Saturday, September 2, 2023

 குழந்தைகளைக் கவனியுங்கள்!


இணையம் என்பது கட்டற்ற பெருவெளி. அதில் தேடுதல் கடினம். ஆனால், தடயம் எப்போதும் உண்டு. ஒருமுறை பதிவு செய்துவிட்ட எதையும் எளிதாக அழித்துவிடாது. ஒரு பக்கம் மத்திய அரசு சமூக வலைதளப் பக்கங்களுக்குத் தரும் நெருக்கடிகளுக்கு எதிராக கருத்துச் சுதந்திரத்தின் பக்கம் நிற்க வேண்டியதிருக்கிறது. இன்னொரு பக்கம், இப்படியான வசவுச் சொற்களால் சூழும் அபாயங்களை எதிர்த்தும் குரல் எழுப்ப வேண்டியதிருக்கிறது. இணைய பாலியல் அத்துமீறல்களும், வசவுச் சொற்களும் எந்தச் சூழலிலும் கருத்துச் சுதந்திரத்தில் வராது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளுதல் அவசியம்.

சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் மதுமிதாவிடம் பேசினேன். ‘‘முதலில் நாம் இந்த விஷயத்தில் குழந்தைகளைக் குறை சொல்ல முடியாது; கூடாது. ஏனெனில், அவர்களுமே இத்தகைய பிரச்னைகளில் தங்களை அறியாமலே பாதிக்கப்பட்டவர்கள்தான். அனைத்துமே பெற்றோர்களின் வளர்ப்பில்தான் இருக்கிறது. அவர்கள் ஒரு பக்குவப்படும் மனநிலைக்கு வரும்வரையில் (டீன் ஏஜ் தாண்டும் வரை) அவர்களைக் குற்றவாளிகளாக்குவது அபத்தம். குடும்பத்திலும் சமுதாயத்திலும் நடக்கும் விஷயங்கள்தான் ஒரு குழந்தையை உருவாக்குகின்றன. தனக்கான தனித்துவம் உருவாகும் வரை, ஒரு குழந்தை கற்றுக்கொள்வது எல்லாமே இந்த மாதிரியான புறக்காரணிகள் மூலம்தான். ஆரோக்கியமான மனநிலையை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களிடம் ஒரு விஷயத்தைத் திணிப்பதால், இங்கு எதுவும் மாறப்போவதில்லை. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மனநலம் சார்ந்த விஷயங்களையும் சேர்த்துக் கற்றுத்தருவது அவசியம்.

CyberSpace என்பது நம்மால் கற்பனை செய்ய முடியாதது. வதந்திகள் செய்திகளாக வருவது தொடங்கி, எல்லா ஆபத்துகளுமே இணையவெளியில் அதிகம். நேரில் ஒருவர் இதுமாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபடும்போது, அவரை நாம் கண்காணிக்க முடியும். அதுவொரு தொடர்ச்சியான நிகழ்வா, அல்லது ஒருமுறை மட்டுமே நடந்த அசம்பாவிதமா, அதிலிருந்து எப்படித் தப்பிப்பது போன்றவற்றை ஒருமாதிரி கணிக்க இயலும். ஆனால், இணையவெளியில் இது சாத்தியமில்லாத ஒன்று. அநாமதேய நபர்கள் அதில் அதிகம். இந்த எல்லாவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். குழந்தைகளைத் தனிமையில் அதிக நேரம் விடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் Private Space என்பது முக்கியம்தான் என்றாலும், அதிக நேரம் தனிமையில் இருப்பது, அதுவும் அந்த வயதில் ஆபத்தானது. குழந்தைகளிடம் சின்னச் சின்ன விஷயங்கள் பற்றி உரையாடுங்கள். அவர்களிடம் ஒரு சூழலைக் கொடுத்து, அதுகுறித்துக் கருத்துக் கேளுங்கள். பெற்றோர்கள் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டிய நேரமிது.

சிறுவர்களின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். திடீரென கோபப்படுவார்கள். தொடர்ச்சியாக இணையத்தில் சில விஷயங்களைப் பார்ப்பதுகூட இதற்கான காரணிகளாக இருக்கலாம். PUBG, free fire போன்று வன்முறையைத் தூண்டும் விளையாட்டுகள் இங்கு எக்கச்சக்கம். ஒரு குழந்தை எத்தனை மணி நேரம் இந்த விளையாட்டுகளுக்கு ஒதுக்குகிறது என்பதையும் யோசிக்க வேண்டும். பெற்றோர்கள் சில விஷயங்கள் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். அந்தரங்க உறுப்புகள் பற்றிப் பேசக்கூடாது என்கிற காலத்தை எல்லாம் நாம் கடந்து பல யுகங்கள் ஆகிவிட்டது. இப்போது யாரும் பிரவுசிங் சென்டர் செல்வதுமில்லை. எல்லாமும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. குழந்தைகளுக்கு இணையாக பெற்றோர்களும் அப்டேட் ஆக வேண்டிய சூழலிது. செமினார், புத்தகங்கள் என இன்னும் அவர்களுக்கு விளக்கவுரை கொடுத்துக்கொண்டிருப்பது வீண். பத்து வயது வரை, தன் அப்பாதான் சூப்பர் ஹீரோ என நம்பும் ஒரு சிறுவன், அதன் பின் தன் அப்பா நல்லவர் என நம்ப ஆரம்பிப்பது முப்பது வயதைக் கடந்த பின்னர்தான். இடைப்பட்ட காலத்தில்தான் எல்லாமும் தலைகீழாக மாறிவிடுகின்றன. நல்லதைக் கண்டாலே வெறுத்து ஒதுக்கும் காலமது.

நான் பெரிய ஆள்’ என்கிற நிலையிலிருந்து குழந்தைகளை அணுகுவதே தவறானது. அதுவும் எதிர்மறைக் கருத்துகள் எளிதாகச் சென்றடையும் இக்காலத்தில், இம்மாதிரியான அணுகுமுறை தவறான பாதைக்கே இட்டுச் செல்லும். ‘சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக்கூடாது’ என முற்றிலுமாக அவர்களுக்கு நீங்கள் தடா சொன்னால், வேறு வழிகளில் அவர்களால் இதை எளிதாகவே அணுக முடியும். அதில் பாதிப்பு இன்னும் அதிகம். முதலில் பெற்றோர்கள், குழந்தைகளின் மொழியைப் புரிந்துகொள்ளுதல் அவசியம். ‘எம்டன் மகன்’ டைப் அப்பாவில் இருந்து யாரையும் சட்டென எஸ்.பி.பி பாணி அப்பாவாக மாறச் சொல்லவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் இருக்கும் நல்லதோடு, கெட்டவற்றையும் சொல்லிப் புரியவையுங்கள்’’ என்கிறார் அவர்.

ஒரு சிறுவன் செய்யும் தீய செயலை ஆயிரம் பேர் ஊக்குவிக்கும்போது, அவனுக்கு அதில் இருக்கும் தவறு கண்ணைவிட்டு மறைந்து, மரத்துப்போகும். ஆகவே பெற்றோர்களே, உரையாடத் தொடங்குங்கள்

 கலைஞர் எனும் பேராளுமை

இந்தியாவில் கலைஞருக்கு நிகரான ஆட்சியாளர்கள் மிகச்சிலரே. கலைஞரின் பலம் பெரியாரின் சமூகநீதி சிந்தனைகளையும் அண்ணாவின் அரசியல் சிந்தனைகளையும் முற்றாகச் செரித்து தனது ஆளுமையின் பகுதியாக்கிக்கொண்டதுதான். அவரால் எந்த நிலையிலும் இவர்களின் சிந்தனைப் புலம் துறந்தோ, மறந்தோ இயங்கவே முடிந்ததில்லை. அரசியல் சமரசங்களிலும் அவர்களின் அடிப்படைகளை அவர் கைவிட்டாரில்லை.


ஆட்சியாளராக கலைஞரின் சாதனைகளைப் பட்டியலிட முயல்வது வியர்த்தம். ஒற்றை வரியில் சொல்லலாம். இன்று தமிழ்நாடு கண்டிருக்கும் அரசியல், சமூகப் பொருளாதார மாற்றங்களின் ஒவ்வொரு இழையிலும் அவரது பங்களிப்பு இல்லாமல் இருக்கவே இருக்காது. 
மாநில சுயாட்சி, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், 
ஜாதி மறுப்பு திருமணங்களுக்குச் சலுகை, 
மகளிர் 30% (இப்போது 50%) உள்ளாட்சி ஒதுக்கீடு சிறப்புரிமைகள், 
மூன்றாம் பாலினத்தவர் அங்கீகாரம், 
துறைசாரா தொழிலாளர் நல வாரியங்கள் என்று அது நீளும். 

மாற்று ஆட்சியாளர்களது ஓரிரு மக்கள் நலம் சார்ந்த முன்னெடுப்புகளைச் செழுமைப்படுத்துவதே அவர் பாணி/ பணி. குறிப்பாக சமூகநீதி- இடஒதுக்கீடு தளத்தில் அவர் செய்த மாற்றங்கள் பெரிது. உண்மையைச் சொன்னால் சமூகநீதிக் கோட்பாட்டின் வேரில் வெந்நீர் ஊற்ற முனைந்த பிற ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, மக்களைத் திரட்டியும், சட்டப் போராட்டங்களை நடத்தியும் தடுத்தவர் கலைஞர். ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தபோது செயல்பட்டும், ஆட்சியில் இல்லாதபோது ஆட்சியாளர்கள் பெரியார்/ அண்ணா கோட்பாடுகளை விட்டு விலகியபோது தடுத்தும் ஐம்பதிற்கும் மேலான ஆண்டுகளாக ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தொடர்ச்சியை உறுதி செய்தவர் கலைஞர்.

சமூகநீதி ஆட்சியென்பதால் ஒரு சாராருக்கு மட்டுமான ஆட்சியல்ல கலைஞருடையது. 

பொது விநியோகத் திட்டம், 

பேருந்துகள் அரசுடைமையாக்கம், 

கூட்டுறவுத்துறை விரிவாக்கம், 

கிராமப்புறம் முழுதும் ஆரம்ப சுகாதார மையங்கள், 

மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி, 

அனைத்து ஜாதியினருக்குமான சமத்துவபுரம், 

தொழில்துறை வளர்ச்சிக்காக ஐம்பது கிலோமீட்டருக்கு ஒரு தொழிற்பேட்டை, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், 

ஸ்பிக் போன்ற அரசு-தனியார் கூட்டுத்துறை, 

எல்காட், 

மாநில அரசின் கணினிக் கொள்கை, 

சென்னை - மதுரை - கோவை என டைடல் பார்க்குகள், 

கிராமப்புற மாணவர்களுக்கு சலுகை, 

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை, 

தமிழில் கற்றோருக்கு முன்னுரிமை... 

இலவசங்கள் என இழித்துரைத்துவிட்டு இன்று இந்தியாவே பின்பற்றும் திராவிட மாடல் ஆட்சிக்கு வலுவான அடித்தளமிட்டவர் கலைஞர் எனும் திராவிட சிந்தனைச் சிற்பியே. வாய் ஓயாமல் பெரியார், அண்ணா பெயரை உச்சரித்து ஈரமுள்ள / நன்றியுள்ள மக்கள் நெஞ்சில் தனக்கும் அவர்களுக்குமான நீங்காத இடம் பிடித்தவர் கலைஞர்.

Sugar Free - Health free 

உடல் பருமனாக இருப்பவர்கள், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுடன் வாழ்பவர்கள் சர்க்கரை கலந்த பானங்கள் குடித்தாலோ, உணவுகளைச் சாப்பிட்டாலோ, அவர்களது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். அதனால் இன்சுலின் எதிர்ப்பு நிலை இன்னும் அதிகமாகும். எனவே அவர்கள் சர்க்கரை அல்லாத செயற்கை இனிப்புச் சுவைகூட்டிகளை உணவிலும் பானங்களிலும் கலந்து உட்கொள்வது வழக்கம். இவை தங்களுக்கு ஆரோக்கியமானவை என்றும், நன்மை தருபவை என்றும் இவர்கள் நம்பிவந்தனர். இந்த நம்பிக்கையைத் தகர்த்திருக்கிறது, சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்.


‘குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் உடல் பருமனைக் குறைப்பதற்கோ, நீரிழிவு போன்ற தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கோ சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் பயன் தருவதில்லை. இவற்றால் உடலுக்குப் பாதகமான விளைவுகள் உருவாகக்கூடும். இவற்றைத் தொடர்ந்து உபயோகிப்பதால் நீரிழிவு மற்றும் இதய நோய் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் தன்மையும் அதிகரிக்கிறது' என்கிறது அந்த அறிவுறுத்தல்.

சுகர் ஃப்ரீ
‘கலோரி இல்லாதது' என்றும் ‘சுகர் ஃப்ரீ' என்றும் அடையாளப்படுத்தி, இனிப்புச் சுவையைக் கூட்டுவதற்காக சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் பல உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. ஜீரோ கலோரி உணவுகள்/பானங்கள், சாக்லேட்கள், பபுள் கம், ஸ்வீட் வகைகள், கேக்குகள், பிஸ்கட்டுகள், பிரெட் போன்றவற்றிலும் இவை சேர்க்கப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தால் சாக்கரின், அஸ்பார்டேம், அசிசல்ஃபேம், சுக்ராலோஸ், நியோடேம், ஐசோமால்டோஸ் போன்ற சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை கலக்கப்பட்ட உணவை உண்ணும்போதும், பானங்களைப் பருகும்போதும், உடல் எடை ஏறாது என்றும் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்காது என்றும் நம்பி மக்கள் இவற்றை நுகர்கின்றனர்.

ஆனால், கலோரிகள் இல்லாத இத்தகைய இனிப்புச் சுவை கூட்டப்பட்ட உணவுகளையும் பானங்களையும் உட்கொள்ளும் ஒருவர், இவற்றில் வரம்பு மீற அதிக வாய்ப்புள்ளது. இதுவரை இத்தகைய இனிப்புச் சுவைகூட்டிகளை வைத்துச் செய்யப்பட்ட ஆய்வுகளில், இவை பாதுகாப்பானவை என்று அறியப்பட்டாலும், வரம்பு மீறி தொடர்ந்து நீண்ட நாள்கள் இவற்றை உட்கொள்ளும்போது கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளுக்கும் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடும் என்பது தெரியவந்துள்ளது.

இத்தகைய கலோரி இல்லாத உணவுகளை உண்பதால் ஒருவருக்கு வயிறு நிரம்பாத நிலையே இருக்கும். அதனால் அவர் மேலும் பசி கொண்டு மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதற்கு வாய்ப்பு அதிகம். அதிலும் சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் சேர்க்கப்பட்ட ஸ்வீட், கேக், பானங்களால் பிரச்னை இல்லை என்று நம்பி அவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது உடலில் மாவுச்சத்து அளவு அதிகரித்து அதனால் உடல் பருமன் மற்றும் நீரிழிவு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.

இந்த இனிப்புச் சுவைகூட்டிகளில் நாம் உண்ணும் இயற்கையான சர்க்கரையைவிட 200 முதல் 13,000 மடங்கு வரை அதிக தித்திப்பு இருக்கிறது. இவை கலந்த உணவுகளை உண்பதன் மூலம் மூளையில் இனிப்புச் சுவைமீது எப்போதும் ஒருவித போதைத் தன்மை இருந்துகொண்டே இருக்கும். இதன் விளைவாகத் தொடர்ந்து இனிப்பை உண்ணும் உந்துதல் ஏற்பட்டபடி இருக்கும். இந்த உந்துதலால், இவற்றைத் தொடர்ந்து பருகுவதும் உண்பதும் தொடரும். எடையும் கூடும், நீரிழிவும் கட்டுப்பாடற்றுப் போகும்.

ஒருவர் எடையைக் குறைக்க எண்ணினால் அல்லது நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினால், சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி, தேன், பனங்கற்கண்டு ஆகியவற்றை நிறுத்துவதுடன் செயற்கையான சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகளையும் கட்டாயம் நிறுத்த வேண்டும். இனிப்புச் சுவை தரும் அனைத்து உணவுகளையும் முழுவதுமாக நிறுத்துவதன் மூலம் மட்டுமே மூளையை சர்க்கரை உந்துதல் இல்லாதபடி முழுவதுமாக டீ-அடிக்‌ஷன் செய்ய முடியும். மாறாக சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதால் க்ரேவிங் அதிகமாகவே செய்யும்.

இனிப்பு க்ரேவிங் ஏற்படுவதைத் தவிர்க்க புரதச்சத்தும், நன்மை செய்யும் கொழுப்புச்சத்தும் நிரம்பிய உணவுகளான முட்டை, மாமிசம், மீன், பயறு வகைகள், கடலை, பனீர் போன்றவற்றை உண்ணலாம். புரதச்சத்து மிக்க உணவுகளை உண்ணும்போது அவை இரைப்பையில் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் வயிறு நன்றாக நிரம்பும். அடிக்கடி பசிக்காது என்பதால் மீண்டும் மீண்டும் உண்ணும் தேவையும் இருக்காது. தினசரி ஒரு மணி நேரமேனும் வாக்கிங், சைக்கிளிங் போன்ற உடல் உழைப்பு செலுத்துவதன் மூலம் இன்சுலின் எதிர்ப்பு நிலையைச் சரிசெய்ய முடியும்.

சுகர் ஃப்ரீ
மெக்னீசியம் குறைபாட்டினால் அதிக இனிப்பு உண்ணும் உந்துதல் ஏற்படக்கூடும். மெக்னீசியம் சத்து நிரம்பிய நட்ஸ் வகைகள், சியா விதை, பூசணி விதை, கீரை வகைகள், வாழைப்பழம், அவகாடோ, மீன்களை உண்பதன் மூலம் இந்த உந்துதலைக் கட்டுப்படுத்த முடியும். இனிப்புச் சுவையுடன் சத்துகளும் வேண்டுமென்றால், அவ்வப்போது மிதமான அளவில் பழங்கள் உண்பது நல்லது. பழங்களிலும் வரம்பு மீறுவது நன்மையன்று. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் அதிகம் பழுக்காத பதத்தில் பழங்களை உண்பது சிறந்தது.


சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் மூலம் நன்மையைவிடத் தீமைகளே அதிகம் என்பதால், அவற்றைக் கைவிடுமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

Friday, September 1, 2023

 பாம்புகளிடம் எச்சரிக்கை
















பாம்புகளைப் பொறுத்தவரையில் அவை மனிதர்களின் சகவாசம் இல்லாமலே வாழ விரும்புகிறது. மனிதர்களுக்கு அருகில் இருக்க பாம்புகள் விரும்புவதில்லை. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக மனிதர்களின் வாழ்விடங்களை நோக்கி வர வேண்டியதாகிறது. பாம்புகளை கையாளத் தெரியாதவர்கள் பாம்புகளை நசுக்கும்போது, அது பயப்படும். அப்போது கடுமையாகத் தாக்கும் அல்லது கடிக்கும்.

பாம்புகள் கடிக்கையில், அது என்ன பாம்பு என்பதை அறிந்து அதற்கேற்ற விஷ முறிவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் பாம்புகளைப் பிடிப்பதற்கு கருவிகள் வந்துள்ளன. கையால் பாம்புகளைப் பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

நாகன், கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் போன்ற விஷமுள்ள பாம்புகள் இருக்கின்றன. இவற்றில்  கண்ணாடி விரியன் அதிகமாகத் தென்படுவதாகக் கூறுகின்றனர்.  கண்ணாடி விரியன் ஆள்கள் முன்னே வர வர பின்வாங்கும். எந்தளவு பின்வாங்குகிறதோ, அந்தளவு வேகமாக பாயும். கண்ணாடி விரியன் பின்வாங்குவதைப் பார்த்தால், ஐந்தடி ஆறடி தள்ளி நிற்க வேண்டும்.

பாம்புகளைப் பொறுத்தவரையில் அவை மனிதர்களின் சகவாசம் இல்லாமலே வாழ விரும்புகிறது. மனிதர்களுக்கு அருகில் இருக்க பாம்புகள் விரும்புவதில்லை. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக மனிதர்களின் வாழ்விடங்களை நோக்கி வர வேண்டியதாகிறது. பாம்புகளை கையாளத் தெரியாதவர்கள் பாம்புகளை நசுக்கும்போது, அது பயப்படும். அப்போது கடுமையாகத் தாக்கும் அல்லது கடிக்கும்.

பாம்புகளுக்கான இனப்பெருக்க காலத்தில் ஒரு வித திரவத்தை கசிய விட்டுக்கொண்டே இருக்கும். அவை துணையைத் தேடி வரும்போது அடித்து விடுவோம். அது தன்னுடைய உடலில் இருந்த இனப்பெருக்க திரவத்தை எங்கே அடித்தோமோ அங்கேயே கசிய விட்டுவிடும். இந்த வாசம் மற்றொரு பாம்புக்குச் சென்று, அந்தப் பாம்பு அங்கே வரும். இதை பழிவாங்க பாம்பு வருகிறது என நினைத்துக் கொள்கிறோம்.

கறையான் புற்றில் பாம்பிருப்பதாகக் கருதி, பலர் பால் ஊற்றுவார்கள். பாம்புக்கு பால் உணவல்ல. கறையான் புற்று பாம்புக்கான வாழ்விடமும் அல்ல. பாம்பு எப்போதாவது நீர் அருந்தும் பழக்கமுடையது.


பாம்பு மகுடிக்கு ஆடுவதாக கூறுவார்கள். பாம்புக்கு காதுகள் இல்லை. காதுகள் இல்லாதபோது இசை எப்படி கேட்கும். மகுடி ஊதுபவரை கவனித்து அதற்கேற்றாற்போல ஆடுமே தவிர, அவை இசைக்கு ஆடுவதில்லை. பாம்புகள் அதிர்வுகள் மூலமாகவே அதை  உணர்கிறது. 

நல்ல பார்வை பாம்புகளுக்கு கிடையாது. இரட்டை நாக்கால் காற்றில் வருகிற வாசத்தை வைத்து தன் இரையை பாம்புகள் தேடிக்கொள்ளும். எனவே, பாம்புகளிடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' என்று தெரிவித்தார்.