Friday, November 17, 2017





வாழத் தெரியாதவர்கள்

வாழத் தெரியாதவர்கள் நிறைந்த நாடு என ஒரு பட்டம் கொடுக்கப்படுமெனில் அதைப் பெற இந்தியா தாராளமாகப் போட்டி போடலாம். குடிமக்களாக நமக்குக் கோபம் வந்தாலும்…அதுவே உண்மை. ஒருவருக்கு மகிழ்ச்சியாக இருக்கத் தெரியவில்லை எனில் அவருக்கு வாழத் தெரியவில்லை என்றுதானே அர்த்தம்.

 ஐ.நா உருவாக்கிய வேர்ல்ட் ஹேப்பினஸ் இண்டெக்ஸில் இந்தியா இந்த ஆண்டு பிடித்திருக்கும் இடம் 155க்கு 122. சந்தோஷமான நாடுகளின் பட்டியலில் வறுமை நாடுகளான எத்தியோப்பியா, சோமாலியா போன்றவை நம்மைவிட முன்னால் இருக்கின்றன. அதிக முதியவர்கள், அல்லது பொருளாதார ரீதியாகச் சரிவில் இருக்கும் நாடுகள்கூட நம்மைவிட மகிழ்ச்சியாக உள்ளதாக இந்த ஆய்வு சொல்கிறது.

சரி சொல்லுங்கள், நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக  இருக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா?   

``எனக்கென்ன குறைச்சல், சென்னைக்கு மிக அருகில் ஒரு வீடு வாங்கிட்டேன். என் குடும்பம் மழை, வெயில் படாமல் போய் வருவதற்குக் காரும் வெச்சிருக்கேன். ஷாப்பிங் மற்றதுக்கெல்லாம் கிரெடிட் கார்டு இருக்கு. என் பிள்ளைகள் உயர்தரப் பள்ளியில் படிக்கிறார்கள். வாரம் முழுக்க உழைச்சிட்டு, களைப்பு தீர்றதுக்கு வாரக் கடைசியில் ஜாலியா இருக்கேன். வாழ்க்கை ஹேப்பியா போகுது. வேறென்ன வேணும்’’ எனும் உங்கள் மைண்டு வாய்ஸ் கேட்கிறது.     

ஆனால், மகிழ்ச்சி என்பது இதுதானா?

 பெர்ஷியக் கவிஞர் ஜலாலுதீன் ரூமி சொல்கிறார், ``உங்கள் இதயத்திலிருந்து விஷயங்களைச் செய்யும்போது, உங்களுக்குள் ஒரு நதி நகர்வதை உணர்வீர்கள். அதன் பெயர் மகிழ்ச்சி’’ என விளக்குகிறார். நதி வெளியில் நகர்வதைப் பார்த்தாலே மனம் குதூகலிக்கும். உள்ளுக்குள் நகர்ந்தால்… எத்தனை அலாதியான கற்பனை! உங்கள் இதயத்திற்குள் சலசலத்து ஓடும் நதியை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? பரபரப்புகளைச்  சதா நம்மீது வீசியெறிந்துகொண்டே இருக்கும் இந்த வாழ்க்கை அதற்கான வாய்ப்பை நமக்கு வழங்குகிறதா? இல்லவே இல்லை.  

இளமை ஒளிர்கிறவரை எல்லாம் சூப்பராகத் தெரியும். குழந்தை குட்டிகளைக் கரையேற்றி, குடும்பச் சுமைகளை ஒவ்வொன்றாகத் தளர்த்தி `அப்பாடா’ என்று உட்காரும்போது, முடிந்துவிட்ட வாழ்க்கை ஒரு சூன்யத்தில் நம்மை நிறுத்தியிருக்கும். நரைக் கூடிக் கிழப் பருவம் எய்தும்போது `என்னத்த வாழ்ந்துட்டோம்’ என்ற எண்ணம் வராதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். `நமக்காகவும் கொஞ்சம் வாழ்ந்திருக்கலாமோ’ என மனம் அடித்துக்கொள்ளும். ஏனென்றால், இங்கு யாருமே தன்னுடைய வாழ்வை வாழ்வதே இல்லை.  குழந்தை எப்போதும் பெற்றோருக்காக வாழ்கிறது, பெற்றோர் வாழ்நாள் முழுக்கக் குழந்தைக்காகவே வாழ்கின்றனர். இப்படியான ஒரு தியாக வாழ்வைத்தான் சரியானதென்று நம்புகிறோம். பண்பாடு எனப் போற்றுகிறோம்.

ஆனால், உண்மை என்ன தெரியுமா? இதில் கடுகளவுகூட நியாயமே இல்லை. இப்பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் அதனதன் வாழ்க்கையை அதுவே வாழக் கடமைப்பட்டிருக்கிறது. உலகச் சமூகங்கள் பலவும் தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை, தனிமனித மகிழ்ச்சி குறித்த ஆழ்ந்த புரிதலோடு வாழ்கின்றன. ஆனால், அது சுயநலமான வாழ்க்கை முறை என நாம் குறை கூறுகிறோம். இந்தியப் பெற்றோர், பிள்ளைகளை வளர்ப்பதற்காகத் தம்மையே அழித்துக்கொள்கின்றனர். அதுமட்டுமே பொதுநலன் எனும் மாயக்கற்பனையிலும் உழல்கின்றனர். `காலம் முழுக்க உனக்காகக் கஷ்டப்பட்டேன்’  என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் இறுதிக்காலப் புலம்பலாக இருக்கிறது. உடல், பொருள், ஆவி அனைத்தையும் உருக்கி ஏன் கரைகிறீர்கள் எனில், அவர்களிடம் இருக்கும் ஒரே பதில், ’பிள்ளைகளை நல்லா வளர்க்கணும்ல’ என்பதே!

ஒரு தம்பதியரை எனக்குத் தெரியும். திருமணமான 40 ஆண்டுகளில் அவர்கள் எங்கேயும் வெளியே சென்றதில்லை. நடுத்தர வர்க்கத்தினர். மாதச் சம்பளத்தில் வாழ்க்கை நடத்துகிறவர்கள். அந்த மனிதர் ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் அத்தனை ஆண்டுக் காலமும் குருவி சேர்ப்பது போலப் பணத்தைச் சேர்த்து, தன் இரண்டு பிள்ளைகளுக்காகவும் இரண்டு வீடுகளைக் கட்டினார். கடன்களை வாங்கி வாழ்நாள் முழுவதும் அடைத்தார். அவரது கஷ்டம் பிள்ளைகளுக்குத் தெரியாது. தாம் வசதியானவர்கள் என்ற மனநிலையோடுதான் அவர்கள் வளர்ந்தனர். அவர்கள் கேட்ட எல்லாமும் ஒரே கோரிக்கையில் நிறைவேற்றப்பட்டன. படிக்க வைத்து, மணமுடித்து, வரதட்சணை வாங்கி – கொடுத்து, வீடுகளை ஒப்படைத்து, வங்கிச் சேமிப்பைத் துடைத்தழித்து வெறும் மனிதர்களாக நிற்கின்றனர். மகனுக்குக் கட்டிக்கொடுத்த வீட்டில் இவர்களும் தங்கி இருக்கின்றனர். அவ்வளவுதான். சம்பாதிக்காத, சொத்துகள் இல்லாத எந்தவொரு மனிதரும் குடும்பத்துக்குச் சுமைதானே. ரிட்டயர்மென்ட்டுக்குப் பின்னர் இவருக்கும் அதே நிலைதான். `இப்போதாவது உங்களுக்காக வாழ்கிறீர்களா?’ என்றால், `அதெப்படிம்மா… பேரப் புள்ளைங்களை யார் வளர்க்குறது?’ என்கிறார்கள். தன் செலவுக்குக் காசில்லாததால் அந்த மனிதர் ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.  ஆனால், மகன் என்ன நினைக்கிறார் எனில், `வீட்டில் போரடிப்பதால் அப்பா வேலைக்குப் போகிறார்.’  

தன் சந்தோஷங்களை முற்றிலுமாகத் துடைத்தழித்துக்கொள்வது ஒரு வாழ்க்கையா?  40 ஆண்டுக்காலம், தன் இளமைக்காலம் முழுவதையும் சம்பாதித்தல் – சேமித்தல் என்ற இரண்டு வார்த்தைகளுக்குள்  அடக்கி, பெரும்பாலானவர்களின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. கணக்குப்பிள்ளைகளைப் போல எப்போதும் வரவுசெலவுகளைப் பற்றியே பெற்றோர் பேசுவதால், இதுதான் வாழ்க்கை எனக் குழந்தைகள் நம்பத் தொடங்கிவிடுகின்றன.

2000-ம் ஆண்டிற்குப் பின்னர் இந்திய நடுத்தர வர்க்கத்தின் சொத்துகள் 150 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக குளோபல் வெல்த் ரிப்போர்ட் தெரிவித்திருக்கிறது. ஆனால், இது நற்செய்தியன்று. சொத்துகளாக வாங்கிப் போட்டாலும் அவர்கள் கடனாளியாக இருப்பதை வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை, அவர்கள் மாதாந்திர ஸ்வைப் கணக்கு, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமை, நீதிமன்றங்களில் குவியும் லட்சக்கணக்கான வழக்குகள், செலுத்தாத கடனை வசூலிக்க ரெக்கவரி ஏஜென்ட்டுகளை நியமித்தல் என எல்லாமே ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கின்றன.  நிறைய சம்பாதித்து, நிறைய செலவழித்து, நிறைய கடன்பட்டு, நிறைய துயருறுதல் வாழ்க்கையாக இருக்கும்போது அதற்கிடையே அன்பு, மகிழ்ச்சி எங்கே மலரும்?

இந்தியத் தம்பதியர் தமது நெருக்கத்தைத் தொலைப்பதற்குப் பணமும் குடும்பப் பொறுப்புகளும் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. இந்தியச் சுற்றுலாத் தளங்களுக்குப் போனோமென்றால், ஜோடி ஜோடியாக வெளிநாட்டவர்களைப் பார்க்க முடியும். இளைய ஜோடிகளுக்கு இணையாக முதிய ஜோடிகளும் கைகளைக் கோத்துக்கொண்டு வலம் வருவார்கள். துணையுடன் போகக்கூடிய, குழந்தைகளையும் அழைத்துச் செல்லும் நெடும் பயணங்களுக்கு அவர்கள் திட்டமிடுகின்றனர்.  வீடுகள் கட்டுவது, நிலங்கள் வளைப்பது, நகைகளைச் சேர்ப்பது போன்ற சிற்றின்பங்களைத் தூர வைத்துவிட்டு, சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதியைப் பயணங்களுக்கும் குடும்பத்தோடு இளைப்பாறுவதற்கும் செலவிடுகின்றனர். குழந்தை படிப்பை முடித்து வளர்ந்துவிட்ட பின்னரும் அதற்குச் சொத்து சேர்த்து, தன் வாழ்வை அவர்கள் அழித்துக் கொள்வதில்லை.

 உலகப் புகழ்பெற்ற நடிகரான ஜாக்கிசான், தன் மரணத்திற்குப் பின் தன்னுடைய பெருமதிப்புள்ள சொத்துகளை அறப்பணிகளுக்குக் கொடுக்கப்போவதாக அறிவித்தார். உங்கள் மகனுக்கு ஏன் கொடுக்கவில்லை என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா? ‘என் மகன் திறமையானவராக இருந்தால் அவருக்குத் தேவையான பணத்தை அவரே சம்பாதிப்பார். திறமையற்றவர் எனில், நான் சம்பாதித்ததையும் அழிக்கவே செய்வார்.’’ எத்தகைய மேன்மையான புரிதல்!

ஆனால், நாம் நம் பிள்ளைகள் அழிக்க வேண்டுமென்பதற்காகவே உயிரை உருக்கிச் சொத்துகளைச் சேர்க்கிறோம். பெற்றோர் தம் சொத்துகளைப் பிள்ளைகளுக்குக் கைமாற்றிக் கொடுத்துக்கொண்டே இருப்பதாலும், பிள்ளைகள் பெற்றோரின் பணத்தை முதலீடாக வைத்துக் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக வாய்ப்பு என அனைத்தையும் வரித்துக்கொள்வதாலும் பணக்காரராக இருப்பதென்பது பரம்பரை விஷயமாக இருக்கிறது. பத்துத் தலைமுறைகளுக்குச் சேர்த்து வைப்பதைப் பெற்றோர் நிறுத்தும்போது, புதையலைப்போல ஓரிடத்தில் குவிந்திருக்கும் பணம் மேலும் கீழுமாகப் பாயும். இதன்மூலம் சாமானியர்களும் தம் திறமையால் முன்னேறும் வாய்ப்பு எளிதாகிறது. கோடீஸ்வரரான ஜாக்கிசானின் மகன், சொத்துகள் தரப்படாததால் தன் உழைப்பில் முன்னேறும் அரிய வாய்ப்பைப் பெற்றார். அவர் சாதாரண வேலை பார்த்துக்கொண்டு சாமானியராக வாழக் கூடாதா என்ன? டாக்டர் பிள்ளை டாக்டராகவும், வங்கி ஊழியரின் வாரிசு வங்கி ஊழியராகவும், அரசியல்வாதியின் குழந்தை அரசியல்வாதியாகவும், நடிகர் மகன் நடிகராகவும்தான் ஆக வேண்டுமா?

நாம் நம் குழந்தைகளுக்கு எளிமையாக வாழ்வதன் அவசியத்தைக் கற்பிக்கவே இல்லை.  எளிமை எனும் நல்வாழ்க்கைக்கான தத்துவத்தை, பிழைக்கத் தெரியாதவர்களுக்கான வழி என ஒதுக்குகிறோம். எளிமையை ஏழ்மையோடு சேர்த்துக் குழப்பிக்கொள்கிறோம். சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்குமான வேறுபாட்டை மறந்தோம். கேட்டபோதெல்லாம் டிரஸ் வாங்கித் தராத பெற்றோரை, குழந்தைகள் கருமியாகப் பார்க்கின்றனர் எனில் அது யார் தவறு? என் முன்னாள் நண்பர் ஒருவர் தான் நிறைய சம்பாதிக்கிற போதும், தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்கிறார். உறவினர் கேலி செய்தும், மனைவி கண்டித்தும் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வில்லை. அதுமட்டுமன்று, பொருள்களின் பயன்பாட்டையும் தேவையையும் குழந்தைகளுக்குப் புரிய வைப்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார். ஒருமுறை அவரின் மகள், `அப்பா ஸ்கூல் பேக் கிழிஞ்சிருச்சு. நிறைய தடவை தைச்சுப் போட்டுட்டேன். காசு வரும்போது புதுப் பை வாங்கிக் கொடுங்க’ என்று சொல்வதைக் கேட்டு என் கண்ணில் நீர் துளித்துவிட்டது.

நம் வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்ப்போம். வீடா, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸா என்ற சந்தேகமே வந்துவிடும். `சொந்த வீடு இல்லேன்னா வாழ முடியாது’, `சோஃபா இல்லேன்னா உட்கார முடியாது’, `டிவி இல்லேன்னா பொழுது போகாது’, `கார் இல்லேன்னா பக்கத்துத் தெருவுக்குக்கூடப் போக முடியாது’, `தினமும் ஒரு டிரஸ் போடலேன்னா மரியாதை கிடைக்காது’, `காஸ்மெட்டிக்ஸ் இல்லேன்னா அழகு வராது’, `காஸ்ட்லி சிகிச்சை இல்லேன்னா ஆரோக்கியம் வராது’, `செல்போன் இல்லேன்னா வாழவே முடியாது’ என இப்படியான முடியாதுகள் நம் மூச்சைப் பிடித்து இறுக்குகின்றன.

உண்மை என்னவென்றால், நாம் இன்று வாங்கிக் குவிக்கும் பொருள்களில் 90 சதவிகிதப் பொருள்கள் இல்லாமலேயே நம்மால் சந்தோஷமாக வாழ முடியும். அது நமக்குத் தெரியும். ஏனென்றால், நாம் சென்ற தலைமுறைக் குழந்தைகள். ஆனால், இந்தத் தலைமுறைக்கு அது தெரியாது. நம் முன்னோர்கள் கற்பித்த எளிமையையும் சிக்கனத்தையும் நம் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரத் தவறிவிட்டோம்.  
இந்தியக் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. ஒன்றரை லட்சம் பேராக இருக்கும் எண்ணிக்கை இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கப்போகிறது. புதிய பணக்காரர்கள் அதில் இடம் பிடித்திருப்பார். ஆனால், வேர்ல்ட் ஹேப்பினஸ் இண்டெக்ஸில் முன்னேறும் வாய்ப்பு தொலைதூரத்தில்கூட இல்லை.

ஏனென்றால், மகிழ்ச்சி என்பதற்கு நாம் வைத்திருக்கும் அர்த்தமும் உலகச் சமூகங்கள் வைத்திருக்கும் அர்த்தமும் வேறுபடுகின்றன. எந்த நாட்டில் வளர்ச்சி ஆரோக்கியமான சமநிலையில் இருக்கிறது? எங்கே ஏற்றத்தாழ்வுகள் இல்லையோ, எங்கே தான் வாழ்கிற சமூகத்தின் மீது மக்கள் உச்சபட்ச நம்பிக்கை வைத்துள்ளனரோ, எங்கே அரசின்மீது  நம்பிக்கை இருக்கிறதோ’ அந்த நாட்டினர் மகிழ்ச்சியாக இருப்பதாக ஐ.நா சொல்கிறது. ஆனால், நாம் நமது மகிழ்ச்சியைச் சமூகத்தோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை. சக மனிதர்மீது அன்பும் மரியாதையும் இல்லாதவர்களின் மகிழ்ச்சிக்கு மதிப்பில்லை.

பணமிருந்தால்தான் சந்தோஷம் கிடைக்கும் என்ற உலகமயக் கருத்தியல் தோல்வியடைந்து விட்டது. வளர்ந்த நாடுகளில்  பெருகும் மன அழுத்தமும் தற்கொலைகளும் நமக்கான எச்சரிக்கை. வாழ்வில் எளிமையையும் எளிய விஷயங்களையும் கற்கும்போதுதான் உண்மையான மகிழ்ச்சி உருவாகிறது. குழந்தைகள் அத்தகைய மகிழ்ச்சிக்குத்தான் ஏங்கிக் கிடக்கின்றனர். பெற்றோர் குழந்தைகளுடன் எப்படி வாழ்கின்றனர்  என்பதுதான் முக்கியமே தவிர, எவ்வளவு சம்பாதித்தனர் என்பது ஒரு பொருட்டே அன்று. 

வகுப்பில் என் ஆசிரியர் ஒரு கேள்வியைக் கேட்டார். ஆசை என்றால் என்ன? ஆளாளுக்கு ஒரு பதிலைச் சொன்னோம். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு இறுதியில், விளக்கத்தை அளித்தார். `தேவைக்கு மிஞ்சிய எல்லாமே ஆசைதான்.’  நான் வாழ ஒரு வீடு வேண்டும் என நினைத்தால் அது தேவை. வீடுகள் வேண்டுமென நினைத்தால் அது ஆசை. அந்த வீடும் வாழ்நாள் கடனில்தான் கிடைக்கும் என்றால், அது தேவையில்லை என்றே அர்த்தம். வாழ்நாள் முழுக்க வாடகை வீட்டில் வசிப்பது ஒன்றும் இழுக்கான விஷயமல்ல. ஆயுள் முடிகிறவரை கட்டுகிற கடனை, குழந்தையின் அறிவு, ஆரோக்கியம், நற்பண்புகள், அனுபவங்களுக்குச் செலவிடுங்கள். கடனில் வீட்டை வாங்கிவிட்டு எங்கேயும் வெளியில் போக முடியாமல் குழந்தைகளைச் சொந்த வீட்டுச் சிறையில் அடைக்காதீர்கள். குழந்தைகளுக்குச் சரியாக வாழக் கற்றுக் கொடுத்து, தன் காலில் நிற்க வழி விட்டு, மறுபடியும் கிடைக்கவே கிடைக்காத இந்த அரிய வாழ்வை நீங்களும் கொஞ்சம் வாழுங்கள்.  


குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ…

* நேசிக்கும் விஷயத்தைச் செய்ய அனுமதியுங்கள், கவிதை எழுதுவது, நீச்சலடிப்பது, விளையாடுவது என விரும்பும் விஷயத்தைக் குழந்தை செய்யும்போது அதன் மனம் மகிழ்ச்சியடைகிறது. பொருள்கள்மீது நாட்டம் குறைகிறது.

* பிறருக்கு உதவ ஊக்கப்படுத்துங்கள். எல்லாம் தனக்கே வேண்டுமென்ற சுயநலம் இதனால் அழிகிறது.

* கிடைக்கும் நல்வாழ்க்கைக்கு நன்றி பாராட்டப் பழக்குங்கள். உணவை வீணடிப்பது, பொருள்கள் பழுதடைந்தால் ரிப்பேர் செய்யாமல் விசிறியடிப்பது இவையெல்லாம் அவற்றின் மதிப்பு தெரியாததாலேயே வருகின்றன. ஒரு பேனா வாங்கித் தந்தாலும் அதற்கு நன்றியோடு இருக்கச் செய்யுங்கள்.

* எண்ணங்களை, நேரத்தை, திறமைகளை, பொருள்களைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளக் கற்றுத் தாருங்கள். மனம் இலகுவாகும்.

*  சிரிக்க அனுமதியுங்கள். பிறரைப் புண்படுத்தும் கிண்டல்களே நகைச்சுவை என்றாகிவிட்ட காலம் இது. குழந்தை நிறைய சிரிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். 

* நேரத்தைக் கேட்டால் நேரத்தைக் கொடுங்கள். அன்பைக் கேட்டால் அன்பைக் கொடுங்கள். பணம் பொருளால் இவற்றை ஒருபோதும் ஈடு செய்யாதீர்கள்.

* அன்பிற்குரியவர்களோடு நேரம் செலவிட அனுமதியுங்கள். உறவு மற்றும் நட்புகளின் வழியே மனிதர்களை மதிக்க, அவர்களின் சுக துக்கங்களைப் பகிர, குழந்தை பழகுகிறது.

* இயற்கை சூழ் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். இந்தப் பூமியில் உள்ள கோடானு கோடி மரங்கள், பறவைகள், விலங்குகளோடு தானும் ஓர் அங்கம் என்ற புரிதல் வளரும். பூமியை அழிக்கும் சுயநலம் அழியும்.

* பிறருடைய பணம், வசதிகள், மதிப்பெண் இவற்றோடு ஒப்பிடாதீர்கள். குழந்தை தன் வாழ்க்கையை அது வாழ வேண்டும். எவ்வளவு குறைகள் இருந்தாலும் பிறர் வாழ்க்கையை வாழ அனுமதிக்காதீர்கள்.


பெற்றோர்கள் மகிழ்ச்சியாக வாழ…

1. குறைவான கடன்: ஒரு சில ஆண்டுகளில் அடைத்துவிடக் கூடிய கடன்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளுங்கள். முடிந்தளவு வருமானத்திற்குள் வாழப் பழகுங்கள். கடன் வாழ்வின் நிம்மதியைப் பறித்துவிடும் என்பதை மறக்காதீர்கள். கடன் பத்திரத்தில் கையொப்பம் இடும்போது வாழ்க்கையை ஒப்புக் கொடுக்கிறீர்கள் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

2. மினிமலிஸ்ட்டிக் வாழ்க்கைக்கு மாறுங்கள். பொருள் குறையும்போது சுமை குறைகிறது. பொருள்களை வாங்குவது, துடைத்து வைப்பது, ரிப்பேர் செய்வது என வாழ்க்கை இதிலேயே முடிந்துவிடும். தினமும் ஒரு கண்டுபிடிப்பு நிகழ்கிறது. தினமும் ஒரு பொருள் சந்தைக்கு வருகிறது. அவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டிருந்தால் முடிவேது?

3. அந்தஸ்து என்பது நற்பண்புகளாலும் நற்செயல்களாலும் வருவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வசதிக்குறைவு ஒருபோதும் ஒருவரின் மரியாதையைக் குறைக்காது.

4. எந்த உழைப்பும் இல்லாமல் பெரும் பணமீட்டத் திட்டமிடுகிறீர்கள் என்றால், ஏதோவொரு வகையில் ஊழலுக்குத் தயாராகிறீர்கள் என்றே அர்த்தம்.

5. அச்சப்படாதீர்கள். பொருள் தேவை ஒரு பிரச்னையே இல்லை. அவரவர் வசதிக்கு ஏற்ப வாழ இப்பூமியில் இடமிருக்கிறது. நம் பிரச்னை என்னவெனில் நாம் நமக்கு மேலே இருப்பவர்களைப் பார்த்துச் சூடுபோட்டுக்கொள்வதுதான்.

Monday, September 4, 2017

ஒரு தாயின் மடல் நன்றி: விகடன் சந்திப்பு: ஐஸ்வர்யா - படம்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ் - ஓவியம்: பாரதிராஜா
ன்பு சூழ் உலகத்திற்கு,
பேரறிவாளன் இருந்த சிறையறை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்காது. ஆனால், எனக்கு நன்றாகத் தெரியும். அவனது மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகத் திருத்தி எழுதப்படுவதற்கு முன்பு ஒருமுறை அவனை அந்தத் தனிமைக் கொட்டடியில் சந்தித்திருக்கிறேன். சுவர்களுக்குக் கண்கள் இருந்திருந்தாலும் குருடாகவே இருந்திருக்கும்படியான இருண்ட அறை. அதே அறையின் ஓரத்திலேயே கழிப்பறை; மற்றொரு ஓரத்தில் குடிப்பதற்கான நீர். அங்கே குறுகிக் கொண்டு படுத்துக்கிடந்தான் என் மகன். பார்த்த எனக்கு நெஞ்சத்தை அழுத்திக்கொண்டு கண்ணீர் வந்தது. அதற்குப்பிறகு, என் மகனை எப்படியாவது அங்கிருந்து மீட்டுக் கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே எனக்குள் நிறைந்து இருந்தது. 
இதோ இப்போது என் மகன் திரும்பி வந்திருக்கிறான். முழு விடுதலை இல்லை என்றாலும், பல மாதப் போராட்டங்களுக்குப் பின் முப்பது நாள் சிறை விடுப்பில் என் மகன் மீண்டும் வீட்டுக்கு வந்திருக்கிறான்.

1991-ம் வருடம். தனது பத்தொன்பதாவது வயதில் என் மகன் மிதிவண்டிகளில் ஊர்த் தெருக்களைச் சுற்றிக் கொண்டிருந்த ஒருநாள். அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டான். வெறும் விசாரணைதானே, மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுவான் என்று நாங்கள் காத்திருந்தோம். 

அன்றிரவு நாங்கள் கூட்டாக அமர்ந்து சாப்பிட, அவனுக்குப் பிடித்த பருப்புக் குழம்பு எங்கள் வீட்டு அடுக்களையில் அவனுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தது. ஆனால், அறிவு மீண்டும் வீட்டுக்குத் திரும்ப, எங்களோடு சேர்ந்து உணவருந்த 26 ஆண்டுகள் ஆகிவிட்டன! 

இப்போது என் மகன் வருவான் என்று நினைக்கவேயில்லை. ஏனென்றால், அவன் வருவான் என்று நம்பிக் காத்திருந்த நொடிகளெல்லாம் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. மொத்தமாக நம்பிக்கை இழந்திருந்த எனக்கு ‘நம்ம அண்ணே ஜோலார்பேட்டை வந்திருச்சும்மா... இன்னும் கொஞ்சநேரத்துல வீட்டுக்கு வந்துரும்’ என்று அன்றைய தினம் யாரோ சொன்னதும் அதை நம்பவும் முடியாமல் செயலற்றுதான் போனேன். 

அவனுக்காகச் சாப்பிட எதுவுமே செய்து வைக்கவில்லை. வாசலுக்கும் வீட்டுக்குமாகப் பதற்றமாக ஓடவில்லை. ஆனால், அறிவு வந்தான். பத்தொன்பது வயதில் தலை நிறையச் சுருண்டு கிடந்த முடியுடன் சென்றவன், நாற்பது வயதில் முன்னந்தலை முடிகள் கொட்டி வயோதிக வாலிபனாய் வந்திருக்கிறான். சிறையின் உயிர்ப்பற்ற சூழல் அவனது இளமையை விழுங்கியிருந்தது.


‘அம்மா!’ என்று என்னை அழைத்தபடியே வந்தான். ‘என்னம்மா இது வீட்டுக் கூரை தாழ்ந்திருக்கு?’ என்றபடியே நுழைந்தான். உண்மையில் வீட்டுக் கூறை அப்படியேதான் இருந்தது. சாலையை உயர்த்திக் கட்டியிருந்தார்கள். 

வீட்டிற்குள் நுழைந்தவன் ‘உடம்புக்கு இப்போ எப்படிப்பா இருக்கு?’ என்று என் கணவர் படுத்திருந்த கட்டிலை நோக்கி ஓடினான். மகன் சிறையில் இருந்ததுதான் என்னவரின் உடல்நிலையை மோசமடையச் செய்திருந்தது. அத்தனை முடியாதபோதும், மகனைக் கண்டதும் எழுந்து அமர்ந்து ஆரத் தழுவிக் கொண்டார். 

கடந்த சில ஆண்டுகளில் எனக்கும் சர்க்கரை நோய்த் தாக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால், மகனைக் கண்டதும் நோய் என்ன? நொடிப்பென்ன? அத்தனையும் பறந்து போய்விட்டது. இரவு உண்பதற்கு தோசை ஊற்றித் தரச்சொல்லிக் கேட்டான். சிறைவாசம் அவனுக்கு தோசை கிடைப்பதைக்கூட அரியதாக்கியிருந்தது. அன்றிரவு, நான் என் கணவர் மற்றும் பிள்ளைகள் மூன்று பேர் என இருபத்தாறு ஆண்டுகள் கழித்துக் குடும்பமாக ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்டோம்.

அறிவுக்கு கிடார் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. அவனுடைய அக்கா ஆசையாக வாங்கிக் கொடுத்த கிடாரைத் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான். இளையவள் அவனுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுத்து அதில் வாட்ஸ்அப் உபயோகிக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். சிறு வயதில் ஒருவருக்கு ஒருவர் சீண்டிக்கொண்டும் செல்லப்பெயர் இட்டுக்கொண்டும் விளையாடியதைப்போலவே இப்போதும் செல்லமாகச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
ஒரு குறிஞ்சி மலர் பூக்க பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும். இங்கே எங்கள் குடும்பம் மீண்டுமாய் பூக்க இரு குறிஞ்சி மலர்கள் பூக்கும் காலங்கள் கடந்துள்ளன. இந்த 26 ஆண்டுகாலம் அதற்குத் தேவையாய் இருந்துள்ளது. 



இயற்கையென்றால் அவனுக்கு மிகவும் இஷ்டம். சிறையில் இருக்கும்போது நிலவைப் பார்க்க வேண்டும் கவிதை எழுத வேண்டும் என்று அடிக்கடிச் சொல்வான். பரோலில் வெளியே வந்த பிறகு, இரவு எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்து வானத்தில் நிலாவைப் பார்த்துவிட்டு ‘அம்மா! நிலாவைப் பார்த்துட்டேன். ஆனால், மகிழ்ச்சியில் கவிதைதான் தோணலை’ என்றான் குழந்தையைப் போல. `இந்தக் குழந்தை மனதை ஏனடா சிறைக்குள் பூட்டி வைத்துள்ளீர்கள்’ என்று மனதுக்குள் அழுதுகொண்டேன். 

அழ வேண்டாம் என்று மட்டும் தயவுசெய்து எனக்கு அறிவுறுத்தாதீர்கள். சோகம் என்றாலும் மகிழ்ச்சி என்றாலும் என்னால் கண்ணீரில்தான் வெளிப்படுத்த முடியும். இதை எழுதும்போது என் மகன் என்னுடன் இருக்கிறான் என்கிற மகிழ்ச்சியில் என் கண்களில் நீர் வடிகிறது. அவன் எங்களுடன் இருக்கும் இந்த முப்பது நாள்களில் ஒவ்வொரு நிமிடமும் அவனுக்குப் பிடித்ததுபோல அனைத்தும் இருக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறேன்.

முப்பது நாள்கள் கழித்து அதே இருட்டறை சிறைவாசத்துக்கு மீண்டும் என் மகன் சென்றுவிடுவானே... என்பதை நினைக்கும்போது மனது பயம் கொள்கிறது. நிரந்தரமாக அவன் எங்களுடனே இந்த வீட்டில் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? 
என் மகன் அறிவு இதுவரை அனுபவித்த துன்பங்கள் போதும். அவனுக்கான முழு விடுதலை வேண்டும். அவன் வாழ்க்கையில் இனிமேல் மகிழ்ச்சியை மட்டுமே உணர வேண்டும். அவனோடு மகிழ்ச்சியாகத் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும் ஒரு பெண்ணாகப் பார்த்து அவனுக்கு மணமுடித்து வைக்க வேண்டும். என் குடும்பமும் எங்கள் மனமும் நிரம்பி இருக்க வேண்டும். அதைப் பார்த்துவிட்டுத்தான் நான் நிம்மதியாகக் கண்மூடுவேன்.

நீங்காத நம்பிக்கையுடன்,

அற்புதம் அம்மாள்

Monday, August 28, 2017

நமக்கு நாமே பிக் பாஸ்
பரிசல் கிருஷ்ணா

நம் டாஸ்க் நம் கையில்!  30 நாளும் தொடர்ந்து இவற்றில் இருக்கும் விஷயங்களைச் செய்து வந்தால், வாழ்க்கையில் ஓஹோ ஆஹா மாற்றங்கள் கியாரன்டி!

1.குறைந்தது 3  கி.மீ வாக்கிங்.


2. மன அழுத்தம் இருந்தால், அந்தக் கணமே அதை ஒரு நண்பரை அழைத்துப் பகிர்ந்து கொள்வேன்.

3. இரவு 8 மணிக்கு முன்பு டின்னர்.

4. குறைந்தது 30 நிமிடம் ஏதாவது உடற்பயிற்சி.

5. இரண்டு பழ வகைகளையாவது சாப்பிடுவேன்.

6. 8 மணி நேரமாவது தூக்கம்.

7. காலை உணவை மிஸ் பண்ண மாட்டேன்.

8. ஒருவேளை உணவாவது குடும்பத்தாரோடு சாப்பிடுவேன்.

9. நாள் முழுவதும் எந்த வடிவிலும் வெள்ளை சர்க்கரை உட்கொள்ள மாட்டேன்.

10. உண்ணும் உணவில் பாதியாவது காய்கறிகள் இருக்கும்.

11. இரண்டு வகையான இயற்கைப் பழரசங்கள் அருந்துவேன்.

12. இன்றைய உணவில் கீரை நிச்சயம் இருக்கும்.

13. ஒவ்வொரு 2மணி நேரத்திற்கும் குறைந்தது 300 மி.லி தண்ணீர் குடிப்பேன்.

14. நடந்தே செல்ல முடிகிற தூரத்திற்காக எந்த வாகனத்தையும் உபயோகிக்க மாட்டேன். 

15. அழைப்புகளை ஏற்பது தவிர்த்து, இன்றைக்குக் காலை 11 மணிக்கு முன்னதாக என் செல்போனைத் தொடமாட்டேன்.

16. கடும் கோபம் வரும் தருணம் வாய்த்தால், அதைச் சிரித்துக் கடப்பேன்.

17. பிடித்த புத்தகத்தில் 50 பக்கங்களாவது படிப்பேன்.

18. உறங்கும் முன் என் செல்போனை சமையல் அறையில் வைத்துவிட்டு, காலையில்தான் எடுப்பேன்.

19. கழிவறையில் செல்போன் பயன்படுத்த மாட்டேன்.

20. கடந்த ஆறு மாதமாகப் பேசாத ஒரு நண்பரை அழைத்து 30 நிமிடமாவது பேசுவேன்.

21. எனக்குக் கீழ் பணிபுரியும் ஒருவரை அழைத்து, நிறைகளைச் சொல்லிப்  பாராட்டுவேன்.

22. இன்று எந்த எலெக்ட்ரானிக் உபகரணங்களையும் பயன்படுத்த மாட்டேன்.

23. இன்று முழுவதும், முடிந்தவரை மௌனமாக இருப்பேன்.

24. காபி, டீ, சிகரெட் இந்த மூன்றும் இன்றைக்கு இல்லை.

25. இன்று முழுவதும் தொலைக்காட்சியைத் தவிர்ப்பேன்.

26. தொடர்ச்சியாக இரண்டுமணி நேரம் குடும்பத்தாரோடு அமர்ந்து கலந்துரையாடுவேன்.

27. மூன்று வேளை உணவையும் சரியான நேரத்தில் உண்பேன்.

28. செல்போனை வீட்டில் வைத்துவிட்டு குடும்பத்தாரோடு வாக்கிங் போவேன்.

29. நூலகம், பூங்கா மாதிரியான ஓர் இடத்திற்குச் சென்று ஒருமணி நேரம் ஒன்றும் சிந்திக்காமல் அமர்ந்திருப்பேன்.

30. நண்பர் ஒருவரிடம் இந்த மாதம் முழுவதும் இவற்றை எப்படி நான் பின்பற்றினேன் என்பதை ஒளிவுமறைவின்றி பகிர்ந்து கொண்டு அவரையும் பின்பற்றச் சொல்வேன்.


 ஃபாலோ பண்ணுங்க பாஸ்.. லைஃப் நல்லாருக்கும்!

Wednesday, June 7, 2017

தினம் 3 பேரீச்சம் பழம்... பலன்கள் பல!


`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - பைபில் 
பேரீச்சை... பனை வகையைச் சேர்ந்த இந்த மரத்தை அதன் இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. குறைந்த மூலதனத்தில் நிறைவான பலன் தரக்கூடிய இந்த பழத்தை சாப்பிடுவதற்கென நேரம் ஒதுக்கத் தேவையில்லை. ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுபோலச் சாப்பிடலாம். ஃப்ரெஷ்ஷாகவோ, உலர்த்தியோ எப்படிச் சாப்பிட்டாலும் ஏராளமான பலன்களை அள்ளித்தருகின்றது. உண்ணத்தகுந்தது மட்டுமல்ல பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியது.
 

மலச்சிக்கல் தீர்க்கும்!

'பேரீச்சை மலச்சிக்கலை உண்டாக்கும்' என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், உண்மையில் பேரீச்சை ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலைச் சரிசெய்ய, முதல்நாள் இரவே மூன்று பேரீச்சையை நீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் அவற்றின் சாற்றைக் குடிக்கலாம். பேரீச்சையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது; கரையக்கூடியது. இது செரிமான மண்டலப் பாதையில் உள்ள நீரை வெளியேற்ற உதவுகிறது. குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகும் இது செரிமானச் சக்தியை அதிகரிக்கும்.
 
இரும்புச்சத்து அதிகரிக்கும்! 

பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத் தரும். ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. 
இதயத்தை இதமாக்கும்!
இதில் நிறைந்துள்ள பொட்டாசியம், இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. பலவீனமான இதயத்துக்கு பலம் தரும். இதயத்துக்கு இம்சை தரக்கூடிய கெட்ட கொழுப்பைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. 
இன்ஸ்டன்ட் எனர்ஜி!
பேரீச்சையில் இயற்கையாகவே இனிப்பு அதிகம். சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் நிறைந்துள்ளன. மதிய நேரங்களில் ஏற்படும் மந்தநிலையை சீர்செய்து உடலுக்குத் தேவையான உடனடி எனர்ஜியைத் தரும். மேலும், இதில் நிறைந்துள்ள மாவுச்சத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். 
எலும்பை வலுவாக்கும்!
இதில் உள்ள மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற நுண் சத்துகள் எலும்பை வலுவாக்கும். பேரீச்சையை உணவுடனும் சேர்த்துக் கொள்ளலாம். எலும்பின் வளர்ச்சிக்கு உதவும். மேலும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோயில் இருந்து நம்மைக் காக்கிறது. குறிப்பாக, பெண்கள் பேரீச்சையை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்தும். வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது. 
நினைவாற்றல் பெருக்கும்!
இதில் உள்ள வைட்டமின் மற்றும் பொட்டாசியம் சத்துகள் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. நரம்பு மண்டலச் செயல்பாட்டை அதிகரிக்கவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவும். ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது.  

கூடுதல் பலன்கள்!
* தினமும் ஆறு பழங்களைச் சாப்பிட்டுவர உடல் எடை அதிகரிக்கும்.
* தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமடையும். 
* பேரீச்சையில் உள்ள கரிம சல்ஃபர், உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் ஒவ்வாமையைச் சரிசெய்யும்.
* பெண்களுக்குச் சீரான மாதவிடாய்ச் சுழற்சியை ஏற்படுத்தும். 
* வயிற்றுப் புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடியது.

Thursday, June 1, 2017


வெந்நீர்... உடலுக்கு உரம்


நீரைக் காய்ச்சிக் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக நம் பாரம்பர்ய மருத்துவம் கூறுகிறது. 
நீரைக் காய்ச்சிக் குடிப்பதுதான் சிறந்தது என்கிறது சித்த மருத்துவம். அதைத்தான், மோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கி உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி’ என்று தேரையர் தனது 'பிணி அணுகா விதி' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, நீரைக் காய்ச்சியும் மோரை நீர் சேர்த்துக் கலந்தும் நெய்யை உருக்கியும் சாப்பிட வேண்டும் என்பதே அதன் பொருள். மேலும், இயற்கை மருத்துவத்தில் வெந்நீரின் மகிமை பற்றி பேசும் ஏராளமான பாடல்கள் காணக்கிடக்கின்றன.
அப்படி பதார்த்த குண சிந்தாமணியின் ஒரு பாடலில்,
`நெஞ்செரிப்பு நெற்றிவலி நீங்காப் புளியேப்பம்
வஞ்சமுற வந்த வயிற்றுநோய் - விஞ்சியே
வீழாமக் கட்டோடு வெப்பிருமற் சுட்டநீர்
ஆழாக்குட் கொள்ள அறும்' என்று குறிப்பிட்டுள்ளது.
`வெந்நீர் அருந்துவதால் நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் மறைந்து உணவு செரிமானமாகும். எந்த வகையான தலைவலியாக இருந்தாலும், மிதமானச் சூடுள்ள வெந்நீரைக் குடித்தால், நரம்புகளுக்கு இளக்கம் கொடுத்து, தலைவலியைக் குறைக்கும். அடிக்கடி வெந்நீர் குடித்துவருவதால் பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். வாய்வுப் பிரச்னைகள் குறையும். உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும்’ என்று கூறுகிறது இந்தப் பாடல். 
இது தவிர, வெந்நீர் குடிப்பதால், மலச்சிக்கல் தீரும்; உடல் எடை குறைக்க உதவும்; உண்ட உணவு எளிதில் செரிமானமாகும்; சளி, இருமல், தொண்டைப்புண் நீங்கும்; ரத்த ஓட்டம் அதிகரிக்கும்; நரம்பு மண்டலத்தைச் சுத்திகரிக்கும்; பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய்க் கால வயிற்றுவலி நீங்கும்; முதுமையைத் தள்ளிப்போடும்; தோல் நலத்தைப் பாதுகாக்கும்; தொற்றுநோய்க் கிருமிகளை வெளியேற்றும்; முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்; பொடுகுத் தொல்லை நீங்கும்; முடியின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும். 
இவை மட்டுமல்லாமல், `வெந்நீரை எந்தப் பாத்திரத்தில் ஊற்றிக் குடிக்கிறோமோ அதற்கேற்ப பலன்கள் மாறுபடும்’ என்றும் சித்த மருத்துவம் கூறுகிறது. அதன்படி, தங்கப் பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றிவைத்துக் குடித்தால் வாத நோய், சுவையின்மை, உடல் உஷ்ணம், வெப்புநோய் போன்றவை நீங்கும்.
வெள்ளிப் பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி வைத்துக் குடித்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவும். இரும்புப் பாத்திரம் ரத்தச்சோகை நீங்கச் செய்யும். நரம்புகள் உறுதியாகும். உடலின் வெப்பநிலையை சீராக்கும். காய்ச்சி ஆறவைத்த நீரைக் குடிப்பதால் விக்கல், பித்தநோய், காதுவலி, வாந்தி, மயக்கம், உடற்சூடு, வயிற்றுப்புண் போன்றவற்றைத் தீர்க்கும். உதாரணமாக ஒரு லிட்டர் நீர் எடுத்துக்கொண்டால் அதை கால் லிட்டராகும் வரை காய்ச்சிக் குடித்தால் உடற்சூடு நீங்கும். அரை பங்காகும் வரை காய்ச்சிய நீரை குடித்தால் வாதம், பித்தம் விலகும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் குடித்தால் வாதம், பித்தம், கபம் பிரச்னைகள் நீங்கும். மூன்றில் ஒரு பங்காகும் வரை காய்ச்சிய நீரைக் குடித்தால், உடல்சூட்டைக் குறைக்கும்; கடுமையான ஜுரம், வயிற்றுப்போக்கு, வாதம், பித்தம், கபம் பிரச்னைகளைப் போக்கும்.
எட்டில் ஒரு பங்காகும்வரை காய்ச்சிய நீரை வெள்ளிப் பாத்திரத்தில் வைத்துக் குடித்து வந்தால், உடல் சூட்டைக் குறைக்கும்; நாவறட்சி, அல்சர், பித்தவெடிப்பு பாதிப்புகளை நீக்கும். அதேபோல, சாப்பிடுவதற்கு முன்னர் வெந்நீர் குடித்தால் உடல் இளைக்கும். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் பசியை மட்டுப்படுத்தும். சாப்பிட்ட பின்னர் வெந்நீர் குடிப்பது ஜீரண உறுப்புகளைத் தூண்டி, செரிமானச் சக்தியை அதிகரிக்கும்.

நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு!

சுகுணா திவாகர், படங்கள்: ஏ.சிதம்பரம், வி.ஸ்ரீனிவாசலு

ஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு தொடங்க இருக்கிற நேரத்தில் வந்திருக்கிறது ‘நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்குத் தடை’ என்கிற மோடி அரசின் அறிவிப்பு. 
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாள் தொடங்கியே மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள்மீது தாக்குதல், மாட்டிறைச்சியை விற்பவர்களாக, சாப்பிடுபவர்களாகத் தாங்கள் சந்தேகப்படு பவர்களை எல்லாம் அடித்து உதைத்தல் எனப் `பசுவதைத் தடுப்பு' என்னும் பெயரால் சட்டத்தைக் கையில் எடுத்தனர் சிலர். உத்திரப்பிரதேசத்தில் தாத்ரி என்னும் கிராமத்தில் முகமது இக்லாக் என்னும் இஸ்லாமியரைக் கொலை செய்தனர். மாட்டுத்தோலை உரித்ததற்காக நாட்டின் பல பகுதிகளில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தினர். இப்போது அவர்கள் கையிலேயே சட்டத்தைத் தந்திருக்கிறார் மோடி.
இந்துத்வா அரசியலை முன்னெடுக்கிற வர்களின் அரசியல் ஆயுதங்களில் ஒன்று ‘பசுவதைத் தடுப்பு’. 
‘பசுவதைத் தடுப்புச் சட்டம்’ என்ற பெயரில் கொண்டுவராமல் ‘சந்தைகளில் இறைச்சிக்காகக் கால்நடைகளை விற்கத் தடை’ என்று   தந்திரமாக ச் சட்டம்  கொண்டுவந்திருக்கிறார் மோடி! 

‘பசு புனிதமானது’ என்கிற மதவாத அரசியல்தான் இதன் அடிப்படை. பசுவைப் புனிதமாகக் கருதி அவற்றைக் காப்பதே இந்தியக் கலாசாரம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

பசு புனிதமா? 
- வேதகாலத்தில் உயர்சாதியினரும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் டி.டி.கோசாம்பி, டி.என்.ஜா தொடங்கி அம்பேத்கர் வரை பலர் சான்றுகளுடன் விளக்கியுள்ளனர்.

- விருந்தினர்களை உபசரிக்கும் சடங்கான ஆர்கியம் அல்லது மதுபர்கம் என்று மிகப் பிரபலமாக அழைக்கப்பட்ட ஒரு சடங்கு குறித்துப் பிற்கால வேத நூல்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றன. 

- விருந்துக்குப் பொருத்தமான பசுக்கள்’ என்ற பொருள் தரும் அதிதினிர் (Athithinir) என்ற சொல் ரிக் வேதத்தில் (X-68.3) காணப்படுகிறது. திருமண விழாவின்போது பசு பலி தரப்பட்டது குறித்து ரிக்வேதப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. 

- ஆட்சியாளர்களோ, மரியாதைக்குரியவர்களோ விருந்தினர்களாக வந்தால், மக்கள் காளைகளையோ, பசுக்களையோ பலியிட்டார்கள் என்று அய்த்தரேய பிராமணத்தில் சொல்லப்பட்டுள்ளது” என்கிறார் ஆய்வாளர் டி.என். ஜா. ‘புனிதப்பசு என்னும் கட்டுக்கதை’ என்று ஒரு நூலே எழுதியிருக்கிறார் அவர்.


- மத நூல்களிலும் தர்மசாஸ்திர நூல்களிலும் மட்டுமல்ல, ஆரம்பகால இந்திய மருத்துவ நூல்களும் மாட்டிறைச்சியின் மருத்துவக் குணங்களைப் பற்றிப் பேசுகின்றன” என்கிறார் டி.என்.ஜா. 
மூச்சுத் திணறல், மூக்கடைப்பு, இருமல், தொடர்ச்சியான காய்ச்சல் ஆகியவற்றுக்கு மாட்டிறைச்சி நல்ல மருந்து என கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய மருத்துவ நூல்களான சரக சம்ஹிதமும் சுஸ்ருதா சம்ஹிதமும்  

*அப்படியானால் எப்போது பசு புனிதமாக்கப்பட்டது?* 


- வேள்விகளில் மாடுகள், குதிரைகள் போன்றவை பலியிடப்பட்டன. இந்த வேள்விகளால் கால்நடைச் செல்வங்கள் அழிவதைப் பௌத்தம் கடுமையாக எதிர்த்தது. ஒருகட்டத்தில், வைதீகத்தைவிட பௌத்தத்தின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்தது. 

- பௌத்தத்தைவிடத் தங்களை மேலானவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் காட்டிக்கொள்வதற்காகவே பிராமணர்கள் முற்றிலுமாக இறைச்சி உண்ணுவதைக் கைவிட்டனர்’ 

- ஆடு, கோழி சாப்பிட்டு மாட்டிறைச்சியை விலக்கிவைத்த சாதி இந்துக்கள், மாட்டிறைச்சி உண்ணும் தீண்டத்தகாதவர்கள் என மூன்று பிரிவுகள் உருவாயின” 


- இன்றளவும் பசுவைப் புனிதமாகக் கருதும் கலாசாரம் என்பது வட இந்தியாவில்தான் செல்வாக்குடன் இருக்கிறதே தவிர, தென்னிந்தியாவில் அத்தகைய மனப்போக்கு குறைவே. காரணம், ‘பசு புனிதம்’ என்று சொல்லி மாட்டிறைச்சியை விலக்கிவைத்த கலாசாரத்தைத் தமிழ் இலக்கியங்கள் எதிலும் பார்க்கமுடியாது. 

- புலையன் ஆவுரித்துத் தின்றான்,  பாணன் கன்றை உரித்துத் தின்றான்' என்று நற்றிணையிலும், வீரர்கள் கொழுத்த பசு இறைச்சியை உண்டனர், விருந்தினர்க்கு மாட்டு இறைச்சியும் வெண்ணரிசிச் சோறும் கொடுத்தனர் என்கிற செய்திகளும்கூட சிறுபாணாற்றுப்படை போன்ற நூல்களில் விவரிக்கப்படுகின்றன. 

- உழவர்கள் கூடப் பசு இறைச்சியைத் தின்றதை அகநானூறு பதிவுசெய்கிறது” என்கிறார் ஆய்வாளர் அ.கா.பெருமாள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மற்றும் சில இடைநிலைச் சாதியினர் மாட்டுக்கறி உண்கின்றனர். பெரும்பாலான இடைநிலைச் சாதியினர் மாட்டிறைச்சி உண்பதில்லை. 
- கேரளாவிலோ தலித்துகள், முஸ்லிம்கள் மட்டுமல்ல, பெரும்பாலான இந்து இடைநிலைச் சாதியினரும் மாட்டிறைச்சி உண்கின்றனர். மீனும் மாட்டு மாமிசமும் கேரளாவின் அடையாள உணவுகள். எனவே 'பசு புனிதம்' என்பது ஒட்டுமொத்த இந்துக்களின், இந்தியர்களின் கலாசாரம் அல்ல.
- ‘பசு புனிதம்’ என்பது வடமாநிலங்களில் இந்து உயர் சாதியினரின் நம்பிக்கையாக மட்டும் இருந்தது. ஆனால், அதை முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலாக மாற்றியது தொடக்ககால இந்துத்துவ வாதிகள். 1881-ல் முதன் முறையாக ‘கோரக்‌ஷண சபா’ என்ற முதல் பசுப்பாதுகாப்பு அமைப்பைத் தொடங்கினார், ஆரிய சமாஜத்தைத் தோற்று வித்த தயானந்த சரஸ்வதி. தொடர்ச்சியாக ஆரிய சமாஜம், இந்துமகா சபா, ஜனசங்கம் என்று இந்துத்துவ அமைப்புகள் பசுப்பாதுகாப்பு அரசியலை முன்னெடுத்தன.

விவசாயத்துக்காகத்தானா?
- தங்களுடைய மதவாத அரசியலை மறைக்க ‘கால்நடைகளைக் காக்கவும் விவசாயிகளைப் பாதுகாக்கவும்தான் இந்தத் தடை’ என்கிறார்கள் மோடி பக்தர்கள். 


- டெல்லியில் பல நாட்களாக நிர்வாணப் போராட்டம் வரை நடத்திய தமிழக விவசாயிகளைச் சந்திக்க முன்வராத நரேந்திர மோடி, ‘விவசாயிகளைப் பாதுகாப்பதற்காகத்தான் மாட்டிறைச்சித் தடையைக் கொண்டுவருகிறார்’ என்று சொல்வதை நம்புவது, ‘கேப்பையில் நெய்தான் வடிகிறது’ என்று ஒப்புக்கொள்வதற்குச் சமம். 



- பால் வற்றிப்போன, வயதான மாடுகளைப் பராமரிப்பதற்கு என்ன வழி என்பதற்கு இதுவரை பசுப்பாதுகாப்பாளர்களிடம் எந்த பதிலும் இல்லை. 

- பசுவதைத் தடுப்புச் சட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் இருந்து மேற்குவங்கம் வழியாகத் திருட்டுத்தனமாக வங்காளதேசத்துக்கு ஆண்டுக்கு ஒரு கோடி கால்நடைகள் (அதன் மதிப்பு 3,126 கோடி) கொண்டுசெல்லப்படுகின்றன. 


- பசுப்பாதுகாப்பு’ என்பதற்குப் பால் உற்பத்தி முதன்மைக் காரணமாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் 2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கால்நடைக் கணக்கெடுப்பின்படி பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்களான ஹரியானா(77%), பஞ்சாப்(67%), உத்தரப்பிரதேசம்(61%), குஜராத்(51%), ராஜஸ்தான்(50%) ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தியில் பெருமளவு எருமை மாடுகளே ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. மொத்த பால் உற்பத்தியில் பசுக்களின் பங்கு பாதி அளவுக்கும் குறைவாகவே உள்ளது.
- இதுவே பசுவதைத் தடைச் சட்டம் நடைமுறையில் இல்லாத கேரளா(93%), மேற்கு வங்கம்(96.5%) மற்றும் அசாம்(91%) ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தியில் பசுக்களின் பங்களிப்பு 90% க்கு மேல் இருக்கிறது. 

 - மாட்டுத் தோல், மாட்டுக் கறி சார்ந்த தொழில்கள் தடையின்றி நடக்கும் மாநிலங்களில் விவசாயிகள் அதிக அளவில் பசுவை வளர்க்கின்றனர். ஆனால், பசுவதை தடைசெய்யப்பட்ட மாநிலங்களில் பசு வளர்ப்பு குறைந்து எருமை வளர்ப்பு அதிகரித்துள்ளது. 

- பசு வதைத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள மாநிலங்களில் பல்வேறு நாட்டு மாடு இனங்கள் அழிந்து வருகின்றன. 2006-ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் தேசிய விலங்கு மரபணு வள ஆணையம் எடுத்த கள ஆய்வின்படி,  `ஹரியானா பசு’ என்னும் தனி இனத்தின் எண்ணிக்கை தொடர்ச்சியாகச் சரிவடைந்து வந்துள்ளது. 

- புதிய தடைச் சட்டத்தின்படி ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்குதான் கால்நடைகளை விற்கவேண்டுமாம். வயதான, பால் சுரக்காத மாட்டை ஒரு விவசாயியிடம் இன்னொரு விவசாயியிடமிருந்து ஏன் வாங்கப்போகிறார்?


- விவசாயிகள் மாடுகளை வளர்க்கவே முடியாத சூழல் உருவாகுமானால் அது இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கான உற்பத்தியை பெரிய அளவில் பாதிக்கும். இறைச்சி, பால் மற்றும் பால்பொருள்களையும் கூட இறக்குமதி செய்ய வேண்டிய நிலைதான் எதிர்காலத்தில் உருவாகும். 
- 2016ஆம் ஆண்டுக் கணக்கின்படி உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவும் பிரேசிலும்தான் முதலிடம் வகிக்கின்றன . 

- முஸ்லிம் பெயரில் இந்த ஏற்றுமதி நிறுவனங்களை நடத்துபவர்களில் கணிசமானவர்கள் உயர்சாதி இந்துக்கள்’ என்பது அம்பலப்படுத்தப்பட்டு, ‘உள்ளூரில் பசுவதைத் தடுப்பு, வெளிநாட்டில் ஏற்றுமதியா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. 

- ஒருவேளை, வீம்புக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் தடை விதித்தால், அது பொருளாதாரத் தற்கொலையாகத்தான்  இருக்கும். 

*விவசாயிகளை அழிக்கும், கால்நடைகளையும் பொருளாதாரத்தையும் அழிக்கும் முட்டாள்தனம் இவை இரண்டும் இணைந்ததுதான் மோடியின் ‘இறைச்சிக்குத் தடை'ச் சட்டம். மொத்தத்தில், இந்தத் தடை நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு*

Wednesday, May 31, 2017

உலகை நடுநடுங்க வைத்த ஹேக்கர்ஸ்!

ஜெ.அன்பரசன்

லகம் முழுவதும் தற்போது அனைவரையும் கதிகலங்க வைத்துவருகிறது ரான்சம்வேர். இது இணையத்தில் உலவி அதன் மூலம் கணினிகள் ஹேக் செய்து வருகின்றன. அப்படி ஹேக் செய்யப்பட்ட கணினியின் மொத்த தகவல்களையும் திருடி வைத்துக்கொண்டு கணினியைச் செயலிழக்கச் செய்து வருகின்றனர். அப்படி செயலிழக்கவைக்கப்பட்ட கணினிகளை மறுபடியும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமானால், ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் அந்த ஹேக்கர்களுக்கு பிணையத் தொகையாகத் தரவேண்டும். இதுவரை சுமார் 150 நாடுகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கணினிகளை இது தாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரான்சம்வேர் ஆனது வானகிரிப்ட், டபிள்யூகிரை ஆகிய ஃபார்மெட்டுகளில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. 
உலகில் இதுவரை நடந்த சைபர் அட்டாக்குகளில் இதுதான் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது.  ஆனால், இந்த ரான்சம்வேரை எந்த நாட்டைச் சேர்ந்தவர் உருவாக்கினார், எப்படி பரப்பிவருகிறார் என்பது போன்ற தெளிவான உண்மைகள் இதுவரை கண்டறியப்படவில்லை. ரான்சம்வேர் ஹேக்கிங் போல இதற்கு முன் சில வைரஸ்களைப் பரப்பிவிட்டு உலகை நடுங்கச் செய்த அதிமுக்கியமான ஹேக்கர்களைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம். டெக்னாலஜி இன்றளவு இல்லாத காலத்திலேயே வைரஸ்களால், இவர்கள் உலகை எந்த அளவுக்கு உலுக்கியுள்ளார்கள் என்பதைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
ராபர்ட் மோரிஸ் :
கம்ப்யூட்டர் உலகின் முதல் வைரஸ் ராபர்ட் மோரிஸ் உருவாக்கிய 'மோரிஸ் வைரஸ்'தான். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் 1988-ம் ஆண்டு கார்னல் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது இந்த வைரஸை உருவாக்கினார். சாதாரண வைரஸாக உள்நுழைந்து மொத்த கம்ப்யூட்டரையும் காலி செய்துவிடும் இந்த மோரிஸ் வைரஸ். இந்த வைரஸ் பரவ ஆரம்பித்த முதல் 3 நாள்களுக்குள் உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான கம்ப்யூட்டர்களின் தகவல்களைத் திருடி, அனைத்தையும் செயலிழக்கச் செய்துவிட்டார் மோரிஸ். 'இன்டர்நெட் எங்கெல்லாம் வீக்காக இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டேன் அவ்வளவுதான்' என்று கைது செய்யப்பட்டபோது சொன்னாராம் மோரிஸ். இதனால் 100 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், 'ஹேக் செய்து பிறர் கம்ப்யூட்டரை நம்மால் கட்டுப்படுத்தவும் முடியும்' என அனைவருக்கும் புரிய வைத்தவரும் மோரிஸ்தான்.
டேவிட் எல்.ஸ்மித் :
இப்போது ரான்சம்வேரால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான 'பேட்ச்' ஃபைலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை நிறுவிக்கொண்டால் ரான்சம்வேரிலிருந்து தப்பித்துவிடலாம் என்று அறிவுரையும் வழங்கி வருகிறது. ஆனால், ஒருகாலத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்பையே ஹேக் செய்து அந்த நிறுவனத்தை மட்டுமல்லாமல், அந்த நிறுவனத் தயாரிப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்த அனைவரையும் அலறவிட்டவர்தான் டேவிட் எல்.ஸ்மித். 1999-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட்டின் எம்.எஸ் வேர்டை குறிவைத்து உருவாக்கப்பட்ட வைரஸின் பெயர் 'மெலிஸ்ஸா வைரஸ்'. இந்த வைரஸ் மெயிலில் வரும். அட்டாச் செய்யப்பட்ட எம்.எஸ்.வேர்டு ஃபைல் கொண்ட மெயிலைத் திறந்தாலே போதும் உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய மொத்த ஜாதகமும் டேவிட் கைக்கு போய்விடும். அதோடு இதே வைரஸ் ஃபைல், உங்கள் மெயிலிலிருந்து தானாகவே 50 பேருக்கு ஃபார்வர்ட் ஆகிவிடும். அந்த 50 பேர் அந்த ஃபைலைத் திறந்தால், அவர்கள் கணக்கிலிருந்தும் தலா 50 பேருக்குச் செல்லும். இவரால் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் 80 மில்லியன் டாலர்.
ஜோனதன் ஜேம்ஸ் :

ஹேக்கிங் உலகின் முடிசூடா மன்னன். 'காம்ரேட்' என்ற பெயரில் ஹேக்கிங் விளையாட்டைக் காட்டி அமெரிக்காவையே நடுநடுங்கச் செய்தவர். 1999-ம் வருடம் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் ஆயிரக்கணக்கான சீக்ரெட் மெயில்களைத் திருடினார். பல ராணுவ அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை மொத்தமாக உருவி அமெரிக்க ராணுவத்துக்கு பெரிய தலைவலியை உருவாக்கியவர். நாசாவின் கம்ப்யூட்டர்களை வசப்படுத்தி மூன்று முறை விண்வெளிப் பயண ஆராய்ச்சியை நிறுத்தி சுமார் 2 மில்லியன் டாலர் நஷ்டத்தை நாசாவுக்கு ஏற்படுத்தியவர். யார் இவர்? என்று அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறைப்பிரிவு சல்லடை போட்டு துளைக்க... அந்த 'காம்ரேட்' ஹேக்கர் கண்டுபிடிக்கப்பட்டான். குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டபின் அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மற்றும் நாசாவுக்கு விளையாட்டு காட்டியது ஜோனதன் ஜேம்ஸ் என்கிற 15 வயது சிறுவன். இவன் சிறியவன் என்பதால், அமெரிக்க அரசு தண்டனை அளிக்காமல், எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தது. ஆனால், ஜோனதன் ஜேம்ஸ் இதோடு நிறுத்திவிடவில்லை. மக்களின் கிரெடிட் கார்டுகளின் தகவல்களைத் திருடி பண மோசடி செயலில் ஈடுபட்டுள்ளான். இந்த வழக்கின் கீழ் 2008 -ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டான். வழக்கு நடந்துகொண்டிருந்த வேளையில், பல கார்ப்பரேட் நிறுவனங்களும், இணையதளங்களும் ஜேம்ஸ் மீது அடுக்கடுக்கான பல புகார்களைக் கொடுத்தன. இதனால் மனம் வேதனை அடைந்த ஜேம்ஸ் சிறைக்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டான். ஜேம்ஸ் தற்கொலை செய்துகொண்டபோது தி டெலிகிராப் பத்திரிகை கூறியது என்ன தெரியுமா? 'ஒரு அறிவாளியைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொன்றுவிட்டன.'
கேரி மெக்கினோன் :
"வேற்று கிரகவாசிகளைப் பற்றி ஏதேனும் மறைக்கப்பட்ட தகவல்கள் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கத்தான் ஹேக் செய்தேன்" என்று இப்போதும் தனது சொந்த நாடான ஸ்காட்லாந்தில் இருந்துகொண்டு சொல்லிவருகிறார் கேரிமெக்கினோன். இவரை எப்படியாவது கைது செய்துவிட வேண்டும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகம் போராடி வருகிறது. ஒருவேளை கேரி கைது செய்யப்பட்டால், அவருக்கு அமெரிக்காவில் 70 ஆண்டுகள் சிறை தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகள் சிறை தண்டனையா? அப்படி எதை ஹேக்கிங் செய்தார் என்கிறீர்களா? அமெரிக்காவின் ராணுவ தளத்துக்குள்ளும், நாசா விண்வெளி ஆராய்ச்சிக்குள்ளும் சர்வசாதாரணமாக சென்று வந்தவர் கேரி. ராணுவதளம் மற்றும் நாசாவில் 2001-ம் ஆண்டிலிருந்து 2002-ம் ஆண்டுவரை சுமார் 97 கம்ப்யூட்டர்களை ஹேக் செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் 300-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களின் மொத்த ஃபைல்களையும் அழித்து சுமார் 7 லட்சம் டாலருக்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார். விக்கிலீக்ஸிடம் இருப்பதை விட 100 மடங்கு ரகசியங்களைத் தன்வசம் வைத்துள்ளாராம் இந்த கில்லாடி கேரி.
கெவின் பால்சன் :
'டார்க் டேன்ட்டி, என்ற புனைபெயரோடு உலாவந்த கெவின் செய்து வந்தது சற்று நூதன ஹேக்கிங் ரகம். ரேடியோ நிறுவனங்கள் தொடர்ச்சியாகப் போட்டி நிகழ்ச்சிகள் நடத்தி வந்தன. அப்போது அந்த நிறுவனங்களின் தொலைபேசிகளை ஹேக் செய்து முதல் பரிசு பெறுபவராகத் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு முதல் பரிசுகளைத் தட்டி வந்தார். இதை நூதனமாக செய்து வந்ததால், யாரிடமும் மாட்டிக்கொள்ளவில்லை. ஆனால், கவனம் வேறுபக்கம் திரும்பி அமெரிக்காவின் உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ-யின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து அத்தனை ரகசியங்களையும் அள்ளிவிட்டார். பின் போலீசாரால் கைது செய்யப்பட்டு 51 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றதோடு, 56,000 டாலர் நஷ்ட ஈடும் கட்டியுள்ளார். அதன் பிறகு வெளிவந்த கெவின் தற்போது 'வயர்டு' என்ற செய்தி இணையத்தின் ஆசிரியராகவும், பெண்கள் மீதான பாலியல் மற்றும் வன்கொடுமை தடுப்பு ஆலோசகராகவும் இருந்து வருகிறார்

Monday, May 22, 2017

நம்மாழ்வாரை  புரிஞ்சுக்கலையே

யற்கையை நேசிக்கும், இயற்கை விவசாயத்தை விரும்பும், இயற்கையைச் சிதைக்கத் துடிக்கும் கரங்களைத் தடுத்து நிறுத்த இன்று வீதியில் போராட இறங்கும் மனிதர்கள் முன்னத்தி ஏராக உச்சரிக்கும் பெயர்... நம்மாழ்வார்.  

கைநிறையச் சம்பளம் கொடுத்த அரசு வேலையைச் `செக்குமாட்டுத்தனம்' என்று உதறித் தள்ளியவர் நம்மாழ்வார். செயற்கை உரங்களை அள்ளித்தெளித்து புதுப்புது நோய்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற `பசுமைப் புரட்சி'க்கு எதிராக நின்று, விவசாயிகளைக் காடு, மேடு, கரட்டு எங்கும் அலைந்து சந்தித்து, `இயற்கை விவசாயத்துக்கு வாங்கப்பா' என்று மன்றாடியவர். டெல்டா பகுதியைப் பாலைவனமாக்குகிற மீத்தேன் எடுக்கும் திட்டத்தை, பம்பரமாகச் சுழன்று போராட்டம் மூலம் களமாடி தடுத்து நிறுத்தியவர்.





















நம்மாழ்வார் ஊர் உலகமெல்லாம் கால் தேய நடந்து போய் இயற்கை விவசாயத்துக்குப் பலரை மாற்றிக்கொண்டிருந்தபோது, அவரின் மனைவி அவர்களது சொந்த நிலத்தில் 10 ஆண்டுகள் செயற்கை விவசாயம்தான் செய்து வந்தார்! 

``அவரு உயிரோட இருந்தப்போ ஒரு துளி சுயநலம் இல்லாம வாழ்ந்து, இயற்கை விவசாயத்துக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திருப்பிடணும்னு சொல்லித் தொண்டைத் தண்ணி வத்தக் கத்தினாரு. ஆனா, அவரை அப்போ கொஞ்ச பேருதான் ஆதரிச்சாங்க. `இந்தக் கிழவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேல? எங்கள நட்டத்துல தள்ளப் பார்க்கிறார்'னு  அவச்சொல் பேசினாங்க. அதுல நானும் ஒருத்தி. அவர் கொடுத்த காசை மிச்சம் புடிச்சு வாங்குன மூன்று ஏக்கர் நெலத்துல 10 வருஷம் செயற்கை விவசாயம்தான் பார்த்தேன். அவரோட இறப்புக்கு அப்புறம், அவரோட முரண்பட்ட பலரும் அவரோட அருமை தெரிஞ்சு இப்போ இயற்கை விவசாயத்துக்குத் திரும்புறதைப்போல, அவர் கொள்கைக்கு எதிரா செயல்பட்டதை நினைச்சு நானும் இப்போ வருந்துறேன்'' என்று உள்ளுக்குள் உதைக்கும் ஆற்றாமையோடு பேசுகிறார், நம்மாழ்வாரின் மனைவி சாவித்திரி அம்மாள். `அவர் இல்லையே' என்ற ஏக்கம் குரலிலும் ஒலிக்கிறது. 

``என் குடும்பம் ஓரளவு வசதியானது. அதனால, எனக்கு வசதியான மாப்பிள்ளையைப் பார்த்தாங்க. ஆனா, `சாதாரண குடும்பமா இருந்தாலும், அரசாங்க வேலையில இருக்கிற மாப்பிளையாப் பாருங்க'னு சொல்லிட்டேன். அப்படித்தான், என்னோட அத்தை இவரை எனக்குப் பேசி, கட்டி வச்சாங்க. 

சடங்கு, சம்பிரதாயங்களை முறையா கடைப்பிடிக்கிற வழக்கம் எங்களுக்கு. 

ஆனா இவரோ, பகுத்தறிவுப் பேசி, தாலி கட்ட மாட்டேன்னு சொல்லிட்டாரு. `நான் அவங்களுக்குத் தாலி கட்டணும்னா, பதிலுக்கு அவங்க எனக்குத் தாலி கட்டணும்'னு இவரு குதர்க்கமா பேச, 1964-ம் வருஷம் வெறும் மோதிரம் மட்டும் மாத்தி என்னை மனைவியா ஏத்துக்கிட்டாரு.

முதல் ராத்திரியில என்கிட்ட, `எங்க அண்ணன்கள் ரெண்டு பேரும் அவங்க  மனைவிகளைக் கோபத்துல அடிப்பாங்க. அதைப் பார்த்து பார்த்து வளர்ந்த நான், பெண்களை மதிக்கணும், அவங்களைப்போல அடிக்கக் கூடாதுனு உறுதி எடுத்துக்கிட்டேன். அந்த மரியாதைக்கான ஆரம்பம்தான், உங்களுக்கு நான் தாலி கட்டாதது'ன்னார். புது மாப்பிள்ளையா இருக்கிறப்போ எல்லா ஆம்பளைங்களும் சொல்ற வசனம்தானேனு நெனச்சேன். ஆனா, அவரோட வாழ்ந்த வாழ்க்கையில ஒரு தடவைகூட என்னை கைநீட்டி அடிச்சதில்ல. அவ்வளவு ஏன்? கோபமா பேசுனதில்ல; `நீ, வா, போ'னு ஒருமையிலகூட கூப்பிடமாட்டாரு, `வாங்க, போங்க'னுதான் பேசுவாரு. கடைசிக் காலம் வரை அப்படித்தான். 

அவருக்கு 400 ரூபாய் சம்பளம். இப்போ ஒரு லட்சம் மாதிரி அப்போ அதோட மதிப்பு. அதுல அஞ்சு ரூபாய் மட்டும் எடுத்துக்கிட்டு, மீதியை அப்படியே என்கிட்ட வந்து கொடுத்துடுவாரு. அதுல அப்படி இப்படி மிச்சம் பண்ணியும், இருக்குற நகைகளை அடகு வெச்சும், ஊருல மூணு  ஏக்கர் நெலம் வாங்கிப் போட்டேன். அங்கதான் எங்க ஒரே மக மீனா பொறந்தா. நாலு வருஷம் ஒழுங்கா வேலைக்குப் போனவரு, ஒருநாள் தயங்கித் தயங்கி என்கிட்ட வந்து, `உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்'னு மென்னு முழுங்கினாரு. `நான் வேலையை விட்டுட்டேன்'னு  படீர்னு  சொன்னாரு. எனக்கு பக்குனு ஆயிட்டு. `ஏன்?'னு கேட்டேன். `எனக்கு செக்கு மாடாட்டம் வேலை பார்க்கப் பிடிக்கல. செயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவா நான் விவசாயம் படிச்சேன்?'னு  ஏகப்பட்ட வேதாந்தம் பேசினாரு. `சோத்துக்கு என்ன பண்றது?'னு  கேட்டேன். `சமாளிச்சுக்கலாம்'ன்னாரு.

நான் கோச்சுக்கிட்டு ஊருக்கு வந்துட்டேன். ஆனா, அவரு வந்து,  என்னை சமாதானப்படுத்தி கூட்டிட்டுப் போனாரு. களக்காடுங்கிற ஊருல பெல்ஜியம் நாட்டு தனியார் கம்பெனி இயற்கை விவசாயப் பண்ணை வச்சுருந்தாங்க. அதுல வேலைக்குச் சேர்ந்து 10 வருஷம் வேலை பார்த்தாரு. அப்புறம், தருமபுரியில உள்ள மலையில் மோட்ராகிங்கிற கம்பெனியில மூணு  வருஷம் வேலை பார்த்தாரு. நாடோடி மாதிரி நானும், என் மகளும் அவரு பின்னாடி போனோம். ஆனா அதையும் விட்டுட்டு, எங்களை சொந்த மாவட்டமான தஞ்சைக்கே அழைச்சுட்டு வந்துட்டாரு. அங்கே, `குடும்பம்'னு ஒரு  இயற்கை விவசாய வழிகாட்டி அமைப்பை ஆரம்பிச்சு, 10 வருஷம் இயற்கை விவசாய வழிமுறைகளை பிரசாரமா செஞ்சாரு. 

`இந்த மனுஷனை நம்பினா, பொண்ணையும் கட்டிக்கொடுக்க முடியாது, குடும்பமும் கரை சேராது'னு நெனச்சு, நான் ஊருல வாங்கிப் போட்ட மூணு ஏக்கர் நெலத்துல விவசாயம் பண்ணினேன். என்னையும் அவர் இயற்கை விவசாயம் பண்ணச் சொல்லி வற்புறுத்தினாரு. ஆனா, நான் கேக்கல!

 அவருக்கு மக மீனா மேல கொள்ளை பிரியம். `நேருவுக்கு இந்திராபோல, எனக்கு மீனா. அவளை ரஷ்யா வரை அனுப்பிப் படிக்க வைப்பேன்'னு  அடிக்கடி சொல்வாரு. நான்தான், `ஒத்தப் புள்ளையை அவ்வளவு தூரம் அனுப்ப மாட்டேன்'னு மறுத்துட்டேன். 

கடந்த எட்டு வருஷத்துக்கு, முன்னாடி கரூர் வானகத்துல 65 ஏக்கர் பொட்டல்காடு நிலத்தை வாங்கி, அதை சோலையாக்கணும்னு முனைப்புக்கு வந்தபிறகு, அவர் வீட்டுக்கே வர்றதில்லை. எப்பவாச்சும் இந்த வழியா போகும்போது, `நான் இன்னைக்கு வீட்டுக்கு வர்றேன்'னு  சொல்லிட்டு வருவாரு. அரை மணி நேரம் இருந்துட்டு கிளம்பிடுவாரு. இதனால, நான் என் மக வீட்டுலேயே இருந்தேன்.

`குடும்பத்தை விட்டுட்டு நாடோடியா, இப்படி கருத்து  சொல்லிட்டு திரியுறாரே?'னு அவர் மேல வருத்தமா இருக்கும்தான். ஆனா, அவரை சொந்தம், அக்கம்பக்கம் யாராச்சும் ஏசினா பொசுக்குனு கோபம் வந்துடும். பிலுபிலுனு  அவங்ககிட்ட சண்டைக்குப் போயிருவேன். அவரு குடும்பத்தை மறந்து போனாலும், எல்லார்கிட்டயும் என்னைப் பத்தி பெருமையா பேசிக்கிட்டேதான் இருந்திருக்கார். 

நான் விவசாயம் பார்த்தப்போ, ஒரு தடவை அடி உரத்துக்குப் பதில் எருக்கஞ்செடிகளை போட்டு பயிர் செஞ்சேன். நல்ல மகசூல். அதைப் பத்தி எல்லார்கிட்டயும் பெருமையா பேசி இருப்பார்போல. சமீபத்துல மாமல்லபுரத்துல உள்ள ஒரு அமைப்பு அவருக்கு விருது கொடுத்தாங்க. அதை வாங்கப் போனேன். அப்போ அங்க பலரும், `நீங்க செயற்கை விவசாயம் பண்ணினாலும், எருக்கஞ்செடிகளை போட்டு சிறப்பான மகசூல் எடுத்ததை அய்யா எங்ககிட்ட பலதடவை பெருமையா சொல்லி இருக்கார்'னு  சொன்னாங்க. அப்படியே உருகிப்போயிட்டேன்.

அவர் இறந்தப்ப வந்த கூட்டத்தை பார்த்தப்போதான், `இந்த மனுசன் வாழ்ந்த வாழ்க்கைய நாம புரிஞ்சுக்கலையே'னு  மனசை அறுத்துப் போட்டிருச்சு. அதுவும், பலநூறு இளைஞர்கள், இளம் பெண்களெல்லாம் வந்து அழுதப்ப, `நம்மாழ்வார் மனைவி'ங்கிற பெருமையை, கர்வத்தை முதல் முறையா நான் உணர்ந்தேன். ஆனா,  அப்போ அவரு  மூச்சில்லாத உடலாயிட்டாரேனு வெடிச்சு அழுதேன். 

இயற்கை விவசாயத்துக்குத் திரும்பும் ஒவ்வொருத்தருக்கும் அவரு தலைவன். 

பல ஆயிரம் இளைஞர்களும், இளைஞிகளும் அவர் கொள்கையால ஈர்க்கப்பட்டு, எந்தக் கட்சி சாயமும் இல்லாம அவரைக் கொண்டாடுறதைப் பார்க்குறப்போ நம்பிக்கையா இருக்கு. முதல்முதலா கோயில்பட்டியில அவர் வளர்த்த பாகற்கொடிபோல, இன்றைய சந்ததிகிட்ட புது நம்பிக்கையை வளர்த்தெடுத்திருக்காரு. 

இப்போ இயற்கை விவசாயத்துக்கு ஆதரவா எடுக்கப்படுற ஒவ்வொரு அடியிலயும் அவரை என்னால பார்க்க முடியுது. அவரை நான் எவ்வளவு நேசிக்கிறேன், அவரை எனக்கு எவ்வளவு தேடுதுங்கிறதை சொல்றதுக்கு இப்போ அவரு இல்ல. இருந்தாலும், இந்த நெனப்பெல்லாம்தான் எனக்கு இப்போ ஜீவனா கெடக்குது!'' 

இன்மையில் உணரப்படும் அன்பு வலிமிகு அழகு. ஒரு கண்ணில் காதலும் ஒரு கண்ணில் கண்ணீருமாகச் சிரிக்கிறார் சாவித்திரி அம்மாள்