Monday, October 12, 2015

மர்ம தீவு 
செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கடல் கடந்துபோன சோழர்களைத் தேடிச்சென்ற ஆராய்ச்சியாளர்கள் திரும்ப மாட்டார்கள்! இந்தப் படத்தில் இடம் பெறுவது போலவே ஒரு மர்மமான இடம் பூமியில் இருக்கிறது. இந்தத் தீவுப்பகுதிக்குச் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதே இல்லையாம். கதையைக் கேளுங்க!
கென்யா நாட்டின் வடமேற்குப் பகுதியில் கடலுக்கு நடுவே இருக்கும் குட்டித்தீவில் பிரமாண்டமாய் தேங்கியிருக்கும் துர்கனா ஏரியைச் சுற்றி ஏராளமான குட்டிக் குட்டித் தீவுகள் இருக்கின்றன. அந்தத் தீவுகளில் ஒன்றுதான் ‘என்வைன்டினெட்’ என்றழைக்கப்படும் கொஞ்சூண்டு நிலப்பகுதி. துர்கனா ஏரியைச் சுற்றி வாழும் பழங்குடியின மக்களின் மொழியில் ‘என்வைன்டினெட்’ என்றால், ‘திரும்பி வராது’ என்று அர்த்தமாம். தீவுக்கு இப்படிப் பெயர் வந்ததற்குப் பின்னணியில் இருக்கும் கதைதான் சுவாரஸ்யமும், மர்மமும் நிறைந்தது.
1900-களில் என்வைன்டினெட் தீவில் ஏராளமான மனிதர்கள் வாழ்ந்தார்கள். மீன் பிடிப்பது அவர்களுடைய தொழில். பெரும்பாலும் தீவை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்றாலும், வியாபாரத்துக்காக அவ்வப்போது பக்கத்துத் தீவுகளுக்குச் சென்றுவருவார்களாம். என்வைன்டினெட் தீவில் மக்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே ஆதாரம், அவர்கள் பக்கத்துத் தீவுகளுக்கு அடிக்கும் விசிட்தான்! இந்த நிலையில், திடீரென சில நாட்கள் அந்தத் தீவில் இருந்து, வியாபாரத்துக்காகப் பக்கத்துத் தீவுகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. அடுத்தடுத்த சில நாட்களில் மனிதர்களின் வருகை முற்றிலும் நிற்கவே, பக்கத்து தீவைச் சேர்ந்த சிலர் அந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறார்கள். தீவுக்குச் சென்றவர்கள் திரும்பவில்லை. பிறகு, பாதுகாப்புடன் பயணித்த இன்னொரு பழங்குடியினர் குழுவும் திரும்பி வரவில்லை! இது போதாதா? ‘தீவுக்குச் செல்பவர்கள் காற்றில் கரைந்து விடுகிறார்கள்’, ‘வேற்றுக்கிரகவாசிகள் அவர்களை அழைத்துச் செல்கிறார்கள்’, ‘திடீரென வரும் ஒளி வளையம் மக்களைக் கொன்று விடுகிறது’ என ஏகப்பட்ட கதைகள் தீவை ஆக்கிரமித்தன. அன்று முதல் மர்மத் தீவாகவே மாறிவிட்ட என்வைன்டினெட்டுக்குள் யாரும் நுழைவதில்லை.
1934-ல் அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் விவியன் ஃபுச் என்பவர், தன்னுடைய குழுவினரோடு துர்கனா ஏரியை ஆராந்துகொண்டிருந்தபோது அவருடைய காதில் ‘என்வைன்டினெட்’ தீவின் கதைகள் கிசுகிசுக்கப்படுகிறன. ஆர்வமான விவியன் ‘இந்தத் தீவுக்கு என்னதான் ஆச்சு?’ என்பதை ஆராய உடன் வந்திருந்த மார்டின், டைசன் என்ற இரு இளம் ஆராய்ச்சியாளர்களை அந்தத் தீவுக்கு அனுப்பிவைத்தார். மர்மத்தைக் கண்டுபிடித்தே தீருவது என்று ‘என்வைன்டினெட்’ தீவுக்குக் கிளம்பிய இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் திரும்பி வரவில்லை என்றதும் அதிர்ச்சியானார்கள் விவியனுடன் வந்திருந்த ஆராய்ச்சியாளர்கள்.
பிறகு, ஹெலிகாப்டர் உதவியோடு தீவுகளை வட்டமடித்த அவர்களுக்கு என்வைன்டினெட் தீவில் என்ன தெரிந்தது? பழங்குடியினரின் குடிசைகள் அப்படியே இருந்தன. மீன், முதலை போன்ற சில உயிரினங்கள் அழுகிய நிலையில் கிடந்தன. மொத்தத்தில், அங்கே மனிதர்களும் இல்லை, மனிதர்கள் இருந்த தடயமும் இல்லை. என்வைன்டினெட் தீவுக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா, இங்குள்ள மக்கள் அழிந்து போனதற்கு வேறு ஏதேனும் இயற்கைச் சூழல்கள் காரணமாக இருக்குமா, தீவுக்குச் செல்லும் மனிதர்கள் ஏன் திரும்புவதில்லை எனப் பல கேள்விகளோடு, இன்றுவரை எட்ட நின்றே ரசித்துக்கொண்டிருக்கிறார்கள் சுற்றுலாவாசிகள்!

Friday, August 28, 2015

சுந்தர காண்டம் (அழகு ஆணுறை)
 
காண்டம் கண்டுபிடித்த வரலாற்றைத் தேடினால், அது 15 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்ட பிரெஞ்சு குகை ஓவியங்களில் இருந்து ஆரம்பிக்கிறது. எகிப்து, இத்தாலி, கிரேக்கம் போன்ற நாடுகளின் ஹிஸ்டரியை நோண்டினால், கர்ப்பத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பெண்களின் தலையில் கட்டிவிட்டு, ஆண்கள் ஹாயாகக் காரியம் நடத்தியிருக்கிறார்கள் எனத் தெரிகிறது.
 
சற்று பின்னோக்கி வந்தால், 'ஆண்டோனினஸ் லிபராலிஸ்’ என்னும் கிரேக்க அறிஞர்தான் 'மினோஸ்’ என்னும் நாட்டுப்புறக் கதையில் காண்டம் பற்றி பேசியிருக்கிறார். மினோஸ் என்கிற அரக்கன், தன் உயிர் அணுவில் கலந்துவரும் நாகங்களையும் தேள்களையும் 'ஃபில்டர்’ பண்ணுவதற்காகத்தான் காண்டம் உபயோகப்படுத்தினானாம். அதுவும் ஆட்டின் சிறுநீரகப் பையை காண்டமாக உபயோகித்தானாம்.
 
சீனர்கள் பட்டுத்துணியையும் எண்ணெய்க் காகிதங்களையும் காண்டமாக உபயோகித்திருக்கிறார்கள். எகிப்தியர்கள் விலங்குத் தோல்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஜப்பானியர்கள் சில விலங்குகளின் கொம்புகளையே பயன்படுத்தியிருப்பதைப் படிக்கும்போது 'கிர்’ரென இருக்கிறது.
 
15-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, உலகம் எங்கும் படையெடுப்புகளை நடத்திய மேற்கத்திய நாடுகளின் படைவீரர்கள், 'சிப்லிஸ்’ என்னும் பால்வினை நோயால் அவதிப்பட, அவர்களின் அறிவியல் உலகம் விழித்துக்கொண்டு யோசித்திருக்கிறது.
 
16-ம் நுற்றாண்டில் இத்தாலியைச் சேர்ந்த காப்ரியேல் ஃபெலாப்பியோ என்னும் மருத்துவரின் கடும்முயற்சியால், தற்போதைய காண்டத்தின் முதல் வடிவம் கிட்டத்தட்ட உருவாக்கப்பட்டிருக்கிறது. பிறகு சில நூற்றாண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு நாம் இன்றுபார்க்கும் ரப்பரால் ஆன காண்டம் பல்வேறு ஆராய்ச்சிகளின் வழியாக உருவாகியிருக்கிறது. காண்டம் கதை, இப்படி பல 'காண்டங்களையும்’ 'கண்டங்களையும்’ தாண்டி, இந்த நூற்றாண்டிலும் எக்ஸ்ட்ராவாக நீள்கிறது!

Friday, August 21, 2015

படித்ததில் பிடித்தது 
 
நீங்கள் காதலித்திருப்பீர்கள் அல்லது காதலித்துக் கொண்டிருப்பீர்கள். இந்த இடத்தில் நான் சொல்கிறேன்... உங்கள் காதலரின் உடலுக்காக அதாவது அவரோடு பாலுறவுகொள்வதற்காக, உங்கள் சந்ததிகளைப் பெருக்கிக்கொள்வதற்காக அதாவது இந்த மனித இனம் தழைத்திருக்க உடலின் சுரப்பிகளும் மூளையும் போடும் வேதியியல் நாடகம் மட்டும்தான் 'காதல்’ என்பது. இப்படித்தான் அறிவியல் சொல்கிறது. இதை ஒப்புக்கொள்கிறீர்களா? நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது. இப்படித் தர்க்கபூர்வமாக, அறிவியல்பூர்வமாக எல்லாவற்றையும் அறிந்துகொண்டு, 'அடடா இவ்வளவுதான் மேட்டரா?’ எனத் தெளிந்த பின்னும், நாளையோ அதற்கு மறுநாளோ உங்கள் காதலரைச் சந்திக்கும்போது, ஏதோ ஒன்று மெள்ள 'நுரை ததும்பி’ உங்களில் நிறையும்... அது என்ன?
கண்டிப்பாக அறிவோ தர்க்கமோ அல்ல... அது உணர்வு. இந்த உணர்வுதான் இயற்கையின் விருப்பமாக இருக்கிறது என யோசிக்கவைத்தது,
 
 நான் படித்த ஒரு இயற்கையியல் புத்தகம். 'முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை’. ஆசிரியர், ம.செந்தமிழன்.
புத்தகத் தலைப்பைக் கவனியுங்கள். மரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும் என்பது நாம் அறிந்த லாஜிக். ஆனால், ஆதி பூமியில் மரங்கள் உருவாவதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே மழை பெய்துகொண்டிருந்தது. அது இயற்கையின் விருப்பம் என்னும் உணர்வு. அந்த விருப்பத்தின் துளிகள்தான் விலங்குகள், மனிதர்கள், மரங்கள்.
மனிதன் மட்டுமே இயற்கையின் மையம் அல்ல என்ற பேருண்மையை உணர்ந்துகொள்வோம் நாம்!

Thursday, August 20, 2015

ஸ்மார்ட் போன்
நண்பனா ?! வில்லனா ?!
கார்க்கிபவா

'என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? ஏன் மொபைலில் மூழ்கியிருக்க வேண்டும் பல நேரங்களில்?’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது! 
 
இதுவரை ஒரு மனிதனின் ஆதாரமாக அம்மா, அப்பா, காதலி, நண்பன் என ஏதோ ஓர் உறவாக சகமனிதர்களே இருந்திருக் கிறார்கள். ஆனால், அந்த இடத்தை அசுரகதியில் ஆக்கிரமித்துவிட்டது 'ஸ்மார்ட் போன்’!
 
மொபைலை உடலின் முக்கிய அங்கமாகவே கருதுகிறது இளைய தலைமுறை. அதனால்தான்  எந்நேரமும் மொபைலுடனே அலைகிறார்கள். குளிக்கும்போதும் உறங்கும்போதும்கூட விலகுவதே இல்லை. மொபைலைப் பிரிய நேர்ந்தால் பசலை நோய் ஆட்கொண்டதுபோல பதறுகிறார்கள். அமெரிக்கர்கள் இடையே சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் பத்தில் ஒருவர் உடலுறவுகொள்ளும்போதுகூட மொபைலை எட்டிப் பார்த்துக்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். 'அமெரிக்கர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு பொய் சொல்கிறார்கள். ஆசியாவில் பத்தில் ஐந்து பேர் 'அப்போதும்’ மொபைலைப் பயன்படுத்தவே செய்கிறார்கள்’ என அதிர்ச்சி தருகிறது இன்னொரு சர்வே!
 
'ஸ்மார்ட்போன் இல்லா மனிதன் அரை மனிதன்’ என ஆக்கிவிட்டது நாகரிகம். மொபைல்போன்கள் நம் வேலையை விரைவாகவும் திறம்படவும் முடிக்க உதவுகின்றன என்பது நிச்சயம் உண்மை. தனிமனிதனின் புரொடக்ட்டிவிட்டியை மொபைல்போன் இரட்டிப்பாக்கிவிட்டது. வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம், 'தண்ணீர் வேண்டுமா, பாத்ரூம் போறீங்களா?’ எனக் கேட்பதைப்போல 'WiFi பாஸ்வேர்டு வேண்டுமா?’ எனக் கேட்பதும் விருந்தோம்பல் என மாறிவிட்டது. 'பேட்டரி ஃபுல்’ என்பதே வெளியே கிளம்புவதற்கு நல்ல நேரம். ஒரு நிமிடம் கிடைத்தாலும், மொபைலில் மூழ்கி முந்தைய நொடியில் உலகில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கிறோம்; கேண்டி கிரஷில் யாருக்கேனும் 'உயிர்’தந்து உதவுகிறோம். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கணினியும் இணையமும் மக்களிடம் சென்றுசேர எடுத்துக்கொண்ட காலத்தைவிட  ஸ்மார்ட்போனுக்குக் குறைவான காலமே தேவைப்பட்டிருக்கிறது. அப்போது மெயில் அனுப்பிய அப்பாக்களை விட, இப்போது மொபைலில் லைக் போடும் அம்மாக்கள்தான் அதிகம். ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையின் நகராத நொடிகளை வேகமாக நகர்த்துவதுடன் பயனுள்ளதாகவும் மாற்றியிருக்கிறது. அதே சமயம், அதிதீவிர மொபைல் பயன்பாடு மனிதனின் இயல்பையே மாற்றுகிறது எனப் பதறவைக்கின்றன ஸ்மார்ட்போன் ஆய்வுகள்.
நான்கு நண்பர்கள் கேன்டீனுக்கு வருவார்கள். இடம் கிடைத்து அமர்ந்த பின் எல்லா கைகளையும் ஸ்மார்ட்போன்கள் ஆக்கிரமிக்கும். அரட்டை அடிக்க வந்தவர்கள் மொபைலில் அப்டேட்ஸ் தட்டிக்கொண்டிருப்பார்கள். உச்சக்கட்ட காமெடியாக, எதிரில் இருப்பவருக்கே வாட்ஸ்அப்பில் ஏதேனும் ஃபார்வர்டு செய்தி அனுப்புவார்கள். அவரும் அனுப்பியவரை நிமிர்ந்து பார்க்காமலே, அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருப்பார்.  
 
முன்பு குறுஞ்செய்திகளுக்குக் கட்டணம் இருந்தது. இப்போது வாட்ஸ்அப், டெலிகிராம் என பல இலவச மெசெஞ்சர்கள் வந்துவிட்டன. இதனால் தேவையோ இல்லையோ எப்போதும் எதையாவது டைப்செய்து அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டே ட்விட்டுகிறார்கள். 15 நொடிகளுக்கு மேல் சிக்னலில் நின்றால், மொபைலை எடுத்து நோண்டுகிறார்கள். சிலர் கார் ஓட்டிக்கொண்டே மெசேஜ் அனுப்புவதும் உண்டு. சாப்பிடும்போதும் கையில் மொபைல். இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யப் பழகிக்கொள்வதால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல்போகிறது. 'மல்ட்டிஸ்கில்’ என்பதும், 'மல்ட்டிடாஸ்க்’ என்பதும் வெவ்வேறு.  'மல்ட்டிடாஸ்க்கிங்’ என்பது எந்த வேலையும் ஒழுங்காக நடக்காமல் சிக்கலாக்கிக்கொள்ளும் வழிமுறைதான்.
 
பீட்சா வட்டமாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் அதை முக்கோண வடிவமாகத்தான் பார்ப்பார்கள். அதுபோல, ஸ்மார்ட்போனிலேயே வாழ்பவர்களுக்கு நண்பர்கள் என்பவர்கள்கூட நம்பர்கள்தான். மொபைல் மூலமான உரையாடலில் நன்றாகப் பேசும் இவர்கள் நேரில் பேசவே அஞ்சுவார்கள். மனிதர்களின் அடையாளமே இவர்கள் பார்வையில் மாறியிருப்பது அதிர்ச்சிக்கு உரிய விஷயம். மொபைல் பயன்பாட்டுக்கு அடிமையானவர்கள், 'ஸ்மார்ட் தீவு’ என்ற மாய வலைக்குள் சிக்கிக்கொள்வதாகத் தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
 
தினம் ஒரு புதுப் பிரச்னையை உருவாக்கும் ஸ்மார்ட்போன்களின் இப்போதைய சங்கடம்...  செல்ஃபி. நம்மை நாமே படம் எடுத்துக்கொள்வதில் என்ன சிக்கல் இருக்க முடியும்? இருக்கிறது. அமெரிக்காவில் டீன் ஏஜ் பெண் ஒருவர் ஒரே இரவில் 2,000 செல்ஃபிக்கள் எடுத்திருக்கிறார். அதைவிடக் கொடுமை, அந்த செல்ஃபிக்கள் எவையுமே திருப்தி தராமல் மறுநாள் காலை தற்கொலை செய்துகொண்டார். இப்படியான சம்பவங்கள் அதிகரிக்கவும், செல்ஃபி மீதான அதீத ஆர்வத்தைப் புதுவித மனநோய் என வகைப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள்.  
 
அதிர்ச்சியாக இருக்கிறது... சராசரியாக நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவழிக்கிறார்களாம் இந்திய இளைஞர்கள். இதனால் உடல் எடை பிரச்னை, முதுகு வலி எனப் பல கோளாறுகள் வருகின்றன. சிறு வயதில் நம் இடது மூளை வளர்ந்து, பின் வலது மூளை வளரும். ஆனால், ஸ்மார்ட்போன் பயன்பாடு இடது மூளை வளர்ச்சியை மட்டுமே ஊக்குவிக்கிறது. குழந்தைகள் வளரும் பருவத்தில் மனிதர்களுடன் உரையாடாமல் மொபைல், டேப்லட் போன்ற 'இன்ட்டராக்டிவ்’ கருவிகளுடன் அதிக நேரம் செலவிட்டால் அவர்களது யோசிக்கும் முறையே மாறிவிடும். மனிதர்களையும் அவர்கள் இன்னொரு கருவியாக மட்டுமே பார்ப்பார்கள். இதனால் எதிர்காலத்தில் அன்பு, பாசம், பயம் போன்ற எந்த மனித உணர்வுக்கும் வேலையே இருக்காது என எச்சரிக்கிறார்கள்.
 
சரி... இதற்கு எல்லாம் என்ன தீர்வு? மொபைல் இல்லாமல் ஒரு நாள் முழுக்க  இருப்பது சாத்தியம் இல்லைதான். ஆனால், குறைக்க வேண்டும்! அத்தியாவசிய அழைப்புகள், அலுவலக விஷயங்கள் தவிர, மற்ற எதையும் பயன்படுத்தாமல் உங்கள் மொபைலுடன் ஒரு நாள் இருந்துபாருங்கள். இருக்க முடியாமல் தவித்தால், நீங்கள் எந்த அளவுக்கு மொபைலுக்கு அடிமையாகியிருக்கிறீர்கள் எனப் புரியும். தொழில்நுட்ப வளர்ச்சியும் பணத்தைப்போலத்தான். நம் கட்டுப்பாட்டில் இருக்கும் வரைதான் அது வரம். அதன் கட்டுப்பாட்டில் நாம் போய்விட்டால், சாபம்!

வினையாகும் விளையாட்டு!
 
மொபைலில் இளைஞர்களின் நேரத்தை அதிகம் தின்பது வாட்ஸ்அப் அல்ல; கேம்ஸ். 'நான் ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட ஆரம்பிச்சப்போ பசி, தூக்கம் மறந்து விடிய விடிய விளையாடினேன்’ எனப் பெருமையாகச் சொல்வோம். ஒரு டச் ஸ்கிரீன் மொபைலின் ஆயுட்காலம் ஐந்து வருடங்கள் என்றால், விடாமல் தொட்டுத் தொட்டு விளையாடுவதால், ஆறு மாதங்களிலேயே மொபைலை முடமாக்கிவிடும் விளையாட்டுக்கள். இதற்காகவே மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள், மில்லியன் டாலர்களைக் கொட்டி விதவிதமான விளையாட்டுக்களை உருவாக்க உதவுகின்றன. மொபைல்போன்கள் செயல் இழக்க செயல் இழக்க... மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபம்தானே!

மொபைல் எனும் ரிமோட்!
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான மிந்த்ரா, தனது இணையதளத்தை மூடிவிட்டது. மொபைல் மூலமாக மட்டுமே பொருட்களை வாங்க முடியும். ஏனெனில், மொபைல் பயன்படுத்தும்போது நம்மை அறியாமல் நம் செயல்திறன் குறைகிறது. பார்ப்பதை எல்லாம் ஓகே செய்யும் முடிவுக்கு நாம் தள்ளப்படுகிறோம். கணினிபோல பல தளங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்க முடியாமல்போகிறது. நம் மொபைல் சொல்லும் அனைத்து தகவல்களையும் 'உண்மை’ என நம்புகிறோம். யாரோ ஒருவர் நம்மை நம் மொபைல் மூலம் கட்டுப்படுத்திச் செயல்படவைக்கிறார் என்பதை உணர மறுக்கிறோம்!

மொபைல் மோகம் குறைக்க...
1) காலையில் எழுந்தவுடன் மொபைலில் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எதையும் பார்க்காதீர்கள்.
 
2) தேவை ஏற்படும்போது மட்டும் மொபைலைப்  பயன்படுத்துங்கள். சும்மா இருக்கிறோமே என
மொபைலைக் கையில் எடுக்கும் அடுத்த சில நொடிகள், பல மணி நேரங்களைக் கபளீகரம் செய்யலாம்!

3) என்ன அவசரமாக இருந்தாலும் சில இடங்களில் மொபைலை எடுப்பது இல்லை எனத் தீர்மானமாக இருங்கள்... போக்குவரத்து சிக்னல், கார் ஓட்டும்போது, மருத்துவமனை, துக்க வீடு, வகுப்பறை என்பதுபோல.

4) நீங்கள் மொபைலை எப்படியெல்லாம் உபயோகமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் கணித்துச் சொல்லவும் சில ஆப்ஸ் உண்டு. அவற்றைப் பயன்படுத்தி உங்களுக்கு நீங்களே மார்க் போடுங்கள்!

5) மற்ற முக்கிய வேலைகள் இருக்கும்போது, ஆஃப்லைன் போய்விடுங்கள். 24 மணி நேரமும் ஆன்லைனில் இருக்க, ஸ்மார்ட்போன் உங்கள் வாழ்க்கைத் துணை கிடையாது!

Wednesday, August 12, 2015

கீரைகளின் பயன்கள்
 
* குடும்பக் கீரைகள்    –  தண்டாங்கீரை, அரைக்கீரை, சிறுக்கீரை

* மரவகைக் கீரைகள் – முருங்கை, அகத்தி
* களைகளாக வளரும் கீரைகள் – குப்பைகீரை, தொவுளிக்கீரை
* கொடி வகைகக் கீரைகள் – தூதுவளை, பிரண்டை
* வாசனைக் கீரைகள் – புதினா, கொத்தமல்லி
 
பயன்கள்
* உடலுக்குத் தேவையான உயிர்சத்துக்களையும், தாது உப்புக்களையும்  
  கொடுக்கின்றன.
* நோய்களைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளன.
* நல்ல கண்பார்வை பெற உதவுகிறது.
* தோல் வளர்ச்சிக்கும், தோலை பளபளப்பாக, மிருதுவாக வைத்துக்  
  கொள்ளவும் உதவுகின்றன.
* பற்களையும், எலும்புகளையும் பாதுகாக்கின்றன.
* நரம்பு மண்டலம் நன்றாக வேலை செய்ய உதவுகின்றன.
* மலச் சிக்கலை நீக்குகின்றன.
* இரத்த சோகையைத் தீர்க்கின்றன.
* இரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவைக் குறைக்கவும், இதய நோய்
   வராமல் தடுக்கவும் பயன்படுகின்றன.
* புற்றுநோய், நீரிழிவு நோய்களைத் தவிர்க்கவும், அதிகமான உடல் எடையை
  குறைக்கவும் பயன்படுகின்றன.
 
கீரைகளை சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவைகள்:
* நோயால் பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிடுபவர்கள் சிறுகீரை, அகத்திக்
  கீரைகளை உண்ணக் கூடாது. ஏனெனில் எவ்வளவு வீரியமிக்க மருந்தாக  
  இருந்தாலும் அதன் தன்மையை முறியடித்துவிடும்.
* சிறுகீரையை சமையல் செய்யும்போது இஞ்சி, பூண்டு, பெருங்காயம்
   சேர்ப்பதை தவிர்க்கவும். அப்போதுதான் அதன் முழுபலனை பெற முடியும்.

* பருப்புக் கீரை மிகவும் குளிர்ச்சியை அளிக்கக் கூடியது. எனவே சீதள
  உடம்புவாகு கொண்டவர்கள் இக்கீரையை ஓரளவுக்குத்தான் சாப்பிட
  வேண்டும். அடிக்கடி சாப்பிடுவதால் கரப்பான், வயிற்றுக் கிருமி உண்டாகும்.

* முருங்கைக் கீரை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பேதியாகும். இதனை
   பகல் நேரத்தில்தான் சாப்பிட வேண்டும். இரவில் சாப்பிடக் கூடாது.
* மூல நோய் உள்ளவர்கள் அரைக்கீரை சேர்க்க வேண்டாம்.
* அகத்தி கீரையை அவசரமில்லாமல் நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
   சிலருக்கு பேதியாகலாம்.
* அகத்தி கீரையில் தேங்காய்பால், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து 
   சமைப்பதால் அதிக பலன் கிடைக்கும்.
* அகத்திக் கீரை,சிறு குறிஞ்சான் கீரைகளை எண்ணெய்யில் தாளிக்கக்
  கூடாது. மருத்துவ குணம் அகன்று விடும்

Thursday, June 4, 2015

வெற்றிலை போடும் பழக்கம்
 
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
 
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது
 
இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது. பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும்.
 
இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
 
ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது.
 
புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும். இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.
 
ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.
 
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.
 
அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

Wednesday, May 20, 2015

இன்ப சுற்றுலாவில் ஏன் இன்பமே இல்லை ?
ஆர்.சரண்
 
க்னி வெயில், உச்சந்தலையில உளி வெச்சுக் கொத்த ஆரம்பிச்சுருச்சு. அப்புறம் என்ன... கூட்டம் கூட்டமா டூருக்குக் கிளம்புவாங்களே நம்ம ஆளுங்க! மொத்தப் பூமிப் பந்தும் பரந்து விரிஞ்சுகிடக்க, 'மிடில் கிளாஸ் மாதவன் சூழ்’ தமிழ்நாட்டுல பெரும்பாலும் சம்மர்னா ஊட்டி, கொடைக்கானல்தானே குல வழக்கம். 
 
இந்த இடத்தில் ஒரு புள்ளிவிவரம். சுற்றுலா போறதை சாமி குத்தமா நினைக்கிற நாடுகளைப் பத்தி அமெரிக்கப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் 'சுற்றுலாப் பொழுதுகளை மோசமாகக் கழிப்போர்’ பட்டியலில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம்! எங்கே போகப்போறோம், எங்கே தங்கப்போறோம் என்ற திட்டமிடல் இல்லாமல் கிளம்பிப் போறது, சுற்றுலாவுக்குப் போன இடத்துலயும் ஆபீஸ் வேலையை உட்கார்ந்து செய்றது... இந்த ரெண்டு காரணங்களும் இந்தியர்களின் சுற்றுலாவை வெற்றுலாவா மாத்தியிருக்குனு அந்த ஆய்வு சொல்லுது.
 
ஆக, 'நாங்களும் டூர் போனோமே... டூர்!’ என ஃபேஸ்புக்கில் போட்டோ போடவே கிளம்பிப் போறவங்கதான் இங்கே அதிகம் மக்களே. அதைக்கூட மன்னிச்சுடலாம். ஆனா, போறது டூருக்கு... அதுக்கு வீட்டு பீரோல இருக்கிற பாதி உடுப்புகளை லக்கேஜ்னு அமுக்கி வெச்சுட்டு சாதா ரயிலை கூட்ஸ் வண்டியா மாத்துவோம் பாருங்க... மன்னிக்கவே முடியாத கும்பிபாகக் குற்றம் அது. அது போதாதுனு போன இடத்துலயும் ஏதோ காணாததைக் கண்ட மாதிரி டி-ஷர்ட், பனியன், ஜட்டிகளை பார்சல் பண்ணி எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஏத்திக்குவோம்.
 
கூகுள் மேப்ல பார்த்த அத்தனை இடங்களையும் ஒரே நாள்ல சுத்திப் பார்க்கலைனா, சாமி கண்ணைக் குத்திடுமா? தெரியாமத்தான் கேட்கிறோம்... குட்டி குலுவான்களையும் சீனியர் சிங்கங்களையும் இழுத்துட்டு, 'இது பேரீச்சம் லேக், இது செட்டியார் பார்க், இது கோக்கர்ஸ் வாக், இது பிரையன்ட் பார்க், இது டால்ஃபின் நோஸ்’னு ரன்னிங் கமென்ட்ரிலயே இடங்களைக் காட்டிட்டு ஹோட்டலுக்கு வந்து கட்டையைச் சாய்க்கிறது... பாவம் பாஸ். அலைஞ்ச அலைச்சல்ல மொத்தக் குடும்பமும் எக்ஸ், ஒய், இஸட் ஷேப்ல மட்டையா மடிஞ்சு ஹோட்டல்லயே தூங்கிக் கிடக்கிறதுக்குப் பேர்தான் இன்பச் சுற்றுலாவா?
அட... இதைக்கூட விட்டுரலாம். இந்த பேச்சுலர் பசங்க பண்றதைப் பத்தி சொல்லவே பயமா இருக்கு! நாலு சுவத்துக்குள்ள பண்ற அம்புட்டு கரைச்சல்களையும் 'ஓப்பன் பப்ளிக்’ல பண்றதுக்குப் பேர்தான் அவங்களைப் பொறுத்தவரை டூர்! வீட்டை விட்டுக் கிளம்பின பத்தாவது நிமிஷம் காருக்குள்ளயே கதகளியை ஆரம்பிச்சுடுறான். சரக்கடி உற்சவத்தை முடிச்சுட்டு இலக்கை அடையிறதுக்குள்ள நாலுவாட்டி மசக்கை ஆகிடுவான். அங்கே போன பிறகு... என்ன நடக்கும்? மறுபடியும், 'அதாரு... உதாரு...’னு காட்டாறா சரக்கைப் பாய்ச்சுவான். இப்படி நித்தம் மூணு வேளை குளிகை கணக்கா குடிமேளா நடத்திட்டு வீடு திரும்புறப்போ, மனசுல மங்கலாக்கூட எந்த ஊருக்குப் போனோம்னு ஞாபகம் இருக்காது!
 
சென்னைக்கு ஓரளவுக்கு அருகே இருக்கும் மகாபலிபுரம், பாண்டிச்சேரி போனீங்கன்னா... ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். கடற்கரை ஓரமா வெளிநாட்டு டூரிஸ்ட்கள் ஷோக்கா ஒரு சேர்ல சாய்ஞ்சுட்டே கையில புத்தகமோ, காதுல ஹெட்செட்டோ வெச்சுட்டு அமைதியா கடலைப் பார்த்து ஏகாந்தத்தை ரசிப்பாங்க. கடல்ல இறங்கி சாஃப்ட்டா குளிப்பாங்க. அவங்க குழந்தைங்க ஒரு பக்கம் மணல்ல வீடு கட்டி கிரியேட்டிவ்வா விளையாடுவாங்க. அதிகபட்சம் 2,000 ரூபாய்க்கு அந்த ஊர்ல மட்டுமே கிடைக்கும் ஏதேனும் விசேஷ வஸ்துகளை வாங்குவாங்க. நல்லா வகைதொகையா சாப்பிட்டு, நிம்மதியா தூங்கிட்டு ஊரைப் பார்க்கப் போயிருவாங்க. இதுதான் அவங்களோட ஒட்டுமொத்த இந்திய வெக்கேஷன். 'டூர் போனோமா... உடம்பையும் மனசையும் சார்ஜ் ஏத்தினோமா... மனசு முழுக்க இனிப்பு நினைப்புகளோடு ஊருக்குத் திரும்பினோமா’னு இருப்பாங்க.
 
ஆனா, நம்மாளுங்க பண்ற அலப்பறை இருக்கே! 'எச்சரிக்கை... மிக ஆபத்தான கடற்கரை. கடந்த ஒரு வருடத்தில் இங்கு 46 பேர் கடலில் மூழ்கி இறந்திருக்கிறார்கள்’னு எச்சரிக்கிற பலகையை எத்தி மிதிச்சுட்டு, அந்த அபாயப் பிரதேசத்தில் குடும்பத்தோடு குட்டிக்கரணம் அடிச்சு வித்தை காட்டுவான். ரெண்டு வாட்டி மணலோடு கலந்த உப்புத் தண்ணியைக் குடிச்சு புரையேறி இருமிட்டு, சுத்திமுத்தி பார்த்து... 'யாரும் பார்க்கலையே... பார்க்கலையே’னு பெருமைப்பட்டுக்குவான். சுண்டல், காரப்பொரி, ஐஸ்கிரீம், வெள்ளரிக்காய், சோளம், மிளகா பஜ்ஜினு வெறிகொண்ட மிருகம் கணக்கா வேட்டையாடுவான். கொடைக்கானல் குணா குகையைப் பார்த்ததுமே, கமல் போல மாறி மத்தவங்களுக்கு மரண பயத்தை உண்டாக்குவான்.
 
அட சம்மர் டூரைவிட... இந்த சம்மர் டூருக்குக் கிளம்புற ஆயத்தம் இருக்கே... கண்ணு வேர்த்திரும்! தினம் 7 மணிக்கு அடிக்கிற அலாரம் அன்னைக்கு மட்டும் 3 மணிக்கே அடிக்கும். இயல்பா பேய்த்தனமா வேலை பார்க்கிற அம்மா அன்னிக்கு ரத்தக்காட்டேரியாவும் மாறி பரபரப்பா வேலை பார்ப்பாங்க.
 
'புளியோதரை’ - இது சுற்றுலா செல்லும் தமிழனின் தேசிய உணவா பாஸ்? சாதத்தை வடிச்சுக் கொட்டி, புளியைக் கரைச்சு ஊத்தி, அழகா வாழை இலை வெட்டி, ஊசிப்போற துவையலோடு சேர்த்துப் பொட்டலம் கட்டி, மொத்தக் குடும்பத்துக்கும் டிரெஸ் எடுத்துவெச்சு, எல்லாரையும் கிளப்பி ரயிலைப் பிடிக்க அரக்கப்பரக்க ஓடி வந்தா... அன்னைக்குனு அதிசயமா ஒரு மணி நேரம் தாமதமா வரும் ரயில். அப்புறம் என்ன... மசமசனு விடியும்... பகபகனு பசிக்கும். புளிச்சாதம் பார்சல் விநியோகிக்கப்படும். சோத்து மூட்டையில கால்வாசியைக் காலி பண்ணிட்டு, ரயில்ல ஏறி உக்கார்ந்து லக்கேஜ் பையைப் பார்த்தா, ஒரு பாக்கெட் வாயைப் பிளந்து ஒட்டுமொத்த பையையும் நாசம் பண்ணிருக்கும். அத்தானின் ஃபேவரிட் டி-ஷர்ட் 'ஆயில் ஷர்ட்’டா மாறியிருக்கும். கடுப்புல வீட்டு அம்மணிக்குத் திட்டு விழ, பதிலுக்கு அந்த அம்மா சும்மா இருக்குமா? சங்கர் சிமென்ட் ஆன்ட்டியா மாறி, 'கிளம்புறப்போ வீட்டைப் பூட்டினீங்களா?, கியாஸை ஆஃப் பண்ணீங்களா?, பீரோவைச் சாத்துனீங்களா’னு தேனீ கூட்டைக் கலைச்சுவிடுவாங்க. குடும்பமே 'டவுட்டு தனபாலா’ மாறி கதிகலங்கி நிக்கும்.
 
இப்படியான ரணகளங்களுக்கு மத்தியிலும் எப்படியோ பிக்னிக் ஸ்பாட்டுக்குப் போயாச்சுப்பா. ஊட்டிக்குப் போனா தொட்டபெட்டா டெலஸ்கோப்ல மேகமூட்டம் வானத்தைப் பார்க்க, மூணு மணி நேரம் தேவுடு காத்து க்யூல நிப்பான். கொடைக்கானல் மலர் கண்காட்சியில் தீபாவளி சீஸன் ரங்கநாதன் தெரு கணக்கா கூட்டம் அம்மும். வியர்க்க விறுவிறுக்க ஆளுங்களை முட்டி மோதித் திரிஞ்சு முட்டி தேய செட்டிலாவான். சாப்பாட்டை ஃபுல் கட்டு கட்டிட்டா, 'இன்னும் ஏன்டா முழிச்சுட்டு இருக்க கைப்புள்ள... தூங்கு’தான். இதுல குடும்ப உறுப்பினர்களோடு மனம்விட்டு என்ன பேசுறது?! 'அட... பேசிட்டு இருக்கிற நேரத்துல ஏரியை இன்னொரு ரவுண்டு அடிக்கலாம்ல’னு அபத்தமா கேள்வி கேப்பாங்க நம்மாளுங்க.
 
இது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் வந்ததுல இருந்து, கம்பளியை இறுக்கிப் போத்திட்டு தூங்கிட்டே இருப்பாங்க சிலர். காட்டேஜ்காரன் இலவசமா ஏற்பாடு பண்ற கேம்ப் ஃபயருக்குக் கூப்பிட்டாக்கூட, 'கங்கு கண்ணுல பட்ருமே... ஆத்தாடி... என்னா குளிரு சாமி!’னு ஃபீல் பண்ணுவாங்க. ஊட்டி, கொடைக்கானல்ல குளிரடிக்காம அனலா அடிக்கும் செல்லம்?! ஊட்டியில செல்ஃபி எடுக்கிறதைவிட குல்ஃபி சாப்பிடுறதுல கிக் அதிகம்னு எப்போ உணர்வீங்க?
 
'ஓய்... குத்தம் சொல்றவன் மனுஷன்; வழிகாட்டுறவன் பெரிய மனுஷன். நீ மனுஷனா... பெரிய மனுஷனா?’னு நீங்க கேட்கிறது புரியுது. அந்த அமெரிக்கப் பல்கலைக்கழக ஆராய்ச்சியே மகிழ்ச்சியான சுற்றுலாவுக்கு சில டிப்ஸ் கொடுத்திருக்காங்க. அதையும் காதுல போட்டுவிடுறோம்...
 
* கொடைக்கானலோ கோவாவோ... எங்கேயும் ப்ளான் பண்ணிக் கிளம்பணும். பல வலைதளங்கள் பார்த்து கையைக் கடிக்காத பட்ஜெட்ல ஹோட்டல் புக் பண்ணிட்டு நிம்மதியா கிளம்புங்க. ஏன்னா, 'பட்ஜெட் பிக்னிக்’னு ஏலகிரி போய் இறங்கிட்டு, 'என்ன இங்கே ஒண்ணுமே இல்லை?’னு கேட்கிறதுல அர்த்தமே இல்லை. செலவைக் குறைக்கத் திட்டமிடலாம். ஆனா, அதுலயே கடமை கண்ணாயிரமா இருக்கேன்னு சுற்றுலா சந்தோஷத்தை அனுபவிக்க மறந்துராதீங்க!
 
* சின்ன கல்லு... பெத்த லாபம்! கொஞ்சம் லக்கேஜ்... நிறைய சந்தோஷம். எந்த ஊர், எந்த சீஸன்... அதுக்கு ஏத்த மாதிரி திட்டம் போட்டாலே, லக்கேஜ் அளவைக் குறைச்சிரலாம். ஸ்வெட்டர் எடுத்துட்டு ராமேஸ்வரம் போக வேணாம்... பெர்முடாஸ் போட்டுட்டு ஊட்டிக்குப் போக வேணாம்.
 
* அனுபவி ராஜா அனுபவி! முடிஞ்சவரை மொபைல், லேப்டாப் போன்ற எந்திரன்களுக்கு தடா போடுங்க. சுற்றிலும் இருக்கிற இயற்கையை ரசிச்சு மகிழுங்க. ராத்திரி தூறல்ல நனையிறது, அதிகாலைச் சூரியனை ரசிக்கிறதுனு அந்தந்தத் தருணங்களை அதற்கு உண்டான சந்தோஷத்தோடு கொண்டாடுங்க. சுற்றுலாவில், டெட்லைன் கிடையாது; டார்கெட் கிடையாது. கடல் அலையை ரசிச்சபடி அரை மணி நேரம் கூடுதலா காற்று வாங்கினா, குடிமுழுகிப்போயிடாது. 'சூசைட் பாயின்ட்’ படங்கள் வேணும்னா, கூகிள்ல மழையாக் கொட்டும். அங்கே போய் அந்த அபார மலைச் சரிவை ரசிக்காம, கேமரா ஆங்கிள் பார்த்துட்டு இருக்காதீங்க.
 
* ரெஸ்ட் இஸ் பெஸ்ட்! சுற்றுலாவின் முக்கியமான அம்சம்... ஓய்வு. புளியோதரையைக் கிண்டிட்டு வந்துட்டோமேனு கிண்டி ரேஸ் குதிரை மாதிரி சுத்திட்டே இருக்கணும்னு அவசியம் இல்லை. 'நாய்க்கு வேலை இல்லை... நிக்க நேரம் இல்லை’ங்கிற மாதிரி அலைய எதுக்கு அம்புட்டு தூரம் போகணும்? ஒரு நாளின் பாதியை அலைச்சலுக்கும்... மீதியை ஓய்வுக்கும் ஒதுக்குங்க.
கட்டக்கடைசியா...
 
பல ஐரோப்பிய நாடுகள்ல சுற்றுலாவை சலுகையாப் பார்ப்பது இல்லை. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியத் தேவைனு சட்டமே சொல்லுது. 'நூறு புத்தகங்கள் படிப்பதற்கு ஈடானது ஒரு பயணம்’னு சீனப் பழமொழி சொல்லுது. ஆனா, இந்தியா போன்ற வளரும் நாடுகள்ல, 'டூரா... தலைக்கு மேலே வேலை கெடக்கே பாஸ்!’னு சொல்லிட்டே இருக்கோம். அதான், இந்தியா டல்லரசாவே இருக்குது... ஆங்!
இரண்டு இன்ஷூரன்ஸ் ஏன், எதற்கு, எப்படி
-பாரதி தம்பி

'வெறும் 12 ரூபாய்க்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்ஷூரன்ஸ்!’ என்பதுதான் இன்று தீயாகப் பரவும் செய்தி. அரசின் விளம்பரங்களும் அமோகமாக இருப்பதால், ஆளாளுக்கு இதைப் பற்றி விசாரிக்கிறார்கள். '12 ரூபாய்க்கு ரெண்டு லட்ச ரூபாய் பாலிசியா? அப்படின்னா எனக்கு 10 பாலிசி போடுங்க’ என்கிறார் ஒருவர். 'ஏற்கெனவே நாம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறோமே... அதுவும் இதுவும் வேறு வேறா..?’ என்பது பலரின் குழப்பம். சந்தேகங்களுக்கு விடை தேடுவோமா? 
 
இப்போது மத்திய அரசு இரண்டுவிதமான காப்பீட்டுத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஒன்று, விபத்துக் காப்பீட்டுப் பாலிசி. இதில், 18 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம். ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியம். குறிப்பிட்ட ஆண்டில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு, கை, கால், கண் ஆகிய உறுப்புகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கான இழப்பீடாக அதிகபட்சமாக 1 முதல் 2 லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் செய்ய முடியும். விபத்தில் மரணம் அடைந்தால் இரண்டு லட்சம் வரையிலும் க்ளெய்ம் செய்யலாம். '12 ரூபாய்தானே’ என்பதற்காக 10, 20 பாலிசிகள் எடுக்க முடியாது. ஓர் ஆளுக்கு ஒரு பாலிசிதான். அதற்கும் வங்கியில் சேமிப்புக் கணக்கு அவசியம். பிரீமியம் தொகை, ஒவ்வோர் ஆண்டும் வங்கிக் கணக்கில் இருந்துதான் எடுக்கப்படும். இந்தத் தொகைத் திருப்பித் தரப்பட மாட்டாது.
'பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்பது இரண்டாவது திட்டம். அதாவது, 'பிரதம மந்திரி வாழ்க்கை ஒளி காப்பீடுத் திட்டம்’. இதன்படி ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டும். பாலிசிதாரர் எந்தக் காரணத்தினால் மரணம் அடைந்திருந்தாலும் அவரது நாமினிக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். வருடாவருடம் பாலிசியை புதுப்பிக்க வேண்டும். இதில் கட்டப்படும் பிரீமியமும் திரும்பத் தரப்பட மாட்டாது.
 
'இந்த இரண்டு பாலிசிகளுக்கும் என்ன வித்தியாசம்? ஏன், ஒன்றில் அவ்வளவு குறைந்த தொகை..?’ என்றெல்லாம் பலப்பல குழப்பங்கள் நிலவுகின்றன. காப்பீடு தொடர்பான அடிப்படை விவரங்களை இன்ஷூரன்ஸ் நிபுணர் ஸ்ரீதரன் விளக்குகிறார்.
 
''இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் எடுப்பது எண்டோமென்ட் பாலிசி (Endowment policy). இதில் நாம் கட்டும் தொகையின் ஒரு பகுதி இன்ஷூரன்ஸாகவும், இன்னொரு பகுதி முதலீடாகவும் செல்கிறது. ஆனால், முழுக்க முழுக்க இன்ஷூரன்ஸ் என்றாலே ஒரு முதலீடு என்பதைப்போல நம் ஊரில் புரிந்துவைத்திருக்கிறார்கள்.
 
முதலீடு செய்ய லாபகரமான வேறு வழிமுறைகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி கட்டுகிறீர்கள் என்றால், ஒட்டுமொத்தமாக நான்கு லட்சம் ரூபாய் கட்டியிருப்பீர்கள்.          20 ஆண்டுகள் கழித்து, கட்டிய தொகை இரு மடங்காகக் கிடைக்கும் எனச் சொல்வார்கள். இது 4 முதல் 6 சதவிகித லாபம்தான். ஆனால், பாதுகாப்பான பி.பி.எஃப் திட்டத்தில் 8.5 சதவிகிதம் உறுதியான லாபம் கிடைக்கிறது. அதனால் இன்ஷூரன்ஸ் என்பதை முதலீடாகப் பார்க்கும் மனநிலையில் இருந்து மக்கள் விடுபட வேண்டும்.
 
உண்மையில் டேர்ம் பாலிசிதான் இன்ஷூரன்ஸின் முழுமையான அர்த்தத்தை வழங்குகிறது. குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் ஒருவேளை இறந்துவிட்டால், அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு அவர் எவ்வளவு சம்பாதித்துத் தருவாரோ, அந்தப் பணத்தைப் பெற்றுத் தருவதற்கான காப்பீடு இது. ஒருவரது ஆண்டு வருமானத்தைப்போல 10-ல் இருந்து         15 மடங்கு தொகைக்கு டேர்ம் பாலிசி எடுக்கலாம். உங்கள் ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய் என்றால், 30 முதல் 45 லட்சம் வரையிலும் டேர்ம் பாலிசி எடுத்துக்கொள்ளலாம்.
 
விபத்துக் காப்பீடுத் திட்டம் என்பது, முழுக்க முழுக்க விபத்து நேர்ந்தால் மட்டுமே க்ளெய்ம் செய்யக்கூடியது. இதற்கான பிரீமியம் குறைவுதான். உதாரணத்துக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு தோராயமாக 200 ரூபாய் பிரீமியம் வரும். உங்களின் வருமான வரம்பைப் பொறுத்து, விபத்துக் காப்பீடு தொகையும் முடிவு செய்யப்படும். இதில் பிரீமியம் எனக் கட்டும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. விபத்து ஏற்பட்டால் இழப்பீடு பெறலாம். இல்லையெனில், சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்துக்கு பணம் சென்றுவிடும். டேர்ம் பாலிசி எடுக்கும்போதே, விபத்துக் காப்பீடையும் அதனுடன் இணைத்துக்கொள்ளலாம். இதற்கு 'ரைடர்’ எனப் பெயர்.
 
மெடிக்கல் இன்ஷூரன்ஸ் அல்லது மெடிக்ளெய்ம் என்பது மற்றொரு முக்கியமான பாலிசி. நோய்கள் பெருகிவிட்ட இந்த நாட்களில், நம் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய பாலிசி. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து 3 முதல்           5 லட்சம் ரூபாய்க்காவது மெடிக்ளெய்ம் எடுத்துக்கொள்வது நல்லது.
இன்றைய சூழலில் ஒருவர் விபத்துக் காப்பீடு பாலிசி, டேர்ம் பாலிசி, மெடிக்ளெய்ம் பாலிசி ஆகிய மூன்று பாலிசிகளை வைத்திருப்பது அவசியம். விபத்துக் காப்பீடுப் பாலிசியை தனியாக எடுக்காமல், டேர்ம் இன்ஷூரன்ஸுடன் ஒரு ரைடராகச் சேர்த்துக்கொள்ளலாம். மற்றபடி ஒருவரிடம் எத்தனை எண்டோமென்ட் பாலிசி இருந்தாலும், அத்தனையையும் அவர் க்ளெய்ம் செய்ய முடியும்!''
 
ஏன்... எதற்கு... எப்படி?
தற்போது அரசு அறிவித்துள்ள விபத்துக் காப்பீடு பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் 12 ரூபாய், ஆயுள் காப்பீடு பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் 330 ரூபாய். இரண்டிலும் பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் ஏற்படுகின்றன. அடிப்படை சந்தேகங்களுக்கான விளக்கங்கள் இங்கே...
''யாரெல்லாம் இந்த பாலிசிகளை எடுக்க முடியும்?''
''தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் இந்தியர் எவரும் இதில் சேரலாம்!''  
''சேர என்ன செய்ய வேண்டும்?''
''நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று விசாரித்தால் விண்ணப்பம் தருவார்கள். அதை நிரப்பிக்கொடுத்தால் போதுமானது!''
''வயது வரம்பு என்ன?''
''12 ரூபாய் பிரீமியம் கட்டும் விபத்துக் காப்பீடு பாலிசியில் சேர, 18-70 வயது உடையவராக இருக்க வேண்டும். 330 ரூபாய் பிரீமியம் கட்டும் ஆயுள் காப்பீடு பாலிசியில் சேர்வதற்கு 18-50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்!''
''ஒருவர், எத்தனை பாலிசிகள் எடுக்கலாம்?''
''ஒரு நபர் ஒரு விபத்துக் காப்பீடு பாலிசியும்,
ஒரு டேர்ம் பாலிசியும் மட்டுமே எடுக்க முடியும்!''
''ஒருவேளை ஒருவர் மூன்று வங்கிக் கணக்குகள் வைத்திருந்தால், ஒவ்வொன்றின் மூலமாகவும் ஒரு பாலிசி எடுக்கலாமா?''
''முடியாது. அப்படியே எடுத்தாலும் ஏதேனும்
ஒரு பாலிசிதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்!''
''இந்த பாலிசி எனக்கு மட்டும்தானா... குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளலாமா?''
''குடும்பத்தினருக்குக் காப்பீடு அளிக்காது. விபத்துக் காப்பீடு பாலிசியின்படி விபத்து ஏற்பட்டால் அவரோ, வாரிசுதாரரோ இழப்பீட்டைப் பெறலாம். ஆயுள் காப்பீடு பாலிசியின்படி, மரணம் ஏற்பட்டால் அவர் குறிப்பிட்டுள்ள வாரிசுக்கு, அந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்!''
''இப்போது பாலிசியில் சேர்ந்துவிட்டு, வேண்டாம் என்றால் இடையில் விலக முடியுமா?''
''இது தொடர்பான அறிவிப்புகளில், பாலிசியை இடையில் நிறுத்திக்கொள்வது குறித்த விவரங்கள் இதுவரை குறிப்பிடப்படவில்லை!''
 
''பாலிசி அமைந்த வங்கிக் கணக்கை மாற்ற வேண்டியிருந்தால் என்னவாகும்?''
''நீங்கள் கட்டும் பிரீமியம் தொகை, அந்த         ஓர் ஆண்டுக்கானது மட்டுமே. எனவே அடுத்த ஆண்டு வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இல்லை என்றாலோ, நீங்கள் அந்த பாலிசியைப் புதுப்பிக்கவில்லை என்றாலோ,  உங்கள் பாலிசி காலாவதியாகிவிடும். வேறொரு வங்கிக் கணக்கின்மூலம் புதிதாக விண்ணப்பித்து திட்டத்தில் இணைந்துகொள்ளலாம்!''
''க்ளெய்ம் செய்ய, என்ன செய்ய வேண்டும்?''
 
''விபத்துக் காப்பீடு பாலிசியின் மூலம் க்ளெய்ம் செய்ய, விபத்து ஏற்பட்டதற்கான எஃப்.ஐ.ஆர்., காப்பீடுத் தொகை செலுத்தியதற்கான ரசீது, விபத்து மூலம் மரணம் நேர்ந்திருந்தால் மரணச் சான்றிதழ்... ஆகியவற்றை எந்த வங்கிக் கணக்கின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். 330 ரூபாய் கட்டும் ஆயுள் காப்பீடு பாலிசிக்கும் இதே நடைமுறைதான்!''

Thursday, January 29, 2015

'ஷமிதாப்’ படத்தை சாக்காக வைத்து இளையராஜாவைக் கொண்டாடிவிட்டார் அமிதாப். மும்பையில் நடந்தது என்னவோ இளையராஜா இசையமைத்த 'ஷமிதாப்’ பட இசை வெளியீடுதான். ஆனால், அதை ராஜாவை ஆராதிக்கும் திருவிழாவாக மாற்றிவிட்டனர். ரஜினி, கமல், ஸ்ரீதேவி என அத்தனை பிரபலங்களும் அன்று செம ஃபார்ம்! 
 
அமிதாப் தானே பேசிப் பதிவுசெய்த வீடியோதான் அழைப்பிதழ். அந்த வீடியோ பதிவை ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்களுக்கு தன் மொபைல் மூலமே பெர்சனலாக அனுப்பி, விழாவுக்கு அழைத்திருந்தார். இதில் இன்னோர் ஆச்சர்யம்... இந்த விழாவுக்கு ரஜினி, கமல் இருவரும் வருவது இளையராஜாவுக்கு இறுதி நிமிடம் வரை தெரியாதாம். அரங்கத்தில் இருவரையும் பார்த்தது ராஜாவுக்கே இன்ப அதிர்ச்சி.
 
கமல், ஸ்ருதி ஹாசனுடன் வர... சரிகா, அக்ஷரா ஹாசனுடன் வந்திருந்தார். ரஜினி, தனுஷ், ஐஸ்வர்யா ஒரு பக்கம்... அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா மறுபக்கம்... போனி கபூருடன் ஸ்ரீதேவி என விழா... திருவிழாதான்.
 
'சீனிகம்’ படத்துக்காக ராஜா இசையமைத்த பாடலை ஸ்ரேயா கோஷல் தமிழ் - இந்தியில் கலந்து பாடி நிகழ்ச்சியைத் தொடங்க, வரவேற்புரை நிகழ்த்தியது அமிதாப்பின் குரல்.
 
'
ராஜாவின் பாடல்கள், மக்கள் மனதில் தாலாட்டாக, நிம்மதியாக, சோகமாக... எனப் பலவிதங்களில் பயணிக்கின்றன. பொள்ளாச்சி அருகே உடுமலைப்பேட்டையில் உள்ள தியேட்டரில் ராஜா இசையமைத்த படம் வெளியானது. அந்தப் படம் ஓடிக்கொண்டிருந்த வரை தினமும் ஒரு யானை அங்கு வரும். தியேட்டருக்கு வெளியில் பாடல்களை ரசித்துக் கேட்பதுபோல நின்றுகொண்டிருக்கும். படம் முடிந்ததும் கிளம்பிவிடும். தியேட்டரில் இருந்து அந்தப் படம் எடுக்கப்பட்டதும் அந்த யானை வருவது நின்றுவிட்டது. அப்படி ஒரு யானையையே தன் இசையால் கட்டிப்போட்ட வசீகர இசையமைப்பாளர்’ எனச் சொல்லிக்கொண்டே மேடையில் தோன்றினார் அமிதாப். அரங்கம் முழுக்க ஆர்ப்பரிப்பு!
தொடர்ந்து இளையராஜா, கமல், ரஜினி, ஸ்ரீதேவி... என '16 வயதினிலே’ டீம் மேடை ஏறினர்.  
'நீங்கள், ராஜா இருவருமே ஆன்மிகத் தேடல் உள்ளவர்கள். இருவருக்கும் என்ன வித்தியாசம்?’ - ரஜினியிடம் கேட்டார் அமிதாப்.
 
'ஹி இஸ் வெரி நாட்டி’ எனத் தொடங்கிய ரஜினி, 'இப்ப இருக்கிற இளையராஜா கிடையாது அப்ப. நானும் அவரும் விடியுறவரைக்கும் எல்லாம் குடிச்சிருக்கோம்’ என எந்தத் தயக்கமும் இல்லாமல் ரஜினி பேச, கீழே அமர்ந்திருந்த ராஜா, 'ஏய்... அதையெல்லாம் சொல்லாதே’ என்பதுபோல் செல்ல அதட்டலாக ரஜினிக்கு சிக்னல் கொடுத்தார். சிரித்துக்கொண்டே தொடர்ந்தார் ரஜினி. 'திடீர்னு ஒரு மாறுதல். ஆன்மிகத்துல அவருக்கு நாட்டம். போகப்போக சாமியாராவே மாறிட்டார். ஆரம்பத்துல 'இளையராஜா சார்’னுதான் கூப்பிடுவேன். அந்த மாற்றத்துக்குப் பிறகு 'சாமி’னு கூப்பிடுறேன்’ என்றவர், ராஜாவைப் பார்த்து 'சரிதானே?’ என்பதுபோல் தலையாட்ட, 'ஆமாம்’ எனத் தலையாட்டி ஆமோதித்தார் ராஜா.
 
'ராஜா உடனான பயணத்தில் மறக்க முடியாதது எது?’ இந்தக் கேள்வி கமலுக்கு.
'ஆரம்பத்துல 'ஹேராம்’ படத்துக்கு வேற ஒரு இசையமைப்பாளர்தான் மியூசிக் பண்ணியிருந்தார். அவர் போட்டுக்கொடுத்த டியூன்ல ஷூட்டிங்கும் முடிச்சுட்டு வந்துட்டேன். அப்புறம் என்னமோ அந்த இசையில் எனக்குத் திருப்தி இல்லை. அப்ப இளையராஜா சார்கிட்ட வந்தேன். 'திரும்ப ஷூட் பண்ணினால் எவ்வளவு செலவாகும்?’னு கேட்டார். 'அது ஆகும்...
 
20 கோடிக்கு மேல’னு சொன்னேன். 'சரி... நான் பார்த்துக்கிறேன்’னு சொன்னார். சவுண்டு இல்லாம பாடல்களை ப்ளே பண்ணி, நடிகர்களின் உதட்டு அசைவுகளுக்கு ஏற்ப பாட்டு எழுதச் சொல்லி அதுக்கு டியூன் போட்டுக்கொடுத்தார். அப்படி மியூசிக் பண்ண எல்லா பாடல்களுமே ஹிட். அதுதான் ராஜா!’
'அவர் டியூன்ல கரெக்ஷன்ஸ் சொல்லியிருக்கீங்களா... ஆர்க்யூ பண்ணுவீங்களா?’ இருவருக்குமான கேள்வி.
 
'அந்த மாதிரி எல்லாம் நான் கேட்டதே இல்லை. அது என் துறையும் கிடையாது’ என்ற ரஜினியிடம், 'அவர் இசையில் நீங்க பாடியிருக்கீங்களே?’ என எடுத்துக்கொடுத்தார் அமிதாப். 'அட... அதை ஏன் கேக்குறீங்க? 'மன்னன்’ படத்துல நாலு வரி பாடினேன். அதுக்கே எனக்கு எட்டு மணி நேரம் ஆச்சு’ என வெட்கத்துடன் சிரித்தார் ரஜினி.
 
கமல் பதில் இது: 'நான் அவர்கிட்ட நிறைய ஆர்க்யூ பண்ணுவேன். அப்ப அவர் சொல்ற பதில்ல இருந்து நிறையக் கத்துக்கலாம் பாருங்க... அதுக்காக! ஆனா, என்ன சண்டை போட்டாலும் கடைசியா எனக்கு என்ன தேவையோ, அதைக் கொடுத்துடுவார்.
 
'தேவர் மகன்’ பட கம்போஸிங். ஒரு இந்திப் பாட்டைச் சொல்லி, 'இந்த மாதிரி வேணும்’னு சொன்னேன். 'நீங்க சிச்சுவேஷன் சொல்லுங்க. பாட்டெல்லாம் சொல்லாதீங்க’னு சொன்னார். 'இல்லல்ல... எனக்கு அந்த மாதிரிதான் வேணும்’னு நான் பிடிவாதமாச் சொன்னேன். 'அட... நீங்க முதல்ல சிச்சுவேஷனைச் சொல்லுங்க. மத்ததெல்லாம் அப்புறம்’னு அவரும் பிடிவாதமா இருந்தார். சிச்சுவேஷன் சொன்னேன். 'இஞ்சி இடுப்பழகி...’ கொடுத்தார்’ என சிலாகித்தார் கமல்.
 
தனுஷ§ம் 'ஷமிதாப்’ இயக்குநர் பால்கியும் மேடைக்கு வந்தனர். 'படத்துக்கு ராஜா போட்டுக்கொடுத்த பாட்டை எங்கே பிளே பண்ணாலும் தனுஷ் ஆடுவார். ஆனா, ராஜா சார் இருக்கிறதால ஆடத் தயங்குறார். அதனால படத்துக்காக அவர் ஆடின பாட்டைப் பார்க்கலாம்’ என்றார் இயக்குநர் பால்கி.
 
'ஜானி’ படத்தில் இடம்பெற்ற 'ஆசையக் காத்துல தூதுவிட்டு...’ பாட்டுக்கு மேற்கத்திய பாணியில் ராஜா இசையமைத்திருக்க, பாடலுக்கு ஸ்ருதி குரல் கொடுத்திருந்தார். அதற்கு தனுஷின் டான்ஸ் அத்தனை ரகளை. ஒளிபரப்பு முடிந்ததும், 'தனுஷ், இப்போது ராஜா சார் வாய்ஸில் பாடுவார்’ என்றார் பால்கி சிரித்துக்கொண்டே. 'ஆட மட்டும் இல்லை... பாடவும் பதற்றமா இருக்கு’ எனச் சொல்லிய தனுஷ், பிறகு பாடத் தொடங்கினார். 'நான் தேடும் செவ்வந்திப் பூவிது...’, 'தென்பாண்டிச் சீமையிலே...’ பாடல்களை இளையராஜா குரலில் பாடினார் தனுஷ்.
 
'தனுஷ் பாடினது எப்படி இருக்கு?’ என ராஜாவிடம் பால்கி கேட்க, 'என் குரலைவிட தனுஷ் குரல் நல்லாவே இருக்கு’ என்றார் ராஜா.
 
'நான் இவரோட பாடல்களைக் கேட்டுத்தான் சினிமாவுக்கே வந்தேன்; வளர்ந்தேன். ராஜா சார் மியூசிக், எனக்குள்ள எந்த எமோஷனையும் உண்டாக்கிரும்’ என நெகிழ்ந்தார் தனுஷ்.
 
அடுத்து மேடை ஏறினார்கள் கமலும் அக்ஷராவும். படத்தின் டீஸர், டிரெய்லர்கள் திரையிடப்பட, 'நான் எப்படி நடிச்சிருக்கேன்?’ என, கமலிடம் கேட்டார் அக்ஷரா. 'என் பார்வையில் ஆயிரம் விமர்சனங்கள் சொல்வேன். நீ நல்லா பண்ணியிருக்கேனு நான் சொல்லணும்னு அவசியம் இல்லை. பால்கி இருக்கார். அவர் உன்னை நல்லவிதமாத்தான் வழிநடத்தியிருப்பார்னு எனக்குத் தெரியும். முழுப் படமும் பார்த்துட்டு என் விமர்சனம் சொல்றேன்’ என்ற கமல், மேடையில் இருந்து இறங்கிச் செல்லும் வழியில், சரிகாவுக்குச் சின்னப் புன்னகை, ஒரு கைகுலுக்கலை அளித்தார்.
 
'ஷமிதாப்’ படப் பாடல்களை ஜெயா பச்சன் வெளியிட, குல்சார் பெற்றுக்கொண்டார். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் இருவரும் ஒவ்வொரு மேஜையாகச் சென்று விருந்தினர்களை நலம் விசாரித்தனர். அப்போது ரஜினிக்கு அருகில் அமர்ந்திருந்த தனுஷை எழுப்பிவிட்டு அங்கு அமர்ந்த ஐஸ்வர்யா, ரஜினியுடன் சில நிமிடங்கள் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார். பார்வையாளர்கள் வரிசையில் இருந்து, 'ரோபோ-2 எப்போ?’ எனக் குரல்கள் எழ, இருவர் முகத்திலும் புன்னகை. 
 
'எல்லாரும் இளையராஜா சார் இசையமைத்த ஆயிரமாவது படம் 'ஷமிதாப்’னு நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா, பாலா இயக்கும் 'தாரை
தப்பட்டை’ படம்தான் ராஜாவுக்கு ஆயிரமாவது படம். 'ஷமிதாப்’ 1,001-வது படம். 'ஆயிரம் படங்களைக் கடந்துவிட்டார் ராஜா. அதுக்காக ஒரு விழா நடத்திக்கிறோம்’னு பாலாகிட்ட சொன்னதும் இந்தப் பாராட்டு விழாவை விட்டுக்கொடுத்தார் பாலா. ரொம்ப நன்றி பாலா’ என்ற பால்கி, 'பாலா மிகப் பெரிய கிரியேட்டர். அவர் பண்ணதுல பாதிகூட நான் பண்ணலை’ எனக் கூறியபோது, பாலா முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
அமிதாப், பால்கி, தனுஷ், அக்ஷரா என ஒட்டுமொத்த 'ஷமிதாப்’ டீமும் மேடை ஏறியபோது, 'நாங்கள்லாம் 'ஷமிதாப்’ல
50 பெர்சன்ட்தான். மீதி 50 பெர்சன்ட் இவர்தான்’ எனச் சொல்லி அவர்கள் அறிமுகப்படுத்திய நபர்... ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.
ராஜாவைக் கொண்டாடுவதில் தமிழ் சினிமாவை முந்திக்கொண்டது பாலிவுட்!

Thursday, January 15, 2015

நல்லாசிரியன் 
 
சிங்கப்பூரைச் சுத்திப் பார்க்க ஆசைப்பட்டார் சதீஷ். வீட்டுக்கு ஒரே மகன். 'இப்போதைக்கு வேண்டாம்... வயல் வேலைக நடந்துக்கிட்டு இருக்கு. பின்னாடி பார்த்துக்கலாம்’ என மறுத்திருக்கிறார்கள் சதீஷின் பெற்றோர். இதனால் மனமுடைந்து விஷம் அருந்தி, தற்கொலை செய்துகொண்டார் சதீஷ். 
செகண்ட் ஹேண்டில் மினிடோர் வண்டி ஒன்றை வாங்கினார் சுந்தரமூர்த்தி. அது அடிக்கடி ரிப்பேராகி, செலவுவைத்தது. விரக்தி அடைந்தவர் விஷம் அருந்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
வயலில் வேலையில் இருந்தார் குணசேகரன். மனைவி சாப்பாடு கொண்டுவர கொஞ்சம் தாமதமானது. தன்மானம் தலைதூக்கி, கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற குணசேகரன், தன்னையே அழித்துக்கொண்டார்.
 
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது காளாச்சேரி மேற்கு கிராமம். விவசாயம் செழிப்பாக நடைபெறும் இந்தக் கிராமத்தில் உள்ள வீடுகளின் மொத்த எண்ணிக்கை 315. சுமார் 15 ஆண்டுகளில் நிகழ்ந்த தற்கொலைகளின் எண்ணிக்கை 100-க்கும் அதிகம் இருக்கும். கடைசி ஐந்து ஆண்டுகளில் மட்டுமே சகுந்தலா, பூங்கோதை, சுகன்யா, சதீஷ்குமார், பாஸ்கர், ரவி, விஜயதாரணி, சின்னையன், செல்லையன், ரேகா, செல்லதுரை, சேகர், சங்கர், செல்வராசு... இவர்களையும் சேர்த்து 35 தற்கொலை மரணங்கள். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை மரணங்கள் பதறவைக்கின்றன. சந்தானம், அவரது மகள் செல்லம்மாள், செல்லம்மாளின் கணவர் தங்கமுத்து, அவர்களின் வாரிசுகளான விஜயகுமாரி வேம்பு, பன்னீர்செல்வம், கணேசன், கணேசனின் மகன் சுந்தரமூர்த்தி... என தொடர்ந்து தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே அழித்துக்கொண்டனர்.
 
 
''என் பையன் 17 வயசுலயே எங்களைத் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டான். அன்னைக்கு ராத்திரியே என் சம்சாரமும் என்னை அநாதையா விட்டுட்டுப் போயிட்டா'' எனக் கலங்குகிறார் கண்ணன்.
 
ஆண், பெண் பாகுபாடுகள் இல்லை; வயது வித்தியாசம் இல்லை; சாதி வேறுபாடோ, வர்க்க வேறுபாடோகூடக் கிடையாது. பலவீனமான மனம், கொந்தளிக்கும் கோபம் இந்த இரண்டும் இவர்களின் உயிரைத் தாமாகவே மாய்த்துக்கொள்ள வைத்திருக்கின்றன. அனைத்துப் பிரச்னைகளையும் அடுத்த விநாடியே தீர்க்கக்கூடிய சர்வலோக நிவாரணியாகவே தற்கொலையை மட்டும்தான் நினைத்திருக்கிறார்கள். தம்பி திட்டியதால் அக்கா, மாமியார் கோபப்பட்டதால் மருமகள், அம்மா கண்டித்ததால் மகள், கடன்காரன் கிண்டலாகப் பேசியதால் விவசாயி... என தற்கொலைக்கு முயன்று தோற்றவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபோன்ற அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் மிக அமைதியாக, ரொம்ப நிம்மதியாக இருக்கிறது இந்தக் கிராமம்.
''எங்களுக்கே ஆச்சர்யமாதான் இருக்கு. இப்போ எங்க ஊர் மக்கள் ரொம்பவே மாறிட்டாங்க. என்னதான் மீளவே முடியாத பெரிய பிரச்னைகள் ஏற்பட்டாலும்கூட, அந்தத் தவறான முடிவுக்கு இப்ப யாருமே போறது இல்லை. எதையும் தாங்கக்கூடிய அளவுக்கு தைரியமும் பக்குவமும் வந்திருச்சு'' எனப் பெருமிதப்படுகிறார் ஊர் நாட்டாமை கண்ணையன்.
 
எப்படி நிகழ்ந்தது இந்த ஆச்சர்ய மாற்றம்? இங்கு உள்ள மக்கள் அனைவரும் கைநீட்டுவது... ஆங்கில ஆசிரியர் ஆனந்த்.
 
''எப்ப... யார் சாவாங்களோனு பயந்து கிடப்போம். எங்களுக்கு எப்ப விடிவு காலம் வரும்னு ஏங்கினோம். ஆனா, இவ்வளவு சீக்கிரம் அது வரும்னு நினைச்சுப்பார்க்கலை. 2009-ம் வருஷம் எங்க ஊர் தொடக்கப் பள்ளி,  நடுநிலைப் பள்ளியா தரம் உயர்த்தப்பட்டுச்சு. அப்போ 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு ஆங்கிலப் பாடம் எடுக்க வந்தார் ஆனந்த் சார். அவரோட விடாமுயற்சியால் 2012-ம் ஆண்டு டிசம்பருக்கு பின்னாடி எங்க ஊர்ல ஒரு தற்கொலைகூட நடக்கலை. இனிமேலும் நடக்காது'' என்கிறார், முன்பு தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்த விவசாயி சுந்தரம்.  
மென்மையான புன்னகையுடன் வரவேற்கிறார் ஆசிரியர் ஆனந்த். ''நான் இந்த ஸ்கூலுக்கு டீச்சரா வந்தப்ப, இந்த ஊரைப் பத்தி எந்த விஷயமும் எனக்குத் தெரியாது. ரேங்க் கார்டுல கையெழுத்து போட, அப்பா-அம்மாவை அழைச்சிக்கிட்டு வரச் சொன்னப்ப, பல  பசங்க கண்கலங்கி அழுதாங்க. யாரைக் கேட்டாலும் 'அப்பா இல்லை’னு சொல்வாங்க. அல்லது 'அம்மா இல்லை’னு சொல்வாங்க. அப்பா-அம்மா ரெண்டு பேரும் இல்லாதவங்களும் இருந்தாங்க. 'இந்த ஊர் ஏன் இப்படி இருக்குது?’னு விசாரிச்சேன். எல்லாரும் தற்கொலை செஞ்சிக்கிட்டு இறந்தது தெரிஞ்சது. 'இனிமேல் இது தொடரக் கூடாது’னு முடிவுபண்ணி, அதற்கான முயற்சிகளில் இறங்கினேன்.
 
ஆண்டு விழாவே கொண்டாடாமல் இருந்த இந்தப் பள்ளியில் 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்தக் கிராமத்தையும் ஒண்ணு திரட்டி ஆண்டு விழா நடத்தினோம். அதில் பக்காவா ப்ளான் பண்ணி உருக்கமான ஒரு ஃபேமிலி டிராமாவை அரங்கேற்றினோம். அப்பா - அம்மாவை இழந்த பையன் ஒருத்தன் படிக்க வழி இல்லாம தெருத் தெருவாப் பிச்சை எடுத்துப் பிழைக்கிறதுதான் கதை. நாடகம் பார்த்த கிராம மக்கள் கதிகலங்கிப்போயிட்டாங்க. ஒரு அம்மா, நாடகம் நடந்துட்டு இருக்கும்போதே கதறி அழ ஆரம்பிச்சிட்டாங்க. மூணு குழந்தைகளின் தாயான அவங்க, தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாத்தப்பட்டவங்க. மக்களின் மனமாற்றத்துக்கான தொடக்கம் அந்த நாடகத்துல இருந்தே ஆரம்பிச்சது.
 
ஊர்ல இருந்த 'டைமண்ட் பாய்ஸ்’ இளைஞர் நற்பணி இயக்கத்திடம் பேசி அவங்களை இந்த நல்ல முயற்சிக்குத் துணைக்குச் சேர்த்துக்கிட்டேன். அவங்க மூலமா என் மாணவர்களை தற்கொலைக்கு எதிரான விழிப்புஉணர்வு கொண்டவங்களா மாத்தினோம். ஒரு குரூப் செட்டானதும் மக்கள்கிட்ட பேசிப் பேசி விழிப்புஉணர்வு ஏற்படுத்தினோம்.
 
மாணவர்களுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் வேஷம் போட்டு, 'எந்த மதமும் தற்கொலையை நியாயப்படுத்தலை’னு எடுத்துச் சொன்னோம். அப்பா, அம்மாவை இழந்த மாணவர்களை வீடு வீடாக் கூட்டிப்போய்,  அவங்க படுற கஷ்டங்களைச் சொல்லவெச்சு மத்தவங்களுக்குப் புரியவெச்சோம். மக்களோட மனம் பிரச்னைகள் பக்கம் திரும்பாம இருக்கவும், பிரச்னையைப் பத்தி யோசிக்கும்போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவும் பிளாஸ்டிக் வொயர்களால் பூ ஜாடிகள் செய்யக் கத்துக்கொடுத்தோம். 'நாம நல்லா பூ ஜாடி பண்றோம்’கிற பெருமிதமும், அதுக்குக் கிடைக்கும் வருமானமும் மக்களை மாத்துச்சு. இந்த உலகத்தில் எல்லோருக்கும் பிரச்னை இருக்கு. அதுக்கு அன்புதான் மருந்து. ஒருத்தருக்கொருத்தர் அன்பா, ஆதரவா, அக்கறையா இருக்கணும்னு கத்துக்கொடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமா மக்கள் மனசுல மாற்றம் வர ஆரம்பிச்சது. ஊருக்குள்ள சிரிச்ச முகங்கள் தெரிய ஆரம்பிச்சது'' என்கிறார் ஆனந்த்.
தற்கொலைகளைத் தடுத்து நிறுத்தியதால், சர்வதேச அளவில் இயங்கும் 'டிசைன் ஃபார் சேஞ்ச்’ அமைப்பு, ஆனந்துக்கு விருது கொடுத்துக் கௌவரப்படுத்தியிருக்கிறது.  
 
''மாணவர்கள் மூலமாக சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதற்கான விருது இது. எல்லா மாற்றங்களுக்கும் என் மாணவர்கள்தான் காரணம். விருதுகளை எதிர்பார்த்து நான் இந்த வேலையைச் செய்யலை.   என் சின்ன வயசுல என் அப்பா - அம்மா உடம்பு முடியாம இறந்துபோயிட்டாங்க. ஆதரிக்க பெற்றோர் இல்லாம தனியா ஒரு குழந்தை வளர்ந்து ஆளாகிறது எவ்வளவு சவாலான விஷயம்னு தெரியும். இப்போ இந்த ஊர் மாறியிருக்கு. எல்லா இரவும் விடியும் என்பது எங்க நம்பிக்கை. அதுக்கு நானும் இந்தக் கிராம மக்களும் கியாரன்டி!'' என்கிறார் ஆசிரியர் ஆனந்த். மாணவர்களின் கைதட்டல் பின்னுகிறது!

Monday, January 5, 2015

மீனவர்களின்  நண்பன்!
 
ந்தியா - இலங்கை கடல் எல்லையை அறியாமல் அதைத் தாண்டிவிடும் தமிழக மீனவர்களை அடித்தும் உதைத்தும் கைதுசெய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது இலங்கைக் கடற்படை. சில சமயம் எல்லை மீறி, இந்தியக் கடல் பகுதியில் இருக்கும் மீனவர்களையும் வன்மத்தோடு தாக்குகிறார்கள். காப்பாற்றவேண்டிய அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்க, மீனவர்களுக்குக் கைகொடுக்க முன்வந்திருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த மின்னணுப் பொறியாளர் ரெசிங்டன். இதற்காக அவர் உருவாக்கியிருக்கும் மொபைல் ஆப்ஸ்...  'சேவ் அவர் ரேஸ்’!   
 
ரெசிங்டனைச் சந்தித்தேன்... ''ஆறாம் வகுப்பு படிக்கும்போதே எலெக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சுட்டேன். 90-களில் டி.வி பார்க்கணும்னா, ஆன்டனா அவசியம். ஆன்டனாவில் பூஸ்டர் வேணும். ஆனா, நான் பூஸ்டர் இல்லாத ஆன்டனா கண்டுபிடிச்சேன். இப்போ எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷனில் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, தனியார் நிறுவனங்களுக்கு சாஃப்ட்வேர் உருவாக்கித் தந்துட்டு இருக்கேன்.
 
நான் எப்போ பேப்பர் படிச்சாலும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினர்கிட்ட சிக்கி சின்னாபின்னமாகிற செய்திகள்இருக்கும். தமிழக மீனவர்களுக்கு உதவுற மாதிரி ஏதாவது பண்ணணும்னு நினைச்சேன்.  இந்தியா - இலங்கை இடையே இருக்கிற கடல் எல்லை என்பது கண்களுக்குப் புலப்படாத கோடு. மீனவர்கள் தங்களுக்கே தெரியாமல் எல்லையைத் தாண்டிப் போக வாய்ப்புகள் அதிகம். மூணு வருஷங்கள் உழைச்சு 'சேவ் அவர் ரேஸ்’னு ஒரு ஆப்ஸ் உருவாக்கினேன். அதாவது 'நம் இன மக்களைக் காப்பாற்று’னு அர்த்தம்.
 
 
எல்லா மீனவர்களுக்கும் புரியும்படி முழுக்க முழுக்க தமிழிலேயே இதை உருவாக்கி இருக்கேன். எந்த ஒரு ஸ்மார்ட் போன்லயும் இந்த ஆப்ஸைப் பயன்படுத்தலாம். இந்த ஆப்ஸ்க்கு போன் சிக்னலோ, இன்டர்நெட் வசதியோ தேவை இல்லை. இதை ஆன் பண்ணினா, எத்தனை டிகிரி அட்சரேகை, தீர்க்கரேகையில் இருக்கோம்னு காட்டும். அப்புறம் இந்தியக் கடல் எல்லைக்குள் இருந்தால், பச்சை நிறத்தில் 'உள்ளே’னு காட்டும். அதுவே இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் நெருங்கிட்டால், மஞ்சள் நிறத்தில் 'எச்சரிக்கை’னு மாறும். அதையும் தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைந்தால் 'வெளியே’னு சிவப்பு நிறத்தில் காட்டுவதோடு எச்சரிக்கை அலாரமும் அடிக்கும். தமிழ் வாசிக்கத் தெரியாத மீனவர்களா இருந்தா, சிக்னல் ஸ்டைலில் இருக்கிற பச்சை, மஞ்சள், சிவப்பு பார்த்தே இருக்கிற இடத்தைத் தெரிஞ்சுக்கலாம்.  
  
இன்னும் கூடுதல் வசதியா, அஞ்சு நிமிஷங்களுக்கு ஒருமுறை நாம இருக்கிற இடத்தைப் பதிவுசெய்யும் வசதியும் இதில் இருக்கு. அதன் மூலமா மீனவர்கள் எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருந்தாங்கனு ஆதாரபூர்வமாக் காட்ட முடியும். இதனால் 'எல்லை மீறியதா சொல்லி’ தேவை இல்லாம இலங்கைக் கடற்படை நம் மீனவர்களைக் கைது செய்யப்படுவதைத் தடுக்கலாம். அதோடு எந்த இடத்தில் மீன்கள் கூட்டமா இருக்குங்கிறதையும் இந்த ஆப்ஸ் சொல்லும். அங்கே போய் மீன் பிடிக்கலாம். மீன் பிடிச்சுட்டு இருக்கும்போது திடீர்னு இயற்கைச் சீற்றத்தால் படகு திசை மாறிப் போனாலோ, படகு பழுதானாலோ, கரையில் இருக்கிறவங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் சொல்லலாம். அந்த எஸ்.எம்.எஸ் சேவைக்கு மட்டும்தான் செல்போன் சிக்னல் தேவை. அப்படி மெசேஜ் போகும்போது கடைசியா மீனவர்கள் இருந்த இடத்தோட அட்சரேகை, தீர்க்கரேகையும் தகவலாப் போய்ச் சேர்ந்துடும். இதைவெச்சு கடலில் அவங்க இருக்கும் இடத்தைச் சுலபமாக் கண்டுபிடிச்சிடலாம். வானிலை அறிக்கையையும் இந்த ஆப்ஸில் சேர்க்கும் முயற்சியில் இருக்கேன்'' என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ரெசிங்டன்.
 
அரசாங்க அதிகாரிகள் ரெசிங்டன் உருவாக்கிய 'சேவ் அவர் ரேஸ்’ ஆப்ஸைப் பரிசோதித்து, திருப்தியான முடிவுகள் கிட்டினால், அனைத்து மீனவர்களையுமே பயன்படுத்தச் சொல்லிப் பரிந்துரைக்கலாமே!
‘முடியாததை செய்து முடி!’
ஞா.சுதாகர்
னி ஒரு மனிதன் நினைத்தால் உலகை, உலக அரசியலை, சுற்றுச்சூழலை மாற்ற முடியுமா? நிச்சயம் முடியும் என்பதற்கு சமீபத்திய உதாரணம்... எலன் மஸ்க். ஒப்பீட்டுக்குச் சொல்வது என்றால் எலன் மஸ்க்கை அமெரிக்காவின் இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ் என அழைக்கலாம். புகழ்மிக்க ஆன்லைன் ஷாப்பிங் தளமான 'பேபால்’ நிறுவனத் தலைவர். பொருட்களை 'பேபால்’ வெப்சைட் மூலம் விற்றுக்கொண்டிருந்தவர், சக்ஸஸ் ரேட்டைத் தொட்டதும், அப்படியே 'பேபால்’ நிறுவனத்தையும் விற்றுவிட்டார். அடுத்ததாக விண்வெளிக்கு மக்களை அழைத்துச்செல்லும் 'ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கிவிட்டு, சில பல திட்டங்கள் அறிவித்தார். அப்படியே எலெக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் தனது நண்பர் மார்ட்டின் தொடங்கிய 'டெஸ்லா’ நிறுவனத்தில் பண முதலீடு செய்தார். இங்கேதான் கதையில் ஒரு கசமுசா, செம ட்விஸ்ட் எல்லாமே! 
 
கொஞ்ச நாட்களிலேயே டெஸ்லா நிறுவனத்தை முழுமையாகக் கையில் எடுத்துக்கொண்டார்
 
 
எலன் மஸ்க். கார்களை இயக்க மாற்று எரிபொருள் தேவை என்கிற விவாதம், நம்ம ஊர் 'ரஜினி - அரசியல்’ விவாதம்போல சீசனுக்கு சீசன் கிளம்பும். மாற்று என்ன? எலெக்ட்ரிக் கார்கள்! ஆனால், இதுவரை உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார்களால் வேகமாகச் செல்ல முடியவில்லை. சார்ஜ் செய்தாலும் ஸ்மார்ட் போன் மாதிரி பொசுக்கென சார்ஜ் இறங்கிவிடும். இதை உடைத்து உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தார் எலன் மஸ்க்.
 
எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரி 100 கிலோமீட்டர் வரைதான் சார்ஜ் நிற்கும் என்பதை மாற்றி, 320 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய ரோட்ஸ்டர் காரை அறிமுகப்படுத்தினார். ஆச்சர்யத்தில் ஆடிப்போனது ஆட்டொமொபைல் உலகம். 'டைம்’ பத்திரிகை தனது அட்டைப்படத்தில் ரோட்ஸ்டர் காரை 'சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று’ எனப் பாராட்டி கட்டுரை வெளியிட, பப்ளிக்குட்டி பற்றிகொண்டது. 2008 - 2012-ம் ஆண்டுகளில் மொத்தம் 31 நாடுகளில் விற்கப்பட்ட கார்களின் எண்ணிக்கை வெறும் 2,400. ஏனெனில், ரோட்ஸ்டர் கார்கள் ஸ்போர்ட்ஸ் வகையறா கார். இதன்பிறகு 'செடான்’ ரக ஸ்டைலில் சொகுசு கார்களுக்குப் போட்டியாக டெஸ்லா மாடல் ஷி-ஐ களம் இறக்கினார் மஸ்க். ஒரே ரிசல்ட்தான். வென்றால் வரலாறு; தோற்றால் தகராறு.
 
 
2012-ம் ஆண்டு ஜூன் 22. டெஸ்லா எலெக்ட்ரிக் கார் புராஜெக்ட்டுக்காக டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம், அமெரிக்க மின்சக்தி கழகத்திடம் வாங்கிய கடன் மட்டும் 465 மில்லியன் டாலர். இந்த எலெக்ட்ரிக் டெஸ்லாவில் பேட்டரியை இன்னும் மேம்படுத்தி 426 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல முடியும் என்பதும், பேட்டரியில் இருந்தே இரண்டு முறை பேக்கப்பும் எடுக்க முடியும் என்பதும் அத்தனை பேரையும் அசரவைத்தது. ஒரே மாதத்துக்குள் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் இதழ்கள் அனைத்தும் 'நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்...’ என டெஸ்லாவைப் பாராட்டி எழுத, அந்த வருடம் மட்டும் 22 ஆயிரம் கார்கள் விற்றுத் தீர்ந்தன. 2013-ம் வருடம் அமெரிக்க கார் மார்க்கெட்டில் பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ என அனைத்தையும் தாண்டி பிஸ்தா ஆனது டெஸ்லா.
அதில் இருந்து இந்த வருடம் முழுக்க வாரம் சராசரியாக 700 கார்கள் வரை தயாரித்து விற்பனை செய்கிறது டெஸ்லா மோட்டார்ஸ். 22 வருட தவணையில் கட்டுவதாகச் சொல்லியிருந்த பேங்க் லோன் 465 மில்லியன் டாலரை இரண்டு வருடங்களுக்குள் வட்டியோடு செட்டில் செய்துவிட்டார்கள்.
 
டெஸ்லாவின் சிறப்பே அதன் பேட்டரிதான். சாதாரண லித்தியம் பேட்டரிகளின் செல்களைப்போல
இல்லாமல் உருளை வடிவ முறையில் செல்களை அமைத்து, இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார் மஸ்க். பெட்ரோல் போட ஆங்காங்கே பங்குகள் உண்டு. டெஸ்லாவுக்கு? அதற்கும் ரூட் பிடித்துவிட்டார் மஸ்க். நீங்கள் செல்லும் வழியில், ஆங்காங்கே 'எனர்ஜி ஸ்டேஷன்’ என்ற கடைகள் இருக்கும். அங்கு உங்கள் கார் பேட்டரியைக் கொடுத்து சார்ஜ் செய்ய சொல்லிவிட்டு, ஸ்டெப்னி பேட்டரி வாங்கி மாட்டிக்கொள்ளலாம். திரும்பி வரும்போது பேட்டரியை ரிட்டன் வாங்கலாம். இந்த நெட்வொர்க் அமெரிக்கா முழுவதும் விரிவுசெய்யப்பட விற்பனை இன்னும் எகிறிவிட்டது.
 
இதுவரை மேற்கத்திய நாடுகளில் சக்ஸஸ் ரேட் காட்டிவிட்டதால் சீனா, இந்தியா என மிகப் பெரும் சந்தைக்குள் நுழையக் காத்திருக்கிறது டெஸ்லா. ஆனால், அதன் வளர்ச்சியை எண்ணெய் வள நாடுகள் விரும்பவில்லை. எதிர்காலத்தில் தங்களின் வணிகத்துக்கே சங்கு ஊதக்கூடும் என லாபி பண்ணக் காத்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் புகை கக்காத, இயற்கைச் சூழலைக் கெடுக்காத எலெக்ட்ரிக் கார்களை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விரும்பி வரவேற்கக் காத்திருக்கிறார்கள். பல சவால்களுக்கு மத்தியில் நம்பிக்கையாக இருக்கிறார் மஸ்க். காரணம், அவர் டெஸ்லாவுக்கு வைத்திருக்கும் ஸ்லோகன் அப்படி! அது... 'முடியாததைச் செய்து முடி!