Monday, June 30, 2014

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்
 
 
1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.
 
2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.
 
3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.
 
4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.
 
5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.
 
6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.
 
7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)
 
8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்
தான் நடத்துகின்றனர்.
 
9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.
 
10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.
 
நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.

Friday, June 27, 2014

இயற்கையின் இசை

சமீபத்தில் நான் வலைத்தளம் மேய்ந்து கொண்டிருந்த போது நடிகை குஷ்பூ   Rain forest  என்ற இசை தொகுப்பை பற்றி சொல்லியிருந்தார். எனக்கு இசை என்றால் பாகுபாடு இல்லாமல் கேட்கும் பழக்கத்தை பலவருடங்களுக்கு முன்பிருந்தே கற்றுக்கொண்டிருக்கிறேன். எனவே அதை தேடி  கேட்க நேர்ந்தது .மொத்த தொகுப்பும் 11 மணிநேரம்.   அப்படி என்னதான் இருக்கிறது கேட்டேன். நிலைகுத்தியிருக்கும் ஒரு காடு வண்ணப்பதிவாக கண் முன்னே விரிகிறது. இயற்கையின் நிலையான தூய ஒளியும் ஒலியும் பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது முதலில் உங்களுக்கு ஏதோ போல் தோன்றலாம்...ஆனால் நேரம் செல்ல செல்ல ஒரு தாளகதி....நமக்கே தோன்றும் என்ன சொல்ல....இந்த கம்போசிங் ...உயிருக்குள் மழை முகிலையும்.....ஏதோ பசுமையையும்...............வேண்டாம்.....சொல்ல இயலா ஒரு தெய்வீக உணர்வை கொடுக்கிறது 

 

Thursday, June 26, 2014

கொடிகட்டிப் பறக்கும் இயற்கை சாகுபடி!
மாதம் 81 ஆயிரம் லாபம்
 
த. ஜெயகுமார் படங்கள்: தி. குமரகுருபரன்
அரசாங்க வேலையிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் பலருக்கும் 'அடுத்து என்ன செய்யலாம்?’ என்ற கேள்விதான் பெரியவிஷயமாக முன்நிற்கும். பெரும்பான்மையோருக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், நடைமுறைச் சிக்கல்கள் தடுத்துவிடும். அதையெல்லாம் தாண்டி, விவசாயத்தில் இறங்கி வெற்றிக்கொடி நாட்டும் மூத்தக் குடிமக்களில் ஒருவ ராக சாதித்துக் கொண்டிருக்கிறார்... காஞ்சிபுரம் மாவட்டம், பவுஞ்சூர் அருகேயுள்ள ஜல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கட ரெட்டி. இவருடைய தோட்டத்துக் காய்கறிகள், சென்னையில் உள்ள இயற்கை அங்காடிகள் பலவற்றின் வழியாக நுகர் வோரைச் சென்றடை கின்றன.
சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்தால், 81 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது, கூவத்தூர். இங்கிருந்து மதுராந்தகம் செல்லும் சாலையில் 7 கிலோ மீட்டர் பயணித்தால், ஜல்லிமேடு. சாலையின் வலதுபுறத்திலேயே 'பத்மாவதி பண்ணை’ என்ற பெயர் பலகை வரவேற்கிறது. தோட்டத்துக்குள் நுழைந்தபோது, மினி டெம்போவில் வேலையாட்கள் மற்றும் மகன் பரணி ஆகியோரோடு சேர்ந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டிருந்த வெங்கட ரெட்டி, நம்மை காத்திருக்கச் சொல்லிவிட்டு, பணிகளில் தீவிரமானார். அதையெல்லாம் முடித்துவிட்டு நம்மிடம் வந்தவர், விரிவாகப் பேசத் தொடங்கினார்.
 
இயற்கைக்கு மாற்றிய பசுமை விகடன்!
''எனக்குப் பூர்வீகம் திருவண்ணாமலை. கல்பாக்கம் அனல்மின் நிலையத்துல ஃபோர்மேன் வேலை கிடைச்சதால குடும்பத்தோட வந்துட்டேன். 2001-ம் வருஷம் ரிட்டையர்டு ஆனேன். அதுக்கப்பறம் விவசாயம்தான்னு முடிவு பண்ணி, இந்த 17 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். பொட்டல்காடா இருந்த நிலத்த சரிசெஞ்சு, சாகுபடிக்கு ஏத்த நிலமா மாத்தினேன். ஆரம்பத்துல ரசாயன உரத்தைப் பயன்படுத்தித்தான் நெல், வேர்க்கடலைனு விவசாயம் செஞ்சேன். 'பசுமை விகடன்’ அறிமுகமான பிறகு... அமுதக்கரைசல், ஜீவாமிர்தம்னு கொஞ்சம் கொஞ்சமா இயற்கைக்கு மாறிட்டேன். என்னோட மகன், பாதுகாப்புத் துறையிலிருந்து விருப்ப ஓய்வு வாங்கிட்டு வந்து, என்னோட கைகோத்த பிறகு, முழுமையா இயற்கை முறையில காய்கறிகளை விளைய வெக்குறோம். அதுக்கு சுழி போட்டுக் கொடுத்தது 'பசுமை விகடன்’தான்'' என்று நெகிழ்ந்த வெங்கட ரெட்டி, தான் பயன்படுத்தும் விவசாயத் தொழில்நுட்பங்களைப் பற்றி சொன்னார்.
 
 
''பீர்க்கன், சுரைக்காய், பாகல், கோவைக்காய், புடலை, காராமணி, வெள்ளரி, சேப்பங்கிழங்கு, பரங்கிக்காய், தர்பூசணி, தக்காளி, வெண்டை, கத்திரி, மிளகாய், அவரைனு 10 ஏக்கரை காய்கறிகளுக்காக ஒதுக்கிட்டேன். 5 ஏக்கர்ல மா இருக்கு. மீதி 2 ஏக்கர்ல வீடு, மாட்டுக்கொட்டகை, மண்புழு உர ஷெட் எல்லாம் இருக்குது. வரப்பு, சும்மா இருக்குற நிலத்துல 800 தென்னை, 1,000 தேக்கு இருக்கு. 14 மாடுகளையும், ஒரு கிர் இன காளையையும் வளத்துட்டிருக்கேன். மாடுகளோட சாணம், மூத்திரத்தை வெச்சு... மண்புழு உரம், அமுதக் கரைசல், பஞ்சகவ்யானு தயாரிச்சுக்குறேன். இது செம்மண் நிலம். காய்கறிகளையும் சாகுபடி செஞ்சு ஆர்கானிக் கடைகளுக்கு அனுப்பிட்டிருக்கேன்'' என்ற வெங்கட ரெட்டி, காய்கறிப் பயிர்களுக்கான சில தொழில்நுட்பங்களைச் சொன்னார்.
 
தண்ணீர் சேமிக்க மல்சிங் ஷீட்!
''கத்திரி, அவரை, மிளகாய், வெள்ளரி, பரங்கிக்காய்க்கு மல்ஷிங் சீட் பயன்படுத்தித் தான் சாகுபடி செய்றேன். 2 அடி அகலம், 1 அடி உயரத்துல பார் அமைச்சு கோழி எருவைப் போட்டு... சொட்டுநீர்க் குழாய்களைப் பதிச்சு, அது மேல மல்சிங் ஷீட் போட்டு மூடிடணும். விதையையோ அல்லது நாத்துகளையோ மல்சிங் ஷீட்டில் துளை போட்டு நடவு செய்யலாம். இப்படி செய்றப்போ களைகள் வராது. அதில்லாம தண்ணியும் குறைவாத்தான் தேவைப்படும். தினமும் ஒரு மணி நேரம் பாய்ச்சினா போதும். வெப்பநிலை சீரா இருக்குறதோட, மல்சிங் ஷீட்ல இருந்து சூரிய ஒளி எதிரொலிக்கிறதால பூச்சிகளும் குறையுது. ஒரு ஏக்கருக்கு மல்சிங் ஷீட் போடுறதுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
 
 
முறையான பராமரிப்பு... முத்தான மகசூல்..!
காய்கறிகளுக்கு பந்தல் அமைக்க, சிமெண்ட் தூணைப் பயன்படுத்துறேன். இது ரொம்ப வருஷத்துக்குத் தாங்கும். சீக்கிரத்துல உடையாது. பயிர் சுழற்சிக்காக ஒரு போகம் நெல் போட்டு எடுப்பேன். இதனால மண்ணுல சத்துக்கள் நிலையா இருக்கும். தோட்டத்துல 6 தேனீப் பெட்டிகள் இருக்கு. இது மகரந்தச் சேர்க்கைக்கு உதவும். ஒரு பயிர் அறுவடை ஆரம்பிச்சதுமே, அடுத்த போகத்துக்கு நிலத்தைத் தயார் பண்ணிடுவேன். அதுக்காகத்தான் கொஞ்ச நிலத்தை எப்பவும் சும்மா வெச்சிருப்பேன். வேலை கெட்டுடக்கூடாதுனு 2 டிராக்டர், 1 பவர் வீடர் சொந்தமா இருக்கு. தோட்டத்திலே வேலை செய்யறதுக்காக 3 குடும்பங்கள் இருக்கு. முறையான பராமரிப்பு பண்றதால, எப்பவுமே குறைவில்லாத மகசூல் வந்துட்டே இருக்கு'' என்று ஆனந்தம் பொங்கச் சொன்னார் வெங்கட ரெட்டி.  
 
விற்பனைக்கு பிரச்னையில்லை!
வருமானம் பற்றிப் பேசிய பரணி, ''பலவகையான காய்கறிகள் விளையறதால எந்த நிலத்திலிருந்து எவ்ளோ வருதுனு கணக்கு வெச்சுக்குறதில்லை. சென்னையில் இருக்கிற இயற்கை அங்காடிகளுக்கு வாரத்துக்கு ரெண்டு தடவைனு மாசத்துக்கு 3 டன் காய்கறிகளை அனுப்பிட்டிருக்கோம். வெளி மார்க்கெட்ல விக்கிறதைவிட கூடுதல் விலைக்கு எடுத்துக்கிறாங்க. நியாயமான விலை கிடைக்கிறதால தைரியமா விளைவிக்க முடியுது. மாசத்துக்கு 90 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. காய்கறிகள் ஃப்ரெஷ்ஷா போய்ச் சேரணுங்கிறதுக்காக டெம்போவும் சொந்தமா இருக்கு. வாரத்துல செவ்வாய், வெள்ளி மட்டும் இயற்கை அங்காடிகளுக்கு காய்கள் போகும். அன்னன்னிக்கு அறுவடை செய்ற காய்கறிகளை கோயம்பேடு மார்க் கெட் அல்லது பக்கத்துல நல்ல விலை கிடைக்கிற மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் மூலமா அனுப்பிடுவேன். இப்படி மாசத்துக்கு 6 டன் காய்கறி போகுது. இது மூலமா சராசரியாக 96 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. காய்கறிக்கு 10 ஏக்கரை ஒதுக்கியிருந்தாலும், ஏழு ஏக்கர்லதான் இப்போதைக்கு காய்கறிகள் இருக்கு. இது மூலமாவே, மாசத்துக்கு 1 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் வருமானமா வருது. போக்குவரத்து, வேலையாட்கள், இடுபொருள்னு எல்லாம் போக மாசம் 81 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்குது'' என்று சந்தோஷமாக விடைகொடுத்தார்

Thursday, June 19, 2014

இந்தியாவில் வெளிநாட்டு  நிறுவனங்களுக்கு முதலீட்டைவிட 10 மடங்கு அதிக சலுகைகள்
 
2005-ல் அ.தி.மு.க ஆட்சியில் நோக்கியா தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. பிறகு வந்த தி.மு.க ஆட்சியும் நோக்கியாவை ஆதரித்து வரிச் சலுகைகளை வாரி வழங்கியது.
 
 
சிப்காட்டுக்குச் சொந்தமான 210 ஏக்கர் நிலம், ஒரு ஏக்கர் 4.5 லட்சம் என்ற கணக்கில் 99 வருட குத்தகைக்கு நோக்கியாவுக்கு வழங்கப்பட்டது. இதில் சிப்காட்டுக்கு ஏற்பட்ட இழப்பு 7.4 கோடி ரூபாய். பத்திரப் பதிவுக் கட்டணம் கிடையாது. நோக்கியா நிறுவனம், தன் தேவைக்குப் போக மீதமுள்ள இடத்தை பிற நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விட்டுக்கொள்ளலாம். மாநிலமே மின்வெட்டில் புழுங்கினாலும் நோக்கியாவுக்குத் தடையில்லா மின்சாரம் உறுதி. தொழிற்சாலைக்குத் தேவையான மின்சார விநியோகத்துக்காக, ஆலையின் உள்ளே அரசு செலவில் ஒரு துணை மின் நிலையம் அமைத்துத் தரப்பட்டது. நோக்கியா, தன் சொந்த செலவில் மற்றொரு துணை மின் நிலையத்தை அமைத்துக்கொண்டது. அதன் செலவில் 50 சதவிகிதத்தை அரசே தந்தது. அதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நோக்கியா விற்பனை செய்துகொள்ளலாம். அதன் மீது வரி கிடையாது. நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை வசதி, அரசு செலவில் செய்து தரப்பட்டது.
 
வாட் வரியாகவும், விற்பனை வரியாகவும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆண்டுதோறும் நோக்கியா எவ்வளவு செலுத்துகிறதோ, அந்தத் தொகையை மாநில அரசு திருப்பித் தந்துவிடும். இந்த வகையில் 2005 தொடங்கி 2011-ம் ஆண்டு வரை நோக்கியாவுக்கு, தமிழக அரசு கொடுத்த தொகை சுமார் 850 கோடி ரூபாய். நோக்கியா ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதால், சுங்க வரி, உற்பத்தி வரி ஆகியவை கிடையாது. இந்த வகையில் 2005-06 மற்றும் 2006-07 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் நோக்கியா பெற்ற வரிச் சலுகை 681 கோடி ரூபாய். நோக்கியாவுக்கு 20 சதவிகித வருமான வரியும் கிடையாது. இதனால் ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பு சுமார் 700 கோடி ரூபாய். எட்டு ஆண்டுகளுக்குக் கணக்கிட்டால் இந்தத் தொகை மட்டும் 5,600 கோடி ரூபாய். இப்படியாக நோக்கியா பெற்றுள்ள மொத்த வரிச் சலுகையின் மதிப்பு, எப்படியும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரும். ஆனால், நோக்கியாவின் முதலீடு வெறும் 1,125 கோடி ரூபாய் மட்டுமே. முதலீட்டைவிட 10 மடங்குத் தொகையை வரிச் சலுகைகளாக மட்டுமே பெற்றுள்ளது நோக்கியா. முக்கியமாக, இந்த அனைத்து வரிச் சலுகைகளும், நோக்கியாவுக்கான உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.  
 
தனது உற்பத்தியின் மூலம் நோக்கியா ஈட்டிய லாபம், தனிக் கணக்கு. ஒரு மாதத்துக்கு 1.3 கோடி செல்போன்கள் வீதம் தயாரித்து, 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது நோக்கியா. இதன் மூலம் 2006-2013 காலகட்டத்தில் ஈட்டிய மொத்த வருமானம் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய். இதில் 20 சதவிகிதம் லாபம் எனக்கொண்டால், 30 ஆயிரம் கோடி ரூபாய் வருகிறது. இப்படி... வரிச் சலுகையாகவும் லாபமாகவும் பல்லாயிரம் கோடியை அள்ளிக்கொண்ட நோக்கியா, தன் தொழிலாளர்களுக்கு வழங்கிய ஊதியம் சொற்பத்திலும் சொற்பம்!
 
 
 
எப்படி ஏமாற்றியது நோக்கியா?
பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம், தன் செல்போன்களில் பயன்படுத்தும் மென்பொருளுக்கான ராயல்ட்டி தொகையை, தன் தாய் நிறுவனத்துக்கு செலுத்தி வருகிறது. அந்த வகையில் நோக்கியாவின் இந்தியத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட மென்பொருளுக்கான ராயல்ட்டி தொகையாக, 2005-ம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 20,000 கோடி ரூபாய் பின்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பணத்துக்கு டீ.டி.எஸ் பிடித்தம் செய்து, இந்திய வருமான வரித் துறைக்குச் செலுத்த வேண்டும். அதை நோக்கியா செலுத்தவில்லை. அந்தத் தொகை அபராதம், வட்டி என அதிகரித்து 21,153 கோடியாக உயர்ந்துள்ளது. நோட்டீஸ் அனுப்பியும் கட்டவில்லை என்பதால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை வழக்குத் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து நோக்கியாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. இது மத்திய அரசுடன் உள்ள வழக்கு.
 
தமிழக அரசுடன் மற்றொரு வழக்கு உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, சென்னை நோக்கியாவில் உற்பத்திச் செய்யப்படும் செல்போன்களில் 50 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும். அப்படி ஏற்றுமதி செய்வதாகச் சொல்லித்தான் வரிச் சலுகைகளைப் பெற்றுவந்தது நோக்கியா. ஆனால், 80 சதவிகித செல்போன்கள் உள்நாட்டிலேயே விற்கப்பட்டிருப்பதாக சொன்ன தமிழக அரசு, இந்த வகையில் மாநில அரசுக்கு 2,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. நீதிமன்றம், 'மொத்த வரியின் 10 சதவிகிதமான 240 கோடியை வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும்’ என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்தத் தொகையையும் செலுத்த முடியாது என இப்போது நோக்கியா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 
 
நோக்கியா மட்டுமல்ல... இந்திய அரசு பெருமைப்பட்டுக்கொள்ளும் பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள், கடைசியில் கடும் வரி ஏய்ப்பில்தான் ஈடுபடுகின்றன. வோடஃபோன் நிறுவனத்தின் 11,000 கோடி வரி ஏய்ப்பு பிரச்னை, நாடு தழுவிய அளவில் பேசப்பட்டது. ஷெல், கூகுள் ஆகியவை மீதும் வரி மோசடி சர்ச்சைகள் உள்ளன. 2005-06வது நிதி ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட 1,915 பன்னாட்டு நிறுவனங்களில் 411 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக நாடாளுமன்றத்திலேயே அறிவித்தார் அப்போதைய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

Friday, June 13, 2014

இயற்கை விவசாயத்தின் தேவையை  பதிவு செய்திருக்கும் திரைப்படம்
 
 
நாடகம், சினிமா போன்றவையெல்லாம், இன்றைக்கு பொழுதுபோக்கு என்பதாகவே மாறிக் கிடக்கின்றன. ஆனால், நல்ல விஷயங்களை மக்களின் மனதில் பதிய வைப்பதற்காக மட்டுமே இவையெல்லாம் பிறந்தன என்பது உலக வரலாறு. சுதந்திரப் போராட்டங்கள் தொடங்கி எத்தனையோ விஷயங்களில் மக்களை ஒருமுகப்படுத்திய பெருமை... நாடகத்துக்கும் சினிமாவுக்கும் உண்டு. காலப்போக்கில், அவற்றின் நோக்கம் மாறிப்போனாலும், அத்திப்பூத்தாற்போல எப்போதாவது ஒரு படம் மக்களின் மண்டையில் ஓங்கிக் குட்டும்! அந்த வகையிலான படங்கள் தமிழில் வருவது, கிட்டத்தட்ட அருகியே விட்டது. ஆனால், மலையாள மொழியில் அவ்வப்போது எட்டிப்பார்த்துக் கொண்டுதான் இருக் கின்றன. இந்த வரிசையில் வந்திருக்கும் 'ஹவ் ஓல்டு ஆர் யூ', எனும் திரைப்படம் இயற்கை விவசாயத்தின் தேவையை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பது... குறிப்பிடத்தக்கது!
 
'தினமும் புதுப்புது நோய்கள் வீட்டுக் கதவைத் தட்டுகின்றன. இதற்கு முக்கியக் காரணம்... ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் விவசாயத்தில் அதிகளவில் பயன்படுத்துவதுதான். இயற்கை முறையில் பயிர் செய்து, இயற்கைச் சூழலை உருவாக்க... நம் வீட்டு மொட்டை மாடியே போதும்’ என்று பொட்டில் அடித்தாற்போலச் சொல்லி விழிகளை விரிய வைக்கிறது, இத்திரைப்படம்!
 
மஞ்சு வாரியர், 'நிருபமா’ என்கிற பாத்திரத்தில் தோன்றி நடித்திருக்கிறார். அவருடைய கணவனும் மகளும் நிருபமாவைப் பிரிந்து வெளிநாடு செல்கிறார்கள். இதனால், வெறுமையான சூழலுக்குத் தள்ளப்படுகிறார் நிருபமா. இந்நிலையில், மொட்டை மாடித் தோட்டத்தில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் காய்கறிகளை, தனக்குத் தெரிந்த ஒரு பெண்மணிக்கு ஒரு தடவை அன்பளிப்பாகத் தருகிறார். அந்தப் பெண்மணியோ... தான் வேலை பார்க்கும் வீட்டிலுள்ளவர்களிடம் அவற்றைக் கொடுக்கிறார். அது, மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரின் வீடு. அந்தக் காய்கறிகளைச் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு... நிருபமாவுக்கு அழைப்பு விடுக்கிறார் அந்தத் தொழிலதிபர். 'நீங்கள் கொடுத்த இயற்கைக் காய்கறிக்கு இணையே இல்லை. என் வீட்டில் இன்னும் நான்கு மாதங்களில் திருமணம் வரவிருக்கிறது. 2 ஆயிரம் பேருக்கு சமைக்கும் அளவுக்கு இயற்கைக் காய்கறிகள் வேண்டும். நீங்கள்தான் ஒரு ஏக்கரில் தோட்டம் வைத்திருக்கிறீர்களே...’ என்று கடகடவென தொழிலதிபர் கேட்க... திகைத்துப் போகும் நிருபமா, யோசித்துச் சொல்வதாக சொல்லிவிட்டுக் கிளம்புகிறார்.
 
'ஒரு ஏக்கர்ல விவசாயம்னு ஒரு பந்தாவுக்காக அவங்ககிட்ட சொல்லிட்டேன்' என்று அந்த வேலைக்கார பெண்மணி, நிருபமாவிடம் மன்னிப்பு கேட்க, 'சரி சமாளிப்போம்' என்றபடி, அந்த ஊரில் உள்ள பெரிய காய்கறி மண்டியை அணுகுகிறார். ரசாயன விவசாயத்தில் விளைந்த காய்கறிகளை குவித்து வைத்திருக்கும் மண்டிக்காரர், காய்கள், பழங்கள் கெட்டுப்போகாமல் தளதளவென்றிருப்பதற்காக பூச்சிக்கொல்லி உள்ளிட்ட ரசாயனங்களை, நிருபமாவின் கண்முன்பாகவே அடிக்கிறார். மாம்பழங்களை கல் வைத்து பழுக்க வைக்கிறார். இதையெல்லாம் நியாயமும்படுத்துகிறார். அதிர்ச்சியாகும் நிருபமா... 'உங்க வீட்டுக்கும் இதையேதான் கொண்டு போவீங்களா?' என்று கேட்க...
 
'அதுக்கு வேற வரும்... இயற்கை விவசாயத்துல விளைஞ்சது!'' என்று பதில் தருகிறார் மண்டிக்காரர்.
 
கொதித்தெழுந்து வெளியேறும் நிருபமா, தன் மொட்டை மாடியில் வந்து நின்று செடி, கொடிகளை வாஞ்சையோடு பார்க்கிறார். அப்படியே சுற்றியிருக்கும் மொட்டை மாடிகளெல்லாம் வெறிச்சோடிக் கிடப்பதைப் பார்க்கும் நிருபமாவுக்கு... புதிய எண்ணம் பிறக்கிறது. அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்களிடம் மாடித்தோட்டம் பற்றி சொல்லி... 2,000 ஆயிரம் பேருக்கான காய்கறி தரவேண்டியிருப்பதையும் இதையே ஒரு தொழிலாகச் செய்யலாம் என்பதையும் எடுத்துச் சொல்லி, பலருடனும் கைகோக்கிறார். மொட்டை மாடிகள் எங்கும் இயற்கை முறையில் விளையும் காய்கறித் தோட்டங்கள் சிலுசிலுக்கின்றன!
 
தொடர்ச்சியாக, கட்டடக்கலை நிபுணர்களுக்கான கருத்தரங்கில் பேசுவதற்கு, கல்லூரி கால தோழி மூலமாக வாய்ப்பு கிடைக்க... ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் காய்கறிகளில் உள்ள நச்சுத்தன்மை, கேரளாவின் காசர்கோடு பகுதியில் முந்திரி மரங்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்பான் விஷமருந்து தெளித்ததால், அந்தப் பகுதி மக்கள் இன்றளவிலும் பாதிக்கப்பட்டிருப்பது என்று பலவற்றையும் புட்டுப்புட்டு வைத்துவிட்டு, 'இன்றைக்கு மக்கள் கேன்சரின் பிடியில் சிக்கியிருப்பதற்கு காரணமே ரசாயன உரங்களில் விளைந்த காய்கறிகள்தான். அதனால், கட்டடங்களில் வீட்டுத் தோட்டத்துக்கும் இடம் ஒதுக்குங்கள்' என்று வேண்டுகோள் வைக்கிறார்.
 
முன்வரிசையில் அமர்ந்திருக்கும் மாநில அமைச்சர், நெகிழ்ந்து போய், 'கேன்சரை உருவாக்கிவிட்டு, ஊருக்கு ஊர் கேன்சர் மருத்துவமனைகளைக் கட்டுவதைவிட, அந்த நோய் வராமல் தடுக்கும் வீட்டுத் தோட்டத்தை வீட்டுக்கு வீடு அமைக்கலாம். இதற்கு நீங்களே தலைமை ஏற்பதாக இருந்தால், உங் களிடம் ஒப்படைக்கத் தயார்' என்கிறார். அதை ஏற்று, சாதிக்கிறார் நிருபமா. விஷயம், குடியரசுத் தலைவர் வரை எட்டுகிறது. அதன் பிறகு, நாடு முழுக்க பிரபலமாகிறார், நிருபமா.
 
படத்தின் கரு, இயற்கை விவசாயம் அல்ல. 35 வயதைக் கடக்கும் பெண்களுக்கே இருக்கும் சில முக்கியமான பிரச்னைகளில் வயதும் ஒன்று. இந்த வயதுப் பிரச்னையை வைத்து, கணவன் மற்றும் மகளுடன் போராடும் நடுத்தர வயதுப் பெண்மணியின் வாழ்க்கைதான் கதைக்கரு. தனித்து நின்று வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகும் அந்தப் பெண், இயற்கை விவசாயத்தைக் கையில் எடுப்பதை, எந்தவித பிரசார நெடியும் இல்லாமல், கதையோடு கதையாக வெகு இயல்பாக ஓடவிட்டிருப்பது... அழகோ அழகு! மொத்தத்தில், மொட்டைமாடியில் இருந்தே இயற்கை விவசாயப் புரட்சியை ஏற்படுத்தலாம் என்கிற இயற்கை சிந்தனையை அனைவர் மீதும் அள்ளித் தெளிக்கிறது, படம்!
 

''இயற்கைதான் திருப்புமுனை!''
 
இதைப்பற்றி பேசும் படத்தின் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூ, ''நாயகி, மாடியில நின்று தோட்டத்தில் காய்கறி பறிப்பது போல ஒரு காட்சியை மட்டுமே ஆரம்பத்தில் வைத்திருந்தோம். ஒரு கட்டத்தில், இந்தக் காட்சியையே கதையில் முக்கிய திருப்புமுனையாக ஏன் மாற்றக்கூடாது என்று தோன்றவே... கதையை மாற்றி அமைத்தோம். 'ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மூலமான ஆபத்துகள்... கார்பைடு கல் மூலமாக பழுக்க வைத்த மாம்பழ ஜூஸ் குடித்து நிறைய பேர் மயக்கம்' என்பது போன்ற நிறைய செய்திகளைப் படித்திருக்கிறேன். அதையெல்லாமும் இடம் பார்த்து கோத்தேன். மாடித் தோட்டத்திலயே இயற்கையான முறையில, வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை விளையவைக்க முடியும் எனும்போது, ஏன் ரசாயனங்களுக்கு பலியாக வேண்டும். இப்படி இயற்கை விவசாயத்தைச் சொன்னதுதான், படத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு போயிருக்கிறது'' என்று பெருமையோடு சொல்லும் ஆண்ட்ரூ, இயற்கையான முறையில் விளையும் காய்கறி, பழங்களைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்!
கால்பந்து திருவிழா-2014
 
 
ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக உலக மக்களின் கவனத்தையும், அதற்காக காத்திருக்கும் உலகளாவிய ரசிகர்களையும் கொண்ட விளையாட்டு உலக கோப்பை கால்பந்து போட்டி மட்டுமே.  நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தப் போட்டிக்கு தனிச் சிறப்பு.  இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல; சாதனைக்கான பிறப்பிடம். திருவிழாப்போல கொண்டாடப்படும் இந்நிகழ்வு  64 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரேசில் நடத்தும்  20-வது உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று 12-ந் தேதி அரங்கேற ஆயத்தமாகிறது.  கோப்பையை வெல்லப்போவது யார்? வெற்றி வாய்ப்பு யார் பக்கம்? ஆவலுடன் எல்லோரையும் கிரங்கடிக்கும் ஆட்டம் ஆரம்பம்..  உலககோப்பை கால்பந்து பற்றியும், இதுவரை நிகழ்ந்த போட்டிகளின் சில சுவாரஸ்ய தொகுப்பு இதோ...
 
எப்படி வந்தது உலக கோப்பை கால்பந்து:
 
முதன் முதலில் சர்வதேச கால்பந்து போட்டி 1872-ல் இங்கிலாந்தின், கிளாஸ்கோவில் நடைபெற்றது. இதில் ஸ்காட்லாந்து-இங்கிலாந்து விளையாடி டிராவில் ஆட்டம் முடிந்தது. 1904-ல் சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) தோற்றுவிக்கப்பட்டது. பின் 1908ல் ஒலிம்பிக்கில் நுழைந்தது கால்பந்து ஆட்டம். ஆனால் ஒலிம்பிக்கில் தொழில்முறை போட்டி வீரர்களுக்கு தடை இருந்ததால் பின் சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) நிர்வாகிகள் இணைந்து ஒலிம்பிக்கிற்கு நிகரான உலக கால்பந்து போட்டியை உருவாக்க எண்ணினர். பிபா-வின் தலைவரான ஜூலஸ் ரிமெட் தலைமையில் நெதர்லாந்தில் 1928ல் கூடி ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவில் தயாரானது உலக கால்பந்து போட்டி. பின்னர் சுதந்திர நூற்றாண்டினை கொண்டாடும் வகையில் உருகுவேயில் 1930-ல் முதலாவது கால்பந்து போட்டியை நடத்தப்பட்டது. இந்த முதல் உலக கால்பந்து போட்டி ஜூலஸ் ரிமெட் பெயரிலேயே அழைக்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் அது பிபா உலக கோப்பை என்றே அழைக்கப்பட்டு வருகிறது. நடப்பு உலக கோப்பையினை வடிவமைத்தவர் சில்வியோ காஸானிகா. உலக கோப்பை 14.4 அங்குலம் நீளமும், 5.1 அங்குலம் சுற்றளவும் உடையது. 5கிலோ எடைகொண்ட இந்த கோப்பை 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்டது. முக்கிய செய்தி, வெற்றிப் பெற்ற அணிக்கு தங்க முலாம் பூசப்பட்ட மாதிரி கோப்பையே வழங்கப்படும். அசல் கோப்பை பிபா தலைமையிடத்தில் இருக்கும்.
 
வரலாற்றின் தங்க கிரீடம்:
 
முதலாவது உலக கோப்பை 1930 உருகுவேயில் நடைபெற்ற ஆட்டத்தில் 13 அணிகள் பங்கேற்றன. அன்றைய நாட்களில் கடல் கடந்து வரவேண்டும் என்பதால் ஐரோப்பிய நாடுகளிலிருந்து நான்கு அணிகள் மட்டுமே வந்தன. தகுதி சுற்றில்லாமல் போட்டியில் நேரிடையாக எல்லா அணிகளும் பங்கேற்றன. மெக்சிகோவுடன் பிரான்ஸ் மோதிய ஆட்டத்தில் சரியாக 19வது நிமிடத்தில் முதல் உலக கோப்பையின் முதலாவது கோலை பிரான்ஸ் வீரர் லுசியன் லாரென்ட் அடித்தார். இறுதிப் போட்டிக்கு உருகுவே-அர்ஜென்டினா முன்னேறியது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் விறுவிறுப்பாக தொடங்கியது ஆட்டம். யார் அந்த முதல் உலக் கோப்பை சாம்பியன் என்று உலகமே அதற்காக காத்திருந்தது. முதல் சுற்றில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இறுதியில் உருகுவே 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது.  வரலாற்றின் அபார வெற்றி அது. உலகக் கோப்பையின் கிரிடத்தினை உருகுவே தட்டிச்சென்றது இன்றும் பேசப்படும் நிகழ்வு. இந்த உலகக்கோப்பையில் மொத்தமாக 70 கோல்கள் உதைக்கப்பட்ட முதல் திருவிழா...
 
 
சர்ச்சைகளுக்கு மத்தியில் இரண்டாவது உலக கோப்பை 1934:
இத்தாலி நாட்டில் இரண்டாவது உலக கோப்பை ஆரம்பித்தது. அப்போது 16 அணிகள் பங்கேற்றன. அப்போது இத்தாலியின் ஆட்சிப் பொறுப்பில் சர்வாதிகாரி முசோலினி இருந்ததால், பிபா நிரிவாகக் குழுக்களின் பல கட்ட ஆலோசனைக்குப் பிறகு இரண்டாவது வாய்ப்பு இத்தாலிக்கு தரப்பட்டது. பல சர்ச்சைகளுக்கு நடுவே தொடங்கியது இரண்டாவது உலக் கோப்பை.  போட்டியில் நுழைவதற்கே தகுதிச் சுற்று ஒன்று வைக்கப்பட்டது. இதில் மொத்தம் 32 அணிகள் விண்ணப்பித்து, தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 16 அணிகள் மட்டுமே,  உலக கோப்பைக் கால்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்றன.  நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு மோதின. சுற்றின் முடிவில் கால் இறுதிக்கு 8 அணிகள் முன்னேறின. அதில் இறுதியாக இத்தாலியும் செக்கோஸ்லோவக்கியாவும் இறுதி ஆட்டத்தினை எதிர்கொண்டது. அப்போது பரபரப்புடன் பேசப்பட்ட ஆட்டமாக இது அமைந்தது. சர்வாதிகாரி முசோலினி ஆட்டத்திற்காக நடுவர்களை தேர்ந்தெடுப்பதில் தலையிட்டதாவும் பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் வந்த வண்ணமாக இருந்தது. அதற்கு மத்தியில் 2-1 என்ற கணக்கில் செக்கோஸ்லோவக்கியா அணியை தோற்கடித்து இத்தாலி உலக கோப்பையினை கைப்பற்றியது. இந்த உலகக்கோப்பை போட்டியிலும் 70 கோல்கள் உதைக்கப்பட்டது.
 
 
மூன்றாவது உலக கோப்பை யாருக்கு? 1938
 
பிரான்ஸ் நடத்திய  மூன்றாவது உலக கோப்பை ஆரம்பமானது. ஐரோப்பா நாடுகளுக்கே உலக கோப்பை நடத்தும் வாய்ப்பு தரப்படுகிறது என்று பல சர்ச்சைகள் எழுந்தன. இதனால் உருகுவே போன்ற நாடுகள் விளையாட்டை புறக்கணித்தன. மேலும் ஸ்பெயினில் நடைபெற்ற உள்நாட்டு கலவரம் போன்ற காரணத்தால் அதுவும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை, அதனால் இந்த முறை 15 அணிகள் மட்டுமே போட்டிக்குள் நுழைந்தது.  இந்த போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் ஹங்கேரி- சுவீடனையும், இத்தாலி- பிரேசிலையும் எதிர் கொண்டது. இதில் இறுதி ஆட்டத்திற்கு இத்தாலியும், ஹங்கேரியும் மோதின. இத்தாலி வீரர்களின் அபார ஆட்டம் இத்தாலியின் பலமாக இருந்தது. குறிப்பாக கோலாஸ்சி, பியலா இருவரும் தலா இரண்டு கோல் அடித்து 4-1 என்ற கணக்கில் ஹங்கேரியை தோற்கடித்து மீண்டும் நடப்பு சாம்பியனாக இத்தாலி வெற்றி கோப்பையுடன் நாடு திரும்பியது. 
 
நீண்ட இடைவெளிக்குப் பின் நான்காவது உலக கோப்பை 1950 
 
உலகத்தினையே குலுக்கி எடுத்த இரண்டாம் உலகப்போர் 1942 முதல் 1946 வரையும் நீடித்ததால் தற்காலிகமாக உலக கோப்பை நிறுத்திவைக்கப்பட்டது. பின் அதே புதுமையும், ரசிகர்களின் ஆர்வத்திற்கு விருந்தாக 12 வருடங்களுக்குப் பிறகு 4வது உலக கால்பந்து போட்டியை பிரேசில் நடத்தியது. பிரேசிலின் மறக்க முடியாத துயர விளையாட்டு இறுதிப் போட்டியில் நடத்தப்பட்டது.  உலக கோப்பையில் விருப்பமில்லாமல் இருந்த இங்கிலாந்து முதன் முறையாக இந்த முறை போட்டியில் பங்கேற்றது. உலகப் போரின் தாக்கம் கால்பந்தையும் விட்டபாடில்லை. ஜெர்மனி, ஜப்பான் உள்ளே நுழைய முடியவில்லை. அர்ஜென்டினா, பிரான்ஸும் விளையாடவில்லை. இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வெறும் காலுடன் விளையாடி பழக்கப்பட்டதாலும், பயணச் செலவு எல்லாம் கருத்தில் கொண்டு இந்தியாவும் விளையாடவில்லை. இறுதியில் 13 நாடுகளுடன் ஆரம்பமானது மீண்டும் உலக கோப்பை. இறுதி ஆட்டத்தில் பிரேசிலும் உருகுவேயும் எதிர் கொண்டது. பிரேசில் வெற்றி பெறும் என்ற ஆனந்தத்தில் அனைத்து ரசிகர்களும் இருக்க 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவே வெற்றிவாகை சூடியது. இறுதி கோலை தவறவிட்ட கோல் கீப்பர் பார்போசாவை பிரேசில் நாடே திட்டித் தீர்த்தது. அவருக்கான எல்லா சலுகைகளும் ரத்து செய்யப்பட்டது. எங்கு சென்றாலும் அவமானத்துடன் திரும்பும் அவலத்துடனே இறுதி வரை வாழ்ந்தார். இதை விட சுவாரஸ்யம், போட்டியில் பிரேசில் தோற்றுவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் இருவர் மைதானத்திலேயே தன் உயிரை விட்டனர். பலரும் தற்கொலை செய்து கொண்டனர். இந்த முறை மொத்தமாக 88 கோல்கள் உதைக்கப்பட்டது.
 
ஐந்தாவது உலக போட்டி 1954
 
இந்த முறை சுவிட்சர்லாந்து போட்டியை நடத்தியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியிலும் விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் குறையவில்லை. கடந்த போட்டியில் மறுக்கப்பட்ட ஜெர்மனி இந்த முறை களத்தில் குதித்தது. மொத்தம் 140 கோல்கள் உதைக்கப்பட்டது. இதுவரையிலும் அதிக கோல் மழை பொழிந்த ஆட்டமாக 5வது உலக கால்பந்து போட்டி அமைந்தது.

இதில் ஹாங்கேரியே 27 கோல்களை உதைத்து தள்ளியது. இந்தப்போட்டியில் இறுதி ஆட்டத்தினை ஹங்கேரியும் ஜெர்மனியும் எதிர்கொண்டன. நடப்பு சாம்பியனான ஹங்கேரியை முதன்முறையாக தோற்கடித்து 3-2 என்ற கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது. லீக் சுற்றில் ஹங்கேரியுடன் தோற்றாலும் இறுதியில் வெற்றிவாகை சூடி சாதித்தது ஜெர்மனி.
 
ஆறாவது உலக கோப்பை யாருக்கு வெற்றி? 1958
 
சுவீடன் நாடு நடத்திய போட்டியில் 16 அணிகளுடன் தொடங்கியது ஆட்டம். புதியதாக சோவித் யூனியன், அயர்லாந்து நாடுகளும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அர்ஜென்டினாவும் ஆட்டக்களத்தில் குதித்தன. இறுதி ஆட்டத்தில் பிரேசிலுடன் சுவீடன் களத்தில் எதிர்கொண்டது.  வலுபொருந்திய பிரேசில் எளிதில் சுவீடனை களத்தில் கிரங்கடித்து,  5-2 என்ற வீதத்தில் வெற்றிகொண்டது. இருப்பினும் ஆட்டநாயகனாக பிரான்ஸ் வீரர் ஜஸ்ட் போன்டெ தங்க ஷூவை சொந்தமாக்கினார்.  6 ஆட்டங்களில் 13 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். மொத்தமாக 126 கோல்கள் உதைக்கப்பட்டன. 
 
பிரேசிலுக்கு சாதகமான ஏழாவது போட்டி 1962
 
சிலி நாடு நடத்திய ஏழாவது கால்பந்து போட்டி, வரலாற்றின் பல திருப்புமுனைகளையும் சந்தித்தது. தகுதி சுற்றிற்கே 52 அணிகள் போட்டி போட்டன. அதில் 16 அணிகள் மட்டுமே தேர்வாகின. இதில் சுவீடன், பிரான்ஸ் போன்ற அணிகளால் தங்கள் தகுதியை தக்கவைத்துக்கொள்ள இயலவில்லை. கோல்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. இறுதிப் போட்டியில் பிரேசில் - செக்கோஸ்லோவக்கியாவை எதிர்கொண்டது. இதில் அமாரில்டோ, ஜிடோ, வாவா ஆகிய வீரர்கள் உதைத்த கோல்கள் வீதம் 3-1 என்ற கணக்கில் பிரேசில் வெற்றிவாகை சூடியது.  லிட்டில் பேர்டு என்றழைக்கப்படும் பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர் காரின்ச்சா தங்க ஷூவை பெற்றார்.
 
8-வது உலக கோப்பை 1966
 
16 அணிகளுடன் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. இதில் போர்ச்சுகல், வட கொரியா புதிய விருந்தினராக கால்பந்து போட்டியில் நுழைந்தது. இங்கிலாந்து கால் இறுதியில் அர்ஜென்டினாவையும், அரை இறுதியில் போர்ச்சுகலையும் வீழ்த்தி இறுதி போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்டது. ஆட்ட இறுதியில் ஜெப் ஹர்ஸ்ட் அடித்த கோல் மூலம் 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை மண்ணை கவ்வ வைத்தது. போட்டியை நடத்த்திய நாடே வென்றது நாட்டிற்கு பெருமைதானே.
 
புதிய விதிமுறைகளுடன் 9வது உலக கோப்பை 1970
 
மெக்சிகோ நடத்திய 9வது உலக கால்பந்து திருவிழா, மிகவும் கலர்ஃபுல்லாக நடந்தது.  முதன் முறையாக நவீன கேமராவுடன் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டு கலர்புல்லாக ரசிகர்களுக்கு நேரடி விருந்து வைக்கத்தான் செய்தது. 68 அணிகள் விளையாடி பிரதான சுற்றினை 16 அணிகள் அடைந்தன. அதில் பல புதுப் புது நாடுகளின் அறிமுகம், உலகளாவிய கால்பந்து வெறியர்களின் எண்ணிக்கை கூடிய நிலையில் இருந்தது. இறுதிச் சுற்றில் இத்தாலியுடன் பிரேசில் களத்தில் நின்றது. 4-1 என்ற கணக்கில் பிரேசில் 3வது முறையாக வென்று, சக்திவாய்ந்த அணியாகவே மாறியது. இந்த மூன்று முறையும் விளையாடிய வீரர் பீலே, ஹாட்ரிக் உலக கோப்பை வென்ற வீரராகவே இருந்தார். மாற்று வீரரை பயன்படுத்தும் முறை, மஞ்சள், சிவப்பு அட்டை காட்டும் முறை... என புது அறிமுகமும் புது பொலிவுடனும் நடந்தேறியது. மொத்தமாக 95 கோல்கள் உதைக்கப்பட்டது.
 
பிபா உலக கோப்பை வடிவமைப்பு 1974
 
மேற்கு ஜெர்மனி நடத்திய 10வது உலக கோப்பை 16 அணிகளுடன் ஆரம்பமானது. இதில் முன்னணி அணிகள் நுழையும் வாய்ப்பை இழந்தது. பின் பல புதிய விருந்தாளிகளாக கிழக்கு ஜெர்மனி, ஹைதி, ஆஸ்திரேலியா, ஜாயிர் முதலிய அணிகள் உள் நுழைந்தது.  முதன் முறையாக சிலி வீரர் கார்லஸ் கேஸ்ஜிலி சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.  இது வரை உலக் கோப்பை ஜூல்ஸ் ரிமெட் பெயரில் தரப்பட்டது. இந்த முறை புதியதாக உலக கோப்பை வடிவமைக்கப்பட்டது. இத்தாலி சிற்பி சில்வியோ வடிவமைத்த உலக கோப்பைக்கு பிபா என்ற பெயரில் உலகக்கோப்பை தரப்பட்டது. இன்று வரை இதுவே நிலைத்திருக்கிறது. பழைய ஜூல்ஸ் ரிமெட் கோப்பை மூன்றுமுறை சாம்பியனான பிரேசிலிடம் நிரந்தரமாக கொடுக்கப்பட்டது. மேலும் இந்தப் போட்டியில் நெதர்லாந்தினை 2-1 என்ற வீதத்தில் மேற்கு ஜெர்மனி தோற்கடித்து புதிய பிபா கோப்பையினையும் கைப்பற்றியது.
 
அர்ஜென்டினாவுக்கு சாதகமான 11வது உலக கோப்பை 1978
 
அர்ஜென்டினா நடத்திய 11வது உலக கோப்பை இது. இதில் 16 அணிகளுடன் 102 கோல்கள் அடிக்கப்பட்டு உணர்வுப்பூர்வமான திருவிழாவாகவே மாறியது உதைபந்து திருவிழா. ஈரான் நாடுகளின் வரவு, உருகுவே, இங்கிலாந்து வெளியேற்றம் என்று மாற்றத்துடன் அமைந்தது இந்த முறை ஆட்டம். இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா- நெதர்லாந்தினை எதிர்கொண்டது. 3-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா தன் சொந்த நாட்டிலேயே உலக கோப்பையினை கைப்பற்றி முதன்முறையாக கைப்பற்றியது.
 
 
லக்கி இத்தாலியின் 12வது உலக கோப்பை 1982
 
ஸ்பெயின் நடத்திய உலகக் கால்பந்து போட்டி, முதன்முறையாக 24 அணிகளுடன் ஆரம்பமானது. ஆசியா, ஆப்பிரிக்கா அணிகளுடன் ஆட்டம் தொடங்கியது. இறுதிப் போட்டியில் இத்தாலியும் மேற்கு ஜெர்மனியும் எதிர்கொண்டன. அதில் 3-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி மூன்றாவது முறையாக மகுடம் சூட்டியது. குறைந்த கோல்கள் மட்டுமே அடித்து ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றது இத்தாலியின் சிறப்பு. 7 ஆட்டங்களில் 12 கோல்கள் மட்டுமே இத்தாலி அடித்தது. குறைந்த கோல் எண்ணிக்கையுடன் மகுடம் சூட்டிய லக்கி இத்தாலியாக திகழ்ந்தது.
 
மாயாஜால வெற்றியான 13வது உலக கோப்பை 1986
 
மெக்சிகோ நடத்திய உலக கோப்பையில் 24 அணிகளுடன் ஆட்டம் சூடுபிடித்தது. கால்இறுதி போட்டியில் இங்கிலாந்தினை எதிர்கொண்டது அர்ஜென்டினா. அப்போது அணியின் கேப்டன் மரடோனா கோல் அடிக்கும்போது தவறி கையால் தட்டி விடுவார். ஆனால் முதலில் கவனிக்காத நடுவர்கள் கோல் கொடுத்துவிடுவார்கள். ஆனால் கேமராவில் அவர் கையால் பந்தை அடித்தது பதிவானது தெரிய வந்தது. இதனால் பல சர்ச்சைகளும் வெளியானது. ஆயினும் அந்த கோல் மூலம் அர்ஜென்டினா வெற்றி பெற்றுவிடும்.  கடவுளின் கையால் கிடைத்த வெற்றி என்று சொல்லி கேப்டன் லாவகமாக தப்பித்துவிட்டார். வரலாறு கடந்து இந்த கோல் மட்டும் இன்றுமே நிலைத்து நிற்பது சிறந்தது. பிபாவின் உலகின் மிகச் சிறந்த கோலாகவும் இது அமைந்தது.  இறுதி சுற்றில் அர்ஜென்டினா மேற்கு ஜெர்மனியை எதிர்கொண்டு வெற்றியும் பெற்றது.  இந்த ஆட்டங்களில் மொத்தமாக  132 கோல்களும் அடித்து உதைத்து தள்ளப்பட்டது.
 
சிலிக்கு தடை; உலக கோப்பை 1990
 
இத்தாலி நடத்திய 14வது உலக கோப்பை 116ல் தேர்ச்சியாக 24 பேருடன் ஆரம்பமானது பிரதான சுற்றுக்கள். இதில் ஒரு கோல்மாலும் அரங்கேற்றப்பட்டது. சிலி-பிரேசில் இடையே தகுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் சிலி அணியின் கோல் கீப்பர் ரோஜாஸ், விளையாடும்போது நெற்றியை பிடித்தபடி கிழே விழுந்தார். தலையிலிருந்து ரத்தமும் வந்தது. மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். காரணம் கேட்டபோது, கேலரியிலிருந்து பறந்து வந்த வெடியால் தான் தாக்கப்பட்டதாகவும், இங்கு விளையாடுவது ஆபத்தானது என்று அவரும் சிலி அணியும் மறுத்து வந்தது. பின் கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியினை பார்த்தபோது, அவரின்மேல் எந்த வெடியும் தாக்கவில்லை. மேலும் கையிலிருந்த பிளேடால் தன்னையே காயமாக்கியதும் தெரியவந்து அவரை வாழ்நாள் முழுவதும் விளையாட தடைவிதித்தது பிபா. அதுமட்டுமல்லாமல் 1994ல் நடக்கப்போகும் உலகக் கோப்பை போட்டியிலும் விளையாட சிலிக்கு தடை விதித்தது. இறுதிப்போட்டியில் மேற்கு ஜெர்மனி - அர்ஜென்டினா விளையாடியது. இதில் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை தோற்கடித்து மேற்கு ஜெர்மனி சாம்பியனானது. அதுமட்டுமில்லாமல் கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி தனித்தனியே விளையாடிய கடைசி போட்டியும் இதுவே. பிறகு இரண்டும் சேர்ந்து ஒரே ஜெர்மனி நாடானது.
 
 
பெனால்டி ஷூட் உலக கோப்பை 1994
 
அமெரிக்காவிற்கு இந்த முறை வாய்ப்பு. அதிகமான ரசிகர்கள் பார்வையிட்ட கால்பந்து போட்டி, லட்சத்தினை தாண்டிய ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்த முதல் உலக கோப்பை இதுவே. ஜெர்மனி நாட்டிலிருந்து ஒரே ஜெர்மனி அணி மட்டும் ஆட்டத்தில் இறங்கியது. இறுதி ஆட்டத்தில் பிரேசில் - இத்தாலியும் மோதின. ஆனால் இருவரும் எந்த கோல் அடிக்காத நிலையில் பார்வையாளர்கள் சோர்ந்து விட்டனர். அதனால் இறுதிச் சுற்றில் பெனால்டி ஷூட் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டது. இதில் பிரேசில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியும் பெற்றது.
 
பிரான்ஸுக்கான உலக கோப்பை 1998
 
இந்த முறை பிரான்ஸ் நடத்திய உலக கோப்பையில் 32 அணிகள் பங்கேற்றது. இறுதிச் சுற்றில் பிரான்ஸ், நடப்பு சாம்பியன் பிரேசிலை எதிர்கொண்டது. பிரேசிலை எதிர்த்து தன் சொந்த நாட்டிலேயே 3-0 என்ற கோல்கணக்கில் கால்பந்து பூதமான பிரேசிலை உதைத்து வெற்றிபெற்றது. அதுமட்டுமல்லாமல் போட்டியை நடத்திய நாடே கோப்பை வாங்குவதிலும் 6வது இடம். உலக கோப்பையை வென்ற 7வது நாடாக தரவரிசையில் இடம் பிடித்தது. மொத்தத்தில் 171 கோல்கள் உதைக்கப்பட்டன.
 
 
21ம் நூற்றாண்டின் சாம்பியன் உலகக் கோப்பை 2002
21ம் நூற்றாண்டின் முதல் உலகக் கோப்பை போட்டியை தென்கொரியாவும் ஜப்பானும் இணைந்து நடத்தின. 7 உலக சாம்பியன் அணிகளும் போட்டியில் தகுதிபெற்று உள்ளே நுழைந்ததும் இதுவே முதல்முறை. ஆசிய மாகாணத்தில் நடந்த முதல் உலக கோப்பையும் இதுவே. இறுதிச் சுற்றில் பிரேசிலும் ஜெர்மனியும் சந்தித்தன. பிரேசில் 2-0 என்ற கோலில் வெற்றிபெற்று 5வது முறையாக பிபா கோப்பையினை தட்டிச் சென்றது. 8 கோல் அடித்து பிரேசிலின் ரெனால்டோ தங்க ஷூவையும் தட்டிச் சென்றார். ஜெர்மனியின் ஆலிவர் கான் என்ற கோல் கீப்பருக்கு தங்க பந்தினை கொடுத்து கவுரவித்தது பிபா. இதுவரையிலும் இவர் ஒருவரே இதை வாங்கிய முதல் மற்றும் கடைசி நபர்.
 
உலக கோப்பையின் 18வது கோப்பை யாருக்கு? 2006
 
ஜெர்மனி இரண்டாவது முறையாக போட்டியை நடத்தியது. இதில் இறுதிப்போட்டியில் ஜெர்மனி நடப்பு சாம்ப்யன் பிரேசிலை தோற்கடித்துவிடும் என்று எதிர்பார்க்கையில், இத்தாலி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இறுதிச் சுற்றில் பிரான்ஸை இத்தாலி 5-3 என்ற வீதத்தில் வெற்றி பெற்றது. இது இத்தாலியின் நான்காவது வெற்றி. இதில் மற்றொரு சுவாரஸ்ய நிகழ்வும் அரங்கேறியது. இறுதி ஆட்டத்தில் பிரானஸ் கேப்டன் ஜிடேன், இத்தாலி வீரர் மெட்டாசியை ஆடுகளத்தில் தன் தலையால் முட்டி சாய்த்தார். சந்தோஷத்துடன் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார் ஜிடேன். காரணம் என்னவென்று தெரியவந்தது. ஜிடேனின் தங்கையே மெட்டாசி தவறாக பேசியதாலே தான் தாக்கியதாகவும் கூறினார். இந்த சம்பவத்தை அடுத்து, பிரான்ஸில் ஜிடேன் -மெட்டாசி மோதுவது போன்ற சிலையை வடிவமைத்து பொது இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
 
 
19வது உலக கால்பந்து ஆட்டம் 2010 
 
தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட இறுதி ஆட்டம். ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தினை வென்றது. நாளுக்கு நாள் கால்பந்தாட்டத்தின் ரசிகர்கள் அதிகரித்தார்கள் என்பதற்கு இந்த ஆட்டமே சாட்சி.  மேலும் சாகிராவின் வாக்கா வாக்கா பாடல் கால்பந்தாட்டத்தின் உண்மையான உணர்வுபூர்வமான வீடியோ வைரலில் கால்பந்து இன்னும் அதிக ரசிகர்களை ஏற்படுத்தியது.  இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - நெதர்லாந்து மோதியதில் ஸ்பெயின் 1-0 என்ற வீதத்தில் வெற்றியும் பெற்றது வாக்கா வாக்கா..
.
யாருக்குக்காக காத்திருக்கிறது உலக கோப்பை 2014?
32 அணிகளுடன் இன்று 12ம் தேதி உலகமே ஏங்கும் கால்பந்து திருவிழா நிகழவுள்ளது. யாருக்கு கிரீடம் என்று பல விமர்சனங்களும் செய்திகளும் வந்த வண்ணம் இருந்தாலும் ரசிகர்களின் ஆர்வம் குறைந்தபாடில்லை. உலக கோப்பை போட்டிகளில் அதிக வெற்றிகளையும் 5முறை சாம்பியன் பட்டமும் வென்ற பிரேசிலில் ஆட்டம் ஆரம்பமாகிறது.  அதுமட்டுமில்லாமல் எல்லா உலகக்கோப்பை கால்பந்து போட்டியிலும் ஆடிய ஒரே அணியும் இதுவே. பிரேசிலுக்கான உலக கால்பந்து போட்டியில் சகிரா ஆல்பம் லாலாவும் வெளியாகி இன்னும் பரபரப்பினை கிளப்பியுள்ளது. பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும், வரலாற்றின் முக்கியமான 2014ன் சாம்பியன் யார் என்று