Thursday, July 28, 2016

நாம் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யுட்யூப்... அடிமைகளா ?

2004-ம் ஆண்டில் ஃபேஸ்புக் தொடங்கப்பட்டபோது அந்த நிறுவனத்தில் வேலைபார்த்தவர்கள் மூன்றே பேர்தான். 2016-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தில் வேலைபார்க்கிறவர்களின் எண்ணிக்கை 13,598. மலைக்கவைக்கிற அபார வளர்ச்சி. ஆனால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டதும் பாடுபடுவதும் மார்க் ஸூக்கர்பெர்க்கும் அவருடைய சகாக்களும் மட்டுமே அல்ல... அதில் நமக்குத்தான் நிறையவே பங்கு இருக்கிறது. 

உலகம் எங்கும் ஃபேஸ்புக் வளர்ச்சிக்குப் பாடுபடுகிற தோழர்களின் எண்ணிக்கை மாதத்துக்கு 165 கோடி.இவர்களில் 98 கோடி பேர், தினமும் செல்போன் மூலமாக மார்க் ஸூக்கர் பெர்க்குக்கு உதவுகிறார்கள். அதில் நீங்களும் நானும் இருக்கிறோம். 

பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரித் தோழி ஒருவரைச் சந்தித்தேன். ஹோட்டலில் விதவிதமான உணவுகளைச் சின்னச் சின்னக் கோப்பைகளில் கொண்டுவந்து வைத்தனர். ஒரு கோப்பையில் கையை வைக்க... `டேய்... இர்ரா இர்ரா!' - எதிரில் இருந்த தோழி என் கையைப் பிடித்துத் தடுத்தார். மொபைலை எடுத்து உணவுப் பண்டங்களை விதவிதமாகப் படம் பிடிக்கத் தொடங்கினார். நிறையப் படங்களை எடுத்து முடித்தவர், அதை அந்த இடத்திலேயே ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்யத் தொடங்கினார். பசி தாளாமல் நான் அன்னாரின் அனுமதியோடு சாப்பிடத் தொடங்கினேன். ஒரு கையில் மொபைலும் இன்னொரு கையில் ஸ்பூனுமாகச் சாப்பிட ஆரம்பித்தார் தோழி. எதிரில் உட்கார்ந்திருக்கும் என்னோடு அதிகம் பேசவில்லை. என் கேள்விகளுக்கும் மொபைலைப் பார்த்துக்கொண்டே ஏதோ  பதில் சொன்னார். 

உணவு காத்திருந்தது. அவரோடு பேச எனக்கு ஏராளமான விஷயங்கள் இருந்தன. நான் சாப்பிட்டு முடித்திருந்தேன். அநேகமாக தன் பால்ய நண்பனுடனான உணவகச் சந்திப்பு குறித்து பெருமிதமாக ஃபேஸ்புக்கில் நீண்ட கட்டுரை ஒன்றை அன்றைய இரவில் அவர் எழுதியிருக்கலாம். 

எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அதை உடனுக்குடன் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவது அல்லது அதைப் பற்றி எழுதிவிடுவது. எந்தச் செய்தி வந்தாலும் அதன் உண்மைத்தன்மையைக்கூட ஆராயாமல் உடனுக்குடன் பகிர்ந்துகொள்வது அல்லது அதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றுவது, கேலிசெய்வது. மலை ஏறுகிறோமோ, மாரத்தான் போட்டியோ, ரயிலில் பயணமோ, சினிமா பார்க்கிறோமா, சில்லறை வாங்க அலைகிறோமோ, இழவு வீட்டுக்குப் போனாலும் அதையும் உடனுக்குடன் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எதிலாவது போட்டுவிட வேண்டும். 

நமக்கு அருகில் இருக்கிறவர்கள் லைக் பண்ணுகிற மாதிரி வாழ்கிறோமோ... இல்லையோ, முகம் தெரியாதவர் களின் லைக்குகளுக்காக வாழப் பழகிவிட்டோம். 

அரிய தருணங்கள் நிகழும்போது படங்கள் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தது மாறிவிட்டது. போட்டோ எடுப்பதற்காகவும் சமூக வலைத்தளங்களில் தன்னை வெளிக்காட்டிக்கொள்வதற்கான தருணங்களை உருவாக்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறோம். சுயகழிவிறக்கம் மேலோங்கி சமூக வலைத்தளங்களில் ஆறுதல் தேடி அலைகிறோம். வெள்ளத்தில் மிதக்கும்போதும் மீட்கும்போதும் எங்கும் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் மனிதர்களை சகஜமாகக் கடக்கிறோம். கடவுளே நேரில் வந்து தரிசனம் தரும் ஒரு நாளில், அந்த நொடியில் `செல்போன் எங்கே... சீக்கிரம் செல்ஃபி எடுத்துடுவோம்' என்ற எண்ணம்தான் நமக்கு எழுமோ! 

நாம் ஏன் சமூக வலைத்தளங்களுக்கு அடிக்ட்டுகளாக மாறியிருக்கிறோம்? எது நம்மை அப்படி மாற்றியிருக்கிறது? 

இந்தக் கேள்விகளுக்கு விடையளியுங்கள்!

1. காலையில் தூக்கத்தில் இருந்து கண் விழித்ததும் அலைபேசியைத் தேடி எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர் பார்க்கும் பழக்கம் உண்டா?

2. நாள் முழுக்கக் காரணமே இல்லாமல் அடிக்கடி அலைபேசியில் சமூக வலைத்தளங்களை நோண்டுகிறீர்களா?

3. எதிரில் ஒரு நபர் பேசும்போது, அவரை அவமதிப்பதைப்போல வாட்ஸ்அப் குரூப் அப்டேட்ஸ் பார்க்கிறவரா?

4. அசரவைக்கிற எதைப் பார்த்தாலும் அதற்குப் பக்கத்தில் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் போடவேண்டும் எனத் தோன்றுகிறதா? 

5. வீட்டிலோ, மொபைலிலோ இணைய இணைப்பு வேலை செய்யாதபோதும், பேட்டரி டவுண் ஆகும்போதும் பதற்றமும் கோபமும் கொண்டது உண்டா?

6. புத்தகங்கள் படிக்கும்போது, திரைப்படம் பார்க்கும்போது, பயணம் செய்யும்போது விடாமல் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அதுகுறித்து அப்டேட் செய்யும் பழக்கம்கொண்டவரா?

7. ஆறாவது பாயின்ட்டில் சொன்னதை எல்லாம் சமூக வலைத்தளங்களை நோண்டாமல் நிறுத்தி நிதானமாகக் கடைசியாக ரசித்து செய்தது எப்போது? 

8. எந்நேரமும் சமூக வலைத்தளங்கள் பார்ப்பதற்காக செல்போனை நோண்டிக்கொண்டே இருப்பதால், வீட்டில் சச்சரவுகள் உண்டாகி சண்டையாக வெடித்திருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கு மார்க்குகள் கிடையாது. ஆனால், இந்தப் பழக்கங்களில் உங்களுக்குப் பாதி இருந்தாலும் உடனடியாக விழித்துக்கொள்ளுங்கள். நீங்கள் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாக இருக்கிறீர்கள்.

 பதற்றப்பட வேண்டாம். நல்லவேளையாக நாம் எல்லாம் தனியாக இல்லை, உலகம் எங்கும் கோடிக்கணக்கானோர் இப்படி சமூக வலைத்தளங்களின் பிடியில் சிக்கியுள்ளனர். செல்ஃபி தொடங்கி ஸ்டேட்டஸ், கமென்ட்ஸ், வீடியோ பதிவு, மீம்ஸ் என இந்த அடிக்‌ஷன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதத்தில் பாதிப்பை உண்டாக்கிவருகிறது. 

இதற்கு நாம் மட்டுமே காரணம் இல்லை. சமூக வலைத்தள நிறுவனங்கள், தங்களுக்குள் தொடர்ந்து மறைமுகமாக ஒரு போரை நிகழ்த்தி வருகின்றன. யார் அதிகப் பயனாளர்களைக் கொண்ட வலைத்தளம், யாருடைய வலைத்தளத்தில் மக்கள் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்பதில் நடக்கும் வியாபாரப் போட்டி இது. அதனாலேயே இங்கே வருகிறவர்களை எப்படி மேலும் மேலும் கவர்ச்சிகரமான விஷயங்களைப் காட்டி தக்கவைப்பது என்பதைக் கண்டறிந்து செயல்படுத்துகின்றன. அதற்காக பல கோடிகளில் புதிய விஷயங்களையும் புதுப்புது உத்திகளையும் ஒவ்வொரு நாளும் புகுத்திக்கொண்டே இருக்கின்றன. ஃபேஸ்புக் நிறுவனம் 2012-ம் ஆண்டில் பல ஆயிரம் கோடிகளுக்கு இன்ஸ்டாகிராமை விலைக்கு வாங்கியதும், ட்விட்டர் நிறுவனம் வீடியோ பகிர்வு சமூக வலைத்தளமான பெரிஸ்கோப்பை விலை பேசி முடித்ததும் இதற்குத்தான். அவர்களுடைய லாப வேட்கைக்கான கச்சாப் பொருட்கள்தான் நாம்.

`99 Days of freedom' என்ற இணையதளத்தில் நம்மைப் பற்றி விவரங்களைப் பதிவு செய்துகொண்டு, 99 நாட்களுக்கு நாம் ஃபேஸ்புக் உபயோகிக்கக் கூடாது. ஒவ்வொரு 33  நாட்களுக்கும் ஒருமுறை ஃபேஸ்புக் இல்லாத வாழ்க்கை குறித்த நம்முடைய உணர்வுகளை அப்டேட் செய்ய வேண்டும். இந்த ஆய்வில் உலகம் எங்கும் இருந்து பல ஆயிரம் பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஆனால், கலந்துகொண்ட பலராலும் 99 நாட்களுக்கு ஃபேஸ்புக் இல்லாமல் இருப்பது சாத்தியப்படவில்லை. காரணம், அது அவ்வளவு எளிதாக இல்லை என்பதே. இதற்கு, இவர்கள் எல்லோருமே சொன்ன ஒரே காரணம், `ஃபேஸ்புக் பார்க்காம இருக்க முடியலை' என்பது மட்டும்தான். 

`நம்மால் சமூக வலைத்தளங்களின் பிடியில் இருந்து ஏன் விடுபட முடிவதில்லை?' என்பதற்கு மனநல நிபுணர்கள் சில காரணங்களை முன்வைக்கின்றனர். 

1.FOMO (Fear Of Missing Out) 

ஒரு செய்தியை அல்லது தகவலைத் தவறவிட்டுவிடுவோம் என்ற அச்சம். ஒரு தகவலை/அனுபவத்தை இன்னொருவர் அடைந்துவிடுவார். அதன்மூலம் அவர் நம்மைவிட ஒரு படி முன்னே இருப்பார் என்ற குழப்பமான மனநிலை. எல்லோரும் `கபாலி' படம் பற்றி விமர்சனம் செய்யும்போது, நாமும் அதைப் பற்றி ஏதாவது சொல்லியாக வேண்டும் என உருவாகிற சோஷியல் நிர்பந்தம். அதைச் சொல்லவில்லை என்றால், இந்தச் சமூகக் குழுவில் இருந்து விலக்கப்படுவோமோ என்ற அச்சம். நீங்கள் சமூக வலைத்தளங்களுக்கு செல்லாமல் இருந்தாலும் உங்களை சமூக வலைத்தளங்கள் விடாது. தினமும் உங்களுடைய மின்னஞ்சலுக்கே வந்துவிடுவார்கள். பாருங்கள், உங்க நண்பர்கள் என்ன போட்டிருக்கிறார்கள்... இதை எல்லாம் தவறவிட்டீர்கள் என விடாமல் மெயில் அனுப்பி ஈர்க்க முயற்சிக்கும். இது ஃபோமோவைத் தூண்டக்கூடிய செயல்களில் ஒன்று.

2. Peer Pressure

எல்லோரும் செய்வதாலே நாமும் ஒரு காரியத்தைச் செய்தே ஆகவேண்டிய அழுத்தம். ``ஒருமுறை உள்ளே வந்துவிட்டால் இந்த பிரஷர் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். சுற்றிச் சுற்றி எண்ணற்ற விஷயங்கள்... எல்லோரும் படிக்கிற லிங்க்குகள், பார்க்கிற வீடியோக்கள், கிளிக் பண்ண ஆரம்பித்தால் ஓய மாட்டீர்கள். எல்லாவற்றையும் படித்தும் பார்த்தும் தெரிந்துகொள்ள துடிப்பீர்கள். அதற்குப் பிறகு அது தொடர்ச்சியான பழக்கமாக மாறி அடிமைப்படுத்த ஆரம்பிக்கும்'' என்கிறார் இன்ஸ்டாகிராமை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான ஹோச்முத். 

3. Notification 

சமூக வலைத்தளங்களின் மிக முக்கியமான தூண்டில் இது. நம்முடைய டைம்லைனின் உச்சந்தலையில் பூத்திருக்கும் இந்தச் சிவப்பு நிறப் பூவைப் பார்த்ததும் நமக்கு உள்ளம் பூரிக்கிறது. நமக்கே நமக்கான செய்திகள் அவை. எத்தனை லைக்கு வந்ததோ, என்ன கமென்ட் வந்ததோ என்ற பேரார்வம். நாம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாதபோதும்  உள்ளுக்குள் எத்தனை நோட்டிஃபிகேஷன் வந்திருக்கும்  என்ற  எண்ணம்  உள்ளாடிக்கொண்டே இருக்கும். அதனாலேயே தினமும் ஒருமுறையாவது ஒரு விசிட் அடித்து நோட்டிஃபிகேஷன்களைப் பார்க்கத் தூண்டப்படுகிறோம். 

4. Algorithmic Filtering

ஃபேஸ்புக்கோ ட்விட்டரோ உள்ளே நுழைந்ததும் வரிசையாக நம் மனசுக்கு ஏற்ற வீடியோக்கள், இணையதள லிங்க்குகள், படங்கள், நண்பர்களின் ஸ்டேட்டஸ்கள் டைம்லைனில் முன்னணியில் எப்படி வருகிறது என யோசித்தது உண்டா? சமூக வலைத்தளங்கள் தொடர்ச்சியாக நம் ஒவ்வொருவருடைய செயல்பாடுகளையும் நமக்குத் தெரியாமல் கூர்ந்து கவனிக்கின்றன. நாம் எதை வாசிக்கிறோம், எந்த மாதிரியான விஷயங்களில் அதிக நேரத்தைச் செலவழிக்கிறோம், எந்த மாதிரியான வீடியோக்கள் பார்க்கிறோம், எதைத் தேடுகிறோம் என்பதை எல்லாம் அலசி ஆராய்கின்றன. இந்த முறைக்கு `அல்காரித்மிக் ஃபில்டரிங்' என்று பெயர். இணையதளத்தின் உள்ளே நுழைந்ததும் தொடர்ச்சியாக அதிக நேரம் உங்களைத் தக்கவைக்க நடக்கும் சின்ன சூது இது. 

இவை அல்லாமல் வேறு சில விஷயங்களும் நம்மை சமூக வலைத்தளங்களில் இருந்து தப்பவிடாமல் செய்கின்றன. 

வீடியோ ஆபத்து!

வீடியோ போதையில் சிக்குகிறவர்கள் பெரும்பாலும் 20 வயதுக்கும் குறைவானவர்கள் என்கிறது ஆய்வு. எந்தவித விஷயங்களும் இல்லாமல் தனிமனிதர்கள் நேரடியாகப் பேசுவது போன்ற வீடியோக்கள் அதிக அளவில் நம்மை ஈர்க்கக்கூடியவை என்றும், அது பயனுள்ளதோ இல்லையோ, ஆனால் அதைப் பார்த்துக்கொண்டே இருப்பதை நாம் விரும்புகிறோம் என்றும் கண்டறிந்துள்ளனர். ஃபேஸ்புக்கைப் பொறுத்தவரை வீடியோக்கள் பத்து மடங்கு அதிக கமென்ட்களையும் லைக்குகளையும் பெறுகின்றன என்கிறது ஃபேஸ்புக் தரப்பு. ``வீடியோதான் இணையத்தின் எதிர்காலம். ஐந்து ஆண்டுகளை ஃபாஸ்ட் ஃபார்வேர்டு செய்தால், நாம் ஃபேஸ்புக்கில் பார்க்கும் விஷயங்களில் 90 சதவிகிதம் வீடியோவாக மாறிவிடும். இப்போதே அந்த மாற்றம் வர ஆரம்பித்துவிட்டது'' என்கிறார் மார்க் ஸூக்கர்பெர்க். இந்தியாவில் இந்த வீடியோ சுழலில் அதிகம் சிக்கியிருப்பது 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள். இந்தியாவின் டாப் டென் வீடியோ சேனல்களில் மூன்றாம் இடம் பிடித்த சேனல் `CHUCHU TV '. இது முழுக்க குழந்தைகளுக்கான வீடியோக்கள் அடங்கிய சேனல். 

519 கோடி ஹிட்ஸ் வாங்கிய அதிபயங்கர சேனல். ஒவ்வொரு நாளும் இந்த சேனலுக்கு 7,000 பேருக்கும் அதிகமான குட்டிப்பயல்கள் இணைகிறார்கள். குழந்தைகள் சேனல்களின் வெற்றிக்குக் காரணம் நாம்தான். குழந்தைகளைச் சாப்பிடவைக்க குறும்பு பண்ணாமல் உட்காரவைக்க யூடியூபுக்குப் பழக்குகிறோம். இடைவிடாமல் ஓடும் இந்த வீடியோக்களை அவர்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் உண்டாகும் பாதிப்புகளைப் பற்றி நாம் கருத்தில்கொள்வதே இல்லை. 

புகைப்பட போதை!

நம் எல்லோருக்குள்ளும் கொஞ்சம் நார்ஸிசக் கூறுகள் எப்போதுமே இருக்கின்றன. `அதென்ன நார்ஸிசக் கூறு?' தன்னைத்தானே சிலாகித்துக்கொள்ளும் குணம். அதற்கு சரியான தீனி போடக்கூடிய இடமாக இருப்பவை சமூக வலைத்தளங்கள். புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் இருப்பதிலேயே நார்ஸிச மனநிலையைத் தூண்டுவதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஒவ்வொரு நாளும் 200 கோடி புகைப்படங்கள் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் பகிரப்படுகின்றன என்ற தகவலே இதற்கு சாட்சி.

`நம் புகைப்படங்களுக்குக் கிடைக்கும் லைக்குகள் நம் அடையாளத்துக்கும் அழகுக்கும் கிடைக்கும் ஒன்றாகக் கருதுகிறோம். இதனால் நம் இணைய அடையாளங்களில் புதிதாக சில பாசிட்டிவ் விஷயங்களைச் சேர்க்க ஆரம்பிக்கிறோம். அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் நண்பர்கள் நமக்கு இன்னும் அதிகமாக மரியாதை கொடுப்பார்கள்; கௌரவிப்பார்கள் என நம்புகிறோம். அது இன்னும் இன்னும் புதிய விஷயங்களோடு புகைப்படங்களை வெளியிட நம்மைத் தூண்டுகிறது. நாம் அந்தத் தருணத்தில் இருப்பதைவிடவும், நம் நோக்கமும் கவனமும் இந்தத் தருணத்தை எப்படி உபயோகித்து நம் முகத்தை, உடலை காட்சிவடிவமாக சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்திக்கொள்ளலாம் என்பதிலேயே இருக்கிறது' என `சைக்காலஜி ஆஃப் டிஜிட்டல் ஏஜ்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்காவின் மனோதத்துவப் பேராசிரியர் சூலர். இப்போது புரிகிறதா, ஏன் ஃபேஸ்புக் தளம் இன்ஸ்டாகிராமை ஒரு பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது என்று! 

இன்று அமெரிக்காவில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 53 சதவிகிதம் பேர் இன்ஸ்டாகிராமில்தான் பழியாகக் கிடக்கிறார்கள். `மில்லெனியல்ஸ்' எனப்படும் 1985-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த தலைமுறைக்கு இன்ஸ்டாகிராம்தான் இனிக்கிறது. காரணம், இப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துகொள்வதுதான் ட்ரெண்ட். 

டோபோமைன் எமன்

எலி ஒன்றை கூண்டில் அடைத்து, அதற்கு முன்னால் On-OFF சுவிட்ச் ஒன்று வைக்கப்பட்டது. எலி அந்த சுவிட்சைத் தொட்டு ஆன் பண்ணினால், அதன் மூளையில் டோபோமைன் என்ற வேதிப்பொருள் தூண்டப்படும். சுவிட்சைப் போடும்போது எல்லாம் அதற்கு டோபோமைன் உதவியால் உள்ளுக்குள் பேரானந்தம் உண்டாகும். ஒருகட்டத்தில் ஒவ்வொரு நாளும் விடாமல் அந்த டோபோமைன் பட்டனைத் தட்ட ஆரம்பித்துவிட்டது. விடாமல்... மணிக்கணக்கில், சோறு, தண்ணீர் இல்லாமல் எந்நேரமும் அது டொக்கு டொக்கு எனத் தட்டிக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் முழுமையாக அந்த பட்டனுக்கே அடிமையாகிவிட்டது. சமூக வலைத்தளங்களின் வழி நமக்குள் நடப்பது இது மாதிரியான ஒரு மாற்றம்தான்.

டோபோமைன் என்பது, நம்முடைய மூளையின் பல்வேறு பகுதிகளில் உண்டாகும் கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய வேதிப்பொருள். சிந்திப்பது, நகர்வது, தூங்குவது, ஊக்கம் அளிப்பது என மூளையின் பல செயல்பாடுகளுக்கு அவசியமான வினையூக்கி இந்த டோபோமைன். இந்த வேதிப்பொருள் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியது என்பதுதான் இதுவரை நம்முடைய புரிதலாக இருந்தது. ஆனால், சமீபத்திய ஆய்வுகள் டோபோமைன் `தேடல் குணத்தை' (Seeking Behaviour)உருவாக்கவல்லது எனக் கண்டறிந்துள்ளனர். இதன் தூண்டுதலால்தான் நாம் ஒரு குறிக்கோளை நோக்கிச் செயல்பட ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள். பரிணாம வளர்ச்சியில் இது மிக முக்கியமான பண்பாக இருக்கிறது. கற்றுக்கொள்வதிலும் பிழைத்திருப்பதிலும் இது அவசியமானது. ஆனால், இந்தத் தூண்டுதல் என்பது உடல் தேவைகளான உணவு மற்றும் செக்ஸ் என்பதைத் தாண்டி நவீன யுகத்தில் தகவல்களைத் தேடுவதாக முன்னேறியுள்ளது. எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு தகவல்களைக் கண்டடைவது என முதிர்ச்சி அடைந்துள்ளது. இந்தத் தேடல் குணத்தை சமூக வலைத்தளங்கள் இலகுவாக்கிவிட்டன. 

டோபோமைன் எப்போதும் ஒரே ஷாட்டில் அமைதியாவது இல்லை. அது எப்போதும் இன்னும் இன்னும் இன்னும் என நம்மைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. அதனால்தான் கூகுளிலும் விக்கிபீடியாவிலும் ஃபேஸ்புக்கிலும் எதையாவது தேடப்போய் அல்லது பார்க்கப்போய் என்னென்னவோ தேடிப் படித்து லைக் பண்ணி மணிக்கணக்கில் மெய்மறந்து அந்த டோபோமைன் சுழலில் சிக்கிக்கொள்வது நேர்கிறது.

தேடல் மட்டும் அல்ல, எதிர்பார்ப்பு மூலமாகவும் டோபோமைன் தூண்டப்படுகிறது என்கிறார்கள்.  ஒரு பரிசு  கிடைப்பதைவிடவும் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும், அந்தப் பரிசு என்னவாக இருக்கும் என்ற சஸ்பென்ஸும் மூளையில் அதிக டோபோமைன் தூண்டுதலை ஏற்படுத்தக்கூடியது. இதை சமூக வலைத்தளங்கள் ஒவ்வொரு நொடியும் நமக்கு அளிக்கின்றன. ``இப்படி தொடர்ச்சியான டோபோமைன் தூண்டுதல்களுக்கும் ஒரு எல்லை உண்டு. ஒருகட்டத்தில் டோபோமைன் வேதிப்பொருள் தீரும்போதோ அல்லது குறையும்போதே நாம் கடுமையான மன உளைச்சலுக்கும் உள்ளார்ந்த தனிமைக்கும் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு'' என்கிறார் சூசன் வெய்ன்செங்க் என்கிற உளவியல் நிபுணர்.

எப்படி மீள்வது?

சோஷியல் மீடியா அடிக்‌ஷன் என்பது, இருக்கிறது என்பதை முதலில் நம்ப வேண்டும் (இருப்பதிலேயே அதுதான் சிரமமான காரியம்!). அது நம்முடைய வாழ்க்கையில், தொழிலில், பணியில், கல்வியில் பெரிய பாதிப்புகளையும் மாற்றங்களை உண்டாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அதில் இருந்து விலகி தள்ளி நின்று அது என்ன மாதிரியான பாதிப்புகளை நமக்குள் உருவாக்குகிறது என்பதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர, வேறு வழி இல்லை. ஒவ்வொரு நாளும் எத்தனை மணி நேரம் சமூக வலைத்தளங்களில் வீணடிக்கிறோம் என்பதைக் கணக்கிட்டு, அந்த நேரத்தைப் படிப்படியாகக் குறைக்க முன்வர வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறைதான் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது என சுயக்கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம். 

வெளிநாடுகளில் `டிஜிட்டல் ஃபாஸ்டிங்' எனப்படும் இ-விரதங்கள்தான் இப்போது ட்ரெண்ட். வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் அம்மனுக்கு விரதம் இருந்து அன்றைய நாள் மட்டும் எந்தவித சமூக வலைத் தளங்களையும் நான் கைதொட மாட்டேன் என உறுதிபூண்டு தவ வாழ்க்கை வாழலாம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஃபேஸ்புக் பக்கமே வர மாட்டேன் என முடிவெடுத்து ஓடிவிடலாம். 
கொஞ்ச கொஞ்சமாக நிகோட்டினில் இருந்து வெளியேறுவதன் மூலம் சிகரெட் பழக்கத்தைக் கைவிடுவதைப்போலவே. முடிந்தவரை செல்போனில் சமூக வலைத்தளங்களைப் பின்தொடர்வதைத் தவிர்த்தாலே பல பாதிப்பு களைத் தவிர்த்துவிட முடியும் அல்லது 2ஜி மாதிரியான குறைந்த வேகம் உள்ள இணைய வசதிகளை செல்போனில் பயன்படுத்துவது பலன் தரும்.

நண்பர்களோடு உரையாட வேண்டுமா, நேரடியாகச் சந்தியுங்கள். பணியில் சந்தேகமா, சீனியர்களிடம் உதவி கேளுங்கள். அங்கும் கிடைக்கவில்லை என்றால், மட்டும் கூகுளை நாடுங்கள். நூல்கள் படிக்கும்போதும், சினிமா பார்க்கும்போதும் மொபைலை சைலன்ட்டில் வையுங்கள். வெளியூர் பயணமா, மொபைலில் படம் எடுக்காமல் டிஜிட்டல் கேமராவில் படம் எடுங்கள். செல்ஃபி எடுப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். 

தொழில்நுட்ப வளர்ச்சி, நம்மை எந்த இடத்தில் இருந்தும் எதையும் செய்வதற்கான ஆற்றலை வழங்கியிருக்கிறது. ஆனால், அது நம்முடைய ஆற்றலை உறிஞ்சும் வேலையையும் சத்தம் இல்லாமல் செய்து கொண்டிருக்கின்றன. தொழில்நுட்பத்தால் நமக்குக் கிடைத்திருக்கிற சாதகமான அம்சங்களை நாம் வியந்து கொண்டாடு கிறோம். நாம் எந்த இடத்தில் இருந்தும் எதையும் செய்யும் ஆற்றலைப் பெற்று விட்டோம். ஆனால், கூட்டத்திலும் தனித்திருக்கப் பழகிவருகிறோம். இந்தத் தகவல்தொடர்பே நிரந்தரமான தனிமைக்குள் நம்மை ஆட்படுத்திவைத்திருகிறது. தொழில்நுட்பத்தில் முன்னேற முன்னேற... நம்முடைய உணர்வுகளில் நாம் சறுக்க ஆரம்பித்திருக்கிறோம். அதை முதலில் உணரவேண்டும்.


`ஹிப் ஹாப்' ஆதி (இசையமைப்பாளர்): ``சோஷியல் மீடியாங்கிறது தீக்குச்சி மாதிரிதான். தீக்குச்சியால வீட்டைக் கொளுத்தவும் செய்யலாம்...  நான் `ஹிப் ஹாப்' தமிழாவா வெளியில தெரியறதுக்கு  உதவியது சோஷியல் மீடியாதான். அதே நேரம் போட்டோ ஷேர் போன்ற விஷயங்களால் தற்கொலைகளைத் தூண்டுறதும் இதே சோஷியல் மீடியாதான்.''

ஷான் கருப்பசாமி (கவிஞர்): ``நிறையத் திறமைகள் இருக்கிறவங்க மக்களுக்கு வெளியில தெரியும் வகையிலான ஒரு பிளாட்ஃபார்மா சோஷியல் மீடியாக்கள் இருக்கு. ஆனால், சோஷியல் மீடியா பத்தி முழுசா தெரியாம உள்ளே வந்து யார் யாரையோ ஃபாலோ பண்றது, சாட் பண்றது சில நேரங்களில் தப்பா போய் முடியுது. அதனால சோஷியல் மீடியாவை எப்படி யூஸ் பண்ணணும்னு முதலில் எல்லோரும் தெரிஞ்சுக்கிறது நல்லது.''


அராத்து (எழுத்தாளர்): ``நான் சோஷியல் மீடியாவில் அடிக்ட்டா இருக்கேன்னு சொல்ல முடியாது. ஆனா, அடிக்கடி யோசிப்பேன்... `இதுக்கு இவ்ளோ டைம் செலவழிக்கவேண்டியிருக்கே’னு. நான் ஒரு வாரம் போஸ்ட் போடலைன்னாலே தேட ஆரம்பிச்சுடுறாங்க; தொலைந்துபோன ஒரு மனிதனா நினைச்சுடுறாங்க. அதனாலேயே எவ்ளோ பிரச்னைகள் இருந்தாலும் கடமைக்காக ஒரு போஸ்ட் போடவேண்டியிருக்கு. ஆனா, நான் மொபைலில் ஃபேஸ்புக், ட்விட்டர் இன்ஸ்டால் பண்ணிவைக்கலை. என் நண்பர்கள் நிறையப் பேர் ஒரு டிஸ்கஷன் நடக்கிறப்போகூட மொபைலில் சாட் பண்ணிட்டிருக்கிறதைப் பார்த்திருக்கேன்.''

ஆர்.ஜே பாலாஜி (பண்பலைத் தொகுப்பாளர்): ``இதை அடிக்‌ஷனா நான் நினைக்கலை. ஆனா, என் வாழ்க்கையில இது ஒரு நியூசென்ஸா ஆகிடுச்சோனு ஃபீல் பண்றேன். ஒரு விஷயத்துக்குப் போராடுறதுனா நேரடியாப் போய் அதைச் செய்யணும். ரியல் லைஃப்ல கோபத்தைக் காட்ட முடியாம, உதவி செய்ய முடியாம சோஷியல் மீடியாவில் மட்டும் போஸ்ட் போடுறது என்னைப் பொறுத்தவரையில் நியூசென்ஸ்தான்.''

லீனா மணிமேகலை (கவிஞர்): ``சோஷியல் மீடியா, எனக்கு ஒரு அடிஷனல் மீடியம் அவ்ளோதான். இது இல்லைன்னா அடுத்து அதுக்கு வழிகாட்ட வேற  ஒரு  விஷயம் கிடைக்கும். தொழில்நுட்பங்கள் நாம் சார்ந்த விஷயங்களை மத்தவங்களுக்கு எடுத்துப் போற வாகனம். இது இல்லாட்டி இன்னொண்ணு அவ்ளோதான்.''
வித்யா விஜயராகவன் (மாணவி): ``சோஷியல் மீடியா இல்லாட்டியும் நான் ஜாலியா ஊர் சுத்திட்டுத்தான் இருப்பேன். ஃப்ரெண்ட்ஸ்கூட வெளியில போவேன். புக்ஸ் படிப்பேன். அங்கே பேசுறதை இங்கே ஃப்ரெண்ட்ஸ்கூடப் பேசுவேன்.''

Tuesday, July 26, 2016

ரத்த வெள்ளத்தில் அன்று... மருத்துவராக இன்று!


ன்னிக்கு நானும் அம்மாவும் மட்டும்தான் வீட்ல இருந்தோம். யாரோ கதவைத் தட்ட, நான் போய் திறந்தேன். சட்டுனு வீட்டுக்குள்ள நுழைஞ்ச அவர், ரூம்ல இருந்த கட்டில்ல அதிகாரமா கால் மேல கால் போட்டுட்டு உட்கார்ந்தார். ஏதோ விபரீதம் நடக்கப்போகுதுனு தோணுச்சு. செல்போனில் அப்பாவுக்கு மெசேஜ் அனுப்ப டைப் பண்ணினார் அம்மா. வந்தவர் அம்மா கையில இருந்த செல்லை பிடுங்கி வீசி எறிஞ்சு உடைச்சார்.

















நான் பயத்துல கத்தினேன். அவர் அம்மாவை கீழ தள்ளிவிட்டு, மறைச்சு வெச்சிருந்த கத்தியை எடுத்து என் தலையில ஒரு வெட்டு வெட்டினார். நான் துடிச்சேன். ‘நீ என்ன பெரிய அழகியாடீ’ன்னு ஆரம்பிச்சு காது கூசுற வார்த்தைகளால திட்ட ஆரம்பிச்சார். கத்தியால தாக்கின வலியைவிட, அந்தக் கேவலமான வார்த்தைகள் என்னை அமிலமா சுட்டுச்சு. அவர் அடுத்து தாக்குறதுக்குள்ள வீட்டைவிட்டு ஓடணும்னு நினைச்சு, வீட்டுக்குள்ள அம்மா இருக்கிறதை மறந்துட்டு வெளிய போய் தாழ் போட்டேன். அக்கம்பக்கம் உள்ளவங்களை உதவிக்குக் கூப்பிட்டேன். ஆனா, யாருக்கும் கேட்கலை. அப்பதான் அம்மா உள்ள இருக்கிறது ஞாபகத்துக்கு வந்து, மறுபடியும் கதவை திறந்துட்டு உள்ள போனேன்.



அப்ப அவர் அம்மாவை அடிச்சு கீழ தள்ளியிருந்தார். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து அவர் குத்தின கத்தி, என் நெஞ்சு எலும்புக்குப் பக்கத்துல பாய்ஞ்சது. மூச்சுவிட முடியல. கீழே சரிஞ்சு விழுந்தேன். அவர் வீட்டைவிட்டு ஓடினார். நான் வலி தாங்காம கத்த, ஓடிப் போனவர் திரும்பவும் வீட்டுக்குள்ள வந்து என் வயித்துல குத்திட்டு அங்க இருந்து தப்பிச்சுப் போனார்.



ரத்த சகதியில் கிடந்த எனக்கு, செத்துடக் கூடாதுனு மனசு துடிச்சது. அக்கம்பக்கத்துல இருந்தவங்ககிட்ட உதவி கேட்டு, அம்மா என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனாங்க. அன்னிக்கு காலையில நான் சாப்பிட்ட தோசை, கத்திக்குத்து பட்ட இடத்துல இருந்து வெளிய வந்ததை பார்த்த அந்த ரத்த கணங்களை என்னால எப்பவும் மறக்க முடியாது!’’ படிக்கும்போதே திகிலாக இருக்கிறதுதானே?!



தன்னை ஒருதலையாகக் காதலித்த ஒருவனால் கொலைவெறி தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, அந்தக் கொடும் சம்பவத்திலிருந்து மீண்டு உயிர்பிழைத்து இன்று... மருத்துவம், மாடலிங், சினிமா, சமூக சேவை என பலதுறைகளிலும் சாதித்து வருகிறார் ரேச்சல் ரெபெக்கா. ஸ்வாதி, வினுப்பிரியா என வன்முறைகளால் பெண்கள் பலியாகி அச்சம் உறைந்துள்ள இச்சூழலில், கண்களில் தேங்கும் கண்ணீரை விழவிடாமல் அசாத்திய தன்னம்பிக்கையுடன் ரெபெக்கா பேசும்போது அவர் தைரியம் போற்ற வைக்கிறது. சென்னை, தி.நகரில் உள்ள அவரது ‘பிரயத்னா’ ஆயுர்வேத மருத்துவமனையில் அவரைச் சந்தித்தோம்.



‘‘எனக்கு சொந்த ஊர் வேலூர். அப்பா சமூக ஆர்வலர். அம்மா இல்லத்தரசி. நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. ஸ்ரீபெரும்புதூர், தர்மா ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரியில இளங்கலை ஐந்தரை வருஷமும், அதுக்கப்புறம் கர்நாடகாவுல முதுகலையும் படிச்சேன். நான் படிச்சுட்டு இருந்த சமயத்துல, எங்க ஊர்க்காரர் ஒருத்தர் என்னை லவ் பண்றதா சொல்லி மூணு வருஷமா டார்ச்சர் பண்ணினார். பலமுறை என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார், ஒருமுறை என்னை நடுரோட்ல அடிச்சார். அந்த 19 வயசுல தைரியத்தைவிட பயம்தான் அதிகமா இருந்தது. அப்பாகிட்ட சொன்னேன். அவங்க எனக்கு தைரியம் சொன்னாங்க. ஆனா, இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும்னு நாங்க எதிர்பார்க்கல’’ என்றவர், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்...



‘‘2008-ம் வருஷம், ஏப்ரல் 8-ம் தேதி. அப்பா எனக்கு வாங்கிக்கொடுத் திருந்த புது செல்போனை வெச்சு, சந்தோஷமா பார்த்துட்டு இருந்தேன். 



அப்பா வீட்டை விட்டுக் கிளம்பின பிறகு வீட்டுக்குள்ள வந்த அவர், என் கையில இருந்த போனை டக்குனு பிடுங்கிட்டுப் போயிட்டார். என்ன இது டார்ச்சர்னு செத்துடலாம் போல இருந்துச்சு. ஆயுர்வேதம் படிச்சதால, விஷத்தன்மையுள்ள விதைகளை சாப்பிட்டா செத்துடலாம்னு தெரியும். கொஞ்சம் விதைகளை எடுத்து அரைச்சு, அதை விழுங்குறதுக்கு முன்னாடி மேரி மாதாகிட்ட பிரேயர் பண்ணேன். அந்த நொடி, ‘இவருக்காக நாம ஏன் சாகணும்?’னு தோணுச்சு. தற்கொலை முடிவைக் கைவிட்டேன். ஆனா, மறுநாளே அந்தக் கத்திக்குத்து சம்பவம் நடந்திருச்சு’’ என்றவர், அதன் பின் வலிமையை வளர்த்தெடுத்த அத்தியாயம், அசாத்தியம்.



‘‘ஆஸ்பத்திரியில, நான் மடக்கி வெச்சிருந்த காலை நீட்டினப்போ, அதுவரை உள்ள கட்டுப்படுத்தி வெச்சிருந்த ரத்தம், குபுகுபுன்னு கொட்ட ஆரம்பிச்சது. ‘இது ரொம்ப சீரியஸ் கேஸ், நீங்க சி.எம்.சி ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போங்க’னு சொல்லிட்டாங்க. அங்க போனோம். நான் மருத்துவமனையில இருந்த சமயம், நிறைய பேர் எனக்கு ரத்ததானம் கொடுத்ததா சொன்னாங்க. அந்த நல்லவர்களுக்காக நான் வாழணும், சாதிக்கணும்னு மனசுக்குள்ள வைராக்கியத்தை விதைச்சுக்கிட்டேன். முழு நம்பிக்கையோட, தைரியத்தோட சிகிச்சையை மேற்கொண்டேன்.

கிட்டத்தட்ட எனக்கு அது யுத்தகாலம் மாதிரி. இந்த சம்பவத்துக்குப் பிறகு எனக்கு நல்ல வாழ்க்கைத் துணைவரும் கிடைச்சார்.
என்னைக் கத்தியால் குத்தினவர் மேல வழக்கு போட்டோம். அஞ்சு வருஷம் கேஸ் நடந்துச்சு. அப்புறம், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்னு சொல்லி விடுதலை பண்ணிட்டாங்க. அவருக்கு தண்டனை கிடைக்கணும்னு மனசு ஒரு பக்கம் நினைச்சாலும், சமயங்களில், என் வாழ்க்கையில அந்த சம்பவத்துக்குப் பிறகு நடந்த எல்லா நல்ல விஷயங்களுக்கும் அந்த மோசமான காயம்தான் காரணம்னு தோணும். இயல்பான வாழ்க்கையைவிட அதிக வேகத்தையும் வைராக்கியத்தையும் தைரியத்தையும் நான் கைகொள்ள, அந்த துர்சம்பவம்தான் காரணமா அமைஞ்சது. காயங்களை எல்லாம் கடந்து படிப்பை முடிச்சு ஆயுர்வேத மருத்துவரா இருக்கேன். கறுப்பு, அழகுக்குத் தடையில்லைனு பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்க, கறுப்பா இருக்கும் நான் மாடலிங் பண்றேன். உள்ளூர் விளம்பரங்கள் முதல் வெளியூர் விளம்பரங்கள்வரை நடிச்சிருக்கேன். இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கிற அவரோட ‘மின்மினி’ படத்தில் டீச்சர் ரோலில் நடிச்சிருக்கேன்.


எனக்கு நடந்த அநியாயம்போல நிறையப் பெண்களுக்கு இன்னும் கொடுமைகள் நடந்துட்டுதான் இருக்கு. அப்படி பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள், பாலியல் தொழிலாளிகள், ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், திருநங்கைகள் இவங்களுக்கு எல்லாம் உதவ ‘ஊக்கம்’ என்ற அறக்கட்டளையை நடத்திட்டு வர்றேன். சாவை அருகில் சென்று பார்த்ததால, இப்போ என் வாழ்க்கையில் பயம் என்பதே இல்லை. மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கை வாழணும் என்பதுதான் மனசெல்லாம் நிறைஞ்சிருக்கு.

என் வயிற்றில் உள்ள கத்திக்குத்து தழும்புகளையே, பெண்களுக்குத் தேவையான துணிச்சலாக, விழிப்பு உணர்வாகக் கடத்த, அதை முன்னிறுத்தி மாடலிங் புகைப்படங்கள் எடுத்திருக்கேன். அதுவே, தன்னம்பிக்கைக்காக பல விருதுகள் நான் பெறக் காரணமா அமைஞ்சது. எல்லா காயங்களையும், துன்பங்களையும் கரைக்கும் ஆற்றல் காலத்துக்கு உண்டு. தைரியத்தோட வாழ்க்கையை எதிர்கொள்ளணும்!’’


ரேச்சலின் துணிச்சலும் தன்னம்பிக்கையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம் தேவை!

அம்மாவிற்கு திருமணம் செய்துவைத்த மகள்கள்! 



90 களில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'குச் குச் ஹோத்தா ஹை' என்ற இந்தித் திரைப்படத்தில் தாயின் மறைவுக்குப் பிறகு தனிமையில் வாடும் தனது தந்தைக்கு அவருடைய பழைய காதலியை தேடிச் சென்று தந்தைக்கு திருமணம் செய்து வைப்பார் 8 வயது மகள். சினிமாவில் பார்த்து ரசித்துப் பார்த்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், கேரளாவில் நிஜத்திலும் அரங்கேறியிருக்கிறது. 

கேரளா மாநிலம் கொல்லத்தில் வசிக்கும் அனிதா செம்புவில்யால், தனது இளம்வயதில், ஜி.விக்ரம் என்ற தனது பத்தாம் வகுப்பு ஆசிரியர் மீது காதல்வயப்பட்டார். கம்மாக்கரையிலும் கடல்மணல்வெளியிலும் தங்கள் காதலை நாள்தோறும் வளர்த்தனர். ஆனால் தங்களது காதலை பெற்றோரிடம் தெரிவித்தபோது, அப்படி ஒரு எதிர்ப்பை சந்திப்போம் என இருவரும் நினைத்துப்பார்க்கவில்லை. அனிதாவின் காதலுக்கு அவரது பெற்றோரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. துணிந்து ஒருநாள் அனிதாவை பெண் கேட்டு வந்த விக்ரமை அவமானப்படுத்தியதோடு நில்லாமல் தன் அதிகாரத்தைக்காட்டி அந்த ஊரைவிட்டே வெளியேறச் செய்தார் அனிதாவின் தந்தை. நொறுங்கிப்போனார் அனிதா. 

அனிதாவின் தந்தை அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. அனிதாவின் படிப்பை பாதியில் நிறுத்தி அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். கொஞ்சகாலம்தான் அந்த வாழ்க்கை இனித்தது. அனிதாவின் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி ஒருநாள் எதிர்பாராதவிதமாக இறந்தார். அதன்பின் தனது 2 குழந்தைகளுடன் தன் வாழ்க்கையை மீண்டும் துவக்கினார் அனிதா. அனிதாவின் 2 மகள்களும் வளர்ந்து கல்லுாரிக்கு செல்லும் வயதை எட்டினர். கணவரின் மறைவுக்கு பிறகு பல சிரமங்களுக்கு இடையே தன் 2 மகள்களையும் வளர்த்து படிக்கவைத்து திருமணம் செய்துவைத்தார் அனிதா.  

இந்த சமயத்தில்தான் அந்த எதிர்பாராத சம்பவம் அனிதாவின் வாழ்வில் நிகழ்ந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் பணிக்காக சென்ற இடத்தில் தனது பழைய காதலன் ஜி.விக்ரமை சந்திக்க நேர்ந்தது. அனிதாவின் பிரிவிற்குப்பின் அவரது நினைவாக விக்ரம் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்துவருவது தெரிந்து உருகிப்போனார் அனிதா. ஊர் திரும்பியபின் தன் வளர்ந்த மகள்களிடம் ஒருநாள் இதை சாதாரணமாக சொல்லி அழுதார்.

அனிதா இதை சொல்லிவிட்டு வேறு வேலையில் மூழ்கிப்போனார். ஆனால் அம்மாவின் சோகக் கதையைக் கேட்ட மகள்களால் துாங்க முடியவில்லை. அவர்களுக்கு அது கண்ணீரை வரவழைத்தது. தீர்மானமாக ஒரு முடிவெடுத்தனர் சகோதரிகள். 

விக்ரமை நேரில் சந்தித்து தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். அவரது குடும்பத்தினரிடம் பேசி அனுமதி பெற்று அதை தன் தயாரிடமும் தெரிவித்தனர். முதலில் இதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இறுதியாக தன் இரண்டு மகள்களின்  ஆசையின்படி , 32 வருடங்கள் கழித்து, அனிதா தன் தனது காதலர் ஜி.விக்ரமை கடந்த வாரம் வியாழனன்று கரம்பிடித்தார்.

தனது தாயாரின் இளம்வயது நிறைவேறாத விருப்பத்தை அவரது இறுதிக்காலத்தில் நிறைவேற்றிவைத்த மகள்களின் செயல் கேரளாவில் ஆச்சர்யத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. 
'பணி நிமித்தமாக சென்ற இடத்தில் தனது காதலரை சந்தித்த என் அம்மா, தனது வெற்றிபெறாத காதலைப்பற்றி துயரத்துடன் பகிர்ந்துகொண்டார். அம்மாவின் நினைவாக விக்ரம் திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்வது ஆச்சர்யமளித்தது. எனக்கு கண்ணீரை வரவழைத்தது.


இதுபற்றி என் அக்கா மற்றும் குடும்பத்தினரிடம் பேசி அவர்களை சேர்த்து வைக்க முடிவு செய்தேன்.  நானே இதற்கான வேலையில் இறங்கினேன். திருமணத்துக்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர். எனது அம்மாவை நினைத்து வாழ்ந்து வந்த ஜி.விக்ரமுக்கும் என் அம்மாவுக்கும் கடந்த 21ந்தேதி திருமணம் செய்து வைத்தோம்.” என்று தனது முகநூலில் தனது தாயாரின் திருமணம் குறித்து ஆதிரா குறிப்பிட்டிருக்கிறார்.

இதைவிட சுவாரஸ்யம் ஒன்றும் இந்த திருமணத்தில் உண்டு. அதையும் ஆதிரா தனது முகநுால் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். “நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமணத்தில் முழு மன நிறைவோடு ஆசியோடும் தாலி எடுத்து கொடுத்தவர் யார் தெரியுமா?... இதே ஜோடியை 32 வருடங்களுக்கு முன்பு பிரித்து வைத்த என் தாத்தா தான்.”

பெற்றோர்கள் பிள்ளைகளின் காதலை எதிர்க்கும் இந்தக் காலத்தில், பிள்ளைகளே பெற்றோரின் காதலை தேடிச் சேர்த்து வைத்திருப்பது, சபாஷ் சொல்லத்தான் வைக்கிறது

Thursday, July 7, 2016

தாய்ப்பால் உண்மைகள்




















குழந்தை பிறந்து ஓர் ஆண்டு வரை கட்டாயம் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் புகட்டி வருவதன் மூலம், தாய்க்கு சினைப்பை, கர்ப்பப்பை, மார்பகப் புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கான வாய்ப்பு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், சர்க்கரைநோய், உடல்பருமன், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைக்கான வாய்ப்பும் குறைகிறது.



தாய்ப்பால் புகட்டும்போது தாயின் உடலில் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதை அன்பு ஹார்மோன் என்றும் சொல்வார்கள். தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் அன்பு மேலும் நெருக்கம் அடையவும், தாயின் மன அழுத்தத்தைப் போக்கவும் உதவுகிறது. இது அமைதியான மனநிலையை தாய்க்கு அளிக்கிறது.

தாய்ப்பாலில் வாழ்வளிக்கும் ஊட்டப் பொருட்கள் உள்ளன. ஆன்டிபாடீஸ், வெள்ளை அணுக்கள் மற்றும் செரிமானத்துக்கான என்சைம்கள் என பல முக்கியப் பொருட்கள் உள்ளன. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது.


தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் ஒரு நாளைக்கு தோராயமாக 300 முதல் 500 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது. தாய்க்கு உடல் எடை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.



தாய்ப்பாலில் 300-க்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் இருக்கின்றன.



குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது, சுவாசப் பாதை நோய்த்தொற்று, காது நோய்த்தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. எதிர்காலத்தில், டைப் 1, டைப் 2 சர்க்கரை நோய், உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு, ஆஸ்துமா, புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது