Thursday, March 27, 2014

சிட்டுக்குருவி சில துளிகள் !
சங்க இலக்கியங்களில், 'குரீஇ’ என அழைக்கப்பட்ட பறவையே, குருவி என்று மருவியது. ஒரு சிட்டுக்குருவின் சராசரி வாழ்நாள், 13 ஆண்டுகள்.ஊர்க்குருவி, வீட்டுக்குருவி, தவிட்டுக்குருவி எனப் பல பெயர்களால் இவை அழைக்கப்படுகின்றன.
 
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற கண்டங்களின் பல்வேறு நாடுகளில் பல வகை சிட்டுக்குருவிகள் உள்ளன. புல்வெளி சிட்டுகள், மாலைச் சிட்டுகள், கறுப்புச் சிட்டுகள், காடுகளில் வாழும் நரிச் சிட்டுகள் எனப் பொதுவாகப் பிரிக்கப்படுகின்றன.
 
 
தானியங்கள், புழுக்கள், பூச்சிகள், பூக்களின் மொட்டுகள் என அனைத்தையும் சிட்டுக்குருவிகள் உண்ணும். மனிதர்கள் இருக்கும் பகுதியிலேயே வசித்தாலும் கிளி, புறா போன்று இவை மனிதர்களோடு நெருங்கிப் பழகுவது இல்லை. எனவே, இவற்றை செல்லப் பறவைகளாக வளர்ப்பது கடினம்.
 
சஹாரா பாலைவனப் பகுதியில், மஞ்சள் நிறத்தில் அழகாகக் காணப்படும் ஒரு வகை சிட்டுக்குருவி, சூடான் தங்கச் சிட்டுக்குருவி (Sudan Golden Sparrow). மாலை நேரங்களில், ஆயிரக்கணக்கான குருவிகள், கூட்டமாக நகருக்குப் பறந்துவந்து, இரை தேடும்.
 
 
சிட்டுக்குருவிகள், சராசரியாக 13 சென்டிமீட்டர் இருக்கும். சிட்டுக்குருவி வகைகளில் மிகப் பெரியது, கிளி சிட்டுக்குருவி (Parrot-billed Sparrow). மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் இவை, 18 சென்டிமீட்டர் இருக்கும். எடை சுமார் 40 கிராம்.
 
 
 இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற ஆசியப் பகுதியில் காணப்படும் ஒரு சிட்டுக்குருவி வகை, மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி (Yellow-throated Sparrow). கழுத்துப் பகுதியில் மஞ்சளாக இருக்கும் இந்த வகையைக் கண்டுபிடித்தவர், பறவையியல் அறிஞர் சலீம் அலி.
 
 உலகின் நவீன மாற்றங்கள் காரணமாக, சிட்டுக்குருவிகள் உலகம் முழுவதுமே அருகிவரும் இனமாக உள்ளன. உலக அளவில் பல வகை சிட்டுக்குருவிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. இப்போது இருக்கும் சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை
வீட்டிலேயே தயாரிக்கலாம்... இலவச சமையல் எரிவாயு!
அசத்தும் அனிதா!
ந.அபிநயரோஷிணி,   படங்கள் : ஜெ.முருகன்
'தண்ணி வரல’, 'கேஸ் விலை ஏறிட்டே போகுது’, 'கரன்ட் பில் தலைசுத்த வைக்குது...’
- இதெல்லாம் பெரும்பாலான பெண்களின் வழக்கமான புலம்பல்.
 
''எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்க்காமல், குற்றம்சாட்டாமல்... நாமே மாற்றுவழி யோசிக்கலாமே. அது, சுலபமாக சாத்தியமும் ஆகும்!''
 
- இது, அனிதா சொல்லும் அனுபவப் பாடம்.
 
புதுச்சேரி - தமிழ்நாடு எல்லையில் இருக்கும் வானூர் தாலுகா, பட்டானூர் கிராமத்திலிருக்கும் தன் வீட்டிலேயே இயற்கை முறையில் சமையல் எரிவாயு தயாரிப்பு, கழிவுநீர் மறுசுழற்சி, மாற்றுவழி அடுப்பு, தோட்டத்துக்கு மண்புழு உரம் தயாரிப்பு, மழைநீர் சேகரிப்பு... என அனைத்திலும் அசத்திக்கொண்டிருக்கும் அனிதாவை, காலைப் பொழுதொன்றில் சந்தித்தோம்.
 
''அத்தியாவசிய தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம், ரொம்ப நாளாகவே எனக்கு உண்டு. ஆனால், அதற்கான நேரம் கிடைக்காமல் இருந்தது. 'தானே’ புயல் தாக்குதலில் எங்கள் ஊரும் பாதிக்கப்பட்டபோது தண்ணீர், மின்சாரம் என்று எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இனியும் தாமதிக்கக் கூடாது என்று, அந்தச் சம்பவத்துக்குப் பின்னர்தான் என் ஆர்வத்தை செயல்வடிவமாக்கினேன்'' என்று சொல்லும் அனிதா, அடிப்படையில் ஒரு சிவில் இன்ஜினீயர்.
 
''என் கணவர் ரமேஷ்... ஆர்கிடெக்ட் கம் பில்டர். எங்களின் ஒரே மகள் ஏஞ்சலின் எட்டாவது படிக்கிறாள். நான் பி.டெக் முடித்து புதுச்சேரியில் சிவில் இன்ஜினீயராக பத்து ஆண்டுகள் வேலை பார்த்தேன். அப்போது புதுச்சேரியில பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம் கட்டியிருக்கிறேன். பிறகு, யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி, டெல்லி அரசு ஐ.டி.ஐ-யில் முதல்வராக வேலை பார்த்தேன். 2010-ம் ஆண்டு அந்தப் பணியிலிருந்து விலகி, புதுச்சேரி திரும்பிய நான்... எம்.டெக் என்விரான்மென்டல் இன்ஜினீயரிங் படித்தேன்.
 
டெக்னாலஜியில் நாம் முன்னேறும் ஒவ்வொரு நொடியும், இயற்கை வளங்களைத் துன்புறுத்தி, சீரழிக்கவும் தயங்குவதில்லை என்கிற உண்மை, அப்போதுதான் எனக்குப் புலப்பட்டது. இயற்கைக்கு எதிரான நம்முடைய செயல்களின் எதிர்விளைவுதான் சுனாமி, தானே புயல் மாதிரியான தாறுமாறான தாக்குதல்கள் எல்லாம். இதற்கான விதைகளை நம் வீட்டிலும் போடக்கூடாது என்று நினைத்தேன். இயற்கையை நேசிக்க ஆரம்பித்தேன்.
 
சாதாரண குப்பை, சாக்கடை தண்ணி இதையெல்லாம் வெளியில் விடுவது மூலமாகக்கூட, இயற்கையை நாம் சீரழிக்கிறோம் எனும் உண்மை புரிந்ததால், 'சாக்கடை தண்ணீர் சுத்திகரிப்பு' என்பதையே என்னுடைய எம்.டெக் படிப்புக்கான புராஜெக்டாக எடுத்துக்கொண்டேன். இதுக்காக ஒரு பெரிய கம்பெனியை சாம்பிளாக எடுத்து வேலை பார்த்தேன். மனதுக்கு நிறைவான வெற்றி கிடைத்தது. அப்போதுதான், 'ஒரு பெரிய கம்பெனிக்கே இதைஎல்லாம் செய்து தரும்போது, சின்ன அளவில் இருக்கும் நம் வீட்டுக்கு செய்ய முடியாதா?' என்று யோசித்து, கணவரிடம் பேசிப் பேசி, அவருடைய உதவியோடு ஒவ்வொரு விஷயமாக எங்க வீட்டிலேயே அமலுக்கு கொண்டு வந்துவிட்டோம். இப்போது, பிளாஸ்டிக் கவர்களைத் தவிர, வீட்டில் இருந்து எந்த ஒரு பொருளையும் 'குப்பை’ என்று வெளியே அனுப்புவதில்லை. அனைத்தையும் மறுசுழற்சி செய்து பயன் படுத்துகிறோம்'' என்று ஆச்சர்யப்படுத்தியவர், ஆக்கப்பூர்வமான அந்தப் பணிகளைப் பட்டியலிட்டார்!
 
 
ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்!
''
கேஸ் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. மேலும், சிலிண்டருக்குக் காத்திருக்கும் அவஸ்தையும் அதிகம். இதிலிருந்து விடுபட, நீங்களும் என்னைப் போல் வீட்டிலேயே பயோ கேஸ் அமைக்கலாம். இதற்கு மாடுகள் தேவையில்லை... நம்முடைய கழிப்பறையின் செப்டிக் டேங்கே போதும். இப்போது எங்கள் வீட்டில் 15 x 15 என்ற அளவுக்கு உருண்டையான ஒரு 'டோம்’ இருக்கிறது. இதுதான் மாடர்னைஸ்டு செப்டிக் டேங்க். இது ஒன்றும் புதிதல்ல... 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிராமத்து வீடுகளில் சாண எரிவாயு எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பம்தான்.
 
பெரிய தாழி மாதிரி, சிமென்ட் கொண்டு கட்டப்படும் உருண்டைதான் இந்த 'டோம்'. வீட்டிலிருக்கும் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இதை அகலமாக கட்டிக்கொள்ளலாம். இதன் பக்கவாட்டில் இரண்டு பெரிய பைப்புகள் நுழைவதற்கான துளை மட்டும் போட்டு மூடிவிடவேண்டும். ஒரு துளையில் ஐந்தடி நீளம், ஒன்பது முதல் பத்து அங்குல அகல பைப்பை பதித்து, அதை வீட்டு சமையலறை அருகில் வருவதுபோல் வைத்துவிட வேண்டும். இதில்தான் வீட்டில் வீணாகும் மட்கக்கூடிய அத்தனை குப்பைகளையும் போட்டு, தண்ணீர் ஊற்ற வேண்டும். அது அப்படியே 'டோம்' உள்ளே சென்றுவிடும்.
 
 
மற்றொரு துளையில் ஐந்தடி நீளம், 4 அங்குல அகலம் உள்ள பைப்பை இணைத்து, கழிவறைக்கு கொண்டு வரவேண்டும். அங்கிருந்து வெளியாகும் கழிவுகள் எல்லாம் இந்த பைப் மூலமாக 'டோம்' உள்ளே சென்று விழும். எரிவாயு தயாரிக்க ஆரம்பிக்கும் முன்பாக, சாணம் கொண்டு இந்த 'டோம்' நிரப்பப் படவேண்டும். பிறகுதான் கழிவறை சமாசாரங்களும்... மட்கக்கூடிய வீட்டுக் கழிவுகள் அனைத்தையும் உள்ளே போடவேண்டும். 45 நாளில் மீதேன் எரிவாயு உருவாகிவிடும். எல்லார் வீட்டு செப்டிக் டேங்கில் இருந்தும் இப்படி வெளியாகும் மீதேன், வீணே காற்றில் கலந்து, சூழலை மாசுபடுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால், அதே மீதேன் வாயுவை பணம் கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். நாங்களோ... எங்கள் வீட்டிலேயே உற்பத்தியாகும் மீதேன் வாயுவையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இப்போது ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் வாங்கினால்... அதிகம்!
 
பயோ கேஸ் தயாராகும் 'டோம்' உள்ளே இருந்து சிறிது தண்ணீர் வெளியாகும். இதை பம்ப் மூலமாக எடுத்து, பூந்தோட்டத்துக்கு விடுவேன். இந்த நீரை லிட்டருக்கு 50 ரூபாய் என்று விற்கலாம். இது சத்தான உரம் கலந்த நீர். நேரம் கிடைக்காததால் அதைச் செய்ய முடியவில்லை. ஆனாலும், என் தோட்டத்துக்குப் பயன்படுகிறது. இதேபோல பாத்ரூமில்இருந்து வெளியேறும் குளியல் நீர், துணி அலசும் நீர் போன்ற கழிவு நீரை... ரசாயனங்களை உறிஞ்சும் தன்மை கொண்ட கல்வாழைச் செடியைப் பயன்படுத்தி சுத்திகரித்து, டாய்லட்டை ஃபிளஷ் அவுட் செய்யப் பயன்படுத்துகிறேன். இந்த பயன்பாட்டுக்கு நல்ல தண்ணீரை செலவழிப்பது தேவையில்லாதது. அதோடு, இப்போது என் வீட்டுக்குப் பக்கத்தில் சாக்கடைத் தேக்கம் என்பதே இல்லை'' என்று விவரித்த அனிதா,
 
''இப்படி நம்முடைய தேவைகளை சுயசார்போடு பூர்த்தி செய்துகொள்ள எல்லோராலும் முடியும். அதற்கு தேவை... ஆர்வம் மட்டுமே!'' என்று அழுத்தமாக சொன்னார். இப்படி சொல்வதோடு நிற்காமல், இயற்கையைக் காப்பதற்காக வீட்டிலிருந்தே எப்படி வேலையை ஆரம்பிக்கலாம் என்பதை, விழிப்பு உணர்வு பயிற்சியாகவே மக்கள் மத்தியிலும் நடத்திக்கொண்டிருக்கிறார்... நம் அனைவரிடமும் சபாஷ் வாங்கும் இந்த அனிதா!
 
 
தேங்காய் ஓடு அடுப்பு!
தேங்காய் ஓடு சீக்கிரம் மட்காது என்பதால், இதை எரிப்பதற்காகவே 'ஆரோவில்’லில் கிடைக்கும் பிரத்யேக அடுப்பை பயன்படுத்துகிறார். இதன் மூலம் தேங்காய் ஓடும் எரிபொருளாக பயன்படுகிறது.
 
  பூந்தோட்டம், மூலிகைத் தோட்டம், காய்கறித் தோட்டம் என மூன்று வகையான தோட்டங்கள் வைத்திருக்கிறார். இதில் காய்கறித் தோட்டத்துக்கு, சொந்தமாக தயாரிக்கும் மண்புழு உரத்தையே பயன்படுத்துகிறார்.
 
மாடியில் விழும் மழைநீரை ஒரு தொட்டியில் சேகரித்து, சுத்திகரித்து குடிப்பதற்குப் பயன்படுத்துகிறார். தரையில் விழும் மழைநீரை சேகரித்து, சுத்திகரித்து, சமையல் உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்.
 
  வீட்டில் மொத்தம் 14 எல்.இ.டி பல்புகள் பயன்படுத்துகிறார். இதனால், நல்ல வெளிச்சம் கிடைப்பதோடு, கரன்ட் பில்லும் வெகுவாகக் குறைகிறதாம்!
‘கல்வி’ச்சாலை to ‘கனவு’ச்சாலை
ஆடுகளம் ஸ்டெல்லாவின் அனுபவப் பயணம்
பொன்.விமலா, படம்: தே.தீட்ஷித்
''சினிமாவுல நடிக்கறதுக்காக தலைமைஆசிரியை வேலையில இருந்து வி.ஆர்.எஸ். (கட்டாய ஓய்வு) வாங்கிட்டு வந்தப்போ, என் னோட சம்பளம்... 56,000 ரூபாய். அதுல ஒரு பாகம்கூட நடிப்புக்காக வாங்க முடியாதுனு பலரும் முன்கூட்டியே எச்சரிச்சாங்க. இருந்தாலும், சினிமாவை நான் தொழிலா பார்க்கல... கலையா பார்க்கிறேன்!''
- ஆச்சர்யம் தந்து பேசுகிறார், 'ஆடுகளம்’ ஸ்டெல்லா.
 
ஆசிரியை டு நடிகை... அதிக பழக்கமில்லாத வழியில் பயணிக்கும் அனுபவத்தைப் பேசுகிறார் ஸ்டெல்லா.
 
''எனக்கு 47 வயசு இருக்கும்போது நடிக்க வந்தேன். இப்ப 53 வயசாகுது. நான் நடிக்க வந்த கதையை, இன்னிக்கு நினைச்சாலும் எனக்கே ஆச்சர்யமாதான் இருக்கு. மதுரை, வாடிப்பட்டிதான் சொந்த ஊர். எம்.ஏ., இங்கிலீஷ்., எம்.ஏ., பொலிட்டிக்கல் சயின்ஸ் படிச்ச நான்... தனியார் பள்ளியில தலைமை ஆசிரியரா வேலை பார்த்துட்டு இருந்தேன். 'அனைவருக்கும் கல்வி’ இயக்கம் மூலமா ஒரு புராஜெக்ட்டுக்காக ஊர்ல நாடகம் நடத்தினோம். அதுல நடிச்ச என்னை, பலரும் வியந்து பாராட்டினாங்க. அதுக்கப்புறம்தான் என் வாழ்வில் அந்த திருப்புமுனை...'' என்றவர், கண்களில் புதுத்தெம்புடன் தொடர்ந்தார்.
 
'
பொதுவா, ஸ்கூல்ல எல்லோரும் என்னை 'கலகல டீச்சர்’னுதான் சொல்வாங்க. அந்த அளவுக்கு என் வகுப்புகள் சுவாரஸ்யமா இருக்கும். பசங்க எல்லாரும் என் வகுப்புனா குஷி ஆயிடுவாங்க. 'ஸ்கூல்ல பொறுப்பான தலைமை ஆசிரியை... அதேசமயம், வீட்டுல அன்பான இல்லத்தரசியா என் பொறுப்புகளை ஒருபோதும் மறந்ததில்லை. கணவர், மின்சார துறையில வேலை பார்த்து ஓய்வு பெற்றுட்டார். எங்களுக்கு மூணு பசங்க. என் வாழ்க்கை இப்படி சத்தம் இல்லாம போயிட்டு இருந்த நேரத்துலதான், எங்க நாடகத்தைப் பார்த்த டைரக்டர் ராசுமதுரவன், அவரோட 'பாண்டி’ படத்துல சின்ன ரோல்ல நடிக்க வெச்சார். அப்புறம் சினிமாவையே அளவுக்கு அதிகமா நேசிக்க ஆரம்பிச்சுட்டேன்.
 
பாடம் சொல்லிக் கொடுக்கறது எப்படி ஒரு கலையோ, அதேமாதிரி சினிமாவும் அழகான கலைனு உணர்ந்த எனக்கு... அந்தத் துறையில என் திறமையை வெளிப்படுத்துற ஆசையும் ஆர்வமும் அதிகமாச்சு. ஆசிரியர் பணி, சினிமா ரெண்டிலும் ஒரே நேரத்துல கவனம் செலுத்த முடியாம போனதால, வேலையை விட்டுட்டேன். அதுக்கப்புறம் 'ஆடுகளம்’ பட வாய்ப்பு, சினிமாவில் நல்ல விசிட்டிங் கார்டா அமைஞ்சுது!'' என்றவர், 'ஆடுகளம்’ படத்தில் தனுஷின் அம்மாவாக கரகர குரலில், தன் எதார்த்த நடிப்பின் மூலமாக பலரையும் கவனிக்க வைத்தார்.
 
''அந்த கதாபாத்திரம்... 'யாரது... புதுசா?’னு திரைத்துறையில பலரையும் கேட்க வெச்சது. அதுல இருந்து நான் 'ஆடுகளம்’ ஸ்டெல்லா ஆனேன். அதுவரை பிளாக் போர்டு, சாக்பீஸ், ஸ்டூடென்ட்ஸ்னு ஆசிரியையா இருந்த நான்... மேக்கப், கேமரா, டப்பிங்னு சினிமா உலகத்துல ஒரு ஸ்டூடென்ட்டா மாறி கத்துக்க ஆரம்பிச்சேன். தனுஷ் சார், வெற்றி மாறன் சார் இவங்கள எல்லாம் நேர்ல பார்க்கும்போது, ஆரம்பத்துல பதற்றமா இருக்கும். ஐஸ்வர்யா தனுஷ் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது, ரஜினி சாரோட பொண்ணுனு அதிசயமா பார்ப்பேன். யூனிட்ல இருந்தவங்க எல்லோரும் 'புதுசா நடிக்க வந்தவதானே..?’னு எந்த அலட்சியமும் இல்லாம, சக கலைஞரா மதிப்புக் கொடுத்தாங்க. குறிப்பா தனுஷ் சார்தான் என்னோட தயக்கம், கூச்சம் எல்லாம் போக்கி என்னை இயல்பா நடிக்க வெச்சார்'' என்று சொல்லும் ஸ்டெல்லா... 'மலையன்’, 'அரும்பு மீசையும் குறும்பு பார்வையும்’, 'பரதேசி’, 'பண்ணையாரும் பத்மினியும்’ என்று தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார்.
 
'
'என் ஆசிரியப் பணியில் வாங்கிய சம்பளத்தில் பாதியில் பாதிகூட சினிமாவில் வாங்கல. ஆனாலும் இதில் எனக்கு ஒரு சந்தோஷம், அங்கீகாரம், ஆத்ம திருப்தி கிடைக்குது. இங்க ஒவ்வொரு கலைஞரும் தனிப்பட்ட முறையில் கடுமையா உழைக்கறாங்க. அந்த கூட்டு உழைப்போட பலன்தான் தியேட்டரில் எல்லாரையும் கைதட்ட வைக்குது. 'பரதேசி’ ஷூட்டிங் ஸ்பாட்ல, ஒரு முறை எனக்கு உடம்பு சரியில்லாம வாந்தியும், மயக்கமுமா இருந்துச்சு. சரியா வசனம் பேச முடியல. 'துணை நடிகைதானே'னு நினைக்காம, ஷூட்டிங்கையே கேன்சல் பண்ணி, மறுநாள் நடிக்க வெச்சார் பாலா சார். அவர் இப்படி நடத்தினது... 'இன்னும் சிறப்பா நடிக்கணும்'ங்கற உத்வேகத்தை எனக்குள்ள ஏற்படுத்திச்சு'' என்ற ஸ்டெல்லா,
 
''எந்தளவு ஆசை இருந்திருந்தா, பார்த்துக்கிட்டிருந்த வேலையை விட்டுட்டு இந்த சினிமாவுக்கு வந்திருப்பேன். அந்த ஆசை தீரத்தீர நடிக்கணும். நல்ல நடிகைனு பேர் வாங்கணும்!''
 
- குரலில் கூடுதல் அழுத்தம் கொடுக்கிறார்!
வாழ்க்கையைக் கொண்டாடியவர்!
சாரு நிவேதிதா, ஓவியம்: பாரதிராஜா
குடித்து ரொம்பக் காலம் ஆயிற்றே என்று, சென்ற வாரத்தில் ஒருநாள் மதியம் ரெமி மார்ட்டினுடன் அமர்ந்தேன். தொட்டுக்கொள்ள ஒரு சாலட் செய்தேன். தக்காளி, வெங்காயம், முள்ளங்கி, கோவைக்காய், ஸுக்னி, ஆலிவ் காய், முட்டைக்கோஸ், கேரட் (துருவியது), கேப்ஸிகம் ஆகிய ஒன்பது அயிட்டங்களை பொறுமையாக வெட்டிப் போட்டு, எலுமிச்சைப் பழம் பிழிந்து செய்த சாலட். அப்போதுதான் குஷ்வந்த் சிங்கின் மரணச் செய்தி வந்தது. 'என்ன ஓர் ஒற்றுமை?!’ என்று நினைத்துக்கொண்டேன்.
 
குஷ்வந்த், தன்னை ஒரு குடிகாரன் என்றும், ஸ்த்ரீலோலன் என்றும் சொல்லிக்கொண்டவர். 'எனக்கு ராகிமால்ட் வேண்டாம்; சிங்கிள் மால்ட் விஸ்கி போதும்’ என்பார். பெண்களைப் பற்றி, தனது 97-ம் வயது முடிந்தபோது இப்படிச் சொன்னார், 'பெண்களை தாயாகவும், சகோதரியாகவும், புதல்வியாகவும் கருதும் இந்திய மனோபாவத்தை என்னால் எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெண்களின் வயது என்னவாக இருந்தாலும், அவர்கள் எனக்கு போகப் பொருள்களே!’
 
ஆனால் வேடிக்கை என்னவென்றால், குஷ்வந்த் தன்னை எப்படிக் காண்பித்துக்கொண்டாரோ அப்படி இல்லை. குடியை எடுத்துக்கொள்வோம். இளமையில் நீண்ட காலம் லண்டனில் வாழ்ந்த தாலோ என்னவோ, அவர் ஐரோப்பியர்களைப் போலவே குடித்தார். அவரைப் போல் அவர் ஒருவர்தான் குடிக்க முடியும். மாலை 7 மணிக்கு ஆரம்பித்து 8 மணி வரை மூன்று பெக். அதுவும் ஸ்காட்ச். அவர் கலந்துகொள்ளும் விருந்துகளிலும் இதே முறையைத்தான் பின்பற்றுவார். அவருடைய இல்லத்தில் அவர் மற்றவர்களுக்குக் கொடுக்கும் விருந்திலும் இதே கதைதான். 7 மணியில் இருந்து 8 மணி வரை மூன்று பெக். 8 மணிக்கு இரவு உணவு. 9 மணிக்கு எல்லோரும் கலைந்துவிட வேண்டும்.
 
 
90 வயது வரை இப்படி மூன்று பெக். பிறகு, 95 வரை இரண்டு பெக். அதற்குப் பிறகு 99 வயதில் இறப்பதற்கு முந்தின இரவு வரை ஒரு பெக். இரவு 10 மணிக்குப் படுத்து, காலை 4.30 மணிக்கு எழுந்துவிடுவார். காலையில் டென்னிஸ் விளையாட்டு. குளிர் காலமாக இருந்தால், லோதி கார்டனில் வாக்கிங். கோடையாக இருந்தால், ஒரு மணி நேரம் நீச்சல்.
 
குஷ்வந்த் குடிக்கும் ஸ்காட்ச் விஸ்கிதான் எல்லோருக்கும் தெரியுமே தவிர, அவருடைய அன்றாட வாழ்வில் இருந்த 'ராணுவ ஒழுங்கு’ பற்றி அதிகம் பேருக்குத் தெரியாது.
 
1969-ல் தொடங்கி ஒவ்வொரு வாரமும் அவருடைய 99-வது வயது வரை அவர் ஒரு பத்தி எழுதினார். அதாவது, 44 ஆண்டுகள் இடைவிடாமல் வந்த அந்தப் பத்தியின் முகப்பில் ஒரு 'பல்ப்’ படம் இருக்கும். பல்புக்குள் குஷ்வந்த் எழுதிக்கொண்டு இருப்பார். அருகே நிறைய புத்தகங்கள் குவிந்திருக்கும். ஒரு பக்கம், அவருக்கு இஷ்டமான ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் இருக்கும். ஆனால், குடியை கொண்டாட்டத்தின் அடையாளமாக நினைக்கும் பலரால், இப்படிப்பட்ட ஒழுங்கான வாழ்க்கையை வாழ முடியுமா? 99 ஆண்டுகள் நீடித்த அவருடைய வாழ்க்கையில், இந்த ஒழுங்கை அவர் ஒரு நாள்கூடத் தளர்த்தியது கிடையாது.
 
தேதான் பெண்கள் விஷயத்திலும். 'பெண்களைப் போகப் பொருள்களாக நினைக்கிறேன்’ என்று அவர் சொன்னாலும், அவர் எப்போதுமே பெண்களின் நேசத்துக்கு உரியவராகவே இருந்தார். காரணம், நம்ப முடியாத அளவுக்கு அவர் வெளிப்படையாக இருந்தார்.
 
அவர் மும்பையில் இருந்தபோது தேவயானி என்கிற சினிமா நிருபர், அவரின் நெருங்கிய தோழி. இரண்டு பேரும் சேர்ந்து Stag Partyக்கெல்லாம் போவார்கள். Stag Party என்றால், ஆண்கள் மட்டுமே கலந்துகொள்வது. (அந்த பார்ட்டியில் நீலப் படம் எல்லாம் போடுவார்கள் என்று எழுதுகிறார் குஷ்வந்த்!) தேவயானி ஒருமுறை, 'தர்மேந்திரா தினமும் இரண்டு நடிகைகளோடு 'கசமுசா’ செய்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போய் படுக்கை அறையில் தன் மனைவியோடு 'ஹோம் வொர்க்’ செய்கிறார்!’ என்று எழுதிவிட்டார். உடனே தர்மேந்திரா, தேவயானியைப் போய்ப் பார்த்து அவர் கன்னத்தில் அறைந்துவிட்டார். தேவயானி, போலீஸில் புகார் செய்ய, விஷயம் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆகிவிட்டது. இந்தச் சம்பவம் குறித்து குஷ்வந்த், 'தர்மேந்திராவின் இடத்தில் நான் இருந்தால், நானும் அவர் செய்ததையே செய்திருப்பேன்’ என்று எழுதினார். ஆனால், அதற்குப் பிறகும் தேவயானியும் குஷ்வந்த்தும் நண்பர்களாகத்தான் இருந்தார்கள்.
 
குஷ்வந்த்தை ஏன் பெண்கள் நேசித்தார்கள் என்பதற்கு, அவரது வாசகியான பிரேமா சுப்ரமணியம் பற்றி அவர் எழுதியிருப்பதில் இருந்து இன்னொரு யூகம் கிடைக்கிறது. அவரது நட்பு எந்த நிபந்தனையும் இல்லாமல் இருந்தது என்பதே காரணம். பிரேமா, 20 ஆண்டுகளுக்கு முன்பு  சென்னை ஹிக்கின்பாதம்ஸில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணிபுரிந்தவர். பிறகு, கணவருடன் அமெரிக்கா சென்றுவிட்டார். குஷ்வந்த்துக்கு, பிரேமா ராக்கி கட்டிய சகோதரி. 'பிரேமாவின் ஒவ்வொரு கடிதமும் 30 பக்கங்களுக்குக் குறையாமல் இருக்கும்’ என்று சொல்லும் குஷ்வந்த், 'பிரேமா அமெரிக்கா சென்ற பிறகு, அப்படி ஒரு பிராமணத் தமிழ் சகோதரியைச் சந்திக்க முடியவில்லை!’ என்று எழுதுகிறார்.
 
குஷ்வந்த் சிங், இதுவரை 85 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். (அதில் 'பாகிஸ்தானுக்குப் போகும் ரயில்’ ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய நாவல்.) இந்தப் புத்தகங்களில் அவர் வலியுறுத்தும் அடிப்படையான விஷயம் 'வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்!’ என்பதுதான். இயல்பிலேயே அழுகுணிகளான இந்தியர்களுக்கு குஷ்வந்த்தின் வாழ்க்கை ஒரு சாகசத்தைப் போலவே இருந்தது. ஆனால், சீக்கியர்களின் இயல்பான குணமே கொண்டாட்டம்தான். 'காவோ... பீயோ... மௌஜ் கரோ!’ என்பார்கள். 'சாப்பிடு... குடி... கொண்டாடு!’ என்று பொருள்.
 
குஷ்வந்த், சீக்கியராகப் பிறந்தது அவர் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், பெண்களைப் பற்றி அவர் சொன்னதைப் போல் நான் தமிழில் சொன்னால் புலனாய்வுப் பத்திரிகையில் என் புகைப்படத்தைப் போட்டு காமக்கொடூரன் என்று எழுதிவிடுவார்கள். முன்பு என்னுடைய வலைதளத்தில், 'I like wine, women and gods’ என்று பதிந்தேன். அதைப் பார்த்துவிட்டுப் பலரும் என்னைப் பற்றி 'செக்ஸ் சைக்கோ’ என்று எழுதியதும், அதை நீக்கும்படி ஆயிற்று. பாலியல் குற்றவாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் வித்தியாசம் தெரியாத சமூகத்தில், குஷ்வந்த்தைப் போல் என்னால் வெளிப்படையாக எழுத முடியவில்லை என்பது என் வருத்தங்களில் ஒன்று.
 
வாழ்க்கையைக் கொண்டாடுதல் என்பதை 'Hedonism’ என்பார்கள். இந்திய எழுத்தாளர்களிலேயே ஹெடோனிஸ்டாக வாழ்ந்த ஒரே எழுத்தாளர் குஷ்வந்த். ஆனால், ஹெடோனிஸம் வெகு எளிதில் தவறானப் புரிதலைத் தரக்கூடிய தாகவும் இருக்கிறது. கொண்டாட் டம் என்றால், தன்னையும் அழித்துக் கொண்டு அடுத்தவரையும் துன் புறுத்துதல் என்றே பலருக்கும்  அர்த்தமாகி இருக்கிறது. மது, இசை, பக்தி, மரணம் என்று எதை எடுத் தாலும் இந்தியர்களுக்கு அதீத மாகவும் சத்தமாகவும் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் நம்மவர்களைப் பற்றி சொல்லும்         முக்கியமான குற்றச்சாட்டு இதுதான்.
 
பொதுவாக, ஹெடோனிஸத்தைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள், தங்களது ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால் 50 வயதிலேயே மரணத்தைத் தொட்டுவிடுவார்கள். ஆனால், குஷ்வந்த் 99 வயது வரை கொண்டாட்டமாக வாழ்ந்தார். அவருக்கு நண்பர்கள் கூட்டம் அதிகமாக இருந்த அதே சமயம், அவர் ஒரு தனிமை விரும்பியாகவும், அமைதியை நேசிப்பவராகவும் இருந்தார்.
 
100 வயது வரை வாழ்வது எப்படி என்பதற்கு, அவர் பலமுறை டிப்ஸ் கொடுத்திருக்கிறார். தினசரி உடற்பயிற்சி, கடுமையான உணவுக் கட்டுப்பாடு, காலை-மாலை தியானம், அளவான, உயர்தரமான மது, உள்ளன்று வைத்துப் புறம் ஒன்று பேசாமல் கூடியவரை உண்மையே பேசுதல் என்று பட்டியலிட்டுவிட்டு, கடைசியாக ஒன்று சொல்கிறார்... 'ஜீவகாருண்யம்! பலரும் இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பார்களே தவிர, இதைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க மாட்டார்கள். நாய், பூனை போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு உணவிடுதல் உலகின் மேலான காரியங் களில் ஒன்று’ என்கிறார். 'பேராசை, வெறுப்பு, துவேஷம், சுயநலம் போன்றவற்றை நம்மிடம் இருந்து அகற்ற சிறிதளவும் முயற்சி செய்யாமல், வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று சுமார் நான்கு மணி நேரம் வரிசையில் நின்று தரிசிப்பதால் என்ன பயன்?’ என்று கேட்கிறார் குஷ்வந்த்.
 
குஷ்வந்த், ஓர் எழுத்தாளராக மட்டும் இல்லாமல், வாழ்க்கை பற்றிய பார்வையையே மாற்றிய என் ஆசான்களில் ஒருவராகவும் இருந்தார். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பல்வேறு விஷயங்களில் முக்கியமானது, புனிதம் என்று எதுவும் இல்லை. எல்லாமே விமர்சனத்துக்கு உட்பட்டவைதான் என்ற Iconoclasm. சிலர், மற்றவர்களை விமர்சிப்பார்கள். தனக்கு என்று வந்தால் புனிதமாகிவிடுவார்கள். ஆனால், குஷ்வந்துக்கு இந்தப் பாகுபாடே கிடையாது. அவரைப் பொறுத்தவரை கடவுளாக இருந்தாலும், இறந்து போனவர்களாக இருந்தாலும், தானாக இருந்தாலும் எல்லோருமே ஒன்றுதான்.
 
இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடலாம். செக்ஸ் பற்றி எழுதினால், இந்தியர்கள் உணர்ச்சிவசப்பட்டுத் திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் குஷ்வந்த்துக்கு தினமும் ஆபாசக் கடிதங்கள் வருவது வழக்கம். 'என்னைத் திட்ட நினைப்பவர்கள் ஏன் என் வீட்டுப் பெண்களையே திட்டுகிறார்கள்?’ என்று கிண்டலாக ஒருமுறை குஷ்வந்த் குறிப்பிட்டார். நான் சொல்ல வந்தது அது அல்ல. ஒருமுறை, அவர் முகவரிக்கு தபால் அட்டை ஒன்று வந்தது. முகவரியில், 'குஷ்வந்த் சிங், பாஸ்டர்ட், இந்தியா’ என்று மட்டுமே இருந்ததாம். அதை ஃப்ரேம் போட்டு தன் அறையில் மாட்டிவைத்தார் குஷ்வந்த்.
 
எவ்வளவு பெரிய புத்திஜீவியாக இருந்தாலும் தன்னுடைய மரணத்தைப் பற்றி யோசிக்கும்போது பயம் வந்துவிடும். ஆனால், எதைப் பற்றியுமே கவலைப்படாத குஷ்வந்த், 30 வயதைத் தாண்டாத இளைஞராக இருந்தபோதே (1943-ல்) தன் கல்லறை வாக்கியம் எப்படி இருக்கும் என்று எழுதி வெளியிட்டார். அந்த வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு இது:
'கடவுளையோ, மனிதனையோ யாரையும் விட்டுவைக்காதவன் இங்கே உறங்குகிறான். யாரும் இவனுக்காகக் கண்ணீர் சிந்த வேண்டாம். ஏனென்றால், இவன் ஒரு பொறுக்கி. அசிங்கமாக எழுதுவது இவனுக்கு ஒரு விளையாட்டு. நல்லவேளை செத்துவிட்டான்... ரவுடிக்குப் பிறந்த ரவுடி!’
 
ஆனால், குஷ்வந்த் விரும்பியபடி அவர் புதைக்கப்படவில்லை. மண்ணில் இருந்து வந்த நாம் மண்ணுக்கே போவதுதான் சரி என்று சொல்லிக்கொண்டிருந்தார். பல நிர்வாகக் காரணங்களால் அவர் விருப்பம் நிறைவேறவில்லை. உயிரோடு இருந்திருந்தால் இதையும் கிண்டல் செய்து எழுதியிருப்பார்.
 
குஷ்வந்த் சிங் பற்றி சுருக்கமாகச் சொன்னால், அவரைப் படிப்பதற்கு முன்னால் எப்படி இருந்தோமோ, அதேபோல் அவரைப் படித்த பிறகும் இருக்க முடியாது!

Friday, March 21, 2014

அறிவியலின் தோல்வியா... மனிதனின் வியூகமா..!?
சார்லஸ்
239 உயிர்கள்..!? அந்த விமானம் மர்மமாக மறைந்து ஒரு வாரத்துக்கு மேலான பிறகும், இன்னும்  தகவல் ஏதும் இல்லை!
 
239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகரத்துக்குப் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370, இந்தக் கட்டுரை அச்சுக்குச் செல்லும் நிமிடம் வரை கண்டுபிடிக்கப்பட வில்லை.
 
விஞ்ஞான வளர்ச்சி, உச்சத்தைத் தொட்டு விட்டதாகச் சொல்லப்படும் இந்த யுகத்தில், ஒரு விமானம் காணாமல்போன ஒரு வாரத்துக்குப் பிறகும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது, நிச்சயம் நமது அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கேள்விக்குள்ளாக்கும் அதிர்ச்சி!
 
பைலட்களின் பின்புலம், விமான நிறுவனங்களின் அலட்சியம், போலி பாஸ்போர்ட் பயணம், ரேடார்களின் நம்பகத்தன்மை... என மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல்போன விவகாரம், பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.
 
விமானத்தில் கோளாறு, கடலில் விழுந்து நொறுங்கிவிட்டது என்று ஆரம்பகட்டத்தில் பரப்பப்பட்ட விஷயங்கள் அனைத்தும் பொய்யாகி, விமானம் கடத்தப்பட்டது என்பதே சமீப கணிப்பு. விமான இயக்கத் தொழில்நுட்பம் குறித்து முழுக்கத் தெரிந்தவர்கள்தான் இந்தக் கடத்தலைச் செய்திருக்க முடியும். அது ஒருவர் அல்ல... ஒரு குழுவாகவே செயல்பட்டிருக்கலாம் என்ற திசையில் விரிகிறது விசாரணை!
 
 
கோலாலம்பூரில் இருந்து மார்ச் 8-ம் தேதி இரவு 12.41 மணிக்குப் புறப்பட்ட விமானம், சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அதனுடனான அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட, விமானம் காணாமல் போய்விட்டது என்ற தகவலைக் கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் கழித்தே உறுதிசெய்தது மலேசிய ஏர்லைன்ஸ்.
 
விமானத்தின் தகவல் தொடர்பு வலுக்கட்டாயமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. அப்படி விமானத்தின் டிரான்ஸ்பான்டர் (தகவல் தொடர்பு சாதனம்) துண்டிக்கப்பட்டபோது விமானம் இருந்த இடம் தாய்லாந்து - வியட்நாம் கடல் வழி. தொடர்பு துண்டிக்கப்பட்ட எட்டு மணி நேரம் கழித்து, ரேடார் சிக்னலில் இந்தியப் பெருங்கடல் மீது விமானம் பறந்துகொண்டிருந்ததாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், விமானத்தின் இயக்கம் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக டிரான்ஸ்பான்டர் கருவியின் இயக்கம் நிறுத்தப்பட்டு, அதன் பிறகு சுமார் ஆறு மணி நேரம் விமானம் பறந்துகொண்டிருந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!
 
MH370 விமானக் கடத்தல் விவகாரத்தில் முதல் சந்தேகத்துக்குரிய நபர், விமானத்தின் பைலட் சஹாரி அஹமத் ஷா. 53 வயதான இவர், 1981-ம் ஆண்டுமுதல் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பைலட் ஆகப் பணிபுரிந்து வருகிறார். 18,365 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்ட மிக மூத்த விமானி இவர்.
 
2007-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் விமானத்தின் துணை பைலட் ஃபரிக் அப்துல் ஹமீதுக்கு வயது 27. இருவருமே மலேசிய நாட்டுக்காரர்கள். இந்த விமானிகள் இருவரும் ஒன்றுசேர்ந்து விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என்பதுதான் அதிகாரபூர்வ விசாரணையின் அடித்தளம்.
 
பைலட் சஹாரி அஹமத் ஷா பற்றிய புலனாய்வுத் தகவல்களும் அவர் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன. மலேசிய அரசாங்கத்தின் மேல் சஹாரி அதிருப்தியில் இருந்தது தெரியவந்திருக்கிறது. பைலட் அஹ்மத் ஷா, மலேசியாவின் எதிர்க் கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமின் தீவிர ஆதரவாளர் என்கிறார்கள். அன்வர் இப்ராஹிமுக்கு மலேசிய நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த மார்ச் 7-ம் தேதி, சஹாரி அஹமத் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார் என்கிறார்கள். (மலேசியாவின் எதிர்க் கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் மீது ஊழல், பாலியல் மற்றும் ஓரினச்சேர்க்கை புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்காக அவர் மீது தொடர்ச்சியாகப் பொய்ப் புகார்கள் சுமத்தி கைது செய்துவருகிறது மலேசிய அரசு என்பது அன்வர் ஆதரவாளர்களின் வாதம். இதற்கும் இந்த விமானக் கடத்தலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்றரீதியிலும் விசாரணை நீள்கிறது!)
 
விபத்துக்குள்ளான விமானத்தின் துணை பைலட் ஃபைசல், ஒரு ஜாலி பார்ட்டி என்கிறது முதல் கட்ட விசாரணை. இவர் கடந்த 2011-ம் ஆண்டு தாய்லாந்தின் புக்கெட் தீவில் இருந்து மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானத்தில், மாடல் அழகிகளுடன் விமான காக்பிட்டிலேயே ஜாலியாக இருந்தார், புகைபிடித்தார் என்ற விவகாரம் சர்ச்சைகளைக் கிளப்பியது.
 
காக்பிட்டில் அனுமதி இல்லாதவர்கள் உள்ளே வர முடியுமா என்பது குறித்து இந்திய விமானங்களை இயக்கும் பைலட் ஒருவரிடம் கேட்டேன். ''2001-ம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு விமானங்களில் பாதுகாப்பு விஷயங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டன. இதில் முக்கியமான ஒன்று, 'காக்பிட்டில் விமானிகள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது’ என்பதுதான். 'விமானப் பணிப்பெண்கள், அதிகபட்சம் ஒரு நிமிடத்துக்கு மேல் பைலட் அறையில் இருக்கக் கூடாது’ என்பது விதி. ஆனால், அது அவ்வளவு கெடுபிடியாகக் கடைப்பிடிக்கப்படுவது இல்லை!
 
ஒவ்வொரு விமானப் பயணத்துக்கு முன்னும் பின்னும் பைலட்களுக்கும் ஆல்கஹால் சோதனை நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம். விமானத்தை இயக்குவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பாக பைலட் மது அருந்தி யிருக்கக் கூடாது என்பதோடு, பைலட்டின் ரத்தத்தில் 0.04 சதவிகிதத்துக்கு மேல் ஆல்கஹால் அளவு இருந்தால், அவர் விமானத்தை இயக்க அனுமதிக்கப்படக் கூடாது என்பதும் விதி. ஆனால், விமானத்தை, தரையிறக்கிய பிறகு ஆல்கஹால் டெஸ்ட் பெரும்பாலும் நடத்தப் படுவது இல்லை.
 
விமானப் பணிபெண்கள், பணியாளர்களைப் பொறுத்தவரை எவ்வளவு நேரம் பறக்கிறார்களோ அதற்கு ஏற்றபடி அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் நிறைய நேரம் பறந்தால்தான் அதிகச் சம்பளம் கிடைக்கும் என்பதால், இடைவெளி இல்லாமல் பறக்கிறார்கள். அதனால் களைப்பை மறக்க, பயணிகளுக்கான மதுவை பைலட்களும் விமானப் பணியாளர்களும் அருந்துவது உண்டு!'' என்று அதிரவைக்கிறார் அவர்.
 
 
போயிங் விமானங்களின் தரம், கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறித்து போயிங் விமான நிறுவன அதிகாரி ஒருவரிடம் பேசினேன். தன் அடையாளம் மறைத்துக்கொண்டு அவர் சொன்னது இங்கே... ''ஒரு விமானத்தை பயணிகள் உபயோகத்துக்கு அளிப்பதற்கு முன், ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் பரிசோத னைகள் மேற்கொள்ளப்படும். பனிமலை, அதிக வெப்பப் பகுதி, கடும் மழைப்பிரதேசம்... என எல்லா இடங்களிலும் கடுமையாகச் சோதிக்கப் பட்டுத்தான் விமானங்கள் விற்பனைக்கு வரும். ஒரு விமானத்தின் ஆயுட்காலம் அதிகபட்சம் 50 ஆண்டுகள். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக 15-20 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலே, ஒரு விமானத்தை பயணிகள் பயன்பாட்டில் இருந்து விலக்கிக்கொண்டு, சரக்கு விமானங்களாக மாற்றிவிடுவார்கள். ஒவ்வொரு விமானமும் அதிநவீனப் பாதுகாப்புக் கருவிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
 
தவிர, விமான இன்ஜினின் செயல்பாடுகள் கணினி மூலம் கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அதாவது விமானத்தின் இன்ஜினில் இருக்கும் சென்சார், குறிப்பிட்ட இடைவெளியில் இன்ஜினின் செயல்திறன் பற்றிய அறிக்கையை அனுப்பிக்கொண்டே இருக்கும். இதனால் விமான இன்ஜினில் மிகச் சிறிய கோளாறுகூட விமானம் தயாரித்த நிறுவனத்துக்கு உடனடியாகத் தெரிந்துவிடும். அவர்கள் உடனே விமான நிறுவனத்தைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துவிடுவார்கள்!'' என்றார்.
 
ஆக, MH370 விமானத்தின் 'தலைமறைவு’க்குக் காரணம் இயந்திரங்களின் பழுது அல்ல என்பதுதான் அதிர்ச்சி!

Thursday, March 20, 2014

காசு பார்க்கும் கருத்தரிப்பு மையங்கள்
 
சா.வடிவரசு, பொன்.விமலா, படம் : ப.சரவணகுமார்
''குழந்தை இல்லையா... இனி கவலை வேண்டாம்...'' என்று கூவி அழைக்கும் மருத்துவ நிகழ்ச்சிகள், பல தொலைக்காட்சிகளில் அரங்கேறிக் கொண்டுஇருக்கின்றன. பத்திரிகை முதல் இணையம் வரை இதற்கான விளம்பரங்களும் ஓயாமல் படபடத்தபடியே இருக்கின்றன. உச்சகட்டமாக, 60 வயதைத் தாண்டிய பாட்டி கர்ப்பமாக இருப்பது போலவும், அவர் சாலையைக் கடந்து செல்கையில் பலரும் அதை ஏதோ ஒரு அதிசய நிகழ்வாகப் பார்ப்பது போலவும் காட்சிஅளிக்கும் விளம்பரப் பதாகைகள் பலரின் கவனத்தையும் ஈர்க்கின்றன.
 
மாநகரங்கள்தான் என்றில்லை... தமிழகத்தின் சிறு நகரங்களில்கூட, டீக்கடை போல மலிந்து கிடக்கும் 'கருத்தரிப்பு மையங்கள்’ செய்யும் மருத்துவத்தில், சில பெண்களுக்கு குழந்தைகள் கிடைக்கின்றன. பலருக்கு உயிர் இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இது, இந்த வகை மையங்களின் மீது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த 'கருத்தரித்தல் மையங்களின்’ மருத்துவம் பற்றிய சீரியஸ் ஸ்கேன் ரிப்போர்ட் இது!
 
இயற்கை நிகழ்வை வலிந்து செயற்கையாக்கி..!
 
உடல்ரீதியாக சரியாக இருந்தும், சாதாரண சில காரணங்களால் கரு உருவாதல் தள்ளிப்போகும் தம்பதிகளைக்கூட, 'பேசாம ட்ரீட்மென்டுக்குப் போயிடலாம்...’ என்று மருத்துவமனைக்குப் படையெடுக்க வைத்துவிட்டன குழந்தையின்மை சிகிச்சை பற்றிய நிகழ்ச்சிகளும், விளம்பரங்களும். திருமணமானவர்களின் எதிர்பார்ப்பு, குழந்தையே என்பதைக் கருத்தில்கொண்டு, 'குழந்தையில்லை' என்பதை பெருங்குறையாக மிகைப்படுத்தி காசு பார்க்க நினைத்து, குழந்தை பிறப்பை பற்றிய ஆலோசனைகளையே அச்சுறுத்தலாக்கி விடுகிறார்கள் சில மருத்துவர்கள்.
 
திருமணம் ஆனவுடன் இயற்கையாக உடலுறவு வைத்துக்கொள்ளும் தம்பதிக்கு, குழந்தைப் பிறப்பில் பெரும்பாலும் சிக்கல்கள் இருப்பதில்லை. அதேசமயம் சிலருக்கு சிறு அளவில் ஏற்படும் சிக்கல்களைக்கூட பூதாகாரமாய் சித்திரித்துப் பெரிதுபடுத்தும் மருத்துவமனைகளும் தற்போது பரவலாகப் பெருகிக்கொண்டு வருவது உண்மை. விளைவு, இயற்கையாகவே நிகழ வாய்ப்புள்ள குழந்தைப்பேறு எனும் அந்த அற்புத நிகழ்வுக்கு, தேவையில்லாமல் பணத்தையும் நேரத்தையும் செலவழித்து, ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொள் கிறார்கள் பலர்.
 
இப்படியெல்லாம்கூட நடக்கிறது!
 
சில மருத்துவமனைகள், குழந்தைப்பேறு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கும் ஒரு பெண்ணின் மாதவிலக்கை, அந்தப் பெண்ணுக்கே தெரியாமல் சில மாத்திரைகள் கொடுத்து தள்ளிப்போடுகிறார்கள். அப்படி மாதவிலக்கு தள்ளிப் போனதை கர்ப்பம் என பொய்யாக தகவல் அளிக்க, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வாழ்வின் பயனை அடைந்துவிட்ட நெகிழ்ச்சி. பின்னர் சில தினங்களில் அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்படும்போது, அதை கருக்கலைந்ததாக சொல்லிவிடுகிறார்கள். இருந்தாலும், இதுவரை கரு உருவாகாமலேயே இருந்த தன் வயிற்றில், இந்த மருத்துவமனைக்கு வந்த பின் கரு உருவாக்கம் நிகழ்ந்ததையே (?) பெரும் நம்பிக்கையாகக் கொண்டு, அவர்களின் நாடகம் அறியாமல் தொடர்ந்து அங்கேயே சிகிச்சையை (?) தொடரும் பரிதாபங்களும் நடக்கின்றன.
 
அதேமாதிரி விந்தணுவில் சிக்கல் இருக்கும் தம்பதியின் முறையான அனுமதியில்லாமல், தங்கள் மருத்துவமனைக்குப் பெயர் கிடைக்க வேண்டுமென்ற காரணத்தால், வேறு யாராவது ஒருவருடைய விந்தணுவை, 'கணவனின் விந்தணு' என பொய்யாகக் கூறி, அதை மனைவிக்கு புகுத்தி கருவுறச் செய்து காசு பார்க்கும் கீழ்த்தரமான மருத்துவமனைகள் இருப்பதாகவும், பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல்களை அள்ளித் தெளிக்கிறார்கள்.
 
'குழந்தைப்பேறு என்பது சிக்கலான விஷயமா? அப்படி சிக்கல் இருக்கும்பட்சத்தில் அதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்தால் தான் தீர்வு கிடைக்குமா? குழந்தைப்பேறுக்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளின் ஆபத்து என்ன?’ என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளுடன் மருத்துவர்கள் சிலரை அணுகினோம்.
 
பெண்களைவிட, ஆண்களுக்கே பிரச்னை அதிகம்!
 
சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் பிரியதர்ஷினி, ''பொதுவாக குழந்தையின்மை என்ற பிரச்னை வரும்போது, காலங்காலமாக பெண்ணைத்தான் 'மலடி' என்று சொல்வார்கள். இப்போது குழந்தையின்மைக்கான காரணங்கள், பெண்ணைவிட ஆணுக்கே அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்ணுக்கு இருக்கும் குறைபாட்டைத் தீர்ப்பதைவிட, ஆணுக்கான குறைபாட்டை தீர்ப்பதே அரிதாகவும் உள்ளது.
 
பெண்களைப் பொறுத்தவரை மாதவிடாய் ஒழுங்கின்மை, உடல் பருமன், ஹார்மோன் குறைபாடு, நீரிழிவு நோய், தரமில்லாத முதிர்ந்த கருமுட்டை, சுரப்பி கோளாறுகள் மாதிரியான காரணங்களால் கருத்தரிக்காமல் போகிறது. ஏற்கெனவே ஏதாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதன் காரணமாகவும் கருத்தரிக்காமல் போக வாய்ப்பு உண்டு. இந்தக் குறைகளை ஆலோசனைகளாலும் மருந்துகளாலும் சரிசெய்யலாம். இறுதியாக, லேப்ராஸ்கோபி பரிசோதனையில் தொப்புளுக்கு அருகில் சிறு துளையிட்டு, டியூப் செலுத்தி, நீர்க்கட்டி, கருக்குழாய் அடைப்பு உள்ளிட்டவற்றை அறிந்து சிகிச்சை மேற்கொள்ளப்படும். ஆண்களைப் பொறுத்தவரை விந்தணு குறைபாடு, விறைப்புத்தன்மை குறைபாடு, தரமில்லாத, வீரியமில்லாத விந்தணுக்கள் ஆகிய காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
 
இத்தகைய குறைகளையுடைய பெரும்பாலான தம்பதிகளுக்கு முறையான ஆலோசனைகள் கிடைத்தாலே, எந்தவிதமான மேல் சிகிச்சைக்கும் அவசியமின்றி குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது'' என்ற டாக்டர், ஒரு தம்பதி தங்களுக்கு குழந்தைஇல்லை என்பதற்காக எப்போது மருத்துவமனையை அணுக வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிட்டார்.
 
முதலில் ஆலோசனையே போதும்!
 
''திருமணமாகி குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆன கணவன், மனைவி இருவரும் சரியான தாம்பத்ய உறவில் இருந்தும் கருத்தரிக்க வில்லை என்றால், 30 வயதைக் கடந்த பின்னும் கருத்தரிக்கவில்லை என்றால், மருத்துவ ஆலோசனைக்குச் செல்லலாம். உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட சிக்கல் உள்ளவர்கள், ஒரு வருடம் வரை தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனைக்குச் செல்லலாம். கவனிக்க, 'மருத்துவ ஆலோசனைக்குச் செல்லலாம்' என்றுதான் சொன்னேனே தவிர, எடுத்தவுடனேயே கருத்தரிப்பு மையங்களுக்கு அல்ல.
 
முதலில் உங்களுக்கு நன்கு பரிச்சயமான, நம்பகத்தன்மையுள்ள மருத்துவரை அல்லது உங்கள் குடும்பநல மருத்துவரை அணுகுங்கள். பெரும்பாலும் அது தீர்க்கக்கூடிய பிரச்னையாகவே இருக்கும். ஒருவேளை அந்த மருத்துவர், இயற்கையான குழந்தைப்பேறுக்கான வாய்ப்புகள் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கூறினால், அவரின் வழிகாட்டுதலோடு கருத் தரிப்பு மையங்களுக்குச் செல்லலாம். அதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட மையங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மை பற்றி நன்கு விசாரித்துக்கொள்வது நல்லது.
 
மருத்துவர்களை மாற்றாதீர்கள்..!
 
குழந்தையின்மைக்காக ஆறு மாத காலம் வரை குறிப்பிட்ட மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவிட்டு, காத்திருக்கப் பொறுமையில்லாமலோ, விளம்பரத்தைப் பார்த்தோ வேறொரு மருத்துவமனைக்குத் தாவுவது தவறு. ஒரு மருத்துவர், தன்னிடம் வருபவரின் உடல் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டு சிகிச்சை அளிக்க, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தேவைப்படும். அதற்குள் அடுத்த மருத்துவமனையை அணுகி, மீண்டும் முதலில் இருந்து சிகிச்சையை ஆரம்பித்தால், அது உடல் நலத்தைதான் சீரழிக்கும்.
 
இன்னொரு பக்கம், பல மருத்துவமனைகள் விந்தணு குறைபாடு, கருக்குழாய் அடைப்பு என தம்பதிகளின் குறைகளையோ, அதற்கு தாங்கள் அளிக்கும் சிகிச்சைகளையோ வரைபடம் மூலம் வரைந்து, விரிவான விளக்கங்களை சம்பந்தப்பட்ட தம்பதிகளுக்குக் கொடுப்பதில்லை. பல தம்பதிகளும் கண்கட்டி வித்தையாக, தங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விழிப்பு உணர்வு இல்லாமல்தான் அதைத் தொடர்கிறார்கள். ஒருகட்டத்தில், அந்த மருத்துவமனையின் வெற்று வைத்தியத்தை உணர்ந்து, வேறு மருத்துவமனைக்கு மாறும்போது, அதுவரை தாங்கள் பெற்ற சிகிச்சைக்கான விரிவான அறிக்கையை சம்பந்தப்பட்ட மருத்துவமனையிடம் கேட்டுப் பெறுவதுமில்லை. மருத்துவ அறிக்கையை டிமாண்ட் செய்து பெறுவது அவசியம்'' என்று வலியுறுத்திய மருத்துவர் பிரியதர்ஷினி, தொடர்ந்தார்...
 
புற்றுநோயை உண்டாக்கும் ஹார்மோன் ஊசி!
 
''பெண்ணின் கருமுட்டை உற்பத்தியைத் தூண்டுகிறேன் என்று அளவுக்கதிகமான ஹார்மோன் ஊசிகள் போடுவதும், மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும்... சினைப்பை புற்றுநோயை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, முடிந்தவரை இதையெல்லாம் தவிர்ப்பதுதான் நல்லது. 'குழந்தை இல்லை என்பது ஒரு குறையே இல்லை' என்கிற மனநிலைக்கு வருவதுதான்... சம்பந்தபட்ட பெண்ணின் உடல்நிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை சிந்தித்து உணரவேண்டும். சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றிருக்கும் தம்பதியருக்கும், இப்போது பரவலாக எழும் விந்தணு மாறுதல் பற்றிய விழிப்பு உணர்வு தேவை. அதாவது டெஸ்ட் டியூப் முறையில் கருத்தரித்தவர்கள், அந்தக் குழந்தை சம்பந்தப்பட்ட தம்பதியின் வாரிசுதானா என்பதை 'டி.என்.ஏ' (DNA) பரிசோதனை மூலம் தெரிந்துகொள்வது, தேவையற்ற சந்தேகம் எழுவதை ஆரம்பத்திலேயே தவிர்க்கும்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மருத்துவர் பிரியதர்ஷினி.
 
லட்சக்கணக்கில் பணம் கரைகிறது!
 
சென்னை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் சாதனாவிடம் பேசியபோது, ''கருத்தரிப்பு மையங்கள் என்பது இன்று பெரும்பாலும் காசு கொட்டும் தொழில் என்றாகிவிட்டது. குழந்தைப் பேறுக்காக, 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல டாக்டர்...’ என்று வந்து நிற்கும் தம்பதிகளின் பலவீனத்தையே பணமாக்குகிறார்கள் பலர். உதாரணமாக, தம்பதிகளில் ஆணின் விந்தணு தரமாக இருந்து, அதை பெண்ணின் கருப்பையில் செலுத்த முடியாதபட்சத்தில் ஐ.யூ.ஐ எனும் (Intra Uterine Insemination) சிகிச்சை முறைப்படி ஆணின் நகரக்கூடிய தரமான விந்தணுவை எடுத்து, அதை சுத்தப்படுத்தி, பெண்ணின் கருப்பைக்குள் செலுத்துவார்கள். இதற்கு ஆகும் செலவு 4 முதல் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஆனால், இதற்கு லட்சக்கணக்கில் கட்டணம் கறக்கிறார்கள் பல மருத்துவமனைகளில். இதுவே ஆண், பெண் இருவரும் குழந்தை பாக்கியம் பெற முடியாதபட்சத்தில்... ஆணின் விந்தணுவையும், பெண்ணின் கருமுட்டையையும் 'டெஸ்ட் டியூப் பேபி’ முறையில் இணைக்கும் கரு உருவாக்கத்துக்கு ஆகும் செலவு 1.5 லட்சம் ரூபாய். இதற்கு 3 லட்சம் ப்ளஸ் வாங்குவதும் நிகழ்கிறது''  என்று கவலை பொங்கச் சொன்ன சாதனா, தொடர்ந்து பேசினார்...
 
சாமியாரைத் தேடாதீர்கள்!
 
''ஆணின் விந்தணு சரியாக உற்பத்தியாகவில்லை, உற்பத்தியாகும் விந்தணு வெளிவர பாதையில்லை, அப்படியே பாதையிருந்தும் வெளிவரும் விந்தணு தரமாகவும், நகரக்கூடிய தன்மையுடனும் இல்லை, அது கருமுட்டையைச் சேர வாய்ப்பே இல்லை என்றெல்லாம் மருத்துவப் பரிசோதனையில் உறுதியானால், அந்த ஆணால் குழந்தை பாக்கியம் பெற முடியாது. அதேபோல கருக்குழாய் பாதிப்புடனோ, கருப்பை பாதிக்கப்பட்டோ அல்லது சுருங்கியோ, கருமுட்டை உருவாகும் சாத்தியம் இல்லாமலோ அல்லது உருவாகும் கருமுட்டை தரமற்றதாகவோ, விந்தணுவை ஏற்று கருவை உற்பத்திச் செய்யும் திறன் இல்லாமலோ இருக்கும் பெண்களாலும் குழந்தை பாக்கியம் பெற இயலாது.
 
இப்படிப்பட்ட குறைபாடு உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள், 'குழந்தை பாக்கியம் பெறமுடியாது' என்று மருத்துவர் சொல்லும்பட்சத்தில், 'வேற டாக்டர், அந்த சாமியார்’ என்று மேலும் நேரத்தையும், பணத்தையும் வீணாக்காமல், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராக வேண்டும். அதாவது, டெஸ்ட் டியூப் பேபி, வாடகைத் தாய் முறை, கருமுட்டை மற்றும் விந்தணு தானம் போன்றவற்றில் குழந்தை பாக்கியம் பெற முயற்சிக்கலாம்'' என்று சொன்ன டாக்டர், இயல்பாகவே கருத்தரிக்க வாய்ப்புள்ள நாட்கள் பற்றி, டிப்ஸும் தந்தார்
 

இயற்கையாக கருத்தரிக்க டாக்டர் சாதனா சொல்லும் டிப்ஸ்!
 
''கருமுட்டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம், உயிரணுவின் ஆயுட்காலம் 48 - 72 மணி நேரம். இந்த நேரத்தில் இரண்டும் கலந்தால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உண்டு. கர்ப்பம் தரிக்க, காலண்டர் முறை, வெப்ப முறை, சளிச் சுரப்புமுறை ஆகிய மூன்றையும் பின்பற்றலாம்.
 
காலண்டர் முறையில், 28 நாட்கள் சீரான மாதவிலக்கு சுழற்சி உள்ளவர்கள், மாதவிலக்கான நாளில் இருந்து சுமார் 14 முதல் 16-ம் நாளுக்குள் கருமுட்டை வெளியாகும்போது உறவுகொண்டால் கருத்தரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப முறையில், உடலின் வெப்ப நிலையை தெர்மாமீட்டர் கொண்டு தொடர்ந்து கவனித்து வந்து, உடல் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் நாளில் கருமுட்டை வெளியாவதை யூகித்து, உறவு கொள்ளலாம்.
 
கருமுட்டை வெளியாகும் நாளில் உயிரணு நீந்திச் செல்ல ஏதுவாக கருப்பை வாயைச் சுற்றி சளிச்சுரப்பு உருவாவதை கவனித்தும் உறவு கொள்ளலாம்.''
வத்தல் குழம்பு
'செஃப்’ தாமு,
 
தேவையானவை:
சுண்டைக்காய் வத்தல் - 8, கொத்தவரங்காய் வத்தல் - 4, வெங்காய வத்தல் - 4, கத்திரிக்காய் வத்தல் - 4, மணத்தக்காளி வத்தல் - 10, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, வெந்தயம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, புளி - எலுமிச்சை அளவு, சாம்பார் வெங்காயம், பூண்டு - தலா ஒரு கைப்பிடி அளவு, நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
 
வத்தல் குழம்புப் பொடி செய்ய:
தனியா, கடலைப் பருப்பு - தலா ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 4, வெந்தயம் - அரை டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.
செய்முறை:
முதலில் பொடியைத் தயாரிக்க வேண் டும். அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம், கடலைப்பருப்பு, கறிவேப் பிலை, மிளகு, சீரகம் ஆகியவற்றை எண்ணெய் விடாமல், கருக்காமல் வதக்கி எடுக்கவும். இது ஆறியதும், மிக்ஸி யில் நைஸாக பொடித்துக்கொள்ளவும். இதுதான் குழம்புப் பொடி!
 
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து... எல்லா வத்தல்களையும் சேர்த்து தீயாமல் வதக்குங்கள். உரித்த சாம்பார் வெங்காயத்தை நறுக்காமல் அப்படியே சேர்த்து வதக்குங்கள். பிறகு பூண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். எலுமிச்சை அளவு புளியை இரண்டு கிளாஸ் தண்ணீர்விட்டு நன்கு கரைத்து வதங்கிக்கொண்டிருக்கும் வெங்காய கலவை யில் சேருங்கள். இது நன்கு கொதிக்கும்போது உப்பு, குழம்புப் பொடி சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். இந்தக் குழம்பு நன்கு கொதித்து பேஸ்ட் போல வரும்போது இறக்கிவிடுங்கள்.
 
சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த பேஸ்ட் குழம்பைச் சேர்த்து சாப்பிட்டால்... அதன் ருசியே அலாதி! 
''பரோட்டா சாப்பிடாதீங்கோ!''
தளிர்கள் மற்றும் ஐந்தினை நடுவம் ஆகிய அமைப்புகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 22-ம் தேதி 'மாற்று வாழ்வியலுக்கான ஒன்றுகூடல்’ மற்றும் 'சிறுதானிய உணவுத் திருவிழா’வை தர்மபுரியில் நடத்தின. கொள்ளுச்சாறு, தினை அல்வா, கேழ்வரகு லட்டு, வரகு பாகுவடை, சாமை மல்லிச் சோறு, பனிவரகு சாம்பார் சோறு, பலதானியக் கொழுக்கட்டை, ராகி இட்லி, சோள தோசை, குதிரைவாலிப் புட்டு, தினைப் பாயாசம் என பலவிதமான சிறுதானிய உணவுகளையும் ருசி பார்த்தனர் தர்மபுரிவாசிகள்!
 
நிகழ்ச்சியில் பேசிய 'ஹீலர்' உமர் ஃபாருக், ''நோய்களுக்கு அடிப்படையே, உணவுகள்தான். உணவுப் பழக்கத்தையும், உணவுகளையும் முறைப்படுத்திக் கொண்டால்... உங்களுக்கு நீங்களே மருத்துவராக இருக்கலாம். நாம் பயன்படுத்தும் பற்பசைகளில், 18 மில்லி கிராம் அளவுக்கு 'நிக்கோடின்’ கலக்கப்பட்டுள்ளது. இவை, ஆறு சிகரெட் பிடித்தற்கு சமம்'' என்று அதிர்ச்சி கிளப்பிய ஃபாரூக்,
 
'
'இன்றைக்குப் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களிலேயே மிகவும் பயங்கரமானது பலரும் பரோட்டா தயாரிக்கப் பயன்படும் 'மைதா’தான். இந்த பரோட்டாவைத்தான் பலரும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். மைதாவில் தயாரான பொருட்களை தொடர்ச்சியாகச் சாப்பிடும்போதுதான்... நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதற்கெல்லாம் சரியான தீர்வு... நல்ல உணவுகளை நோக்கி நாம் நகர்வதுதான்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

Thursday, March 6, 2014

மீத்தேன் அரக்கன்! -
காவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம்
 
பாரதி தம்பி
நன்றி - ஆனந்த விகடன் 
 
பிரதமர் மன்மோகன்சிங் கடந்த ஆண்டு, 'விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்’ என்று சொன்னார். பொருளாதார மேதையின் அந்த வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது. மீத்தேன் வாயுத் திட்டம் என்ற பெயரில், வளம் மிகுந்த காவிரி டெல்டா படுகையை நரபலி கொடுத்து, சுமார் 50 லட்சம் உழவர்களை காவிரிப் படுகையில் இருந்து துரத்தியடித்து, தெற்கே ஒரு தார் பாலைவனத்தை உருவாக்கத் துடிக்கிறது மத்திய அரசு.
 
கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது. தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன.
 
மீத்தேன் வாயுத் திட்டம் என்பது என்ன?
 
மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. சாண எரிவாயுகூட மீத்தேன்தான். பூமிக்கு மேலே கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்... ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் சொல்கிறது மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தம், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் என்றால் ஓரிரு ஆண்டுகளுக்கு அல்ல... அடுத்த 100ஆண்டுகளுக்கு!  
 
 
பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது. இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம். இந்தத் தொகைக்காக இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப் பலிகொடுக்கத் துணிவார்களா? இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான பிரமாண்ட நோக்கங்கள் இருக்கின்றன.
 
காவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர். முதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள். இவை அனைத்தும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதை விளக்குகிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.
 
''நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது. இது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க முடியும்.
 
இதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது. அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு 'நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.
 
நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது? 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும். மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்!
 
உடனடித் திட்டம் மீத்தேன் என்பதால், அதன் பெயரை மட்டும் வெளியில் சொல்கின்றனர். நமக்கும் இதை நிறுத்தினாலே அதையும் நிறுத்தியது போலதான் என்பதால் மீத்தேன் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறோம். ஆனால், இந்த அரசும் நிறுவனங்களும் பிணந்தின்னி கழுகுகளைப் போல காவிரிப் பாசனப் பகுதியில் இருக்கும் மதிப்பிட முடியாத பணமதிப்புக்கொண்ட நிலக்கரிக்காக வலம்வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் நயவஞ்சகத்தையும், இந்தத் திட்டத்தின் பிரமாண்டத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று ஆவேசமும் ஆற்றாமையுமாகப் பேசுகிறார் இரணியன்.
 
 
வெளிநாடுகளில் என்ன நடக்கிறது?
 
மீத்தேன் வாயு எடுக்கப்படும் உலகின் ஏனையப் பகுதிகளில் நிலவரம் என்ன என்று தேடிப்பார்த்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது!
 
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா... உள்ளிட்ட சில நாடுகளில் மீத்தேன் வாயு எடுக்கின்றனர். ஆனால், இந்த நாடுகள் அனைத்திலுமே மக்கள் அடர்த்தி குறைவு. மக்கள் வசிக்காத நிலப்பரப்பு அதிகம். ஆகவே, அப்படிப்பட்ட இடங்களில் அவர்கள் மீத்தேன் வாயுவை எடுக்கின்றனர். ஆனால், காவிரி டெல்டாவில் ஊரும் வயல்வெளியும் இணைந்தே இருக்கின்றன. தற்போது ஒப்பந்தம் பெற்றுள்ள கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், காவிரிப் படுகையை அமெரிக்காவின் பவுடர் ரிவர் பேசின் (Powder River Basin) என்ற பகுதியின் மீத்தேன் படுகையுடன் ஒப்பிட்டுள்ளது.
 
அங்கு என்ன நிலை என்று பார்த்தால், மீத்தேன் வாயுத் திட்டம் வந்த பிறகு நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நிலப்பகுதி, கடுமையான சூழல் கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. புதிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. வீட்டின் தண்ணீர்க் குழாயில் மீத்தேன் வாயுவும் சேர்ந்து வருகிறது. தண்ணீரைப் பற்றவைத்தால் எரிகிறது. ஏராளமான திடீர் தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர்.
 
நம் ஊரைப் பொருத்தவரை ஏற்கெனவே நிலத்தரகர்கள் மூலமாக வேறு, வேறு பெயர்களில் வாங்கிய நிலங்களில் திடீர், திடீர் என வந்து குழாய் பதிக்கிறார்கள். 3 அடி விட்டம் உள்ள குழாயை 60 அடி ஆழத்துக்கும் சில இடங்களில் 500 அடி ஆழத்துக்கும் பதிக்கிறார்கள். வேதாரண்யம் அருகே 1,000 அடிக்கும் மேல் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செய்யப்படுவது இல்லை என்பதால், அனைத்தும் மர்மம்தான். அதே நேரம் இந்தத் திட்டத்தின் அபாயம் குறித்த விழிப்பு உணர்வும் மக்களிடையே வேகவேகமாகப் பரவி வருகிறது.
 
குறிப்பாக, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் உயிருடன் இருந்தபோது, தனது கடைசி நாட்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான் செலவிட்டார். பல ஊர்களில் அவரது தலைமையில், மக்கள் குழாய்களைப் பிடுங்கி எறிந்தனர். இப்போதும் அது தொடர்கிறது. ஆனால் அரசாங்கமோ, மிகவும் கள்ளத்தனமாக ஒ.என்.ஜி.சி-யின் (Oil and Natural Gas Corporation) பெயரால் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்கிறது!  
 
 
மீத்தேன் எதிர்ப்புத் திட்டக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமனிடன் பேசியபோது...
 
''நாகை மாவட்டம் நரிமணம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பெட்ரோலியம் எடுப்பது அனைவருக்கும் தெரியும். இப்போது பல இடங்களில் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கான குழாய் பதிப்பு வேலைகள், ஓ.என்.ஜி.சி-யின் பெயரில் நடைபெறுகின்றன. நரசிங்கம்பேட்டை, திருநகரி என்று பல இடங்களில் இப்படிச் செய்கிறார்கள். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை ஓ.என்.ஜி.சி-யும், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணை செயற்பாட்டாளர்கள் (co-operators). ஆகவே, அவர்களுக்காக இவர்கள் ஆரம்பகட்டப் பணிகளைச் செய்து தருகின்றனர். அதனால் ஓ.என்.ஜி.சி. பெயரில் நடந்தாலும் அது மீத்தேன் திட்டத்துக்குத்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்.
 
ஏற்கெனவே மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்றுவரும் நிலக்கரி மற்றும் எரிவாயு அகழ்வுப் பணிகளில் ஓ.என்.ஜி.சி-யுடன், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணைந்துதான் செயல்பட்டு வருகிறது. அங்கு, மொத்தப் பணிகளில் 25 சதவிகிதத்தை கிரேட் ஈஸ்டர்ன் செய்கிறது. ஆனால், டெல்டா பகுதியில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. செயல்பட்டு வருகிறது என்றபோதிலும், முழு திட்டமும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் இந்தத் திட்டத்தை தற்போதைய நிலையில் 'மன்னார்குடி பிளாக்’ என்று அழைக்கிறது.  
 
காவிரிக்கும் மீத்தேனுக்கும் என்ன தொடர்பு?
இந்தத் திட்டத்தின் வேறொரு கோணத்தை விவரிக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு.
 
''35 ஆண்டுகளில், 6.25 லட்சம் கோடி மதிப்புள்ள மீத்தேன் வாயுவை எடுக்க முடியும் என்கிறார்கள். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பகுதியில் விளையும் நெல், உளுந்து, எள், பாசிப்பயறு, கடலை, கரும்பு, வாழை, கம்பு, சோளம் போன்ற பயிர்களின் பண மதிப்பைக் கணக்கிட்டால், அது எங்கேயோ இருக்கும். விவசாயத்தை நம்பி நடைபெறும் இதரத் தொழில்களையும், கால்நடைகளின் மதிப்பையும் சேர்த்துக் கணக்கிட்டால்,                  35 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 35 லட்சம் கோடி மதிப்புக்கு இங்கே விவசாயம் நடைபெறும். ஆகவே, லாபம் என்ற அடிப்படையில் பார்த்தாலும் இது மிகவும் முட்டாள்தனமான திட்டம்.
 
மேலும், இவர்கள் நிலத்தை சுமார் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அகழ்வு செய்ய அனுமதி பெற்றுள்ளனர். அதாவது பூமிக்கும் கீழே ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குத் துளை தோண்டி பாறைகளை உடைத்து, நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் எடுக்கப்போகின்றனர். அதன் பாதிப்பு யூகிக்க முடியாததாக இருக்கும். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் பாதிப்பு சேர்வராயன் மலை வரையிலும் இருப்பதாகச் சொல்கின்றனர். எனில், இவர்களின் அகழ்வுப் பணியால்          தஞ்சாவூர் பெரிய கோயிலும், கங்கைகொண்ட சோழபுரமும் சரிந்துவிழும் வாய்ப்பு இருப்பதை முற்றிலும் மறுக்க முடியாது'' என்று அதிரவைக்கிறார்.
 
திருநாவுக்கரசு குறிப்பிடும் மற்றொரு கோணம் மிகவும் முக்கியமானது. இந்தியாவின் வெவ்வேறு பிராந்தியங்களின் நதிநீர் சிக்கல்கள் சட்டபூர்வமாகவோ, பேச்சுவார்த்தைகள் மூலமோ, வளர்ச்சித் திட்டங்கள் மூலமோ தீர்த்துவைக்கப்படுகின்றன. ஆனால், கடந்த  40 ஆண்டுகளுக்கும்  மேலாக காவிரி நீர் பிரச்னை மட்டும் ஏன் தீராத சிக்கலாகப் 'பராமரிக்கப்படுகிறது’? காவிரிப் படுகையில் பெட்ரோலியப் பொருள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதற்கும், காவிரி நீர் கடைமடை வந்து சேராததற்கும் உள்ள இணைப்பு என்ன? 'இனிமேலும் விவசாயம் செய்து பிழைக்க முடியாது’ என இன்று உருவாகியுள்ள மனநிலை இயல்பானதா? விவசாயிகள் தாங்களாகவே விவசாயத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் முடிவை எடுப்பதற்குப் பின்னால் அரசின் பாத்திரம் உண்டா, இல்லையா? இந்தக் கேள்விகள் முக்கியமானவை. இன்றைய சிக்கல்களை, ஒரு விரிந்த கோணத்தில் புரிந்துகொள்ள உதவுபவை. இப்போதைய நிலையில்கூட, நல்ல விலை கொடுத்தால் நிலத்தை விற்றுவிட பலர் தயாராக இருப்பதுதான் அவர்களின் பலம்!
 
தேர்தலுக்குப் பிறகு என்னவாகும்?
இந்தத் திட்டத்துக்காக, மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 2,000 இடங்களில் கிணறுகள் அமைத்து அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். அதாவது, எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் மட்டுமே நிறைந்திருக்கும். மீத்தேன் வாயுக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாக வயல்வெளிகளில் பாய்ந்தோடும். இதற்காக ஒவ்வோர் இடத்திலும் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர், ஐந்து ஏக்கர் என்று இடத்துக்குத் தகுந்தாற்போல நிலங்களை வாங்கியுள்ளனர். திட்டத்தின் செயல்பாடு தற்போது சற்றே மெதுவாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த மிதவேகம் தேர்தலுக்கானது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசின் அசுர பலத்துடன் திட்டம் செயல்படுத்தப்படும் வாய்ப்புகளே அதிகம்!  
 
''அப்படித்தான் நாங்களும் யூகிக்கிறோம்'' என்ற பேராசிரியர் ஜெயராமன் இதன் அரசியல் கோணத்தை விளக்கினார்.
 
''இந்த மீத்தேன் வாயுத் திட்டத்துக்காக 2010-ல் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. 2011-ல் அப்போதைய மாநில தி.மு.க. அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 'மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்பட அனைத்து அனுமதிகளையும் பெற்று நாங்களே திட்டம் செயல்படுத்துவதை உறுதி செய்வோம்’ என்றது அந்த ஒப்பந்தம். அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். திட்டத்துக்கு எதிர்ப்பு இருப்பதைப் பார்த்ததும் கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆராய்ந்து மூன்று மாதங்களில் அறிக்கை அளிப்பார்கள் என்று சொன்னார். அவர்கள் ஆராய்ந்தார்களா... இல்லையா? என்று தெரியாது. இன்னமும் அறிக்கை வரவில்லை. ஆனால், அந்த நிபுணர் குழுவில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையும் இருக்கிறது. அமெரிக்கா, நைட்ரஜன் குண்டு தயாரிக்க வைத்திருந்த வேதிப்பொருள்களை நைட்ரேட் உப்பாக்கி இங்கு கொண்டுவந்து பசுமைப் புரட்சி என்ற பெயரில் மண்ணை மலடாக்கியவர் சுவாமிநாதன். ஆகவே, அறிக்கையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது.
 
எங்களைப் பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளுமே மக்களுக்கு விரோதிகளாகத்தான் செயல்படுகின்றன. நீதிமன்றங்கள்கூட அரசின் கொள்கை முடிவுகளை எதிர்ப்பது இல்லை. இப்போது நாங்கள் நம்பியிருப்பது மாபெரும் மக்கள் சக்தியை மட்டும்தான். குழாய் அமைக்கப்படும் ஒவ்வோர் ஊரிலும் 2,000 பேர் திரண்டு அதைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே எங்கள் திட்டம். ஏனெனில், அரசாங்கமும் சட்டமும் அதிகாரபூர்வமாக எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கின்றன. அதைத் தட்டிக்கேட்பது எங்கள் கடமை!'' என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் அவர்.
 
கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் அலுவலகம் எதுவும் தமிழ்நாட்டில் இல்லாத நிலையில் அவர்கள் தரப்பின் விளக்கம் பெறுவதற்காக மின்னஞ்சல் வழியே தொடர்புகொண்டோம். 'விரைவில் உங்களைத் தொடர்புகொள்கிறோம்’ என பதில் வந்த நிலையில், இந்த இதழ் அச்சுக்குச் செல்லும் வரையிலும் எந்தப் பதிலும் வரவில்லை.
 
கருணாநிதி, திருவாரூர்க்காரர். அ.தி.மு.க-வில் மன்னார்குடிக்காரர்களின் ஆதிக்கம்தான் இன்னும் இருக்கிறது. இருந்தாலும் என்ன... பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகத் தங்கள் சொந்த ஊர்களைக்கூட திறந்துவிடுவதில் இவர்களுக்கு சிறு தயக்கமும் இல்லை. ஆனால், உழவர்களைப் பொறுத்தவரை இது 'வாழ்வா, சாவா?’ போராட்டம். இதில் விட்டுக்கொடுத்தால் அநாதைகளாகப் பஞ்சம் பிழைக்க ஊர், ஊராகத் திரியவேண்டி இருக்கும். வண்டல் மண்ணின் வாசம் நிறைந்த மருத நிலத்தின் உழவர்கள், தங்களின் பல்லாயிரம்  ஆண்டு கால விவசாயப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தக்கவைக்க நடத்தப்போகும் இறுதிப் போர் இது!
 

கூடங்குளம் தரும் படிப்பினை!
 
சமகாலத்தில் இதே மின்சாரத்தை முன்வைத்து நாம் எதிர்கொள்ளும் பெரும் போராட்டங்களில் ஒன்று கூடங்குளம். ஆனால், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக உண்ணாவிரதம் தொடர்ந்தாலும்கூட நோக்கத்தில் வெற்றி அடைய முடியவில்லை. மின் உற்பத்தியும் பகுதி அளவில் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் கூடங்குளம் போராட்டத்தில் இருந்து மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினரும், டெல்டா பகுதி மக்களும் சில படிப்பினைகளைப் பெறவேண்டியது அவசியம்.
 
இதைப் பற்றி பேசிய பேராசிரியர் ஜெயராமன், ''மீத்தேன் திட்டத்தைப் பொறுத்தவரை, பரவலாக ஆயிரக்கணக்கான இடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியாக வேண்டும். அந்தந்தப் பகுதி மக்களின் எழுச்சி இல்லாமல் இதை முறியடிக்க முடியாது. அதனால் மக்களிடம் இதுகுறித்த விழிப்பு உணர்வையும், இதன் அரசியல் நியாயத்தையும் எடுத்துச் செல்கிறோம். மேலும், போராட்டத்தை லாபகரமாக மாற்றவும் மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கவும் முயலும் என்.ஜி.ஓ. குழுக்களைத் தடுத்து நிறுத்துவதிலும் உறுதியாக இருக்கிறோம்!'' என்றார்.
 
கிராம மக்கள் செய்ய வேண்டியது என்ன?
 
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் மேலும் பல அமைப்புகள் சார்பில் டெல்டா பகுதிக் கிராமங்களில் தொடர்ச்சியான விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்கள்... கிராம மக்கள் செய்யவேண்டிய சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர்.
 
கிராமத்தினர் உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அவர்கள் உள்ளூரின் நில விற்பனையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
 
  கனரக இயந்திரங்கள் குழாய் அமைக்க வரும்போது, 'அவர்கள் யார்?’, 'நோக்கம் என்ன?’ என்று விசாரிக்க வேண்டும். ஒருவேளை, சரியான தகவல் தெரிவிக்காமல் குழாய் அமைத்தால், மக்களைத் திரட்டி முடக்க வேண்டும்.
 
  கிராமசபா கூட்டத்தில், 'எங்கள் கிராம எல்லைக்குள் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’ என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
 
  இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்பதை ஒரு வாக்குறுதியாகக் கொடுத்து, ஓட்டு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகளைப் புறக்கணிக்க வேண்டும்!