Thursday, July 31, 2014

ஒரு உண்மையான கலைஞனின் நேர்முகம் 
 
''இந்தியாவில் சீக்கிரமே பணம் சம்பாதிக்க மூணு வழி இருக்கு. அதுல சினிமா, விளையாட்டு ரெண்டும் பிரபலம்... அப்புறம் அரசியல். சினிமா, விளையாட்டில் நீங்க மக்களை ஏமாத்த முடியாது. அதே மாதிரி அரசியலில் பணம் சம்பாதிக்க ரொம்ப நாள் காத்திருக்கணும். பொறுமை இல்லாதவங்களுக்கு இருக்கும் நாலாவது வழி... சீட்டிங். அடுத்தவன் உழைப்பை வைச்சு தன்னைக் காப்பாத்திக்கிற எல்லாருமே இங்கே ஒரு சதுரங்க ராஜாதான். அப்படி ஒரு ராஜாதான், எனக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்திருக்கார்!'' - தெளிவாகப் பேசுகிறார் 'சதுரங்க வேட்டை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத். முதல் நாள் முதல் ஷோ மாஸ் ஹீரோ படம் பார்க்க வந்த கல்லூரி மாணவன்போலத் தோற்றம். ஆனால், பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அத்தனை அரசியல்.
 
''வேலூர் பக்கம் சின்னப்பள்ளிக்குப்பம் கிராமம்தான் என் சொந்த ஊர். சென்னையில் டிப்ளமோ படிச்சிட்டு எலெக்ட்ரிக்கல்ஸ் வேலை பார்த்துட்டு இருந்தேன். வேலை போரடிச்சதால், சினிமா ஆசை வந்தது. பார்த்திபன் சார்கிட்ட 'பச்சக் குதிர’ படத்துல வேலை பார்த்தேன். ஒரு கட்டத்தில் கையில் பணம் இல்லாமத் திரும்பவும் எலெக்ட்ரிக்கல் வேலைக்கே போயிட்டேன். கோயம்பேடு மார்க்கெட்ல இருக்கிற பம்ப்பிங் ஸ்டேஷன்ல தங்கி இருந்தேன். அது ஒரு பெரிய அனுபவம். விதவிதமான மனிதர்கள், பயணிகள், தொழிலாளர்கள்னு நிறைய மனிதர்களைச் சந்திச்சேன். நான் யார்கிட்டயும் ஏமாந்தது இல்லை. ஆனா, பலவிதங்களில் ஏமாந்த ஏகப்பட்ட மனிதர்களைச் சந்திச்சேன்.
 
 
மண்ணுள்ளிப் பாம்பு அஞ்சு லட்சம்னு விற்க வந்த ஒரு குரூப்கூட, மூணு நாள் தங்க வேண்டிய சூழ்நிலை. அவங்க பேச்சும், மார்க்கெட்டிங் தந்திரங்களும் அரசியல் கட்சித் தலைவரோட அனுபவத்துக்குச் சமம். 'பணத்துக்கு ஏன் இப்படி அலைபாயுறாங்க?’னு யோசிச்சப்ப, இங்கே மனுஷனா இருக்கிறதைவிட, பணக்காரனா இருக்கத்தான் ஆசைப்படுறாங்கனு புரிஞ்சுக்கிட்டேன். உலகமயமாக்கல் வந்த பின்னாடி நல்ல கல்விக்கும், தரமான மருத்துவத்துக்கும் பணம்தான் ஆதாரம்னு ஆகிப்போச்சு. அரசாங்கப் பள்ளியில படிக்கிறதை கேவலம்னும், அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கிறதை ஆபத்துனும் மக்களை நினைக்கவைச்சதில் பணத்துக்குப் பெரும் பங்கு உண்டு.
 
பணம், மக்கள் மத்தியில் ஒரு நெருக்கடியை உருவாக்கிருச்சு. அன்பா வாழ்றதைவிட இங்கே பணக்காரனா வாழத்தான் எல்லாரும் ஆசைப்படுறாங்க. எல்லாருக்குமே நாளைக்குக் காலையில பணக்காரன் ஆகிடணும்னு ஆசை. அந்த ஆசையைத்தான் ஃபோர்ஜரி பண்றவங்க சுலபமா அறுவடை பண்ணிடுறாங்க. மாசத்துக்கு ஒண்ணு, ஏரியாவுக்கு ஒண்ணுனு நடந்த மோசடி வேலைகளை பேப்பரில் படிச்சு, அது தொடர்பான ஆட்களைச் சந்திச்சேன். உண்மையைச் சொல்லணும்னா ஃபோர்ஜரி பண்றவங்க, அவ்வளவு புத்திசாலிங்க. நிலப்பரப்பு, மக்களோட மனநிலை, பிராந்தியத்தின் பொருளாதாரம் எல்லாத்தையும் கணிச்சுதான் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுறாங்க. கொங்குமண்டலம் செழிப்பானது, கால்நடை வளர்ப்புகளுக்கு உதவக்கூடியதுனு ஈமு கோழி, சென்னை மாதிரி விவசாய இடமே இல்லாத ஊர்களில் தங்க நகைச் சீட்டு, தங்க நாணயங்கள், ராமநாதபுரம் மாதிரியான வறண்ட ஏரியாவுக்கு மண்ணுள்ளிப் பாம்பு, எல்லா ஏரியாவுக்கும் பொதுவா ரைஸ் புல்லிங்னு... எல்லாமே பக்கா பிளான்!
 
உண்மையில், ரைஸ் புல்லிங்கில் திருடின ஒரிஜினல் கோபுரக் கலசத்தில் காந்த சக்தி ஏத்துவாங்க. ஆனா, இப்போ கோபுரங்களைத் திருடுறது ரிஸ்க் ஆகிட்டதால, டூப்ளிக்கேட் கோபுரக் கலசங்களை உருவாக்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களுக்குத் தேவை எங்கேயாவது கோபுரக் கலசம் காணாமப்போச்சுங்கிற அறிவிப்பு மட்டும்தான். 'ஐம்பொன்லதான் உருவாக்க முடியும்னு கிடையாது. கோபுரக் கலசத்தை ஜஸ்ட் ஒரு நாள்ல உருவாக்கிடலாம்’கிற உண்மையை மக்களுக்குச் சொல்லணும்னுதான் படத்தில் ஒரிஜினலை உடைச்சிட்டு டூப்ளிக்கேட் உருவாக்கிற மாதிரி காட்டியிருந்தேன்.
 
சினிமாவில் ஹீரோ பில்டப் ஏத்துறதுகூட ஏமாத்துவேலைதான். உங்களை இருட்டு அறையில் உட்காரவைக்கிறோம். உங்களைவிட உயரமான, வெளிச்சமான ஒரு இடத்தில் நாயகனைக் காட்டுறோம். நீங்க உங்களை அறியாமலேயே ஹீரோ மேல மதிப்பு வைக்க ஆரம்பிச்சிடுவீங்க. இது சின்ன சைக்காலஜி.
 
நான் ஒரு மதகுரு பேச்சைக் கேட்கப் போயிருந்தப்ப, அவரைச் சுத்தி 10,000 பேர் உட்கார்ந்திருந்தாங்க. அவர் ரொம்பச் சாதாரணமான உடையோட, சின்ன மேடையில் உட்கார்ந்திருந்தார். எல்லா இடத்திலும் வெளிச்சம். சினிமாவில் ஒரு ஹாலுக்குள் இருக்கும் 500 ஆட்களை ஏமாத்துறதே பெரிய கஷ்டம். ஆனா, சினிமா தியேட்டருக்கான எந்தப் பின்னணியோ, இசையோ இல்லாம, எப்படி இத்தனை பேரையும் நம்பவைக்கப்போறார்னு ஆர்வத்தோட காத்திருந்தேன். தெளிவான, அழகான உச்சரிப்பு, நம்பவைக்கிற தோரணை, கம்பீரமான உடல்மொழினு அவர் பேசும்போது, மொத்தக் கூட்டமும் மந்திரிச்சுவிட்ட மாதிரி ஆடுது. அவர் பேச்சு அப்படி ஒரு பக்கா ஸ்கிரிப்ட்.
 
காலங்காலமா நாம வைச்சிருக்கிற நம்பிக்கையை அவங்க பயன்படுத்திக்கிறாங்கனு தெரிஞ்சுக் கிட்டேன். அந்தப் பாதிப்புலதான் நட்டி சார் கலசத்தை விற்கும்போது, உடம்பு சிலிர்க்கப் பேசுற மாதிரி சீன் வைச்சேன். அதுக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ். படத்தின் ஒவ்வொரு சம்பவமும் வசனமும் உண்மைக்குப் பக்கத்துல இருக்கணும்னு நிறையக் கஷ்டப்பட்டோம். குறைஞ்ச பட்ஜெட், ரெண்டே அசிஸ்டென்ட் இருந்தாலும் திரைக்கதை மேல நம்பிக்கை இருந்தது. 'நல்ல விஷயத்தை எப்படிக் கொடுத்தாலும் மக்கள் ஏத்துப்பாங்கய்யா’னு மனோபாலா சார் கொடுத்த தைரியம்தான் எல்லாத் துக்கும் ஆதாரம். படம் பார்த்துட்டு பாலா, பாலாஜி சக்திவேல்னு மரியாதைக்குரிய பல இயக்குநர்கள் பாராட்டினது ரொம்ப சந்தோஷம்!
 
வழக்கமா கான் ஜானர் படங்களில் ஏமாத்துறவன் ஜெயிக்கிற மாதிரிதான் கிளைமாக்ஸ் இருக்கும். ஆனா, எனக்கு அதில் உடன்பாடு இல்லை. கலைனா சுவாரஸ்யமா மட்டும் இருக்கக் கூடாது. நல்லது சொல்லி அதை மனசுல பதியவைக்கணும். அதான் ஹீரோ ஏமாத்து வேலையில் தோத்து, பாசத்தில் ஜெயிக்கிற மாதிரி மாத்தினேன். இப்போ லிங்குசாமி சார் 'என் பேனர்லயே அடுத்த படம் பண்ணுங்க’னு சொல்லியிருக்கார். டீக்கடை அரட்டையில்கூடப் பேசத் தயங்குற, ஒரு சினிமாவா தொடத் தயங்குற சப்ஜெக்ட் அது. கிட்டத்தட்ட கண்ணிவெடியில் கால் வைக்கிற மாதிரியான சப்ஜெக்ட். ஆனா, அது கண்ணிவெடி இல்லைங்கிற புரிதலை உண்டாக்கும் முயற்சியாகவும் இருக்கும். ஏன்னா, பொழுதுபோக்குறது மட்டும் இல்லை. நல்லது சொல்றதும், சமூகத்தை நல்லபடியா வைச்சுக்கிறதும் ஒரு கலைஞனின் கடமைதான்
பணம் சேர்க்கும் ஆசை எனக்கு வரவில்லை
 
'மனநல மருத்துவர் ருத்ரன்' என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில், நீண்ட முடியும், வெண்தாடியும், நெற்றியில் குங்குமமும், கூர்மையான கண்களும், அவர் தீட்டும் ஓவியங்களும் என... ஒரு தீர்க்கமான பிம்பம் மனதில் தோன்றும்!
 
மருத்துவத் துறையில் 35 ஆண்டுகளைக் கடந்திருக்கும் ருத்ரன், மருத்துவத்தை 'தொழில்' என்பதை மீறி... மனோதர்மம், சேவை என்பதாகவே பார்ப்பதுதான் வியக்கவைக்கிறது. கட்டணம் தொடங்கி சிகிச்சை வரை இவரின் மருத்துவக் கோட்பாடுகள், மிகமிக மரியாதைக்குரியவை!
டாக்டருடன் இ-மெயிலில் பேசினோம்.
 
''நல்ல மதிப்பெண்களுடன் சென்னை மருத்துவக் கல்லூரியில் நான் இடம் பிடித்திருந்த சமயம், என் அப்பாவின் சூதாட்ட மோகத்தினால் எங்கள் வீடு கோரமான வறுமையின் பிடியில் இருந்தது. என் ஓவியத் திறமையால் படங்கள் வரைந்து விற்றும், அச்சகத்தில் இரவு நேரங்களில் வேலை பார்த்தும் கல்லூரிக் கட்டணங்களைக் கட்டினேன். 18-வது வயதில் இருந்து என் தேவைகளை நானே சமாளித்து, இளமைக் காலத்தை முடக்க நினைத்த வறுமையை அடக்கி மேலே வந்தேன். வறுமை ஒருபோதும் என்னை வருத்தவில்லை... மாறாக, மேலும் உழைக்க ஊக்குவித்தது.
 
வறுமையில் இருந்தபோதும் சரி, மருத்துவரான பின் வசதிகள் வந்து சேர்ந்தபோதும் சரி... இல்லாதவர்களிடம் நான் மருத்துவக் கட்டணம் பெறுவதில்லை. வறுமையில் இருந்து வந்ததால் கிடைக்கப் பெற்ற குணம் என்று இதை நான் நினைக்கவில்லை. என் தேவைகள் பூர்த்தி ஆன பின், அதிக பணம் சேர்க்கும் ஆசை எனக்கு வரவில்லை... அவ்வளவுதான்!'' என்றவர், ஆரம்பகால பயணம் பற்றி நினைவுகூர்ந்தார்.
 
 
''35 ஆண்டுகளுக்கு முன், மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு சொந்த கிளினிக் ஆரம்பித்த நாளில்... 'யார் வருவார்கள்' என்று நான், என் நண்பர் மற்றும் அவருடைய மனைவி மூவரும் காத்திருந்தோம். யாருமே வரவில்லை. 'இன்னும் ஒரு மணி நேரம் வரை பார்த்துவிட்டுக் கிளம்பலாம்' என்று நினைத்த நேரத்தில் வந்து சேர்ந்தார் அன்வர் பாய்.
 
'காலில் ஆணி கீறிடுச்சு, ஆயின்மென்ட் நானே போட்டுக்கிட்டேன், நீங்க செப்டிக் ஊசி மட்டும் போட்டு விடுங்க’ என்ற அன்வரிடம் ஊசியின் பெயரை எழுதிக் கொடுத்து வாங்கிவரச் சொன்னேன். ஊசி போட்டதும், 'பரவாயில்ல... வலிக்காம போட்டுட்டீங்க’ என்றபடியே கிளம்பியவரிடம், எப்படி ஃபீஸ் கேட்பது, எவ்வளவு கேட்பது என்று மையமான ஒரு புன்முறுவலுடன் நான் நிற்க, 'காசு எடுத்துட்டு வரல, எதுத்தாப்லதான் கடை. பையன்கிட்ட கொடுத்தனுப்புறேன்’ என்று சொல்லிச் சென்றவர், இரண்டு ரூபாயைக் கொடுத்தனுப்பினார். அது என்னுடைய முதல் வருமானம்!' என்று சொல்லும் டாக்டரின் கிளினிக்கில், இப்போதும் நோயாளிகளிடமிருந்து இதுதான்  கட்டணம் என்று எதையும் நிர்ணயித்துப் பெறுவதில்லை என்பது ஆச்சர்யமே!
 
''நோயாளிகள் என்னைப் பார்த்துவிட்டுச் செல்லும்போது, வெளியே என் உதவியாளரிடம் ஒரு நோட்டு இருக்கும். அதில் ஒவ்வொருவரும் என் உதவியாளர் சொல்லும் தொகையைக் கொடுத்து, நோட்டில் அதைக் குறிப்பிட்டு கையெழுத்திட்டுச் செல்ல வேண்டும். சிலர், தங்களுக்கு முன் உள்ள பெயர்களைப் பார்த்துவிட்டு, தங்களுக்கான கட்டணத்தை அறிந்துகொள்வார்கள். சிலர் 'இல்லை’ என்றும் எழுதிவிட்டு போவார்கள். சிலர், எளியவர்கள் யாராவது தங்களால் இயன்றதைக் கொடுத்திருப்பதைப் பார்த்துவிட்டு, 'அவங்க மட்டும் இவ்வளவுதானே கொடுத்திருக்காங்க...’ என்று தாங்களும் அதையே கொடுப்பார்கள். சிலர், 'முன்னாடி உள்ளவங்க கொடுக்கல... நான் ஏன் கொடுக்கணும்' என்று கொடுக் காமல் போவதும் உண்டு. சிலர், மறதியில் கொடுக்காமலே சென்றுவிடுவார்கள். கட்டணம் குறித்து யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை.  என் சிகிச்சையால் பலன் இருக்காது என்று கருதுபவர்களிடம், கட்டணம் வாங்குவதும் இல்லை. ஆனால், அவர்களோ முருங்கைக்காய், கொய்யா, வாழைப்பழம் என்று தங்கள் வீட்டில் விளைந்தவற்றைக் கொண்டு வந்து கொடுத்து அன்பைச் செலுத்துவார்கள். சிலர் எனக்குப் பிடிக்கும் என்று புத்தகங்கள், பொம்மைகள்கூட வாங்கி வருவார்கள்'' என்றவர்,
 
''நோயாளிகளிடத்தில் சில நிபந்தனைகள் எனக்கு உண்டு. மறுபரிசோதனைக்கு நான் குறிப்பிட்ட காலத்துக்குள் வராவிட்டாலோ, பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் விட்டாலோ, அந்தத் தடவை மட்டும் சிகிச்சை அளித்து, 'நான் சொன்னதைப் பின்பற்றாத உங்களுக்கு இனி மருத்துவம் பார்க்க மாட்டேன்’ என்று அனுப்பிவிடுவேன். சிலர், இனி அப்படி நடக்காது என்று உறுதி கூறி, மீண்டும் வருவார்கள்; என் சிகிச்சையை முறைப்படி பின்பற்றுவார்கள். இது என் பிடிவாதத்துக்காக செய்வது அல்ல; நோயாளிகளின் நலன் கருதி செய்வது. ஆனால் சிலர், என் இந்த அணுகுமுறை பிடிக்காமல் போய்விடுவார்கள்.
 
யாராக இருந்தாலும் வரிசைப்படி மட்டுமே மருத்துவம் பார்ப்பது மாறாத வழக்கம். இதனால் பல பிரபலங்கள், பணம் படைத்தவர்கள் கசந்து திரும்பிவிடுவதும் உண்டு. தேவைப்பட்டால், ஒருவருக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எடுத்துக்கொள்வேன். தேவையில்லை என்றால், அதிகப்படியாக ஒரு நிமிடம்கூட செலவிடமாட்டேன்'' என்ற டாக்டர்... இன்று சமூக, அரசியல், பொருளாதார நிர்பந்தங்களால் மருத்துவம் பணம் பிடுங்கும் தொழிலாகிக் கிடப்பதை சுட்டி வருந்தினார்.
 
''என்னிடம் வரும் சிலர், 'டாக்டர், ஸ்கேன் எடுக்கலாமா... எம்.ஆர்.ஐ செய்யவா?’ என்று தாங்களாகவே கேட்பார்கள். 'அதையெல்லாம் செய்து, உங்க வீட்டுல மாட்டி வெச்சுக்கோங்க. எங்கிட்ட கொண்டுட்டு வராதீங்க’ என்பேன் கண்டிப்புடன். அவசியம் என்றால், கட்டணம் குறைவான இடத்தில் பரிசோதனைகளைச் செய்து வரப் பரிந்துரைப்பேன்.
 
மருத்துவத்தைச் சேவையாகக் கருதும் மருத்துவர்கள் இன்றும் சத்தமில்லாமல் பணியாற்றி வருகிறார்கள். என் மருத்துவ ஆசிரியர்கள், நண்பர்கள் பலரிடம் இந்த குணத்தைப் பார்த்திருக்கிறேன். தாம்பரத்தில் உள்ள கண் மருத்துவர் டாக்டர் ரவீந்திரன் சட்டென நினைவுக்கு வருகிறார்'' என்ற டாக்டர் ருத்ரன்,
''சுருங்கப் பேசினால்தான் ருசிக்கும். இத்துடன் முடித்துக்கொள்வோமே!'' என்றபடி முடித்துக்கொண்டார்!