Monday, April 27, 2020

This is the Most Iconic Image of the Australian Wildfires

அந்த ஆஸ்திரேலியத்தீ

முன்னையிட்ட தீயோ 
பின்னையிட்ட தீயோ 
நாற்புறமும் எரியுது 
அந்த கானகத்துத்தீ 

 உலகின் இன்னொரு எழவுசெய்தி
தீ நாக்குளால் தீத்தண்டோராவானது 

கந்தக புகைகுன்றுகளாய்
கதறி ஓலமிடும்
இதுவரை பச்சை மரங்களால்
வயிறு புடைத்திருந்த அந்த வனம்
இன்று
விலங்குச்சாம்பல் மேடுகளால் 
மேலும் வீங்கி வெடித்து கிடக்கிறது

தீச்சூட்டில் கொதித்த    
வெப்பநில இடுக்குகளில் 
குதிக்கும் கங்காருகளின் 
கதறல் மட்டுமல்ல 
கானகத்தின் மொத்த சத்தமும் 
உறைந்து இறுகி இறுதியானது 

வானெங்கும்
கருகிய மனிதமூளை மேகங்கள் 
தங்கள் வலிந்த இயலாமையை 
வட்டமடித்து பாருக்கு பறைகிறது 
இன்னுமொரு செய்தியாய் 
அதை நாம் 
கவனித்தோ! அல்லாமலோ! 
நகர்ந்து செல்கிறோம்!

வனச்சவ உடற்குவியல் மேட்டில் 
வெற்றிக்குறிக்கொடி ஏந்தி 
உட்கார்ந்து சிரிக்கிறது 
உலக வணிகப்பொருளாதாரம் 
அக்கொடி ஏந்தும் செய்தி 
என்ன தெரியுமா?

இன்னும் இருக்கிறது!
என்ன செய்வீரென்று! 

இது நெருப்பூட்டும் விஞ்ஞானத்துக்கும்   
அணைக்கும் அறிவியலுக்கும் 
சவால் இடரா?
அல்லது 
மனிதம் விற்கும் 
வணிகச்சூது வேடிக்கையா?
எதுவோ? ஏதுவோ?

ஒரு தேனீயின் மரணம் 
இயற்கையின் ஒரு விரல் இறப்பு 
என்று உணராத நாம் 
ஒரு வனத்தின் மரணம் 
இப்பிரபஞ்சத்தின் நுரையீரல் சாவென்று 
எப்போது உணர்வோம்?

முதுகில் முப்பொழுதும் 
ஆக்சிஜன் அண்டாக்களை கட்டிக்கொண்டே 
காசு சம்பாதிப்போமே!
அப்போதா?
எங்கு சென்றாலும் 
சாதி இந்தியன் இப்படித்தான் 

Untouchable: Modern Nepal's Shame & An Untouchable Woman's ...

ஜென்டில்மேன் படம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பொய்ப் பிரச்சாரத்தை மிக வெளிப்படையாக முன் வைத்த படம். இப்படத்தின் கதையில் முதலில் பிராமண இளைஞனே கத்தியைத் தூக்குவதாக இருந்ததாம். அது வேண்டாம் என ஆலோசனை வழங்கியிருக்கிறார் கமல். ( 23-10-95 அன்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கமல்ஹாசன்.) பிராமணர்கள் கத்தியைத் தூக்கினார்களா இல்லையா என்பதற்கு வரலாறே சான்றாக நிற்கிறது. அதையும் நம்ப முடியாமல் போனால் மனு சாஸ்திரம் எழுத்து வடிவில் சாட்சியாய் நிற்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றைப் பற்றி ஒடுக்கியவர்களின் வழி வந்தவர்கள் சாட்சியம் கூற முடியுமா? அல்லது ஒடுக்கப்பட்டவர்கள் சாட்சியம் கூற முடியுமா? 

மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் வாங்கிய ஒரு பிராமண மாணவனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்கிற பச்சைப் பொய்யை சொல்லிய படம் ' ஜென்டில்மேன்'. மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின்  பட்டியலில் தன் பெயரைக் காணாமல் அதிர்ந்து போகிறான் அந்த ( மீசை வழித்த வெள்ளைத் தோல் ) பிராமண மாணவன். அப்போது அவளுக்குப் பின்னால் தன் பெயர் பட்டியலில் இருக்கக்கண்டு குதியாட்டம் போடுகிறான் ஒரு கறுப்புநிற மாணவன். இதன் அர்த்தம் என்ன? மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றாலும் கறுப்பு நிற 
அ-பிராமணர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். மாவட்டத்திலேயே முதலாவதாக வந்தாலும் பிராமணர்களுக்கு அங்கே இடமில்லை. 

இதை உண்மை என்று எடுத்துக்கொண்டால் இன்றைக்குச் சமூகத்தில் எங்கே பார்த்தாலும் சூத்திரர்களும், தலித்துகளும்தானே இடம் பெற்றிருக்க வேண்டும்? ஆனால் நிலைமை அப்படியில்லையே? எத்தனை பிராமணர்கள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள்? எத்தனை பிராமணக் குழந்தைகள் நான் முன்னர் குறிப்பிட்ட குழந்தைத் தொழிலாளர்களாக செத்துக்கொண்டிருக்கிறார்கள்? எத்தனை பிராமணர்கள் மனித மலத்தை அள்ளித் தூக்கிச் சுமக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்? எத்தனை பிராமணர்கள் கோவணத்தை மட்டும் கட்டிக்கொண்டு பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்திகரிப்பு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்? கல்லுடைக்கும் தொழிலாளி யாகவோ, விவசாயக் கூலியாகவோ, செருப்பு தைக்கும் தொழிலாளியாகவோ எத்தனை பிராமணர்கள் இருக்கிறார்கள்? ஒருவரைக் கூட பார்க்க முடியவில்லையே? ஆனால் இதற்கு மாறாக ஒரு  Indian institute of technology-ஐ எடுத்துக்கொண்டால், அங்கே முக்கால்வாசிப் பேர் பிராமணர்களாகத்தானே இருக்கிறார்கள்? இவ்வளவு இட ஒதுக்கீட்டுக்குப் பிறகும் எல்லா வங்கிகளிலும் பெரும்பாலும் பிராமணர்களாகத்தானே இருக்கிறார்கள்? அது எப்படி சாத்தியமாகிறது? 

ஆக, மலம் அள்ளுகிறவன் மலம் அள்ளுகிறவனாகவே இருக்கட்டும். பிராமணன் ஐஐடி-யில் படித்து அமெரிக்க வேலைக்குச் செல்லட்டும் என்பதுதானே கமல், ஷங்கர், பாலகுமாரன் போன்றவர்களின் வாதம்? " நான் சொல்லிய மாற்றத்தை ஷங்கர் ஜென்டில்மேன் இல் செய்துவிட்டார் என்று பிறகு தெரிந்து கொண்டேன்" என்கிறார் கமல். அதாவது படத்தின் கதாநாயகன், பிராமணனைப் போல் காட்டப்பட்டாலும், கடைசியில் அவன் சூத்திரன்தான் என்று தெரிகிறது. " இட ஒதுக்கீட்டை ஒரு பிராமணன் எதிர்ப்பதை விட 
அ-பிராமணன் எதிர்ப்பதுதான் சரி" என்பதுதான் கமல் சொல்லி, ஷங்கர் செய்திருக்கும் மாற்றம்! சூத்திரனின் கையை எடுத்து அவன் கையாலேயே அவன் கண்ணைக் குத்திக்கொள்ள செய்வதுதான் சரி என்று மாற்றம் சொல்லியிருக்கிறார் கமல். 

அரசுதான் மக்களை ஒடுக்கிக்கொண்டிருக்கிறது; எதிர்த்துக் கேட்பவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறது; அரசாங்கத்தில் இருப்பவர்கள்தான் கோடி கோடியாக கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்கள். அரசு நிறுவனங்களும் கலாச்சாரவாதிகளும் இதற்குத் துணை போகின்றன(ர்). உண்மையில் இதுதான் பயங்கரவாதம். இந்த பயங்கரவாதத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஒருவன் தனது எழுதுகோலையோ அல்லது ஆயுதத்தையோ எடுத்தால் அவனை 'பயங்கரவாதி' என்றும் 'பொறுக்கி' என்றும் சொன்னால் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலைப் பேசுகிறார்கள் என்றுதான் அர்த்தமாகும். 

- 1995 ஆம் ஆண்டு குருதிப்புனல் படத்திற்காக சாரு எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி இது. 25 ஆண்டுகளுக்கு முன்னராகவே எழுதப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும் ! 

இதோடு சேர்த்து சாருவின் 'ராஸ லீலா' நாவலிலிருந்து ஒரு பகுதியை மட்டும் குறிப்பிடுகிறேன். நாவலில் வரும் பிரதான பாத்திரமான கண்ணாயிரம் பெருமாள் ஃபிரான்ஸ் போகிறார். அங்கு நாய் வளர்ப்பு பற்றி பார்க்கிறார். அதனைக் குறித்து விவரிக்கும் பகுதியில் இவ்வாறு குறிப்பிடுகிறார். 

" வாக்கிங் போகும்போது ரோட்டோரங்களில் அவை கழிக்கும் மலஜலத்தைத் துப்புரவுப் பணியாளர் யாரும் விளக்குமாற்றை வைத்துப் பெருக்கிக்கொண்டிருப்பதில்லை. ஒரு பெரிய எந்திரம் ராட்சச பிரஷ் ஒன்றின் மூலம் துடைத்து, காற்றின் மூலமாகக் குப்பைகளை உள்ளிழுக்கிறது. பின்னர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து சாலைகளை மிகச் சுத்தமாகக் குளிப்பாட்டி விடுகிறது. ஒரே ஒருவர்தான் இந்த லாரி வடிவ எந்திரத்தை இயக்குகிறார். Manhole  எதுவும் இல்லை. யாரும் குவாட்டர் பாட்டில் ரம் அடித்துவிட்டு அதற்குள் கோமணத்துடன் இறங்கி உடல் முழுக்க பீயும் சாக்கடையும் ஒழுக சுத்தம் செய்வதில்லை. 



எட்வின் தோழி ஒருத்தி - ஃபிரெஞ்ச்சுக்காரி - இந்தியா பற்றிப் பெருமாளிடம் புகழோ புகழ் என்று புகழ்ந்துகொண்டிருந்தாள். பெருமாள் அவளுக்கு மயிலாப்பூர் மாமி என்று பட்டப் பெயர் வைத்திருந்தான். இவளைப் போலவே இந்தியாவைப் புகழும் பெரும் கூட்டம் ஒன்று ஐரோப்பாவில் அலைந்து கொண்டிருக்கிறது. இவர்களையெல்லாம் கொஞ்ச நாட்களாவது இந்தியாவிலுள்ள Man-holeகளில் இறக்கி விட வேண்டும் என்று நினைத்துக்கொள்வான் பெருமாள்."
அவரே அறிஞர் அண்ணா 

பேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது. 

மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.

Arignar Anna and Rajeswari Kannan's son — On Mother's Day! – Shankara!
போப்பாண்டவர் சொன்னார், அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!  தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

என்ன கேட்டாலும் தருவீர்களா..என்று கேட்டார் அண்ணா.  கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர். 

போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும் 
போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.

உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டார் அண்ணா. 

சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.

போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். 

டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார். 

ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே என்று கேட்டார்.

அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

உடைந்து போன ரானடே, நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான் என்றார். அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு. 

போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா.


காதலால் கசிந்துருக்கும் வடிவேலு 

நன்றி: விகடன் 

நடந்தா ஊர்வலம், நின்னா கலவரம்'னு திரிஞ்ச பயதேன். இருந்தாலும் பாறையிலும் சும்மா கும்முனு பூ பூத்துரும்ல. அப்பிடி நமக்குள்ளயும் லவ்ஸு எட்டிப்பாத்த காலம் ஒண்ணு இருக்குண்ணே..."

`இளம் வயதுக் காதல்' என்றவுடன் நெகிழ்ச்சி கலந்து ஒரு `எமோஷனல் பயாஸ்கோப்' காட்டுவார் என நினைத்தால், அதிலும் ரவுண்டு கட்டி ரவுசு செய்த கதையைச் சொல்லி சிரிக்கவைக்கிறார் வடிவேலு. `என்னதான்டா எல்லாரும் ஈஸியா அடிச்சிடுறீங்க!' என்ற வைகைப்புயலின் டயலாக்கே ஒரு கதையானால் எப்படி இருக்கும்? இப்படித்தான்...

#VikatanOriginals-ல் வடிவேலுவின் `கல கல' காதல் அத்தியாயம்... 20/02/2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...

``ஆத்தி... இந்தப் பாட்டக் கேட்டா இப்பவும் மனசு தட்டாமால சுத்தும்ணே!
`ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
பொன்மாலை மயக்கம்'-னு 
டொக்டொக் டொக்டொக்னு குருத வண்டியில வாத்யாரு, சரோசாக்கவா ஒரு சைஸா அணச்சுக்கிட்டே பாடுவாரு. அவருக்கெல்லாம் அவங்க ஆத்தா கண்ணு மையி வைக்கறதுக்குப் பதிலா மச்சத்த அரச்சிப் பூசிருக்கும் போல. நாமெல்லாம் நெறமே கண்ணு மையி கலருதானே!
`நடந்தா ஊர்வலம், நின்னா கலவரம்'னு திரிஞ்ச பயதேன். இருந்தாலும் பாறையிலும் சும்மா கும்முனு பூ பூத்துரும்ல. அப்பிடி நமக்குள்ளயும் லவ்ஸு எட்டிப்பாத்த காலம் ஒண்ணு இருக்குண்ணே.
அந்தி சாஞ்ச வாக்குல அலங்கரிச்சிக்கிட்டு கொமரிக கும்மிக்கு நாங்க கெளம்புவோம். தலையில குருவிக்கூடு கட்டுன மாதிரி அம்சமா தண்ணி தெளிச்சு முடிய ஒதுக்கி, இல்லாத மீசய திருவி முறுக்கி, பப்பளானு பகுடரு அப்பி, பரிவட்டங் கட்டுன எளவட்டம் கெணக்கா கெளம்பிருவோம். தேருக்குப் பதிலா சைக்கிளு... அம்புட்டுதேன்.

தெப்பக் கொளம், மீனாச்சியம்மங் கோயிலுனு எங்கனயாவது பட்டறயப் போட்டு, கொளத்து மீனுகளுக்குப் பொறியாட்டமா கொமரிகளுக்கு லுக்குகள வீசுவோம். எம்.ஜி.ஆரு ஸ்டைல்ல ஒதட்டக் கடிச்சுக் கண்ணச் சிமிட்டி, வெரலச் சொடுக்கி ஃபுல் ரொமான்ஸு குடுப்போம். ஏரியா விட்டு ஏரியா போயி எளமத் திருவிழா நடத்துவோம். அப்பிடி ஒரு கொழாயடிக் காதலச் சொல்லட்டுமா!
கொழாயடியில தண்ணி புடிக்க கொடந்தூக்கி கொமரிக வாறதும் போறதுமா சாயந்தரமான சாமி தரிசனந்தேன். நாங்க எளந்தாரிக அம்புட்டுப் பயகளும் பளிச்சுனு சட்ட, துவச்சி வெச்ச அப்பன் வேட்டியக் கட்டிகிட்டு திருட்டு மொசலாட்டமா மூஞ்சத் தூக்கின மேனிக்கு ஒலாத்தி சிக்னல்கள வீசுவோம். அப்பிடியே அங்கிட்டு ஓரமா ஒரு கட்டச் சொவத்துல எடம்புடிச்சு `ஆஹா... மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்?'னு ரவுசா பாட்டுப்பாடி அருளேத்துவோம்.

ஏழெட்டு கொடந் தூக்கற கொமரிக, எங்க அளும்புக தாங்காம ஒத்தக் கொடத்தோட வீட்ல இருந்துக்கிருவாக. ஒரு பொண்ணு இருந்துச்சுண்ணே. சளைக்காம இருபது முப்பது கொடந் தூக்கும். கொடத்த அப்பிடி இடுப்புல வெச்சி கழுத்த ஒரு வெட்டு வெட்டி எங்க அம்புட்டுப் பயகளுக்கும் ஒரு லுக்க வீசும்ணே. பார்ட்டிக்கு அப்படியே `வாம்மா... மின்னல்' கண்ணு! அது என்னா ஒரு பார்வையோ, எவன் எதுக்கப் பாத்தாலும் `ஆத்தாடீ அது நம்மளத்தேன் பாக்குது'னு மனசுல மத்தாப்பு கொளுத்திருவாய்ங்க. நானெல்லாம் கொஞ்சம் ஓவரா வாணவேடிக்கையே வுட்டேன்.
எவனும் எவனுக்குஞ் சொல்லல. எல்லாரும் காதலாயிட்டாங்க. கூட்டணியே கெடையாது.. ஆளாளுக்கு சுயேச்சையா மனு தாக்கல் பண்ணத் தயாராயிட்டாங்க. `செம தாக்கல்' இருக்குனு எவனுக்குந் தெரியல. அவனவனுந் தனித்தனியா அந்தப் புள்ளைய ஃபாலோ பண்ணிக் காதலச் சொல்லிட்டிருக்காய்ங்க.

அதுவும் காதல் பொயலுதேன்! அம்புட்டுப் பயகளுக்கும் ரம்பா லுக்கைக் குடுத்து `ரோசிச்சுச் சொல்றேன்'னு ஒரே பஞ்ச் டயலாக்கச் சொல்லிருக்கு. நமக்கு அடிதடி சடுகுடுன்னாதேன் தெகிரியம் ஊத்தெடுக்கும். இங்கிலீஷு மாதிரியே இந்த லவ்ஸ்லயும் நாம கொஞ்சம் வீக்குதேன். லுக் விடறதோட சரி. நா மட்டும் காதலச் சொல்லல. ஆத்தி... அதுக்கெல்லாம் படக்குனு தைரியம் வர்லே!

ஒரு நா வழக்கம் போல கட்டச் சொவத்துல டாப்பைப் போட்ருக்கோம். அந்தப் புள்ள வந்துச்சு. மொத கொடந் தூக்கிட்டு ஒரு நமுட்டுச் சிரிப்போட அங்கிட்டு சந்துப்பக்கம் திரும்பி கைய ஆட்டி சிக்னல் கொடுத்துட்டு விடுவிடுனு போய்க்கேயிருக்கு. அம்புட்டுதேன்... சந்துக்குள்ள இருந்து அவனவன் அப்பன், ஆத்தாளை எல்லாம் கெட்ட வார்த்தையிலே திட்டிக்கிட்டே பத்துப் பதினஞ்சி பேரு! சுதாரிக்கறதுக்குள்ள சுனாமியா சுத்தி வளச்சி தவிலடிக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க. `பட்டாளத்தாஞ் சொத்துலயே கண்ணு வெக்கப் பாக்குறீங்களாடா'னு கேட்டுக்கிட்டே உருட்டியெடுக்கறாய்ங்க.
ஆளாளுக்குக் கெடச்ச அடிய வாங்கிட்டு தெறிச்சி ஓடறாய்ங்க. நானெல்லாம் அப்பாவிண்ணே. பாத்த பாவத்துக்கே பத்துப் போடற அளவுக்கு மாத்து மாத்துன்னு மாத்திட்டாய்ங்க. எவனும் ஒரு வாரத்துக்கு வெளிய தலயக் காட்டாம தல மறைவு. அப்புறந்தேன் தெரிஞ்சது அந்தப் புள்ளையோட மாமங்காரன் பட்டாளத்துல இருக்கானாம். லவ்வுக்காக மிலிட்டரியே தாக்குன ஆளுங்கண்ணே நாங்க!


அதெல்லாம் வெடலப் பருவத்துல! அப்புறம் நம்ம வாழ்க்கையில இந்த லவ்வு கிவ்வெல்லாம் வரல. பசியும் பட்டினியுமாக் கெடந்து பொழப்புக்குப் போராடவே பொழுது சரியா இருந்துச்சு.
இப்பெல்லாம் ஆணும் பெண்ணும் பேசறது பழகறது அதிசயமில்லண்ணே! அம்புட்டும் ஜோடி போட்டு பைக்குல டர்ர்ர்ர்ருனு போய்க்கே இருக்குதுக. ஒருத்தருக்கொருத்தர் நல்லாப் பழகி புரிஞ்சிக்கிறாக. காதல், நட்புனு தனித்தனியாப் பிரிச்சுப் பாக்குறாக. நாமள்லாம் ஒரு பார்வ பாத்ததுக்கே புத்தூரு கட்டுப் போட்டுட்டு அலைஞ்சோமேடானு பொறாமையா இருக்குண்ணே.


என்னக் கேட்டா கண்ணாலத்துக்கு அப்புறந்தேன் நெசமான காதலே ஆரம்பிக்குது. சந்தோஷம், துக்கம்னு எல்லாத்தையும் பாத்து ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா அன்பு செலுத்துறது இருக்கே... அதேன் காதலு!
ஒண்ணா மண்ணா இருந்து ஒரு புள்ளய பெத்து, அதுக்கு அப்பப்போ ஈரத் துணிய மாத்தினு ஒரு வாழ்க்கை வரும்ல. அப்ப நடுச்சாமத்துல புள்ள திடீர்னு அழும்போது `யாத்தா... நீ ஒறங்காத்தா'னு பொஞ்சாதிட்ட சொல்லிட்டு, கண்ணு முழிச்சி புள்ளயத் தூக்குறப்போ தூக்கக் கலக்கத்துல அந்தம்மா கண்ணுல ஒரு சின்னச் சிரிப்பு தெரியும் பாருண்ணே... அதேன் காதலு!

வடிவேலு
ஸ்லீப்பர் செல் ஜோசப் 
கதை சொல்லும் இந்திய யோசேப்பு 

ஏசு கிறிஸ்து ஒரு கற்பனை! 
அப்படி ஒருவர் இல்லை! இல்லவே இல்லை!
-ஜோசப் இடமருகு

நான் ஜோசப் இடமருகு பேசுகிறேன். இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவரும். உலக நாத்திக சங்கத்தின் துணைத் தலைவருமான ஜோசப் இடமருகுதான் பேசுகிறேன்.1934 செப்டம்பர் 7ஆம் தேதி கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் பிறந்தேன்.

இளமைக்காலத்தில் கிறித்துவைத் தெய்வமாக நம்பி. அம்மத நூல்கள் அனைத்தையும் தீவிரமாகப் படித்தேன். வயது வளர்ந்தது, எனது பகுத்தறிவு வலிமை பெற்றது. விமர்சன கண்ணோட்டத்தோடு மூடநம்பிக்கையை ஓரம்கட்டி வைத்துவிட்டு, பைபிளைப் படிக்கத் தொடங்கிய பிறகுதான் அதில் உள்ள குறைபாடுகள் தெரியவந்தன.

19ஆவது வயதில் எனது ஆராய்ச்சிப்படி கிறித்து ஒரு மனிதனாக வேண்டுமானால் இருக்கலாம் நிச்சயம் கடவுளாக  இருக்க வாய்ப்பில்லை என்று எழுதினேன்.இது கிறித்துவர்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியது.நான் அஞ்சவில்லை. என்னைக் கிறித்துவ மதத்திலிருந்து நீக்கினர். நான் மகிழ்ச்சியடைந்தேன்.

அதன்பிறகுதான் எனது ஆராய்ச்சி தீவிரமானது. ஏசுவினுடைய வாழ்க்கையில் நேரடித் தொடர்புடைய இடங்கள நேரில் சென்று காணவேண்டும் என்ற ஆசைபிறந்தது பாலஸ்தீனத்திற்குச் சென்றேன் அங்கு நான் கண்ட காட்சிகள் கிறித்துவம் என்பது ஒரு ஏமாற்று வேலை என்பதை  எனக்குத் தெளிவாக எடுத்துக்காட்டியது. உதாரணமாக ஏசு சுமந்த சிலுவையின் துண்டுகள் என்று மரத்துண்டுகளை        விற்றுக்கொண்டிருந்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரே ஒரு சிலுவையின் துண்டுகளை விற்றுக்                          கொண்டிருக்கிறீர்களே, அது இன்னும் விற்றுத் தீரவில்லையா? அது முழுமையாக விற்றுத் தீருவதற்கு இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும்? என்று வினவினேன்.

“தங்கள் பிழைப்பில் மண்ணைப்போட இந்தியாவில் இருந்து ஒருவன் வந்துவிட்டான்” எனக்கருதி என்னைச் சூழ்ந்து கொண்டு கிறித்துவர்கள் தாக்க முற்பட்டனர்.வந்த இடத்தில் அறிவு பூர்வமாகப் பேசி வம்பில் மாட்டிக் கொண்டு விட்டோமோ? என்று ஒரு கனம் சிந்தித்து அமைதியானேன்.நூறுடாலரும் இருநூறு டாலரும் கொடுத்து அதனைச் சிலர் வாங்கிக்கொண்டு போன போதுதான் எனக்குத்தெரிந்து கிறித்துவம் முட்டாள்களையும் மூடநம்பிக்கையாளர்களையும் நம்பித்தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறதென்று! கேரளத்தில் தாமஸின் மண்டை ஓடு இதுதான் என்று ஆறு ஏழு இடங்களில் வைத்து வணங்குவதைப் பார்த்துள்ளேன். கிறித்துவ மூடத்தனம் உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன் ஏசுவைச் சிலுவையில் அறைந்த கல்வாரி மலை கல்லும், முள்ளும், பாறைகளும் நிறைந்த மாபெரும் மலை என்று கிறித்துவ பாதிரிமார்கள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு வளர்ந்த எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. சுமார் 15அடி உயரத்திற்குமேல் இல்லாத ஒரு மேடை. அதுவும் ஒரு ஜெப ஆலயத்திற்கு உள்ளேயே இருக்கிறது. இதனைத்தான் அவர்கள் மாபெரும் கல்வாரி மலை என்று கதையளந்து கொண்டிருந்தனர்.

எவ்வளவு தூரம் நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள் இந்தப் பாதிரிகள் என்று எண்ணிப் பார்த்தேன் எனக்கு கோபம் கோபமாகவந்தது ஏசுவின் வாழ்க்கையில் நடந்ததாகப் பாதிரியார்கள் கூறும் சமபவங்கள், நடந்த இடங்கள் எவை எவை என்று தேடித்தேடிச் சென்று விசாரித்தேன். அவர்கள் காட்டிய இடங்களும் சொன்ன கதைகளும் கொஞ்சம் கூட அறிவிக்குப் பொறுந்துவதாக இல்லை எதையாவது சொல்லி பணத்தைப் பிடுங்குவதிலேயே குறியாக இருந்த அங்குள்ள பாதிரியார்களின் பணத்தாசை       என்னை மிகவும் ஆச்சிரியப்பட வைத்தது.

கிறித்துவப் பாதிரியார்களை விட்டுவிட்டுச் சாதாரண மனிதர்களிடம் சென்று பேசினேன். அவர்களில் பலர் பாதிரியார்களின் ஒழுக்கக்குறைவுகளைப் பற்றி கதைகதையாகக் கூறினர். உள்ளூர் மக்களுக்குக் கிறித்துவத்தின் மீது நம்பிக்கையோ ஈடுபாடோ அவ்வளவாக இல்லை என்பதை உணர்ந்தேன். அவர்களில் பலர் ஏசுவின் கதையை உண்மை என்று ஏற்க மறுக்கின்றனர்.

உள்ளூரில் சலித்துப் போன சரக்கைப் “புதியது” எனக் கூறி மற்ற நாடுகளில் விற்பனைச் செய்ய கிறித்துவம் முயலுவதை அறிந்தேன். உள்ளூர் மக்களே ஒப்புக் கொள்ள மறுக்கும் ஒரு கதை எப்படி உண்மையாக இருக்கும் என்று என் மனம் சந்தேகம் கொண்டது அதன் விளைவாக விரிவான ஆராய்ச்சியில் இறங்கினேன் கிறித்துவம் தோன்றுவதற்கு முன்பிருந்தே உலகில் நிலவிவரும் பழம்பெரும் மதங்கள் பலவற்றின் நூல்களைத் தேடிப்பிடித்துப் படித்தேன். ஒரு உண்மை விளங்கியது.ஏசு கிறிஸ்து குறித்து கூறப்படும் செய்திகள் அனைத்தும் கற்பனையானவை. அப்படி ஒருவர் பிறக்கவே இல்லை.உலகை மதரீதியாக ஆதிக்கம் செய்ய நினைத்த ஒரு கூட்டம் இந்துமதம் மற்றும் புத்தமதம் ஆகியவற்றிலிருந்து திருடப்பட்ட கருத்துகளைக் கொண்டு கற்பனையாய் படைத்து உலவவிட்ட ஒரு கதாபாத்திரம்தான் ஏசுகிறிஸ்து என்பது மிகத் தெளிவாக தெரிந்தது. அதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கே தருகிறேன்.

கிருஷ்ணனின் கதையிலிருந்துதான் கிறித்துவின் கதை தயாரிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணனிலிருந்து தோன்றிய கிறிஸ்து 
கிருஷ்ணன் மகாபாரதக் கதையில் ஒரு பாத்திரமாக வரக்கூடியவர். மகாபாரதம் நடந்து முடிந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கிருஷ்ணர் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர் இயேசு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எனவே, கிருஷ்ணனின் கதையிலிருந்து கிறித்துவின் கதை வந்தது என்பதை உறுதியாக நம்பலாம். இதோ அவற்றிற்கான ஆதாரங்கள்.

கிருஷ்ணன் யது வம்சத்தில் பிறந்தார். இதை கொஞ்சம் மாற்றி கிறிஸ்து யூத வம்சத்தில் பிறந்தார் என்றனர் கிருஷ்ணன் பிறப்பதற்கு முன்பே அசரீரி அறிவித்தது.அதைக் கொஞ்சம் கூட மாற்றாமல் கிறிஸ்துவின் வருகையை அசரீரி அறிவித்தது என்று எழுதி வைத்தார்கள் கிருஷ்ணன் அரச குடும்பத்தில் பிறந்தார் அதனையே அச்சு மாறாமல் தாவீது என்னும் அரச வம்சத்தில் பிறந்ததாகக் கூறிக் கொண்டனர்.

தேவகி கணவனுடன் சேராமலேயே கர்ப்பம் தரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. மேரியும் அப்படித்தான் கர்ப்பம் தரித்தாள் என்று கதை எழுதினர்.

கிருஷ்ணன் பிறக்கும் போது நட்சத்திரம் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. ஏசு பிறந்தபோதும் நட்சத்திரம் தோன்றியதாக தங்கள் கதையைப் பலப்படுத்தினர்.கிருஷ்ணன் பிறக்கும் போது தேவலோகம் கொண்டாடியது. ஏசு பிறந்தபோதும் அப்படித்தான் தேவலோகம் மகிழ்ச்சியுற்றது என்று எழுதிவைத்தனர்.

குழந்தையாகிய கிருஷ்ணனை மாட்டு இடையர்கள் கண்டுகளித்ததாகப் புரயணங்களில் வருகிறது. அதனைக் கொஞ்சம் மாற்றி ஏசுவை ஆட்டு இடையர்கள் தரிசித்தனர் என்று கூறிக் கொண்டனர் குழந்தை கிருஷ்ணனை நாரதர் உள்ளிட்ட முனிவர்கள் கண்டு வணங்கியதாகப் புராணம் கூறுகிறது. குழந்தை ஏசுவையும் கிழக்கிலிருந்து வந்த அறிஞர்கள் கண்டு வணங்கியதாகப் பைபிளில் எழுதி வைத்தனர் கிருஷ்ணனால்தனக்கு ஆபத்து என்று கம்சன் கருதினான், அதையே கொஞ்சம் மாற்றி கிறித்துவால் தனக்கு ஆபத்து என்று “ஏரோது” மன்னன் கருதியதாக எழுதிக் கொண்டனர் கிருஷ்ணனை யமுனை நதிக்கு அப்பால் கொண்டுபோய் ஆயர்பாடியில் தலைமறைவாக வளர்த்து வந்தனர். அதனைப் பின்பற்றி ஏசுவை எகிப்துக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வளர்த்து வந்ததாக கதைப்படுத்தினர்.
கிருஷ்ணனின் அவதாரத்தை அறிந்து இரண்டு வயதிற்குட்பட்ட எல்லா குழந்தைகளையும் கொல்வதற்குக் கம்சன் உத்தரவிட்டான் இதே போன்றதொரு உத்தரவை ஏசுவைத் தேடிய ஏரோது மன்னனும் இட்டதாகச் சொல்லி வைத்தனர்.கிருஷ்ணனுடைய தலமாகப் போற்றப்படுவது மதுரா. ஏசு வளர்க்கப்பட்டதாகக் கிறித்துவர்கள் கூறிக்கொள்ளும் ஊர் மதூரியா.
கிருஷ்ணனுடைய தாயார் தேவகிக்கு மாயாதேவி என்ற ஒரு பெயரும் உண்டு. ஏசுவினுடைய தாயார் மேரி என்றனர். மாயா-மேரி பெயர் ஒற்றுமை காண்க.

கிருஷ்ணனுடைய தாயாருக்கு நந்தரின் மனைவி தோழி. மேரிக்கும் ஒரு தோழியைத் தயார் செய்தனர் கிறித்துவர்கள்.கிருஷ்ணனுக்குப் பலராமன் அண்ணனாக இருந்ததைப் பார்த்து ஏசுவுக்கு அண்ணனாக யோவானைப் படைத்துக் கொண்டனர். கிருஷ்ணன் வாதத்தில் அறிஞர்களை வென்றதை அறிந்து ஏசுவும் மதகுருமார்களை வென்றதாக எழுதிவைத்தனர்.கிருஷ்ணன் காட்டிற்குச் சென்று தவம் இருந்ததைப் படித்துவிட்டு ஏசு பாலைவனத்திற்குச் சென்று தவம் இருந்ததாக எழுதினர்.இந்து மதத்தில் காணப்படும் மும்மூர்த்திகளில் இரண்டாவது மூர்த்தி விஷ்ணு. அதனை அப்படியே பின்பற்றி கிறித்துவத்தின் மும்மூர்த்தி  தத்துவத்தில் கிறித்துவை இரண்டாவதாக வைத்தனர்.

தர்மத்தை நிலைநாட்டி நல்லோர்களைப் பாதுகாக்க ஏற்பட்டது கிருஷ்ணாவதாரம். இதனை அப்படியே பின்பற்றி ஏசுவும் அதற்காகத்தான் தோன்றினார் என்று எழுதிவைக்கப் பட்டுள்ளது.கிருஷ்ணன் காளிங்கனான நாகத்தை அழித்ததாக வரலாறு. ஏசுவும் ஒரு நாகத்தை அழித்ததாகப் பைபிளில்   எழுதிவைத்தனர் கிருஷ்ணனை “பரமாத்மா” என்கிறது இந்துமதம். அதனை அப்படியே ஏற்று கிறிஸ்துவை பாவமற்றவர் என்கிறது கிறித்துவம். கிருஷ்ணன் நிறைவான மனிதனாகவும் தெய்வமாகவும் திகழழ்ந்தான் என்கிறது புராணம். ஏசுவும் அப்படித்தான் இருந்தார் என்று எழுதி வைக்கப்பட்டது.கிருஷ்ணன் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் என்பதைப் படித்துவிட்டு ஏசுவும் அவற்றைச் செய்ததாக எழுதி வைத்தனர்.

கிருஷ்ணன் முதன்முதலில் குஷ்டரோகியைக் குணப்படுத்தினார் என்கிறது இந்துமதம். ஏசுவும் அப்படித்தான் என்று எழுதிக் கொண்டது கிறித்துவ மதம். கிருஷ்ணன் இறந்தவர்களை உயிர் பெறச் செய்தார் என்று  இந்துமதம் கூறுகிறது ஏசுவும் அவ்வாறே செய்ததாக கிறித்துவர்கள் 
எழுதிவைத்தனர்.மரத்தின் மேல் படுத்திருந்த கிருஷ்ணனை வேடன் அம்பு எய்து கொன்றான் என்பது வரலாறு இதனைப் பார்த்து மரச்சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த கிறித்துவை ஒரு வீரன் ஈட்டியால்குத்தினான் என்கிறது கிறித்துவம் கிருஷ்ணன் முக்தி பெற்றபோது துர்நிமித்தங்கள் உண்டாயின சந்திரனில் கரியவட்டம் காணப்பட்டது. சூரியன் இருண்டு போனது. வானிலிருந்து நெருப்பும் சாம்பலும் மழைபோல் பொழிந்தது என்கிறது இந்துமதம்.

இதனை பின்பற்றி ஏசு இறந்த போதும் நாடு இருளில் மூழ்கியது. தேவாலயத்தின் திரைச்சீலை கிழிந்து தொங்கியது என்றும் எழுதி வைத்தனர்.

கிருஷ்ணனுடைய மரணத்திற்குப்பின் யாதவ வம்சம் அழிவுற்றது என்கிறது இந்துமதம் கிறித்துவின் காலத்திற்கு பின் யூத வம்சமும் அழிவைத் தான் சந்தித்தது என்று எழுதிவைத்தார்கள் கிறித்துவர்கள்.
கிருஷ்ணன் போர்க்களத்தில் உபதேசம் செய்தார். கொஞ்சம் மாற்றி மலைப்பிரதேசத்தில் ஏசு உபதேசம் செய்தார் என்று எழுதி வைத்தனர் கிறித்துவர்கள்.பதினாறு வயதான போது தனது போதனைகளை உலகெங்கும் பரப்புமாறு சீடர்களை அனுப்புகிறார் கிருஷ்ணன். இதனை அப்படியே பின்பற்றி ஏசுவும் தனது சீடர்களை அனுப்பியதாக எழுதி வைத்தனர் கிறித்துவர்கள்.இவ்வாறு கிருஷ்ணரின்  வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை யெல்லாம் இந்தியாவிலிருந்து வாணிகத்திற்காக வந்தவர்களிடம் தெளிவாகக் கேட்டு தெரிந்து கொண்டு அதனையே கொஞ்சம் கூட்டியும் குறைத்தும் எழுதித் தொகுத்தது தான் கிறித்துவின் கதை!

பௌத்தத்தை தழுவிய பைபிள்
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய புத்த, சமண நூல்கள் பல உன்னதமான கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கின. அவற்றை அப்படியே அபகரித்துக் கொண்டுதான் கிறித்துவம் வளர்ந்துள்ளது ஏசு போதித்ததாகக் கிறித்துவர்கள் கூறும் பல கருத்துகளின் மூலத்தை புத்தரிடம் காணலாம். லலிதாவிஸ்தாரா என்ற சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள புத்தமத நூலில் உள்ள கருத்துகளைத்தான் பைபிள் கருத்துகள் என்று காப்பியடித்து எழுதிக்கொண்டுள்ளனர் கிறித்துவர்கள்.
என்னை நம்பி விசுவாசம் செய்வோர் ஆனந்தம் அடைவர் ” என்பது தொடங்கி “அழிவை நேக்கிச் செல்லும் ஆடுகளைத் திசைதிருப்பும் ஞபானமுள்ள மேய்ப்பன் நான்” என்பதுவரை அனைத்தும் லலிதாவிஸ்தாராவில் இருந்து திருடப்பட்டவைதான்.புத்தர் தனது சீடர்களுக்கு அனைத்தையும் துறந்துவிட்டுவருமாறு அறிவுறுத்தியதைக் காப்பியடித்து ஏசு கூறியதாக எழுதிக் கொண்டனர்.ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு வழி காடட்டினால் இருவருமே குழியில் விழுவர் என்கிற கருத்து புத்த நூலில் உள்ளது. அதனை அப்படியே கிறித்துவர்கள் களவாடிக் கொண்டு பைபிளில் எழுதிக் வைத்தனர்.இப்படி பைபிளில் உள்ள எல்லா வசனங்களுக்கும் புத்தமத நூல்களில் இருந்து ஆதாரம் காட்ட முடியும். அதனை    விரிவாகக் கூறிப் படிப்போரைச் சலிப்படைய செய்திட நான் விரும்பவில்லை. ஆனால் வலுவான ஆதாரமாக விளங்கும் ஒரு கதையைப் பற்றி நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.

அந்தக்கதை இதோ புத்தகுரு ஒருவர் பொதுமக்களிடம் காணிக்கை கோருகிறார்.பணக்காரர்கள் அள்ளிக்கொடுத்தனர். ஒருவிதவை  இரண்டு நாணயங்களை மட்டும் கொடுத்தார்.அப்போது குரு “எல்லோரும் தனக்குத் தேவையானதை வைத்துக் கொண்டு மீதியைத் தானமாகக் கொடுத்தனர்.ஆனால் இந்த விதவைப் பெண்மனியோ தனக்கென்று எதையுமே வைத்துக் கொள்ளாமல் தன்னிடமிருந்த இரண்டு நாணயங்களையும் கொடுத்து விட்டார். எனவே, இவர் கொடுத்தது தான் மற்றெல்லாவற்றையும் விட மேலானது.” என்று கூறி பாராட்டினார். இந்தக் கதையை அப்படியே திருடி பைபிளில் சேர்த்துவிட்டனர். “புத்தகுரு” என்பதற்குப் பதிலாக “ஏசு” என்று மாற்றி போட்டு எழுதிவைத்துக் கொண்டனர். புத்த நூலில் இந்தக் கதையை படித்துவிட்டு இதே கதையை அச்சுமாறாமல் பைபிளில் படிக்க நேரும் யாவரும் கிறித்துவர்களின் கதைத் திருட்டை எளிதாக அறியலாம்.

இதையெல்லாம் யார் ஆராய்ச்சி  செய்து  கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் வார்த்தைகளைக்கூட மாற்றாமல் அப்படியே எடுத்துப் போட்டு “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்று உளறிய முட்டாளைப் போல் கிறித்துவர்கள் மாட்டிக் கொண்டனர்.

டிசம்பர் 25 பிறத்தல், 3ஆம் நாள் உயிர்த்தெழுதல், 12 சீடர்கள்
டிசம்பர் 25ல் பிறந்தது, 3ஆம் நாள் உயிர்த்தெழுந்தது, 12 சீடர்கள், ஆகிய அனைத்தும் ஏற்கனவே பலநாட்டுக் கதைகளில் உள்ள கற்பனைச் செய்திகள் தான். அதனை அப்படியே களவாடிக் கற்பனைக் கதாபாத்திரமான ஏசுவுக்குப் பொருத்திவிட்டனர் இதோ, கிறித்துவத்திற்கு முன்னாள் உள்ள பழைய கதைகளில் உள்ள ஆதாரங்கள்.கிரேக்க தெய்வம் ஹர்குலிஸ் இறந்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக ஒரு கதை உள்ளது எகிப்தின் ஒஸிரிஸ் தெய்வம் டிசம்பர் 25ல் பிறந்து வெள்ளிக் கிழமையில் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததாகவும் ஒரு கதை உண்டு.டயோனியஸஸ் என்ற கடவுள் டிசம்பர் 25ல் பிறந்து துன்பப்பட்டு இறந்து பிறகு மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததாகவும் அவருக்கு 12 சீடர்கள் இருந்ததாகவும் ஒரு கதை காணப்படுகிறது ரோமாபுரியில் மித்ரா என்னும் தெய்வம் ஒரு கன்னியின் வயிற்றில் டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்ததாகவும் அப்போதுஇடையர்கள் சூழ்ந்து இருந்ததாகவும்அத்தெய்வத்திற்கு 12 சீடர்கள் இருந்ததாகவும்,அத்தெய்வம் சீடர்களிடம் தன்னுடைய மரணத்திற்குப்பிறகுத் தனது உடலைத் தின்று இரத்தத்தைக் குடிக்கும் படியாகக் கூறியதாகவும், கல்லறையிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததாகவும் ஒரு கதை கூறப்படுகிறது. சதையைத் தின்று ரத்தத்தைக் குடிக்கும் தத்துவத்தை இங்கிருந்து தான் கிறித்துவர்கள் களவாடினர் இக்கதைகள் அனைத்திலும், டிசம்பர் 25ஆம் தேதி பிறத்தல் 12 சீடர்கள், மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல் ஆகியன ஒரே மாதிரியாக இருக்கக் காணலாம்.

கிறித்துவ மதம் தோன்றுவதற்கு முன்பே வழங்கி வந்த தொன்மையான கதைகளைத் திருடி அதை ஏசுவின் சரித்திரம் என போலியாக ஒரு கதையைத் தயாரித்தனர்.

இப்போது கூட்டிப் பாருங்கள் கணக்கு சரியாக வரும் கிரேக்க எகிப்து நாடோடி கதைகள்+ கிருஷ்ண வரலாறு+பௌத்த தத்துவங்கள்  = கிறித்துவும் கிறித்துவ மதமும் கிறித்துவும் கிறித்துவ மதமும் கற்பனையாகக் கட்டியமைக்கப் பட்டவை என்பதை ஆய்வு செய்து நீரூபித்தற்காக என்னைக் கிறித்துவ மதத்தை விட்டு வெளியேற்றி விட்டார்கள். அதன் பிறகு தான் பகுத்தறிவு மிக்க மனிதனானேன்.
பெரியார் என்ன செய்து கிழித்து விட்டார் ?
என்று கேட்கும் நன்றி மறந்த ஜாதீய அடிமையே..
நன்றி: உதயசெல்வம்

Tamil Nadu: What explains the BJP's animosity towards Periyar and ...


பெரியார் என்ன செய்து கிழித்தார் என்று கேட்கும் தற்குறிகளுக்கு,

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் (அவாள் தவிர எல்லா சாதினருக்குமே) போராடத் தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலை...

1. ஆதிதிராவிடர்கள், மற்ற பல சாதினரும் பார்ப்பன தெருக்கள், கோயில்களை சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்து செல்லக் கூடாது.

2. ஆதி திராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டிக்கட்டக் கூடாது.

3. தங்க நகைகள் அணியக் கூடாது.

4. மண் குடத்தை தான் தண்ணீர் பிடிக்க பயன்படுத்த வேண்டும்.

5. ஆதிதிராவிடர் விட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.

6. சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.

7. திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.

8. பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.

9. குதிரை மீது ஊர்வலம் செல்லக் கூடாது.

10. பொதுக் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.

11. மேல் அங்கியோ, துண்டுடோ அணிந்து கொண்டு செல்லக் கூடாது.

12. உயர்ந்தோர் குடியிருப்பின் வழியாக தாழ்ந்தோர் சுடுகாட்டிற்கு செல்லக் கூடாது.

13. பெண்கள் ரவிக்கைகள் அணியக் கூடாது என்பதோடு மேல் சாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணிகளையும் எடுத்து அக்குலில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை செய்த சாதிகள்- மக்கள் பல.

14. நீதி மன்றங்களில் சாட்சி சொல்ல நேரிட்டால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.
இவைக்கு காரணம் யார்?

நீ அடிமையாக இருக்கும் உயர்ஜாதி பார்பனீயக்  தலைமையும், புராண ஆசாரங்களே.

பதில் சொல்லுங்கள்!


நன்றாகக் கேள்;  கல்வி மறுக்கப்பட்ட நாங்கள் இன்று கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உயர்ந்த நிலையை அடைந்திருப்பதற்கு காரணம் இடஒதுக்கீடு! அதை பெற்றுத் தந்தது பெரியாரின் இடைவிடாத போராட்டம். 

அவரவர் சாதித் தொழிலையே பள்ளிகளில் கற்க வேண்டுமென குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டுவந்த போது, மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் செய்தவர் பெரியார் அதனாலேயே குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது. அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் அவரவர் சாதித் தொழிலையே அனைவரும் செய்ய வேண்டியதிருந்திருக்கும். மருத்துவராகவோ பொறியாளராகவோ உயர் அதிகாரியாகவோ வர வாய்ப்பு 
எந்த  சாதியினருக்கும்
 இருந்திருக்காது.

பெரியாரின் உழைப்பை மறந்த நன்றிகெட்ட பார்ப்பனீய அடிமைத் தமிழர்களே! இனியாவது உணர்ந்துகொள்...கடவுள் மறுப்பு கொள்கையை பெரியார் கொண்டிருந்தாலும்,
அனைவரும் கோவிலுக்குள் செல்வதற்காகவும், அர்சகராக ஆவதற்கும் போராடியவர் பெரியார்.  சுயமரியாதைக்காகவும், சாதி இழிவு நீங்கவும், தீண்டாமை நீங்கவும், சாதி மதவெறி ஒழியவும் தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் பெரியார். அந்த பெரும் பணியை மறந்த சிறியார்கள் இல்லை நாங்கள்!

ஏ நன்றி கெட்ட பார்ப்பனீய அடிமை தமிழனே! அவரால் உயர்வடைந்து விட்டு  இன்று கேட்பாய் பெரியார் என்ன செய்து கிழித்தார் என்று!

நால்வர்ணத்தை கடைபிடித்த, சனாதன தர்மத்தை நிலைநாட்டிய மனுநீதியின்படி ஆட்சி செய்த பார்பன அடிமைத் தமிழ் அரசர்கள், திருக்குறளை - வள்ளுவரைப் போற்றவில்லை, திருக்குறள் மாநாடு நடத்தி தமிழ்நாடெங்கும் திருக்குறளைக் கொண்டாட வைத்தவர் பெரியார்!

அந்த பெரியாரை மறந்த பார்ப்பனீய அடிமைத் தமிழர்களே! இன்று தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்று வஞ்சமாக கூக்குரலிடும் அயோக்கியர்களே, உன் கையிலிருக்கும் வேதம் காட்டுமிராண்டித் தனமானது. 
அதை தவிர தமிழில் வேறு என்ன வேதம் இது  போல் உள்ளது? #தமிழை_காட்டுமிராண்டி_மொழியாக்கியதே உன் வேதங்கள் தானே. 
இதை என்று உணர போகிறாய்?

பதில் கிடைக்குமா... ஜாதீய அடிமைகளே...?


யார்_பெரியார்?

ஆரியத்தின் சூழ்ச்சியினால்
அடிமாடாய் கிடந்த நம்மை
வீரியத்துடன் நிமிர்ந்தெழச் செய்த
வேங்கையவர் நம் பெரியார்!

மூச்சு நிற்கும் நாள்வரையில்
மூத்திரச் சட்டியுடன் சுற்றிவந்து
சூத்திரப் பட்டம் போக
சுழன்றடித்த சூறாவளி நம் பெரியார்!

Thanthai Periyar added a new photo. - Thanthai Periyar | Facebook


"மருத்துவமனையில், 'கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய்' என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். 'காலை வெட்டினால் ஒழிய பிழைக்கமாட்டாய்' என்றால், காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். 

மலஜலம் கழிக்க வேறு ஓட்டை போடவேண்டமென்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம். எடுத்துவிட வேண்டுமென்றால், கருப்பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை இழந்தாவது "உயிர் வாழ" சம்மதிக்கிறோம்.

அப்படியிருக்க, ஒரு வல்லபக் கூட்டம் நம்மை ஏமாற்றி , அடிமையாக்கி, தங்களுக்கு பணி செய்ய வைக்கும் தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம்மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும் புகுத்தி, இழிவபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்று பெரியார் வழியில் உனக்காக வந்தால்..

இதற்கு... இவ்வளவு யோசனை?, எதிர்ப்பு?, தயக்கம்?. 

இந்த இழிவு (சூத்திரத்தன்மை) எப்பொழுதுதான் எந்த வகையில் தான் மறையும்? - என்று கேட்கிறோம் . என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால், அவர்களை வெறும் வெறியர்கள் என்றுதானே அறிவாளிகள் சொல்லுவார்கள்?" - பெரியார்!!

பெரியார் என்னும் சகாப்தம்;

90-வது வயதில்  _  180 கூட்டம்.
91-வது வயதில்  _  150 கூட்டம்.
93-வது வயதில்  _  249 கூட்டம்.
94-வது வயதில்  _  229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்)  42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன். 

ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்.....

சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்.....

இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்?

எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார் ? 

அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா? 

மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ? 

கடவுள் உண்டு, நாத்திகம் பேசுவோர் நாக்கு முட நாக்கு என்றவர் வள்ளலார். இருப்பினும் வள்ளலாரின் சாதி மத வெறி  சாடும் பாடல்களை தன் பத்திரிகையில் வெளியிட்டவர் பெரியார். 

பக்தி இல்லையேல் நட்டம் இல்லை, ஆனால், ஒழுக்கம் இல்லையேல் எல்லாம் பாழ் என்றவரே பெரியார். 

தமிழ் இனத்திற்காக சாதி ஒழிப்புக்காக சமய சந்நியாசிகள் உடன் பிரச்சாரம் செய்தார். 

பெரியாரை" பற்றி தெரியாதவர்களுக்கு சில செய்திகள்.

நான் சொல்வதை கேட்டால் தான் 
உனக்கு சொர்க்கம்;
என்னை வணங்காவிட்டால் நரகம் 
என்று கூறும் கடவுள்கள்,
சாமியார்களுக்கிடையில்...

- நான் தலைவன், நான் தவறே செய்தாலும், எனக்கு நீ முட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்...

யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு, அனுபவத்தைக்கொண்டு, படிப்பினையைக்கொண்டு ஆராய்ந்து - உன் அறிவு ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள், இல்லையென்றால் விட்டுவிடு னு சொன்ன "ஒரே தலைவர்" பெரியார் மட்டுமே!

பெரியாருக்கு நிகராக  எவராவது  உண்டா?

- வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி.

அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 

95 வயதிலும் மூத்திரப் பையை தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...

* ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் "பெரியார்". அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

* பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான்.

* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவிப்பார். 
''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

* தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்து வைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!

* தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். "ணா", "லை" என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன் தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

* உங்களுடைய அரசியல் வாரிசு யார்? என்று கேட்ட போது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

* இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!

* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 1942 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

* தனது மனதில் பட்டதை தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரது சேகரிப்பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

* முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

* நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

* 'தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

* புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்த போது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

* நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்! அந்த பெரிய மனிதருக்கு இருந்த நேர்மை பணிவு கூட இங்கே விசத்தை கக்க வரும் நபர்களுக்கு தெரியாது. ஒரு சதவீதம் கூட கிடையாது.

* 95 வது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!

Wednesday, April 1, 2020

இந்தியாவில் கொரோனா -  கற்கத் தவறிய பாடங்கள்!
மருத்துவரின் வேதனைப் பகிர்வு 
நன்றி: ஆனந்த விகடன் 

நாவல் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்திய நாடு எதிர் தாக்குதல் நடத்துகிறது. நாட்டின் பிரதமர் தொலைக்காட்சிகளில் தோன்றி மக்களை எச்சரிக்கிறார். எனக்கு நினைவு தெரிந்த நாள் வரையில் மட்டுமல்ல, படித்தறிந்த வரலாற்றிலும் இதுபோல நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு, மக்கள் வீதிகளில் நடமாடுவது தடை செய்யப்பட்டதில்லை.

அரசு நிர்வாகம் முழு முனைப்போடு செயல்படுகிறது. மருத்துவப் பணியாளர்கள் முழு நேரப் பணியாளர்களாக, வேலை நேரக் கட்டுப்பாடுகளின்றிப் பணியாற்றுகிறார்கள். சேலம் மாவட்டத்தில், கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்களோடு தொடர்பிலிருந்த 1,08,677 வீடுகளில் வசிக்கும் 3,96,147 நபர்களுக்கு சில நாள்களிலேயே மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இவர்களிடம் கொரோனா அறிகுறிகள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. சளி, காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைப்பது போல மூக்கு, தொண்டை ஆகிய இடங்களிலிருந்து ஸ்வாப் எடுத்து பரிசோதிக்கப்படவில்லை என்பது குறை.

Representational Image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அவரே நேரடியாகச் சென்று, வெளிநாடுகளுக்குப் பயணம் சென்று வந்தவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்களா என்பதையும், ஊரடங்கு உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்டறிகிறார். எல்லா இடங்களிலும் மாவட்ட நிர்வாகம் இதேபோன்ற சிரத்தையோடு செயல்படுவதைக் காணமுடிகிறது. பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களும் அமைச்சர்களும் கொரோனா ஆபத்து குறித்த முழுமையான புரிதலோடு செயல்படுவதைக் காணமுடிகிறது.

கொரோனா தொற்று சவாலை இந்திய நாடு தன் நிர்வாக அமைப்பின் வாயிலாகவும், பொது சுகாதாரக் கட்டமைப்பின் வாயிலாகவும் எதிர்கொள்கிறது. பெருவெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொள்வது போன்ற பேரிடர் மேலாண்மை உத்திகளை அரசு பயன்படுத்துகிறது. பிரதமர், முதலமைச்சர்களோடு பேசுகிறார். முதலமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் நடத்தி செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தினந்தோறும் மருத்துவ அதிகாரிகளோடும், பல்துறை அதிகாரிகளுடனும் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இவற்றின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

நோய், சமூகப் பரவல் கட்டத்தை எட்டும் பட்சத்தில், அதை எதிர்கொள்வதற்கான முனைப்பில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை, கொரோனா மருத்துவத்துக்கான தனி மருத்துவமனையாக மாற்றுவது குறித்து ஆலோசனைகள் நடைபெறுவதாகக் கேள்விப்படுகிறோம். சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையை, கொரோனா நோய் சிகிச்சைக்கான தனி மருத்துவமனையாக மாற்றுவது குறித்த செய்திகள் வந்திருக்கின்றன.

சீனாவும், மேற்கத்திய நாடுகளும் நம் நாடு போலவே, பேரிடர் மேலாண்மை‌ உத்திகளைப் பயன்படுத்தி கொரோனா தொற்றை எதிர்கொண்டு வருகின்றன. ஆனால் நானறிந்தவரை இந்திய நாட்டில் நடைபெறாத ஒன்று, சீனாவிலும் மற்ற நாடுகளிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அது நாவல் கொரோனா குறித்த அறிவியல் ஆராய்ச்சி.


இங்கிலாந்து நாடு, கொரோனா ஆராய்ச்சிக்காக 20 மில்லியன் பவுண்டுகளையும், கண்டுபிடிப்பதற்கான ஆய்வுக்காக மேலும் 20 மில்லியன் பவுண்டுகளையும் ஒதுக்கியிருக்கிறது. லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கொரோனா குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக கோவிட்-19 என்ற குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்தக் குழு வழங்கும் அறிவுரைகளை அரசு நடைமுறைப்படுத்துகிறது. மார்ச் மாத பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (BMJ) எனும் மருத்துவப் பத்திரிகையில் கொரோனா பற்றிய பல கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. கொரோனா நோய் குறித்து கூகுள் இணையதளத்தில் தேடினால், பேராசிரியர் அஸ்ட்ரா கானி, பேராசிரியர் கிரிஸ்டி டொனலி, பேராசிரியர் ஸ்டீபன் ரைலி போன்ற பிரிட்டிஷ் பெயர்களையே காணமுடிகிறது.

Representational Image

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (FDA) கொரோனா ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி அளித்திருக்கிறது. www.coronavirus.com என்ற இணையதளத்தின் மூலம் கொரோனா ஆராய்ச்சிகளின் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடுகிறது. கொரோனா வைரஸின் மரபணு ஆராய்ச்சிகளும், வைரஸின் செல் கூறு ஆய்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கனடா நாடு 273 மில்லியன் டாலர்களை இந்த ஆய்வுக்காக ஒதுக்கியிருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் ஜெர்மனி கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டது. தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதற்காக ஐரோப்பிய யூனியன் 80 மில்லியன் யூரோவை ஒதுக்கீடு செய்தது. சீன நாடு, ஆராய்ச்சிகள் நடத்தி கொரோனா நோய்க்கு பவிபிரவிர் (Favipravir) என்ற மருந்து பயன்படும் என கண்டுபிடித்திருக்கிறது. இந்த மருந்து இப்போது மனிதர்களிடம் சோதிக்கப்படுகிறது.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கொரோனா ஆராய்ச்சி குறித்த எந்தத் தகவலும் இல்லை. இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் இணையதளத்திலும் கொரோனா வைரஸ் குறித்த தகவல்களோ அல்லது அந்த வைரஸ் பற்றிய ஆராய்ச்சி குறித்த தகவல்களோ இல்லை. இந்திய மருத்துவ ஆய்வு மன்றத்தின் (Indian Council of Medical Research – ICMR) இணைய தளத்தைப் பார்த்தாலும், இந்தியாவில் கொரோனா ஆய்வுகள் நடந்துகொண்டிருப்பதற்கான சான்றுகள் காணப்படவில்லை.

கொரோனா குறித்த இந்திய ஆராய்ச்சிகள் மிக அவசியம். மிக அவசரம். கொரோனா வைரஸ் பரவிய நாடுகளில் அது ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தவில்லை. இத்தாலியிலும், அமெரிக்காவிலும் வயது முதிர்ந்தவர்களை மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரையும் கொன்றிருக்கிறது. இங்கிலாந்து நாட்டை விட ஸ்பெயின் நாட்டில் வேகமாகவும் அதிகமாகவும் பரவியது.

கொரோனா வைரஸ் கண்ணாடி, மரம், உலோகம் போன்ற உயிரற்ற பொருள்களின் மேல் பல மணி நேரங்கள் (72 மணி நேரம் வரை) உயிர் வாழக்கூடியது. அதன் காரணமாகவே கொரோனா வைரஸ் பெரும் தொற்றாக மாறியது. இந்தியச் சூழலிலும், இந்த வைரஸ் பல மணி நேரங்கள் உடலுக்கு வெளியே உயிர் வாழக் கூடியதா என்பதை ஆராய வேண்டும். கொரோனா நோயோடு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களில் எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவுவது, நம் நாட்டில் மிகக் குறைவாக இருப்பது போலத் தோன்றுகிறது.

இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டது 31.01.2020 அன்று. நேற்றோடு (31.3.2020) 91 நாள்கள் ஆகின்றன. மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி 1251 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இத்தாலி நாட்டிலும் 31.1.2020 அன்றுதான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். அந்நாட்டில் தொற்று ஏற்பட்டு, 11,591 பேர் இறந்து போயிருக்கிறார்கள். இத்தாலி நாட்டில் நடந்ததுபோல இந்தியாவில் ஏன் கொரோனா பரவவில்லை என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இந்தியாவில் இன்றுவரை சமூகப் பரவல் ஏற்படாததற்கு அரசின் நடவடிக்கைகளை மட்டும் காரணமாகக் கூறிவிட முடியாது. மூன்று வார கால ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு தங்கள் ஊருக்குச் சென்றார்கள். அப்போது, பேருந்துகளில் காற்று புகக் கூட இடமில்லாத நெருக்கடியில் பயணித்தார்கள். ஒரு சிலருக்கு கொரோனா தொற்று இருந்திருந்தால் கூட லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால், ஏதோ காரணத்தால் அத்தகைய பரவல் நிகழவில்லை என்பதாகவே தெரிகிறது.

இந்தியச் சூழலில் கொரோனா வைரஸ் எப்படிச் செயல்படும் என்பதை அறிவது அவசியம். மூன்று வாரங்களுக்குப் பிறகும் ஊரடங்கு தொடரலாம் என்றும், அவசர நிலை பிரகடனம் செய்யப்படலாமென்றும் பொய் வதந்திகள் உலவின. இதற்கு பதிலளித்துப் பேசிய நடுவண் அரசின் உயரதிகாரி அத்தகைய திட்டமெதுவுமில்லை என்பதை விளக்கினார். மூன்று வாரத்துக்குப் பிறகு நிலைமை மறு ஆய்வு செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். எதுவாக இருந்தாலும் முடிவுகள் நிர்வாக முடிவுகளாகவே இருக்கும். மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் இந்திய மண்ணில் எப்படிச் செயல்படும் என்பது கண்டறியப்பட்டு அதனடிப்படையில் இந்திய நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வழிகளைக் கண்டறிய வேண்டும். அந்த அறிவியல் பாதை நமக்கு சாத்தியமில்லை. சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் பின்பற்றிய வழிகளையே நாம் பின்பற்றப் போகிறோம். உள்நாட்டு ஆராய்ச்சிகளின் அடிப்படையிலான வழிகாட்டுதல்கள் எதுவும் இங்கில்லை.

அறிவியல் ஆராய்ச்சியில் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, நம் நாடு மிகக் கீழே இருக்கிறது. எம்.பி.பி.எஸ், எம்.எஸ்., எம்.சி.ஹெச் என்ற மருத்துவக் கல்வியின் மூன்று நிலைக் கல்விகளையும் பயின்றவன் நான். அந்தப் படிப்புகளின் போது நான் கற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான மருத்துவத் தகவல்களில், இந்திய நாட்டில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் மூலம் சொல்லப்பட்ட செய்திகள் ஒன்றிரண்டு இருக்கலாம். மற்ற எல்லாமே மேற்கத்திய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டவை. சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளின் கண்டுபிடிப்புகளும் இவற்றில் இருக்கும்.

நவீன மனித வாழ்வின் அச்சாணியாக அறிவுதான் இருக்கிறது. உலகமே அறிவின் பாதையில் நடக்கிறது. 21-ம் நூற்றாண்டில், அறிவுப் பாதையை நாடாமல் இருக்கும் நாடாக நம் நாடு இருக்கிறது. அதைவிட வேதனை, வாழ்க்கையின் சிக்கல்களுக்கு, புராண இதிகாசங்களில் விடை தேடுவது, நம்புவது போன்ற பழைமையைப் போற்றி, அறிவுக்கு எதிராக இயங்கும் பேராபத்தான பிற்போக்கு இயக்கங்கள் நம் நாட்டில் இருக்கின்றன.

இந்திய நாடு வேகமான பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியை `மொத்த உள்நாட்டு வருவாய்' என்ற குறியீட்டின் மூலம் கணக்கிடுகிறார்கள். இதே போன்ற வளர்ச்சி தொடருமானால் இந்திய நாடு பல ஐரோப்பிய நாடுகளைவிட அதிகம் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக மாறிவிடும் என்று சொல்லப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி மக்களின் வாழ்க்கைத் தரத்தின் வளர்ச்சியாக மாற வேண்டும். நாடு அறிவியல் பாதையில் சென்றால்தான் வாழ்க்கைத் தரம் மேம்படும். அறிவியல் பார்வையை வளர்ப்பதற்கும், அறிவியலை வளர்ப்பதற்கும் அரசுகள் முனைவதில்லை. நம்பிக்கையின் அடிப்படையிலான உணர்வுகளும், மத, இன அடிப்படைவாத சித்தாந்தங்களுமே அரசியல் பிரச்னைகளாக மக்கள் முன் வைக்கப்படுகின்றன. உணர்ச்சியின் அடிப்படையில் வாழும் விலங்குகளாக இருந்த மனித இனம், அறிவியலின் காரணமாக நாகரிக மனிதர்களாக உயர்வு பெற்றது.

இனி வரும் காலங்களில், நம் நாடு அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அதிக அளவு நிதி ஒதுக்க வேண்டும். மாணவர்களிடையே அறிவியல் பார்வையையும், ஆராய்ச்சி மனப்பாங்கையும் வளர்க்க வேண்டும். மக்களின் வாழ்க்கை முறையே அறிவியலின் வழியிலானதாக மாற வேண்டும்.

கொரோனா உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. அதேசமயம் அறிவியல் பாதையில் செல்ல வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.

-மருத்துவர். இரா. செந்தில்

(தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினர்)