதிலிருந்து ஒரு தொகை மூன்று கல்வி நிறுவனங்களுக்கும் ராயல்டியாகக் கிடைக்கிறது.