Thursday, February 27, 2014

'இந்த மண்ணில் இனி எதுவும் விளையாது’ என  சென்றவர்கள், திரும்பிய அதிசயம்
 
'காதலின் அருமை, பிரிவில்
மனைவியின் அருமை, மறைவில்
நீரின் அருமை அறிவாய், கோடையிலே...’
 
சத்திய வார்த்தைகளை சந்தமாக்கி வைத்திருக்கிறார், கவிஞர் வைரமுத்து. பருவநிலை மாற்றத்தில் உயிரினப் பன்மயம் பலத்த அடி வாங்கிக் கிடக்கும் சூழலில், ஆண்டின் அத்தனை நாட்களுமே கோடையாகத்தான் இருக்கின்றன. கோடை வருவதற்கு முன்னரே ஓடைகள் வற்றிவிட்டன. கிணறுகள் வெறும் கிடங்குகளாகவும், குளங்களில் குரும்பாடுகள் மேய்ந்து கொண்டும், ஆறுகளில் லாரிகள் ஓடிக்கொண்டும் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், 'வரலாறு காணாத வறட்சி'யில் தமிழகம் சிக்கி பல ஆண்டுகளாக வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது.
 
எல்லாம் சரிதான். இந்த வறட்சியை வரவழைத்ததில் நமக்கும் பங்குண்டுதானே? நமது தவறுகளை, நாம்தானே சரி செய்ய வேண்டும். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடிப்பதுதானே முறை. 'வறட்சி... வறட்சி’ என விரக்தியில் வீறிடுவதை விட, அதை விரட்டும் வழிமுறைகளைக் கையிலெடுக்க வேண்டும். இது சாத்தியமில்லாத ஒன்றல்ல. தங்கள் செயல் மூலமாக சாத்தியப்படுத்திக் காட்டியிருகிறார்கள், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர். கோம்பை பகுதியைச் சேர்ந்த சாமான்ய மக்கள்.
 
தொப்பியசாமி மலையின் மேற்குப் பகுதியில், காப்புக்காடுகளுக்கு கீழ், செம்மண் சரளை பூமியில் அமைந்திருக்கிறது இந்தப்பகுதி. மலையில் கிடைக்கும் மழைத் தண்ணீர், ஓடைகள் வழியாக... வடுகம்பாடி, ஆர்.புதுக்கோட்டை, வாணிக்கரை, கூம்பூர் வழியாக ஈசநத்தம் சென்று குடகனாற்றில் கலந்து, அங்கிருந்து அமராவதி ஆற்றில் ஐக்கியமாகி, காவேரியில் கலந்து கடலில் சேர்கிறது. தரைமட்டத்தில் இருந்து, 360 மீட்டர் மேடான பகுதி என்பதாலும், பெய்யும் மழைநீர் உடனே ஓடி விடுவதாலும், வானம் பார்த்த வெள்ளாமைதான் சாத்தியமாக இருந்தது. ஒரு கட்டத்தில், மழையில்லாமல் மானாவாரி வெள்ளாமைக்கும் வழியில்லாமல், பஞ்சம் பிழைக்க வேறு ஊர்களுக்கு பயணப்பட்டனர் இவ்வூர் மக்கள். இந்நிலையில், 2010-ம் ஆண்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த வள்ளலாரின் பார்வை, இந்தப் பகுதி மீது விழுந்தது. அதன் பிறகுதான், அந்த மாபெரும் மாற்றம் நடந்தேறியது. 'இந்த மண்ணில் இனி எதுவும் விளையாது’ என எண்ணி வெளியூருக்குச் சென்றவர்கள், ஊர் திரும்பிய அதிசயம் அரங்கேறியது.
 
இது எப்படி சாத்தியமாயிற்று..?
 
திட்டத்தை செயல்படுத்திய மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் விரிவாக்க அலுவலரும் உதவிப் பொறியாளருமான பிரிட்டோ சொல்வதைக் கேளுங்களேன்..!
''இது ரொம்ப வளமான பகுதி, ஆனா, ஏன் வறட்சியா இருக்குனு கலெக்டர் (வள்ளலார்) எங்களை விசாரிச்சதோட, அந்தப் பகுதியைப் பத்தின அத்தனை தகவல்களையும் திரட்டச் சொன்னாரு. நாங்களும் பழைய வரைப்படங்களையும் அந்தப்பகுதியில இருந்த வயசானவங்ககிட்டயும் விசாரிச்சு நிறைய தகவல்களைத் திரட்டினோம். அதோட, கூகுள் மேப்ல பாத்தப்போ, அந்தப் பகுதியில ஏழு குளங்கள் இருந்ததைக் கண்டுபிடிச்சோம். ஆனா, அங்க முதல் குளமும், ஏழாவது குளமும் மட்டும்தான் கொஞ்சமா இருந்துச்சு. மத்த குளங்கள் இருந்த அடையாளமே இல்ல. அந்தப் பகுதியில தண்ணியில்லாததால விவசாயமே இல்லை. ஆடு, மாடு வளர்க்கக்கூட தண்ணியில்லாததாலதான் வெளியூர்களுக்கு வேலை தேடிப் போக ஆரம்பிச்சாங்க.
 
அந்தப்பகுதியில முதல்ல நீராதாரத்தைப் பெருக்கணும்னு முடிவு செஞ்சு, குளங்களைப் புனரமைக்க ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல 'வேண்டாத வேலை’னு ஒதுங்கி நின்னு வேடிக்கை பாத்த ஊர்மக்கள், நாங்க ஒரு குளத்தைத் தயார் செஞ்சதும், ஆர்வமா களத்துல இறங்கிட்டாங்க. 100 நாள் வேலை திட்ட பணியாளர்களையும் இதுல ஈடுபடுத்தி ஏழு குளங்களையும் புதுப்பிச்சோம். ஒரு குளம் நிரம்பி, அடுத்த குளத்துக்கு தண்ணி போற மாதிரி, 21 கிலோ மீட்டர் நீளத்துக்கு கால்வாய்களை சரி செஞ்சோம். இதெல்லாம் செஞ்சி முடிக்கவும்... ஒரு மழை பெய்யவும் சரியா இருந்துச்சு. கிணறுகள்லயும், போர்வெல்லயும் தண்ணி ஊறிச்சு. மானாவாரி விவசாயத்துக்குக்கூட வழியில்லாம இருந்த நிலத்துல, இறவை விவசாயம் செழிக்க ஆரம்பிச்சது.
 
2011-ம் வருஷ ஆரம்பத்துல 18 ஹெக்டேர் நிலத்துல விவசாயம் நடந்துச்சு. இதைக் கேள்விப்பட்டு வெளியூர்களுக்கு வேலைக்குப் போன 21 குடும்பங்கள் ஊர் திரும்பினாங்க. அதே வருஷம் ஜூன் மாசம் 31 ஹெக்டேர்ல கடலை, தக்காளி, வெங்காயம்...னு விவசாயம் ஜோரா நடந்துச்சு. கால்நடைகளும் அதிகமாச்சு. இந்த மூணு வருஷத்துல அந்தப் பகுதியில மூணு நாட்கள் மட்டுமே மழை கிடைச்சுருக்கு. இருந்தாலும், இன்னமும் அங்க விவசாயம் நடக்குது. இவ்வளவு நாளும், மண்ணோட ஈரப்பதம் காக்கப்பட்டு வர்றதுக்கு காரணம் குளங்களை இணைச்சதுதான்'' என்கிறார். பிரிட்டோ.
 
 
குளங்கள் இணைப்புத் திட்டத்தின் முதல் தளமான கிழக்கு மெத்தைப்பட்டி கிராமத் துக்குச் சென்றோம். மழையில்லாமல் மொத்தப் பகுதியும் காய்ந்து போய் கிடந் தாலும், சில இடங்களில் முனைப்பாக நடந்து கொண்டிருந்தது, விவசாயம். ஆலமரத் துக்குக் கீழே இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த திருமலைசாமியிடம் பேசினோம்.
 
''கலெக்டர் ஐயா, குளங்களை சரி செஞ்சு கொடுத்த பிறகு வெள்ளாமை நல்லா இருந்துச்சு. ஆனா, தொடர்ந்து மூணு வருஷமா மழையில்லாததால பல போர்வெல் கிணறுகள்ல தண்ணி கீழ போயிடுச்சு. இருந்தாலும், சிலர் இன்னும் செழும்பா வெள்ளாமை பாத்துட்டுதான் இருக்காங்க'' என்று கைகாட்டினார்.
 
அவரைத் தொடர்ந்து பேசிய தங்கராஜ், ''ஒரு காலத்துல வெள்ளாமை செய்ய முடியாம காடா இருந்த பூமிங்க. 1950-கள்ல எங்க முப்பாட்டன் பாப்பா நாயக்கர்தான் இதை விவசாய பூமியா மாத்துனாரு. அதுக்கு முன்ன வரை, மலையில பெய்ஞ்ச மழைத்தண்ணி ஒரே ஓட்டமா கீழ ஓடிப் போயிட்டு இருந்துச்சு. எங்க பாட்டன், மலையில இருந்து வாய்க்கால் வெட்டி, ஊர்ப் பக்கமா தண்ணியைக் கொண்டு வந்தாரு. அப்படிக் கொண்டு வந்தவரு, குறிப்பிட்ட இடைவெளிகள்ல சின்னச்சின்னதா குளங்களை வெட்டினாரு. அங்கங்க கிணறுகளையும் வெட்டி, கிணத்துக்கு மேல் பக்கமா மண்ணைக் கொட்டி கரை எடுத்தாரு. அதனால பெய்ற மழைத் தண்ணி கரையில தேங்க ஆரம்பிச்சது. கிணத்துல தண்ணி கொறையாம இருந்துச்சு. எங்க காலத்துல அதை முறையா பராமரிக்காம விட்டதுல, வாய்க்கா தூந்துப் போயி, தண்ணி வராம குளங்கள் அழிஞ்சுப் போச்சு. குளங்களை சரி பண்ணி கொடுத்த உடனே ஒரு மழை கிடைக்கவும், கிணறுகள்ல தண்ணி வந்துச்சு. மறுபடியும் விவசாயத்தை ஆரம்பிச்சுட்டோம்'' என்கிறார் குரலில் உற்சாகத்தைத் தேக்கியவராக.
 
இந்த கடும் வறட்சியிலும் வெங்காயம் அறுவடை முடித்து, அடுத்த விவசாயத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த பாப்ப நாயக்கர், ''என் வயலுக்கு மேல இருக்கற ஓட்டைமடை குளம் மழைத்தண்ணியால நிறைஞ்ச, ஒரே நாள்ல என் கிணத்துல தண்ணி மேல வந்துடுச்சு. வெங்காயம், தக்காளி...னு போட்டு எடுத்தேன். ஊர் உலகத்துல தக்காளி வரத்து குறையற நேரத்துல எங்க பகுதியில தக்காளி சக்கைப்போடு போடும். அதனால, இயல்பாவே நல்ல விலை கிடைக்கும். இப்ப வெங்காயம் போட்டு எடுத்துட்டேன். முருங்கையும் என் வயல்ல இருக்கு. இந்த பஞ்ச காலத்துலயும், நான் நஞ்சை விவசாயம் பண்றேன்னா அதுக்கு காரணம் இந்த குளம்தான்'' என்றவர்,
 
 
''தண்ணி இருந்தாலும், பல நேரங்கள்ல கரன்ட் இருக்குறதில்ல. அதனால நிலத்துல ஒரு மூலையில, பள்ளம் தோண்டி, களிமண்ணைக் கொட்டி, தொட்டி மாதிரி கட்டி வெச்சிருக்கேன். கரன்ட் இருக்கும்போது, அதுல தண்ணியை நிரப்பிக்குவேன். தேவைப்படும்போது, தொட்டியில இருந்து வாய்க்கா வழியா பாசனம் செஞ்சுக்குவேன். இந்தக் கரையில 50 வாழைக இருக்கு. அது மூலமா ஒரு வருமானம் கிடைக்குது'' என்று தான் பயன்படுத்தி பலன் பார்த்து வரும் தொழில்நுட்பம் ஒன்றை பேச்சின் போக்கிலேயே நம்மிடம் பதிய வைத்தார்!
 
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் பொறியாளர் பிரிட்டோ, தன் பேச்சினூடே... தண்ணீர் சேமிக்க மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், குளங்களைப் பராமரிக்கும் முறைகள், போர்வெல் போடும்போது கவனிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் என்று நிறைய விஷயங்களைப் பகிர்ந்தார். ஒவ்வொன்றும் 'அடடா’ ரகம்.

Thursday, February 20, 2014

உலகின் டாப் 5 இந்தியர்கள்!
 
 'எந்த நாட்டுக்காரன் என்று பார்க்காதே... திறமைசாலியைத் தலைவனாக்கு!’  இதுதான் இப்போது பன்னாட்டு நிறுவனங்களின் சக்சஸ் மந்திரம்! அந்த ஃபார்முலாபடி உலகின் முதன்மையான சாஃப்ட்வேர் நிறுவனத்துக்கு  இந்தியரான சத்யா நாதெள்ளா, சி.இ.ஓ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். சமீபமாக, உலகின் டாப் நிறுவனங்கள் பலவற்றின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியர்களே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். பெப்ஸி நிறுவனத்தை இந்தியாவின் இந்திரா நூயி திறம்பட நடத்துவது முதல், இணையத்தின் திசையைத் தீர்மானிக்கும் முடிவுகளை எடுப்பது வரை, பல கட்டங்களில் இந்தியர்களின் ஆற்றலே உலக இயக்கத்தைத் தீர்மானிக்கிறது. அப்படி உயர்நிலை அதிகாரத்தில் இருக்கும் டாப்5 இந்தியர்கள் பற்றிய மினி பயோடேட்டா இங்கே...
 
சத்யா நாதெள்ளா   சி.இ.ஓ., மைக்ரோசாஃப்ட்
 
'''சத்யாவைத் தவிர வேறு ஒருவர் மைக்ரோசாஃப்டை திறம்பட நடத்த முடியாது!’ என அந்த நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸே பாராட்டுப் பத்திரம் வாசிக்கும், சத்யா நாதெள் ளாவுக்கு 46 வயது. ஹைதராபாத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு மகனாகப் பிறந்தவர், அமெரிக் காவில் எம்.எஸ். படித்து முடித்துவிட்டு 1992-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 22 வருடங்கள் அங்கேயே பணி. பில் கேட்ஸ் தலைமையில் வெளியான 'விண்டோஸ் விஸ்டா’ பெரும் தோல்வி. ஸ்டீவ் பாமர் தலைமையில் அணி வெளியிட்ட சர்ஃபேஸ் டேப்லெட் சாதனம் மிகப்பெரும் தோல்வி. மேகக்கணினிய பாதையில் நிறுவனத்தை நடத்த முடிகிறவருக்கே அடுத்த தலைமைப் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், பல வருடங்களாக மைக்ரோசாஃப்டின் கணினியப் பிரிவுக்குத்
 
தலைமையேற்று சிறப்பாக நடத்திக்கொண்டிருந்ததால் சத்யாவுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் ரசிகரான சத்யா, ''டீம் ஸ்பிரிட்டையும் லீடர்ஷிப்பையும் கிரிக்கெட்டில் இருந்துதான் கற்றுக்கொண்டேன்'' என்கிறார்!
 
சுந்தர் பிச்சை
துணைத் தலைவர், கூகுள். தலைவர்  ஆண்ட்ராய்ட், க்ரோம், கூகுள் ஆப்ஸ் பிரிவு
 
சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் படித்த சுந்தர் பிச்சைதான் கூகுள் நிறுவனத்தில் ஆண்ட்ராய்ட், கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் ஆப்ஸ் பிரிவுக்குத் தலைவர். 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்துக்குள் நுழைந்த சுந்தர், புதியதை உருவாக்குவதில் வல்லவர். 'இன்னொரு பிரவுஸர் தேவையா?’ என்று கேள்விகளுக்கு மத்தியில், கூகுள் க்ரோமை அறிமுகப்படுத்தி
 
வியக்கவைத்தவர். இப்போது உலகின் வேகமான, எளிமையான, பாதுகாப்பான பிரவுஸராக முதல் இடத்தில் இருக்கிறது க்ரோம். உலகின் மூன்றில் ஒரு பங்கு ஸ்மார்ட்போன்களில் இடம்பிடித்திருக்கும் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்-ஸை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்றிருப்பவர் சுந்தர் பிச்சை. மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் நிறுவனங்கள் சுந்தரைக் கொத்திக் கொண்டு போக முயற்சிக்கும்  ஒவ்வொரு முறையும், 50 கோடி ரூபாய் போனஸ் கொடுத்து சுந்தரைத் தக்கவைத்துவருகிறது கூகுள்!  
 
சாந்தனு நாராயணன்
தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி, அடோப் சிஸ்டம்ஸ்.
சுமார் மூஞ்சி குமார்களுக்கு அல்ட்ரா டச் கொடுக்கும் போட்டோஷாப்பை உருவாக்கியது அடோப் சிஸ்டம்ஸ். அந்த நிறுவனத்தின் தலைவர் சாந்தனு நாராயணன், ஆந்திராவைச் சேர்ந்த உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். முதலில் ஆப்பிள் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கிய சாந்தனு, டிஜிட்டல் போட்டோ ஷேரிங் இணையதளமான 'பிக்ட்ரா’வை உருவாக்கியவர். 2007-ம் ஆண்டு முதல் அடோப் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சாந்தனு, அடோப் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் வாங்க கடுமையாகப் போராடிவரும் நிலையில், அடோப்பில் புதுப் புது தொழில்நுட்பங்களுடன்கூடிய சாஃப்ட்வேர்களை உருவாக்கி முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறார். இவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் ஒருவர்!  
 
சஞ்சய் மெஹ்ரோத்ரா
நிறுவனர், தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி, சான்டிஸ்க்.
மெமரி கார்டு மற்றும் ஃப்ளாஷ் டிரைவ் தயாரிப்பில் உலகின் முன்னனி நிறுவனமான சான்டிஸ்கை உருவாக்கியவர்களில் ஒருவர் சஞ்சய் மெஹ்ரோத்ரா. டிஜிட்டல் உலகில் புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் சஞ்சய் செம ஸ்மார்ட். கடந்த வருடத்துக்கான 'அமெரிக்காவின் சிறந்த சி.இ.ஒ.’ விருது வென்றிருப்பவர். ''சாஃப்ட்வேர் துறையில் அப்டேட் இல்லையென்றால் அவுட்டேட் ஆகிவிடுவோம். அதே சமயம் அது சும்மா பப்ளிசிட்டி அப்டேட்டாக இல்லாமல், வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ள அப்டேட் ஆக இருக்கவேண்டும்!'' என்கிறார்.
 
தாமஸ் குரியன்
நிர்வாகத் துணைத் தலைவர், ஆரக்கிள்.
 
மைக்ரோசாஃப்டுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப் பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான ஆரக்கிளைச் செலுத்துவதில், தாமஸ் குரியனுக்கு பெரும் பங்குண்டு. அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் அதிகாரிகள் பட்டியலில் தொடர்ந்து 20 இடங் களுக்குள் இருந்து வருகிறார் தாமஸ் குரியன். இவர் விரைவில் ஆரக்கிள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கின்றன ஹேஷ்யங்கள். ''வளர்ச்சி என்பது சீரான வளர்ச்சியாக இருக்கவேண்டும். இது நிறுவனம், ஊழியர்கள்... இரு தரப்புக்குமே பொருந்தும். இன்றைய ஐ.டி. இளைஞர்கள் சாஃப்ட்வேர் துறையின் உச்சகட்ட வளர்ச்சியை உடனடியாக எட்டத் துடிக்கிறார்கள். அதற்கு வேலையின் மீது பேரார்வமும், காரியம் சாதிக்கும் வியூகங்களும் வேண்டும்!'' என்பது இவரது பிரபல வாசகம்.
என்.ஜி.ஓ..! -  பின்னணியும் அரசியலும்
- பாரதி தம்பி
 
'இந்தத் தொழில் அதிபர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா...’ என்று கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வாரே... அப்படி சமீப காலமாக ஒருவித அயர்ச்சியை உண்டாக்குகின்றன 'என்.ஜி.ஓ.’ (NGO-Non Governmental Organization) என்று அழைக்கப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள்!
 
தமிழ்நாட்டில் எந்த நகரத்துக்கு, எந்தக் கிராமத்துக்குச் சென்றாலும் இவர்களே நிறைந்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல், மனித உரிமை, குழந்தைகள் நலன், எய்ட்ஸ், கல்வி... என சகல துறைகளிலும் என்.ஜி.ஓ-க்களின் ஆதிக்கமே. இவர்கள் செய்துவரும் 'தொண்டுக்கு’ இந்நேரம் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும்
    
ஓடிக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், நடப்பது என்னவோ, மக்களின் அவலங்களை புராஜெக்ட்களாக மாற்றி துட்டு பார்ப்பதும், அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்புகளை மழுங்கடிப்பதும்தான்.

இந்தப் பின்னணியில் என்.ஜி.ஓ-க்களின் மற்றொரு பரிமாணத்தை உரக்கப் பேசுகிறார் எழுத்தாளரும் வழக்கறிஞருமான இரா.முருகவேள்.
 
'எரியும் பனிக்காடு’, 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ போன்ற முக்கியமான நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்த முருகவேள், புலிகள் காப்பகத்தின் பெயரால் கார்ப்பரேட் என்.ஜி.ஓ- க்கள் செய்யும் அரசியல் குறித்த நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். என்.ஜி.ஓ-க்களின் நோக்கம் முதல் செயல்பாடுகள் வரை பல விஷயங்கள் பற்றி விளக்கமாகப் பேசினார்...
 
''இன்று 'புலிகளைப் பாதுகாப்போம்’ என்ற குரல் உரக்க ஒலிக்கிறது. இந்தியா முழுக்க 40-க்கும் மேற்பட்ட புலிகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முதல் நிபந்தனையாக அரசும் என்.ஜி.ஓ-க்களும் சொல்வது, 'காட்டுக்குள் பழங்குடிகள் யாரும் இருக்கக் கூடாது’ என்பதுதான். 'பழங்குடிகளும் புலிகளும் ஒருபோதும் சேர்ந்து வாழ முடியாது’ என்ற கருத்தைத் திரும்பத் திரும்பப் பிரசாரம் செய்கிறார்கள். இதற்காக பல நூறு கோடி ரூபாய் நிதி வாரி இறைக்கப்பட்டு, ஆவணப்படங்கள் எடுக்கப்படுகின்றன; புத்தகங்கள் எழுதப்படுகின்றன; கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. ஆனால், உண்மை என்ன?
 
பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களும் விலங்குகளும் இணைந்துதான் காடுகளில் வாழ்ந்துவருகின்றனர். வனவிலங்குகளுடன் பழங்குடிகளின் உறவுக்கு எத்தனையோ சான்றுகளைத் தர முடியும். ஆனாலும் அரசும் இந்த என்.ஜி.ஓ-க்களும் ஏன் இப்படிச் சொல்கிறார்கள்? ஏனென்றால், பழங்குடிகளை காட்டில் இருந்து விரட்டினால்தான், அங்குள்ள இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடையின்றித் தாரைவார்க்க முடியும்.
மேலும், சுரங்கம் தோண்டவும், சாலை அமைக்கவும், அணை கட்டவும் பழங்குடிகளின் இருப்பு இவர்களுக்குத் தடையாக இருக்கிறது. இவை எவற்றையுமே செய்யவில்லை என்றாலும், 'மனிதர்களின் காலடி படாத கன்னி நிலம்’ என்று கூறி 'எக்கோ டூரிஸம்’ நடத்த பழங்குடிகள் அங்கே இருக்கக் கூடாது. இதனால் தந்திரமாக புலியின் பெயரைச் சொல்லி விரட்டுகின்றனர்.
 
இவர்களின் தந்திரத்துக்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். தற்போதைய நிலையில் காடுகளில் வசிக்கும் பழங்குடிகளுக்கு, தேன், காட்டுப் பழங்கள், சுள்ளி... போன்றவற்றைச் சேகரிப்பதற்கான உரிமைகள் மட்டும்தான் இருக்கின்றன. இந்தத் திடீர் புலிக் காதலர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், 'நெல்லிக்காய்கள், காட்டின் சிறு உயிர்களுக்கு முக்கியமான உணவு. அந்தச் சிறு உயிர்கள், புலிகளுக்கு உணவு. பழங்குடிகள் நெல்லிக்காய்களை எடுத்துவந்து விற்பதால், சிறு உயிர்களுக்கு உணவு கிடைக்காமல் புலிகள் அழிகின்றன’ என்று புலிக்கும் நெல்லிக்காய்க்கும் முடிச்சுப் போடுகிறார்கள்.
 
எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக, காட்டில் நெல்லிக்காயும் இருக்கிறது; புலியும் இருக்கிறது. இவர்கள் நுணுக்கமாக ஆய்வுசெய்வது போல தந்திரமாகப் பேசுகிறார்கள். நம்மிடம் வந்து, 'பழங்குடிகள், வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர். அதனால் அவர்களை காட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்’ என்று பேசிவிட்டு, பழங்குடிகளிடம் சென்று, 'நீங்களும் சமவெளி மனிதர்களைப் போல நாகரிகமாகக் கல்வி கற்கவும், மருத்துவ வசதி பெறவும் வேண்டாமா?’ என்று வேறுமாதிரி பேசுகின்றனர். அதே காட்டில், சுற்றுலாத் துறையின் பல மாடிக் கட்டடங்கள் கட்டப்படுவதையும், நாள் ஒன்றுக்கு பல்லாயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதையும் அவர்கள் பேசாமல் மறைக்கின்றனர்!''
 
''ஆனால், உயிர்ச் சூழல் கன்னியில் புலியின் இருப்பு முக்கியமானது. அது காக்கப்பட வேண்டியது அவசியம்தானே?''
 
''பெரும்பாலான காடுகளை அழித்து நடத்தப்படும் எஸ்டேட்டுகளிலும், தொழிற்சாலைகளிலும் புலி மட்டுமல்ல... எந்த வனவிலங்குமே வாழ முடியாது. அவற்றுக்கு எதிராக எந்த என்.ஜி.ஓ-வும் 'தொண்டு’ செய்யாதது ஏன்?
1972-ல் இந்திய அரசு புலிகளைப் பாதுகாக்க 'புராஜெக்ட் டைகர்’ திட்டத்தைச் செயல்படுத்திய போது இந்தியக் காடுகளில் 1,827 புலிகள் இருந்தன. 40 ஆண்டுகளில் பல நூறு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட பின்னர், இப்போது புலிகளின் எண்ணிக்கை 1,411. இதுதான் இவர்கள் புலிகளைக் காக்கும் லட்சணம்.
 
பழங்குடிகள் கடுமையாகப் போராடியதன் பலனாக, 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 'பழங்குடிகள் பாரம்பரியமாக விவசாயம் செய்துவரும் நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்’ என்றது அந்தச் சட்டம். அதை அமல்படுத்தக் கூடாது என்று வனத்துறையும், என்.ஜி.ஓ-க்களும் வழக்கு மேல் வழக்குப் போட்டுத் தடுத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் 'காட்டுக்குள் இருந்தால்தானே நிலம் கேட்கிறார்கள்’ என்று தந்திரமாக புலிப் பாதுகாப்பின் பெயரால் பழங்குடிகளைக் காட்டைவிட்டுத் துரத்தி அடிக்கிறார்கள்.
 
பொதுவாகவே, இந்தியக் காடுகளில் உள்ள கனிம வளங்களைத் தோண்டி எடுக்க, அங்குள்ள பழங்குடிகள் இடையூறாக உள்ளனர் என்பதை, தண்டகாரண்யா காடுகளில் பெற்ற அனுபவத்தின் மூலம் மத்திய அரசு உணர்ந்துள்ளது. ஆகவே, காடுகளை மனிதர்கள் இல்லாத பிரதேசமாக மாற்ற முயற்சிக்கின்றனர். இவர்களால் துரத்தப்பட்ட பழங்குடிகள், காடுகளின் வெளியே செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக ரத்தம் சுண்ட மண் சுமக்கின்றனர். அவர்களை வைத்து புராஜெக்ட் போட்டு சம்பாதித்த என்.ஜி.ஓ-க்களோ, காட்டுக்குள் ஜீப்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன!''
 
''புலிகள் பாதுகாப்பைத் தவிர மற்ற துறைகளில் என்.ஜி.ஓ-க்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது?''
 
''2009-ம் ஆண்டின் கணக்குப்படி இந்தியாவில் 33 லட்சம் என்.ஜி-ஓக்கள் இருக்கின்றன. இது, சராசரியாக 400 இந்தியர்களுக்கு ஒரு என்.ஜி.ஓ. என்ற கணக்கு. இவை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவி, வேலைவாய்ப்பு, பெண்ணுரிமை, உடல்நலம், நுண்கடன், கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள், சுய வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல்... போன்ற பல துறைகளில் செயல்பட்டு வருகின்றன.  
 
இவர்கள் எல்லோரும் எங்கு இருந்து வருகின்றனர் என்றால், உலகமயமாக்கலுக்குப் பிறகு, அரசு தான் செய்ய வேண்டிய பல வேலைகளில் இருந்து பின்வாங்கிவிட்டது. 'கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் பணத்தைச் செலவிடுவதை அரசுகள் நிறுத்த வேண்டும்’ என்று மேற்கத்திய நாடுகள் வற்புறுத்துகின்றன. அப்போதுதானே அந்த இடத்துக்கு தனியார் நிறுவனங்களைக் கொண்டுவர முடியும்? ஆனால், அரசின் செயல்பாடுகள் குறையும்போது இயல்பாகவே மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும். அதை மட்டுப்படுத்தும் வேலையைச் செய்பவைதான் இந்த என்.ஜி.ஓ-க்கள். இதைத்தான் அவர்கள், 'அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை நாங்கள் செய்கிறோம்’ என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால், எந்தக் காலத்திலும் பிரமாண்டமான அரசின் வேலையை என்.ஜி.ஓ-க்கள் செய்யவே முடியாது!''
 
''அப்படியென்றால், என்.ஜி.ஓ-க்கள் புராஜெக்ட் என்று செயல்படுத்தும் திட்டங்கள், மக்கள் நலனுக்குக் கொஞ்சம்கூட பலனளிக்கவில்லை என்று சொல்கிறீர்களா?''
 
''ஆமாம். அதுதான் உண்மை. காட்டின் பழங்குடிகள் நெல்லிக்காய் பொறுக்குவது புலிப் பாதுகாப்பு புராஜெக்ட் என்றால், அதே பழங்குடிகள் காட்டைவிட்டு வெளியேறி வாழ வழியற்று ரோட்டில் நின்றால் அது 'பழங்குடிகள் பாதுகாப்பு புராஜெக்ட்’. அவர்களுக்கு வாழ்வின் ஒவ்வொரு கணமும் புராஜெக்ட்தான். இந்தியாவிலேயே அதிக என்.ஜி.ஓ-க்கள் இருப்பது டெல்லியில்தான். இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடு. வெளிநாட்டு நிதி அதிகமாகப் பெறுவதில் இரண்டாம் இடத்தில் இருப்பதும் தமிழ்நாடுதான்.
 
2010-11-ம் ஆண்டு கணக் குப்படி தமிழ்நாட்டு என்.ஜி.ஓ-க்கள் பெற்ற வெளிநாட்டு நிதியின் அளவு 1,557 கோடி ரூபாய். இந்தப் பிரமாண்டத் தொகையைக்கொண்டு இவர்கள் செய்தது என்ன? இதைக் கேள்வி கேட்கும் உரிமை நமக்கு இல்லை. என்.ஜி.ஓ-க்கள் யாருக்கும் கணக்குக் காட்டவேண்டிய அவசியம் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்.ஜி.ஓ-க்களைக் கொண்டுவர வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்துவருகின்றனர். ஆனால், இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலிக்கக்கூட தயார் இல்லை.
 
உங்களுக்கு சுவாரஸ்யமான ஒரு தகவல் சொல்கிறேன். இந்தியாவை மீட்க வந்த ரட்சகராகப் போற்றப்படுவருமான அரவிந்த் கெஜ்ரிவால் 'கபிர்’ (kabir) என்ற என்.ஜி.ஓ. அமைப்பை வைத்திருக்கிறார். ஃபோர்டு பவுண்டேஷனிடம் இருந்து கெஜ்ரிவாலின் என்.ஜி.ஓ. 4.5 கோடி ரூபாய் நிதி பெற்றிருக்கிறது. அவர் அந்தப் பணத்தின் கடைசி ரூபாய் வரை நாணயமாகவே செலவு செய்திருக்கக்கூடும். பிரச்னை அதுவல்ல. ஆனால், லோக்பால் சட்ட வரம்பின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களையும் என்.ஜி.ஓ-க்களையும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை கெஜ்ரிவால் எழுப்ப மறுக்கிறார். இவை இரண்டையும் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும்!''
 
''இந்த ஃபண்டிங் ஏஜென்சிகள் யார்? அவர்கள் ஏன் என்.ஜி.ஓ-க்களுக்கு நிதி கொடுக்கிறார்கள்?''
 
''இந்திய என்.ஜி.ஓ-க்களுக்கு நிதி அளிப்பதில் அமெரிக்கா முதல் இடத்திலும், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. ஒவ்வொரு வருடமும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இவர்கள் நிதி அளிக்கின்றனர். அரசுகளும், அந்த நாடுகளின் நிறுவனங்களும் நிதி தருகின்றன. ஏன் தருகிறார்கள் என்றால், சுற்றிவளைத்து பன்னாட்டு நிறுவனங்களின் நலன் விளைவதற்காகத்தான்.
 
உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் எய்ட்ஸ் விழிப்பு உணர்வு என்பது முழுக்க முழுக்க என்.ஜி.ஓ-க்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எய்ட்ஸ் நோயாளி ஒருவர் உடனே இறந்துவிட்டால், அதற்கான மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு என்ன லாபம்? ஆகவே, அவரை உயிரோடு வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது.  
 
அதேபோல, இன்று சூரிய மின்சாரம் உள்ளிட்ட மாற்று எரிசக்தி குறித்து பரவலாகப் பேசப்படுகிறது. இந்தத் துறையில் தமிழ்நாட்டில் நிறைய என்.ஜி.ஓ-க்கள் செயல்படுவதையும், ஜெர்மனியில் ஏராளமான மாற்று எரிசக்தி நிறுவனங்கள் செயல்படுவதையும் கவனத்தில் கொண்டு இதைப் புரிந்துகொள்ள வேண்டும்!''
 
''நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், ஊருக்குள் நல்ல காரியங்கள் மேற்கொள்ளவும் யார் பணம் கொடுத்தால் என்ன... நல்ல நோக்கத்துக்குப் பயன்பட்டால் சரிதானே?''
 
''இல்லை... இது மிகத் தவறான பார்வை. பெரும்பாலான மக்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள். 'எங்கிருந்தோ வந்து ஊருக்குள் இறங்கும் என்.ஜி.ஓ-க்காரர்கள் நம் ஊருக்குத் தண்ணீர் பம்ப் அமைக்கிறார்கள்; சோலார் விளக்கு அமைக்கிறார்கள்.. பரவாயில்லையே’ என்று மக்கள் வியக்கின்றனர்.
 
அதன் மறுபுறமாக, அந்தத் தண்ணீர், மின்சார வசதிகளை மக்களுக்குச் செய்து தந்திருக்க வேண்டிய அரசின் மீது உள்ள மக்களின் கோபம் வடியவைக்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் அனைத்தும் அரசு செய்ய வேண்டிய வேலை. இதை எல்லாம் செய்வதற்காகத்தான் நாம் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்; இதற்காகத்தான் நாம் வரி செலுத்துகிறோம். என்.ஜி.ஓ.-க்கள் அமைத்த தண்ணீர் பம்ப் சரியில்லை என்றால், 'நீ செய்த தொண்டில் 10 சதவிகிதம் தரமாக இல்லை. மறுபடியும் தொண்டு செய்’ என்று கேட்க முடியுமா?
 
அடிப்படையில் இவர்களின் அணுகுமுறையே தவறானது. வறுமையை ஒழிக்க இவர்கள் முன்வைக்கும் செயல்திட்டங்கள் ஊறுகாய் போடுவதும், ஊதுவத்தி உருட்டுவதும், அப்பளம் போடுவதும்தான். அதாவது, நமது திறமையின் மூலம் வறுமையை விரட்டக் கற்றுத்தருகிறார்களாம். இதற்கு சுயமுன்னேற்றம், கிராமத் தற்சார்புப் பொருளாதாரம் என்று விதவிதமாகப் பெயர் வைக்கிறார்கள். ஆனால், வறுமைக்கு மூலக்காரணமாக இருக்கும் இந்த அரசையும், அரசின் பொருளாதாரக் கொள்கைகளையும் விமர்சிப்பது இல்லை.
 
என்.ஜி.ஓ-க்கள் நுழைந்த எந்தப் பிரச்னையை வேண்டு மானாலும் எடுத்துப் பாருங்கள்... கடைசி வரையிலும், 'அய்யோ... அய்யோ’ என்று அலறல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கும். அதாவது, பிரச்னைக்கான மூலவேர் அப்படியே இருக்கும் அல்லது மேலும் மோசம் அடைந்திருக்கும். இதுதான் நடைமுறை உண்மை!''
 
''ஆனால், 2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த முஸ்லிம் படுகொலைகளை அம்பலப்படுத்தியதிலும், குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும் முன்நிற்கும் தீஸ்தா செதல்வாட் ஒரு என்.ஜி.ஓ-தான். அவரை எப்படி மதிப்பிடுவது?''
 
''தீஸ்தா செய்து வருவது உண்மையிலேயே அர்ப்பணிப்பு மிகுந்த பணி. அவரை உதாரணம் காட்டித் தான் பல என்.ஜி.ஓ-க்கள் தப்பித்துக் கொள்கின்றன. ஆனால், பாலியல் தொழிலாளியின் உரிமைகளுக்காகப் போராடுவது வேறு. பாலியல் தொழிலாளி இல்லாத சமூகத்தை அமைக்கப் போராடு வது வேறு. என்.ஜி.ஓ-க்கள் முன்னதைத்தான் செய்கின்றன. இவர்கள் மனித உரிமை என்று பேசுவது தனி மனித உரிமையைப் பற்றி. இது ஓர் ஐரோப்பிய இறக்குமதிக் கொள்கை. கோடிக்கணக்கான மக்கள் அரை வயிற்று உணவுடன் சேரிகளில் வதைபடும் இந்தியாவில், லட்சக்கணக்கானோர் தினக்கூலிகளாக தொழிற்சாலைகளில் உழைத்துக்கொட்டும் இந்தியாவில் தனி மனித உரிமை, தனி மனித சுதந்திரம் ஆகியவற்றை முதன்மைப்படுத்திப் பேசுவது பிரச்னையைத் திசைதிருப்பும் வேலை!''
 
''எனில், நல்ல என்.ஜி.ஓ. என ஒன்று இருக்கவே முடியாதா?''
 
''இதுவரை நாம் பேசியது வெளிநாட்டு நிதிபெறும் என்.ஜி.ஓ-க்களைப் பற்றி. அப்படி நிதிபெறும் யாரையும் சந்தேகிக்கத்தான் வேண்டும். ஆனால், நம் ஊரில் நான்கைந்து பேர் சேர்ந்து, ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு ஏழைக் குழந்தைகளைப் படிக்க வைப்பது, ஆதரவற்றோருக்கு உணவு அளிப்பது போன்ற சேவைகளைச் செய்து வருகிறார்கள்.
 
ஏராளமானோர் இப்படி தங்கள் சொந்தக் காசைச் செலவழித்து சிறிய என்.ஜி.ஓ-க்களை நடத்துகின்றனர். நாம் இவர்களை அங்கீகரித்து ஆதரவளிக்க வேண்டும். உண்மையிலேயே இவர்கள் செய்வதுதான் தொண்டு. வெளிநாட்டு நிதி பெறும் என்.ஜி.ஓ-க்களை 'தொண்டு நிறுவனங்கள்’ என்றே அழைக்கக் கூடாது. அவர்கள் அனைவரும் மாதச் சம்பளம் பெறுகின்றனர். கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றனர். எல்லாம் செய்துவிட்டு சமூக சேவகர்களாக உலா வருவதைத்தான் சகிக்க முடியவில்லை!''
 

என்.ஜி.ஓ.  சில தகவல்கள்...
 
2010-11ம் ஆண்டில் அதிக வெளிநாட்டு நிதி பெற்றிருப்பது டெல்லி (2,016 கோடி ரூபாய்). இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழ்நாடு (1,557 கோடி ரூபாய்). மாவட்டரீதியாகக் கணக்கிட்டால், இந்தியாவிலேயே என்.ஜி.ஓ-க்கள் மூலம் அதிகம் நிதி பெறுவதில் முதல் இடத்தில் இருப்பது சென்னை. 2009-10ம் ஆண்டுக் கணக்கின்படி சென்னை என்.ஜி.ஓ-க்கள் பெற்ற தொகை 871 கோடி ரூபாய்.
 
என்.ஜி.ஓ-க்கள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு எஃப்.சி.ஆர்.ஏ. (FCRA - Foreign Contribution Regulation Act) உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தை இந்தியாவில் 40,000-த்துக்கும் அதிகமான என்.ஜி.ஓ-க்கள் பெற்றுள்ளன. ஆனால், இதில் பாதி பேர்தான் ஒவ்வோர் ஆண்டும் உள்துறையிடம் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். இப்படி அறிக்கை அளிக்காத 17,700 என்.ஜி.ஓ-க்களின் எஃப்.சி.ஆர்.ஏ. உரிமங்களை, கடந்த 2011-2012ம் ஆண்டில் ரத்துசெய்து உத்தரவிட்டது மத்திய உள்துறை.
 
ஒரு என்.ஜி.ஓ., வெளிநாட்டு நிதி பெற வேண்டுமெனில், எஃப்.சி.ஆர்.ஏ. பெற்று, குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். இதனால், எஃப்.சி.ஆர்.ஏ. எண் பெற்று மூன்று ஆண்டுகள் ஆன என்.ஜி.ஓ-க்களை விற்பது ஒரு தொழிலாகவே உருவெடுத்துள்ளது!

 
 
''நிதி பெறுவதில் தவறு இல்லை!''
ஹென்றி டிபேன், மக்கள் கண்காணிப்பகம்.
 
''மக்களின் துன்பங்களை என்.ஜி.ஓ-க்கள் புராஜெக்ட்களாக மாற்றுவதாகச் சொல்கிறார்களே?''
 
''இதில் உண்மை இல்லாமல் இல்லை. அரசுசாரா அமைப்புகளுக்கு நிதி உதவி செய்யும் தனி நபர்கள், அமைப்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், வெளிநாட்டு நிதி உதவியைச் சார்ந்து இயங்க வேண்டியுள்ளது. அதைப் பெறுவதற்கு புராஜெக்ட் ரிப்போர்ட் தயாரிப்பதும், நிதி பெறுவதும் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால், ஒரு பிரச்னையின் மீது உணர்வு இல்லாமல் வெறுமனே புராஜெக்டாக அணுகும்போதுதான் சிக்கல் வருகிறது!''
 
''மேற்கத்திய நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தங்களுக்குத் தேவையான அரசியல் மற்றும் வியாபாரச் சூழலை உருவாக்க என்.ஜி.ஓ-க்களைக் கருவியாகப் பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டுக் குறித்து...''
 
''நிதி கொடுப்பவர்கள் யார் என்பதைப் பொறுத்துதான் இதை முடிவு செய்ய முடியும். உலக வங்கி, வெவ்வேறு நாடுகள், தனிப்பட்ட நபர்கள் என பலரும் நிதி தருகின்றனர். அப்படி நிதி தரும் அனைவருக்குமே ஒரு நோக்கம் இருக்கிறது. உதாரணமாக, தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று கருதும் நாடுகள் இதற்கு நிதி தருகின்றன. மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்கு சில நாடுகள் நிதி தருகின்றன. இப்படி அல்லாமல் வேறு தீய நோக்கங்களும் இருக்கலாம். அதைச் சம்பந்தப்பட்ட என்.ஜி.ஓ-க்கள்தான் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்!''

Thursday, February 13, 2014

'பொண்டாட்டி தீட்டு ரத்தத்தை எடுத்து வித்துப் பொழைக்கிறதுதான் பெரிய சாதியா?
நன்றி: ஆனந்த விகடன் 
 
2006-ம் ஆண்டு சகுந்தலாவுக்குத் திருமணமானபோது 20 வயது. தறிப் பட்டறையில் தன்னுடன் பணிபுரிந்த நவராஜை, காதல் திருமணம் செய்துகொண்டார். வெவ்வேறு சாதி என்பதால், இரு தரப்பு எதிர்ப்புகளையும் மீறித்தான் திருமணம் நடந்தது. மகிழ்ச்சியான மண வாழ்க்கையின் மூன்றாவது மாதத்தில் நவராஜ் மெள்ள ஆரம்பித்தான். தனக்குத் தெரிந்த ஒருவர் இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி சாகக்கிடப்பதாகவும், 'நீ ஒரு சிறுநீரகத்தைத் தானமாகத் தந்து உதவினால், அவர் உயிர் பிழைப்பார்’ என்றும் சகுந்தலாவிடம் சொன்னான். இரக்க
    
உணர்வு மிகுந்த பழங்குடிக் கலாசாரத்தில் வளர்ந்த சகுந்தலா, தன் கணவனின் வேண்டுகோளை ஏற்றார். குமாரபாளையத்தில் இருந்து, கோயம்புத்தூர் அழைத்துச் செல்லப்பட்டு சகுந்தலாவின் வலது பக்கச் சிறுநீரகம் அகற்றப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் தரகர்கள், நவராஜிடம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தைத் தந்தபோதுதான், அது தானம் அல்ல, வியாபாரம் என்று சகுந்தலாவுக்குப் புரிந்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு... சகுந்தலாவிடம் இன்னொரு 'தானத்துக்கு’ அடிபோட்டான் நவராஜ். இந்த முறை குரலில் பணிவு இல்லை. அதிகாரம் எஞ்சியிருந்தது. செயற்கைக் கருத்தரித்தல் மையங்களில் குழந்தையின் கருவை உருவாக்கத் தேவைப்படும் கருமுட்டைகளை சகுந்தலா தானமாகத் தர வேண்டும் என்றான் நவராஜ். 'மாதவிடாய் நேரத்துல வீணாப் போறதுதானே... அதை வெச்சு ஒரு பெண்ணுக்குக் குழந்தை பாக்கியம் கிடைச்சா நல்லதுதானே?’ என்றான். இந்த முறை இவன் இதற்காகப் பணம் பெறுவான் என்பது தெரிந்தும், வேறு வழியின்றி அதற்குச் சம்மதித்தார் சகுந்தலா. ஈரோடு தனியார் மருத்துவமனையில் 10 நாட்கள் ஹார்மோன் ஊசி போடப்பட்டு கருமுட்டைகள் சேகரிக்கப்பட்ட பின்பு அனுப்பிவைக்கப்பட்டார். இதற்காக நவராஜ் பெற்ற தொகை, 15 ஆயிரம் ரூபாய். இப்படி ஒன்றல்ல... இரண்டல்ல... கடந்த ஐந்து ஆண்டுகளில் 18 முறை சகுந்தலாவை கருமுட்டை வியாபாரத்தில் ஈடுபடுத்தியுள்ளான் நவராஜ்.
 
ஒரு வாகனத்தின் உதிரி பாகங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி விற்றுச் செலவழிப்பதைப் போல, சகுந்தலாவின் உடலைப் பயன்படுத்தியிருக்கிறான் நவராஜ். இரு குடும்பங்களையும் எதிர்த்துக்கொண்டு நடந்த திருமணம் என்பதாலும், வருமானத்துக்கு வேறு வழி இல்லை என்பதாலும் சகித்துக்கொண்டு இவற்றுக்குச் சம்மதித்த சகுந்தலாவால், ஒரு கட்டத்துக்கு மேல் இதைப் பொறுக்க முடியவில்லை. எதிர்த்தார். அதன் விளைவோ... பயங்கரம்!
சேலம் - அரசு மருத்துவமனையில் தலை முதல் கால் வரை கட்டுகளுடன் படுத்துக்கிடக்கும் சகுந்தலாவின் வலிமிகு குரலைக் கேளுங்கள்.
 
''என் வீட்டுல ரொம்ப வறுமைங்க. ரெண்டு பேரும் மில் வேலைக்குப் போனாலும் குடும்பத்தை ஓட்ட முடியலை. அதனால பணத்துக்காகத்தான் செய்றார்னு தெரிஞ்சும் வேற வழி இல்லாம இதுக்கு ஒப்புக்கிட்டேன். ஆனா, வாங்குற காசுல 1,000, 2,000 ரூபா வீட்டுக்குக் குடுக்குறதே பெரிசு. மீதி எல்லாத்தையும் குடிச்சே தீர்த்திடுவார். ஒவ்வொரு ட்ரிப்பும் அவருதான் யாரையாச்சும் புரோக்கரை அழைச்சுக்கிட்டு வருவார். புரோக்கருங்க வந்து, எந்த ஊர், எந்த ஆஸ்பத்திரி, என்னைக்கு வரணும்னு எல்லாத்தையும் சொல்லுவாங்க. பக்கத்து ஊரா இருந்தா, நானே போயிட்டு வந்திருவேன். சில தடவை மதுரை, பெங்களூரு, மெட்ராஸ்னு தூரமான ஊரா இருக்கும். அப்பல்லாம் அவரும் என் மாமியாரும் கூட வருவாங்க.
போனதுமே நம்ம உடம்பு நல்லா இருக்கானு பார்க்க, ஒரு ஊசி போடுவாங்க. அது சரியா இருந்தா, அப்புறம் 10 நாளைக்கு தினமும் மூணு ஹார்மோன் ஊசி போடுவாங்க. 13-வது நாள் மயக்க ஊசி போட்டு கருமுட்டைங்களைச் சேகரிச்சுக் குவாங்க. மயக்கம் தெளிஞ்சுதுனா, அன்னைக்கு நைட்டே அனுப்பி வெச்சுடுவாங்க. இல்லைன்னா அடுத்த நாள் காலையில அனுப்பிடுவாங்க.
 
பணத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு இடத்துலயும் ஒரு மாதிரி. 10,000, 15,000, 25,000 ரூபா வரைக்கும் கொடுப்பாங்க. சில சமயம் என்கிட்ட தருவாங்க. சில சமயம் என் புருஷன்கிட்டத் தருவாங்க. எல்லாமே புரோக்கருங்க வாங்கித் தர்றதுதான். அவங்க எவ்வளவு வாங்குறாங்கனு தெரியாது.
 
கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லயே என் புருஷன் வீட்டுல உள்ளவங்க வந்து சேர்ந்துட்டாங்க. இந்தக் கருமுட்டைகளைக் கொடுக்க ஊர், ஊரா என்னை அழைச்சுட்டுப் போகும்போது என் புருஷனும் மாமியாரும் கூடத்தான் வருவாங்க. பணத்தை வாங்கி எண்ணி வெச்சுக்கிறது அவங்கதான். எங்கே போனாலும் என் அஞ்சு வயசுப் பொண்ணையும் கூட்டிக்கிட்டுத்தான் அலைவேன். நான் மலைவாழ் சாதி. அவர் முதலியார். இதனால் அதை வேற சொல்லி சொல்லிக் காட்டுவாங்க. 'பொண்டாட்டி தீட்டு ரத்தத்தை எடுத்து வித்துப் பொழைக்கிறதுதான் பெரிய சாதியா?’னு கேட்டுப் பார்த்துட்டேன். அடி, உதைதான் கிடைச்சதே தவிர, யாரும் மாறலை. இது கொஞ்ச நாளா ரொம்ப அதிகமாகியிடுச்சு. என்னை வெச்சுப் பணம் சம்பாதிச்சு சுகம் கண்டுட்ட புருஷன், எந்த வேலைவெட்டிக்கும் போறது இல்லை. வீட்லயே உட்கார்ந்துகிட்டு விதவிதமா புரோக்கர்களை அழைச்சுக்கிட்டு வர்றதுதான் வேலை. எனக்கும் உடம்புக்கு முடியாமப்போய் ரொம்ப மெலிஞ்சு போயிட்டேன். இதுக்கு மேலயும் இந்தாளு சொல்றதைக் கேட்டுக்கிட்டு இருந்தா நம்ம உயிர் போயிடும்... என் பொண்ணு அநாதை ஆகிடுவானு பயந்து, எனக்குத் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டேன். அவங்கதான் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ-எம்.எல்.) ஆபீஸைக் காட்டிவிட்டாங்க. அதுக்குப் பிறகுதான் அங்கே போனேன்'' என்கிறார் சகுந்தலா.
 
சகுந்தலா குமாரபாளையம் சி.பி.ஐ-எம்.எல். அமைப்பு அலுவலகம் சென்றார். கட்சி உறுப்பினர்களின் வழிகாட்டுதல்படி குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வக்கீல் மூலம் சகுந்தலாவும் நவராஜும் பிரிந்துவிடுவதாக எழுதிக் கொடுத்துவிட்டுப் பிரிந்தனர். அதில் இருந்து நான்காம் நாள் திடீரெனக் கட்சி அலுவலகத்துக்குள் வெறிகொண்டு நுழைந்தான் நவராஜ். அங்கு கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினரும், ஓவியருமான பொன்.கதிரவன் இருந்தார். அவரைச் சரமாரியாக வெட்டியவன், சற்று தூரத்தில் ஒரு வீட்டில் இருந்த சகுந்தலாவையும் வீடு புகுந்து வெட்டித் தள்ளினான். ரத்தம் படிந்த அரிவாளுடன் வீதியில் ஓடி வந்தவனை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இப்போது நவராஜ் சிறையில். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பொன்.கதிரவன் இப்போதுதான் சற்றே உடல்நலம் தேறியுள்ளார். தலை முதல் கால் வரை கட்டுகளுடன் சகுந்தலா, சேலம் - அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
 
இப்போது சகுந்தலாவுக்கு யாருமே இல்லை. சோறு ஊட்டவும், கழிப்பறை சென்று வர உதவவும் ஒரே ஒரு உறவுப்பெண் உடன் இருக்கிறார். மற்றபடி அவர் அநாதையைப் போல தனியே கிடக்கிறார். உடலின் எந்த உறுப்புகள் தொடர்ந்து இயங்கும், எவை இயங்காது என்பதைச் சொல்ல முடியாது. இன்னும் சில அறுவைசிகிச்சைகள் மிச்சம் இருக்கின்றன.
இது தனி ஒரு சகுந்தலாவின் கதை இல்லை. பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதி நெசவாளர்கள், வறுமை தாங்காமல் தங்கள் சிறுநீரகங்களை விற்பனை செய்வது பல வருடங்களாக நடந்துவருகிறது. சகுந்தலாவும் தனது ஒரு சிறுநீரகத்தை இழந்துள்ளார். இவரைப் போல வெளியில் தெரியாமல் ஒற்றைச் சிறுநீரகத்துடன் வாழ்பவர்கள் இந்தப் பகுதியில் அநேகம் பேர். அந்தக் கோர வறுமையின் இன்னொரு முகம்தான், இந்தக் கருமுட்டை வியாபாரம்.
 
''நான் ஒவ்வோரு ஆஸ்பத்திரிக்குப் போகும்போதும் அங்கே என்னை மாதிரியே நிறைய பேர் கருமுட்டை கொடுக்க வர்றதைப் பார்த்திருக்கேன். எல்லாருமே என்னை மாதிரி ஏழைப்பட்டவங்கதான். வர்ற எல்லார் கிட்டேயும் 'தானம் பண்றோம்’னுதான் எழுதி வாங்கிக்குவாங்க. ஆனால், 10 நாள் கூலியை விட்டுட்டு, வேற ஊர்ல வந்து தங்கியிருந்து தானம் பண்றதுக்கு அங்க வர்ற யாரும் வசதியானவங்க இல்லை. எல்லாருமே பணம் வாங்கிட்டுத்தான் கருமுட்டை கொடுக்கிறாங்க'' என்று சகுந்தலா தெளிவாகச் சொல்கிறார்.
 
ஆக, இது மிகப் பெரிய மாஃபியா பிசினஸ். மருத்துவமனைகள், மருத்துவர்கள், தரகர்கள் என இதற்கு ஒரு நெட்வொர்க் வேண்டும். ''அப்படிப்பட்ட நிழல் உலக நெட்வொர்க், மாநிலம் முழுவதும் செயல்படுகிறது'' என்கிறார் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சிலின் மாநிலத் தலைவர் என்.கே.நடராஜன்.
 
''சகுந்தலா மூலமாகத்தான் எங்களுக்கு கருமுட்டை வியாபாரம் பற்றி தெரியவந்தது. விசாரித்தால், சேலத்தின் முன்னணி மருத்துவமனைகள் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பல பெரிய தனியார் மருத்துவமனைகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. இதற்காகவே புரோக்கர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வறுமையில் உழலும் நெசவாளர் குடும்பங்களை மனம் மாற்றி இதற்கு அழைத்து வருகின்றனர். இந்தப் பகுதியின் நெசவாளர் குடும்பங்கள் கடுமையான வறுமையிலும் கடன் தொல்லையிலும் சிக்கியிருக்கின்றன. குறிப்பாக, ஏதேனும் ஒரு தறிப் பட்டறை முதலாளியிடம் 50 ஆயிரம், 1 லட்சம் முன்பணம் வாங்கிக்கொண்டு, குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு அரைக் கொத்தடிமைகளாக உழைக்கின்றனர். அந்தக் கொத்தடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வர தன் ஒரு சிறுநீரகம் பயன்படும் என்றால், அதையும் விற்கத் துணிகின்றனர். கருமுட்டை விற்பனை என்பதும் இந்த அடிப்படையில்தான் நடக்கிறது'' என்கிறார்.
 
தற்போது சகுந்தலாவுக்கு உதவிகள் செய்துவரும் வழக்கறிஞர் தமயந்தியிடம் பேசியபோது, ''அந்தப் பெண்ணைப் பார்க்கும்போது மனம் கனத்துப்போகிறது. ஒரு கிட்னியை இழந்து, 18 முறை கருமுட்டை வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு, இன்று உடல் எங்கும் வெட்டுக் காயங்களுடன் நடைப்பிணம் போல படுத்துக்கிடக்கிறார். இந்தக் குற்றத்தைச் செய்த நவராஜ் மட்டும் இதில் குற்றவாளி அல்ல. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு பெண்ணின் சம்மதத்துடன் கருமுட்டையைத் தானம் பெறலாம் என்கிறது சட்டம். ஆனால் சகுந்தலாவோ, சராசரியாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். 'தானம்’ என்ற பெயரில் சகுந்தலாவிடம் இருந்து கருமுட்டை எடுத்து வியாபாரம் செய்த டாக்டர்கள், மருத்துவமனைகள், புரோக்கர்கள்... என அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களின் தொழில் உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்'' என்கிறார்.
 
 
ந்த நெட்வொர்க், மாநிலம் முழுக்கப் பரவியிருக்கிறது என்பதற்கு இன்னோர் உதாரணம், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சாந்தி. தான் குடியிருக்கும் பகுதியில் பல பெண்கள் இப்படி கருமுட்டை வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், அண்ணாநகர், தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று கருமுட்டைக் கொடுத்துவருவதாகவும் சொல்கிறார். இதற்கென வியாசர்பாடி, தண்டையார்பேட்டை பகுதிகளில் நிறையப் புரோக்கர்கள் இருக்கின்றனர். ஆனால் சாந்தி, கருமுட்டை வியாபாரத்தில் ஈடுபடுபவர் அல்ல. அவர், ஒரு வாடகைத் தாய். கடந்த ஆண்டுதான் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். ஆனால் அது ஆணா, பெண்ணா என்பதுகூட அவருக்குத் தெரியாது. ''குழந்தையோட முகத்தைக்கூட நான் பார்க்கலை'' என்கிறார்.
 
இவரும், இவர் அறிமுகப்படுத்திய இன்னும் மூன்று பெண்களும் விவரிக்கும் வாடகைத் தாய்களின் அனுபவங்கள், வேறு ஓர் உலகத்தை திறந்துவிடுகின்றன.
 
''எல்லாத்தையும் புரோக்கருங்க பார்த்துக்குவாங்க. குறைஞ்சது மூணு லட்சம். சில பேருக்கு அஞ்சு லட்சம்கூட கிடைக்கும். கரு உருவானதும் அவங்க சொல்ற ஆஸ்பத்திரிக்கு ரெகுலரா செக்-அப் போகணும். மாத்திரை, மருந்து எல்லாம் தருவாங்க. முறையாச் சாப்பிடணும். ரெண்டு, மூணு மாசத்துலயே தங்குற இடம் எங்கேனு சொல்லுவாங்க. பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே ஒரு ரூம் இருக்கும். இல்லைனா ஆஸ்பத்திரிக்குப் பக்கத்துலயே ஒரு வீடு பிடிச்சு தங்கவைப்பாங்க. பிரசவம் வரைக்கும் அங்கேதான் தங்கணும். மூணு வேளையும் நல்ல சாப்பாடு. அதை எல்லாம் அதுக்கு முன்னாடி நாங்க கண்ணுலயே பார்த்திருக்க மாட்டோம். அவ்வளவு டேஸ்ட்டா, சத்தானதாக் கொடுப்பாங்க. பழங்கள் தருவாங்க. எல்லாத்தையும் முறையாச் சாப்பிடணும். அப்போதானே வயித்துக்குள்ள இருக்கிற அவங்க குழந்தை நல்லா வளரும். ஆனா, அந்த நேரத்துல வீட்டுல புருஷனும் சொந்தப் பிள்ளையும் எப்பவும் போல சோத்துக்குக் கஷ்டப்படுவாங்க. 'நம்ம பிள்ளை என்னைக்கு இப்படி சத்தானதாச் சாப்பிடும்’னு ஏக்கமா இருக்கும். ஆனா, என்ன பண்றது?
 
நாள் முழுக்க டி.வி. பார்க்கிறதும், செல்போன்ல பேசுறதும்தான் வேலை. வெளியில் போகவோ, வேற யாரையும் பார்க்கவோ அனுமதி இல்லை. வீட்டுல ஏதாச்சும் நல்லது, கெட்டதுனா, ஒரு நாள் 'லீவு’ கொடுப்பாங்க. ஆனா, பெரும்பாலும் வாடகைத் தாயா இருக்கிறவங்க பெத்துக் கொடுக்குற வரைக்கும் வீட்டுக்குப் போக மாட்டாங்க. ஏன்னா, வீட்டு சுத்துவட்டாரத்துல 'வெளிநாட்டுல வேலை; ஊருக்குப் போறோம்’னு ஏதாச்சும் பொய் சொல்லிட்டுத்தான் வந்திருப்பாங்க. இடையில் வயித்தைத் தள்ளிக்கிட்டுப் போய் நின்னா, தெரிஞ்சுபோயிடும். அதனால் யாரும் போறது இல்லை. பிள்ளைங்ககிட்ட ஏதாச்சும் பொய் சொல்லிச் சமாளிச்சுக்கிறது. அப்பப்போ போன் பண்ணிப் பேசிக்குவோம்'' என்கிறார் சாந்தி.
ஏற்கெனவே ஆரோக்கியமான ஒரு குழந்தையைப் பெற்றிருப்பவர்தான் வாடகைத் தாயாக இருக்க முடியும். அதேபோல, சுகப் பிரசவத்துக்கான சாத்தியம் இருந்தாலும், கட்டாயம் அறுவைசிகிச்சையின் மூலமே குழந்தை எடுக்கப்படும். காரணம், என்னதான் சுகப்பிரசவம் என்றாலும் கடைசி நேர சிக்கல்களால் குழந்தைக்கு ஏதேனும் நேர்ந்துவிடக் கூடாது என்பது முதல் காரணம். இன்னொன்று, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெரும்பான்மையானோர் நல்ல நேரம் பார்க்கின்றனர். அவர்கள் குறிப்பிடும் நாள், நட்சத்திரத்தில், நல்ல நேரத்தில் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை எடுக்கப்படுகிறது. மூன்றாவது, அறுவைசிகிச்சை மூலம் குழந்தையை எடுக்கும்போதுதான் தாய்க்கும்-சேய்க்குமான பந்தம் குறைகிறது.
 
குழந்தை எடுக்கப்பட்ட உடனேயே வேறு அறைக்கு மாற்றப்படும். அதன் முகத்தைப் பார்க்கவோ, என்ன குழந்தை என்று தெரிந்துகொள்ளவோ வாடகைத் தாய்க்கு உரிமை இல்லை. அதேபோல அந்தக் குழந்தையை வளர்க்கப்போகிறவர்கள் யார் என்பதையும் ஒரு வாடகைத் தாய் தெரிந்துகொள்ள முடியாது. இரு தரப்புக்கும் இடையில் உணர்ச்சிபூர்வமான பந்தம் உருவாகிவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கின்றனர்.
 
ஆனால், தாய்மைக்கு வாடகை உண்டா? 'பேமென்ட்’ கை மாறியதும் 10 மாதங்கள் சுமந்த தாய்மை காலாவதியாகிவிடுமா? ''குழந்தை பிறந்ததும் இன்னும் ஒரு வாரமோ, 10 நாளோ ஆஸ்பத்திரியில் வெச்சிருந்து போகச் சொல்லிடுவாங்க. முதல் பிரச்னை, தாய்ப்பால் கட்டிக்கும். அது பெரிய வேதனை. அப்புறம் ஆபரேஷன் காயம் ஆறி நார்மலாக ஒரு வருஷமாவது ஆகும். சிலருக்கு உடம்பு குண்டாகிடும். அதை எல்லாம் நாமதான் பார்த்துக்கணும். காசுக்காகத்தான் செய்றோம். ஆனால், நம்மளை வெச்சு யாரோ ஒரு குடும்பம் சந்தோஷமா இருக்குதுல்ல... நம்ம வயித்துல வளர்ந்தப் புள்ளை ஏதோ ஒரு பணக்கார வீட்டுல வளர்றதை நினைச்சு திருப்தி அடைஞ்சுக்க வேண்டியதுதான்'' என்று பெருந்தன்மையாகப் பேசுகிறார் பானுமதி.
 
ஆனால் இந்தப் பெருந்தன்மை எதிர்த் தரப்பிடம் இருப்பது இல்லை. வாடகைத் தாய்க்குக் கொடுக்கப்படும் உணவை, அவர் தன் சொந்தப் பிள்ளைகளுக்குக் கொடுத்து அனுப்பாமல் தானே சாப்பிடுகிறாரா என்று கண்காணிக்கப்படுகிறார். வாங்கும் பணத்தில் சரிபாதிகூட இவர்களுக்கு வந்து சேர்வது இல்லை. ஒரு வாடகைத் தாயின் சம்பளம் மூன்று லட்சம் என்றால், புரோக்கருக்கு இரண்டு லட்சம் வரை போகிறது. மருத்துவமனை நிர்வாகமோ, 10 லட்சத்துக்கும் மேல் சம்பாதிப்பதாகச் சொல்கின்றனர்.
 
'குழந்தையின்மை என்பது பெரிய மனரீதியிலான பிரச்னைதான். ஆனால் அதை இப்படி லட்சம், லட்சமாகச் செலவழித்துத்தான் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றக் குழந்தைகள் அநாதைகளாக வளர்கிறார்கள். அவர்களில் ஒருவரை எடுத்து வளர்க்கலாம். ஏழைப் பெண்களின் கருமுட்டையை வாங்கி, கருப்பையை வாடகைக்கு எடுத்து அதில் வளர்த்தால்தான் குழந்தை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பணம் இருந்தால் எதையும் வாங்கிவிட முடியும் என்பதை, அவர்கள் ஓர் உயிர் விஷயத்திலும் நிரூபிக்கின்றனர்’ என்று இதை வேறு ஒரு கோணத்தில் பார்ப்போரும் உண்டு.
 
வாடகைத் தாயாக இருந்து சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதியை பிள்ளைகளின் கல்விக்கும், குடும்ப மற்றும் மருத்துவ செலவுகளுக்குமே பயன்படுத்துகின்றனர். கொஞ்சம் பணம் கிடைக்குமே என்று ஆசைப்பட்டு இதில் ஈடுபட்டாலும் அந்தப் பணம் வந்த வேகத்தில் கரைந்துபோகிறது. மேலும், ஒரு குழந்தையை சுமந்ததால் ஏற்படும் உடல் உபாதைகள் அவர்களுக்கு ஆயுள் முழுவதும் தொடர்கின்றன. ஹார்மோன் மாற்றம் காரணமாக பலருக்கு உடல் பருமனாகிவிடுகிறது.
 
எப்படி இருப்பினும் வாழ்வின் நெருக்கடிகளும், வறுமையும், சூழ்ந்திருக்கும் கடனுமே தங்கள் உடலைப் பணயம் வைக்கும் இடம் நோக்கி மக்களை இட்டுச் செல்கின்றன.
உண்மையில் இது ஓர் அவலம். தங்கள் உடம்பை வாடகைக்கு விட்டுத்தான் வாழ்க்கை நடத்த முடியும் என்ற நிலையில் தன் குடிமக்களை வைத்திருப்பது இந்த அரசுக்கு பெரும் அவமானம். இதைக் களைவதை விட்டுவிட்டு, 'தமிழ்நாடு, இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்’ என்று பெருமை பேசித் திரிவது,  நாறும் கூவத்தின் மீது நறுமணத் திரவியம் அடிக்கும் வேலை மட்டுமே!
 

என்றால் என்ன?
 
வாடகைத் தாய்: பல்வேறு உடல்ரீதியிலான காரணங்களால் குழந்தைப் பேறு அடைய முடியாத தம்பதியினர் வாடகைத் தாய்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். இதன்படி அந்தத் தம்பதியினரின் விந்தணு மற்றும் கருமுட்டை சேகரிக்கப்பட்டு, செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் கரு உருவாக்கப்பட்டு, பிறகு அந்தக் கரு, ஒரு வாடகைத் தாயின் கர்ப்பப் பையில் வைத்து வளர்த்து பிரசவிக்கப்படுகிறது!
 
கருமுட்டை தானம்: சில பெண்களுக்கு கருமுட்டையை உருவாக்க இயலாத உடல் பலவீனங்கள் இருக்கலாம். அத்தகைய சூழலில் மற்ற பெண்களிடம் இருந்து கருமுட்டையைத் தானம் பெறுகின்றனர். ஒவ்வொரு மாதமும் பெண்ணின் மாதவிடாய் நாட்களின்போது கருமுட்டைகள் உற்பத்தியாகின்றன. அவை கருவாக மாறாத நிலையில் வெளியேறுகின்றன. அவற்றை தானமாகப் பெற்று, கணவனின் விந்தணுவுடன் இணைத்து, செயற்கை முறை கருத்தரித்தல் முறையில் கரு உருவாக்கி, சம்பந்தப்பட்ட மனைவியின் கர்ப்பப் பையில் வைத்து சிசுவை வளர்க்கிறார்கள்!
 

குஜராத்  வாடகைத் தாய்களின் தலைநகரம்
குஜராத்தில் இருக்கும் ஆனந்த் நகரம் ஒரு காலத்தில் வெண்மைப் புரட்சியின் அடையாளம். புகழ்பெற்ற அமுல் பால் நிறுவனத்தின் பிறப்பிடம் இந்த ஊர்தான். ஆனால் இன்றோ, ஆனந்த் நகரம் வாடகைத் தாய்களின் தலைநகரமாக அறியப்படுகின்றது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவோர் உலகம் முழுவதும் இருந்தும் ஆனந்த் நகரத்துக்குக் குவிகின்றனர்.
 
இங்கு இந்த முறையில் ஓர் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் பெற்றெடுக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவிலேயே வாடகைத் தாய்க்கு மிகவும் குறைந்தத் தொகை வழங்கப்படுவது இங்குதான். அதிகபட்சமே 50 ஆயிரம் ரூபாய்தான்! எனினும் அந்தப் பணத்தை சம்பாதிக்கக்கூட வேலைவாய்ப்பு இல்லாத சூழலில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏழைகள் வாடகைத் தாய்களாக இருக்கப் போட்டி போடுகின்றனர்!

 
''புற்றுநோய் வரலாம்!''
''அடிக்கடி கருமுட்டை கொடுப்பதால் ஒரு பெண்ணுக்கு உடல்ரீதியாகப் பாதிப்பு ஏற்படுமா?'' - மகப்பேறு மருத்துவர் சாதனாவிடம் கேட்டபோது,
 
''நிச்சயம் பாதிப்பு ஏற்படும். அதனால்தான் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தரலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு பெண்ணுக்கு ஒரு மாதத்தில் ஒரு கருமுட்டைதான் வரும். கருமுட்டை தானம் என்று வரும்போது ஒரே ஒரு முட்டை மட்டும் வந்தால் அதில் தோல்விக்கான வாய்ப்புகள் அதிகம். அதனால்தான்  கருமுட்டையின் எண்ணிக்கையை அதிகரிக்க ஹார்மோன் ஊசி போடப்படுகிறது. இந்த ஹார்மோன் ஊசியை அடிக்கடி போட்டுக்கொள்ளும்போது, அது நிச்சயம் பெண்ணின் உடலைக் கடுமையாகப் பாதிக்கும். ஹார்மோன் கோளாறு காரணமாக உடல் நலிவுறும். முக்கியமாக, கர்ப்பப் பை புற்றுநோயும், கர்ப்பப் பை வாய் புற்றுநோயும் வருவதற்கான வாய்ப்புகள் மிக, மிக அதிகம்!'

Wednesday, February 12, 2014

ரத்த குழாய் அடைப்பு நீங்க..

நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியத...ுதான் ஆச்சரியம்.

தயவு செய்து கவனியுங்கள்
 
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு
பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு
பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள்
ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார். நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார். ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்
.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்:

1
கப் எலுமிச்சை சாறு

1
கப் இஞ்சிச் சாறு

1
கப் புண்டு சாறு

1
கப் ஆப்பிள் சைடர் விநிகர்
.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
 
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தைஅருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்.... சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் மருத்துவமனை வாங்கும் பெருந்தொகையால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.