Wednesday, December 18, 2013

சிவாஜி என்றொரு கலைஞன் 
 
 
ந்த ஆண்டு 'திருவருட்செல்வர்’ என்ற திரைப்படத்தில் 80 பிராயமான 'அப்பர்’ ஆக நடித்து, தனிச் சாதனை ஒன்றை நிகழ்த்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதே சமயத்தில் 'வியட்நாம் வீடு’ என்ற நாடகத்தில் 'பிரஸ்டீஜ் பத்மநாபன்’ ஆகத் தோன்றி, அந்தப் பாத்திரத்தை நினைத்த மாத்திரத்திலேயே கண்களில் நீர் தளும்பும்படியும் ஓர் அற்புத சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
 
இந்த இரு பாத்திரங்களிலும் ஓர் ஒற்றுமையைக் காணும் நடிகர் திலகம், அந்தப் பாத்திரங்களை ஒட்டிய தமது எண்ணங்களை இங்கே தருகிறார்!
''ஒரு நடிகர் நடிப்புத் துறையில் பண்படுவது என்பது, நேரிடையாக சமூகப் படங்களில் நடிக்க ஆரம்பித்தால், இயலாத காரியமாகப் போய்விடும் என்பது என்னுடைய கருத்து. இதிகாசப் படங்களிலிருந்து அவனுடைய நடிப்புத் துறை தொடங்கினால்தான், நாளாக நாளாக அவன் நடிப்புப் பண்பட்டு, மெருகடையும். பக்திப் படங்களில் நடிக்கும்போது, நடிப்புக்கான மிக உயர்ந்த கல்விச்சாலை ஒன்றில் இருப்பதுபோன்ற உணர்வே எனக்கு ஏற்படுகிறது. அந்த நினைப்பில், 'திருவருட்செல்வர்’ அப்பராக நான் நடித்ததை ஒரு பெறற்கரிய பேறாகக் கருதுகின்றேன்.
 
அப்பராக நான் நடித்திருப்பதைப் பார்த்தவர்கள், நம் காலத்தில் நடமாடும் தெய்வமாக விளங்கும் காஞ்சிப் பெரியவர் அவர்களையே என்னுடைய நடிப்பு நினைவூட்டுவதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இது முழுக்க முழுக்க உண்மையே. அப்பராக நடிக்க வேண்டும் என்ற அழைப்பு வந்தவுடனேயே, என் மனத்தில் பளிச்சிட்டவர் அந்த மகான்தான்.
காஞ்சிப் பெரியவர் அவர்களை நான் சந்தித்ததைப் பற்றி நினைத்தால், இப்போதுகூட என் உடல் புல்லரிக்கிறது.
 
எனக்கு, தஞ்சாவூரை அடுத்த சூரக்கோட்டையில் ஒரு பண்ணை இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிப் பெரியவர் எதேச்சையாக அந்தப் பண்ணைக்கு விஜயம் செய்திருக்கிறார். அங்கே சில மணி நேரம் அவர் தங்கியிருக்கிறார். ஏராளமான குடும்பப் படங்கள் அங்கே இருப்பதைக் கண்ட அந்த மகான், அங்கே நிறையப் பேர் வசிப்பதாக எண்ணிவிட்டார்போலும். உடனே, அருகில் இருக்கும் சத்திரத்துக்குச் சென்று தங்கியிருக்கிறார்.
 
 
பிறகு, நான் பண்ணைக்குச் சென்றபோது, அவர் அங்கு வந்த செய்தியை அறிந்தேன். பெரியவரை நேரில் பார்க்க வேண்டும், அந்தக் கனிந்த முகத்தவரோடு மனம்திறந்து பேச வேண்டும் என்ற வேகம் எனக்குள் ஏற்பட்டது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளுடன் ஒன்றிவிட்ட அந்தச் சந்திப்பு, கபாலீஸ்வரர் கல்யாண மண்டபத்தில் நடந்தது. அப்போது அங்குதான் பெரியவர் தங்கியிருந்தார்.
 
கல்யாண மண்டபத்தை நான் அடைந்தபோது இருள் சூழ்ந்திருந்தது. என்றுமே இருந்திராத ஒரு புத்துணர்ச்சியோடு, படபடக்கும் நெஞ்சுடன் பெரியவர் இருந்த அறையில் நுழைந்தேன். கீழே விழுந்து, உடல் பூமியில் படும்படி வணங்கினேன். மின்சார விளக்குகளை அணைக்கும்படி சொன்னார் பெரியவர். அருகில் இருந்த குத்துவிளக்கு மட்டும் மங்கிய ஒளியைப் பரப்பிக்கொண்டிருந்தது. அந்த நிழலாடிய ஒளியில், பளிச்சிட்டன அவர் கண்கள். அழகிய குறுந்தாடிக்கு இடையில் மென்முறுவலுடன், நல்ல கனிந்த குரலில் அன்பொழுகப் பெரியவர் பேசலானார். என் கண்கள் அவரை விட்டு அகல மறுத்தன. காதுகள், அவர் பேச்சுக்கு அடிமையாக, எனது நா சிலவற்றுக்கு அடக்கமாகப் பதில் சொல்லிற்று. என் உள்ளத்தில் அவருடைய அந்த இணையற்ற உருவம் என்றும் அழியாதபடி பதிவாகிக்கொண்டிருந்தது. 10 நிமிடங்கள் அந்தத் தெய்வ சந்நிதியில் இருந்தேன்.
 
இந்தச் சந்திப்பின் உச்சகட்டமாகப் பெரியவரிடம் விடைபெறும்போது, அவர் ஆசீர்வாதமாகச் சொன்ன வாய்மொழியைக் கேட்டு நான் கண்ணீர் உகுந்தேன். 'நீங்க நன்னா இருக்கணும்னு ஆசீர்வாதம் பண்றதுக்கு உங்க தாய்-தந்தையர் பல்லாண்டு வாழப் பகவானைப் பிரார்த்திக்கிறேன்’ என்று சொன்னார் பெரியவர்.
 
தாய்-தந்தையை முன்னிலைப்படுத்தி அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு மெய்சிலிர்க்காமல் இருக்குமா?
 
அன்று நடந்த அந்தச் சந்திப்பினால் பெரியவரின் பாவங்கள், என் மனத்தில் நீங்காத இடம் பெற்றுவிட்டன. 'அப்பர்’ வேடத்தில் நான் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தபோது, என் மனத்தில் படிந்த அந்தப் பாவங்கள் தானாகவே என் நடிப்பில் ஆட்சி செய்தன.
 
ல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மகானைக் கற்பனையில் கண்டு நடிப்பது மிகவும் சிரமமானது. நிகழ்காலத்தில் நடமாடுகின்ற ஒரு மகானைப் போல அப்பரைச் சித்திரிப்பதனால்தான், மக்களிடையே அப்பரைச் உணரச் செய்வதில் இன்னும் வெற்றி கிடைக்கும் என்று எண்ணினேன். மொட்டைத் தலையுடன் நெற்றியில் உத்திராட்ச மாலையை அணிந்து நடித்திருந்தால், பக்தியால் நெஞ்சுருகிய அப்பரை என்னால் அப்படியே கொண்டுவந்து நிறுத்தியிருக்க முடியாது என்பது என் எண்ணம். பெரியவர், சில சமயம் காட்சி தரும் நரைத்த குறுந்தாடியுடன் அப்பர் இருந்தால்தான், 80 வயதுக்கான முதிர்ந்த பருவத்தைத் தெளிவாகக் காட்ட முடியும் என்று நினைத்தேன் நான்.
 
காஞ்சிப் பெரியவர் அவர்களை மனத்தில் எண்ணிக்கொண்டேதான் மேக்கப் நடந்தது. பிளாஸ்டிக் மேக்கப் அது.         16 நாட்களுக்கு அதைப் போட்டுப் போட்டு எடுக்கும்போது ஒரு யுகம் கழிவதுபோல் இருந்தது எனக்கு. இந்த மேக்கப் போட மூன்று மணி நேரம் பிடித்தது. இன்னும் எனக்குக் கன்னத்தில் வலி இருக்கிறது.
 
அப்பராக நான் நடித்ததில், எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஒன்று உண்டு.      80 வயதான அப்பரும், ஒன்பது வயதான சம்பந்தரும் சேர்ந்து திருக்கோயிலின் கதவினைத் திறக்கும் காட்சி அது. ஞானசம்பந்தரின் ஒரு பாட்டுக்குக் கதவு மூடிக்கொண்டுவிட்டதே என்று உணர்ச்சிப் பெருக்கெடுக்கச் சொல்லுவார் அப்பர். எனக்கு அப்போது உண்மையாகவே உணர்ச்சி வந்துவிட்டது. ஆனால், என் உணர்ச்சியை அந்தக் குரலில் பூரணமாகக் காட்ட முடியவில்லை. ஏனென்றால், அந்தக் குரல் பிற்பாடு 'டப்பிங்’ செய்யப்பட்டது. அது 'அவுட்டோர்’ படப்பிடிப்பு. கடலின் இரைச்சலில் என் குரலைச் சரியாகக் கொடுக்க முடியவில்லை என்று, தனியாக 'டப்’ செய்தார்கள்.
 
ப்பர், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரியவர். ஆனால் வியட்நாம் வீட்டில் வரும் 'பிரிஸ்டீஜ்’ பத்மநாபன், நிகழ்காலத்து - 'மாடர்ன் பெரியவர்’. இவ்வாறு ஒரு சிறிய அளவு ஒற்றுமையை இந்த இரு பாத்திரங்களிலும் நான் காண்கிறேன். இந்த நாடகம் பிரமாத வெற்றி பெற்றதென்றால் அதில் என்னுடைய உழைப்பு பாதி. ஆனால், பெருமை எல்லாம் கதாசிரியர் சுந்தரத்தைச் சேரும். அவர் என்னை அப்படி நடிக்க வைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
 
'வியட்நாம் வீடு’ கதையை நாடகமாக ஆக்க முடிவு செய்தவுடன்,  சுந்தரத்துடன் நான் தஞ்சாவூருக்குப் போனேன். மூன்று நாட்கள் நாடகத்தின் வசனத்தைப் படித்தார் சுந்தரம். என் வசனம் மட்டும் 125 பக்கங்கள் இருந்தன. இரண்டு நாட்களில் என் வசனங்கள் எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டன. இதில் ஒன்றும் அதிசயம் இல்லை. என் மனத்துக்குப் பிடித்துவிட்டதென்றால், வசனம் எனக்கு உடனே மனப்பாடம் ஆகிவிடும்.
 
பிராமண பாஷை வருகிறது என்றவுடன் நான் அதை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டேன். இதுவரையில் பிராமண பாஷையை நாடகத்தில் கிண்டலுக்கும் கேலிக்குமாக - 'காமெடிப் பகுதிக்கே’ - பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், நான் அந்தப் பிராமண பாஷையைக்கொண்டு, உணர்ச்சிமயமாக நடிக்கவேண்டியதாக இருந்தது. ஆகவே, அதில் பூரண வெற்றி பெறுவதை ஒரு சங்கற்பமாகக் கொண்டேன்.
 
வெற்றி பெறத்தான் செய்தேன் என்பதை நாடகம் நடக்கும்போது மெதுவாகவும் உரக்கவும் என் காதுகளில் விழுந்த விம்மல் ஒலிகள் நன்கு நிரூபித்துவிட்டன. சொந்த வாழ்க்கையில் நடந்த  உணர்ச்சிகளைக் கொட்டத்தக்க சிறிய சம்பவத்தின் சாயல் ஒன்றை நாடக மேடையில் பார்க்கும்போது, பார்ப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த அந்தச் சம்பவங்களை எண்ணிப் பார்த்து, அழுதேவிடுகிறார்கள். பத்மநாபன், உயர்ந்த நிலையிலிருந்து இறங்குகின்ற நிலையைத் தங்கள் வாழ்வோடு ஒப்பிட்டு அழுதவர்கள் பலர். அவர் தன் தாயைப் பற்றிக் கூறும்போது, தங்கள் தாயை நினைத்துக் கண்ணீர் விட்டவர்கள் பலர்!
 
அப்பர் பாத்திரத்திலும், பிரஸ்டீஜ் பத்மநாபன் பாத்திரத்திலும் நடித்ததை என் நடிப்புத் துறையின் மைல் கற்களாகவே எண்ணிக்கொள்கிறேன். மறைந்த திரு.ஏ.எஸ்.பி. அய்யர் அவர்கள் என் நாடகம் ஒன்றுக்குத் தலைமை வகித்தபோது சொன்னது என் நினைவுக்கு வருகிறது. 'சிவாஜி கணேசனுக்கு நடிப்பதற்குத் 'திராணி’ இருக்கிறது. நடிக்கிறார்... பார்ப்பதற்கு வந்திருக்கும் உங்களுக்கு அவர் நடிப்பின் தன்மையைப் பூரணமாக உணர்ந்து ரசிக்கின்ற 'திராணி’ வேண்டும்’ என்றார் அவர்.
 
நல்ல நடிப்பைப் போற்றுகிற மனப்பான்மை குறைகிறதோ என்ற பயம் எனக்கு உண்டு. 'கப்பலோட்டிய தமிழன்’ படம் நல்ல முறையில் வெற்றி பெறாதது இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
 
அப்பரையும், பிரஸ்டீஜ் பத்மநாபனையும் பார்த்து உருகுகிறார்கள் என்றால், அந்தப் பயத்துக்கு அவசியம் இல்லை என்று நினைக்கவும் தோன்றுகிறது.
 
எத்தனையோ பாத்திரங்களில் நடிக்கலாம். 'நாம் என்று நிற்க வேண்டும்’ என்று சொல்வார்களே, அதைப் போல - நான் ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்ட பாடத்தை முழுமையாகக் காட்ட இந்த இரு பாத்திரங்களிலும் நான் செவ்வனே நடித்திருந்தால், அதுவே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.''
 

Friday, November 29, 2013

மீன்கள் ஜாக்கிரதை!
நன்றி - ஆனந்த விகடன் 
 
 
'மீன் குழம்பு’ என்று வாசித்தாலே நாக்கில் எச்சில் ஊறும் நம்மவர்களுக்கு! ஆட்டுக்கறி, கோழிக்கறியைக் காட்டிலும் அசைவ உணவு வகைகளில் மீனுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அசைவ உணவு வகைகளில் சத்து மிகுந்ததும் மீன்தான். எல்லாவற்றையும் நச்சுப்படுத்தி லாபம் பார்க்கும் நவீனகால வியாபார உலகம், மீன்களை மட்டும் விட்டுவைக்குமா? இன்று நாம் உண்ணும் மீன்கள் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை? அவை எத்தகைய சூழலில், எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன? ஞாயிற்றுக்கிழமை மதியங்களை சுவைமிக்கதாக மாற்றும் மீன் வாசனையின் இன்னொரு பக்கத்தை இங்கே அலசலாம்.
மீன் உணவை, இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று, உள்நாட்டு மீன்கள். இன்னொன்று, கடல் மீன்கள். உள்நாட்டு மீன்களைப் பொறுத்தவரை ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் தானாக வளர்பவை ஒரு வகை. குளம் வெட்டி பண்ணை அமைத்து, தொழில் முறையில் வளர்க்கப்படும் மீன்கள் இன்னொரு வகை. அதிகரித்துவரும் மீன் தேவையின் கணிசமான அளவை உள்நாட்டு மீன்கள் பூர்த்தி செய்துவரும் நிலையில், இவற்றின் நேர்-எதிர் அம்சங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
 
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் குளத்து மீன் என்றால், அது ஊர்ப் பொதுக் குளத்தில் வளர்வதுதான். ஆண்டுக்கு ஒருமுறை குளம் ஏலம் விடப்படும். மீன் பிடிக்கும் நாள் அன்று தண்டோரா போடப்பட்டு ஊரே மீன் வாங்கும்.
 
2000-ம் ஆண்டுகளில் இந்த நிலைமை மாறியது. ஊர்ப் பொதுக் குளத்தை ஏலம் எடுத்தவர்கள், அதில் கெமிக்கல் உரங்களையும், மாட்டுச்சாணம், பன்றிக் கழிவுகளையும் அள்ளிக்கொட்டி அதிவேகமாக மீன்களை வளர்த்து 'இருபோக’ வருமானம் பார்த்தார்கள். வரும்படி வருவது தெரிந்ததும் குளம் ஏலத்தில் போட்டி உருவானது. 5,000 ரூபாய்க்கு ஏலம் போன குளம், 20 ஆயிரம் ரூபாய்க்குப் போனது. கிராமத்துக் குளத்தின் ஏலம் இப்போது லட்சத்தைத் தொட்டுவிட்டது என்பதுடன், அது அரசியல் அதிகாரத்துடனும் இணைந்துவிட்டது.
ஒரு கிராமத்தில், அதிகபட்சம் நான்கைந்து குளங்கள்தான் இருக்கும். அதை நான்கு பேர்தான் ஏலம் எடுக்க முடியும். ஏலம் எடுத்து மீன் வளர்த்து, அந்த நான்கு பேர் மட்டுமே லாபம் பார்க்கும்போது மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்களா? 'அப்படியான லாபத்தைக் குவிக்க என்ன செய்யலாம்?’ என்று யோசித்தவர்கள், தங்களின் சொந்த விவசாய நிலங்களை மீன் குளங்களாக மாற்றினார்கள்.
 
'
போட்ட காசு கைக்கு வருமா?’ என்ற நிச்சயம் இல் லாத விவசாய நிலங்களைக் கட்டிகொண்டு அழுவதைவிட, உத்தரவாத லாபம் தரும் மீன் குளமே மேல் என்று எண்ணத் தொடங்கினர். இதன் விளைவாக... கிராமப்புறங்களில் எக்கச்சக்கக் குளங்கள் பெருகின. அரசும், உள்நாட்டு மீன் வளர்ப்பு என இதற்கு மானியம் கொடுத்து ஊக்குவிக்கிறது. மானியத்தை வாங்கி முறைப்படி மீன் வளர்த்து, விற்பனை செய்து லாபம் பார்த்தால் பிரச்னை எதுவும் இல்லை. மாறாக, கெமிக்கல் உரங்களை அள்ளிக்கொட்டி விவசாயம் செய்வதுபோலவே மீன்களையும் வளர்க்கத் தொடங்கிவிட்டனர். இயற்கையான முறையில் குளங்களில் வளரும் நாட்டு மீன்களைவிட, அதிவேகமாக வளரும் இந்த வளர்ப்பு மீன்கள் இவர்களின் லாபத்தை அதிகப்படுத்தின. இந்த பயங்கரத்தின் உண்மையை திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் நேரடியாக உணர்வார்கள்.
 
''ஊர்ப் பொதுக் குளங்களில் இயற்கையாகவே நாட்டு மீன் இனங்கள் இருக்கும். குளம் வற்றினாலும் அவற்றின் முட்டைகள் குளத்திலேயே படிந்திருக்கும். தண்ணீர் வந்ததும் மறுபடியும் குஞ்சுகள் உற்பத்தியாகும். இது, இதுவரை நடந்த இயற்கையான நடைமுறை.
இப்போது என்ன செய்கிறார்கள் என்றால், குளம் காய்ந்து இருக்கும்போது பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து இந்த நாட்டு மீன்களின் முட்டைகளை அழித்துவிடுகின்றனர். அவற்றை விட்டுவைத்தால், வளர்ப்பு மீன்களுக்குப் போடும் தீவனத்தைத் தின்றுவிடும்; அதனால் லாபம் குறைந்துவிடும் என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். மேலும், வளர்ப்பு மீன்களை ஒப்பிடும்போது, நாட்டு ரக மீன்கள் அளவில் சிறியவை. மெதுவாக வளரக்கூடியவை. இதனால் அவற்றை கருவிலேயே கொன்றுவிட்டு வளர்ப்பு மீன்களை உற்பத்தி செய்கிறார்கள்'' என்று அதிரவைக்கிறார் நக்கீரன். இவர் நன்னிலம் பகுதியில் வசிக்கும் சூழலியல் நிபுணர்.
 
தொடர்ந்து அவர் பேசும்போது, ''மீன்கள் வேகமாக வளர்வதற்கு செயற்கைத் தீவனங்களை குளங்களில் கொட்டுகிறார்கள். அதில் வழக்கமான மீன் தீவனங்களும் உண்டு. அத்துடன் பூச்சிக் கொல்லிகள், யூரியா, சூப்பர் பாஸ்பேட் உரங்கள், மாட்டுச்சாணம், பன்றிக் கழிவுகள் போன்றவற்றையும் கொட்டுகின்றனர். இது பொய் இல்லை. கிராமங்களுக்குச் சென்றால், இந்தக் காட்சியை நேரில் காணலாம். இந்த நச்சுகள் கரைந்து, அமில நிலையில் இருக்கும் தண்ணீரைக் குடித்தும் சுவாசித்தும்தான் அந்த மீன்கள் வளர்கின்றன. இப்படி உரம் போட்டு வளர்க்கப்படும் மீன்கள், கொஞ்சம்கூட அழுக்கு இல்லாமல், இயந்திரத்தில் வார்த்து எடுக்கப்பட்ட செதில்களைப் போல நேர்த்தியாக இருக்கும். பளபளப்புடன் மின்னும். இன்று உள்நாட்டுக்குள் கிடைக்கும் மீன்களில் பெரும்பாலானவை இத்தகையவையே!
 
முன்பெல்லாம் தஞ்சாவூர் மாவட்டக் குளங்களில் கிடைக்கும் கெண்டை மீன்கள், அவ்வளவு ருசியாக இருக்கும். குளத்து மீனுக்கே உரிய மண்வாசனையை அதில் உணர முடியும். ஆனால், இந்த வளர்ப்புக் கெண்டைகளை சாப்பிட்டால் யூரியா வாசனைதான் வருகிறது. எந்தச் சுவையும் இல்லாமல் சக்கையாக இருக்கிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்து மீன் சாப்பிடுபவர்கள் இந்தச் சுவை வேறுபாட்டைத் துல்லியமாக உணர்வர். மீன் உணவின் மூலம் கிடைக்கும் ஆரோக்கியமும் சத்துகளும் இந்த மீன்களில் கிடைக்காது. இவற்றால் உடல் ஆரோக்கியம் சீர்குலையும் ஆபத்தும் இருக்கிறது. ஆகவே, வளர்ப்பு மீன்கள் குறித்து உடனடியாக நாம் விழிப்பு உணர்வு அடைய வேண்டும். உள்நாட்டு மீன் வளர்ப்பை முறைப்படுத்த வேண்டும்!'' என்கிறார் நக்கீரன்.
 
 
இத்தகைய மீன் குளங்கள், பெரும்பாலும் வயல்வெளிகளுக்கு இடையிலேயே அமைந்துள்ளன. சுற்றிலும் நெல் விவசாயம். நடுவே மீன் விவசாயம். இதனால் நெற்பயிர்களுக்கு அடிக்கப்படும் ஆபத்தான பூச்சிக்கொல்லிகள் குளத்து நீரில் கலப்பது கண்கூடு. இத்தகைய மீன் பண்ணைகளில் அதிகம் வளர்க்கப்படுவது கெண்டை மீன்களே. அதிகம் எடை நிற்கும் என்பதாலும், விறுவிறுவென வளரும் என்பதாலும், மக்கள் அதிகம் இந்த மீனை விரும்புவதாலும் இந்த மீனைத் தேர்வு செய்கின்றனர்.
 
வேறு சில இடங்களில் விறால் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. கடல் மீனில் வஞ்சிரத்துக்கு உள்ள மதிப்பு, நாட்டு மீனில் விறாலுக்கு உண்டு. ஒரு கிலோ 400 ரூபாயைத் தாண்டி விலைபோகக்கூடிய மீன் இது. இவை வளர்க்கப்படும் குளங்களில் இவற்றுக்கு உணவாக 'ஜிலேப்பி’ மீனும் வளர்க்கப்படுவது வாடிக்கை. இப்போது விறால் மீனின் துரிதமான வளர்ச்சிக்காக, அழுகிய முட்டைகள், கோழி இறைச்சியின் கழிவுகள் ஆகியவையும் கொட்டுகின்றனர்.
 
இப்படி கண்டதையும் கொட்டி மீன்களை வளர்ப்பதால் அவை நச்சுத்தன்மையுடன் வளர்வது ஒரு பக்கம் இருக்க... நமது நாட்டு ரக மீன்கள் அடியோடு ஒழித்துக்கட்டப்படுகின்றன. சாணிக்கெண்டை, உழுவை, குறவை, அயிரை, கெளுத்தி, பனையேறிக் கெண்டை போன்ற நாட்டு மீன் வகைகள் இப்போது அழிவின் விளிம்புக்கு வந்துவிட்டன. தவளைகள், நத்தைகள், வயல் நண்டுகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு அரணாக இருந்த பல உயிரினங்களை, இந்த கெமிக்கல் கழிவுகள் வேகமாக அழித்துவருகின்றன. தவளையின் அழிவு, பல்லுயிர்ச் சூழலில் பெரும் விளைவுகளை உருவாக்கக்கூடியது என்று சூழலியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். மறுபுறம், வளர்ப்பு மீன்களுக்கு வைக்கப்படும் நச்சு உணவின் விளைவாக குளத்தின் தண்ணீர் பச்சை நிறமாக மாறிவிடுகிறது. அதில் குளித்தால் உடம்பில் கடும் அரிப்பு ஏற்பட்டு, தோல் நோய்கள் வருகின்றன.
 
கோயம்புத்தூரில் உள்ள 'சலீம் அலி சென்டர் ஃபார் ஆர்னித்தியாலஜி’ சார்பில் கேராளாவில் 150 இடங்களில் மீன் குளங்களில் சோதனை செய்யப்பட்டது. அனைத்துச் சோதனை முடிவுகளும், குளங்களில் பூச்சிக்கொல்லியின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்தின.
மதுரை மருத்துவர் சௌந்தரபாண்டியன் சொல்லும் இன்னொரு தகவல் அதிரவைக்கிறது. ''பிராய்லர் கோழிகளை குறைந்த நாட்களில் அதிக வளர்ச்சி அடையவைப்பது போல, மீன்களையும் வளரவைக்க 'குரோத் ஹார்மோன்’ உள்ள தீவனங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால், மீன்கள் அதிவேகமாக வளர்கின்றன. மேலும், பிராய்லர் கோழிக் கழிவுகளைத் தீவனமாக கொடுத்து வளர்க்கும்போது, அந்தக் கோழிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஹார்மோன்களின் எச்சமும் மீன்களில் கலக்கிறது. இத்தகைய 'குரோத் ஹார்மோன்’ உள்ள மீன்களை தொடர்ந்து சாப்பிடும்போது பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சி அளவுக்கு அதிகமாக மாற வாய்ப்பு உள்ளது. 15 வயது பெண்ணுக்கு இருக்க வேண்டிய உடல் வளர்ச்சி, 10 வயதுப் பெண்ணுக்கு வந்துவிடும். பெண் குழந்தைகள் குறைந்த வயதிலேயே பூப்பெய்துகின்றனர்'' என்கிறார் இவர்.
 
பிராய்லர் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசி போடுவதைப் போல சில இடங்களில் சினையுற்ற மீன்களுக்கும் ஹார்மோன் ஊசி போடுகிறார்கள். வயிற்றில் இருக்கும் மீன் குஞ்சுகள் ஆரோக்கியமாகப் பிறக்கவும், கொழுகொழுவென வளரவும் தூண்டும், அந்த ஹார்மோன் ஊசி.
'நாட்டு மீன்களில்தானே இவ்வளவு பிரச்னை... கடல் மீன்களாவது பரவாயில்லையா?’ என்று கேட்டால், ஒப்பீட்டளவில் பரவாயில்லை என்று சொல்லலாம். எனினும் கடல் மீன்களும் பலவகைகளில் பாதிக்கப்பட்ட பிறகுதான் மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன. குறிப்பாக, நீண்ட கடற்கரையைக் கொண்ட தமிழ்நாட்டில், கடலோரங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அணுமின் நிலையம் தொடங்கி, கெமிக்கல் தொழிற்சாலைகள் வரை பல உள்ளன. இவற்றின் கழிவுகள் கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
 
''கடலோரப் பகுதிகளில் வளரும் கானாங்கெளுத்தி, சுழுவை, வேலா போன்ற மீன் இனங்களில் 'டி.டி.டி, எண்டோசல்பான்’ போன்ற பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் இருப்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. 2007-2008ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உள்ள கடல்சார் ஆய்வு மையத்தின் மூலம் முத்துப்பேட்டை, பிச்சாவரம் பகுதிகளில் ஆய்வுசெய்யப்பட்டது. அதில் அலையாத்திக் காடுகளின் இலைகள், பவளப் பூண்டுகள், கடல் பாசிகள் போன்றவற்றில் மெர்க்குரி, காட்மியம் ஆகியவற்றின் நஞ்சுகள் இருப்பது கண்டறியப்பட்டது'' என்கிறார் சூழலியலாளர் நக்கீரன்.
நமது மீன்வளத்தின் உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்தையும் முறைப்படுத்த வேண்டிய காலக்கெடு நெருங்கிவிட்டது!
 

கரன்சி கடல்!
தமிழகம் முழுக்க 608 கடலோரக் கிராமங்களில், 8.11 லட்சம் மீனவர்கள் (2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) உள்ளனர். தமிழ்நாடு முழுவதும், 3.75 லட்சம் ஹெக்டேரில் உள்நாட்டு மீன் இனங்களும், உவர்நீர் மீன் இனங்களும் வளர்க்கப்படுகின்றன. உள்நாட்டு மீனவர்களின் மக்கள்தொகை 2.25 லட்சம். 2012-2013ம் ஆண்டுகளில் 1.85 லட்சம் மெட்ரிக் டன் உள்நாட்டு மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
 
 2010-2011ம் ஆண்டுக்கு மீன்வளத் துறைக்கு 193.32 கோடி ரூபாயும், 2013-2014ம் ஆண்டுக்கு 467.44 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.
 
ஆதாரம்: தமிழக அரசின் மீன்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2013-2014.

இயற்கை முறையிலும் மீன் வளர்க்கலாம்!
சாயன உரங்களையும், உடலுக்குக் கேடுகளை விளைவிக்கும் தீவனங்களையும் தவிர்த்துவிட்டு இயற்கையான முறையில் மீன்களை வளர்க்க முடியுமா? ''நிச்சயம் முடியும்'' என்கிறார் மயிலாடுதுறை, ஆனந்த குடியைச் சேர்ந்த பிச்சைப்பிள்ளை.
 
'
'நோய் தொற்றுக்காக பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு பதிலாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் பொடியைப் பயன்படுத்தினாலே நோய்கள் மீன்களை அண்டாது. மீன்களின் உணவான நுண்ணுயிர்கள் மற்றும் சிறிய தாவரங்களின் வளர்ச்சிக்குப் பசுஞ்சாணமே போதுமானது. மேலும், கடலைப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, வாழை இலைகள், வேலிகளில் மண்டிக்கிடக்கும் கல்யாண முருங்கை, அகத்தி, சூபாபுல், சிறியாநங்கை, துளசி மாதிரியான தாவரங்களும், அசோலா பாசியும் கொடுத்தாலே... மீன்கள் ஜம்மென்று வளர்வதுடன், ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்'' என்கிறார். இவரைப் போலவே இயற்கை முறையில் மீன் வளர்க்கும் ஏராளமானோர் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர்.
 

நாட்டு மீன்.. கடல் மீன்.. எது நல்லது?
பொதுவாக, 'நாட்டுவகை மீன்களைவிட கடல் மீன்களே சத்து நிறைந்தவை’ என்கிறார்கள் நிபுணர்கள். ''ஆழ்கடலில் குளிர்ந்த நீரில் வளரும் மீன்களில் 'ஒமேகா-3’ என்ற புரதச் சத்து அதிகமாக இருக்கும். கடலோரப் பகுதியில் வளரும் மீன்களில் இது சற்றுக் குறைவு. ஆற்று மீன்களிலும் வளர்ப்பு மீன்களிலும் இது மிகமிகக் குறைவாகவே இருக்கும். இதனால்தான் ஆழ்கடல் மீன்களைத் தொடர்ச்சியாக சாப்பிடுபவர்களுக்கு, மாரடைப்பு மாதிரியான ஆபத்துகள் வருவது இல்லை என ஆய்வுகள் சொல்கின்றன. வெளிநாட்டினர், கடல் மீன்களை மட்டும் இறக்குமதி செய்வதும் இதனால்தான். ஒரு மனிதன் தனக்குத் தேவையான புரதச் சத்துகளைப் பெறுவதற்கு ஆண்டுக்கு 15 கிலோ மீன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நமக்குக் கிடைப்பதோ ஆண்டுக்கு 7.5 கிலோ மட்டும்தான். நீண்ட கடற்பகுதியைக் கொண்ட இந்தியாவில் தாராளமான ஆழ்கடல் மீன்வளம் உள்ளது. ஆனால், அவை வெளிநாட்டு ஆலைக் கப்பல்கள் மூலமாகப் பிடிக்கப்பட்டு கடலில் இருந்தவாறே ஏற்றுமதி செய்யப்படுகின்றன'' என்கிறார் கடல்வள அரசியல் ஆய்வாளரும், பேராசிரியருமான வறீதையா கான்ஸ்தந்தின்.
 
ஆறாம் திணை
 
மருத்துவர் கு.சிவராமன்
- நன்றி ஆனந்த விகடன் 
 
 
 
துவரை வீட்டிலும் நடுத்தர, கையேந்தி பவன் வகை உணவகங்களிலும் மட்டுமே சாப்பிட்டுப் பழகிய நீங்கள், முதல்முறையாக நட்சத்திர உணவகத்தில் சாப்பிட்ட அனுபவம் ஞாபகம் இருக்கிறதா?
 
எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது! நான் வேலைபார்த்த மருத்துவமனையின் அதிபர், எங்களையெல்லாம் நட்சத்திர உணவக விருந்துக்கு அழைத்துச் சென்றார். மேஜை முன் சாப்பிட அமர்ந்ததும், மடியில் துண்டை விரித்தார்கள். உணவு மேஜையில் தட்டுக்கு அருகில் கத்தி ஸ்பூன், முள் கரண்டி... என, பளபள ஆயுதங்களைப் பார்த்ததுமே பதட்டமாகியது. அகோரப் பசியுடன் நாங்கள் காத்திருக்க, 15 நிமிடங்களில் சாப்பிடவேண்டிய உணவு வகைகளை ஆற அமர இரண்டு மணி நேரத்துக்குப் பரிமாறினார்கள். கரண்டியில் எடுக்கவேண்டியதை ஃபோர்க்கிலும், கையில் கிள்ளவேண்டியதை கத்தியிலும், ஃபோர்க்கில் குத்தவேண்டியதை கரண்டியிலுமாக தட்டுத்தடுமாறி எடுத்துச் சாப்பிட்டு முடித்தபோது, கடினமான கணக்குப் பரீட்சை எழுதி வந்த களைப்பு உண்டானது எனக்கு.
 
புது இடத்தில் சாப்பிடும்போது, உணவு மேஜையில் வயிற்றுக்கு வெளியே நடக்கும் பரபரப்பு இது. இதே ரீதியிலான பதற்றம்தான் புது வகை உணவை உண்ணும்போது வயிற்றுக்குள்ளும் அரங்கேறும்... அமிலங்களின் கொதிகொதிப்போடு!
அதிலும் புதுப்புது வெளிநாட்டுச் சந்தை உணவுகளைச் சாப்பிடும்போது நம் வயிற்றுக்குள் உள்ள பெப்சின் (உணவை ஜீரணிக்க உதவும் நொதி) பயத்துடனே பழக்கமில்லாதவற்றைச் சுவைக்கும் என்கிறது உணவு மரபணு அறிவியல். போதாக்குறைக்கு வயிற்றுக்குள்ளும், சிறுகுடலின் உள்ளும் உள்ள சமர்த்தான சில நுண்ணுயிரிகள், 'இது ஏதோ புதுசா இருக்கு. நான் அப்புறமா சாப்பிடுறேன்’ என பயத்தில் ஒதுங்குவதும் நடக்குமாம். எப்போதேனும் இப்படியான பதற்றம் அரங்கேறினால், உடம்பு நோகாது. அடிக்கடி நடக்கும்போது மருத்துவரை நாட வேண்டியிருக்கும்!
மேற்கு ஐரோப்பாவைப் பூர்விகமாகக் கொண்ட 'மேயோனைஸ்’ சாஸ் (Mayonnaise), இப்போது சிந்துபூந்துறைச் சித்தப்பா வீட்டு உணவு மேஜை வரை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறது. காய்ச்சல் கண்டபோது மட்டுமே பார்த்திருந்த ரொட்டியை, நீளவாக்கில் பிளந்து அதில் மேயோனைஸைத் தடவி சிலபல காய்கறிகளை நுழைத்து, கூடுதல் சீஸையும் பிதுக்கி, வாய் வலிக்கப் பிளந்து சாப்பிடும் கலாசாரம் இங்கே வேகமாகப் பரவுகிறது.
'பாலும் கீரையும் ஒன்றாகச் சேரக் கூடாது. பாலும் மீனும் ஒன்றாகச் சேரக் கூடாது. தயிருடன் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது. தயிருடன் இறைச்சி நஞ்சாகும்’ என சித்த மருத்துவம் சொல்லும் தமிழர் உணவு விதிகளை, குழந்தைகள் உலகத்தில் விதைக்காமலேயே கடந்து சென்றுகொண்டிருக்கிறோம்.
எண்ணெய், பால், முட்டை, வினிகர், பதப் பொருள்கள், சுவையூட்டிகள் முதலான பல ரசாயனங்களின் கலவையாக எமல்சிஃபை செய்யப்பட்ட பொருளே 'மேயோனைஸ்’. அதிகளவிலான டிரான்ஸ் ஃபேட்டும், ரத்த நாளங்களில் படியும் கெட்டக் கொழுப்பையும் தரும் அந்த சாஸ், நம் சீதோஷ்ண நிலைக்கும் ஜீரண சுழற்சிக்கும் எப்போதும் பழக்கமானது அல்ல. அதோடு, என்றோ எப்போதோ எங்கேயோ செத்த பிராய்லர் கோழி இறைச்சி, பெருங்கடல் மீன் இறைச்சி அல்லது உருளை மசியல்களை, அந்தப் பால் எண்ணெய் பொருளில் தோய்த்துச் சாப்பிடுவது தற்காலிகமாகச் சந்தோஷப்படுத்தினாலும்(?), நெடுங்காலத்தில் நிச்சயம் சங்கடப்படுத்தும். இந்த மேயோனைஸ், கட்டக் கடைசியாக சாப்பாட்டின் மேல் ஒரு கோட்டிங் தடவி ருசி சேர்க்க உதவும் ஒரு பொருள். ஆனால், நம்
பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் சமைத்த பின் கடைசியாகச் சேர்த்த விஷயமே வேறு. அப்படி நம் முன்னோர்கள் சேர்த்தது மணம் மட்டுமல்ல, மருத்துவத்தையும்தான்.
 
சாம்பாரோ, வத்தக்குழம்போ, வாழைக்காய் பொரியலோ அதில் போடும் பெருங்காயத் தூளே அந்த மருத்துவம். பெருங்காயம், ஒரு தாவர ரெசின். அதன் கந்தக மணத்தைப் பார்த்த அமெரிக்கர்கள் விஷயம் புரியாமல் முதலில் அதனை, 'பிசாசு மலம்’ (Devil dung) என்று முகம் சுளித்தனர். 1918-ல் உலகில் 20 மாதங்கள் கட்டுக்கடங்காமல் 100 மில்லியன் மக்கள் 'ஸ்பானிஷ் ஃப்ளூ’ நோயில் கொத்துக்கொத்தாக இறந்தபோது, பெருங்காயம் இந்தக் காய்ச்சலில் இருந்து காக்கும் எனக் கண்டறிந்து, கழுத்தில் பெருங்காயத் துண்டுகளைக் கட்டித் திரிந்தார்கள் அதே அமெரிக்கர்கள். அதற்குப் பிறகு அவர்கள் அதனை 'கடவுளின் உணவு’ (Food of Gods) என பெயர் மாற்றியது வரலாறு. பறவைக் காய்ச்சலுக்கு இன்றளவிலும் பயன்படும் Symadineக்கு இணையான, வைரஸ் எதிர்ப்பு ஆற்றல் பெருங்காயத்துக்கு உண்டு என எகிப்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். காய்ச்சலை மட்டுமல்ல, கேன்சரையும் தடுக்கும் தன்மைகொண்டது பெருங்காயம் என ஆய்வு முடிவுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கிரீன் டீ, சிவப்பு ஒயின், கறுப்பு சாக்லேட், மாதுளை ரசம் இவற்றில் எல்லாம் உள்ள ஆன்ட்டி-ஆக்சிடென்ட் பெருங்காயத்தில் நிறையவே உள்ளது.
 
ருஞ்சீரகமும் அப்படி ஓர் அற்புதமான மருந்து. சீரகம் பயன்படுத்தும் அளவுக்கு நம்மில் பலர் கருஞ்சீரகத்தைக் கண்டுகொள்வது இல்லை. இஸ்லாத்தின் தந்தை முகமது அவர்கள், மரணத்தைத் தவிர மற்ற அனைத்தையும் குணப்படுத்தும் என்று அன்றே குறிப்பிட்டது கருஞ்சீரகத்தைதான். அதன் எண்ணெய், கழுத்துப் புற்றுநோயைத் தடுப்பதையும், நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டுவதையும், கொஞ்சம் குணப்படுத்த கடினமான குடலின் Ulcerative colitis  நோயைக் கட்டுப்படுத்துவதிலும் கருஞ்சீரகப் பயன் கண்டறியப்பட்டு வருகிறது. இதிலுள்ள THYMOQUINONE, வேறு எந்த தாவரத்திலும் இதுவரை கண்டறியப்படவில்லை என்கிறது Healing Spices நூல்.
 
யாருடைய துரத்தலுக்கோ எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் நாம், இந்தத் துரித வாழ்வில் தொலைத்தவை, ஜன்னல் காற்று, சைக்கிள் பயணம், முற்றத்து மாக்கோலம், மாடக்குழி விளக்கு, தோட்டத்து கிரேந்திப்பூ, கிணற்றுக் குளியல், திருவிழாக் களிப்பு மட்டுமல்ல... நம் நலவாழ்வையும்தான். கொஞ்சம் திரும்பிப் பார்த்து, வயோதிகச் சுருக்கங்களில் இன்னும் ஒட்டியிருக்கும் மிச்சத்தையாவது, எடுத்து ஒட்டிக்கொள்வோமே!
-

Saturday, November 2, 2013

'நான் மலாலா’
 
'நான் மலாலா’ (I AM MALALA) என்ற தலைப்பில், இதுவரையிலான தனது உணர்ச்சிமிகு அனுபவங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டு இருக்கிறார், தலிபான்களால் சுடப்பட்ட பாகிஸ்தான் பெண் மலாலா. சண்டே டைம்ஸ் பத்திரிகையாளர் கிரிஸ்டினா லாம்ப் (Christina Lamb) உடன் இணைந்து இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. மலாலாவின் வார்த்தைகளின் வழியே அவரை வாசிப்போம்...
 
'நான் பிறந்தபோது, எங்கள் கிராமத்தில் அனைவரும் என் அம்மா மீது கருணை பொழிந்தார்கள். அப்பாவுக்கு யாரும் வாழ்த்து சொல்லவில்லை. மருத்துவமனைக்கும் மருத்துவச்சிக்கும் அப்பாவிடம் பணம் இல்லை. பக்கத்து வீட்டில் இருந்தவர்தான் பிரசவத்துக்கு உதவிசெய்தார். ஆண் குழந்தை பிறந்தால், பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். பெண் குழந்தைகளை திரைச்சீலைக்குப் பின்னால் மறைத்துவிடுவார்கள். சமைப்பதும், குழந்தைகளைப் பெற்றுக்கொடுப்பதும் மட்டுமே அவர்களுக்கு வேலை, இப்படியான ஒரு சூழலில்தான் நான் பிறந்தேன்.
 
ஆப்கானிஸ்தான் பெண் போராளியாகத் திகழ்ந்த 'மலாலாயின் பெயரை எனக்கு வைத்தார் என் அப்பா. மற்றவர்கள் கிண்டல் அடித்தது பற்றி அவர் கவலைப்படவில்லை. 'இந்தக் குழந்தை வித்தியாசமானவள் என்பது எனக்குத் தெரியும்’ என்றார். நான் படுத்திருந்த தொட்டிலில் பழங்களையும், இனிப்புகளையும், காசுகளையும் வைக்கும்படி தன் நண்பர்களிடம் சொன்னார். ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே இப்படிச் செய்யப்படுவது உண்டு.
 
 
ழாவது வயதில் நான்தான் வகுப்பில் முதலாவதாக வருவேன். பாட்மின்ட்டன், நாடகம், கிரிக்கெட், ஓவியம் என்று எல்லாவற்றிலும் கலந்துகொள்வேன். மால்கா-இ-நூர் என்ற பெயருடைய புது பெண், என் வகுப்பில் சேர்ந்தாள். 'பாகிஸ்தான் ராணுவத்தின் முதல் பெண் தலைமை அதிகாரியாக, தான் பதவி வகிக்க வேண்டும்’ என்பாள். வருடக் கடைசியில் வகுப்பில் அவள் முதலாவதாக வந்தபோது எனக்கு அதிர்ச்சி. வீட்டில் தொடர்ந்து அழுதேன். அம்மா என்னைச் சமாதானப்படுத்தினார்.
 
ங்கள் நாட்டிலேயே பெரிய நியூஸ் சேனல் என்று கருதப்பட்ட 'ஜியோ’, சிறுமி ஒருத்தியை பேட்டி எடுக்க விரும்பியது. பேட்டிக்கொடுக்க சின்னப் பெண்கள் பயந்தார்கள். அப்படியே தைரியசாலியான சிறுமிகள் பேட்டிக்கொடுக்க இருந்தாலும் பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள். என் தந்தை தைரியமானவர். எப்போதும் எனக்குத் துணை நிற்பவர். என் உரிமைகளுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் நான் பேசுகிறேன் என்றால் தவறு ஏதும் இல்லை என்று நினைப்பவர். அப்படியான சூழ்நிலைகளில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பதை அறிய கடவுள் விரும்புகிறார். 'வஞ்சகமும் பாசாங்கும் மறைய வேண்டும். அப்போது உண்மை நிலைத்து நிற்கும்’ என்று குரானில் வாசகம் உண்டு. 'ஒருவரால் எல்லாவற்றையும் அழிக்க முடியும் என்றால், ஒரு பெண் ஏன் அதை மாற்ற முடியாது?’ என்ற நினைப்பேன். அதுவே எனக்கு மனவலிமையைத் தந்தது. அதற்காக ஒவ்வோர் இரவும் இறைவனிடம் வேண்டிக் கொள்வேன்.
 
னது 13-வது வயதில் என் உடல் வளர்ச்சி நின்றுவிட்டது. திடீரென்று என் தோழிகள் அனைவரும் என்னைவிட உயரமாகிவிட்டார்கள். நான் உயரமாக வேண்டும் என்று அல்லாவிடம் ஒவ்வோர் இரவும் வேண்டிக்கொள்வேன். நிறைய இடங்களில் நான் உரை நிகழ்த்தி வருகிறேன். ஆனால், நான் குள்ளமாக இருப்பதால் அதிகாரத் தோரணையுடன் பேச முடிவது இல்லை. சில சமயங்களில் சாய்வு மேஜைக்கு மேல் பார்ப்பதுகூட எனக்குக் கடினமாக இருக்கும். ஹை-ஹீல் ஷூக்கள் எனக்குப் பிடிக்காது. வேறு வழியின்றி அவற்றைப் போட்டுக்கொள்ள வேண்டியதாயிற்று.’
 
புத்தகத்தின் முடிவு அத்தியாங்களில், குண்டடிபட்ட பிறகு நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்து சிறப்பு விமானத்தில் லண்டன் சென்று, அங்கு சிகிச்சையைத் தொடர்ந்தது பற்றியெல்லாம் நெகிழவைக்கும் வகையில் ஆவணப்படுத்தி இருக்கிறார் மலாலா.
 
'கண்ணாடியில் என்னைப் பார்த்து ஒரு விநாடி சிந்தித்தேன். நான் ஓரிரு அங்குலம் உயர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். ஆனால், வானளவு என்னை உயர்த்திவிட்டார் அவர். இனி என்னை அளந்து பார்த்துக்கொள்ள முடியாது. வளர்ந்தால் செய்வேன் என்று சத்தியம் செய்து கொடுத்ததுபோல், கூடுதலாக நூறு தடவை பிரேயர் செய்கிறேன்.
 
கடவுளை நான் நேசிக்கிறேன். அல்லாவுக்கு நன்றி. தினமும் அவருடன் உரையாடுகிறேன். மக்களைச் சென்றடைய இந்த உயரத்தை எனக்குக் கொடுத்த அவர், எனக்குப் பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தெருவிலும், கிராமத்திலும், நாட்டிலும் அமைதி நிலவ வேண்டும் - இது என் கனவு. உலகில் உள்ள ஒவ்வொரு சிறுவனுக்கும் சிறுமிக்கும் கல்வி அவசியம். பள்ளியில் தோழிகளுடன் உட்கார்ந்து பாடங்களைப் படிப்பது என்னுடைய உரிமை. மனிதகுலத்தில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியின் புன்னகையோடு இருப்பதைப் பார்க்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
நான் மலாலா. என் உலகம் மாறிவிட்டது; ஆனால் நான் மாறவில்லை!’
என்று நூலை நிறைவு செய்கிறார் இந்த அற்புதப் பெண்.
ட்ரோன் - புதிய தொழில்நுட்பம் 
நன்றி: ஆனந்த விகடன் 
 
தீபாவளி ஸ்பெஷலில் இந்தக் கட்டுரை வெளிவருவதால், டாபிக்கலாக ஆரம்பிக்கலாம்.
சரவெடி, தரைச் சக்கரம், கம்பி மத்தாப்பு... என பல பட்டாசுகளுக்கு மத்தியில், என் ஃபேவரைட் எப்போதுமே ராக்கெட்தான். எந்தத் திசையில் பயணிக்கும், எங்கே சென்றடையும் என்பதெல்லாம் தோராயமாக இருந்தாலும், பறக்கும் ஒரே பட்டாசு 'ராக்கெட்’ என்பதால் அதன் கவர்ச்சியும் மதிப்பும் அதிகம்.
 
தீபாவளி ராக்கெட் பட்டாசுக்கும், விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட் விமானங்களுக்கும் நடுவில் இருக்கும் தானியங்கி விமானங்களான 'ட்ரோன்’களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். Unmanned  Aerial Vehicles, சுருக்கமாக, UAV வகையறாவில் இடம்பெறும் ட்ரோன்களின் பயன்பாட்டை, விவசாயம், ஊடகம், பாதுகாப்பு என, பல துறைகளில் இப்போது பார்க்க முடிகிறது. என்றாலும், ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது முதலில் உளவு பார்ப்பதற்கே. விண்கோள்களில் இருந்து தெளிவாகத் தெரியாத இடங்களை ஆள் இல்லாமல் இயங்கும் ட்ரோன்களைத் தாழப் பறக்கவைத்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்கும் உளவு வேலையை ஈரான், லிபியா, வட கொரியா போன்ற தன்னுடன் நட்புடன் இல்லாத நாடுகளின் எல்லைகளுக்குள் பல ஆண்டுகள் செய்துவருகிறது அமெரிக்கா. அதைவிட முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியவை, சிவிலியன் வாழ்க்கையில் ட்ரோன்களைப் பயன்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள்.
 
 
ஆஸ்திரேலியாவில் zookal என்ற பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் நிறுவனம், மாணவர்கள் புத்தகங்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ள உதவும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இணையதளத்தையோ அல்லது அலை மென்பொருளையோ பயன்படுத்தி, நீங்கள் ஆர்டர் செய்யும் புத்தகத்தை ஏற்றிக்கொண்டு நீங்கள் குறிப்பிடும் இடத்தில் கொண்டுவந்து சேர்க்கிறது இவர்களது ட்ரோன். அதே அலை மென்பொருளைப் பயன்படுத்தி ட்ரோனின் பறந்துவரும் பாதையை நிகழ் நேரத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இப்போதைக்கு மார்க்கெட்டிங் ஸ்டன்ட் போல இருந்தாலும், ஆட்களைப் பயன்படுத்தி டெலிவரி செய்வதைவிட, ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் டெலிவரி செலவு மிகவும் குறைவாக இருப்பதால், இன்னும் பல ட்ரோன்களை வாங்கப்போவதாகச் சொல்கிறது மேற்படி நிறுவனத்தின் வலைப்பதிவு. இவர்கள் ட்ரோன்களைப் பயன்படுத்துவதைப் பற்றிய வீடியோவைப் பார்க்க, இந்த உரலிக்கு செல்லுங்கள் www.vimeo.com/76606906
 
பெரும் நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, ட்ரோன் உபயோகம் ஒரு வரப்பிரசாதம். பயிர்களுக்கு மேல் ட்ரோனைப் பறக்கவிட்டு அது எடுக்கும் வீடியோவைப் பார்த்து, பூச்சிகளின் பாதிப்பு போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம். ட்ரோன்களின் தயாரிப்பு விலை மிகக் குறைவாக இருப்பதைச் சொல்லியாக வேண்டும். 500 டாலர்களுக்குள் நல்லதொரு ட்ரோனைத் தயாரிக்க முடிகிறது. உருவாக்குவதில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், ட்ரோன்களை நீங்களே தயாரித்துக்கொள்ள உதவும் வலைத்தளங்கள் இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய தளம் http://diydrones.com/

  
உடனே 'ட்ரோன் ஒன்றை வாங்கியோ, தயாரித்தோ மெரினா பீச்சில் பறக்கவிடப் போகிறேன்’ என்று படபடக்காதீர்கள். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ட்ரோன்களை பொது இடங்களில் பறக்கவிடுவது சட்டவிரோதம். ஆஸ்திரேலியா, ஐரோப்பாவில் சில நாடுகளில் ட்ரோன் உபயோகம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் தீயணைப்பு சேவை, அவசர மருத்துவச் சிகிச்சை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் ட்ரோன்களைப் பயன்படுத்திக்கொள்ள உரிமம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 'பொதுமக்கள் ட்ரோன்களைப் பயன்படுத்துவதைப் பற்றிய சட்டத்தை, 2015-ல்தான் கொண்டுவருவோம்’ என அறிவித்து இருக்கிறது அமெரிக்க அரசு. இந்திய அரசின் கொள்கை பற்றி முடிந்த வரை தேடிப் பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தத் துறையில் விவரம் தெரிந்தவர்கள் @antonprakash-க்கு ட்வீட் செய்து தகவல் பகிர்ந்துகொண்டால், நான் வடிவமைக்கும் ட்ரோனில் உங்கள் பெயரை எழுதி மரியாதை செலுத்துவேன்.
 
அணிந்துகொள்ளும் தொழில்நுட்ப (Wearable Computing) சாதனங்களும், 'பொருட்களின் இணையம்’ (Internet of Things) எனப்படும் பிரிவின் கீழ்வரும் சாதனங்களும் தொடர்ந்து சந்தைக்கு வந்தபடியே உள்ளன. நாம் தினமும் பயன்படுத்தும் பல்வேறு சாதனங்களை இணையத்தில் இணைத்துவைத்திருப்பதில் மிகப் பெரிய ரிஸ்க் ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி அடுத்த வாரத்தில் விரிவாகப் பார்க்கலாம்...

Thursday, October 24, 2013

இந்தியாவின் மார்ஸ் மிஷன்!
நன்றி : விகடன் 
    
 சூரியனைச் சுற்றிவரும் மூன்றாவது கிரகம், பூமி. நான்காவது கிரகம், செவ்வாய். ஆங்கிலத்தில் 'மார்ஸ்’ என்றால் போர்க் கடவுள் என்று பொருள். யுத்தம், கோபம், ரத்தம் இவற்றின் குறியீடாக விளங்கும் செந்நிறத்தில் தகதகக்கும் கிரகத்துக்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் புராணங்கள் அங்காரகன், செம்மீன், செவ்வாய் என்று பெயர் சூட்டிவிட்டன!
 
இந்த செவ்வாய் கிரகத்தை நோக்கிய ஒரு சாதனைப் பயணத்துக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில், இந்தியாவின் விண்கலம் ஒன்று புறப்படத் தயார் நிலையில் காத்திருக்கிறது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ESA (ஃப்ரான்ஸைத் தலைமையாகக்கொண்ட 13 ஐரோப்பிய நாடுகள்), ஜப்பான், சீனா... ஆகிய நாடுகள் மட்டுமே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பியுள்ளன. இவற்றில் ஜப்பானும் சீனாவும் தோல்வி அடைந்துவிட்டன. எனவே, இந்தியா செவ்வாய்க்கு அனுப்பும் விண்கலத் திட்டம் வெற்றி பெற்றுவிட்டால், வெற்றிபெற்ற நான்காவது நாடு என்ற பெருமையும், ஆசியாவின் முதல் வெற்றி நாடு என்ற பெருமையும் கிடைக்கும்!
 
பூமிக்கும் செவ்வாய்க்கும் நிறைய ஒற்றுமைகள்...
 
பூமி ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் பிடிக்கும்; செவ்வாய்க்கு 24 மணி நேரமும் 37 நிமிடங்களும் பிடிக்கும். பூமி, தன் சுற்றுப்பாதையில் ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் ஆகும்; செவ்வாய்க்கு 687 நாட்கள் தேவைப்படும்.  
 
 
பிரம்மாண்ட ஆழமும் அகலமும்கொண்ட பள்ளத்தாக்குகள், எரிமலைகள் பூமியில்
இருப்பதைப் போல செவ்வாயிலும் உண்டு. செவ்வாயில் உள்ள மிகப் பெரிய பள்ளத்தாக்கின் ஆழம் 7 கி.மீ., அகலம் 4,000 கி.மீ.; பூமியின் மிகப் பெரிய பள்ளத்தாக்கின் ஆழம் 1.8 கி.மீ., நீளம் 400 கி.மீ. (அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கன்யான்). செவ்வாயில் இருக்கும் மிகப் பெரிய எரிமலையின் உயரம் 26 கி.மீ., இதன் விட்டம் 602 கி.மீ; பூமியில் உள்ள மிகப் பெரிய எரிமலையின் உயரம் 10.1 கி.மீ., விட்டம் 121 கி.மீ.
 
செவ்வாய் கிரகத்தின் பரப்பில் கரியமில வாயு 97 சதவிகிதம், பிராண வாயு 0.13 சதவிகிதம் என்ற அளவில் உள்ளன. பூமியில் நைட்ரஜன் 77 சதவிகிதமும் பிராண வாயு 21 சதவிகிதமும் உள்ளன. 2008-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து 'சந்திராயன்-1’ அனுப்பப்பட்டதற்கு பிறகு, அடுத்த சாதனைப் பயணத்துக்கு 'இஸ்ரோ’ தயார். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட தூரம் 3,850 லட்சம் கி.மீ. இந்தத் தூரத்தை இந்திய விண்கலம் கடந்து செவ்வாய் சுற்றுப்பாதையை அடைய சுமார் 10 மாதங்கள் பிடிக்கும். அதாவது, இந்த அக்டோபர் 28-ம் தேதி மாலை 4.27 மணிக்கு விண்கலம் சரியாகப் புறப்படுமானால், 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி அதிகாலை 4.27 மணிக்கு செவ்வாய்க்குப் போய்ச் சேருமாம். எவ்வளவு வியப்பூட்டும், துல்லியமானத் தகவல்!
 
 
எம்.ஓ.எம். (’மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்’) என்ற இந்தத் திட்டத்தின் பட்ஜெட், ரூ.450 கோடி. 1,350 கிலோ எடைகொண்ட இந்த விண்கலம் ஒரே வருடத்தில் தயாரிக்கப்பட்டது.
பெங்களூரூவில் உள்ள 'இஸ்ரோ’ மையத்தின் திட்ட இயக்குநரான சுப்பையா
 அருணன், ஒரு தமிழர். ''இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சம் இது. செவ்வாய் கிரகத்தில், உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று ஆராய்வதும், அந்தக் கிரகத்தின் சுற்றுச்சூழலை ஆராய்வதுமே நமது நோக்கங்கள். இவற்றுக்கு மேலாக, கிரகம்விட்டு கிரகம் பயணிக்க இந்தியா எடுக்கும் முயற்சிக்கு இந்தப் பயணம்தான் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.  
 
அக்டோபர் 2-ம் தேதி அதிகாலை, பெங்களூரூ 'இஸ்ரோ’விலிருந்து பலத்த பாதுகாப்புடன், விண்கலம் சாலை வழியாக தன் முதல் பயணத்தைத் தொடங்கியது. 345 கி.மீ. தொலைவில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்துக்கு, மணிக்கு சுமார் 10 கி.மீ. வேகத்தில் அது பயணித்துப்  பத்திரமாக வந்து சேர்ந்தது. சாலை வழியாக 10 கி.மீ. வேகத்தில் பயணம் செய்த விண்கலம், விண்வெளியில் மணிக்கு 25,000 கி.மீ. வேகத்தில் பறக்க இருக்கிறது!
 
நாம் அனுப்பும் விண்கலம் செவ்வாயில் தரை இறங்கப்போவது இல்லை. செவ்வாயின் சுற்றுப்பாதையில் சுற்றி வரப்போகிறது. இது ஒரு தொழில்நுட்ப சோதனைத் திட்டமே தவிர, அறிவியல் ஆராய்ச்சித் திட்டம் அல்ல. கிரகம்விட்டு கிரகம் பயணிக்கும் சாத்தியக்கூறு நம்மிடம் இருப்பதை உறுதிசெய்யும் திட்டம். பல்வேறு விதமான நோக்கங்களுடன் ஐந்து முக்கியக் கருவிகளை இந்த விண்கலத்தில் பொருத்தியுள்ளோம்.
 
பூமியில் இருக்கும் நமக்கு, ஒரு சந்திரன்தான் உபகிரகமாக உள்ளது. ஆனால், செவ்வாய்க்கு இரண்டு உபகிரகங்கள். இந்தியா அனுப்பவுள்ள விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவி மூலம், செவ்வாயிலிருந்து தரையையும் உப கிரகங்களையும் கண்காணித்து, உயிரினம் வாழத் தேவையான மீத்தேன் வாயு, தாதுக்கள், நீர் போன்றவை இருக்கின்றனவா என்று விண்கலத்தில் இணைத்து அனுப்பப்படும் கருவிகள் சொல்லும்.
 
விண்கலத்தின் எடை 1,350 கிலோ என்றாலும், அதனுள் 852 கிலோ எரிபொருள் அடங்கியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து புறப்படவுள்ள விண்கலத்தை ஏற்றிச் செல்ல பி.எஸ்.எல்.வி. சி 25 என்ற ராக்கெட், நான்கு எரிபொருள் நிலைகளுடன் தயார். இது இந்தியாவின் சில்வர் ஜூப்ளி ராக்கெட்!'' என்று பெருமிதமாகச் சொல்கிறார் சுப்பையா அருணன்.
 
செவ்வாய் கிரகத்தை ஆராய, அட்லஸ் மற்றும் டைட்டன்ஸ் எனும் மிகப் பெரிய, ஏராள பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட, ராக்கெட்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது. அவற்றை ஒப்பிடுகையில் குறைந்த செலவிலான இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டைப் பயன்படுத்துவது இந்திய விண்வெளி ஆய்வுச் சிறப்புகளில் ஒன்று. பூமியின் ஈர்ப்பு சக்தி முடிவுபெறும் இடத்தை அடைய 9,18,347 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். 'இஸ்ரோ’ செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் விண்கலத்தில் மிகக் குறைவான எரிபொருளையே பயன்படுத்தி இந்தச் சாதனையைச் செய்ய இருக்கிறது.
 
'
'ஒருகாலத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
காலக்கிரமத்தில் சுற்றுச்சூழல் மாசுபட்டு, அங்கு உயிரினம் வாழமுடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது. பூமியிலும் நாம் பல தவறுகளைச் செய்து வருகிறோம். தூய்மையான நீர், கழிவு நீரால் அசுத்தமாகி வருகிறது. சுவாசிக்கும் பிராண வாயு, நச்சுப்புகையால் மாசுபடுகிறது. ஓஸோன் மண்டலம் பழுதுபட்டு வருகிறது. சுனாமி, புயல் போன்றவை பூமியில் அடிக்கடி நிகழ ஆரம்பித்துள்ளன. இப்படி பூமியை நாம் பாழ்படுத்திவருகிறோம். ஓர் அனுமானத்தில் நாம் மேற்கொள்ளும் செவ்வாய் கிரக ஆராய்ச்சி, பூமிக் கிரகத்தை அழிவில் இருந்து பாதுகாக்க வழிகாட்டலாம்!'' என்கிறார் விஞ்ஞானி சுப்பையா அருணன்.  
 
'அக்டோபர் 28’ என்று நாள் குறித்திருப்பதில் ஒரு நுட்பம் இருக்கிறது. இந்த நாளில் இந்தியாவைவிட்டு விண்கலம் புறப்பட்டால்தான் அது பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு, செவ்வாயின் ஈர்ப்பு விசையில் செலுத்தப்பட்டு, செவ்வாயின் சுற்றுப்பாதையைச் சரியாக அடைய முடியுமாம். சூரியன், பூமி, செவ்வாய் மூன்றும் 44 டிகிரியில் ஒன்றுசேருதல் (மிகக் குறைந்த எரிபொருள் செலவில்) சாத்தியமாவது அக்டோபர் 28 முதல் நவம்பர் 15 வரைதானாம்.  இந்தக் காலத்தைத் தவறவிட்டால், ஜனவரி 2016 அல்லது மே 2018தான்
 
 
அடுத்தடுத்த சாய்ஸ்! ''நாம் நிச்சயம் சாதிப்போம்'' என்கிறார் அருணன் உற்சாகமாக.
தமிழன் சாதிப்பான். விகடனின் வாழ்த்துகள்!
 
யார் இந்த அருணன்?
செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தின் திட்ட இயக்குநர் சுப்பையா அருணன், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை ஒட்டிய கோதைச்சேரி கிராமத்தில் பிறந்தவர். மனைவி கீதா, பெங்களூரூவில் நேஷனல் பப்ளிக் பள்ளியில் ஆசிரியை. மகள் ஸ்ருதி அருணன், பெங்களூரூவில் எம்.பி.பி.எஸ்.  மாணவி. அருணனின் தாயார் மாணிக்கம், ராக்கெட் உளவு வழக்கில் சிக்கி, நிரபராதி என்று விடுதலைசெய்யப்பட்ட பிரபல இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் மூத்த சகோதரி. அருணனின் மனைவி கீதா, நம்பி நாராயணன் - மீனா தம்பதியரின் மகளே!
வாழ்க தோழர் 
- நன்றி விகடன் 
 
 
''யாரு... டேப்பு காதரைக் கேக்கிறீங்களா? மூச்சுவிடாமப் பாடித் திரிஞ்ச மனுஷனப்பா. இப்போ அதோ அந்தக் குச்சுக்குள்ள முடங்கிக்கிடக்குறாரு!'' என்று ஒரு குடிசையைக் காட்டுகிறார்கள் தஞ்சையின் உப்பிலி மானோஜிப்பட்டி ஏரியாவாசிகள்.
 
குனிந்து குடிசைக்குள் போன நம்மைக் கண்டதும் எழுந்திருக்க முயல்கிறார் காதர். முடியவில்லை. முதுமையின் வீச்சத்தை நிறைத்திருக்கும் அந்தக் குடிசைகூட அவருடையது அல்ல. இறுதிக் காலத்தை இரவலாகக் கழிக்கும் டேப் காதர், தமிழகத்தில் மிக அரிதாக மிஞ்சியிருக்கும் லாவணிக் கலைஞர். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே பாடத் தொடங்கி, ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும், பின்னர் மார்க்சிஸ்ட் கட்சிக்காகவும் தமிழகமெங்கிலும் தெருத் தெருவாக முழங்கி ஓய்ந்துபோன காதரை, இப்போது கட்சியும் கவனிக்கவில்லை; குடும்பத்தினரும் விலக்கிவிட்டார்கள்.
 
தனது 87-வது வயதில், செருப்பு தைக்கும் தொழிலாளி ராஜேந்திரன் - செல்வி தம்பதியரின் வயதான  குழந்தையாக இருக்கும் டேப் காதருக்கு பூர்வீகம் கும்பகோணம் அருகே மேலகாவிரி.
 
''வீட்ல எனக்கு வெச்ச பேரு, அப்துல் காதர். 'டேப்’புங்கிறது கை விரலால தாளம்போடும் ஒரு வாத்தியம். இஸ்லாமிய பக்கீர்கள் பயன்படுத்தி வந்த அதை, இப்போ என்னை மாதிரி லாவணிக் கலைஞர்கள் பயன்படுத்துறாங்க. அதனால 'டேப் காதர்’ ஆகிட்டேன் நான். என் அம்மா நெல் அவிச்சு அரிசி வியாபாரம் பார்த்தாங்க. அப்பாவுக்கு மாந்திரீகத் தொழில். மந்திரிச்சு கயிறு கட்ட நிறையப் பேர் வீட்டுக்கு வருவாங்க. நான் பள்ளிப் படிப்பை அஞ்சாப்போட நிறுத்திட்டேன். என் தாய்மாமன் ஷேக் தாவூத், நல்ல லாவணிப் பாடல் கலைஞர். அவர்கிட்ட இருந்துதான் லாவணிக் கலைஞர் ஆகும் ஆசை எனக்குத் தொத்திக்கிச்சு. பகல் முழுக்க வேலை பார்த்துட்டு, சாயங்காலத்துக்கு மேல லாவணிப் பாட்டு கத்துக்கப் போவேன்!'' என்று நிறுத்தி மூச்சு வாங்கிக்கொள்கிறார்.
 
 
லாவணிப் பாடல் என்பது, வயல் வேலை பார்ப்பவர்கள் பதிலுக்குப் பதிலாகப் பாடிக்கொள்ளும் எசப்பாட்டு வடிவம் கொண்டது. தஞ்சை மண்ணுக்கே உரிய பிரத்யேக சொத்தான இந்த லாவணிப் பாடல்களை, இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய கலைஞர்களே பாடுகிறார்கள்.
''மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு தயாரிக்கும் கம்பெனில நான் ஹெல்ப்பர் வேலைக்குப் போனப்போ, அங்கே தொழிலாளர் பிரச்னை வந்தது. அந்தச் சச்சரவுதான்,  தொழிற்சங்கவாதி டி.எஸ்.சோமரா விடம் என்னைக் கொண்டுபோய் சேர்த்தது. நான் பாடுவதையும், இயல்பா  பழகுவதையும் பார்த்த அவர், என்னை கம்யூனிஸ்ட் கட்சியில சேரச் சொன்னார்; சேர்ந்தேன்!  
 
நாடு சுதந்திரம் அடைய இருந்த நிலையில், தெலங்கனா உள்ளிட்ட சில இடங்களில் கட்சி, ஆயுதப் போராட்டம் நடத்தியது. அதனால கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை பண்ணிட்டாங்க. அந்த சமயம் நான் கிராமம் கிராமமாப் போய் ஐஸ் வியாபாரம் செஞ்சிட்டு இருந்தேன். அப்போ தலைமறைவா இருந்த தோழர்களுக்கு ஐஸ் பெட்டிக்குள்ள மறைச்சுவெச்சு செய்தியை எடுத்துட்டுப் போய் கொடுக்குறதுதான் என் வேலை. அது தெரிஞ்சதும் போலீஸ் என்னைத் தேடவும், நான் மும்பைக்குத் தப்பிச்சுப் போயிட்டேன். கட்சிக்குத் தடை நீங்கிய பிறகு, தஞ்சாவூருக்குத் திரும்பினேன்.
 
 
1952-ல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடந்தது. அப்போ கம்யூனிஸ்ட்களை பொதுமக்கள் கொஞ்சம் பயத்தோடதான் பார்ப்பாங்க. ஏன்னா, காங்கிரஸ்காரங்க சிவப்புக் கட்சிக்காரங்க மேல அந்தளவுக்கு பீதியை உருவாக்கிவெச்சிருந்தாங்க. அப்போ தேர்தல் பிரசாரத்துக்காக நான் தஞ்சாவூர் முழுக்க போய் பாடுவேன்...
 
'காங்கிரஸ் கட்சியிலே கொழுத்த பண முதலைகள்
கட்டாயம் தேர்தலில் நிப்பாங்க நிப்பாங்க...
இவங்கக் கருதி வந்துங்களிடம்
காசுக்கு ஓட்டு கேட்டால்
காரித் 'தூ’ என்று துப்புங்க... துப்புங்க’னு
 
பாடி பிரசாரம் செய்வேன். அது அப்போ பாட்டாளி மக்களிடம் நல்ல மாறுதலை ஏற்படுத்துச்சு!'' என்று அப்போதைய நினைவுகளில் மூழ்கி மௌனமாகிறார் டேப் காதர்.
 
ஒரு லாவணிப் பாடகராகக் கட்சிக்குள் வந்த டேப் காதர், தஞ்சை நகரச் செயலாளராகவும் மார்க்சிஸ்ட் கட்சியில் சில காலம் இருந்திருக்கிறார்.
 
''ரேஷன் அரிசி கடத்தல், வாய்க்கால் தகராறு, தீண்டாமைனு எல்லாப் பிரச்னையிலும் கட்சி தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுச்சு. களத்தில் நானும் நின்னேன். 1969-ல் சிவப்பு நாயக்கன் வாரி என்ற ஊரிலிருந்து ஜமீலானு ஒரு பொண்ணைப் பிடிச்சுட்டு வந்து காவல் நிலையத்தில் வெச்சு, 14 போலீஸ்காரங்க ரேப் பண்ணிட்டாங்க. அந்தப் பொண்ணு செத்துப்போச்சு. 'விஷம் குடித்து தற்கொலை’னு வழக்கு பதிஞ்சு ஜமீலாவைப் புதைக்கப் பார்த்தாங்க. நான் மக்களைத் திரட்டி ஊர்வலம் போனேன். அப்போ தமிழக முதல்வரா இருந்த கலைஞர், இந்த விவகாரம் தொடர்பா போலீஸ் கொடுத்த அறிக்கையை சட்டமன்றத்தில் வாசிச்சார். எங்களின் போராட்டம் காரணமா, மறு விசாரணைக்கு உத்தரவாகி அந்தக் குறிப்பிட்ட காவல் நிலையத்தின் மொத்த போலீஸாரும் சஸ்பெண்ட் ஆனாங்க. ஆனா, இப்படி அரசியல்ல நல்ல பேர் வாங்கினாலும், ஒரு வெத்துக் காகிதம் கணக்காதான் என்னை மதிச்சாங்க வீட்டு ஆளுங்க.
 
'கால் காசுக்குப் பெறாத கம்யூனிஸ்ட் உன் அப்பன். நீங்களும் அப்படி ஆகிடாதீங்கடா’னு சொல்லிச் சொல்லித்தான் என் அஞ்சு பிள்ளைங்களையும் வளர்த்தாங்க என் மனைவி. அதனால பிள்ளைங்களும் என்னை மதிக்கலை. ஒரு கட்டத்தில் அந்த அவமானம் பொறுக்காம, வீட்டைவிட்டு வெளியேறிட்டேன். அதுவும் 30 வருஷம் ஆகிப்போச்சு!'' சின்ன இடைவெளி கொடுத்து தொடர்கிறார்.
 
''மூணு வருஷத்துக்கு முன்னாடி வரை நான் பாடிட்டுதான் இருந்தேன். கடைசியா ம.க.இ.க. மேடையில் பாடினேன். இப்போ இடுப்புல ஒரு ஆபரேஷன் பண்ணிட்டதால, நடக்க முடியாமப்போச்சு. பெத்த புள்ளைங்க என்னை மதிக்கலைனோ, உசுரைக் கொடுத்த வளர்த்தக் கட்சி என்னை மறந்துருச்சுன்னோ புகார் சொல்லலை. ஒரு கம்யூனிஸ்ட்டா திருப்தியா, சந்தோஷமான ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கேன். அந்த மனநிறைவு போதும் எனக்கு. எந்திரிச்சு நடக்கவே முடியாத என்னை செல்வித£ன் ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கிறா. அவதான் என் மக!'' என்றபடி பாடத் தொடங்குகிறார் காதர்.
 
'உப்பக் கூடவா திருடுவாங்கனு
கடைக்கு வெளியே வெச்சது
அந்தக் காலம் ஓ அந்தக் காலம்...
இப்போ விக்கிற விலையில
வெளியில வெச்சா
வெச்ச இடம்தான் மிச்சம்
இந்தக் காலம் ஓ இந்தக் காலம்’
 
காதரின் பாடல் காற்றில் கலக்க, நிரம்பிக்கிடந்த காதரின் சிறுநீர் பையை சுத்தம் செய்ய எடுத்துப்போகிறார் செல்வி.

Thursday, October 17, 2013

யார் ஏழை?
நன்றி : ஆனந்த விகடன்
ரு குக்கிராமத்தின் மண் ரோட்டில் வயல்கள், எலுமிச் சைத் தோட்டங்களைத் தாண்டி இருக்கிறது ஒரு சிறு குடிசை. அதன் பின்புறத்தில் விவசாய வேலை பார்க்கும் ஒரு பெரிய வரைக் காட்டி, 'இவர்தான் இந்த நாட்டின் ஜனாதிபதிஎன்றால் எப்படி உணர்வீர்கள்?
'உலகின் ஏழை ஜனாதிபதிஎன்று அழைக்கப்படும், உருகுவே நாட்டு ஜனாதிபதி ஜோஸ் முஜிகாதான் இப்படி வாழ்பவர். இவருக்குச் சொந்தமாக இருப்பது பழைய வோல்ஸ்வோகன் கார் மட்டும்தான். தவிர, தன் மாதச் சம்பளத்தின் 90 சதவிகிதப் பணத்தை ஏழைகளுக்கும் சிறு தொழிலாளர்களுக்கும் கொடுத்து விடுகிறார்.
தன் ஐந்தாவது வயதிலேயே தந்தையை இழந்தவர், சிறு வயதில் வறுமையை விரட்ட சைக்கிளிங் கிளப்புகளில் சேர்ந்து, சைக்கிள் ஓட்டிப் பிழைப்பு நடத்தினார். 'உழைத்தால் மட்டுமே சோறுஎன்ற நிலைமையில் கொஞ்சம் கொஞ்ச மாகத் தேசிய அரசியலில் ஈடுபட்டார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் வறுமைக்கும் நாட்டை ஆட்சி செய்யும் ராணுவம்தான் காரணம் என்று, வீதிகளில் முழங்கியவர், அதை எதிர்க்கும் 'டுபாமராஸ்கெரில்லாப் படையில் இணைந்து, அரசுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டார். ஒரு தாக்குதலில் ராணுவம் இவரைச் சுட்டுப் பிடி
த்து, 14 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை தந்தது. 1985-ல் ஜோஸ் விடுதலையானபோது நாடு மக்களாட்சிக்கு மாறியது. மக்களாட்சி சமூகம் புது ரத்தம் பாய்ச்ச... மீண்டும் தீவிர அரசியலில் இயங்க ஆரம்பித்தார். கடந்த 2009-ம் ஆண்டு வரை பல ஆண்டுகள் செனட் உறுப்பினராகவும், விவசாயத் துறை, மீன்வளத் துறை அமைச்சராக வும் இருந்தார்.

ஜோஸின் எளிமை மக்களுக்குப் பிடித்துப்போக, அவரை ஜனாதிபதி ஆக்கினார்கள். அரசு அளித்த ஜனாதிபதி மாளிகையை உதறிவிட்டு, தன்னுடைய சிறிய குடிசையில் வாழ்கிறார். 'நான் ஒன்றும் ஏழை கிடையாது. அளவுக்கு மீறிய பணத்தை வைத்துக்கொண்டு. 'போதாது... போதாதுஎன அலைபவர்கள்தான் உண்மையான ஏழைகள்!''- இது ஜோஸின் ஸ்டேட்மென்ட்.