Thursday, June 23, 2016

நாப்கின்’ கெட்டவார்த்தை இல்லை!


கெட்டவார்த்தைகளை எழுதுவதும் பேசுவதும் இன்று சகஜமாகிவிட்டது. ஆனால் பீரியட்ஸ், நாப்கின், மாதவிடாய் பற்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும் இன்னமும் நம்மிடம் தயக்கம் இருக்கிறது. இன்றைக்கும் 50-ல் 30 பெண்களிடம் மாதவிடாய் குறித்த பயமும், ஆண்களிடம் சொல்லத்தவிக்கும் கூச்சமும் இருக்கத்தான் செய்கின்றன. 

`இந்தியா வல்லரசு ஆகிறது’, `இந்தியா ஒளிர்கிறது’ எனச் சொல்லப்படும் இன்றைய ஹைடெக் காலத்திலும், சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் மாதவிலக்கின்போது விநோதமான முறைகள் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன. 

வட மாநிலங்களில், `அந்த’ நாட்களில் மாட்டுக்கொட்டகையில் தங்கவைக்கப்படுகின்றனர் பெண்கள். இன்னும் சில இடங்களில் மாதவிடாய் நேரத்தில் காட்டுப்பகுதிகளில் சென்று தங்கவேண்டும் என்ற மிகப் பழமையான பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. தென்தமிழகத்தில் இன்றும் பெண்கள் `அந்த’ மூன்று நாட்களில் `முட்டு வீடு’ எனும் தனி வீட்டில் தங்கவைக்கப்படுகின்றனர். 

ஆண்கள்தான் இப்படி என்றால், மாதவிடாய் குறித்த தெளிவான கண்ணோட்டம் இருக்கவேண்டிய பெண்களிடம்கூட, இதன் மீதான பழங்கதைகளின் தாக்கம் மாறாமல் இருக்கிறது. இந்தியாவில் 88 சதவிகிதப் பெண்கள், நாப்கினின் பயன்பாட்டையே இன்னும் அறியாமல் உள்ளனர். 5-ல் ஒரு பெண், தன்னுடைய மாதவிடாய்க்காகப் பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொள்கிறார். மாதவிடாய் காலத்தில் சரியான சுகாதாரம் இல்லாமல் 70 சதவிகித கர்ப்பப்பை நோய்கள் ஏற்படுகின்றன. குறைந்தது 10 சதவிகிதம் பெண்கள் `மாதவிடாய்' என்பதை நோயாகக் கருதுகின்றனர். இந்த ஆய்வு முடிவுகளை ‘யூத் கி ஆவாஸ்’ எனும்  தன்னார்வ அமைப்பு சமீபத்தில் தெரிவித்துள்ளது. 

`` `இது அசிங்கம், வெளியே சொல்லக்கூடாத ஒன்று' என, பெண்ணை மூளைச்சலவை செய்துவைத்திருக்கிறது இந்தச் சமுதாயம். மாதவிடாய் காலத்தில் அவள் குற்றவுணர்வாக உணர்கிறாள். அதை யாருக்கும் தெரியாமல் கடந்துபோக நினைக்கிறாள். அதனால்தான் மாதவிடாயின்போது தனக்கு ஏற்படும் சிரமங்களை, தேவைப்படும் வசதிகளைப் பற்றி குடும்பத்து ஆண்களிடம்கூட சொல்லத் தயங்குகிறாள். இன்னொன்று, மாதவிடாய் பற்றி ஆணுக்கு நாம் சொல்லித்தரவில்லை. சொன்னால் அதை அவன் புரிந்துகொள்வானா, தன்னைத் தப்பாக நினைப்பானோ என்ற குழப்பமும் பெண்ணுக்கு இருக்கிறது. அதனால்தான் அவர்கள் சொல்லத் தயங்குகிறார்கள்'' என்கிறார் ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன்.  இவர் ‘மாதவிடாய்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்து, இது குறித்த விழிப்புஉணர்வை பலதரப்பட்ட மக்களிடமும் கொண்டுசேர்த்தவர்.

`` `மாதவிடாய்’ படத்துக்காக கல்லுப்பட்டி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்குப் போயிருந்தேன். எட்டாவது படிக்கும் அந்தக் கிராமத்து மாணவர்களிடம், மாதவிடாய் பற்றி அறிவியல்பூர்வமாக விளக்கிக் கொண்டிருந்தேன், ஒரு மாணவன் கேட்டான், `ஏங்க்கா, அப்ப வர்ற ரத்தம் புளூ கலர்லதான் இருக்குமாமே?' `இல்லையேப்பா, சிவப்பாத்தான் இருக்கும்’ `அப்புறம் ஏன் விளம்பரத்துல புளூ கலர்ல காமிக்கிறாங்க?' என்றான். இந்த லட்சணத்தில்தான் நாம் அவர்களுக்குப் புரியவைத்திருக்கிறோம். அப்புறம் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

கிராமத்தில் நடுத்தர வயது பெண்மணியிடம், `உங்க மகள் மாதவிடாய் நேரத்தில் என்ன பயன் படுத்துறாங்க?’ எனக் கேட்டேன். `தெரியலைம்மா. பஞ்சு வெச்சிக்குவாளா இருக்கும்’ என்றார். அதிர்ச்சியாகி `என்னங்க இதுகூடத் தெரியலைங்கிறீங்க’ என்றால், `இதைப் போய் எப்படிப் பேசுறது?’ என்றார். 

இந்த நிலையில்தான் பெரும்பாலான கிராமத்துப் பெண்கள் இருக்கிறார்கள். மாதவிடாய் பற்றி உரையாடக்கூட முடியாமல் மெளனம் சாதிக்கும் அறியாமை ஒரு புறம். பொருளாதார வசதி இன்னொரு புறம். 30 ரூபாய் கொடுத்து ஒரு நாப்கின் பாக்கெட் வாங்கமுடியாத வறுமையில்தான் பெரும்பாலான இந்தியப் பெண்கள் இருக்கிறார்கள். நாட்டின் மொத்தப் பெண்களில் 20 சதவிகிதத்தினர்தான் நாப்கின் பயன்படுத்துகிறார்கள். மாதவிடாய் காலத்தில் சுகாதார இன்மையால் கருப்பைவாய் புற்றுநோய் வந்து இறக்கும் பெண்களும் இந்தியாவில்தான் அதிகம்.

மாதவிடாய் என்பது அறிவியல்ரீதியான நிகழ்வு என்பதை பெண், ஆண் இருவருக்கும் புரியவைத்து, தயக்கம் இல்லாமல் இருபாலரையும் உரையாட வைக்கவேண்டும். இது பற்றிய மூடநம்பிக்கைகளை உடைத்து, நம் பெண்களுக்கு தன் உடலைப் பற்றிய புரிதலையும் நம்பிக்கையையும் அளிக்க வேண்டும். பெண் உடலில் நிகழும் விஷயங்களை ஆணுக்கு சரியாகப் புரியவைத்துவிட்டால், புதிர்த்தன்மை உடைபட்டு, சகமனுஷியாக அவளை மதிப்பான்'' என்கிறார் கீதா.

``கர்ப்பப்பையின் உட்பகுதியில் அமைந்துள்ள எண்டோமெட்ரியத்தில் கருவைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும் ரத்தப்பைகளானது 22 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். கர்ப்பைப்பையில் நிரம்பியிருக்கும் இந்த ரத்தம்தான், குழந்தை உருவாகும்போது அதைப் பாதுகாத்து, அந்தக் கருவுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் கவசமாகச் செயல்படும். ஒரு பெண் கருத்தரிக்காதபோது இந்த ரத்த நுண்ணிழைகள் தங்களைச் சக்திமிக்கதாகப் புதுப்பித்துக்கொள்ளும். அப்போது ஏற்கெனவே உருவாகியிருந்த ரத்த இழைகள் கழிவாக வெளித்தள்ளப்படும். இந்தச் சுழற்சிதான் மாதவிடாய். இது மாதத்தில் 4 முதல் 7 நாட்கள் வரை நடைபெறும்.

உடலின் ரத்தம் நிறைந்த இழைகள் வெளித்தள்ளப்படும் சூழ்நிலையில், பெண்களின் கர்ப்பப்பை மிகவும் பலவீனமாக இருக்கும். அந்த நேரத்தில் உடல் சார்ந்த சோர்வு, மனக்குழப்பம், கால்-கை வலி, வயிறு மற்றும் இடுப்பு வலி, சிந்தனை மாற்றங்கள் ஆகியவை பெண்களிடம் உண்டாகும். வயிற்றுப் பகுதியின் கீழ் பகுதியில் தசைப்பிடிப்பு, மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு ஆகிய அறிகுறிகள் அதிகமாக இருக்கும்.

எரிச்சல், கோபம் போன்ற எண்ண மாற்றங்களும் அதிகமாக இருக்கும். இத்தகைய பிரச்னைகளுக்காகவே அந்த 4 முதல் 7 நாட்கள் பெண்களுக்கு ஓய்வு என்பது தேவைப்படுகிறது. எனினும் இன்றைய ஆண்களுக்கு இணையாக வேலைப்பளு அழுத்தும் சூழ்நிலையில் அந்த நாட்களில் ஓய்வு என்பது எட்டாத ஒன்றுதான். இந்த விஷயத்தைப் பற்றிய தயக்கத்தைக் களைந்து, ஆண்கள் நிச்சயமாக அவர்களின் உணர்வுகளை அந்த 4 நாட்களும் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம்'' என்கிறார் பெண்கள் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் மனுலட்சுமி.


`மாதவிடாயின்போது கருமுட்டையும் சேர்ந்து வெளியேறிவிடும் என்ற தவறான புரிதல் அனைவரிடமும் உள்ளது. ஆனால், கருமுட்டை ரத்தப்போக்குடன் வெளியேறுவது இல்லை' என்கின்றனர் மருத்துவர்கள். கரு உருவானால், அதைப் பாதுகாக்கும் பணியைச் செய்யும் கர்ப்பப்பையில் உள்ள ரத்தத்திசுக்கள் மட்டுமே கரு உருவாக்கம் நடைபெறாத மாதவிடாய் சமயத்தில் வெளி வருகிறது என்பதே சரியான விளக்கம்.
பெரும்பாலும் மிகக் குறைந்த அளவிலான பெண்களே இன்று நாப்கின்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அரசின் நாப்கின் வழங்கும் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சுகாதாரமான நாப்கின் தயாரிப்புகள் பரவலாகக் கிடைத்தாலும் பல அடிப்படை வசதிகள் கிடைக்காத கிராமப் பகுதிகளில் இன்றும் பழைய துணிகள், நியூஸ் பேப்பர் ஆகியவற்றை, நாப்கின்
களுக்கு பதிலாக உபயோகித்துவருகின்றனர். 

நாப்கின்கள்கூட அசெளகரியங்களை உண்டாக்கும். பெரும் அளவில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றுதான் ‘மென்சுரேஷனல் கப்’ எனப்படும் குமிழி போன்ற கப்கள். இது மேலைநாடுகளில் பயன்பாட்டுக்குப் பெரும் அளவில் வந்துவிட்டது. பிறப்பு உறுப்பினுள் பொருத்திக்கொள்ளும்படியான இந்த கப்கள், மறுசுழற்சி உபயோகத்துக்குச் சிறந்தவை. எனினும், இவற்றின் விலை 750 ரூபாயில் இருந்து ஆரம்பிப்பதும், அதிக அளவில் விற்பனையில் இல்லை என்பதாலும் இதன் பயன்பாடு குறித்து பெண்களிடம் அவ்வளவாகப் பரிட்சயம் இல்லை.

``மருத்துவரீதியாக மாதவிடாய்க்கு முன்பான உணவு முறை, பிறகான உணவுமுறை என்பது எல்லாம் கிடையாது. மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பெண்களுக்கு தலைவலி ஏற்படலாம். அதனால் டீ, காபி, காரம், புளிப்பு ஆகியவற்றை அந்த நாட்களில் தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் உணவைப் புறக்கணிக்கவே கூடாது. மாதவிடாய் நாட்களில் சிலருக்கு உடலில் நீர் தேங்கும். உப்பின் அளவு அதிகமாகும். அத்தகைய நேரங்களில் சோடியம் அதிகமாக உள்ள ஊறுகாய், மிளகாய்ப் பொடி, உப்புக்கடலை, அப்பளம், வத்தல், உப்பு பிஸ்கட், சால்ட் பிரெட் ஆகியவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக, எனர்ஜி பானங்கள், கூல்டிரிங்க்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது'' என்கிறார் டயட்டீஷியன் மீனாட்சி. 

எந்த ரத்தம் தீட்டாகக் கருதப்படுகிறதோ அதே ரத்தத்தினுள்தான் ஒன்பது மாத காலம் ஒவ்வொரு குழந்தையும் நீச்சலிட்டுப் பிறக்கிறது என்பது அறிவியல் உண்மை. இதைப் புரிந்துகொள்ளும் மனநிலை, எல்லோரிடமும் வரவேண்டும்!


இந்தியாவிலேயே முதல்முறையாக ராஜஸ்தானின் அஜ்மீர் நகரில் பெண்களுக்கான நாப்கின்கள் எளிதாகக் கிடைக்கும் வகையில் ‘நாப்கின் வெண்டிங் மெஷின்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 10 ரூபாயை உள்ளிட்டு, மூன்று நாப்கின்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதை, மாநிலம் முழுக்க விரிவுப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது ராஜஸ்தான் சுகாதாரத் துறை!

‘மென்ஸ்ட்ரூபீடியா.காம்... குழந்தைகளுக்கும் எளிதில் புரியும்வகையில் மாதவிடாய் குறித்த தெளிவான விளக்கங்களைச் சொல்லிக்கொடுக்கும் வலைதளப் பக்கம். பூப்படைதல் முதல் நாப்கின் உபயோகம் வரையில் இதில் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

Monday, June 20, 2016

 எளிய உணவே மருந்து 




















1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.
2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.
3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.
4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.
5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.
6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.
7. சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.
8. அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக குடிப்பதும், அடிக்கடி பட்டனி கிடப்பதும், சிகரெட், மது குடிப்பதாலும் குடற்புண் விரைவில் ஏற்படும்.
9. கூடுமான வரையில் தாளிப்பு இல்லாமல் உணவு உண்பதே நல்லது.
10. மைதா மாவினால் செய்த உணவுகளைக் குறைத்தாலும் அல்லது நீக்கினாலும் உடல் பருமன் குறையும்.

Wednesday, June 15, 2016


மூங்கில் அரிசி... இயற்கையின்கொடை!

அப்படி நம் வாழ்வில் ஒன்றியிருக்கும் பயிர்களில் ஒன்றான மூங்கில், மற்ற தாவரங்களைப் போல் ஒவ்வோர் ஆண்டும் பருவத்தில் பூக்காமல்... தன் வாழ்நாளை முடிக்கும்போது தன் இனத்தைப் பரப்புவதற்காக பூத்து விதைகளை உருவாக்கும். கிட்டத்தட்ட கோதுமை போல காட்சியளிக்கும் அந்த விதைகள்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கப்படுகிறது. இந்த விதைகளில் நெல் போலவே, மேலே தவிடு போன்ற தோலும் உள்ளே விதையும் இருக்கும். அதனால்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கிறார்கள்.
காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் முக்கிய உணவாக இருக்கும், மூங்கில் அரிசியானது சிங்கவால் குரங்கு, யானை, காட்டு மாடு போன்ற விலங்குகளுக்கும் பிடித்தமான உணவு. பழங்குடி மக்களிடம் இருந்து நாட்டுக்குள்ளும் பரவத் தொடங்கிய மூங்கில் அரிசி, முக்கிய இயற்கை உணவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக மலை, மலை சார்ந்த பகுதிகளில் வாழும் மக்களிடையே மூங்கில் அரிசி மிகப் பிரபலமாக இருக்கிறது. இயற்கை அங்காடிகள், பாரம்பர்ய உணவுத் திருவிழாக்களில் மூங்கில் அரிசியும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.



கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடக எல்லைப் பகுதியில் தேன்கனிக்கோட்டையில் இருந்து பெட்டமுகிலாளம் செல்லும் சாலையில் உள்ள அய்யூர் வனப்பகுதியில் மூங்கில் மரங்களில் நெல் பூத்துள்ளன. இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன் வனத்துறை சார்பாக பரவலாக நடப்பட்ட மூங்கில் மரங்கள்தான் பூத்துள்ளன. தற்போது, அப்பகுதி மக்கள் மூங்கில் நெல்லைச் சேகரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இத்தகவல் அறிந்து அய்யூர் வனப்பகுதிக்குப் பயணமானோம். அய்யூர் வனப்பகுதியின் செல்லும் வழியில் மலை அடிவாரங்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மூங்கில் காடுகள்தான்.

மூங்கில் பூத்தால் மழை பெய்யாது!
மூங்கில் நெல் குறித்து அரசஜ்ஜுர் கிராமத்தைச் சேர்ந்த பாஞ்சாலை என்ற பாட்டியிடம் கேட்டபோது, “60 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு கல்யாணமாகி இந்த ஊருக்கு வந்தேன். அப்போ, ஃபாரஸ்ட்டுகாரங்க மூங்கில் கன்றுகளை நட்டுக்கிட்டு இருந்தாங்க. அந்த மரங்கதான் இப்போ பூத்திருக்கு. நெல் உக்காந்திருக்கிறதைப் பாக்குறப்போ சந்தோஷமாக இருக்கு. மூங்கில்ல இப்படி நெல் உக்காந்தா, அந்த வருஷம் மழை குறைவா பெய்யும், வெள்ளாமை செழிக்காதுனு சொல்வாங்க. ஆனா, இங்க அதையும் தாண்டி மழை பெய்ஞ்சிகிட்டுதான் இருக்கு. மூங்கில் அரிசி கிடைக்கிறப்போவெல்லாம் நாங்க விரும்பி சாப்பிடுவோம். முன்னாடி அந்த அரிசி மட்டும்தான் எங்களுக்குத் தெரியும்” என்றார். 

மாடு மேய்த்துக்கொண்டே நெல் பொறுக்குவோம்!

மூங்கில் வனத்துக்குள் நாம் சென்றபோது, அங்கு மூங்கில் நெல் பொறுக்கிக் கொண்டிருந்தார், பழங்குடி கிராமமான  சித்தலிங்கம்கொட்டாயைச் சேர்ந்த சாமுண்டியம்மா. “எங்க மாமியார்  இருந்தப்போ ‘பிதிரு நெல்லு’ (மூங்கில் நெல்) பொறுக்கிட்டு வருவாங்க. அதை உரல்ல குத்தி அரிசியாக்கி சாப்பிட்டிருக்கோம். இப்போதான், நான் முதல்முறையா இப்பதான் பொறுக்குறேன். போன வருஷமும் இந்தப் பகுதியில நிறைய பேர் பொறுக்கிகிட்டு வந்தாங்க. ஆனா, இந்த வருஷம்தான் அதிகமாக கிடைச்சுகிட்டிருக்கு. நான், 3 மாசமா சேகரிச்சிக்கிட்டிருக்கேன். ஒரு நாளைக்கு 4 கிலோ அளவுக்குக் கிடைக்குது. வீட்டுக்கு வெச்சுக்கிட்டது போக மீதியை விற்பனை செய்வேன். ஒரு கிலோ 40 ரூபாய்னு வாங்கிக்கிறாங்க. ஆடு, மாடுகளை மேய்ச்சிக்கிட்டே பொறுக்கிறதால ஒரு வருமானம் கிடைச்சிடுது. நாங்க கூட்டமாதான் போய் பொறுக்குவோம். மூங்கில் காட்டுல இருக்கிற பொம்மஅள்ளி அம்மன்தான் எங்களுக்கு காவலு” என்றார், சாமுண்டியம்மா.


வீட்டுக்குப்போக மீதி விற்பனைக்கு...
சாமுண்டியம்மாவுடன் இணைந்து நெல் பொறுக்கும் பணியில் இருந்தனர், சிக்கமல்லா-மாதம்மா தம்பதி. அவர்களிடம் பேசியபோது, “போன வருஷத்துல இருந்துதான் இங்க மூங்கில் நெல் கிடைக்குது. மரங்களின் வயசைப் பொறுத்து நெல் கிடைக்கும். இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்குக் கிடைக்கும். அடுத்து எப்போ கிடைக்கும்னெல்லாம் உறுதியா சொல்ல முடியாது. கிடைக்கிறப்போ பொறுக்கியெடுத்து வெச்சுக்குவோம். மரத்துல இருந்து உதிருற நெல்லைத்தான் பொறுக்க முடியும். எடுத்து சுத்தப்படுத்தி சலிச்சு வெச்சுக்குவோம். அதைக் குத்தி அரிசியாக்கி கஞ்சி காய்ச்சி குடிப்போம். தேவை போக மீதியை விற்பனை செய்வோம். போன வருஷம் 7 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது. இந்த வருஷம் இதுவரை 10 ஆயிரம் ரூபாய் கிடைச்சிருக்கு. மழை இல்லாம இருந்தாத்தான்  நெல் பொறுக்க முடியும். இல்லாட்டி நெல் எல்லாம் முளைச்சு வந்திடும்” என்றனர்.

மலைவாழ் மக்களுக்கு மட்டுமே உரிமை!
மூங்கில் அரிசி குறித்து பேசிய, அரசஜ்ஜுர் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ், “மூங்கில் மரம் 40 வருஷத்துல இருந்து 60 வருஷம் வரை உயிர் வாழும். அதோட ஆயுள் முடியுற சமயத்துல, பூத்துக் காய்க்கும். அந்த விதைகள் காய்ந்து பூமியில் விழுந்த கொஞ்ச நாள்ல அந்த மூங்கில் மரம் பட்டுப்போயிடும். பூத்த மரம், உள்ளுக்குள் கூடு போல ஆகிடுறதால, வலுவிழந்து போயிடும். வேற எதுக்கும் அதைப் பயன்படுத்த முடியாது. வேர்ல இருந்தே பக்கக் கன்றுகள் முளைக்கும்னாலும், விதை மூலமாகவும் காட்டுக்குள்ள அதிகமா மூங்கில் மரம் பரவும். இந்த விதைகளைப் பொறுக்கிட்டுப் போய்தான் நர்சரிகள்ல மூங்கில் கன்றுகளை உருவாக்குவாங்க. 

மழைக் காலத்துல கிடைக்கிற மூங்கில் குருத்துகளைப் பறிச்சிட்டு வந்து மசால் குழம்பு வெச்சி சாப்பிடுவோம். யானைகளுக்கு பிடிச்ச உணவு மூங்கில். அதனால, யானைகள் நடமாட்டம் அதிகமா இருக்கும். அதனால காடுகளுக்குள்ள மதியம் மூணு மணிக்கு மேல யாரும் போக மாட்டோம்” என்ற புஷ்பராஜ் நிறைவாக,
“வனப்பகுதியைச் சார்ந்துள்ள மலைவாழ் மக்களுக்கு மட்டுமே மூங்கில் நெல்லை எடுக்கிறதுக்கு சட்டத்துல உரிமை கொடுத்திருக்காங்க. அதுலயும் கீழ விழுந்திருக்கிறதைத்தான் பொறுக்கணும். மரத்தை வெட்டவோ, சேதப்படுத்தவோ கூடாது” என்றார்.
போர் வீரர்களுக்கான உணவு!
மூங்கில் காட்டுக்குள் மாடு மேய்த்துக் கொண்டிருந்த வீரபத்ரப்பா, “நான் சின்ன வயசுல இருக்கிறப்போ சாப்பிட்டது. பிறகு இப்பதான் சாப்பிடுறேன். உடம்புல இருக்கிற கொழுப்பைக் கரைச்சு எடுக்கிற சக்தி இந்த அரிசிக்கு உண்டு. இதைச் சாப்பிட்டா கழுத்து வலி, இடுப்பு வலி எல்லாம் சரியாகும்” என்றார்.

இதுகுறித்து, சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் கேட்டபோது, “ஆக்சிஜனை அதிகமாக வெளியிடும் மரம் மூங்கில். மூங்கில் அரிசி உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும். அந்தக் காலத்தில் அரசர்கள், போர் தளபதிகள், வீரர்கள் இந்த அரிசியைச் சாப்பிட்டிருக்கிறார்கள். வீரியமான உணவுகளில் இன்றும் மூங்கில் அரிசி இடம் பெறுகிறது. இதில் மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தையமின், ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. உடலில் ஊளைச் சதைகளைக் குறைக்கும் வல்லமை பெற்றது. பசியைக் குறைக்கும். ஆற்றலைப் பெருக்கும். உடல் எப்போதும் உரமாகவும், ஊட்டமாகவும் இருக்க  உதவும். இதை, தினையரிசி, சாமையரிசி ஆகியவற்றோடு கலந்து சமைத்து சாப்பிடலாம். தினசரி உணவில் குறைந்தளவு மூங்கில் அரிசி உணவைச் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு சுகமளிக்கும்” என்றார்.
மூங்கில் அரிசி கஞ்சி!
கிருஷ்ணகிரி மாவட்டம், சித்தலிங்கம்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பாலம்மாள் மூங்கில் அரிசி சமையல் குறித்துச் சொன்னார்.

“மூங்கில் அரிசியில கஜாயம் (அதிரசம்), மாவிளக்கு, கஞ்சி மூணையும்தான் அதிகம் செய்வாங்க. இதை சோறு மாதிரி பொங்கி சாப்பிட முடியாது. கஞ்சியாத்தான் குடிக்கணும். சில பேர் தோசை,  இட்லி செய்வாங்க.

மூங்கில் அரிசிய ஊற வெச்சி, ஒண்ணு ரெண்டா இடிச்சு கொதிக்கிற உலையில கொட்டி கலக்கி வேக விடணும். நல்லா கொதிச்சி, வாசம் வந்ததும் இறக்கி, ஆற வெச்சா கஞ்சி தயார். அதைக் குடிச்சா அவ்ளோ பிரமாதமா இருக்கும். பொதுவா மூங்கில் அரிசி உடம்புக்கு சூடு. அதனால கர்ப்பிணி பெண்களும் சூட்டு உடம்புக்காரங்களும் தவிர்க்கிறது நல்லது” என்றார்.
அரை கிலோ 200 ரூபாய்!
மூங்கில் மரங்கள் அதிகமாக காணப்படும் கேரளா, அஸ்ஸாம், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மூங்கில் அரிசி  விற்பனைக்காக வருகிறது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் வந்து வாங்குகிறார்கள். சென்னையில் பெரும்பாலான இயற்கை அங்காடிகளில் மூங்கில் அரிசி கிடைக்கிறது. தரத்தைப் பொறுத்து, அரை கிலோ மூங்கில் அரிசி 150 லிருந்து 200 ரூபாய் விலையில் கிடைக்கிறது. அதேசமயம் ஆன்லைனிலும் ஷாப்பிங் மையங்களிலும், சூப்பர் மார்க்கெட்களிலும் மூங்கில் அரிசி விற்பனைக்குக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Tuesday, June 14, 2016

சே தினமும் பிறந்து கொண்டிருக்கிறான்! 

 
வாலேகிராண்டாவில், 'சே' புதைக்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்த தபால் தந்தி அலுவலக சுவற்றில் இப்படி எழுதப்பட்டு இருந்தது, ''அவர்கள் நினைத்ததுபோல் இல்லாமல் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் சே..." எவ்வளவு அர்த்தம் பொதிந்த வாக்கியம் இது...? இந்த ஒரு வரியில் எவ்வளவு நம்பிக்கையும், கம்பீரமும் வெளிப்படுகிறது. இந்த உலகத்தின் எல்லைகள் கடந்து, அரசியலை புரிந்துகொள்ள இந்த ஒரு வாக்கியத்தை அதன் முழு அர்த்தத்தில் நாம் புரிந்துகொண்டாலே போதும். 

ஆம். இந்த வாக்கியத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள். உங்களுக்குள் கேள்வி கேளுங்கள், அவர்கள் யார்...? அவர்கள் ஏன் 'சே' சாக வேண்டும் என்று நினைத்தார்கள்...? 'சே'வின் பூத உடல் மட்டும் அல்ல, அவன் குறித்த நினைவுகள்கூட ஏன் மரித்துப்போக வேண்டும் என்று விரும்பினார்கள்...? ஏன் ‘சே’ என்னும் ஒற்றை எழுத்தை வரலாற்றின் பக்கங்களில் இருந்து கிழித்துவிட வேண்டும் என்று துடித்தார்கள்...?  இந்த கேள்வியின் சரியான விடையில்தான், உலகத்தின் மொத்த அரசியலும் இருக்கிறது. 

அவர்கள் நம்மை விட  ‘சே’ வை நன்கு புரிந்து வைத்திருந்தார்கள்...
'சே'வை விரும்புபவர்கள், 'சே'வை பின்பற்றுபவர்கள், 'சே'வை தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டவர்களைவிட, அவனை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று விரும்பிய, அந்த அவர்கள்தான் 'சே'வை நன்கு புரிந்து வைத்திருந்தார்கள். அந்த அவர்களுக்கு தெரிந்து இருந்தது 'சே' என்பது வெறும் பெயர்ச்சொல் அல்ல. அது ஒரு இயக்கம் என்பது. அந்த இயக்கம் குறித்த நம்பிக்கை மக்களிடம் பரவுமென்றால், தாங்கள் பரிதாபமாக தோற்போம் என்பது, அந்த அவர்களுக்கு தெரிந்தே இருந்தது. அதனால், 'சே'வை யாருக்கும் தெரியாமல் கொன்று புதைத்துவிட வேண்டும் என்று விரும்பினார்கள்.
அவன் புதைக்கப்பட்ட இடம் கூட யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று நினைத்தார்கள். அப்படி செய்துவிட்டதாக சில காலம் நம்பவும் செய்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல் இல்லாமல், 'சே' இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் உடல் இவ்வுலகில் நடமாடிய காலத்தைவிட அவன் இன்று உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அவர்களுக்கு 'சே' இன்னும் அச்சமூட்டுபவனாக இருக்கிறான்.  அவனின் கண்களைக் கண்டு அவர்கள் இன்னும் நடுங்குகிறார்கள். ஆனால், அந்த  அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் மீண்டும் 'சே' மீது ஒரு தாக்குதல் தொடுக்கிறார்கள். 'சே' குறித்த பிம்பத்தை மாற்றத் துடிக்கிறார்கள். அவனை சித்தாந்தமற்ற சாகசக்காரனாக சித்தரித்து, அவனை ஒரு பண்டமாக ஆக்க பார்க்கிறார்கள்.  சட்டை, தேநீர் கோப்பை, ஏன் பீர் பாட்டில் வரை அவன் படத்தை அச்சடித்து, அவன் முகத்தை காட்டி லாபம் சம்பாதிக்க துடிக்கிறார்கள். அவர்களின் நோக்கம், இதன் மூலம் 'சே' முன்மொழிந்த சித்தாந்தத்தை பரவலாக்குவது அல்ல. 'சே'வின் சித்தாந்தத்தை மங்கலாக்கி, அவனை ஒரு திரைப்பட சாகசக்காரனாக மட்டுமே சித்தரிப்பது.
சிட்னியை சேர்ந்த கட்டுரையாளர் ரேச்சல் ராபர்ட், தன் நெஞ்சில் இல்லாவிட்டாலும், மார்புகளில் சேகுவேரா வசிக்கிறார் என்னும் கட்டுரையில்  இவ்வாறாக எழுதுகிறார், " என்னுடைய சொந்த நகரமான பைரான்பேயில் சேகுவேரா வாழ்ந்து, மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார். நான் வழக்கமாக அவரை பார்க்க முடிகிறது. சில நேரங்களில் இரவில் ரயில்வே பாருக்கு வந்து குடித்துவிட்டு இசையைக் கேட்டுச் செல்கிறார். சில நேரங்களில் நண்பர்களோடு டீக்கடையில் நின்று அரட்டை அடிக்கிறார்."
இதில் ரேச்சல் குறிப்பிடுவது, ‘சே’ முகம் பதித்த டீ -சர்ட் அணிந்து இருந்தவர்களை.



















'சே'வை ஒரு காலமும் வெல்ல முடியாது என்று முடிவுக்கு வந்த பின், 'சே'வை அவர்கள் உள்வாங்க துவங்கிவிட்டார்கள். 'சே'வை உள்வாங்குவது என்றால், அவன் சித்தாந்தத்தை அல்ல... அவனை ஒரு சாகசக்காரனாக சித்தரித்து பணம் பார்ப்பது மட்டும்தான் அவர்கள் நோக்கம். இதன் மூலம் 'சே' குறித்த பிம்பத்தை மாற்றிவிட முடியும் என்று நம்புகிறார்கள்.
நாம் அவர்களை புரிந்துகொள்வோம்... 
'சே' நிச்சயம் ஒரு சாகசக்காரன் அல்ல... நிச்சயம் சித்தாந்தமற்ற சாகசக்காரன், மரணத்தைக் கண்டு அஞ்சுவான். ஆனால் 'சே', கொல்லப்படுவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன், அவருக்கு அந்தப் பள்ளிக்கூடத்தில் உணவு கொடுத்து பேசிக்கொண்டிருந்த ஆசிரியை ஜூலியஸ் கோர்ட்டஸ் என்னும் பத்தொன்பது வயது பெண்மணியிடம், பள்ளிக்கூடச் சூழலை பார்த்துவிட்டு இவ்வாறாக சொல்கிறான், 'இதுபோன்ற சூழலில் எப்படி குழந்தைகள் இங்கு படிப்பார்கள்? ஒருவேளை  நான் பிழைத்திருந்தால் நான் உங்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருகிறேன்..' இப்படி நிச்சயம் வெறும் சாகசக்காரனால் பேச முடியாது.
'சே' தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறாக எழுதி இருக்கிறார், ''பலர் என்னை சாகசக்காரனாக அழைக்கலாம். ஒரு வித்தியாசம். தன்னுடைய நம்பிக்கைகளை உண்மையென்று காட்ட தன்னையே பணயம் வைக்கிற சாகசக்காரன்தான் நான்..."
ஆனால், அவர்கள் 'சே'வின் நம்பிக்கைகள் என்னவென்று மக்கள் தெரிந்துக் கொள்வதை விரும்புவதில்லை. அவர்களுக்கு 'சே'வும் ஒரு பண்டம்.  அவ்வளவே. 
'விளைவுகளை ஏற்படுத்தாத வார்த்தைகள் முக்கியமற்றவை...' என்பார் சே. அவன் நம்பிக்கையையும், சித்தாந்தத்தையும் புரிந்துகொள்ளாமல் வெறும் டி-சர்ட் அணிந்துகொள்வதால் மட்டும் எதுவும் நடந்துவிடப்போவதில்லை.
எப்படி அவர்கள் நம்மைவிட 'சே'வை அதிகம் புரிந்து வைத்திருக்கிறார்களோ... அதன் மூலம்  'சே'வை  வீழ்த்த, உள்வாங்க துடிக்கிறார்களோ... நாமும் அதுபோல் அவர்களை அதிகம் புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களை வெல்ல முடியும்!
 நாக்அவுட் - முகமது அலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1971 மார்ச் 8. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முகமது அலி மீண்டும் பாக்ஸிங் ரிங்குக்குத் திரும்புகிறார். உலகமே அந்த ‘நூற்றாண்டின் சண்டை’க்காகக் காத்திருந்தது. உலக சாம்பியன் ஃப்ரேஸியரை நாக்அவுட் செய்து, முகமது அலி சாம்பியனாகிவிடுவார் என 99 சதவிகிதம் பேர் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஃப்ரேஸியர், சாதாரண சோப்ளாங்கி பாக்ஸர் கிடையாது. 26 போட்டிகளில் விளையாடி ஒன்றில்கூட தோற்காத தொடர் வெற்றிவீரர். அதில் 23 முறை நாக்அவுட்டில் வெற்றி பெற்றவர். நியூயார்க்கில் நடந்த போட்டியை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. 
‘நாலே ரவுண்டில் ஃப்ரேஸியர் மண்ணைக் கவ்விவிடுவார்’ என புக்கிகள் பெட்டிங்கில் பிஸியாக இருந்தனர். போட்டி தொடங்கியது. முதல் மூன்று ரவுண்டுகளில் முகமது அலி ஃப்ரேஸியரை விரட்டி விரட்டி குத்தினார். அவருடைய ட்ரேட்மார்க் இடது கை குத்துக்கள் சரமாரியாக விழுந்தன. நான்காவது சுற்றில் போட்டி முடிந்துவிடும் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஆட்டம் திசைமாறியது. ஃப்ரேஸியர், முகமது அலியின் தாடையில் ஒரு குத்துவிட்டார். முகமது அலி நிலைகுலைந்து விழுந்தார். அதற்குப் பிறகு அவரால் சுதாரிக்கவே முடியவில்லை. ஃப்ரேஸியர், முகமது அலியை அடுத்தடுத்த சுற்றுகளில் புரட்டி எடுத்துவிட்டார். முகமது அலியின் இடது கை தாக்குதல்களை எல்லாம் தடுத்து, உள்வாங்கி, அடித்து நொறுக்கினார். 15-வது ரவுண்டில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முகமது அலி தோற்றுவிட்டார்! தொழில்முறை பாக்ஸிங்கில் 31 போட்டிகளில் தோல்வியே இல்லாமல் வீரநடை போட்ட காலம் முடிந்தது. முதன்முறையாக பாக்ஸிங் ரிங்கில் ஒரு தோல்வியைச் சந்தித்தார் முகமது அலி. 

தன் வாழ்க்கை முழுக்க இப்படிப்பட்ட மிகப் பெரிய தோல்விகளை, சறுக்கல்களைச் சந்தித்தவர்தான் முகமது அலி. ஆனால், இது எல்லா தோல்விகளைவிட மிகப் பெரியது. `முகமது அலியின் காலம் முடிந்துவிட்டது’ எனப் பத்திரிகைகள் எழுதித் தீர்த்தன. தன்னுடைய முற்போக்குக் கருத்துக்களுக்காக பெயர்போன முகமது அலியை ‘இனியாவது வாயை மூடுங்க’ எனக் கேலி செய்தன ஊடகங்கள். முகமது அலி காத்திருந்தார். தன்னுடைய ஆட்டத்தின் முறைகளை மாற்றிக்கொண்டார். பயிற்சியை இன்னும் தீவிரப்படுத்தினார். 
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1974-ம் ஆண்டு, ஜனவரி 28-ம் தேதி அதே நியூயார்க்கில், அதே மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ஃப்ரேஸியரை மீண்டும் எதிர்கொண்டார். இந்த முறை 
12 சுற்றுகளில் முகமது அலி வெற்றிபெற்றார். இந்த மூன்று ஆண்டுகளில் அவர் ‘ரோப் ஏ டூப்’ என்ற புதிய முறையைப் பின்பற்ற ஆரம்பித்திருந்தார். அந்த பாணி, அதே ஆண்டில் நடந்த சாம்பியன்ஷிப்பில் கைகொடுக்க, முகமது அலி மீண்டும் உலக சாம்பியனாக உயர்ந்தார். சவால்களால் சறுக்கி விழாமல் அதை நேருக்குநேராக எதிர்கொள்வது, காத்திருந்து அதை வெல்வது... பாக்ஸிங் ரிங்கிலும் அதற்கு வெளியிலும் இதுதான் முகமது அலியின் குணம். 
1960-களின் தொடக்கம்... தூங்கும்போதுகூட தன் ஒலிம்பிக் பதக்கத்தைக் கட்டிக்கொண்டு தூங்கிய பாக்ஸிங் இளைஞராக இருந்தார் முகமது அலி. அப்போது அவர் பெயர் காசியஸ் மார்சிலஸ் க்ளே, ஜூனியர். ரோமில் நடந்த ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்குத் தங்கப்பதக்கம் ஒன்றை பெற்றுத் திரும்பியிருந்தார். தன் நண்பர்களோடு ஹோட்டல் ஒன்றில் விருந்துக்குச் சென்ற முகமது அலிக்கு, அந்த ஹோட்டலில் அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு இருந்த மற்ற வெள்ளை அமெரிக்கர்களும் அவரை சண்டைபோட்டு விரட்ட, கோபத்தோடு கிளம்பிய முகமது அலி, அமெரிக்காவின் ஓஹியோ ஆற்றில் தன் தங்கப்பதக்கத்தை வீசி எறிந்தார். அந்தப் புறக்கணிப்பு, அவரை நிறவெறிக்கு எதிரான புரட்சியாளனாக மாற்றியது. அவர் மால்கம் எக்ஸுடன் தன்னை இணைத்துக் கொண்டார். நிறவெறிக்கு எதிரான கருத்துக்களைப் பேச ஆரம்பித்தார். 
1964-ம் ஆண்டில் உலக சாம்பியன் சன்னி லிஸ்டனை வீழ்த்திய பிறகு, அவர் தன்னை ஒரு கறுப்பின இஸ்லாமியனாக அறிவித்துக்கொண்டார். அது நிறவெறிக்கு எதிரான ஒரு நடவடிக்கை. ஆனால் அமெரிக்க ஊடகங்கள், `இது ஒரு விளம்பர ஸ்டன்ட், டிக்கெட் விலையை ஏற்றிக்கொள்ள இப்படி எல்லாம் நாடகமாடுகிறார்’ எனக் கேலி செய்தன. முகமது அலி உறுதியாக இருந்தார். ` `காஸியஸ் க்ளே' என்பது வெள்ளையர்களால் எனக்கு வைக்கப்பட்ட ஓர் அடிமைப் பெயர். நான் இப்போது சுதந்திர மனிதன். நான் யாருக்கும் அடிமை இல்லை. அவர்களுடைய பெயரை நான் திருப்பித் தருகிறேன். எனக்கான ஓர் அழகான ஆப்பிரிக்க பெயரை நானே வைத்துக்கொள்கிறேன்' என்றார். முகமது அலியாக மாறினார்.
வியட்நாம் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், முகமது அலியை போரில் கலந்துகொள்ள வற்புறுத்தியது அமெரிக்க அரசு. ‘எனக்கு வியட்நாமியர்களோடு எந்தப் பகையும் இல்லை. எந்த வியட்நாம்காரனும் என்னை `நீக்ரோ’ எனக் கீழ்த்தரமாக அழைத்தது இல்லை’ என்றார். முகமது அலியின் கோபமான எதிர்வினைக்கு, அமெரிக்க அரசு தண்டனை கொடுத்தது. 1967-ம் ஆண்டில் அவர் குத்துச் சண்டையில் கலந்துகொள்ள முடியாதபடி அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அவருடைய உலக சாம்பியன்ஷிப் பறிக்கப்பட்டது. ஆனால், அதற்கு எல்லாம் முகமது அலி வளைந்துவிடவில்லை.
அவர் அந்தச் சட்டம் செல்லுபடியாகாத ஜார்ஜியாவில் சின்னச்சின்னப் போட்டிகளில் விளையாடினார். ஆனால், போருக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். 
70-களின் இறுதியில் முகமது அலி குத்துச் சண்டையில் தன்னுடைய பிடியைத் தவறவிட்டுக் கொண்டிருந்தார். 1978-ம் ஆண்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், 1980-ம் ஆண்டில் அவர் தன் கடன் சுமைகளைக் குறைப்பதற்காக மீண்டும் குத்துச்சண்டைப் போட்டிகளுக்குத் திரும்பினார். உலக சாம்பியன் லாரிஹோம்ஸோடு மோதுவது என எடுத்த முடிவு ஆபத்தில் முடிந்தது. மிகவும் பலவீனமாக இருந்த முகமது அலியை லாரிஹோம்ஸ் அடித்து, சிதைத்தார். 125 குத்துக்களை முகத்திலும் தலையிலும் வாங்கினார் முகமது அலி. பின்னாளில் அவர் பார்க்கின்சன் நோயில் வீழ்ந்ததற்கு இந்தப் போட்டிதான் காரணம் எனக் கருதப்படுகிறது. 
முடக்குவாதத்தில் சிக்கிய முகமது அலி, கொஞ்சம் கொஞ்சமாக நிற்கவும் முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். தன் உடலிலேயே முகமது அலி சிறைவைக்கப்பட்டார். தன் தோல்விகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டதைப்போலவே தன் உடல் தளர்ந்துகொண்டிருந்த நிலையிலும் ஒரு போராளியாக எதிர்த்து நின்றார். தொடர்ந்து இயங்கினார். குத்துச்சண்டைப் போட்டிகளை கவனித்துக்கொண்டிருந்தார். பல்வேறு தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றினார். மனிதநேயராக உலகெங்கும் சுற்றி, போரினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நம்பிக்கை அளித்தார். 
முகமது அலி, தன் இளமைக் காலத்தில் கறுப்பின மக்கள் குறித்த அமெரிக்கர்களின் பார்வையை மாற்றியதில் முக்கியப் பங்காற்றியவர். கறுப்பின மக்கள், தங்களுடைய உண்மையான ஆற்றலை அறிந்துகொள்ள அவருடைய இமேஜ் மிகப் பெரிய அளவில் உதவியது. அடிமை விலங்குகளை உடைத்தெறிந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு விதைத்தது. அவருடைய பாக்ஸிங் கைகளைவிடவும் அவரது வாழ்க்கை, வலிமையான அடையாளமாக கறுப்பின மக்களிடையே பரவியது. ஓர் இஸ்லாமியராக அவர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும், இஸ்லாமின் பெயரால் நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகளையும் தொடர்ந்து எதிர்த்துவந்தார். தன் மரணத்துக்குப் பிறகு, தான் எப்படி நினைவுகூரப்பட வேண்டும் என்பதை முகமது அலி சொல்லியிருக்கிறார். 
`நான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக அவர்களுடைய சம உரிமைக்காகப் போராடிய மனிதனாகவும்தான் நினைவுகூரப்பட வேண்டும்.'
இனி, எப்போதும் அப்படித்தான் நம் நினைவில் இருப்பார் முகமது அலி.

Thursday, June 9, 2016

சைபர் குற்றங்கள்- காத்துக்கொள்வது எப்படி?


1) செல்போனை சர்வீஸ் அல்லது ரிப்பேருக்குக் கொடுத்தால் மெமரி கார்டை எடுத்துவிட வேண்டும். அதேபோல போனில் உள்ள படங்கள், வீடியோ, கான்டாக்ட்ஸ் உள்பட அனைத்தையும் பேக்அப் எடுத்து விட்டு, போனில் உள்ளவற்றை முழுமையாக அழித்துவிட்டு அதாவது ஃபேக்டரி ரீசெட் செய்துவிட்டுத் தரவேண்டும். 

2) ஃபேஸ்புக்கில் தெரியாத நபர்களிடம் இருந்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்தால், அனுப்பியவரின் விவரங்களை சரிபார்த்துவிட்டு முடிவெடுப்பது நல்லது.

3) ஃபேஸ்புக், ட்விட்டர், இ-மெயில் அக்கவுன்ட் பாஸ்வேர்டுகளை உங்கள் மெமரிக்குள் மட்டுமே சேவ் செய்யுங்கள். பேப்பரில் எழுதியோ, அலுவலக கணினியில் சேமிப்பதோ நல்லது அல்ல. 

4) நம்பிக்கைக்குரிய திருமணத் தகவல் மையங்களில் மட்டுமே உங்கள் விபரம் மற்றும் புகைப்படங்களைக் கொடுங்கள். கண்ட கண்ட இணையதளங்களில் பதிவேற்றம் செய்யவேண்டாம். 

5) செல்போனில் அவசியமான அப்ளிகேஷன்களை மட்டுமே பயன்படுத்துங்கள். கண்டதையும் பதிவிறக்கம் செய்து உங்கள் செல்போனில் இருக்கும் விபரங்களைத் திருடி எடுக்க நீங்களே வழி அமைத்துவிடாதீர்கள்! 

Friday, June 3, 2016

கூகுள்  வீடு 

லகின் முதல் வாய்ஸ் கமாண்ட் எது எனத் தெரியுமா? அரண்மனையில் ஹாயாக அமர்ந்திருக்கும் மன்னன் ‘யாரங்கே...’ எனச் சொன்னதும் 10 பேர் ஓடி வந்து நிற்பார்களே... அதுவாக இருக்குமோ!
உலகின் முதல் பாஸ்வேர்டு எது தெரியுமா? 1950-களில் வந்த ஒரு படத்தில், ஹீரோ ஒரு குகையின் முன் நின்று, `அண்டா கா கசம்... அபு கா ஹூக்கும்... திறந்திடு சீசேம்’ எனச் சொன்னதும் கதவு திறக்குமே... அதுவாக இருக்குமோ!

இந்த இரண்டு அரசகாலக் காட்சிகளிலும் ‘ஆக்‌ஷன்’ என்பது மனிதர்களால்தான் நடக்கிறது. ஓடி வரும் சேவகன்தான் அரசன் சொன்னதைச் செய்வான். பாஸ்வேர்டைக் கேட்டதும் உள்ளிருக்கும் அடிமைகள் சக்கரத்தைச் சுற்றச் சுற்ற கதவு திறக்கும். மனிதர்கள் இருக்கும் அந்த இடத்தில் மெஷின் வந்துவிட்டால், அதுதான் `ஸ்மார்ட் காலம்’. இந்த ஸ்மார்ட் யுகத்தை ஆளும் கூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி தயாரிப்பான ‘கூகுள் ஹோம்’தான் சமீபத்திய ஆன்லைன் சென்சேஷன்.

கூகுள் ஹோம்? நாம் சொல்வதைக் கேட்டு, அதற்குத் தேவையான தகவல்களை கூகுளின் மற்ற சேவைகளில் தேடி நமக்குப் பதிலாகத் தரும் ஒரு தானியங்கு சேவைதான் ‘கூகுள் ஹோம்’. 
காலையில் எழுந்தவுடன் பாத்ரூமில் பல் துலக்கிக்கொண்டே `இன்னைக்கு மழை வருமா?' என்றால், உடனே கூகுள் வெதரில் என்ன அப்டேட் இருக்கிறது என்பதைத் தேடி, `நல்ல மழை இருக்காம்... 

குடையை மறக்காதீங்க' என பதில் சொல்லும். டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்து சட்டையை மாட்டிக்கொண்டே `யார் யாருக்கு இன்று அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்கிறேன்?’ எனக் கேட்டால், கூகுள் கேலண்டரில் தேடி, அவர்கள் பெயரைச் சொல்லும். டைனிங் டேபிளுக்கு வந்து ‘இன்று என் டயட் என்ன?’ என்றால் அதையும் சொல்லும். மாலை வீடு திரும்பியதும், ‘ `ஜித்து ஜில்லாடி...' பாட்டைப் போடுப்பா’ என்றால் உடனே தேவா பாடத் தொடங்குவார். உங்கள் வீட்டில் எந்த இடத்தில் இருந்தும், என்ன கேட்டாலும் தேடிப்பிடித்துப் பதில் சொல்லிவிடும் கூகுள் ஹோம். எப்படி?

கூகுள் ஹோமில் மூன்று முக்கிய விஷயங்கள் உள்ளன. ஒன்று, ப்ளூடூத் அல்லது வைஃபை மூலம் கனெக்ட் செய்யப்பட்ட ஸ்பீக்கர். இரண்டு, உங்கள் குரலை மிக நுண்ணியமாகக் கண்டறியக்கூடிய மைக்குகள். இவற்றை உங்கள் வீட்டின் எல்லா அறைகளிலும் பொருத்திவிட வேண்டும். மூன்று, இதன் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் ப்ராசஸர். நீங்கள் சொல்வதை மைக் மூலம் கேட்டு, தேவையான தகவலை இணையம் மூலம் ப்ராஸசர் தேடி, பதிலை ஸ்பீக்கர் மூலம் உங்களுக்குச் சொல்லும்... தீர்ந்தது விஷயம்.

ஆப்பிள் மொபைல்களில் அறிமுகப்படுத்தப் பட்ட ‘சிரி’யின் விஸ்வரூப வெர்ஷன்தான் `கூகுள் ஹோம்' எனச் சொல்லலாம். அது மொபைல் அளவில் செய்வதை இது வீடு முழுக்கச் செய்கிறது. கூகுள் தரும் பல சேவைகளைத்தான் பெரும் பாலோனோர் பயன்படுத்தி வருகிறார்கள். அதை  எல்லாம் கூகுள் ஹோம் ஒருங்கிணைத்துத் தருவதால், மற்ற வாய்ஸ்- அசிஸ்டென்ட்களைவிட கூகுள் ஹோமுக்கு மவுசு அதிகம்.

கூகுள் தனது சேவைகளைத் தாண்டி, பல முன்னணி நிறுவனங்களுடன் கைகோக்க இருக்கிறது. டி.வி., வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூகுள் ஹோம் இணையும்போது அந்த ஸ்மார்ட் பொருட்களையும் நம் குரல் மூலமே செயல்படுத்த முடியும். இனி, ரிமோட்டுக்கு சண்டை வராது. `ஓவர் சத்தமா இருக்கு... கொஞ்சம் சவுண்ட் குறை எல்ஜி' என அம்மா கிச்சனில் இருந்தே சொல்லிவிடுவார். ஆனால், யார் குரலை அது கேட்க வேண்டும் என்பதில் குடும்பப் போரே வரலாம். 

கூகுள் ஹோமின் இன்னொரு ஸ்பெஷல், இதன் கூடவே வரும் குரோம் காஸ்ட் மென்பொருள். வீட்டில் இருக்கும் எல்லா அறை களையும் கோ-ஆர்டினேட் செய்யும் வேலையைக் கச்சித மாகச் செய்யும். கூகுள் ஹோம் ஸ்பீக்கரும் பார்க்க ஸ்லீக் ஆக இருக்கிறது. இதன் அடிப் பாகத்தை அந்தந்த அறையின் சுவர் நிறத்துக்கு ஏற்றதுபோல மாற்றிக்கொள்ள முடியும் என்பது ஹைலைட்.

ஆப்பிளின் சேவைக்கு `சிரி’ எனப் பெயர். அமேஸானின் புராடக்டை `அலெக்ஸா' என அழைத்தார்கள். மெஷின் என்றாலும் நாம் கேட்பதற் கெல்லாம் பதில் சொல்வதால், அதையும் சக மனிதனாகவே நாம் உணர்வோம். அதனால் அதற்கு `சிரி', `அலெக்ஸா' போன்ற பெயர்கள் ஒரு நெருக்கத்தைக் கொடுக்கும். `சிரி... இப்ப என்ன படம் சத்யம்ல ஓடுது?', `அலெக்ஸா... பெங்களூருக்கு அடுத்த ஃப்ளைட் எப்போ?' எனக் கேட்கும்போது அவற்றையும் நம் குடும்பத்தில் ஓர் உறுப்பினர்போல நினைப்போம். கூகுள் அப்படி ஒரு பெயரை இன்னும் சூட்டவில்லை. இதை ஒரு முக்கியமான குறையாக நினைக்கிறார்கள் டெக்கி விமர்சகர்கள். விலை, கிட்டத்தட்ட அமேஸான் எக்கோ விலையாக இருக்கலாம். இந்திய மதிப்பில் 15,000 ரூபாய்.

இந்த மேஜிக் எல்லாமே ஆங்கிலத்தில் மட்டுமே செல்லுபடியாகும். `தமிழுக்கு இப்ப வராதா?’ என்ற கேள்விக்கு கபாலியைப்போல கையைப் பிசைகிறார்கள் கூகுள் ஃபேன்ஸ். அப்படியே வந்தாலும், சென்னைத்தமிழ், கோவைத்தமிழ், நெல்லைத்தமிழ் என பல விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கும். அது நடக்கும் வரை `ஹே கூகுள்... வில் இட் ரெயின் டுடே?'தான்

மருத்துவ நுழைவுத் தேர்வு! 

என்னதான் நடக்கிறது

நீட்’ ( NEET- National Eligibility cum Entrance Test)  என்பது 2013-ம் ஆண்டில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட, மருத்துவப் படிப்புக்கான புதிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுமுறை. இதன்படி இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி. மற்றும் எம்.எஸ்... ஆகிய மருத்துவப் படிப்புகளைப் படிக்க, இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்று அந்த மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே ஸீட் ஒதுக்கப்படும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வு சி.பி.எஸ்.இ சிலபஸை அடிப்படையாகக் கொண்டது. இந்த அறிவிப்பு இந்தியா முழுக்க கடும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. 

தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் சி.பி.எஸ்.இ சிலபஸ் அல்லாத தனித்த பாடத் திட்டத்தைக் கொண்டுள்ளவை. இந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இனிமேல் சி.பி.எஸ்.இ முறைப்படி அமைந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்றால்தான் மருத்துவப் படிப்புக்கே செல்ல முடியும் என்பது மிகப்பெரிய அநீதி என்று எதிர்ப்புகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, ‘நீட்’ பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்துசெய்யக்கோரி மொத்தம் 115 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிமன்றம், ‘ ‘நீட்’ நுழைவுத் தேர்வு, சட்ட விரோதமானது மற்றும் அரசியல் சட்ட சாசனத்துக்கு எதிரானது’ என்று கூறி தள்ளுபடி செய்தது. இந்த நிலையில்தான் அதே உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த ஏப்ரல் 11-ம் தேதி, ‘நீட்’ தேர்வுக்கு அனுமதி அளித்துள்ளது. மறுபடியும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு எழவே... இந்த ஓர் ஆண்டு மட்டும் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அவசரச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டத்துக்குத் தடை கேட்டு ஒருவர் மனு தாக்கல் செய்ய... அதையும் ரத்துசெய்திருக்கிறது நீதிமன்றம். இறுதியாக... ‘நீட்’ நுழைவுத் தேர்வு என்பது, தமிழகம் உள்ளிட்ட தனித்த பாடத் திட்டத்தைப் பின்பற்றும் மாநிலங்களுக்கு, இந்த ஆண்டு கிடையாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அடுத்த ஆண்டு முதல் இந்த நுழைவுத் தேர்வு உண்டு. 

இது என்ன மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும்? கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினேன். 

‘‘ ‘நீட்’ நுழைவுத் தேர்வு என்பது மாணவர்களின் தகுதியைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் மேல்நிலைக் கல்வி தகுதி இல்லாததா? 10-ம் வகுப்பையும், 12-ம் வகுப்பையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்க முடியாது. 10-ம் வகுப்பு வரையிலும் எல்லாப் பாடங்களையும் படிக்கின்றனர். 11-ம் வகுப்பு செல்லும்போதே, குறிப்பிட்ட ஒரு பாடத்தைத் தேர்வுசெய்து அதை ஒட்டியவற்றைத்தான் படிக்கின்றனர். அதில் தேர்வுபெற்றுதான் அவர்கள் உயர் கல்விக்கு வருகின்றனர். அப்படி இருக்கும்போது, மீண்டும் ஒரு தகுதித்தேர்வு என்பது அவசியம் இல்லாதது; நியாயமற்றது.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மேல்நிலைக் கல்வியைப் பின்பற்றி இதுவரை மருத்துவப் படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதில் ஏதேனும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதா என்பதை முதலில் விளக்க வேண்டும். அப்படி எந்தச் சிக்கலும் இல்லாதபோது எதற்காக இந்தப் புதிய தேர்வுமுறை? ஒருவேளை, ‘இது மருத்துவப் படிப்பின் தரத்தை மேம்படுத்தும்’ எனச் சொல்லப்படலாம். இவர்கள் தரம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது, இந்தப் புதிய நுழைவுத் தேர்வுமுறை சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தின்படி அமைந்திருப்பதைதான். சி.பி.எஸ்.இ-தான் தரமானது என்று யார் முடிவுசெய்வது? 

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு வரையிலும் ஒரே வகையான பாடத் திட்டத்துடன் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் வரையிலும், மெட்ரிக் என்ற பெயரைவைத்துக்கொண்டு தனியார் கல்வி நிறுவனங்கள், தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொண்டிருந்தனர். இப்போது அரசுப் பள்ளியிலும் அதே பாடத் திட்டம் என்பதால், அப்படி வேறுபடுத்திக்காட்டிக்கொள்ள  முடியவில்லை. எனவே சி.பி.எஸ்.இ உயர்ந்தது என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர். CBSE, CBSE-I (International) என இரண்டு வகையான சி.பி.எஸ்.இ சிலபஸ்கள் இருக்கின்றன. இப்போது சி.பி.எஸ்.இ-தான் சிறந்தது எனச் சொல்பவர்கள், நாளை சி.பி.எஸ்.இ-இன்டர் நேஷனல்தான் சிறந்தது எனச் சொல்வார்களா? அதனால் இது கழுதையின் முன்னே கேரட்டைக் கட்டி வித்தை காட்டும் வேலை. 

மத்திய அரசைப் பொறுத்தவரை நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் சி.பி.எஸ்.இ சிலபஸுக்கு மாற்றிவிட்டால், தங்கள் கொள்கைகளை அமல்படுத்த வசதியாக இருக்கும். சம்ஸ்கிருதத்தைக் கொண்டுவரலாம்; மகாபாரதத்தைப் பாடத்தில் சேர்க்கலாம்; பகவத்கீதையைக் கட்டாயமாக்கலாம். யாரும், ‘நாங்கள் மாநில அரசின் பாடத் திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள். இதை ஏற்க முடியாது’ எனச் சொல்ல முடியாது இல்லையா? 

அதனால்தான் மத்திய அரசும் இதை விரும்புகிறது; ஊக்குவிக்கிறது. ஆனால், இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி, ஒவ்வொரு மாநில அரசுக்கும் தன் மாநிலத்தின் நலன் சார்ந்து ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கிக்கொள்ள உரிமை இருக்கிறது. பயிற்று மொழி வரைக்கும் மாநிலமே தீர்மானிக்கலாம். இந்த அதிகாரத்தை பறித்துக்கொள்ள இப்போது மத்திய அரசு முயற்சிசெய்கிறது. கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருக்கிறது. 2007-ம் ஆண்டு தமிழ்நாட்டில் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்துசெய்து இயற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல்கூட பெறப்பட்டுள்ளது.

 இதில் மத்திய அரசு நுழைவதற்கோ, சட்டம் போடுவதற்கோ வாய்ப்பு இல்லை. இதைக் கருத்தில் எடுத்துதான் 2013-ம் ஆண்டில் ‘நீட்‘ நுழைவுத் தேர்வை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 
கல்விசார்ந்த எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஒரு வல்லுநர் குழு அமைத்து ஆய்வுசெய்து அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால் இப்போது ‘நீட்’ விஷயத்தில் அப்படி எந்த வல்லுநர் குழு ஆய்வுக்கும் உத்தரவிடாமல் உச்ச நீதிமன்றம் அதிரடியாகச் செயல்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்துசெய்யப்பட்ட சட்டம் நடைமுறையில் இருக்கும்போது, இந்தத் தீர்ப்பை எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்பது உச்ச நீதிமன்றத்தில் விவாதத்துக்கே வரவில்லை’’ என்கிறார் பிரின்ஸ்.  

அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ அமல்படுத்தப் படும் என்றால், பெற்றோர்கள் மத்தியில் எந்தவித பாடத் திட்டத்தில் பிள்ளைகளைப் படிக்கவைப்பது என்ற குழப்பம் ஏற்படும். இப்படி ஒரு நிலை வந்தால் அல்லது வரக்கூடும் எனத் தெரிந்தால், பெற்றோர்கள் தாங்களாகவே சமச்சீர் கல்வியில் இருந்து பிள்ளைகளை விலக்கி, சி.பி.எஸ்.இ பக்கம் சென்றுவிடுவார்கள். ஏற்கெனவே சி.பி.எஸ்.இ மோகம் பெற்றோரை ஆட்டிப்படைக்கும் நிலையில், ‘சமச்சீரில் படித்தால் தன் பிள்ளையால் டாக்டராக முடியாது’ என்ற நிலை வருமானால், முற்றிலுமாக இதை வெறுத்து ஒதுக்கி அந்தப் பக்கம் ஓடுவார்கள். எனவே, ‘நீட்’ தேர்வு என்பது ஒருவகையில் மாநில வாரியான பாடத் திட்டங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டும் வேலைதான். 

தேசியக் கட்சிகளுக்கு, குறிப்பாக ஒரு மத அடையாளத்தை தன் முகமாகக் கொண்டிருக்கிற பா.ஜ.க-வுக்கு, பிரதேச அடையாளங்கள் தொல்லையாக இருக்கின்றன. பாய்ச்சலோடு முன்னேறிச் செல்ல மாநிலவாரியான மொழி, கல்விமுறை, கலாசாரம் ஆகியவை தடையாக இருக்கின்றன. ஒரே தேசம், ஒரே கலாசாரம், ஒரே கடவுள் என்ற முழக்கத்தை நிறுவுவதற்கு எதிர்படும் தடைகள் அனைத்தையும் உடைக்க நினைக்கிறார்கள். ‘நீட்’ தேர்வின் சாராம்சமும் கிட்டத்தட்ட அதுவேதான். சமச்சீர் கல்வியே பிரச்னை எனத் திசைதிருப்பிவிடும் வேலை, அது கொண்டுவரப்பட்ட நாள் முதலாக நடக்கிறது.  ‘நீட்’ போன்றவற்றைப் பொருத்தமான சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டு, சமச்சீர் மீதான எதிர்மறைக் கருத்துக்களைத் தொடர்ந்து பரப்புகின்றனர்.  மேலும், எந்த ஒரு மாநிலமும் தன்னிச்சையாக ஒரு பாடத் திட்டத்தை வகுத்துவிட முடியாது. மாநிலங்கள் ஒரு பாடத் திட்டத்தை வகுத்த பிறகு, தேசிய அளவிலான என்.சி.ஆர்.டி என்ற அமைப்புக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, curriculum focus group என ஒரு குழுவை வைத்துள்ளது. அந்தக் குழு, அந்தக்  குறிப்பிட்ட மாநிலப் பாடத் திட்டத்தின் தரத்தை ஆய்வுசெய்து, தேசியப் பாடத் திட்டத்துடன் ஒன்றிவருகிறதா என்பதைப் பரிசீலித்துப் பிறகுதான் அனுமதிதருகிறது. எனவே, மாநில மொழி பாடத் திட்டங்களின் தரமின்மை குறித்த வாதம் நியாயமற்றது. உண்மையிலேயே தமிழ்நாடு போன்ற மாநில மொழிப் பாடத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என நினைத்தால், அதற்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. தமிழ்நாட்டில், கடந்த 12 ஆண்டுகளாக ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ வகுப்புகளுக்கு சிலபஸைச் சீராய்வுசெய்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிலபஸை மேம்படுத்தி, பாடப் புத்தகமும் தயாராகிவிட்டது. அதை அச்சடிக்காமல் வைத்திருக்கிறார்கள். இதைச் செய்தாலே நவீனப் பாடத் திட்டத்துக்கு தமிழக மேல்நிலைக் கல்வி உயர்ந்துவிடும். 

இதில் கவனிக்க வேண்டிய மற்றோர் அம்சம், ‘நீட்’ என்ற இந்தப் புதிய நுழைவுத் தேர்வுமுறை, கோச்சிங் வகுப்புகளுக்கான மேலும் ஒரு சந்தையை உருவாக்கும். ஐ.ஐ.டி-க்கு அப்படித்தான் நடக்கிறது. சி.பி.எஸ்.இ முறையில் படித்தவர்கள்தான் ஒவ்வோர் ஆண்டும், அதிக அளவில் ஐ.ஐ.டி-க்குச் செல்கின்றனர். அவர்களில் அதிகப்பட்சம் பேர், ஐ.ஐ.டி-க்கு என்று தனியாக கோச்சிங் கிளாஸ் சென்றவர்களாக இருப்பார்கள். சி.பி.எஸ்.இ சிலபஸ் சிறந்தது என்றால், அதை மட்டுமே படித்து அல்லவா ஐ.ஐ.டி-க்கு செல்ல வேண்டும்? எனவே நீட் நுழைவுத் தேர்வுக்கும் தனிப்பட்ட கோச்சிங் சென்டர்கள் நாடு முழுவதும் உருவாகும். ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பார்கள். அந்தக் கட்டணத்தை நடுத்தர மற்றும் பணக்கார மாணவர்களால் மட்டுமே கட்ட முடியும். மறுபடியும் ஏழை மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் போட்டியில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். ‘நீட்’ நுழைவுத் தேர்வு என்பது எப்படிப் பார்த்தாலும் பெரும்பான்மை ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. இதன் அபாயத்தை இன்னும் தமிழ்நாடு முழுமையாக உணரவில்லை. அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில், தேர்தல் முடிந்துவிட்டது