Thursday, August 29, 2013

 
 
'இந்த பூமியிலேயே பெண்கள் வாழ்வதற்கு மிகவும் அபாயகரமான நாடுகளில் ஒன்று இந்தியா’ என்கிறது அண்மையில் வெளியான பி.பி.சி-யின் டாக்குமென்டரி ஒன்று. அதை உண்மை என உணர்த்துகிறது, இப்போது மும்பையில் பெண் புகைப்பட நிருபர் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் பாலியல் வன்கொடுமை.
 
'பாரதத் தாய்’ என்றும், 'பூமி மாதா’ என்றும் பூச்சுற்றும் நமது ஆண்களின் ஆழ்மன வக் கிரம், டெல்லியிலும், மும்பையிலும், இந்த நாட்டின் பல்லாயிரக்கணக்கான சிறு நகரங்களிலும், லட்சக்கணக்கான கிராமங்களிலும் ஒவ்வொரு நாளும் பெண்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.
 
கடந்த வாரம் திருச்சியில் வல்லுறவுகளுக்கு பலியாகி தண்டவாளத்தில் உடல் சிதறிக் கிடந்த தௌஹித் சுல்தானா என்ன பாவம் செய்தாள்? பெண்கள், வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை. வெறிநாயின் வேட்கையோடு ஆண்கள் காத்திருக்கிறார்கள். தத்தமது வீடுகளில் தாய்க்கு மகனாக, தங்கைக்கு அண்ணனாக, குழந்தைக்கு தந்தையாக இருக்கும் இவர்கள்... வாசல் தாண்டி வெளியே வந்ததும் மிருகங்களாகிவிடுகின்றனர். அதனால்தான், இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறாள். 
 
டெல்லியில் 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டு வல்லுறவால் கொல்லப்பட்ட போது தேசமே கொந்தளித்தது. இந்திய சுற்றுலாப் பொருளாதாரம் 35 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்தது. இப்போது மறுபடியும் இந்தியாவின் சுற்றுலா பொருளாதாரம் ஆட்டம் காண ஆரம் பித்துள்ளது. காரணம், அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 'மிக்கலா கிராஸ்’ என்கிற மாணவியின் பேட்டிதான்.
 
தற்போதைய மும்பை சம்பவத்துக்கு சில நாட்கள் முன்பாக, மிக்கலா கிராஸ் தனது இந்தியப் பயணம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் ''நான் இந்தியாவில் இருந்த நாட்களில், 48 மணி நேரத்தில் இரு முறை பாலியல் வன்முறையில் இருந்து தப்பித்தேன். இந்தியா, அழகான நாடு. ஆனால், இந்திய ஆண்கள் அருவருப்பாக நடந்துகொள்கிறார்கள்'' என்று குமுறினார். ஒரு மாதத்துக்கு முன்பு வெளியான பி.பி.சி. டாக்குமென்டரியும் இதையேதான் சொன்னது.
 
 
வெளிநாட்டுப் பெண்கள், உள்ளூர் பெண்கள் என்ற எந்த வேறுபாடும் இல்லை. மொத்தத்தில் பெண்ணுக்குப் பாதுகாப்பற்ற நாடாக இந்தியா மாறிவிட்டது. மும்பை சம்பவம்குறித்து, இன்று நாடு தழுவிய அளவில் பேசப்படலாம். டெல்லி மாணவி வழக்கில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு அதிவேகமாகத் தண்டனையும் கிடைத்திருக்கலாம். ஆனால், நாளை மறுநாளும் இந்தியப் பெண்களுக்கு இப்படியான ஆபத்துகள் காத்திருக்கின்றன.
 
இதை தடுத்து நிறுத்தவேண்டிய அரசோ, ஒரு சட்டம் கொண்டுவருவதில்கூட ஜவ்வாக இழுத்தடிக்கிறது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய வர்மா கமிஷனின் அறிக்கை, மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. பெண்ணுடன் விருப்பமின்றி உறவுகொள்ளும் ராணுவம், காவல் துறை, அரசியல்வாதி என யாராக இருந்தாலும், குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் தொடங்கி ஆயுள் தண்டனை வரை பரிந்துரைத்தது வர்மா கமிஷன். இன்னும் அவை பரிந்துரைகளாகவே உள்ளன; சட்டமாகவில்லை. ஒருவேளை காஷ்மீரிலும் தண்டகாரண்யாவிலும் பெண் உடலை போர்த் தந்திரமாகக் கையாளும் ராணுவத்தினர், இந்தச் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படலாம் என்ற அச்சம் அரசுக்கு இருக்கிறதோ? என பெண்கள் அமைப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.
 
சமூகத்தில் ஆணும் பெண்ணும் சம உரிமையுள்ள உயிரியல் கூட்டாளிகள் என்பதையே ஆண் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை அல்லது சமூகம் அவனுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. சட்டம், ஒழுங்கு, சமூக அமைப்பு எனப் பல வகைகளில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவன், பெண் என்று வரும்போது இயல்பாகவே அவனது ஆண் திமிருடன் நடந்துகொள்கிறான். அவனது ஆழ்மனதில், 'பெண் என்பவள் தன்னைவிடத் தகுதி குறைந்தவள்’ என்ற எண்ணமே எஞ்சி இருக்கிறது. நம் குடும்ப அமைப்பும் சமூகமும் பெண்களை சொத்தாக வும் போகப் பொருளாகவும் சித்திரிக்கும் பணியைத் தொடர்ந்து செய்துவருகின்றன. அன்பையும் நட்பையும் பொதுவில் வைக்கும் நமது கலாசாரம், ஒழுக்கத்தைப் பெண்ணுக்கு மட்டுமே போதிக்கிறது.
 
உலகமயம் உருவாக்கிய ஒழுக்கம், பெண்ணை நவீனப் நுகர்வுப் பண்டமாக மாற்றிவிட்டது. பணம் உள்ளவன், தன் தகுதிக்கேற்ப ஒரு பெண்ணை வாங்கலாம். பணமே இல்லாதவன், பாலியல் பலாத்காரம் மூலம் ஒரு பெண்ணை அடையலாம் என்பதுதான் உலகமயம் உருவாக்கி இருக்கும் நவீனக் கருத்து. பாலியல் வேட்கையைத் தீர்க்க முடியாதவர்கள், கருத்துகள் வழியே பெண்ணுடலை அவதூறுகளால் அபகரிக்கிறார்கள் இணையத்தில்.
சரி, இந்தப் பாலியல் வேட்கை, பெண்ணுக்கு இல்லையா? அவளும் மனுஷிதானே... ஆனால், அவள் எந்த ஆணையும் பலாத்காரம் செய்வது இல்லை. காதலை மறுத்தவனின் முகத்தில் எந்தப் பெண்ணும் ஆசிட் அடித்தது இல்லை. ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மன அளவில் வலிமைகொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். பாலியல் வல்லுறவுகளுக்கு உள்ளான டெல்லி பெண் ஆகட்டும், இப்போதைய மும்பை பெண் ஆகட்டும் ''நான் விரைவில் குணமடைந்து விடுவேன். என் பழைய வேலைக்குத் திரும்பிவிடுவேன்'' என்று நம்பிக்கையோடு பேசியிருக்கிறார்கள்.
 
பெண்கள் உடுத்தும் விதம்தான் பாலியல் பலாத்காரம் நடக்க காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். ஐந்து வயது குழந்தைகூட வல்லுறவுக்குப் பலியாகும் வக்கிர உலகம் இது. குழந்தைக்கு என்ன 'உடை நாகரிகத்தை’ப் போதிப்பீர்கள்?
 
'சமூக ஏற்றத்தாழ்வுகளே இத்தகைய பலாத்காரத்துக்குக் காரணம்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். உண்மைதான், அடிப்படைக் கல்வியும் வறுமையுமே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்றால்... வாச்சாத்தி முதல் சிதம்பரம் பத்மினி, திண்டிவனம் ரீட்டாமேரி என்று நீளும் காவல் துறைப் பலாத்காரங்களும், சூரியநெல்லி போன்ற அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளையும் என்ன சொல்வது?
 
கல்வி, அறிவு, அந்தஸ்து என உலகம் போற்றும் பண்புகள் எத்தனை வந்தாலும், 'பெண் என்பவள் எப்போதும் மோகத்துக்கு உரியவள்; ஆணின் சொல்லுக்குக் கீழ்ப்படிய வேண்டிய கடமை அவளுக்கு இருக்கிறது’ என ஆணின் மனம் எண்ணுகிறது. அது இயல்பாக நடக்கவில்லை எனில், அதற்காக வன்முறையையும் கையாள்கிறது. இந்த மனநோயில் இருந்து வக்கிர எண்ணம் கொண்ட ஆண்கள் விடுபட வேண்டும். இல்லையெனில், பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியா மாறிவிடும்!

செய்ய வேண்டியவை!
'பெண்கள் மீது வன்முறை செலுத்தினால், கடும் தண்டனைகளை அனுபவிக்க வேண்டும்’ எனும் விழிப்பு உணர்வைச் செய்திப் படமாக எடுத்து, அதை இந்திய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
 
கட்டற்று பெண்களின் உடலை போகப்பொருளாக மாற்றும் சினிமா, தொலைக்காட்சிகளுக்கு சரியான தணிக்கை முறை உருவாக்கப்பட வேண்டும்.
இந்த மாற்றங்களை நமது வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். பெண் மீது அன்பும் மரியாதையும் ஏற்படும் விஷயங்களை ஆண் பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும்.
 
பாலியல் வன்முறையைத் தடுக்க, சட்டம் தன் வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும். பாலியல் குற்றங்களை விசாரிக்க, மாவட்டம்தோறும் தனி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
 
ஆண் சார்ந்த நமது கல்விமுறை மாற்றப்பட வேண்டும். உழைப்பிலும் சமூக உற்பத்தியிலும் பெண்களின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்குப் புகட்ட வேண்டும்.
 
ஆண்தான் குடும்பத்தின் 'தலைவன்’ என்ற நிலையை மாற்றி, நமது குடும்பத்தை ஜனநாயகரீதியில் அமைக்க வேண்டும். பெண்கள் தலைமை ஏற்கும் குடும்பங்கள் உருவாக வேண்டும்
ஒரு ஊர்ல ஒரு ரூபா...
 
புதைகுழியில் வீழ்ந்துகொண்டு இருக்கிறது இந்திய ரூபாயின் மதிப்பு. நீங்கள் ஒரு அமெரிக்க டாலரை வாங்க வேண்டுமானால், 65 இந்திய ரூபாய்களைக் கொடுத்தாக வேண்டும். இந்தியப் பொருளாதாரம், இத்தனை மோசமான நிலையில் இதற்கு முன்பு இருந்ததே இல்லை. சீட்டுக்கட்டு மாளிகையைப் போல சரிந்துவரும் இந்திய ரூபாயின் மதிப்புக் காரணமாக, பங்குச் சந்தை முதல் காய்கறிச் சந்தை வரையிலும் எங்கும் எதிலும் தடுமாற்றம்.
சரி... ரூபாயின் மதிப்பு ஏன் குறைந்தது?
 
இந்தக் கேள்விக்கான பதில், மொத்த இந்தியப் பொருளாதாரத்துடனும், அரசின் கொள்கைகளுடனும் பின்னிப்பிணைந்த ஒன்று. சமீபகாலமாக இந்தியப் பிரதமரும், நிதி அமைச்சரும் 'நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மிகவும் அபாயகரமான எல்லைக்குச் சென்றுகொண்டிருக்கிறது’ என்று கவலை தெரிவித்துவருவதைப் பார்த்திருக்கலாம். அது என்ன 'நடப்புக் கணக்குப் பற்றாக்குறை?’
 
'ஒரு நாட்டின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடைப்பட்ட இடைவெளி’ என்று இதை எளிமையாக புரிந்துகொள்ளலாம். இறக்குமதி அதிகம்; ஏற்றுமதி குறைவு. அதாவது செலவு அதிகம், வரவு குறைவு. இரண்டுக்கும் இடைப்பட்டப் பற்றாக்குறைதான் நடப்புக் கணக்குப் பற்றாக் குறை.
 
இந்திய ரிசர்வ் வங்கியின் வரையறைப்படி, நடப்புக்கணக்குப் பற்றாக்குறை என்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவிகி தத்துக்கு அதிகமாகக் கூடாது. ஆனால், இப்போ தைய நிலவரம் 5 சதவிகிதத்தைத் தொட்டு விட்டது. 2012-13 நிதியாண்டு நிலவரப்படி, இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் மதிப்பு 9,420 கோடி அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில், 5,65,200 கோடி ரூபாய். 'இப்படி அதிகரித்துக்கொண்டேபோனால், இந்தியா வுக்கான கடன் பெறும் தகுதியைக் குறைத்து விடுவோம்’ என்று ஸ்டாண்டர்டு அண்ட் புவர் என்ற சர்வதேசத் தர நிர்ணய நிறுவனம் எச்ச ரித்துள்ளது.
 
இதைச் சரிசெய்ய என்ன செய்வது?
 
ஏற்றுமதியை அதிகரிப்பது ஒரு நீண்ட காலத் தீர்வு. உடனடித் தீர்வு என்றால், தற்போது இந்தியாவிடம் அந்நியச் செலாவணியாக கையிருப்பில் உள்ள 29,000 கோடி டாலரில் இருந்து எடுத்து சமாளிக்கலாம். ஆனால், 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அடைத்தே ஆக வேண்டிய வெளிநாட்டுக் கடன் மட்டுமே 17,200 கோடி அமெரிக்க டாலர், மலைபோல் மிரட்டுகிறது. இந்தப் பணத்தையும் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் இருந்து எடுத்து அடைத்துவிட்டால், இந்தியாவிடம் வெறும் 2,500 கோடி டாலர் மட்டுமே அந்நியச் செலாவணியாக மிச்சம் இருக்கும். அப்புறம் உலகில் எந்த நாடும் இந்தியாவை மதிக்காது. இந்திய ரூபாயின் மதிப்பு என்பது, எவ்வளவு அதிகமான அமெரிக்க டாலர்களை அந்நியச் செலாவணியாக வைத்திருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஆகவே, அந்நியச் செலாவணியில் அதிகம் கைவைக்க முடியாது.
வேறு என்னதான் செய்வது?
 
'இந்த நிலைமையைச் சமாளிக்க அந்நிய முதலீடுகளை நாட்டுக்குள் மேலும் கொண்டுவர வேண்டும். அதிகமான முதலீடுகள் உள்ளே வரும்போது இந்த நிலைமை சரியாகும்’ என்கிறார் சிதம்பரம். ஆனால், யதார்த்தம் அவ்வாறு இல்லை. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 500 கோடி டாலர் மதிப்புள்ள அந்நிய முதலீடுகள், இந்திய சந்தையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
 
ஏன் அவர்கள் வெளியேறினார்கள்? அதற்கு இரண்டு காரணங்கள். அவர்களுக்கு இந்திய சந்தையில் கிடைக்கும் லாபம் போதுமானதாக இல்லை. மன்மோகன் மேற்கொள்ளும் 'சீர்திருத்தத்தின்’ வேகம் போதவில்லை என்று அவர்கள் கருதுகின்றனர். இரண்டாவது, இந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தண்ணீர் உள்ள இடத்தை நோக்கிப் பறக்கும் கொக்குகள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மிகப் பெரிய பொருளாதாரத் தள்ளாட்டம் ஏற்பட்டபோது, அங்கிருந்த தங்கள் முதலீடுகளை உருவிக்கொண்டுவந்து இந்திய சந்தைகளில் கொட்டினார்கள். இப்போது அமெரிக்காவில் நிலைமை கொஞ்சம் சீரடைந்துள்ளது. உடனே இங்குள்ள முதலீடுகளை பெயர்த்து எடுத்துக்கொண்டு அங்கு கிளம்பிவிட்டார்கள். இப்படிப்பட்ட பச்சோந்தி முதலீட்டாளர்களால்தான் இந்தியப் பொருளாதாரம் எதிர்பாராத பெரும் சரிவுகளை சந்திக்கிறது. ஆனால், பிரதமரும் நிதி அமைச்சரும் 'அதே முதலீட்டாளர்களை மேலும் ஈர்க்க வேண்டும், அதுதான் தீர்வு’ என்கிறார்கள்.
 
இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன், கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2009-ம் ஆண்டு 13,53,000 கோடி ரூபாயாக இருந்த வெளிநாட்டுக் கடன், 2012 மார்ச் மாதத்தில் 43,43,400 கோடியாக உயர்ந்தது. இந்தக் கடன்களில் 44 சதவிகிதத்தை வாங்கியிருப்பது, ரத்தன் டாடா மற்றும் அம்பானி குழும நிறுவனங்களே. இவை தனிப்பட்ட நிறுவனங்கள் என்றபோதிலும், இவர்கள் வாங்கிஇருக்கும் வெளிநாட்டுக் கடன்களுக்கும் இந்திய அரசுதான் பொறுப்பு. இந்த நிறுவனங்கள் வாங்கியிருக்கும் பல லட்சம் கோடிக் கடன்களை திருப்பிச் செலுத்தாததும், ரூபாய் மதிப்பு சரிவடைய இன்னொரு முக்கியக் காரணம்.
 
மறுபக்கம் அந்நியச் செலாவணி, டாலர் கையிருப்பு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை... இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டுதான் இந்தியப் பொருளாதாரத்தின் தடுமாற்றத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. இந்திய விவசாயிகள் தொடர்ச்சியாகத் தற்கொலை செய்துகொள்வதும், அத்தியாவசியப் பொருட்கள் மேலும் மேலும் விலை உயர்ந்து கொண்டே செல்வதும்தான் பொருளாதாரத் தள்ளாட்டத்துக்கான உண்மையான அறிகுறிகள். அவற்றைச் சரிசெய்ய, சிதம்பரமும் பேசுவது இல்லை; மன்மோகனும் பேசுவது இல்லை. மாறாக, விவசாயம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கப்பட்டுவரும் மானியங்களை தொடர்ந்து துண்டித்துக்கொண்டே வருகிறார்கள்.
 
வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் தொலைக்காட்சிகளுக்கு, 35 சதவிகிதம் வரை வரி விதித்துள்ளார் சிதம்பரம். நான்கைந்து வருடங்கள் சிங்கப்பூரில் உழைத்துவிட்டு, ஊருக்கு வரும்போது ஒரு டி.வி. வாங்கி வந்தவர்கள் இனி அதைக்கூட செய்ய முடியாது. இதைவிட அதிர்ச்சி என்னவெனில், இதுபோன்ற 'சீர்திருத்தங்கள்’ மேலும் தொடருமாம்.
அய்யய்யோ!

ஏன் சரிந்தது இந்திய ரூபாய்?
 
வ.நாகப்பன், பங்கு சந்தை பொருளாதார நிபுணர்
 
''இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதற்கு, டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது ஒரு காரணம். அதைத் தவிர்த்துப் பார்த்தால் நமது பொருளாதாரம் வலுவாக இல்லை என்பதுதான் நிஜமான காரணம். இது இன்று நேற்று நடந்தது இல்லை. மிக நீண்ட வருடங்களாக சுணக்கம் அடைந்துவந்த இந்தியப் பொருளாதாரம், கடந்த நான்கைந்து ஆண்டுகளாக மிகவும் கீழே சென்றுவிட்டது. அதன் எதிரொலிதான் ரூபாய் மதிப்பு சரிவு. குறிப்பாக, இந்திய சந்தையில் இருந்த பெரும் தொகையிலான முதலீட்டை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மொத்தமாக எடுத்துச் சென்றுவிட்டதுதான் இந்த திடீர் சரிவுக்குக் காரணம். இதை சீரமைக்க நிதியமைச்சர் சிதம்பரம் எடுத்துவரும் நடவடிக்கைகள் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளன. ஒருவேளை இந்த நடவடிக்கைகள் நான்கைந்து வருடங்களுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டிருந்தால் நிலைமை இப்போது இன்னும் சீரடைந்திருக்கலாம்''

ஷோமே கமிட்டி தெரியுமா?
 
ந்தியாவில் அதிகமாக முதலீடு செய்துள்ள நாடு எது தெரியுமா? இந்தியப் பெருங்கடலில், ஆப்பிரிக்காவுக்கு அருகில் அமைந்துள்ள சின்னஞ்சிறு தீவான மொரீஷியஸ்தான். பொதுவாக, வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்தியாவில் மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். இந்த வரியை தங்கள் நாட்டிலும் கட்டலாம் அல்லது இந்தியாவிலும் கட்டலாம். மொரீஷியஸில் மூலதன ஆதாய வரி 0%. இதனால் இந்தியாவில் முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், மொரீஷியஸில் பெயருக்கு ஓர் அலுவலகத்தை திறந்து விடுகின்றன. சட்டப்படி அங்கு பதிவுசெய்துவிட்டு, அங்கிருந்து இந்தியாவில் முதலீடு செய்கிறார்கள். இதனால் மூலதன ஆதாய வரியாக செலுத்தவேண்டிய பல்லாயிரம் கோடி அவர்களுக்கு லாபம்.
 
வோடஃபோன் நிறுவனம் இப்படி 11,000 கோடி ரூபாய் மூலதன ஆதாய வரியைச் செலுத்தாமல் தப்பித்தது. 'அதைக் கட்டவேண்டும்’ என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, 'செலுத்தத் தேவையில்லை’ என உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, வரி தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பொது விதியை (General Anti Avoidance Rules) உருவாக்கினார். இதன்படி, வரி தவிர்ப்பை மட்டுமே நோக்கமாக கொண்ட வெளிநாட்டு முதலீட்டுகளுக்கு வரிச் சலுகைகள் ரத்து செய்யப்படும். உண்மையாகவே இந்தச் சட்டம் இந்தியாவுக்கு நன்மை செய்யக்கூடியதுதான். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களோ... 'நாங்கள் மொத்தமாக முதலீடுகளைத் திரும்பப் பெற்றுவிடுவோம்’ என்று மிரட்டின. இதற்கிடையே சிதம்பரம் நிதி அமைச்சர் ஆனார். வந்த வேகத்தில் ஷோமே கமிட்டி (Shome Committee) யை அமைத்து, பிரணாப் அமைத்த விதியை ஆராயச் சொன்னார். எதிர்பார்த்ததுப் போலவே அந்த கமிட்டி ஆராய்ந்து, 'பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழக்கம்போலவே வரிச் சலுகைகளை வழங்கலாம்’ என்று பரிந்துரைத்தது. அதைச் சிதம்பரமும் ஏற்றுக்கொண்டார்.
 
இந்த மொரீஷியஸ் நிறுவனங்களுக்கு மூலதன ஆதாய வரியை முறையாக வசூலித்தாலே, ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் இந்தியாவுக்குக் கிடைக்கும்!
''குற்றப்பத்திரிகைக்கு ஒரு சட்டம்.. மெட்ராஸ் கஃபேக்கு வேறு சட்டமா? - சீமான்
''ஈழப் போராளி பிரபாகரனை கொச்சைப்படுத்தி எடுத்துள்ள 'மெட்ராஸ் கஃபே’ படத்தை வெளியிட தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் மறுத்துவிட்டனர். இந்தச் சூழ்நிலையில் வடநாட்டில் கடந்த 23-ம் தேதி 'மெட்ராஸ் கஃபே’ ரிலீஸாகி இருக்கிறது. 'இந்தியில் 'மெட்ராஸ் கஃபே’ படத்தை வெளியிட்டதன் மூலம் வட இந்தியர்கள் மனதில் பிரபாகரன் குறித்த தவறான பிம்பத்தை காங்கிரஸ் பரப்பி வருகிறது'' - சீற்றமாக சொல்கிறார் சீமான்.
 
''தமிழனைத் தரங்கெட்டவனாய் சித்திரித்து 'மெட்ராஸ் கஃபே’ படத்தை தயாரித்து இயக்கி இருக்கும் சுஜித் சிர்க்காரை கேட்கிறேன். உண்மையிலேயே நீ ஆண்மகனாய் இருந்திருந்தால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரனைத் தவறாகச் சித்திரித்து படம் எடுத்து இருப்பாயா?
இங்கே இந்தியில் படம் எடுக்கும் நீ எதற்காக இலங்கை சென்றாய்? இரண்டு முறை எதற்காக ராஜபக்ஷேவை சந்தித்தாய்? உண்மையைச் சொல். ராஜபக்ஷேவின் ரத்தம் வழியும் கைகளால் வாங்கிய பணத்தில்தான் 'மெட்ராஸ் கஃபே’ படத்தையே தயாரித்து இருக்கிறாய். நீ சன்மானம் பெற தமிழனின் தன்மானத்தின் மேல் கைவைக்கிறாயா? தொலைக்காட்சிப் பெட்டி இங்கே... ரிமோட் கன்ட்ரோல் ராஜபக்ஷே கையிலா? ராஜீவ் காந்தி இறந்து 22 வருடங்கள் ஆகிறது. உடலில் ஆறிப்போன காயத்தை மீண்டும் கத்திவைத்து புண்ணாக்கிப் பார்க்கும் புத்தி எப்படி வந்தது? ராஜீவ் காந்தியின் படுகொலையில் சுப்பிரமணியன் சுவாமி, சந்திராசாமிக்கு பங்கு உண்டு என்று ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன் வாக்குமூலங்களில் உள்ளது. நான் அவர்கள் கதாபாத்திரத்தை வைத்து ராஜீவ் கொலையைப் படமாக்கத் தயார். மத்திய அரசு அனுமதிக்குமா?
 
உன் நெஞ்சில் துணிவிருந்தால் இந்திரா காந்தி படுகொலையைப் படமாக்கப்போகிறேன் என அறிவித்துப் பார். சினத்தில் சீறிவந்து சீக்கியர்கள் உன்னைச் சின்னாபின்னமாய் சிதைத்துப் போட்டுவிடுவார்கள். பொற்கோயிலில் காலடி வைத்துப்பார். உன்னைக் கருவறுத்துக் கழுகுக்கு விருந்துவைப்பார்கள். உனக்குத் திராணி இருந்தால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதைப் படமாக்கப்போகிறேன் என்று சொல்லிப்பார். சங்பரிவார் அமைப்பினர் உன் சங்கை அறுப்பார்கள்.
 
ராஜீவ் காந்தி மரணத்தில் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளை இயக்குநர் செல்வமணி தன்னுடைய 'குற்றப்பத்திரிகை’ படத்தில் பதிவுசெய்திருந்தார். செலவழித்து எடுத்த படத்தின் படச்சுருளை குப்பைக் குவியலாகத் தூக்கி வீசியது சென்சார் போர்டு. தமிழன் படைக்கும் படத்துக்கு ஒரு சட்டம். வடநாட்டு இயக்குநர் இயக்கிய 'மெட்ராஸ் கஃபே’ படத்துக்கு வேறு சட்டம். மும்பையில் 'நாம் தமிழர் இயக்கம்’, 'பாரதிய ஜனதா கட்சி’யைச் சேர்ந்தவர்கள் 'மெட்ராஸ் கஃபே’ படத்தை எதிர்த்துப் போராடுகின்றனர்.
 
அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி அப்பாவியான 20 ஆயிரம் ஈழத் தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜீவ் காந்தி கதாநாயகன்; தமிழ் மக்களைத் தற்காத்து நின்ற பிரபாகரன் வில்லனா? காங்கிரஸார் பிரபாகரனை ஆயுத வியாபாரி என்கிறார்களே... போஃபர்ஸ் பீரங்கியை 400 கோடிக்கு வாங்கிக் குவித்த ராஜீவ் காந்தி ஆயுத வியாபாரியா? தன்னுடைய உயிரையே ஆயுதமாக ஏந்திப் போராடும் பிரபாகரன் ஆயுத வியாபாரியா? ராஜீவ் காந்தியை எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்ந்துகொள். ஆனால், பிரபாகரனை இகழ்வதற்கு நீங்கள் யார்? நாங்கள் ஈழத்தைப் பற்றி பேசினால் அது வெளிநாட்டு விவகாரம் என்று விமர்சித்த காங்கிரஸ், இப்போது இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகட்டிக் கொடுத்து இருக்கிறோம்; மருத்துவமனை கட்டித் தந்திருக்கிறோம் என்று எதற்காக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது? நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது வேறு காங்கிரஸ் கட்சிக்குத் தோல்வி காய்ச்சல் அடிக்க ஆரம்பித்துவிட்டது. இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போது 'மெட்ராஸ் கஃபே’ படத்தை வெளியிட்டு ராஜீவை கதாநாயகனாகவும் பிரபாகரனை வில்லனாகவும் தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.
 
ஆஸ்திரேலியாவில் வட மாநில மாணவனை அடித்தால் 'இந்திய மாணவன்’ என்று இறுமாப்பாய் குரல் கொடுக்கும் பிரதமர், ராமேஸ்வர மீனவனை அடித்தால் 'தமிழக மீனவன்’ என்று தள்ளிவைக்கிறார்.
இப்போது உலகத்தில் வாழும் ஒட்டுமொத்த தமிழனையும் பயங்கரவாதிபோல சித்திரிக்கிறது 'மெட்ராஸ் கஃபே’ திரைப்படம். இது வட மாநில சகோதரர்களிடம் இருந்து தமிழர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி.
 
தி.மு.க. ஆட்சியில் என்னை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்க கருணாநிதி காட்டிய சட்டக் காரணம் என்ன தெரியுமா? 'நீ பிரபாகரனை சொந்த அண்ணன் என்று சொல்கிறாய்? அதனால் உன்னைச் சிறையில் அடைக்கிறேன்’ என்றுதான் என்னைச் சிறையில் அடைத்தார்கள். காந்தி தாத்தா... நேரு மாமா... சோனியா அன்னை என்றால் தப்பில்லை. ஆனால், தேசிய தலைவர் மேதகு பிரபாகரனை அண்ணன் என்று சொன்னால் அவதூறு என்று சொல்லி என்னைச் சிறையில் அடைத்தனர். இந்த மனோபாவத்தை விதைக்க நினைக்கிறார்கள். விடமாட்டான் மானமுள்ள தமிழன்'' எனப் பொங்குகிறார் சீமான்.
மும்பைக்கு இவரை அழைத்துச் சென்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டு வருகிறார்களாம் அங்குள்ள நாம் தமிழர் இயக்கத்தினர்!
- எம்.குணா

Thursday, August 22, 2013

மோஸர்-'சோலார் பாட்டில் லைட்’!
 
 
குடித்துவிட்டு தூக்கி எறியும் தண்ணீர் பாட்டிலைக்கொண்டு நம்மால் என்ன செய்ய முடியும்? நசுக்கிக் கசக்கி வீசி எறிய முடியும்! ஆனால், ஒரு தண்ணீர் பாட்டில் மூலம் உலகின் பல லட்சம் ஏழைகளை இருளில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்து வந்திருக்கிறார் ஆல்ஃபிரட் மோஸர்.
 
'நவீன உலகின் தாமஸ் ஆல்வா எடிசன்’ என்று கொண்டாடப்படும் இவரது கண்டுபிடிப்பின் பெயர், 'சோலார் பாட்டில் லைட்’!
 
ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் நீரை நிரப்பி, வீட்டுக் கூரையில் ஒரு துளையிட்டு, பாட்டிலின் அடிப்பகுதி வீட்டுக்குள் இருப்பதுபோல் மாட்டிவிட்டால் பகல் முழுவதும் மின்சாரம் இல்லாமலேயே வெளிச்சம் தயார்! உலகின் லட்சக்கணக்கான ஏழைகளின் வீடுகளில் ஒளியேற்றிக் கொண்டிருக்கும் இந்தக் கண்டுபிடிப்புக்கு, நோபல் பரிசு தர வேண்டும் என்ற குரல்கள் இப்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
 
ஆல்ஃபிரட் மோஸர், பிரேசில் நாட்டில் ஒரு மெக்கானிக். அவர் பெரிதாகப் படித்தவரோ, பணம் படைத்தவரோ அல்ல. 2002-ம் ஆண்டு பிரேசிலில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. 'தொழிற்சாலை களுக்கு மட்டுமே மின்சாரம்’ என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏழை மக்கள் மின்சாரம் இல்லாமல் தடுமாறினார்கள். அப்போதுதான் மோஸருக்கு தன் முதலாளி செய்த ஒரு செயல் ஞாபகம் வந்தது. மோஸரின் முதலாளி, ஒருமுறை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் நீரை நிரப்பி, அதில் சூரிய ஒளியைக் குவியச்செய்து, அந்த ஒளியில் கிடைத்த வெப்பத்தின் மூலம் காய்ந்துபோன புதர்களை எரித்திருக்கிறார். இது மோஸரின் மூளைக்குள் மின்னல் அடிக்க... அதே அறிவியலை சற்று மாற்றி யோசித்தார்.
 
இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பாட்டிலில், சுத்தமான நீரை நிரப்பிக்கொண்டார். அந்த நீர், பாசி பிடிக்காமல் வெண்மை நிறத்துடன் இருப்பதற்கு, சிறிது குளோரின் கலந்து, பாட்டிலை மூடினார். (பாட்டிலின் மூடி, கறுப்பு நிறத்தில் இருந்தால் கூடுதல் வெளிச்சம் வரும்!) வீட்டின் கூரை மீது ஏறி, பாட்டில் இறுக்கமாக நுழையும் அளவுக்கு கூரையில் ஒரு துளை அமைத்தார். பாட்டிலை உள்ளே செருகி, அதன் மேல்பகுதி (கால்வாசி) கூரையின் வெளியே தெரியுமாறும், மீதமுள்ள பகுதி (முக்கால்வாசி) வீட்டினுள் இருக்குமாறும் அமைத்தார். மழை நீர் உள்ளே வரக் கூடாது என்பதற்காக, அந்த பாட்டிலைச் சுற்றி ஒரு பசையைக் கொண்டு மூடினார். பிறகு, வீட்டுக்குள் வந்துப் பார்த்தார். 60 வாட்ஸ் பல்பின் வெளிச்சத்தில் வீடு பிரகாசித்தது.
 
உண்மையில், 'தான் ஓர் அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறோம்’ என்ற உணர்வு மோஸருக்கு ஏற்படவில்லை. 'ஏதோ நாம் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருப்பதாக’ நினைத்து மகிழ்ந்தார். இவரது சூரிய விளக்கைக் கண்ட அக்கம்பக்கத்து வீட்டினர், ஆர்வத்துடன் கேட்க... அவர்களுக்கும் செய்து கொடுத்தார்.
 
 
இந்த சோலார் பாட்டில் விளக்கு, 24 மணி நேரமும் வெளிச்சம் தராது. பகலில், சூரிய ஒளியின் அளவுக்கு ஏற்ப வீட்டுக்குள் வெளிச்சத்தைக் கொண்டுவரும். ஆனால், பகல் - இரவு என எல்லா நேரங்களிலும் இருண்ட தகரத் தடுப்புக்குள் வாழும் ஏழை மக்களுக்கு பகல் பொழுது முழுக்க, எந்தச் செலவும் இல்லாமல் வெளிச்சம் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா? மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டிய பெரும்பணத்தை, அந்த பாட்டில் விளக்கு மிச்சப்படுத்தியது!
 
அந்த விளக்கைப் பொருத்த, எந்தத் தொழில்நுட்ப வல்லுநரும் தேவை இல்லை. ஒரு புரட்சியைப் போல மளமளவென சோலார் பாட்டில் விளக்குகள் பிரேசில் முழுக்கப் பரவின. மக்கள் 'மோஸர் லைட்’ என்றே அதை அழைத்தனர்.
 
இந்த விளக்கின் அறிவியல் அடிப்படை, மிக எளிமையான இயற்பியல் சூத்திரத்தின்படி அமைந்தது. ஒளியானது, எந்த ஓர் ஊடகத்தின் வழியே (காற்று, தண்ணீர்... போன்றவை) பயணிக்கிறதோ, அந்த ஊடகத்தின் தன்மைக்கேற்ப சிதறடிக்கப்படுகிறது. இந்த வகையில் தூய நீரின் வழியே ஒளி சிதறடிக்கப்படும்போது ஒளி விலகல் ஏற்பட்டு, வெளிச்சம் கிடைக்கிறது. ஒருவேளை, பாட்டில் நீரில் குளோரின் சேர்க்கப்படாமல் பாசி பிடித்து விட்டால், வீட்டுக்குள் வரும் வெளிச்சம் பச்சை நிறத்தில் இருக்கும், அவ்வளவுதான். இது எளிய தொழில்நுட்பம்தான்... ஆனால், இதுவரை யாரும் இதைக் கண்டறியவில்லை. எனினும், 2002-ம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த விளக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் ஊடகங்களில் பேசப்படுகிறது. ஆனால், அதற்குள் லட்சக்கணக்கான ஏழைகளின் வீடுகளில் இந்த மோஸர் விளக்கு பிரகாசித்துக்கொண்டிருந்தது. 
 
மின் இணைப்பு இல்லாத வீடுகளில் மட்டுமல்ல.. மின் இணைப்பு உள்ள வீடுகளிலும் பாட்டில் வெளிச்சம் பளிச்சிடுகிறது. காரணம், பல நாடுகளின் மின் கட்டணம், ஏழைகளால் கட்ட முடியாத அளவுக்கு மிக மிக அதிகமாக இருப்பதுதான். இந்த விளக்கு, அவர்களுக்கும் பெரிய அளவில் பணத்தை மிச்சப்படுத்தித் தருகிறது. வெளிச்சம் அதிகம் தேவைப்பட்டால், நான்கைந்து பாட்டில்களை செருகி வைத்துக்கொள்கிறார்கள். இதனால் பிரேசில், கென்யா, தான்சானியா, பங்களாதேஷ், ஃபிஜி, இந்தியா என உலக ஏழைகளின் சின்னம் போல இந்த விளக்கு பரவிக்கொண்டிருக்கிறது.
 
சதுர வடிவிலான சிறிய தகரத்தில் திருத்தமாகத் துளையிட்டு, அதில் பாட்டிலை பொருத்தி விற்பனை செய்யும் அளவுக்கு, இது ஒரு சிறு வணிகமாகவும் அங்கு மாறியிருக்கிறது. எந்தவித ஊடக விளம்பரங்களும் பெரிய நிறுவனங்களின் வர்த்தக நுணுக்கங்களும் இல்லாமல் இந்த விளக்கின் ஒளி பரவிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
இதன் மறைமுகமான பொருள் என்னவெனில், 'பகலில் மட்டுமேனும் வெளிச்சம் கிடைக்காதா?’ என ஏங்கித் தவிக்கும் கோடிக்கணக்கான ஏழை மக்கள், உலகமெங்கும் இப்போதும் நிறைந்திருக்கிறார்கள். நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள், பெரும்பாலும் மருத்துவம், எலக்ட்ரானிக் கருவிகள் போன்ற பணம் கொழிக்கும் துறைகளிலேயே சுற்றி வருகின்றன. ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கலை தீர்த்துவைக்கும் கண்டுபிடிப்புகள் மிகவும் குறைவே.
 
சோலார் பாட்டில் விளக்கை கண்டறிந்துள்ள ஆல்ஃபிரட் மோஸர், இப்போதும் வறுமையான மெக்கானிக்காகவே வாழ்ந்துவருகிறார். இருந்தபோதிலும், இந்த விளக்கை வைத்துப் பணம் பண்ண எண்ணாத மோஸர், இப்படிக் கூறுகிறார்...
 
''இத்தனை லட்சம் மக்கள் சோலார் பாட்டில் விளக்கைப் பயன்படுத்துவதை நினைத்து எனக்குப் பெருமையாக உள்ளது. ஆனால், இந்தக் கண்டுபிடிப்புக்கு நான் சொந்தம் கொண்டாட மாட்டேன். ஏனெனில், சூரிய ஒளியை நான் தயாரிக்கவில்லை. அதனால் அதற்கு நான் உரிமை கோரவும் முடியாது!''
தொழில் நுட்பம்.... தொலைக்கும் கலாச்சாரம் 
நன்றி : விகடன் 
 
செங்கல்பட்டு அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், ஒரு மாணவன் வகுப்பறையில் பயன்படுத்திய செல்போனை வாங்கி ஆசிரியர் பரிசோதித்தார். அதில் முழுக்கவே ஆபாச வீடியோக்கள். அதைவிட அதிர்ச்சி, பள்ளியின் ஆசிரியை ஒருவரை மிகவும் ஆபாசமான கோணங்களில் அந்த மாணவன் வீடியோ எடுத்திருந்தான். எச்சரிக்கப்பட்டு, பிரச்னை முடிக்கப்பட்டது. விஷயம் தெரிந்ததும் அந்த ஆசிரியை, 'இந்த வேலையே வேண்டாம்’ என்று விலகிச் சென்றுவிட்டார்.
 
கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியை தேர்வுத்தாளை திருத்திக்கொண்டிருந்தார். வினாத்தாளில் கேள்வி ஒன்றுக்கு, பாலியல் தொடர்பான தன் இச்சைகளை ஆசிரியையுடன் சம்பந்தப்படுத்தி ஒன்றரைப் பக்கத்துக்குப் பதிலாக எழுதியிருந்தான் ஒரு மாணவன்.
 
உயர் வர்க்கக் குழந்தைகள் படிக்கும் நாமக்கல் பள்ளி அது. சில மாணவர்கள் கழிப்பறையில் ஆபாச அடைமொழிகளால் பள்ளியில் பணிபுரியும் பலரையும் மாணவிகளின் பெயரையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். விசாரணையில் அந்த மாணவர்களைக் கண்டுபிடித்து பள்ளி நிர்வாகம் மாணவர்களை டிஸ்மிஸ் செய்தது. தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட அந்த மாணவர்கள், இப்போது மனநல ஆலோசனையில் இருக்கிறார்கள்.
 
பள்ளிக்கூட வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் ஒவ்வொரு நாளையும் பதற்றத்துடன் கழிக்கிறார்கள். '15 வயதில் ஆபாசப் படம், 16 வயதில் காதல், 17 வயதில் வீட்டைவிட்டு ஓடுவது’ எனச் சீரழிகிறது சிறுவர்களின் வாழ்வு. 'தங்கள் பிள்ளைகள் நல்லவர்கள்’ எனப் பெற்றோர்களின் உள்மனது அவர்களுக்கு ஆறுதல் சொன்னாலும், இன்னொரு புறம் சமூக யதார்த்தம் அவர்களைப் பதற்றத்திலேயே வைத்திருக்கிறது.
மாணவர்கள் மட்டும்தான் இப்படி என்று எண்ண வேண்டாம். இந்தப் படுகுழி சீரழிவில் மாணவிகளும் சிக்கியுள்ளனர்.
 
''சென்னையில் உள்ள மேல்தர வர்க்கக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடம் அது. வகுப்பு நடைபெறும்போது மாணவி ஒருத்தி வகுப்பறையில் மொபைலில் அடல்ட்ஸ் ஒன்லி வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதைக் கண்டுபிடித்த ஆசிரியை, 'உன் பெற்றோரை அழைத்துச் சொல்லட்டுமா?’ என்று கேட்க, 'நீங்க ஏன் இந்தக் கேள்வி எல்லாம் கேக்கிறீங்க? என் அப்பா அம்மாகிட்ட என்ன சொல்லப்போறீங்க? நான் நல்லாப் படிக்கிறேனா, ஒழுங்கா மார்க் வாங்குறேனா.... அதை மட்டும் பாருங்க’ என்று அலட்சியமாய் பதில் சொல்லியிருக்கிறாள். மதிப்பெண்களைத் தாண்டிய வாழ்க்கை மதிப்பீடுகளைக் கற்றுத் தராத பெற்றோர்களும் பள்ளிக்கூடங்களும்தான் இப்படியான நடத்தைகளுக்கு முழுப் பொறுப்பு'' என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.
ஒரு மிஸ்டுகாலில் தொடங்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையிலான உரையாடல், 'உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு’ என்று இழுத்து, ஆறே மாதத்தில் வீட்டைவிட்டு ஓடி வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளும் அளவுக்குச் செல்கிறது. சிறுவர்களோ, ஆபாசப் படங்களில் பார்க்கும் பெண்களைத் தேடிச் செல்வது, அதற்காகப் பணம் செலவழிப்பது, பணம் இல்லாதபோது பழகிய வீடுகளிலேயே திருடுவது, அதுவே சில நேரங்களில் கொலை வரை செல்வது என்று விபரீதமாகிவிடும். இத்தகைய சம்பவங்கள் பெரும்பாலானவற்றின் காரணங்களை ஆராயும்போது, சமூக வலைத்தளங்களும், செல்போன்களும்தான் முக்கியக் காரணமாக இருக்கின்றன. சமீபத்தில் மும்பையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று இதை உறுதிசெய்கிறது.
 
மும்பையைச் சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், நாடு முழுக்க பள்ளிச் சிறுவர்களிடம் நடத்திய ஆய்வில், 14 முதல் 18 வயது வரையிலான இளம் சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபட சமூக வலைத்தளங்களும், இணையம், செல்போன்களே முக்கியக் காரணம் என்று தெரியவந்துள்ளது. ஆய்வில் கலந்துகொண்டதில் 96 சதவிகித மாணவர்கள், போலிப் பெயர்களில் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்துள்ளனர். மிகவும் இறுகிய மனதுடன் சிதைந்த கூட்டுக்குள் வாழும் இளையோர், தங்களின் மனக்குறைகளை முகமே தெரியாத யாரோ ஒருவரிடம் முகநூலில் கொட்டித் தீர்க்கிறார்கள். விளைவு, இளவயது காதல், டேட்டிங், ஆடம்பரச் செலவுகளுக்காக கொலை, கொள்ளை என்று அவர்களின் வாழ்க்கை திசை மாறுகிறது. நவீன அறிவியல் புரட்சியின் சின்னங்களான இணையமும், செல்போனும் நம் பிள்ளைகளின் மனங்களை சிதைத்து வீசுகின்றன.
 
''நம் கற்பனைக்கு எட்டாத வகையில் தொழில்நுட்பம் உள்ளங்கைக்குள் மிக மலிவான விலையில் கிடைக்கிறது. அதன் பெரிய பக்கங்களில் அறிவுச் செல்வங்களும், அறிவியல் வியப்புகளும் கொட்டிக்கிடக்க... இன்னொரு பக்கத்தில் ஆபாச வக்கிரங்களும், அதை வடிகாலாக பயன்படுத்திக்கொள்ளும் வசதிகளும் இருக்கின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள் எப்படி தங்களின் குழந்தைகளைப் பாதிக்கின்றன என்பதுகூட பெரும்பாலான பெற்றோர்களுக்குப் புரிவதில்லை. அவசியத் தேவைக்கு ஒரு தொலைபேசி என்பதற்கு அப்பால், அதிநவீனத் தொலைபேசியை பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பதில் ஒளிந்திருப்பது குடும்ப கௌரவம். ஆனால், அந்த அதிநவீனத் தொலைபேசி எப்படி குடும்ப கௌரவத்தைக் காவு வாங்குகிறது என்பதைக்கூட இந்தப் பெற்றோர்கள் அறியாமல் இருப்பதுதான் அதிர்ச்சி. ஒருகாலத்தில் நடுத்தர வயதில் இருப்பவர்கள் செய்த ஆபாச சேட்டைகளை, இப்போது 12, 13 வயது சிறுவர்களே செய்கிறார்கள். மகனைப் போல், பேரனைப் போல இருக்கும் சிறுவன்கூட, தவறான எண்ணத்தோடு ஒரு பெண் மீது சாய்கிறான்!'' என்று ஆதங்கம் தெரிவிக்கிறார் அருள்மொழி.
 
13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பார்க்கவோ, பயன்படுத்தவோ அனுமதி இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில் கூறியிருந்தது. விபரீத செய்கைகளுக்கு வழிவகுக்கும் சமூக இணையதளங்கள் உள்ளிட்ட 13 இணையதளங்களைத் தடைசெய்ய அமெரிக்காவிடம் இந்தியா ஒத்துழைப்பும் கோரியிருந்தது. ஆனால், 'கருத்துரிமையில் தலையிட முடியாது’ என்று அமெரிக்க உள்துறை இதை நிராகரித்துவிட்டது. இந்த நிலையில், உள்ளூர் காவல் துறையால் இத்தகைய குற்றங்களைக் கண்காணிக்க முடியுமே தவிர, கட்டுப்படுத்த முடியாது என்பதே சமூக யதார்த்தம்.
 
12, 13 வயதினை உள்ளடக்கிய வளரிளம் பருவத்தில் குழந்தைகள் நுழையும்போது அவர்களின் மனம் புதிய விஷயங்களைத் தேடுகிறது. அவர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பது பெற்றோர்களுக்குத் தெரிவதே இல்லை. 'தன் பிள்ளை தப்பு செய்யாது’ என்று ஒவ்வொரு பெற்றோரும் தீர்மானமாக நம்புகின்றனர். யார் பிள்ளையாக இருந்தாலும் நடைமுறை உலகத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பதே உண்மை. அவர்கள், தாங்கள் சிறுவர்களாக இருந்த அந்தக் காலத்து பழங்கதைகளை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உள்ளங்கையில் அடங்கும் செல்போனில் உலகத்தின் அத்தனை வன்மங்களையும் பாதுகாத்துக்கொள்வதும், கண்டுபிடிக்கும் சூழல் எழும் சமயம், அவற்றை ஆதாரமே இல்லாமல் அழித்துவிடுவதும் இப்போது வெகு சுலபம். பெற்றோர்களுக்கு இந்தத் தொழில்நுட்பங்கள் புரிவது இல்லை. தங்கள் பிள்ளைகள் ஸ்மார்ட்போனில் சகல அப்ளிகேஷன்களையும் பயன்படுத்துவது குறித்து அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். மாறாக, அந்தப் பிள்ளைகள் உள்ளே வேறு ஒரு வினோத வக்கிர பயங்கர உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிதர்சனத்தைப் பெற்றோர் உணர்வதும் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் இப்போதைய அதிஅவசியப் பக்குவத் தேவை!

சமூகத்தில் என்ன மாற்றம் தேவை?    - ஜெயந்தினி, உளவியல் மருத்துவர்
 
ஆண், பெண் குழந்தைகள் இணைந்து படிக்கும் பள்ளிக்கூடங்கள் இப்போது அருகி விட்டன. 2 வரை ஆண்கள் தனியாக பெண்கள் தனித்தனியாகப் படித்துவிட்டு, கல்லூரி செல்லும்போது திடீரென இருபாலரும் இணைந்து படிக்கும்போது அதிகக் கிளர்ச்சியடைகிறார்கள். எதிர்பாலினக் கவர்ச்சியைக் குறைத்து இயல்பான ஆண், பெண் நட்பை வளர்த்தெடுக்கும் விதத்தில் இருபாலர் பள்ளிகள் துவங்கப்பட வேண்டும்,
 
18 வயதுக்குக் கீழானவர்கள் இணையத்தைப் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். உலகின் பல நாடுகளில் இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதை அரசே செய்ய வேண்டும். செய்யாதபட்சத்தில் அரசியல் கட்சிகளும் சமூக இயக்கங்களும் இதற்காகப் போராட வேண்டும்.
 
மனிதர்கள் யாராக இருந்தாலும் ஒழுக்கம் தேவை. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஒழுக்கமின்மையை அனுமதிக்க முடியாது. சமூகச் சூழலை கருத்தில்கொண்டு, இத்தகைய வேலி நம் பிள்ளைகளுக்கு அவசியமாகிறது. அதை நெருக்கியும் போடவேண்டியதில்லை. மிகவும் விலக்கியும் போட வேண்டியதில்லை. பெற்றோர்களாகிய உங்களிடம் இருந்து அன்பு கிடைக்கவில்லை என்றால், கிடைக்கும் இடம் தேடி அவர்கள் சென்று விடுவார்கள்!

பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
 
ம்மால் கைவிட முடியாத எதையும் நம் குழந்தைகள் கைவிட மாட்டார்கள். நாம் கையில் ஒன்றும், பையில் ஒன்றுமாக இரண்டு செல்போன்கள் வைத்துக்கொண்டு பிள்ளைகளைப் 'பயன்படுத்த வேண்டாம்’ என்று சொன்னால் அதை அவர்கள் ஏற்கமாட்டார்கள். ஆகவே, தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும் அதன் ஆபத்தான பக்க விளைவுகளை முதலில் பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதைச் சரியான முறையில், பொருத்தமான சந்தர்ப்பத்தில் குழந்தைகளுக்கும் புரியவைக்க வேண்டும்.
 
அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் பள்ளிக்கூடம் படிக்கும் மகனுக்கோ, மகளுக்கோ செல்போன் என்பது அவசியமாகிறது. அதுவே, யாரோ ஒருவர் வேலைக்குச் சென்று, ஒருவர் வீட்டில் இருக்கிறார் என்றால் பிள்ளைகளுக்கு ப்ளஸ் 2 முடிக்கும் வரை செல்போன் அவசியம் இல்லை. எப்படி இருந்தாலும் பள்ளிச் சிறுவர்களுக்கு செல்போன் வாங்கித் தரும்போது, அது அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட மாடல் செல்போனாக இருப்பது அவசியம். அவர்களுக்கு அது போதுமானதும் கூட. 'ஏழை வீட்டுப் பையன் வெச்சிருக்குற அதே சாதாரண செல்போனை, என் பையனும் வெச்சிருக்குறதா?’ என இதில் கௌரவம் பார்த்து, ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுப்பதும், பின்னர் நிகழும் விளைவுகளுக்கு பெரும்பாலும் காரணமாகும்!
 
இன்று சமூக வலைத்தளங்களே கதி என கிடப்பதும், விட்டில்பூச்சிகளாக அதன் கவர்ச்சியில் சிக்கி சீரழிவதும் பெரும்பகுதி கல்லூரி மாணவர்களே. நண்பர்களுடனான புகைப்படங்களை பகிர்வதில் துவங்கி, குடும்பம் பற்றிய தகவல்களை பொதுவெளியில் கொட்டுவது வரை அது எல்லையற்றுப் போகிறது. ஆகவே, கல்லூரி வயதில் உள்ளப் பிள்ளைகளின் பெற்றோர் எது அந்தரங்கம், எது பொதுவானது என்பதை பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.
 
றீ வீதியில் இறங்கி உடல் தசைகள் புத்துணர்வு பெற ஓடியாடுவதுதான் விளையாட்டு. வீடியோ கேம்ஸ் என்பது விளையாட்டு அல்ல, அது நோய். தங்கள் பிள்ளைகள் சிறப்பாக வீடியோ கேம்ஸ் ஆடுவதாக மகிழ்ச்சி அடைவதை நிறுத்திக்கொண்டு, அவர்களுக்கு நடைமுறை விளையாட்டுகளை பழக்கப்படுத்த வேண்டும். பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்க ஊக்குவிக்க வேண்டும்!
 
எந்நேரமும் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் குழந்தைகளின் கற்பனைத் திறனும், மூளையின் செயல்பாடும் முழு வளர்ச்சியடைவதில்லை. கையால் எழுதுவதும், ஓவியங்கள் வரைவதும் மூளை நரம்புகளை உற்சாகப்படுத்தும்.
 
பெண் குழந்தை வயதுக்கு வருவதை பெரிய விழாவாகக் கொண்டாடி, 'நீ பெரியவள் ஆயிட்டே. இனி வெளியில் போகாதே’ என முடக்கிப் போடாமல், அது பருவ வயதின் இயற்கையான மாற்றம் என்பதை உணர்ந்து அதை இயல்பாக எதிர்கொள்ளும் மன தைரியத்தை உருவாக்குங்கள்!
 
குழந்தைகளின் முதல் ரோல்மாடல் அப்பா, அம்மாதான். ஆகவே, அவர்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நல்ல பல பழக்கங்களை நீங்கள் கைக்கொள்ளுங்கள். நல்ல ரோல்மாடல் பெற்றோரிடமிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, மோசமான நடத்தைகளை கற்பூரமாகப் பற்றிக்கொள்வார்கள்... உஷார்

Friday, August 16, 2013

'வலி' இல்லா பிரசவத்துக்கு வழி!
'பிரசவம்’ என்றாலே அது ஒரு பரவச அனுபவம். ஆனால், அந்த கணநேர வலிக்குப் பயந்தே குழந்தைப் பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடும் பெண்கள் இன்று அதிகரித்து வருகின்றனர். இங்கிலாந்தின் இளவரசியான கேத் மிட்டல்டன் முதல் சாதாரணப் பெண்கள் வரை அனைவரும் வலியில்லா பிரசவத்தையே விரும்புகின்றனர். சமீபத்தில் ஆண் குழந்தைப் பெற்ற இங்கிலாந்து இளவரசி கேத் 'ஹிப்னோபெர்த்திங்’ (Hypnobirthing)என்ற முறையில் குழந்தை பெற்றதாக செய்திகள் வெளியாயின. ஹாலிவுட் நடிகை ஜெஸிகா ஆல்ஃபா, மிராண்டா கேர் போன்ற பல பிரபலங்கள், இந்த முறையில்தான் குழந்தை பெற்றுள்ளனர்.
 
தமிழகத்திலும் ஹிப்னோபெர்த்திங் முறையில் சுகப் பிரசவங்கள் சில நடந்துள்ளன. ஆனால், இதுபற்றிய விழிப்பு உணர்வு இல்லை. தமிழ்நாட்டில் ஹிப்னோபெர்த்திங் தெரப்பிஸ்ட் பயிற்சி பெற்ற ஒரே மருத்துவரான ரேகா சுதர்சனிடம் இதுபற்றிப் பேசினோம். 'இது ஒரு வித்தியாசமான ஹிப்னாடிசம். தியானம், ஹிப்னாடிஸ் போன்ற முறைகளிலிருந்து வேறுபட்டது. இந்தச் சிகிச்சைமுறையில், கர்ப்பிணியின் மனதை ஒருநிலைப்படுத்தி, அவர்களை தியானம் போன்று ஆழ்ந்த சிந்தனைக்குக் கொண்டுசெல்லாமல், அவர்களுடைய மனசின் வாயிலாக உற்சாகப்படுத்துகிறோம். எட்டாத உயரத்தையும் எட்டவைக்கும் ஏணிதான். நேர்மறையான (Positive thinking)எண்ணங்கள். அந்த பாசிட்டிவ் எண்ணங்களை, பிரசவத்துக்கு எதிர்நோக்கியிருக்கும் கர்ப்பிணியின் மனசில் விதைப்பதுதான் ஹிப்னோபெர்த்திங்கின் முக்கிய நோக்கம். வேதனையோ, சோதனையோ நினைக்க நினைக்கத்தான் அதன் வீரியம் கூடும். பிரசவ நேரத்தில் பயமும், அதனை பற்றிய வேதனையும் மனதில் அதிகமாகும்போது, அது உடம்பில் வலியாக மாறும். இதே மாதிரிதான் பெண்களுக்கு 'பிரசவ வலி’ என்பது கஷ்டமானது என்று நம்முடைய மக்களை நினைக்கவைத்துள்ளது. அது தவறானது. குழந்தையைப் பெற்றெடுத்த பின் பெண்கள் அடைகின்ற சந்தோஷத்தை, அது வயிற்றில் தவழும்போதே ஹிப்னோபெர்த்திங் மூலம் உணர முடியும்.
 
இந்தப் பயிற்சியின் மூலம் பயம் நீங்கிவிடுவதால், பெரும்பாலும் வலி குறைந்துவிடும். இதனால், பிரசவம் என்பது எல்லாப் பெண்களுக்கும் சுகமானதாகவே அமையும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கச் சொல்வார்கள். அப்போது அதிக வலியினால் சில தாய்மார்கள் கஷ்டப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், அந்த வலிக்கு முட்டுக்கட்டை போட்டு தாய்மார்களை சந்தோஷப்படவைத்திருக்கும் சிறந்த வலி நிவாரணியாக இந்த ஹிப்னோபெர்த்திங் முறை இருக்கிறது. மேலும், குழந்தை பெற்ற பிறகு, பெண்களுக்கு உண்டாகும் முதுகு வலி, மூட்டு வலி போன்ற அனைத்து உடம்பு வலிகளையும் இது நீக்கிவிடும்.
 
இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் இந்த முறையின் மூலம் 11 பெண்கள் குழந்தை பெற்றுள்ளனர். உடலை வருத்திக்கொள்ளாமல் ஓர் உயிரைப் பெற்றெடுத்த ஒவ்வொருவரும் உணர்ந்து சொல்வது, 'குழந்தைப் பிறக்கப் போகிறது என்ற பயம் இல்லாததால், மிதமான வலியுடன் குழந்தையைப் பெற்றெடுத்தோம்’.'
 
தவமாய் தவமிருந்து பெற்றெடுக்கும் குழந்தைகளுக்காக, பெற்றோர்கள் எடுக்கும் இந்த முயற்சிதான், குழந்தையின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது.
 
'சுக’மான பயிற்சி!
 
பெண்கள் கருவுற்ற 21-வது வாரத்திலிருந்து 27-வது வாரம் வரை, அந்த நேரத்தில் அவர்களால் செய்யகூடிய உடற்பயிற்சிகள், சுவாசப் பயிற்சிகள் மற்றும் குழந்தை பிறப்பிலிருந்து தாய்ப்பால் கொடுப்பது பற்றிய முழுமையான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 
 
28-வது வாரத்திலிருந்து மனதை அமைதியாக்கும் வழிமுறைகள் கற்றுத்தரப்படுகின்றன.
 
மனதில் பாசிட்டிவ் சிந்தனைகளை ஏற்படுத்தும் பயிற்சிகள் 38-வது வாரம் வரை கற்றுத்தரப்படும்.
 
இந்த வகுப்புகள், வாரத்துக்கு ஒருநாள் ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரத்துக்கு எடுக்கப்படும்.
 
இந்தப் பயிற்சியில் கணவன்-மனைவி இருவரும் கலந்து கொள்ளவேண்டும். கணவன் கூடவே இருப்பதால், பெண்களுக்கு வலி குறைவதுடன் தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது.
 
பிரசவத்தின்போது அதிக உயர் ரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் உள்ள பெண்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப் பெற்று, இந்த வகுப்பில் பங்கேற்கலாம்.
 
இரண்டாவது பிரசவத்தைச் சந்திக்கும் பெண்கள்கூட, இந்தப் பயிற்சியை மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.

Thursday, August 8, 2013

ஒரு அப்பாவின் சினிமா கனவு!
நன்றி : ஆனந்த விகடன் 
 
ண்முகத்துக்கு 65 வயது.கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி என்னும் மலைக் கிராமத்து விவசாயி. இரண்டு மகன்கள். ஒரு மகள். மூத்த மகன் ஜெயபாரத், புனே யில் கால்நடை மருத்துவக் கல்லூரியில் பணிபுரிகிறார். குதிரைகளுக்குப் பிரசவம் பார்ப்ப தில், இந்தியாவின் முன்னோடி மருத்துவர்களில் ஒருவர். பொறியியல் படித்த இரண்டாவது மகன் ஜெயசுந்தர்ராஜன், இந்திய விமானத் துறையில் பணியில் சேர்ந்தார். மகள் பிரியாவின் விருப்பம், பேஸ்கட் பால் பிளேயராவது.அதே போல் அவரை விளையாட்டு வீராங்கனையாக உருவாக்கினார் அந்த அப்பா.
 
ஒரு விடுமுறை நாளில் அனை வரும் புனேயில் ஒன்றுசேர்ந்தனர். பிள்ளைகள் மூவரும், ''நாங்க ஆசைப்பட்ட மாதிரியே எங்களை உருவாக் கிட்டீங்க. ரொம்ப நன்றிப்பா'' என் றார்கள் நெகிழ்ச்சியோடு. அப்போது அவர்களின் அம்மா சொன்னார், ''உங்கஆசை நிறைவேறிடுச்சு.ஆனா, அவர் ஆசை இன்னும் நிறைவேறலையே'' என்று.
 
அந்த வயதில் அப்பாவுக்கு அப்படி என்ன ஆசை?
 
நடிக்க வேண்டும்! எப்படியாவது திரையில் தன் உருவத்தைப் பார்க்க வேண்டும். இளமையில் இருந்து சண்முகத்தை ஆட்டிப் படைத்துவரும் ஆசை அது. தங்களை, தங்கள் விருப்பப்படி ஆளாக்கிய தந்தையின் கனவை நிறைவேற்ற முடிவுசெய்தார்கள் அந்தப் பிள்ளைகள். விமானத் துறையில் பணிபுரிந்த ஜெயசுந்தர்ராஜன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தாண்டிக் குடிக்கு வந்தார். ''விவசாயத்தை நான் பார்த்துக் கிறேன். நீங்க சென்னைக்குப் போங்க. உங்க சினிமா கனவை நிறைவேற்ற முயற்சி செய்யுங்க!'' என்றார். 60 வயதுக்குப் பிறகு தன் வாழ்நாள் கனவை அடையும் லட்சியத்தோடு சென்னைக்கு வந்தார் அவர். பிள்ளைகள் மாதா மாதம் அவர் செலவுக்குப் பணம் அனுப்பினார்கள். ஐந்து வருடப் போராட்டத்துக்குப் பிறகு, சின்னச்சின்ன தாக சினிமாவில் தலைகாட்டத் தொடங்கியிருக் கிறார் 'தாண்டிக்குடி’ சண்முகம்.
 
''மக்கள் மனசுல நிற்கிற மாதிரி ஒரு கேரக்டர் செஞ்சுடணும். ஆளைப் பார்த்ததுமே 'தாண் டிக்குடி சண்முகம்’னு அடையாளம் கண்டு பிடிக்கணும். அவ்வளவுதான் என் ஆசை'' - சிறு குழந்தை போல சிரிக்கிறார் சண்முகம்.கோடம் பாக்கத்தில் அவர் தங்கியிருக்கும் வீட்டின் கதவு முகப்பில் 'வயதோ, உடல் பலமோ எனக்குத் தடையில்லை. என் லட்சியத்தை அடையும் வரை விடாமல் உழைப்பேன்’ என்ற ஸ்டிக்கர் பளிச்சிடுகிறது.
 
''தாண்டிக்குடியில் நாங்க ஊருக்குப் பஞ்சாயத்து செய்யும் பெரிய குடும்பம். எங்க அப்பா, ஊர் கணக்குப்பிள்ளையா இருந்தார். நான் இப்போ தாண்டிக்குடி முருகன் கோயில் நிர்வாகி. எப்படியோ சின்ன வயசுலேர்ந்து நாடகம், நடிப்புனு ஆர்வம் வந்துடுச்சு. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிச்சுட்டு இருந்தப்போ, 'ராஜமாணிக்கம் பிள்ளை நாடகக் கம்பெனி’யில் மூணு மாசம் பயிற்சி எடுத்தேன். எனக்குக் கல்யாணம் ஆன பிறகு, விவசாயத்தைப் பார்க்க வேண்டி இருந்தது!'' என்றபடி சிரிக்கிறார்.
 
''சினிமானு வந்தாச்சு. அதனால முதல்ல தகுதியை வளர்த்துக்குவோம்னு நடிப்புப் பயிற்சி, பாடிலாங்வேஜ் பயிற்சி, பாட்டுப் பயிற்சி எல்லாம் எடுத்துக்கிட்டேன். முதன்முதலா ஒரு நகைக் கடை விளம்பரத்துலதான் நடிச்சேன். அது எல்லா டி.வி-லயும் வந்துச்சு. எங்க ஊர் சனங்களும், என் பிள்ளைங்களும் பார்த்துட்டு சந்தோஷமாப் பேசினாங்க. பிறகு, ஒரு சீரியல்ல சித்தவைத்தியரா நடிச்சேன். 'தெனாவெட்டு’ படத்துல ஒரு காட்சியில் போஸ்ட் மாஸ்டரா வந்துட்டுப் போவேன். பிறகு 'மன்னாரு’, 'கண்டுபிடி கண்டுபிடி’ படங்கள்ல சின்னச் சின்ன ரோல் பண்ணேன்.
 
ஷூட்டிங் இருக்கும் நாள் போக, மத்த நாட் கள்ல தினமும் கிளம்பி ஒரு சினிமா ஆபீஸ்போயி ருவேன். என் போட்டோ, விசிட்டிங் கார்டு களைக் கொடுத்து இயக்குநர், உதவி இயக்குநர் களைச் சந்திச்சு வாய்ப்புக் கேட்பேன். பெரும்பா லும் மரியாதைக் குறைவாத்தான் நடத்துவாங்க. வயசானவர்னுகூட பார்க்காம அவமானப்படுத்து வாங்க. 'தாண்டிக்குடிக்குள்ள நமக்கு என்ன மரியாதை இருக்கும். இங்கே இப்படிப் பண்றாங் களே’னு சில சமயங்கள்ல வருத்தமா இருக் கும்.நேத்துகூட என் மனைவி போன்ல, 'ஊரே குளிரைத் தேடி கொடைக்கானலுக்கு வருது. நீங்கஇந்தவேகாதவெயில்லமெட்ராஸ்ல கெடக்கீகளே’னு பேசுறா. என்ன செய்ய?ஆசைப் பட்டாச்சு... வந்தாச்சு. பாதியில் விடமுடியுமா?
 
வந்து அஞ்சு வருஷமாச்சு. பையன் அனுப்புற காசைவெச்சு வீட்டு வாடகை கொடுத்து, சாப்பிட்டுக்கிறேன். நல்ல குணச்சித்திர நடிகரா வரணும். 'மைண்ட்ல வெச்சிருக்கேன்’னு எந்த டைரக்டரும் சொல்லாத நிலை வரணும். விசிட்டிங் கார்டு கொடுக்காம என் பேரைச் சொன்னா எல்லாருக்கும் அடையாளம் தெரியணும்... அவ்வளவுதான்'' நம்பிக்கையுடன் முடிக்கிறார் 'தாண்டிக்குடி’ சண்முகம்!

Thursday, August 1, 2013

புளிப்புலி 
நன்றி: ஆனந்த விகடன் 
 
 
ளீர் வெள்ளை ஏப்ரன் அணிந்து, கூம்புத் தொப்பியுடன் சமைக்கும் 'குக்’குக்கு, சுகாதாரமாக சமைக்கத் தெரியும் என நம்பும் நம்மில் பலருக்கு, 'வெட்டுன காய்கறித் துண்டுகளைப் புளியில கொஞ்சம் ஊறவிட்டு வேகவிடும்மா... மல்லித் தழையையும், பெருங்காயத்தையும் இறக்கும்போதுதான் போடணும்; காயவிடக் கூடாது. அப்புறம் மணம் இருக்காது’ எனச் சொல்லும் பொக்கை வாய்ப் பாட்டியின் அறிவியல் அலட்சியமாகவே படுகிறது.
 
சமீபமாக புளியில் ஊறாத காய், ஏலக்காய் இல்லாத லட்டு, பட்டை போடாத பிரியாணி, மல்லித் தழை இல்லாத ரசம், கறிவேப்பிலை இல்லாமல் தாளிக்கப்படும் சட்னி என தமிழர்களின் சமையல் பழக்கத்தில் பெரும் மாற்றம்!
 
'ஏம்ப்பா... இப்படி உயிரே இல்லாம சமைக்கிறீங்க?’ என்று பதறிக் கேட்டால், 'எப்படியும் அதை எல்லாத்தையும் சாப்பிடறப்போ தூரப் போடப் போறோம்... அதை எதுக்கு வேஸ்ட்டாப் போட்டுக்கிட்டு!’ என 'விவர’ பதில் சொல்கிறார்கள் இளைய தலைமுறையினர்.
சுவை, மணம், காரம் தூக்கலாக இருப்பதற்காகவே இந்த சமையல் அலங்காரங்கள் என்றே நம் மனதில் பதிந்திருக்கிறது. ஆனால், அது உண்மை அல்ல!
 
ஆங்கிலத்தில் ஸ்பைசஸ் (spices) என்றால் காரம் (hot) என அரைகுறையாகப் புரிந்துகொண்டது ஒரு சிக்கல். புளிக் கரைசல், மல்லி, கறிவேப்பிலை என நீளும் மணமூட்டிகள் உணவை மருந்தாக்கும் அத்தியாவசிய பொருட்கள் என்பதை மறந்துவிட்டது இரண்டாவது சிக்கல்.
'புளிக் குழம்பா?’ என அலர்ஜி காட்டும் குழந்தைகளில் பலரும் அதன் சுவையால் ஒதுக்குவது இல்லை. அந்தக் குழம்பின் வண்ணத்தைப் பார்த்தவுடன், கறுப்பு = அழுக்கு, பழுப்பு = பரவாயில்லாத அழுக்கு என விஷ(ம)த்தனமாகப் பழக்கப்படுத்தப்பட்ட மனநிலை காரணமாகவே புளிக் குழம்பைப் பழிக்கிறார்கள். கறுப்பு நிற கோக்கோவைச் சந்தைப்படுத்த எத்தனை சிவப்பு நிறங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை யோசித்தால் அந்த 'நிறவெறி’ அரசியல் புரியும். 'புளி... உணவு மட்டுமல்ல; மருந்தும்கூட’ என நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால், ஆப்பிரிக்க அப்பத்தாக்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். பல்வேறு காய்ச்சல், புண்ணாற்றும் தன்மை, அஜீரணம், சுவாச நோய்கள் எனப் பல பிரச்னைகளுக்கு கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் புளியையே நம்பியிருப்பதை Journal of Ethnopharmacology எனும் மருத்துவ நூல் ஆவணப்படுத்தியுள்ளது. புளிக் கரைசலில் ஊறவைத்து வேகவிடுவதாலேயே, காய்கறிகளின் புரதச் சத்து, பல கனிமச் சத்துக்கள் வீணாகாமல் பாதுகாக்கப்படுகின்றன என்ற தேசிய உணவியல் கழகத்தின் ஆய்வு முடிவுகள், நம் முன்னோர்களின் பழக்கத்துக்குக் கிடைத்த அறிவியல் அங்கீகாரம்!
 
புளியில் அதிகம் இருப்பது ஆன்ட்டி -ஆக்சிடென்ட் தன்மையுள்ள டார்டாரிக் அமிலம். அதோடு, வைட்டமின் பி வகை சத்துக்கள், கால்சியம், இன்னும் மருத்துவக் குணமுள்ள கூறுகள் (Phytonutrients) நிறையவே உள்ளன. பார்வைத் திறனில் பாதிப்பு உண்டாக்கும் சாதாரணக் கிருமித் தொற்று முதல் வயோதிகம் உண்டாக்கும் பிரச்னைகள் வரை தீர்ப்பதற்கு புளிக் கரைசலைப் பயன்படுத்தலாமா என ஆய்வாளர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
'அதிக சர்க்கரைக்கும், அதிக ரத்தக் கொழுப்புக்கும்கூட புளி வேலை செய்வதில் புலியா?’ என பாகிஸ்தானில் ஆராய்ந்துவருகிறார்கள். மருத்துவ குணமும், பட்டையைக் கிளப்பும் ருசியும்கொண்டது என உலகெல்லாம் கொண்டாடப்படும் ஐரோப்பாவின் Worcestershire sauce-லும், ஜமைக்காவின் Pickapeppa Sauce-லும் நாம் எளக்காரமாகப் பார்க்கும் புளிக் கரைசல்தான் மிக முக்கியப் பொருள்.
 
அம்மன் கோயில் புளிக் கரைசல் பானகத்துக்கு, யாரேனும் இப்படி ஓர் ஆங்கில Sauce பெயர் வைத்தால், ஒருவேளை நகரத்து டீன் ஏஜர்கள் இட்லி தோசைக்கும், பிரட் பர்கருக்கும் ஊற்றிச் சாப்பிடுவார்களோ என்னவோ!
 
தாவரக் கூட்டத்தின் மாணிக்கங்கள் என்றால் இந்த மணமூட்டி ஸ்பைசஸ்கள்தான். எந்த நாடுகள் பாரம்பரிய உணவை இன்றும் அதிகமாக உட்கொள்கிறதோ, அவற்றின் குடிமக்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்கின்றன மருத்துவப் புள்ளிவிவரங்கள். மஞ்சளை அநேகமாக எல்லா மசாலாப் பொடியிலும் போடுவதால், மலக்குடல் புற்று மற்ற நாட்டினரை அதிக அளவில் தாக்கும் அளவுக்கு இந்தியரை இன்னும் எட்டிப் பார்க்கவில்லை. பூண்டையும் வெங்காயத்தையும் இயல்பிலேயே அதிகம் பயன்படுத்தும் கிரீஸ் நாட்டினருக்கு மாரடைப்பு வீதம் குறைவு. குங்குமப் பூவைப் பயன்படுத்தும் ஸ்பெயின் மக்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் கொஞ்சம் குறைவு என்கின்றன மருத்துவ ஆய்வுகள். அந்த ஆய்வுகளில் நல் ஆரோக்கியத்துடன் இந்தியர்கள் முதல் இடம் பிடிக்க, பாரம்பரியத்தை நாம் கைவிடாமல் இருந்தாலே போதுமானது