Friday, September 26, 2014




ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தானாம். அந்த ராஜாவுக்கு ஒரு இளவரசன் இருந்தானாம். ஒரு நாள் ராஜாவும் இளவரசனும் குதிரை மேலே ஏறிக் காட்டுக்குப் போனார்களாம். ஓர் இடத்தில் குதிரைகளுக்கு முன்பு இரு காலடித் தடங்கள் தெரிந்தனவாம். அந்தக் காலடித் தடங்கள் இரு பெண்களின் காலடித் தடங்கள் என்று யூகித்த ராஜா சொன்னானாம்: ‘பெரிய தடம் அழகான அம்மாவுடையதாக இருக்கலாம். சின்ன தடம் அழகான அவளுடைய மகளுடையதாக இருக்கலாம். நாம் இருவரும் அவர்கள் இருவரையும் தேடிக் கண்டுபிடிப்போம். பெரிய தடத்துக்குச் சொந்தக்காரியை நான் கட்டிக்கொள்கிறேன். சின்ன தடத்துக்குச் சொந்தக்காரியை நீ கட்டிக்கொள்.’ இளவரசனுக்கும் இது சரி எனப் பட்டது. இரண்டு பேருமாகச் சபதம் எடுத்துக்கொண்டு தேடினார்கள், காலடிக்குச் சொந்தக்காரிகளை. சில மணி நேரத்திலேயே கண்டுபிடிக்கவும் செய்தார்கள். ஆனால், ஒரு வேடிக்கை. பெரிய தடங்களுக்குச் சொந்தக்காரி மகளாக இருந்தாளாம். சின்னத் தடங்களுக்குச் சொந்தக்காரி தாயாக இருந்தாளாம். அதற்காக சொன்ன வார்த்தைகளை மாற்றிக்கொள்ள முடியுமா? முடிவெடுத்தபடி மகளை அப்பனும் தாயை மகனும் கட்டிக்கொண்டார்களாம். இதைச் சொல்லிவிட்டு மருதண்ணா கேட்பார்: “இப்போ ஒரு கேள்வி. இந்த இரண்டு தம்பதிக்கும் பிள்ளைகள் பிறந்தால், அந்தப் பிள்ளைகள் ஒருத்தரையொருத்தர் என்ன உறவுமுறை சொல்லிக் கூப்பிட்டுக்கொள்ளும்?”