Monday, June 14, 2021

கொரோனாவின் முதல் இலக்கான முதியோரை பாதுகாக்க 


தனிமைப்படுத்துதல் என்ற பெயரில் முதியோரை வதைக்கவேண்டாம். அவர்களுக்குத் தேவை ஆதரவு. சமூக இடைவெளி இருக்கட்டும். தூரத்தில் இருந்தாலும் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுங்கள். அவர்களோடு உரையாட மறக்காதீர்கள். முதியோருக்குத் தனிமை, கொரோனாவைவிடக் கொடுமையான நோய்.

முடிந்த அளவு முதியவர்களோடு இருங்கள். பிடித்தமான செயல்களைச் செய்யவிடுங்கள். படிப்பவர்களாயின், அவர்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கித்தாருங்கள்.

உறவினர்களோடு பேச விரும்பினால் அனுமதியுங்கள். அது அவர்களுக்கு ஆறுதல் தரும்.

டயட் ரொம்பவே முக்கியம். முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். பழங்கள் கொடுக்கலாம். குறிப்பாக நெல்லி, ஆரஞ்சு, கொய்யாப் பழங்கள் நல்லது. பாதாம் தரலாம். உணவில் இஞ்சி, பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

எதிர்மறைச் செய்திகள் அவர்களை அண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பாசிட்டிவான செய்திகளாக அவர்களிடம் சொல்லுங்கள்.

தடுப்பூசி ரொம்பவே முக்கியம். அதுபற்றிய மூடநம்பிக்கைகளை அகற்றி, நம்பிக்கை தந்து தடுப்பூசி போடச் சொல்லுங்கள். நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள், நிமோனியா வந்தவர்கள், புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் பாதிப்பு குறைவாக இருக்கும். செப்டம்பர் வாக்கில் மூன்றாம் அலைத் தாக்குதல் இருக்கலாம் என்கிறார்கள். அதனால் தடுப்பூசி அவசியம்.

தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். வயதானால் தாக உணர்ச்சி குறைந்துவிடும். வீட்டில் இருப்பவர்கள் கவனித்து குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் தரவேண்டும். பிரிட்ஜி்ல் வைத்து சாப்பிடுவது, அருந்துவது நல்லதல்ல... வெந்நீர் ரொம்பவே நல்லது. இதயநோய், சிறுநீரக நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றுத் தண்ணீரின் அளவைத் தீர்மானிக்கவேண்டும்.

காற்றோட்டமான இடங்களில் முதியோரை உலவ விடுங்கள். ஏ.சி இருந்தால் குறைவாகப் பயன்படுத்துங்கள்.

 அரை மணி நேர வாக்கிங், உடற்பயிற்சி முக்கியம்.

 அதிகாலைச் சூரிய ஒளியில் இயற்கையான வைட்டமின் டி இருக்கிறது. உணவைவிட சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி ரொம்பவே நல்லது. கொரோனாவுக்கு இது தடுப்பு மருந்து.

 மூச்சுப்பயிற்சி செய்வது நல்லது. ஆசுவாசமாக அமர்ந்து மூச்சை நன்கு இழுத்து முடிந்தவரை உள்ளே வைத்திருந்து மெதுவாக வெளியே விடவேண்டும். இது நல்லது.

கொரோனா அறிகுறி வந்துவிட்டாலும் பயப்பட வேண்டாம். உடனடியாக டெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள். நூற்றில் ஒருவரோ இருவரோதான் அதிதீவிர நிலைக்குச் செல்கிறார்கள்.

 அச்சம் வேண்டாம். அதுதான் பாதிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது. எல்லாம் கடந்துபோகும்.

ஜெயக்குமார் என்னும் ரட்சகன்!

நன்றி ஆனந்தி விகடன்

 இப்போ யோசிச்சாலும் மிரட்சியாதான் இருக்கு. அப்போதான் ஒரு சிசேரியன் முடிஞ்சுது. ரிலாக்ஸா ஆபரேஷன் தியேட்டர்ல உக்கார்ந்து ரெஜிஸ்டர் எழுதிக்கிட்டிருந்தேன். பக்கத்து வார்டுல இருந்து திடீர்னு சத்தம்... எல்லாரும் அலறி அடிச்சுக்கிட்டு வெளியே ஓடுறாங்க. ஜன்னல் வழியா பாக்குறேன்... நெருப்பும் புகையுமா இருக்கு... உள்ளே நிறைய குழந்தைகள் இருக்காங்க. எல்லாம் பிறந்து ரெண்டு மூணு நாளான பச்சிளங்குழந்தைகள். ஏதோ ஒரு உந்துதல்ல ஜன்னலை உடைச்சு இறங்கிட்டேன்...”


இன்னும் சிலிர்ப்பு அடங்கவில்லை ஜெயக்குமாருக்கு. கேட்கும்போது நம்மையும் பதற்றம் பற்றிக்கொள்கிறது. ஜெயக்குமார், 58 குழந்தைகளின் உயிர்மீட்ட செவிலியர். சென்னை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சையரங்கில் செவிலியராகப் பணியாற்றும் ஜெயக்குமார், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தீக்குள் இறங்கி, ஆபத்திலிருந்த பச்சிளங்குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்.

ஜெயக்குமார் என்னும் ரட்சகன்!


சென்னையின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனைகளில் ஒன்று கஸ்தூரிபாய் மருத்துவமனை. தினமும் நூற்றுக்கணக்கில் பிரசவங்கள் நடக்கும். நான்கு தளங்கள் கொண்ட இந்த மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் இருக்கிறது பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு. பிறந்து சில நாள்களேயான குறைபாடுடைய குழந்தைகள், வெண்டிலேட்டரில் வைக்க வேண்டிய குழந்தைகள், குளுக்கோஸ் தேவைப்படும் குழந்தைகளெல்லாம் இங்கே வைத்துப் பராமரிக்கப்படுவார்கள். தாய்மார் அவ்வப்போது வந்து பாலூட்டிவிட்டுப் போய்விடுவார்கள்.

கடந்த 26ம் தேதி. அந்தப் பிரிவில் 3 செவிலியர்கள், 58 குழந்தைகள், 11 தாய்மார் உள்ளே இருந்தார்கள்.

“எனக்கு அன்னைக்கு நைட்ஷிப்ட். இரவு 7 மணிக்கு ஆரம்பிச்சு காலை 7 மணிக்கு முடியும். வந்தவுடனே அடுத்தடுத்து ரெண்டு சிசேரியன். பச்சிளங்குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுக்குப் பக்கத்துலதான் ஆபரேஷன் தியேட்டர். சிசேரியன் முடிஞ்சு மாஸ்க், டிரெஸ்கூட கழற்றாம உக்காந்து ரெஜிஸ்டர் எழுதிக்கிட்டிருந்தேன். திடீர்னு ஒரே சத்தம். ரேம்ப்ல எல்லாரும் பதறிக்கிட்டு ஓடுறாங்க. உள்ளே கடுமையான புகைமூட்டமா இருக்கு. எல்லாரும் வெளியே ஓடிவர முயற்சி செய்றாங்களே ஒழிய உள்ளே நுழைஞ்சு தீயை அணைக்க யாரும் முயற்சி பண்ணலை. உள்ளே புகையைத் தவிர எதுவும் தெரியலே. பின்பக்கமா ஓடிப்போய் தரை துடைக்கிற மாப் கம்பியை வச்சு ஜன்னலை உடைச்சேன். மருத்துவமனையில வரிசையா தீயணைப்புக் கருவிகள் இருக்கு. நான் பழவேற்காடு அரசு மருத்துவமனையில வேலைசெஞ்சப்போ ‘ஹாஸ்பிடல் சேப்டி மேனேஜ்மென்ட் பயிற்சி’ எடுத்திருந்தேன். தீயணைப்புக் கருவியை எப்படிப் பயன்படுத்தனும்னு தெரியும். ஜன்னலுக்கு வெளியே நின்னு சிலிண்டரைத் திறந்து அடிச்சேன். கீழே எரிஞ்சுக்கிட்டிருந்த தீ ஓரளவுக்கு அணைஞ்சிருச்சு. ஆனா, மேலே தீவிரமா எரிஞ்சுக்கிட்டிருக்கு. குறிப்பா ஏ.சி அவுட்லெட்ல இருந்து எரிஞ்சு நெருப்புக் கொட்டுது. மின்கசிவாலதான் தீப்பிடிச்சுச்சு போல... கரன்ட்டை கட் பண்ண முடியாது. 3 குழந்தைங்க உள்ளே வெண்டிலேட்டர்ல இருக்கறதாச் சொல்றாங்க.

எனக்கு ஆஸ்துமா பிரச்னை வேற... புகை மூக்குக்குள்ள போய் சுவாசிக்கவே முடியலே. வேறு யாருக்கும் சிலிண்டரை ஆபரேட் பண்ணத் தெரியலே. வேற வழியில்ல... உள்ளே இறங்கிட்டேன். கார்பன் டை ஆக்சைடு சிலிண்டரை வச்சு மேலே அடிச்சேன்... 90 சதவிகிதம் தீ தணிஞ்சிருச்சு. பத்தடி உயரத்துக்கு மேல ஏசியில எரிஞ்ச தீயை அணைக்க முடியலே. சிலிண்டரோட ஓஸ் ரெண்டு அடிதான் இருக்கு. தோள்ல தூக்கி சிலிண்டரை வச்சுக்கிட்டு அடிச்சேன்... அண்ணாந்து அடிச்சதுல புகை நேரடியா மூஞ்சியில அடிச்சிருச்சு. முழுசா தீ அணைஞ்சபிறகு, தள்ளாடிக்கிட்டே வெளியே வந்து விழுந்துட்டேன்...” இன்னும் ஜெயக்குமாரின் முகத்தில் மிரட்சி இருக்கிறது.

அரை மணி நேரம் கடுமையாகப் போராடி தனி நபராகத் தீயை முழுமையாக அணைத்த ஜெயக்குமார், ஐந்து நாள்கள் ஐசியூவில் சிகிச்சையிலிருந்து மீண்டிருக்கிறார். இந்த வார்டுக்குக் கீழ்த்தளத்தில்தான் ஆக்சிஜன் ரூம் இருக்கிறது. கோவிட் காரணமாக 7 அடி அளவிலான 30 சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பி வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த பிளாக்கில் உள்ள எல்லாத் தளங்களிலும் ஆக்சிஜன் செல்லும் வகையில் காப்பர் குழாய் இணைப்புகளும் இருக்கின்றன. ஜெயக்குமார் சில நிமிடங்கள் தாமதித்திருந்தால் இழப்பு மிகப்பெரிதாக இருந்திருக்கும் என்கிறார்கள்.

ஜெயக்குமாருக்கு சொந்த ஊர் வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம். அப்பா நெசவாளி. அம்மா இல்லத்தரசி. வறுமை சூழ்ந்த குடும்பம். அக்கா, அரசு உதவித்தொகை பெற்று செவிலியர் படிப்பில் சேர, ஜெயக்குமார் பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் மேற்கொண்டு படிக்க வசதியில்லாமல் ஒரு மருந்தகத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ஜெயக்குமார் எடுத்த மதிப்பெண்கள் பற்றி அறிந்த மருந்தகத்தின் உரிமையாளர், தன் செலவில் டிப்ளமோ செவிலியர் படிப்பில் சேர்த்துவிட்டிருக்கிறார். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியிலும் படித்து முடித்தவருக்கு ஒப்பந்த அடிப்படையில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் பணி கிடைத்திருக்கிறது. 2016-ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டு கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.

தீ விபத்து நடந்த உடனேயே தகவல் கிடைத்து அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் எவருக்கும் ஜெயக்குமார்தான் தீயை அணைத்தார் என்பது தெரியவில்லை. ஐ.சி.யூவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனபிறகு வழக்கம்போல பணிக்குச் வந்து சென்றிருக்கிறார் ஜெயக்குமார். திடீரென்று, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடமிருந்து போன் வந்திருக்கிறது.

ஜெயக்குமார் என்னும் ரட்சகன்!

“அமைச்சர் கூப்பிட்டு, ‘நீங்க செஞ்சது மிகப்பெரிய செயல் தம்பி... சி.எம். உங்களைப் பாக்கணும்ங்கிறார். கண்டிப்பா குழந்தைகளையும் அழைச்சுக்கிட்டு நாளைக்குக் காலையில வந்திடுங்க’ன்னு சொன்னார். மனைவி, குழந்தைகளோட முதல்வர் வீட்டுக்குப் போயிட்டேன். முதல்ல உதய் சார் வந்தார்... ‘நீங்கதானா அது’ன்னு கேட்டுட்டு குழந்தைகளோட விளையாட ஆரம்பிச்சுட்டார். பிறகு அவரே உள்ளே கூட்டிட்டுப் போனார். சேகர் பாபு சார், துரைமுருகன் சார், அன்பில் மகேஷ் சார் எல்லாரும் இருந்தாங்க. முதல்வர் சார் என்னை துரைமுருகன் சார்கிட்ட அறிமுகம் செஞ்சார். ‘எந்த ஊருப்பா’ன்னு கேட்டார் துரைமுருகன். ‘குடியாத்தம்’ன்னு சொன்னேன்... ‘நம்ம ஊருப் பயடா... அப்படித்தான் இருப்பான்’னு அவர் சொல்ல, எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அரை மணி நேரத்துக்கு மேல பேசிக்கிட்டிருந்தாங்க. கிளம்பும்போது, ‘எதைப்பத்தியும் கவலைப்படாம பெரிய விஷயம் பண்ணியிருக்கீங்க’ன்னு பாராட்டி ஒரு லட்ச ரூபாய் பணமும், பெரிய கேடயமும் பரிசாகக் கொடுத்தார் முதல்வர். எல்லாமே கனவு மாதிரியிருந்துச்சு...” என்கிறார் ஜெயக்குமார்.

ஜெயக்குமார் என்னும் ரட்சகன்!

சிகிச்சை முடிந்து பணியில் இணைந்த ஜெயக்குமாரைத் தேடிவந்து சந்தித்திருக்கிறார் ஓர் இளம்தாய். கையில் ஒரு சிசு. “தம்பி... நீங்க இல்லேன்னா, என் குழந்தை என் கையில இருந்திருக்குமான்னு தெரியலே... உங்களை வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்” என்று சொல்லி, கையெடுத்து வணங்கியிருக்கிறார். “வாழ்க்கையில் அதுவும் மறக்கமுடியாத தருணம் சார்” என்கிறார் ஜெயக்குமார்.

Wednesday, June 2, 2021

வதந்தி வாயனுக தொல்லை தாங்க முடியல 

கொரோனாப் பேரிடர் காலத்தில் வாட்ஸப் வதந்தி வாயர்கள் கைக்கு வந்ததையெல்லாம் கண்டதையும் ஃபார்வர்டு செஞ்சு அரை வைத்தியனா அட்ராசிட்டி பண்ணின வதந்தி வாயர்களின் நாற்றமெடுத்த சில புருடாக்கள் 

காலை மாலை இரவு வேளைகளில் கருஞ்சீரகப்பொடியைச் சுடுநீரில் கரைத்துக் குடிப்போம். தேவைப்பட்டால் அதில் இரண்டு துளி எலுமிச்சை கலப்பது நல்லது.

சாப்பிட்டபிறகு மறக்காமல் நான்கைந்து மிளகை வாய்க்குள் கடித்து விழுங்குவோம். அதன் காரத்தன்மை நுரையீரலுக்குச் செல்லவிருக்கும் வைரஸை வெளியிலேயே தடுத்து நிறுத்தி விடுகிறது. இவ்வாறு மூன்று நாள்கள் தொடர்ந்து செய்தால் மூச்சுக்குழாயில் இருக்கும் கெட்ட செல்கள் அழிவதோடு உடலுக்குள் வைரஸ் கிருமிகள் பரவாமல் அரணாக இருக்கும் செயலை மிளகும் கருஞ்சீரகமும் செய்கிறது.

நாலு மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்து உண்ணலாம் என சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்?

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க இரண்டு கிராம்பு போதும் என்ற வீடியோ வதந்திதான் அது. மாஸ்க் அணியும்போதெல்லாம் இரண்டு கிராம்பை மென்று விழுங்கினால் போதுமாம். இதில் ஒவ்வொருமுறை ஆக்சிஜன் லெவல் கூடுவதை கிராம்பு சாப்பிடும் முன் - கிராம்பு சாப்பிட்ட பின் என பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வெச்சு டெமோ வேறு செய்து காட்டியிருக்கிறார் ஒரு டாக்டர். ஆனால், அவர் அலோபதி, ஹோமியோபதி, சித்தா டாக்டர் அல்ல. இன்ஜினீயரிங் படித்த டாக்டராம்

சமீபத்திய இன்னொரு வாட்ஸப் டிரெண்ட் `ஆவி பிடித்தல்.' டீத்தூள் விளம்பரத்தில் வரும் மருத்துவப் பொருள்களையோ, பிரியாணி மசாலாவில் சேர்க்கும் பொருள்களையோ குந்தாங்கூறாக குக்கரில் வேக வைத்து அதன் ஆவியை டியூப் வைத்து மூஞ்சியில் அடித்து ஆவி பிடிக்கிறார்கள். ஆவியைவிட முக்கியம் இந்தப் பாவிகள் அதை கேமராவில் படம் பிடிப்பது. ஆளாளுக்கு நொச்சி இலை, யூகலிப்டஸ் இலை, வேப்பிலை என இலையை மட்டும் மாற்றிமாற்றிக் கொதிக்க விடுகிறார்கள்.

சிலர், ‘ஆவிதானே பிடிக்கணும்?' என இட்லி சட்லியில் முகத்தைக் காட்டி வியர்க்க வியர்க்க வீடியோ எடுத்து எதையோ சாதிச்சதுபோல வாட்ஸப்பில் பரப்புகிறார்கள். 

அப்துல்கலாம் சொல்லாததை மட்டுமே ஷேர் செஞ்ச ஆட்கள் எல்லாம் இப்போது வாட்ஸப்பில் தப்பும் தவறுமான மருத்துவக்குறிப்புகளை யார் பெயரையாவது போட்டு ஷேர் செய்வதை டிரெண்ட் ஆக்கிவிட்டார்கள். 

லேட்டஸ்ட்டாய், சிவகங்கை டாக்டர் ஃபரூக் அப்துல்லா, கு.சிவராமன், டாக்டர் அஸ்வின், வீரபாபு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் சொன்னதாகப் பல போலி ஷேரிங்ஸ் சுற்றுகின்றன.

‘நீ விரும்புபவரைவிட உன்னை விரும்புபவரை நேசி! - அப்துல் கலாம்' என்ற மெசேஜையே ஷேர் செஞ்சுக்கங்கப்பா. மக்கள் உசிரோட விளையாடாதீங்கப்பா!'

அண்மையில் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டதும், மற்றொரு 90s கிட்ஸ்களின் நாயகனான சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்-க்கு டிஜிபி போஸ்ட்டிங் கொடுத்து சுத்தலில் விட்டார்கள். அதைக்கூட மன்னிக்கலாம். ஆனால், இது அதுக்கும் மேல... `சித்த மருத்துவர் வீரபாகுவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கிடப் பரிந்துரை செய்தது இந்திய அரசாங்கம். இதற்கான ஐநா சபை நடத்திய வாக்கெடுப்பில் 1850065 வாக்குகள் பெற்று முதல் பத்துப் பேரில் 8வது இடத்தில் இருக்கிறார். எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருக்கும் சாதனைத் தமிழனை உச்சத்தில் உட்காரவைக்க அழகான வாய்ப்பு. இந்த மெசேஜை அதிகம் பகிருங்கள். ஒவ்வொரு பகிர்தலும் அவருக்கான வாக்காக மாறி ஒரு தமிழன் நோபல் பரிசெனும் உச்சபட்ச அங்கீகாரத்தைப் பெறுவான்' என ஏக்கர்கணக்கில் புளுகியிருந்தார்கள். 

‘வெற்றிலையில் அமினோ பொளாடியம்(!)என்ற தனிமம் இருக்கு. அது நெஞ்சுச் சளியை நீக்க வல்லது!'

‘பாகற்காயில் இருக்கும் பொட்டாசியம் நைட்ரேட் நிமோனியா காய்ச்சல் உண்டாக்கும் வைரஸைக் கொல்லும் என உலக சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சி சொல்கிறது!'

‘லவங்கப்பட்டைப் புகையில் அம்மோனியம் பெலரோஃபோர்' என்ற ஆக்சிஜன் செறிவூட்டி இயற்கையாகவே இருக்கிறது!'

‘மெக்னீசியம் டார்டாய்ஸ்' என்ற நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே வேப்பிலையில் காணப்படுவதால் வேப்பிலையையும் மஞ்சளையும் முகக்கவசத்தோடு சேர்த்துக் கட்டிக்கொண்டால் கிருமிகள் உடலுக்குள் செல்வதைத் தடுத்துவிடுகிறது!'

ஆந்திராவில் இப்படிப் பரவிய வாட்ஸப் வதந்தியால் ஒரு பள்ளி ஆசிரியர் இறந்தே போயிருக்கிறார். எலுமிச்சைச்சாற்றை சில துளிகள் மூக்கினுள் செலுத்தினால் கொரோனா வைரஸ் அழியும் என்ற வதந்தியே அது!

வடக்கன்ஸ் இன்னும் வேற லெவல். மீரட்டில் கோபால் சர்மா என்ற பா.ஜ.க தலைவர் இஞ்சி, சுக்கு, அதிமதுரம், கசகசா, மாவிலை, மஞ்சள், வேப்பிலையை எரியவிட்டு அந்தப் புகையைத் தெருத்தெருவாக `ஸ்நேக் பாபு'வைப்போல பரப்பி கொரோனாவை விரட்டுகிறாராம்! 

சர்ச்சை புகழ் பிரக்யாசிங் தாக்கூர்லாம் ‘கோமியம் இஸ் மை சீக்ரெட் ஆஃப் எனர்ஜி!' என தம்ஸ்-அப் காட்ட, பல பா.ஜ.க எம்.எல்.ஏக்கள், ‘கோமுத்ர... ஆப்பிள் ஆரஞ்சு, மேங்கோ ஃப்ளேவரில் இருக்கு!' என போட்டோக்களைப் பரப்பினார்கள். 

‘நம்ம ஊரில் நாங்க மட்டும் சும்மாவா’ என கொரோனா தேவி சிலை பிரதிஷ்டை செய்து வழிபடவே ஆரம்பித்துவிட்டார்கள். அதையும் இங்கிருக்கும் சில வாட்ஸப் வதந்திவாயர்கள், ‘கொரோனா தேவிக்கு நேர்த்திக்கடன் செய்து கொண்டால் தடுப்பூசிக்கே அவசியமில்லை தோழா’ என சீரியஸாய் ஷேர் செய்திருக்கிறார்கள். 

இந்த வதந்திகளில் எதுவும் ஆய்வுக்கு உட்பட்டதல்ல
நிரூபிக்கப்பட்டதும் அல்ல 
இவற்றில் சில அவரவர் அலைபேசியில் உருவாக்கப்பட்டது 
சில சாணிமூளையுள்ள மாட்டுமூத்திரம் குடிக்கும்
கோமகன்கள்களால் உருவாக்கப்பட்டதே

வதந்திகளை நம்பி சுய மருத்துவம் செய்து கொண்ட 
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மட்டையான 
மட்டையாகப்போகும் அந்த மங்கி மூளையர்களை 
என்ன சொல்லி திட்ட??