Monday, November 28, 2016

ஃபிடல் சந்தேகம் இல்லாமல் சந்திக்கும் மனிதர்!














கடந்த நவம்பர் 25-ம் தேதி இரவில். கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றினார். ஏதோ முக்கியமான செய்திதான் என்று  மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  ‘கியூபா புரட்சியின் காமென்டர் இன் சீஃப் மறைந்து விட்டார். தொடர்ந்து வெற்றியை நோக்கி செல்லுங்கள் 'என்ற ஃபிடலின் புகழ்பெற்ற பொன்மொழியுடன் ரவுல் காஸ்ட்ரோ அறிவித்த போது, கியூபா மக்கள் மட்டுமல்ல, அர்ஜென்டினாவில் இருந்த மரடோனாவும் குலுங்கி அழத் தொடங்கி விட்டார். சர்ச்சைகளுக்குப் பெயர் போன ஒரு புகழ்பெற்ற கால்பந்து வீரர், ஒரு நாட்டின் தலைவர் ஒருவர் மறைவுக்கு கண்ணீர் வீடுகிறார் என்றால், அதன் பின்னணி பலமானது.
கடந்த 1959-ம் ஆம் ஆண்டு சேகுவராவுடன் சேர்ந்து கியூபா புரட்சியில் ஈடுபட்டு, படிஸ்டாவை ஆட்சியில் இருந்து அகற்றிய ஃபிடல் கியூபா மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல மரடோனாவின் வாழ்விலும் மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.. மரடோனா இன்று உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு  ஃபிடலும் ஒரு காரணம். 
கடந்த 1986-ம் ஆண்டு அர்ஜென்டினா 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு மரடோனாதான்கேப்டன். இந்தத் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில்,  7 வீரர்களை கடந்து சென்று மரடோனாவால் அடிக்கப்பட்ட மாயகோல் உலக மக்களை கட்டிப் போட்டிருந்தது, ஃபிடலையும் அந்த கோல் மயக்கியிருந்தது. உலகக் கோப்பையை வென்ற கையோடு மரடோனாவைத் தங்கள் நட்டுக்கு வருமாறு ஃபிடல் அழைப்பு விடுத்தார். ஆனாலும் தொடர்ச்சியான ஆட்டங்களால் மரடோனாவால் உடனடியாக கியூபா செல்ல முடியவில்லை.  கடந்த 1987-ம் ஆண்டு மரடோனா முதன்முறையாக கியூபாவுக்கு சென்றார். கியூபா தலைவர் கால்பந்து கிங்கை கட்டியணைத்து வரவேற்று மகிழ்ந்தார். மரடோனா, பாப்புலரான அர்ஜென்டினா 10-ம் எண் ஜெர்சியில் தனது கையொப்பமிட்டு ஃபிடலுக்கு பரிசாக வழங்கினார். 
















அந்தக் காலக்கட்டத்தில் புகழ்பெற்று விளங்கிய ஒரு கால்பந்து வீரனை தனது விருந்தினராக வைத்து பராமரிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்ததாக கூறி ஃபிடல் மகிழ்ந்தார்.  அப்போது தொடங்கிய நட்பு ஃபிடல் மரணம் அடையும் வரைத் தொடர்ந்தது. மரடோனாவுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கியூபாவுக்கு சென்று ஃபிடலை சந்திப்பது வழக்கம். ஃபிடலுக்கு பிடித்த கூடைப்பந்து , கால்பந்து, உலக அரசியல் குறித்து இருவரும் விவாதிப்பார்கள். 
ஃபிடலை பொறுத்த வரை, எந்த நேரமும் விழிப்பாகத்தான் இருப்பார். கவனம் சிதறினால் மரணம் என்பது ஃபிடலுக்குத் தெரியும். கியூபாவை, தனது மாகாணங்களில் ஒன்றாக இணைத்து விட வேண்டுமென்பது அமெரிக்காவின் நோக்கம். அதற்கு பெருந்தடையாக இருந்தது ஃபிடல். எனவே சிஐஏ, ஃபிடலை கொல்வதற்கு 50 ஆண்டுகளாக முயன்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 634 முறை கொலை முயற்சியில் ஈடுபட்டும்  தோல்வியைத் தழுவியது.
ஃபிடலின் காதலி மரிடா உள்ளிட்டவர்களை வைத்து கூட அவரை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது. அதனால், ஃபிடல் எந்த நேரமும் விழிப்புடன்தான் இருப்பார். எந்த அமெரிக்க அதிபரிடம் கேட்டாலும் ''ஃபிடலை நாங்கள் கொல்லவில்லை என்றால், என்ன கடவுள் அவரை ஒருநாள் எடுத்துக்  கொள்வார்' என்பார்கள். உலகிலேயே அதிக முறை கொலை முயற்சிக்குள்ளான நபர் ஃபிடலாகத்தான் இருக்கும். அப்படி உயிருக்கு விலை நிர்ணயிக்கப்பட்ட ஃபிடல் எந்த சந்தேகமும் இல்லாமல் ஒரு வெளிநாட்டு விளையாட்டு வீரர் ஒருவரை சந்திக்கிறார் என்றால் அது மரடோனோவாகத்தான் இருக்கும். இருவருக்கும் அந்தளவுக்கு நெருக்கம். 
இந்த நெருக்கம் அதிகரிக்க இன்னொரு காரணமும் இருந்தது. கடந்த 1983-ம் ஆண்டு மரடோனா இத்தாலியின் நேபோலி அணிக்காக விளையாடி வந்தார். அப்போதிருந்தே அவருக்கு 'கோகைன்' என்ற போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் இருந்தது. இதனால், கடந்த 2004-ம் ஆண்டு வாக்கில் மரடோனாவின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவரது உடல் எடை 127 கிலோவாக இருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், பியூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை பிழைக்க வைக்க கடுமையாகப் போராடினர். உலகம் முழுக்கவுள்ள அவரது ரசிகர்கள் மரடோனா உயிர்பிழைக்க பிரார்த்தனை நடத்தினர். தமிழகத்தில் உள்ள பல கிறிஸ்தவ ஆலயங்களில் கூட மரடோனா உயிர் பிழைக்க சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. இறுதியில் மரடோனா உயிர் பிழைத்துக் கொண்டார். ஆனால், உயிர் பிழைத்தாலும் போதை மருந்து பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக் கொண்டால்தான் உயிர் வாழ முடியும் என மருத்துவர்கள் உறுதிபடக் கூறினர். 

















இதையடுத்து, கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மரடோனாவை உடனடியாக தனது நாட்டுக்கு அழைத்துக் கொண்டார். ஹவானாவில் உள்ள லாபெராடா கிளீனிக் போதைக்கு அடிமையானவர்களை மீட்பதில் புகழ்பெற்றது. அந்த மருத்துவமனையில் மரடோனாவை ஃபிடல் அனுமதித்து சிகிச்சை அளித்தார். பல மாதங்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மரடோனா, போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டார். அவரது உடல் எடை சாதாரண நிலைக்கு வந்தது. பின்னர் மீண்டும் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டு, கடந்த 2010-ம் ஆண்டு அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு பயிற்சியாளராகவும் பொறுப்பேற்றார். அந்த வகையில் மரடோனாவின் உயிரை மீட்டு, தந்தவர் ஃபிடல். உடல் நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகிய ஃபிடலை அடிக்கடி சென்று  மரடோனா சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 
மரடோனாவும் ஃபிடலை தனது சிறிய தந்தை எனக் குறிப்பிடுவது வழக்கம். மரடோனாவின் உடலில் இரு உருவங்கள்தான் பச்சைக் குத்தப்பட்டிருக்கும். அதில் ஒன்று சே... மற்றொன்று ஃபிடலுடையது

Sunday, November 27, 2016

ஃபிடல் காஸ்ட்ரோவின் கடைசி உரை !




கியூபா' இந்த தேசத்தின் அடையாளமாக இருந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. உலக கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், கியூபா புரட்சியின் தலைவருமான ஃபிடல் காஸ்ட்ரோ உடல்நலம் குன்றி இன்று உயிரிழந்தார். உலகில் நீண்ட நாள் சேவையாற்றிய அரசியல் தலைவர்களில் மிக முக்கியமானவரும், முதன்மையானவருமான ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு வயது 90.

இவர் கடைசியாக உரை நிகழ்த்தியது க்யூபா கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது மாநாட்டில். கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி அவர் நிகழ்த்திய உரை மிக முக்கியமான உரையாகப் பார்க்கப்படுகிறது. ஃபிடல் காஸ்ட்ரோ கடைசியாக பேசியதாவது.

நெருக்கடியான காலகட்டங்களின்போது எந்தவொரு பகுதி மக்களையும் அணிதிரட்டுவதும், அவர்களுக்குத் தலைமையேற்பதும் மிகக் கடுமையான காரியம். ஆனால் அப்படி மக்களை அணிதிரட்டாமல் மாற்றங்கள் சாத்தியமில்லை. நான் ஏன் ஒரு சோசலிஸ்ட் ஆனேன்?. இன்னும் சரியாக கேட்க வேண்டும் என்றால், நான் ஏன் கம்யூனிஸ்ட் ஆனேன்?
ஏழைகளைச் சுரண்டுவதை தங்களது உரிமையாக எடுத்துக் கொண்டவர்களாலும், உழைப்பு, திறமை மற்றும் ஒட்டுமொத்த மனித சக்தியால் உருவாக்கப்படும் அனைத்து பொருட்செல்வத்தையும் முற்றாக அபகரித்துக் கொள்வது தங்களது உரிமையாக எடுத்துக் கொண்டவர்களால் வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்ட் என்ற வார்த்தை மிகவும் கீழ்த்தரமானதாக சித்தரிக்கப்பட்டு வந்துள்ளது. கம்யூனிச சித்தாந்தம் என்பது சிறுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. வரலாறு நெடுகிலும் மனிதர்கள், இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்ற மனநிலையிலேயே இருந்து வந்திருக்கிறார்கள்.

நாம் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் நான் எளிமையாகச் சொல்கிறேன். நான் ஏதும் அறியாதவனும் அல்ல, எல்லாம் தெரிந்தவனும் அல்ல; நான் பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்த போது நானாகவே எனது சித்தாந்தத்தைப் பெற்றுவிடவில்லை. நான் சட்டம் மற்றும் அரசியல் அறிவியல் மாணவனாக இருந்தபோது தனியாக பாடம் நடத்தும் ஆசிரியரைப் பெற்றிருக்கவில்லை. பெரும் கடல் போன்ற பாடமான அரசியல் அறிவியலுக்கு ஆசிரியரைப் பெற்றிருக்கவில்லை.
நான் 20 வயது இளைஞனாக இருந்தபோது விளையாட்டிலும், மலையேறுவதிலும் ஆர்வத்துடன் இருந்தேன். அந்த சமயத்தில் மார்க்சியம் - லெனினியம் குறித்து கற்பிக்கவும், படிக்கவும் உதவி செய்வதற்கு எந்த ஆசிரியரும் இல்லை; அந்த சமயத்தில் நான் மார்க்சிய, லெனினியக் கோட்பாடுகளைப் பற்றி லேசாக அறிந்திருந்தேன். அவ்வளவு தான். அதற்கு மேல் அதையும் நான் தெரிந்திருக்கவில்லை.
சோவியத் ஒன்றியத்தின் மீது முழுமையான நம்பிக்கை மட்டுமே என்னை உற்சாகமூட்டியது. மாமேதை லெனினின் பணிகள், சோவியத் புரட்சியின் 70 ஆண்டுகள் கழித்து மீறப்பட்டன. ரஷ்யப்புரட்சியைப் போன்று இன்னொரு புரட்சி நடப்பதற்கு 70 ஆண்டுகாலம் காத்திருக்கத் தேவைப்படாது என்று கருதுகிறேன். காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் நடைபெற்ற மிகப்பிரம்மாண்டமான போராட்டத்தின் விளைவாக எழுந்த சோவியத் புரட்சியைப் போன்றதொரு பிரம்மாண்டமான சமூகப் புரட்சியை இந்த மனித குலம் அவசியம் பார்க்க வேண்டியுள்ளது.
இன்றைக்கு பூமியின் தலைக்கு மேலே மிகமிகப்பெரிய ஆபத்து தொங்கிக் கொண்டிருக்கிறது; நவீன ஆயுதங்களின் பேரழிவு சக்தியிடமிருந்து அந்த ஆபத்து வந்துகொண்டிருக்கிறது; அந்த ஆயுதங்கள் இந்த புவிக்கோளத்தின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக் காத்திருக்கின்றன; புவியின் மீது மனிதகுலம் வாழ்வதை சாத்தியமற்றதாக மாற்றிடக் காத்திருக்கின்றன.

டைனோசர்கள் மறைந்ததைப் போல, இன்றைய உயிரினங்களும் மறைந்துபோகும் ஆபத்து காத்திருக்கிறது. ஒன்று, மிக அறிவார்ந்த வாழ்க்கையின் புதிய வடிவங்கள் எதிர்காலத்தில் உருவாகலாம்; அல்லது சூரியனின் வெப்பம், மெல்ல மெல்ல அதிகரித்து, சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களையும் துணைக்கோள்களையும் அது உருக்கி அழித்துவிடலாம். இதை பெருவாரியான விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.அவர்களது கோட்பாடுகளில் சில உண்மையாக இருக்குமானால்  நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு அதனுடைய வீச்சு புரியாமல் கூட இருக்கலாம்  அதை உணர்ந்து, இன்னும் கற்றுக்கொண்டு எதார்த்தத்திற்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
புவிக்கோளத்தின் உயிரினங்கள், காலவெளியில் இன்னும் நீண்ட காலத்திற்கு உயிர்வாழுமானால், எதிர்காலச் சந்ததியினர், நாம் அறிந்துகொண்டு பங்காற்றியதைவிட இன்னும் அதிகமாக அறிந்துகொண்டு செயலாற்றுவார்கள்.ஆனால், அவர்கள் முதலில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றைத் தீர்த்தாக வேண்டும்.
உண்மையில் கோடிக்கணக்கான மனிதர்களுக்கு தேவைப்படுவதைவிட, மிக மிகக் குறைவான குடிநீரும், இயற்கை வளங்களுமே உள்ளது. இந்நிலையில் தவிர்க்க முடியாத வகையில் துன்ப துயரங்களுக்குள் சிக்கியிருக்கும் மக்களுக்கு - எப்படி உணவளிப்பது என்பதைப் பற்றி அவர்கள் யோசித்தாக வேண்டும். நீங்கள் ஆச்சரியப்படலாம், எனது இந்தப் பேச்சில் அரசியல் எங்கே போனது என்று யோசிக்கலாம். நான் இதையெல்லாம் சொல்வதற்கு வருத்தப்படுகிறேன்; ஆனால் இன்றைக்கு அரசியல் என்பது நான் கூறிய இந்த வார்த்தைகளில்தான் அடங்கியிருக்கிறது.
மனிதர்கள் மேலும் மேலும் இந்த உண்மைகளைப் பற்றி கவலைப்பட வேண்டும். இன்னும் ஆதாம் - ஏவாள் காலத்திய மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடக்கக்கூடாது. எந்தவிதமான தொழில்நுட்பமும் சென்றடையாத, பசியோடு காத்திருக்கும் கோடிக்கணக்கான ஆப்பிரிக்க மக்களுக்கு யார் உணவளிப்பது? மழை இல்லை, அணைகள் இல்லை, நிலத்தடி நீர் இல்லை; முற்றிலும் மணலால் மூடப்பட்ட அந்தப் பிரதேசத்தின் மக்களுக்கு யார் உணவு தருவது?
இந்தப் பிரச்சனைகள் அனைத்திலும் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி, அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த அடிப்படை அம்சங்களின் மீது இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை எனக் கருதுகிறேன். விரைவில் எனக்கு 90 வயது ஆகப்போகிறது. 90 வயது குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கருத்தும் இல்லை. அதில் பெரிதாக மகிழ்ச்சியடைவதற்கும் ஒன்றும் இல்லை. நானும் விரைவில் எல்லோரையும் போலவே மரிக்கப்போகிறேன். நாம் எல்லோருமே அந்த நிலையை எட்டுவோம்.
ஆனால் கியூபக் கம்யூனிஸ்ட்டுகளின் சிந்தனைகள் என்றென்றும் ஒரு புவிக்கோளத்தின் அழியாத சின்னமாக மிளிரும்; மனிதகுலத்தின் மாண்புகளைக் காப்பதற்காக அந்தச் சிந்தனைகள் செயலாற்றிக் கொண்டே இருக்கும்; மனித குலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் பொருட்களையும், கலாச்சாரச் செல்வங்களையும் அது உற்பத்தி செய்துகொண்டே இருக்கும்; அந்த மகத்தான பொன்னுலகத்தைப் பெறுவதற்காக நாம் ஓய்வின்றி போராடுவது அவசியம்.
லத்தீன் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள எனது சகோதரர்களே, கியூப மக்களும், கியூப மக்களின் சிந்தனைகளும் மகத்தான வெற்றி பெறுவது என்பது உறுதி. இத்தகையதொரு மாநாட்டு அரங்கில் நான் உரையாற்றுவது இதுவே கடைசியாக இருக்கலாம். தொடர்ந்து முன்னேறுவோம்; அந்தப் பாதையை மிகச்சரியானதாக இருக்குமாறு செப்பனிடுவோம்; அதற்காக நாம் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தின் மீது அதிகபட்ச விசுவாசத்துடனும் மிக உயர்ந்த ஒன்றுபட்ட சக்தியுடனும் முன்னேறுவோம். நம்முடைய இந்தப் பயணம் எவராலும் தடுக்க முடியாதது.
இவ்வாறு ஃபிடல் காஸ்ட்ரோ பேசியிருந்தார்.
அவர் அன்று சொன்னதைப்போல இதுவே அவரது இறுதி உரையாகவும் மாறிப்போனது தான் சோகம்

Tuesday, November 1, 2016

தேவதாசி என்னும் புனித விபச்சாரம்

 
பிறருக்கு மிகவும் கொடுமையாகத் திகழும் சில விஷயங்களைப் பற்றி பேசும்போதும், கருத்து தெரிவிக்கும்போதும் நமக்கு மிகச் சுலபமாக இருக்கிறது. நாம் அந்தக் கொடுமைகளை அனுபவிப்பதில்லை. மிஞ்சிப்போனால் எவரோ எழுதியதைப் படிக்கிறோம், அல்லது எவரோ யாரிடமோ சொல்லும்போது கேட்டுக்கொள்கிறோம். பெரும்பாலும் கருத்துத் தெரிவித்தலுக்கு முன்பு நடக்கும் இந்த 'தெரிந்துகொள்தல்' படலம் மிகுந்த ஆராய்ச்சிக்கெல்லாம் நம்மை உட்படுத்துவதில்லை, குளிர்சாதன அறையிலேயே நடந்து முடிகிறது. தேவதாசி முறையைப் பற்றிய சில கலை ஆர்வலர்களின் கருத்துக்கள் இதுப்பொன்றவைதான். 

16 வயதே நிரம்பிய ரூபா தேவதாசி முறையில் கர்நாடகாவின் எல்லம்மா கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர். அவர் சொல்கிறார், "11வயதில் நான் பருவத்திற்கு வரும் முன்பே என் கன்னித்தன்மையை அர்ப்பணித்துவிட்டேன். முதல் முறை மிகவும் வலிதருவதாக இருந்தது. என்னுடன் இரவைக் கழித்தவர் ரேசர் ப்ளேடுகளால் என் பிறப்புறுப்பில் கீறலகளைப் போட்டார். இப்போது எனக்கு பழகிவிட்டது". இது 'ஒரு' தேவதாசியின் கதை. இந்தியக் கோவில்களின் வரலாறு நெடுகே கோடிக்கணக்கான ரூபாக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் பிறப்புறுப்புகளும், உடல்களும் உயர்சாதி ஆண்களால் பொழுதுபோக்கு மைதானங்களைப் போல பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கொஞ்சம் ஆழமாய்த் தேடினால், தேவதாசிகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நெஞ்சை உறைய வைப்பதாக, கண்ணில் நீர் தழும்ப வைக்கும் கொடூரத்துடனேயே இருக்கின்றன.

இந்தியாவெங்கும் தேவதாசிகள் உருவானது புத்தமதம் அழிந்தபின்புதான் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. காமத்தை தன் மூலப்பொருளாகக் கொண்டு எழுதிய வாத்சாயனரோ, ஜடாகா கதைகளிலோ தேவதாசிகளைப் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால் அவற்றுக்குப் பின், அதாவது புத்தமதம் இந்தியாவில் இருந்து விரட்டப்பட்டு சைவ-வைணவம் தழைத்தோங்கத் துவங்கிய காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளிலும்,  குறிப்புகளிலும் தேவதாசிகளைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இன்னும் அதிர்ச்சியூட்டும் செய்தி, புத்த துறவிகளாக இருந்தப் பெண்களை தேவதாசி முறையில் விபச்சாரப் பெண்களாக அக்காலத்திய சைவ-வைணவ புரோகிதர்கள் வலுக்கட்டாயமாக ஆக்கினார்கள் என்ற தகவலும் உள்ளது. ஜைன மதத்துறவிகளையும், புத்தமதத் துறவிகளையும் (ஆண் துறவிகளை) கழுவிலேற்றும், கொதிக்கும் சுண்ணாம்பில் எறியும் காட்சிகள் புடைப்போவியங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் உள்ளதை இன்றும் காணலாம். இப்போது பெண் துறவிகள் என்ன ஆனார்கள் என்ற கேள்வியையும், மேலே சொல்லப்பட்டுள்ள புத்தமத வீழ்ச்சியின் காலத்தையும், தேவதாசி முறையின் துவக்கத்தையும் ஒன்றிணைத்தோமானால் நமக்கு பதில் எளிதில் கிடைத்துவிடுகிறது.இப்படித் தோன்றிய இந்த முறை பின் வழிவழியாக தொடர தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை பயன்படுத்திக்கொண்டனர்.

தேவதாசி எனப்படும் தேவரடியார் முறையை நிறுவனமயமாக்கிய பெறுமை நம் ஊர் மன்னன் ராஜராஜசோழனையே சேரும். தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட போது அதற்காக நாடெங்கிலும் இருந்து 400 சின்னப்பெண்கள் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டனர். பெரும்பாலும் ஏழைக் கூலிகள், விவசாயிகளின் குழந்தைகளான இவர்கள் வறுமையின் காரணமாக விற்கப்பட்டிருக்கிறார்கள். ராஜராஜசோழனின் காலம் பார்ப்பனர்களுக்கும், அரசகுடும்பங்களுக்கும் பொற்காலமாக விளங்கியதேயொழிய ஏழைகளுக்கும், சாதிய படிமத்தில் கீழே இருந்தவர்களுக்கும் அல்ல. பார்ப்பனர்களுக்கு கிராமம் கிராமமாக அள்ளிவழங்கிய சோழர்கள்தான் வண்ணார்களின் சலவைக்கல்லுக்கு வரி விதித்த கேலிக்கூத்தையும் செய்தார்கள். பெண்களை உடன்கட்டை ஏறச்செய்வது, வர்ணாசிரம தர்மத்தை முறைப்படி கடைபிடிப்பது, தாழ்த்தப்பட்டோர் பள்ளங்களிலும், உயர்சாதியினர் மேடான இடங்களிலும் வாழவேண்டும் என உத்தரவிட்டது,  பறைச்சேரி, கம்மாளச்சேரி, வண்ணாரச்சேரி என்று ஏழைகளைப் பிரித்து தனிச்சேரிகளில் வைத்தது என ராஜராஜசோழன் நிறுவனமயமாக்கிய அசிங்கங்கள் ஏராளம், ஏராளம். அவன் ஆரம்பித்து வைத்த அவளங்கள் தான் இன்னும் நம் நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.  இதைப் பற்றிப் பேசினால் தனிப்புத்தகமே வேண்டுமென்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

ஏழைக் குடும்பப் பெண்களை கடவுளின் பேரால் விபச்சாரிகளாக மாற்றியாகிவிட்டது. இப்போது இழப்பீடு வழங்கவேண்டுமல்லவா? அப்போதுதானே தொடர்ந்து தேவதாசியாக பெண்கள் வருவார்கள்! அதற்காக சோழர் காலத்தில் நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தரிசு நிலங்களை தேவதாசிகளுக்கும், விளைநிலங்களை பூசாரிகளுக்கும் ஒதுக்கிய பாரபட்சமும் நிகழ்ந்தேறியுள்ளது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளின் போது கோவில் நகைகளை அணிந்து இவர்கள் ஆடியிருக்கின்றனர். திருமணம் போன்ற சடங்குகளில் இவர்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கப்பட்டிருக்கிறது. பின் கால ஓட்டத்தில் உடலுக்கு காசு என்ற அளவில் இந்த மரியாதை சுருங்கியது தனிக்கதை. இப்படி வழிவழியாக கோவிலில் தேவரடியார்களாக இருக்கும் இப்பெண்களின் ஆண் குழந்தைகள் நாதஸ்வரம், மிருதங்கம், தவில் போன்ற இசைக்கருவிகளைக் கற்று கோவிலிலேயே பணி செய்திருக்கிறார்கள். விபச்சாரம் ஒழிந்துவிட்டாலும் இன்னமும் கோவில்களில் இசைப்பணி புரியும் சமூகத்தவர்கள் இவர்கள் வழி வந்தவர்களே.

தேவதாசி முறை குறித்த டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை ஒன்று, ஆளும் வர்க்கம் மற்றும் கடவுளை முழுதாய் கையில் வைத்திருந்த (வைத்திருக்கும்) பார்ப்பன வர்க்கத்திற்கும் நிலவிய காமத்தேவைக்கு வடிகாலாக தேவதாசி முறை பயன்பட்டதாகவும், அதன்காரணமாக தங்களிடமிருந்த கடவுள் மற்றும் மதத்தை பயன்படுத்தி தேவதாசி முறையை தோற்றுவித்தனர் என்றும் தெளிவாகத் தெரிவிக்கிறது. இதில் ஈடுபடுத்தப்பட்ட அத்துணை பெண் குழந்தைகளும் தாழ்த்தப்பட்ட சாதியை, சூத்திர வர்ணத்தைச் சேர்ந்தவர்கள். சூத்திர ஆண்கள் மனுதர்மப்படி தீண்டப்படக்கூடாதவர்கள், ஆனால் காமத்தில் ஏது தீண்டாமை? எல்லாவற்றுக்கும் தான் மனுதர்மத்தில் பரிகாரமும் இருக்கிறதே!!!

இப்படி கடவுளுக்கு நேர்ந்துவிடப்பட்ட தேவரடியார்கள் அங்கேயே பகல் நேரத்தில் ஆடல், பாடல்களைக் கற்று இரவு நேரங்களில் விபச்சாரம் செய்வதுமாக இருந்திருக்கிறார்கள். பணம் மிகுந்த சில செல்வந்தர்கள் ஒரே பெண்ணை வைத்திருந்த கதைகளும் உண்டு. இந்தத் தொழிலில் வரும் வரும்படியில் ஏழ்மையில் உழலும் தங்கள் குடும்பத்தைக் காக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள எல்லம்மா தெய்வத்திற்கு இன்னமும் பெண் குழந்தைகள் தேவதாசிகளாக நேர்ந்துவிடப்படுகிறார்கள். ஏழ்மையான சூழ்நிலையில் இப்படி ஆக்கப்படும் குழந்தைகள் தங்கள் உடலை விற்று குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள். ஏழு, எட்டு வயதிலேயே விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் இவர்கள் ஓரவிற்கு உடல் ஒத்துழைக்கும் வரை இத்தொழிலைச் செய்துவிட்டு 45வயதிற்கு மேல் கோவில் வாசலில் பிச்சை எடுக்கத் துவங்கிவிடுகிறார்கள். அரசால் சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்ட பழக்கமாக இருந்தாலும், கோவில் பூசாரிகள் இன்னமும் இச்சடங்குகளைச் செய்து பெண்களை தேவதாசிகளாக அனுமதிக்கிறார்கள்.

பெரும்பாலும் தேவதாசிகளாக தங்கள் குழந்தைகளை ஆக்கும் ஏழைப் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் விபச்சாரம்தான் செய்யப்போகிறார்கள் என்று தெரிந்தும், கடவுள்-மதம் எனக் காரணங்களைச் சொல்லி தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்கிறார்கள். பல நேரங்களில் பச்சிளங்குழந்தைகள் கூட நேர்ந்துவிடப்படுகின்றன. இந்த குழந்தைகளை அங்கு ஏற்கனவே இருக்கும் ஜோகினிக்கள் (தாசிகள்) வளர்த்து, ஏழெட்டு வயதிலேயே படுக்கையறைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

இந்திய தேவதாசி முறை குறித்து எழுதியிருக்கும் ஜோகன் ஷங்கர் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இம்முறைக்கான மூலகாரணம் அக்காலத்திய புரோகித சமூகம் (பார்ப்பன சாதி) ஏனைய சமூகங்களை தனக்குக் கீழாக எப்போதும் வைத்திருக்க வேண்டுமென்பதால் அவர்களின் சுயமரியாதையை பாதிக்கும் வண்ணம் உருவாக்கியதே தேவதாசி முறை ஆகும் என்று குறிப்பிடுகிறார்கள். சாதி அடுக்கை காப்பாற்றும் அதே நேரம், காமவேட்கையையும் தீர்த்துக்கொள்ளும் முறையாகவே இது இருந்திருக்கிறது. கடவுளின் மனைவிகள் என நேர்ந்துவிடப்பட்டப் பெண்களை உயர்சாதி மனிதர்கள் மாறி மாறி புணர்ந்ததை கலாச்சார வளம் பொருந்தியதாய் பீற்றிக்கொள்ளும் ஒரு சமூகம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது நகைமுரண்.
தேவதாசி முறைக்கு எதிராக பல சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், இன்னமும் இந்தியாவில் 2.5லட்சம் மேலான தேவதாசிகள் இருக்கிறார்கள் என இந்திய பெண்கள் ஆணைய அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். ஆந்திராவில் 16,625 தேவதாசிகளும், கர்நாடகவாவில் 22,941 தேவதாசிகளும், மஹராஷ்ட்ராவில் 2479 தேவதாசிகளும் உள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை
தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ராஜராஜசோழனால் முழுவீச்சில் நிறுவனமயமாக்கப்பட்ட தேவதாசி முறை இன்று தமிழ்நாட்டில் முற்றிலும் அழிக்கப்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று. இதில் பெரியார், முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையார் ஆகியோரது பணி மிகவும் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

இப்படி சாதியின் பேரால், கடவுளின் பேரால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பெண்களை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த ஒரு அசிங்கமான வழக்கத்தை பரதத்தில் பட்டம் பெற்ற சிலர் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். ஒருவேளை அந்த முறை எல்லாம் இன்னமும் வழக்கத்தில் இருந்திருந்தால் நாம் காஞ்சிகாமகோடி போன்றோரின் பிடியில் சிக்கியிருக்க வேண்டியதில்லையே என அவர்கள் உள்ளுக்குள் நினைத்தார்களோ என்னவோ!!

எல்லாவற்றுக்கும் மேலாக நம் ஊரில் மிகப்பெரிய கெட்டவார்த்தையாக கருதப்படுவனவற்றில் முக்கியமான ஒன்று "தேவடியா மகனே" என்பது. ஒருவேளை தேவரடியார்கள் நம் சமூகத்தில் மிகுந்த மரியாதையுடன், வளத்துடன் நடத்தப்பட்டிருந்தார்களேயானால் அவர்களின் பெயரில் எப்படி ஒரு கெட்டவார்த்தை உருவாகியிருக்க முடியும்? இன்று தேவதாசி முறையை போற்றிப்புகழக் கிளம்பியிருக்கும் மேட்டுக்குடி கூட்டத்தை நாம் "மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தேவடியா மகன்களே.. தேவடியா மகள்களே" எனக் குறிப்பிட்டால் பொறுத்துக் கொள்வார்களா?

விபச்சாரம் புனித விபச்சாரமாக சித்தரிக்கப்பட்டாலும் விபச்சாரம், விபச்சாரம் தானே! இல்லை அது புனிதம் தான் என்றால் அந்தத் தொழிலுக்கு வக்காலத்து வாங்கும் மேட்டுக்குடி கலை ஆர்வலர்கள் உடனடியாக அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று தங்களை தேவதாசிகளாக பதிவுசெய்துகொண்டு எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துவோம்.