Wednesday, April 26, 2017

நகம் சொல்லும் அகம் 
நகத்தில் வெண்மையான அரை நிலவின் தோற்றம் தென்படுவது தைராய்டும் செரிமானமும் நலமாக இருப்பதன் அறிகுறி.
நகத்தில் இருண்ட வரி இருந்தால் அல்லது நகமே இருண்டு இருந்தால், அது மெலனோமா என்ற தோல் புற்றுநோய்க்கான அறிகுறி.
நகம் வளைந்திருந்தால் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B 12 குறைபாடு இருக்கலாம்.
அரை நிலவு வடிவம் தெரியாமல் இருந்தால், அது தைராய்டு பிரச்னை இருப்பதன் அறிகுறி. இது மனச்சோர்வு, மனநிலை மாற்றம், எடை அதிகரித்தல், அடர்த்திக் குறைவான முடி போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
மிகச்சிறிய பிறை வடிவம் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதையும் அஜீரணத்தையும் குறிக்கும். வளர்சிதை மாற்றமும், உடலில் நச்சுப்பொருள்களின் தேக்கமும் இதற்கான காரணங்கள்.
நகத்தில் வெடிப்பு, பிளவுபட்ட நகங்கள் இருந்தால் தோல் நோய்க்கான அறிகுறி.
நகங்களில் வெள்ளைப்புள்ளிகள் தெரிவது, வைட்டமின் குறைபாடு அல்லது அலர்ஜியின் அறிகுறி.
மிகவும் வெண்மையான நகம், மஞ்சள் நகம் ஆகியவை ஹெபடைட்டிஸ், மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள்.
வெளிறிய நிறமுடைய பிறை தெரிந்தால் சர்க்கரை நோய் இருப்பதைக் குறிக்கும். மஞ்சள் நிற நகம் பூஞ்சைத்தொற்றைக் குறிக்கும்.
அரை நிலவு வடிவத்தைச் சுற்றி நீல நிறம் இருப்பது, நுரையீரல் அல்லது சுவாசப் பிரச்னைகள் இருப்பதைக் குறிக்கும். உள்ளுறுப்புகளுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டால் நகங்கள் இப்படி மாறும்.

Tuesday, April 18, 2017

இந்தியா, மக்களுக்கா... மதத்துக்கா?

மீனாமயில்
தேசப்பக்தி... அண்மைக்காலங்களில் மிகவும் அச்சுறுத்தலை உண்டாக்கக்கூடியதாக மாறியிருக்கும் சொல். கத்தியைக்கொண்டு ஒவ்வொருவர் இதயத்தையும் பிளந்து, தேசப்பக்தியை இனி கீறி எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தேசிய கீதம், தேசியக் கொடி, பாரத மாதா, இந்தி, பசு, கறுப்புப் பணம், காவி, கமண்டலம், யோகா... என, தேசப்பற்றுக்கான குறியீடுகள் நம்மைக் குறிபார்த்துத் தாக்கத் தொடங்கிவிட்டன.
தேசப்பற்று என்ற பெயரில் அரங்கேற்றப்படும் மதவாதம், இந்தியாவை அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் தள்ளியிருக்கிறது. நாடு முழுவதும் ஏறக்குறைய எல்லா மாநிலங்களுமே அந்த நெருக்கடியை எதிர்கொண்டுவருகின்றன. தேசியக் குற்றப்பதிவு ஆணையத்தின் அறிக்கையின்படி, 2014-ம் ஆண்டைவிட 2015-ம் ஆண்டில் மத வன்முறைகள் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. 2016-ம் ஆண்டுக்கான அறிக்கை இன்னும் வெளிவரவில்லை. ஆனால், உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி 2016-ம் ஆண்டு மே மாதம் வரையில் மட்டும் 278 மத வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 38 பேர் உயிரிழந்ததாகவும், 903 பேர் காயம் அடைந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தக் கணக்கு, நேரடியாக மதங்களுக்கு உரியது மட்டும்தான். சாதிய வன்கொடுமைகள், மத அடிப்படைவாதக் கருத்து சார்ந்த பெண்கள் மீதான தாக்குதல்கள் இதில் சேர்க்கப்படவில்லை. இவை எல்லாவற்றையும் சேர்த்தால், நாட்டில் நிகழ்ந்துகொண்டிருக்கும் வன்முறைகளின் எண்ணிக்கை பன்மடங்காகப் பெருகும்.
2016-ம் ஆண்டைவிடவும் 2017-ம் ஆண்டின் நிலைமை மிக மோசமாக இருக்கப்போகிறது. குறிப்பாக, ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக முடிந்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சி என்ற ஒன்றைத் துடைத்தழிக்கப்பட்டிருக்கும் சூழலில், நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டியதுதான். கடந்த வாரம்கூட குஜராத்தின் வட்வாளி கிராமத்தில் இந்து-முஸ்லிம் மாணவர் களுக்கிடையில் நடந்த சண்டை, மதக்கலவரமாக முடிந்தது. முஸ்லிம்களின் வீடுகளை இந்துக்கள் சூறையாடி, தீ வைத்துத் தாக்குதல் நடத்தியதில், 25 வயது இளைஞர் ஒருவர் உயிர் இழந்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வட மாநிலங்களில் இந்து அமைப்பினர் மதம் மற்றும் கலாசாரத்தின் பெயரால், நாள்தோறும் வன்முறைகளைக் கட்டவிழ்ப்பது சாதாரணமாக நடந்தேறுகிறது. 

இந்தியா, இந்து நாடு அல்ல; இந்துக்களும் வாழும் ஜனநாயக நாடு. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், பெளத்தம், சீக்கியம் எனப் பல்வேறு மதங்கள் வேரூன்றியிருக்கும் இந்தியாவில், அவரவர் அவரவர் மதத்தைச் சுதந்திரமாகப் பின்பற்றும் உரிமையை நமது அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது. அதுமட்டும் அல்ல, யாரும் எந்தத் தருணத்திலும் எந்த மதத்துக்கும் மாறலாம். 

மதம் மாறுவது நமது தார்மிக உரிமை; சுதந்திரம். இந்தியாவில் பெரும் அளவில் நிகழ்ந்த மத மாற்றங்களுக்குச் சாதியப் பொருளாதாரப் பாகுபாடுகளைத் தகர்த்தெறியும் நோக்கம் இருந்ததை மறுக்க முடியாது. சாதி ஒடுக்கு முறையைத் தாங்க முடியாத தலித்கள் மற்றும் பழங்குடியினரே பெரும் அளவில் இஸ்லாத்துக்கும் கிறிஸ்தவத்துக்கும் பெளத்தத்துக்கும் மதம் மாறினார்கள்; மாறிக்கொண்டிருக்கிறார்கள். சாதி எனும் பிறவி இழிவை அழித்தொழிக்கும் ஆயுதமாகவே மதமாற்றம் கையாளப்படுவதால், இந்தியாவில் அது ஆன்மிகச் செயல்பாடாக அன்றி சமூகப் புரட்சியாகவே கருதப்படுகிறது. அம்பேத்கர்கூட 10 லட்சம் பேரோடு இந்து மதத்திலிருந்து வெளியேறி பெளத்தம் தழுவியது அந்த அடிப்படையில்தானே! சாதி அமைப்பால் பிழைத்துக்கொண்டிருக்கும் இந்து மதத்தை விட்டு தலித்கள் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்த, இந்து அமைப்புகள் முனைப்புகொண்டன. 

90-களில் அவை மதமாற்றத்துக்கு எதிரான தமது பணியைக் கூர்மைப்படுத்தின.

2000-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து குஜராத், சத்தீஸ்கர் போன்ற சில மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டத்தின் மூலம் மத மாற்றங்களைத் தடுத்து நிறுத்தும் வேலையை பா.ஜ.க தொடங்கியது. `இந்தச் சட்டம் நாடு முழுக்க அமல்படுத்தப்படும்' என்ற பா.ஜ.க-வின் 2014 -ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி, மேலவையில் பெரும்பான்மை கிடைக்காததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அந்தக் கட்சியின் சமீபத்திய தேர்தல் வெற்றிகள்(!) அதைச் சாத்தியப்படுத்தக் கூடும். அவ்வாறு நடந்தால், மதம் மாற விரும்புவோர் கடுமையான நெருக்கடிகளையும் வதைகளையும் எதிர்கொள்வர். அதுமட்டும் அல்ல, தாய் மதத்துக்குத் திரும்பும் `கர்வாப்ஸி’ முறை, கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் பலவகை சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்போகிறது. மதமாற்றத் தடைச் சட்டம் அமலில் உள்ள குஜராத்தில், ஆயிரக்கணக்கானோர் மதம் மாறுவதற்கு அனுமதி கேட்டு அரசிடம் விண்ணப்பங்களை அளித்துவிட்டுக் காத்திருக் கின்றனர். ஆனால், அனுமதி வழங்கப்படவில்லை. `மதம் மாற விரும்புவோர் நாட்டைவிட்டு வெளியேறட்டும்' என இந்து அமைப்பினர் விஷத்தைக் கக்குகின்றனர்.

மதவாதம் , உணவு உரிமை தொடங்கி உறவு உரிமை வரை நல்லிணக்கத்தின் அத்தனை கூறுகளையும் சிதைக்கிறது. இந்தியாவில் தலித்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் முக்கிய உணவு மாட்டிறைச்சி. மாட்டின் மீது இந்துத்துவவாதிகள் புனிதத்தை ஏற்றுவதற்கு முன்பு வரை, பயன்பாடு முடிந்த மாடுகளைக் கறிக்கு அனுப்புவது இயல்பான விஷயம்தான். `பசு, தெய்வம்!' என்ற பிரசாரம் வலுவடையத் தொடங்கிய பிறகு, மாட்டிறைச்சி உண்ணாத பெரும்பான்மை இந்துக்கள், அதை உண்பவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கத் தொடங்கினர். மாட்டிறைச்சி உண்பவர்களைத் தாழ்வாகக் கருதும் அவர்களின் சாதிய மனநிலை வலுபெற்றது. இஸ்லாமியர்களும் தலித்களும் பலவகையான வன்முறைகளை மாட்டிறைச்சியின் பெயரால் அனுபவிக்க நேர்ந்தது. விரும்பிய உணவின் பெயரால் மனிதரை வெட்டிச் சாய்க்கும் கொடூரம் உலகில் வேறு எங்கும் நிகழ்வதில்லை. 

இந்தக் கட்டுப்பாடு, இப்போது பிற அசைவ உணவுகளை நோக்கியும் நகர்ந்திருக்கிறது. சைவ தீவிரவாதத்துக்கான விதைகள் மூர்க்கமாகத் தூவப்படுகின்றன. இந்தியாவில் சைவர்களைக் கணக்கெடுத்தால், மொத்த மக்கள்தொகையில் மூன்று சதவிகிதம்கூட தேறாது. ஆனால், அந்த மூன்று சதவிகிதத்தினர்தான் இந்தியாவின் அடையாளமாக முன்னிறுத்தப்படுகின்றனர். அந்த மூன்று சதவிகிதத்தினருக்காக எஞ்சிய 97 சதவிகிதத்தினரும் சைவர்களாக வேண்டுமாம்.விரும்பிய உணவை உண்ண மக்களுக்கு உரிமை இருக்கிறது என ஆட்சியாளர்களோ, நீதிமன்றங்களோ இந்தத் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனென்றால், இவர்களில் பெரும்பாலானோர் சட்டத்தை விடவும், சனாதனத் தர்மத்தின்படி இயங்குவதே இந்த அநீதி பரவ காரணமாக அமைந்தது. 

மதவாதிகள், அடிப்படையில் ஆணாதிக்கவாதிகள். இந்துமதப் பிரமுகர்கள் பல கூட்டங்களிலும் பேட்டிகளிலும் ஆணாதிக்கக் கருத்துகளை வெளிப்படையாக உதிர்க்கின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் மனதில் பெண்ணடிமைக் கருத்தியலை வளர்த்தெடுக்கத் தீவிரமாக வேலை செய்கின்றனர். சமூக வலைதளங்களில் பெண் வெறுப்பு பரப்பப்படுகிறது. காதலின் பெயராலோ திருமணத்தின் பெயராலோ சாதி - மதரீதியிலான கலப்பு நிகழக் கூடாது என்பதற்காகவே ரோமியோ எதிர்ப்புப் படை உருவாக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் ஒழுக்கத்தின் பெயரால் இளைஞர்களைக் கண்காணிக்கின்றனர். `ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்துகொண்டு ஓர் ஆணுடன் தனியாக ஏன் வெளியே வருகிறாள், அதுவும் இரவு நேரத்தில்?’ - தலைநகரில் நிர்பயாவைக் குதறிக் கொன்றவர்கள் சொன்ன அதே விதிமுறைகளை இவர்களும் விதிக்கிறார்கள் எனில், இவர்கள் யார்? ஆண்-பெண் உறவைத் தடுத்து நிறுத்துவதைவிட ஓர் அரசுக்கு வேறு வேலை இல்லையா? வீடு எனும் பெரும் சிறையைக் கடந்து கல்வியின் பலனால் இந்தத் தலைமுறை பெண்கள்தான் வெளியுலகில் சிறகு விரிக்கத் தொடங்கியுள்ளனர். அதற்குள் அவர்களது சிறகுகளைக் கத்தரிக்க பண்பாட்டுக் காவலர்கள் வீச்சரிவாளைத் தூக்கிக்கொண்டு வீதிகளில் ஓடிவருகின்றனர். மதவாதிகளின் பெண் வெறுப்பு நடவடிக்கைகள் இத்துடன் முடியப்போவதில்லை. பேராபத்தின் சிறு தொடக்கம் இது.

சமீபத்திய மாநிலத் தேர்தல் முடிவுகள், பெருகி நிற்கும் மதவாதத்தைப் புரிந்துகொள்வதற்கான ஆதாரம் எனலாம். 20 கோடி பேர் மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் சுமார் 20 சதவிகிதம் இருக்கின்றனர். ஆனால், பெருவாரியாக வெற்றிபெற்ற (!) பா.ஜ.க., முஸ்லிம் வேட்பாளர் ஒருவரைக்கூட நிறுத்தவில்லை. பா.ஜ.க., இதன்மூலம் மக்களுக்குச் சொல்லவருவது என்ன? உத்தரப்பிரதேசத்தில் 2012-ம் ஆண்டு தேர்தலில் 68 இடங்களைப் பிடித்த முஸ்லிம்களில் தற்போது 24 பேர் மட்டுமே உள்ளனர். அதுவும் எதிர் அணியில். ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் படுபாதாளத்தில் இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கூட இல்லாததும் 2014-ம் ஆண்டு தேர்தலில்தான். இந்த நிலைக்குக் காரணம், இந்து மதவாதமே என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 2010-15 வரையிலான காலகட்டத்தில் மதக் கலவரங்கள் ஐந்து மடங்கு பெருகியுள்ளன. 

இது ஆழப்பட்ட முஸ்லிம் வெறுப்புணர்வின் வெளிப்பாடு என அவை சுட்டிக்காட்டுகின்றன. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் சாத்தியப்பட்டிருக்கும் சிறுபான்மையினர், தலித்கள்/பழங்குடியினர், பெண்களின் ஓரளவு பிரதிநிதித்துவத்தையும் மதவாதம் துடைத்து அழிக்கப்போகிறது என்பதை இன்றைய சூழல் அப்பட்டமாக எடுத்துரைக்கிறது.

சக மனிதர் மீதான தாக்குதலை, மூட நம்பிக்கைகளை, வெறுப்பு அரசியலை, உரிமை மீறல்களை, ஒடுக்குமுறைகளை, வரலாற்றுத் திரிபுகளைக் கேள்விகேட்பவர்களுக்கு `தேசத் துரோகி' பட்டம்! அதோடு, ஆண்களாக இருந்தால் கொலை அல்லது காணாமல் ஆக்கப்படுவது. பெண்களாக இருந்தால் கூட்டுப் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை மிரட்டல்கள். மதவாதத்தைக் கண்டித்துப் பேசிய பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்ஸாரே, சாதியவாதத்தை விமர்சித்த பேராசிரியர் கல்புர்கி, சாதியப் பாகுபாட்டை எதிர்த்த ரோஹித் வெமுலா மற்றும் மதவாத மாணவப் பிரிவான ஏபிவிபி-யோடு மோதிய ஜே.என்.யு மாணவர் நஜீம் அகமது ஆகியோருக்கு நடந்ததை நாடு அறியும். முதல் மூவரும் முகத்துக்கு நேராகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான ரோஹித் வெமுலா மர்ம மரணமடைந்தார். கடந்த அக்டோபரில் தொலைந்துபோன நஜீம் அகமதுவை, இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. தேசப்பற்றின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகளை விமர்சித்ததுக்காக, `பாலியல் வல்லுறவு செய்யப்படுவாய்’ என மிரட்டப்பட்டார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி குர்மெஹர் கவுர். சாகித்ய அகாடமி விருது பெற்ற பெங்காலி கவிஞர் மந்தகிராந்தா சென், மத அத்துமீறலைக் கேள்வி கேட்டதற்காகக் `கூட்டு வல்லுறவு’ மிரட்டலுக்கு ஆளானார். இவை எல்லாம் நகரங்களில், அறிவுத்தளத்தில் நடந்த மதவாதத் தாக்குதல்கள். அதாவது ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸ் ஆகும் தகுதி பெற்றிருந்தன.

ஆனால், கிராமப்புறங்களில் எந்தப் பின்புலமும் அற்ற சாமானியர்கள் மீது நிகழ்த்தப்படும் மத/சாதி ஒடுக்குமுறைகள் கேட்பார் இன்றி நடந்துகொண்டே இருக்கின்றன. இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் தினமும் ஒரு வன்முறை வீடியோ ரிலீஸ் ஆகிறது. ராஜஸ்தானில் வளர்ப்புக்காகக் கன்றுக்குட்டியை வாங்கிச் சென்ற இஸ்லாமிய பால் வியாபாரி, ஒரே அடியில் வீழ்த்திச் சாகடிப்படுகிறார். உத்தரப்பிரேதசத்தில், சாலையில் `மிக நாகரிகமாக’ நடந்துசெல்லும் ஒரு ஜோடியை வழிமறித்து தடியால் தாக்குகிறான் காவித் துணியால் முகத்தை மூடிய ஒருவன். ரோமியோ எதிர்ப்புப் படையினர் உத்தரப்பிரதேசம் முழுக்க இருசக்கர வாகனங்களில் சுற்றுகின்றனர். ஆண்களோடு பேசும் பெண்களை, மேற்கத்திய உடை அணிந்திருப்போரை அவர்கள் எல்லோர் முன்னிலையிலும் அவ்வளவு ஏன் காவலர்கள் முன்னிலையிலேயே கடுமையாகத் தண்டிக்கின்றனர். இந்தப் பண்பாட்டுக் காவலர்கள் எந்தச் சட்டத்துக்குக் கட்டுப் பட்டவர்கள்? எல்லோரையும் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் இவர்களே போதுமென்றால் காவல் நிலையங்களோ நீதிமன்றங்களோ, அரசமைப்புச் சட்டமோ நமக்கு எதற்கு? இத்தகைய வீடியோக்களை அந்தக் குற்றவாளிகளே பரப்புகின்றனர். அதன்மூலம் தங்கள் மதம் குறித்த அச்ச உணர்வைக் கட்டியெழுப்ப அவர்கள் முனைகின்றனர்.

எங்கோ உத்தரப்பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் மட்டுமே இந்தக் கொடுமைகள் நடப்பதாக நாம் நினைக்கிறோம். உத்தரப்பிரதேசமும் ராஜஸ்தானும் இந்தியாவில்தானே இருக்கின்றன?! அங்கே நடப்பது இங்கே நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இந்துத்துவ அமைப்புகளின் மதவாதப் பருப்பு தமிழகத்தில் வேகாது எனப் பலரும் வாதிடுகின்றனர். சரிதான், நமது திராவிடப் பாரம்பர்யம் அந்தச் செருக்கை நமக்கு வழங்கியுள்ளது. ஆனால் மதவாதம், இடத்துக்குத்தக்க வெவ்வேறு முகமூடிகளை அணிந்து இயங்குகிறது. நாடு முழுக்க மாட்டிறைச்சிக்கு எதிராகக் கடுமையாகப் பிரசாரம் செய்யும் பா.ஜ.க., மாட்டிறைச்சியை மாநில உணவாகக்கொண்ட கேரளாவில், `ஜெயித்தால் மாட்டிறைச்சியைப் பரவலாகக் கிடைக்கச் செய்வேன்’ என ஓட்டுக்காக அற்பப் பிரசாரம் செய்ததே அது மாதிரி!

பெரியாரின் இந்து மத எதிர்ப்புக் கருத்தியல்கள், தமிழகம் கட்டிக்காக்கும் சகோதரத்துவத்துக்கு உரமாக இருப்பது உண்மைதான். ஆனால், ஆணவக்கொலைகள், செப்டிக் டேங்க் மரணங்கள், தீண்டாமை மற்றும் சாதிய வன்கொடுமைகள் இங்கே அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனவே, அது மதவாதம் இல்லையா? அண்மையில், திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ஃபாரூக், இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் கொலைசெய்யப்பட்டார். அது மதவாதம் என பல தரப்பினராலும் கண்டிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள், மதத்தின் பெயரால் இன்னோர் இஸ்லாமியரைக் கொல்வது, தாக்குவது, வதைப்பது மதவாதம் எனில், இந்து ஆதிக்கச் சாதிகள், சக இந்துக்களான தலித் மக்கள் மீது மதத்தின் பெயரால் காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் பாகுபாடுகள், நிகழ்த்தும் வன்கொடுமைகள் மதவாதம் அன்றி வேறு என்ன? சாதியின் பெயராலேயே தமிழகத்தில் மதவாதம் நிலைநிறுத்தப்படுகிறது.

அதுமட்டும் அல்ல, கோவைக் கலவரத்தைப்போல மற்றொரு வன்முறையைக் கட்டமைத்துவிட, பல வழிகளிலும் முயற்சிகள் நடக்கின்றன. இந்து அமைப்பினர் கொல்லப்படும்போது எல்லாம் அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது வீசியெறிய கடும் பிரயத்தனங்கள் நடக்கின்றன. இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்டச் செய்தித் தொடர்பாளர் சசிக்குமார், கடந்த ஆண்டு மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்டார். இந்த நிகழ்வைக் கண்டித்து இந்து முன்னணியினர் அறிவிக்கப் படாத பந்த்தை நிகழ்த்தி, கடையடைப்புக்குக் கட்டாயப்படுத்தினர். பொது மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கும் நிலை உண்டானது. இந்த அத்துமீறல்களின் உச்சமாக இந்து முன்னணித் தலைவர் காடேஸ்வரன் சுப்ரமணியன், `தமிழகம், குஜராத்தாக மாறும்!' என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதாவது, சசிக்குமாரின் மரணத்துக்கு முஸ்லிம்களே காரணம் என்பதை, குஜராத் என்ற குறியீட்டின் மூலம் அவர் அறிவிக்க முனைந்தார். இந்து அமைப்பினர் கொல்லப்படும் ஒவ்வொரு முறையும் பழியை முஸ்லிம்கள் மீது போட பொன்.ராதாகிருஷ்ணன்களும், வானதி சீனிவாசன்களும் படாதபாடுபடுகின்றனர். ஆனால், அவர்களுக்கான உண்மை மிகக் கசப்பானதாக அமைந்துவிடுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட அரவிந்த் ரெட்டியைக் கொலை செய்தது இந்துக்களே! பெண் விவகாரமே அரவிந்தின் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்தது. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த புகழேந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில், தேவாலயப் பின்னணி இருப்பதாக பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். ஆனால், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி போன்ற தகாத வேலைகளில் ஈடுபட்டுவந்த புகழேந்தி, இந்தக் காரணங் களுக்காகவே முனீசுவரன் என்கிற இந்துவால் கொல்லப்பட்டார். இதையும் மதரீதியான பழிவாங்கல் என்றே இந்து அமைப்புகள் கோரின. நிலத் தகராறில் கவுன்சிலர் முருகனைக் கொன்றதும் இந்துக்களே! இப்படியாக, துப்பறியப்பட்ட பல வழக்குகளில் இந்து அமைப்பினர் மதக் காரணங்களுக்காகவோ வேற்று மதத்தைச் சேர்ந்தவர்களாலோ கொல்லப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆனால், விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இஸ்லாமியர்களைக் கைகாட்டுவதை இவர்கள் ஒரு வழக்கமாகவே வைத்திருக்கின்றனர்.

இஸ்லாமியர்கள் மற்றும் தலித் மக்கள் குறித்த பொதுச் சமூகத்தின் பார்வையும் கருத்தும் என்ன? சக குடிமக்களான அவர்களின் சமூகப் பொருளாதார நிலை குறித்து எந்தக் கவலையாவது பெரும்பான்மைச் சமூகத்துக்கு இருக்கிறதா? தீவிரவாத முத்திரையுடன் இஸ்லாமியர்களும், தீண்டத்தகாத முத்திரையுடன் தலித்களும் படுகுழிக்குள் வீழ்த்தப்பட்டுக் கிடக்கின்றனர். அந்த உண்மையை உயிர்ப்போடு வைத்துக்கொண்டே இங்கே இந்து மதம் புத்தெழுச்சி பெற்றுக்கொண்டிருக்கிறது. 

டெல்லியைச் சேர்ந்த சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டீஸ் என்ற அமைப்பின் ஆய்வு, படித்த இந்தியர்களிடையே மத உணர்வு அதிகரித்துள்ளதைக் கண்டறிந்துள்ளது. இவர்கள் உயர்ரக செல்போன், வாகனங்கள் வைத்திருந்தாலும், அல்ட்ரா மாடர்ன் உடைகள் உடுத்திக்கொண்டாலும், அவர்களது மூளை பிற்போக்குத்தனத்திலும் பழைமைவாதத்திலும் ஆதிக்கவாதத்திலும் ஊறிப்போயுள்ளது. சாதி, மதம் மற்றும் ஆணாதிக்கம் ஆகியவற்றின் பெயரால் எத்தகைய அட்டூழியம் நிகழ்த்தப்பட்டாலும், அதற்கான மானசீகமான பேராதரவை அளிப்பது இவர்கள்தான். சமூக வலைதளங்கள் வெறுப்பு அரசியலைப் பரப்புவதற்கான முக்கியமான கருவியாக மாறியதற்கு `மத உணர்வு’கொண்ட படித்த இந்தியர்களே காரணம். சிறுகச் சிறுகக் கட்டியெழுப்பப்பட்ட மதச்சார்பின்மையை ஒரே சாத்தில் அடித்து வீழ்த்திவிடும் வெறியை இவர்களிடம் பரவலாகப் பார்க்க முடிகிறது. எனில், இந்த நவீனம், முன்னேற்றம், தொழில்நுட்பப் புரட்சி, வல்லரசு இவற்றுக்கெல்லாம் என்னதான் அர்த்தம்? 

விளையாட்டு அல்ல... இந்தியாவின் இன்றைய பன்முகத்தன்மை நீண்டகால வரலாற்றால் கட்டமைக்கப்பட்டது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமும் கிறிஸ்தவமும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெளத்தமும் சமணமும் என இந்தியா பல்வேறு மதங்களின் தோற்றத்தையும் வருகையையும் தாங்கி நிற்கிறது. அந்தக் கலப்புதான் இந்தியாவின் கம்பீரம்! ஆனால், அதைச் சீர்குலைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. இன்றைய நாட்டுநடப்பைப் பார்த்து வளரும் நமது குழந்தைகள், தேசப்பற்றை என்னவென்று விளங்கிக்கொள்வார்கள்? சிறுபான்மையினரை அழிப்பது என்றா... தலித் மக்களையும் பெண்களையும் ஒடுக்குவது என்றா? தேசப்பற்றுக்கு நிறைய விளக்கங்கள் உள்ளன. பல அறிஞர்கள் பல வகையிலும் தேசப்பற்றை வரையறுத்துள்ளனர். பிரிட்டிஷ் எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன், `தேசபக்தி என்பது பொறுக்கிகளின் கடைசி அடைக்கலம்’ என்கிறார். நடப்பவை அனைத்தும் அதை நிரூபிக்கின்றன. 

சாதி, மதம், மொழி, பால், நிறம், இன வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக்கியது நமது அரசியலமைப்புச் சட்டம். நாட்டின் பேரறிஞர்கள் பலரும் பல நாள்கள் ஆய்வுசெய்து, உலக அரசியலமைப்பு முறைகளை எல்லாம் அலசி விவாதம்செய்து பின்னரே, இந்த ஜனநாயகமுறை தேர்ந்தெடுக்கப்பட்டது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை ஆதாரமாகக்கொண்டு அது கட்டமைக்கப்பட்டது. பிறப்பு அடையாளங்களைக் கடந்து ஒவ்வொரு வருக்குமான அடிப்படை உரிமைகள் உறுதிசெய்யப்பட்டன. நன்மக்களாக அதை மதித்து, சகோதரத்துவத்துடன் நடப்பதைத் தவிர உண்மையான தேசப்பற்று வேறு என்னவாக இருக்க முடியும்?

1928-ம் ஆண்டு சைமன் கமிஷன் முன் சமர்ப்பித்த அறிக்கையில், `இம்மக்களுக்கு தாம் ஒரு தேசம் என்ற உணர்வை (sense of nationality) உருவாக்கவேண்டியதுதான் இந்தத் தருணத்தின் முக்கியமான தேவை' எனக் குறிப்பிட்டார் அம்பேத்கர். இதோ ஒரு நூற்றாண்டு காலம் நெருங்கிவிட்டது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், பார்ப்பனர், மிஷ்ரா, பாண்டே, பானர்ஜி, கள்ளர், செட்டியார், முதலியார் என முறையே மதமாகவும் சாதியாகவுமே ஒவ்வோர் இந்தியரும் இன்றும் தம்மை உணர்கின்றனர்; அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

தேசபக்தி என்றால் நாட்டை நேசிப்பது என நாம் புரிந்துகொள்கிறோம். நாடு என்பது என்ன... அதன் புவியியல் எல்லைகளா? இல்லவே இல்லை. எல்லைகள் மாறக்கூடியவை. நாடு என்பது அதன் மக்களே! மக்களை அழித்து விட்டாலோ அப்புறப்படுத்திவிட்டாலோ அது நாடு அல்ல. அந்த இடம் காடாகவோ வெற்றிடமாகவோ அறியப்படும். பெரும்பான்மை என்பதற்காக, அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அழிக்கத் தொடங்கினால், பூமியின் கடைசி இரண்டு மனித உயிர்களும் ஒன்றையொன்று வெட்டிக்கொண்டு செத்துப்போவதைத் தவிர வேறு மாற்று இல்லை.

ஒரு நல்ல நாடு, குடிமக்களுக்கு அந்த நாட்டில் வாழ வேண்டும் என்ற ஏக்கத்தையும் பிடிப்பையும் பெருமிதத்தையும் அளிக்கும். இப்படியா, எங்கேயாவது கடல் கடந்து ஓடிவிட மாட்டோமா என்ற அச்சத்தையும் பதற்றத்தையும் தருவது? ஆணாதிக்கத்தையும் சாதியவாதத்தையும் உள்ளடக்கிய மதவாதம் தலைவிரித்தாடும் தேசம் மனிதர்கள் வாழவே தகுதியற்றது. சந்தோஷமான நாடுகளின் பட்டியலில் இந்தியா எங்கோ கட்டக்கடைசியில் இருப்பதன் காரணம் அதுதான். உயிருக்கும் உரிமைக்கும் போராடிக் கொண்டிருந்தால், நாம் எப்போதுதான் வாழத் தொடங்குவது? 

மதவாதம் மட்டும் அல்ல, எல்லா வகையான வாதங்களுக்குமான ஒற்றை மருந்து, சகோதரத்துவம். இதை வளர்த்தெடுப்பதால் மட்டுமே இந்த நாட்டை ஜனநாயகப்படுத்த முடியும். நாம் கற்கவேண்டியதும், பின்பற்ற வேண்டியதும், தலைமுறைகளுக்குக் கடத்தவேண்டியதும் அதைத்தான். இது நம் எல்லோருக்குமான இந்தியா. அப்படியானதாக அதைக் கட்டியெழுப்பவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

Tuesday, April 11, 2017

நாம் உடனே நிறுத்த வேண்டிய 8 பழக்கங்கள்

ஜி.லட்சுமணன்
இது ஆரோக்கியமானது...' என்று நாம் நினைக்கும் பழக்கவழக்கங்களில் பல தீங்கு விளைவிக்கக்கூடியவை. ஆரோக்கியத்தை மேம்படுத்தும்நோக்கில் பின்பற்றிவரும் சில தவறான பழக்கவழக்கங்கள் தூக்கி எறியப்பட வேண்டியவை... அவை பற்றி இங்கே பார்க்கலாம்... 

சாப்பிட்ட பிறகு பல் துலக்குதல் 
பற்களைத் தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும் என்பதால் தினமும் இரண்டு முறை பல் துலக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். அதற்காக, உணவோ  குளிர்பானமோ உட்கொண்டதும் பல் துலக்கினால், அது பற்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும் என எச்சரிக்கிறது ஆய்வுகள். 

அதாவது, அமிலத்தன்மை நிறைந்த உணவுகள், குளிர்பானங்களைச் சாப்பிட்டதும் பல் துலக்கினால் அமிலமானது பல்லின் வெளிப்புற அடுக்கான 'எனாமல்' பகுதியையும், உட்புற அடுக்கான 'டென்டின்' எனும் அடுக்கையும் சேதப்படுத்தி விடுமாம். எனவே, பல் துலக்குகிறோம் என்ற பெயரில், அந்த அமிலத்தை ஈறுகளுக்குள் ஆழமாகத் தள்ளிவிடும் வேலையைத்தான் நாம் செய்கிறோம். அதேநேரத்தில் குளிர்பானம் குடித்த ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, பல் துலக்கினால் பாதிப்பும் ஏற்படாதாம். பற்களைப் பாதுகாக்க வேண்டுமெனில் குளிர்பானங்களைத் தவிர்க்கலாம். 

ஆன்டி ஃபாக்டீரியல் சோப் 
தோல் பகுதியில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக உள்ளன. இவை உடலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் என்ற நம்பிக்கையில் ஆன்டி பாக்டீரியா சோப்களை அதிகமாகப் பயன்படுத்துகிறோம். இவை நன்மை செய்யும் பாக்டீரியாவுக்கும் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம். எனவே, இந்த வகைச் சோப்களை வாரத்துக்கு இரண்டுமுறைக்கு மேல் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். தினமும் பயன்படுத்துவதைத் அவசியம் தவிர்க்க வேண்டும். 


டைட் ஜீன்ஸ் 
இன்றைய தலைமுறையினரிடம் ஜீன்ஸ் பேண்ட் அணியும் வழக்கம் ஃபேஷனாகி விட்டது. டைட்டாக ஜீன்ஸ் பேண்ட் அணிவது தோல் மற்றும் நரம்புப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், அதிக நேரம் ஜீன்ஸ் பேண்ட் அணிவதால் காலுக்குத் தேவையான காற்றோட்டம் கிடைக்காமல் போகிறது. இதனால் கால்களில் அரிப்பு ஏற்படுதல், கால்கள் மரத்துப் போதல் போன்ற பிரச்னைகள் உண்டாகின்றன. உடல் சூட்டையும் அதிகரிக்கும். இனப்பெருக்கம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தலாம். 


பிளாஸ்டிக் உபகரணங்கள் 
நாம் பயன்படுத்தும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களிலும் பைசெஃபெனால் - ஏ (Bisphenol A) எனும் நச்சுப்பொருள் கலந்திருக்கிறது. நெகிழ்வுத் தன்மைக்காகப் பைபினைல் (Bi Phenol) போன்றவை பயன்படுத்தப்படுகிறது. இப்படிப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் உணவுடன் கலந்து, ஹார்மோன்களில் சுரக்கும் எண்டோகிரைன் அமைப்பைப் பாதிக்கிறது. மேலும் ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கிறது. எனவே இவற்றுக்கு மாற்றாகக் கண்ணாடி அல்லது ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பொருள்களைப் பயன்படுத்தலாம். 


செயற்கையான ஃப்ரூட் ஜூஸ் 
பழச்சாறு அருந்துவது உடல் நலனுக்கு நல்லது. ஆனால், செயற்கை பழச்சாறுகள் நல்லதல்ல. உதாரணமாக, உடற்பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோர் இந்த மாதிரி ரெடிமேட் பானங்களைக் குடித்தால் நிலைமை இன்னும் மோசமாகும். பழச்சாறு குடிக்க ஆசைபட்டால், ஃபிரெஷ் பழச்சாறுகளைச் சர்க்கரை சேர்க்காமல் அருந்துங்கள். 


தும்மல் 
மீட்டிங்கில் இருக்கும்போது, சுவாரிஸ்யமாகப் பேசும்போது சிலர் தும்மல் வந்தால் அடக்குவார்கள். இதனால் மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்கள் பாதிக்கும். கண்களில் உள்ள வெள்ளைப் பகுதி, காதில் உள்ள மெல்லிய சவ்வுகள்கூடப் பாதிக்கலாம். வயிறு பாகத்திற்கிடையேயுள்ள தடித்த தசைச்சுவரில் பாதிப்பு ஏற்படும். 

பெர்ஃப்யூம் 
அதிக நறுமணம் வீச வேண்டும் என்பதற்காகப் பெர்ப்ஃயூம் தயாரிப்பில் அதிகமான வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் நறுமணம் ஒவ்வாமையை ஏற்படுத்தித் தலைச்சுற்றல், குமட்டல், அலர்ஜி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இவை கண்கள், தொண்டை, தோல் பகுதியில் எரிச்சலையும் ஏற்படுத்திவிடும். எனவே, செயற்கை நறுமண ஊட்டிகளைத் தவிர்த்து, இயற்கையான எண்ணெய் வகைகளைப் பயன்படுத்துவது நல்லது. 


ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகள் 
ஃப்ரிட்ஜில் வைத்தால் உணவுகள் கெட்டுப்போகாமல் இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், நீங்கள் ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்த சில நிமிடங்களில் அது கெட்டுப் போய் விடும். இது பலருக்குத் தெரிவதில்லை. நீண்ட நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளைச் சாப்பிடுவதால் வயிற்று உபாதைகளும், செரிமானப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. கண்களுக்குத் தெரியாத பூச்சிகள் உணவுகளின் மேல் படர்ந்திருக்கும். இது, வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும். 

Tuesday, April 4, 2017

பெண்ணியம்  பேச தகுதியுள்ள பெண் 

மைசூரிலிருந்து அப்போதுதான் வந்து இறங்கியிருக்கிறார் செல்வமணி. காக்கி நிறச் சீருடை கசங்கியிருக்கிறது. நான்கு நாள்கள் உறக்கமும் களைப்பும் கண்களில் தளும்புகின்றன. மறுநாள் தேங்காய் ஏற்றிக்கொண்டு மத்தியப்பிரதேச மாநிலம் கட்னிக்குப் பயணமாகும் பரபரப்பில் இருக்கிறார். 

“இப்படித்தான் தம்பி... வேலை வந்தா, சேர்ந்து வரும். இல்லைன்னா ஒருவாரம் பத்து நாள்கள் வீட்டிலேயே சும்மா உட்கார்ந்திருப்போம்’'- சிரித்துக்கொண்டே பேசுகிறார் செல்வமணி.

இவருக்கு சொந்த ஊர் சங்ககிரி. பத்து டயர்கள்கொண்ட டாரஸ் லாரியை இயக்கிக்கொண்டிருக்கிறார்.  13 வருடங்களாக குஜராத், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா என நெடும்பயணங்களில் கழிகிறது வாழ்க்கை. குடும்பத்தின் சிரமத்தைப் போக்க, கணவருக்கு உதவியாக க்ளீனராக லாரி ஏறியவர், இப்போது முழுநேர டிரைவர். அதுவும், மாநிலம் விட்டு மாநிலம் போய், சரக்கு ஏற்றி இறக்கும் டிரைவர். 

“சூழ்நிலையும் தேவையும்தான் தம்பி எல்லாத்தையும் தீர்மானிக்குது. திருமணத்துக்கு முன்னாடி எனக்கு சைக்கிள்கூட ஓட்டத் தெரியாது. இப்போ ஹைவேயில தொடர்ச்சியா 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு லாரி ஓட்டுறேன். ரோட்டுல எல்லாரும் ஆச்சர்யமா பார்க்கிறாங்க. வேலையில் இது ஆம்பளை வேலை, பொம்பளை வேலைன்னு எதுவும் இல்லை. மனசுல உறுதி இருந்தா யாரு எந்த வேலையையும் செய்யலாம்'' - சிரிப்புதான் செல்வமணியின் அடையாளம். தாய்மையும் கனிவும் நிறைந்த சிரிப்பு. 



சங்ககிரியில் பெரும்பாலானோருக்குத் தொழில் லாரி ஓட்டுவதுதான். கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் சூழ்ந்திருப்பதால், சரக்கு ஏற்றி இறக்க லாரிகளுக்குத் தேவை அதிகம். செல்வமணியின் பிறந்தகமும் புகுந்தகமும் டிரைவர் குடும்பம்தான். 

 “பிறந்த இடத்துக்கும் வாக்கப்பட்டுப்போன இடத்துக்கும் ஒரே ஒற்றுமை, வறுமை. எனக்கு நாலு வயசு இருக்கும்போது, சொந்தக்காரங்களுக்குள்ள நடந்த ஒரு தகராறுல ஒருவரைக் கொலைபண்ணிட்டு என் அப்பா ஜெயிலுக்குப் போயிட்டார். கொஞ்சநாள்ல அங்கேயே தூக்குப்போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டார். என்னையும் அண்ணனையும் வெச்சுக்கிட்டு அம்மா தவிச்சுப்போய் நின்னுச்சு. 

ஜனக்கட்டுக்குக் குறைவில்லை. நிறைய உறவுக்காரங்க உண்டு. ஆனா, யாருக்கிட்டேயும் போய் `சோறில்லை'ன்னு நிக்கக் கூடாதுங்கிறதுல அம்மா தீர்மானமா இருந்துச்சு. சுண்ணாம்பு சூளைப் போட்டு அம்மா எங்களை எல்லாம் வளர்த்தெடுத்துச்சு. பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்ச அண்ணன் லாரிக்குப் போய் தொழிலைக் கத்துக்கிச்சு. நான் காட்டு வேலைக்குப் போவேன். 15 வயசுல எனக்குக் கல்யாணம் முடிஞ்சிடுச்சு. கணவர் பெயர் கோபால்.


உறவுக்காரக் குடும்பம்தான். நல்லவிதமா பார்த்துக்கிட்டாங்க. இவர் ஒரு முதலாளிக்கிட்ட டிரைவரா ஓட்டிக்கிட்டிருந்தார். பத்து நாள்கள், பதினைஞ்சு நாள்கள்னு லாரி ஓட்டிட்டு வருவார். நான் வீட்டுக்குள்ளயே கிடப்பேன். வரிசையா ரெண்டு பசங்க பிறந்தாங்க. அதுக்கு அப்புறம் இன்னும் சிரமமாப் போச்சு. நாமளும் ஏதாவது செஞ்சு, நாலு காசு சம்பாதிச்சாதான் உண்டுன்னு ஆனபிறகு, தையல் கத்துக்கிட்டேன். வீட்டுலயே ஒரு மெஷினை வாங்கிப்போட்டு தைக்க ஆரம்பிச்சேன். ஓரளவுக்கு நல்லவிதமா தைச்சதால வேலை நிறைய வந்துச்சு. 

நாங்க கஷ்டப்படுறதைப் பார்த்துட்டு, எங்க உறவுக்காரப் பையன் ஒருத்தர், அவரோட டேங்கர் லாரியை எங்கக்கிட்ட கொடுத்து `கொஞ்ச நாள் வெச்சு ஓட்டுங்க’ன்னார். எங்க வீட்டுக்காரர் தேங்காய் எண்ணெய் ஏத்திக்கிட்டு கொல்கத்தாவுக்குப் போனார். வழியில பெரிய விபத்து. கூடப்போன அண்ணன் பையன் அங்கேயே இறந்துட்டான். இவருக்குப் பலத்த அடி. ஒரு வழியா காப்பாத்தி மீட்டெடுத்தேன். வண்டிக்கான செலவு, இவருக்கான மருத்துவச் செலவுனு நாலு லட்சம் ரூபாய் கடன் ஆகிடுச்சு. 

ஆறு மாசத்துக்குப் பிறகு இவர் திரும்பவும் லாரிக்குப் போனார். ஆனா, இவரோட இயல்பு மாறிப்போச்சு. நிறைய கோபப்பட ஆரம்பிச்சுட்டார். கூடப்போற டிரைவர்கள்கூட சண்டை. முதலாளிகள்கூட பிரச்னை. எல்லாரும் படிப்படியா இவரைத் தவிர்க்க ஆரம்பிச்சாங்க. 

கடனுக்கு வட்டி ஏறிக்கிட்டே இருந்தது. நாலு லட்சம் ரூபாயா இருந்த கடன், ஆறு லட்சம் ரூபாயா அதிகமாகிடுச்சு. வருமானமும் குறைஞ்சுபோச்சு. ஏதாவது செய்தால்தான் உயிர்வாழ முடியும்கிற கட்டாயம். உறுதியா ஒரு முடிவு எடுத்தேன். இருந்த மனையை வித்து கடனைக் கட்டிமுடிச்சேன். நாமளே ஒரு டாரஸ் லாரி வாங்கிடலாம்னு முடிவுசெஞ்சேன். நான் சொன்னதைக் கேட்டு இவரே திகைச்சுப்போயிட்டார். பரபரன்னு வேலையில இறங்கினேன். லோன் போட்டு லாரியைக் கொண்டுவந்து நிறுத்திட்டேன். மொத்தமா பதினோரு லட்சம் ரூபாய் கடன்...'' - செல்வமணி பேசுவதை அமைதியாகப் பார்த்துக்கொண்டி ருக்கிறார் கணவர் கோபால்.

“பொதுவா, வெளிமாநிலங்களுக்கு ஓட்டும்போது ரெண்டு டிரைவர்கள், ஒரு க்ளீனர் தேவைப்படும். டிரைவருக்கு 100-க்கு மூன்று ரூபாய் படிக்காசு. க்ளீனருக்கு ரெண்டு ரூபாய். இதுபோக கமிஷன் காசும் கொடுக்கணும். வந்த வரவுல அது பெரிய செலவா இருந்தது. வாங்கின கடனுக்கு வட்டி கட்டவே சிரமம். நல்ல சாப்பாடு இல்லாம, இரவு பகல் பார்க்காம இந்த மனுஷன் இப்படிக் கஷ்டப்படுறாரேன்னு ஒரு பக்கம் வருத்தமா இருந்தது. `நானும் உங்ககூட வர்றேன். படிப்படியா எனக்கும் லாரி ஓட்டக் கத்துத்தாங்க'ன்னு ஒருநாள் கேட்டேன். டென்ஷன் ஆகிட்டார். 


`ஒருமணி நேரம் சும்மா உள்ளே உட்கார்ந்திருந்தாவே இன்ஜின் சூடு உடம்பை உருக்கிடும். இதுல டிரைவிங் வேற பண்ணணுமா? உனக்கெல்லாம் இந்த வேலை சரியா வராது. டெய்லரிங் பிழைப்பை ஒழுங்கா பாரு'னு சொல்லிட்டார். இருந்தாலும் நான் உறுதியா இருந்தேன். சண்டை, அழுகைன்னு என் போராட்டத்தைப் பார்த்து மனசு இறங்கிட்டார். முதல்ல, ஒரு மாசம் டிரைவிங் ஸ்கூல்ல சேர்ந்து கார் ஓட்டக் கத்துக்கிட்டேன். 

கும்பகோணத்துல தேங்காய் ஏத்திக்கிட்டு, குஜராத் மாநிலத்துல உள்ள போர்பந்தருக்குப் போகணும்.  நானும் வருவேன்னு விடாப்பிடியா ஏறி உட்கார்ந்துட்டேன். பன்னிரண்டு நாள்கள் பயணம். அதை இப்போது நினைச்சாலும் பகீர்னு இருக்கும். பளீர், பளீர்ன்னு முகத்தில் வெளிச்சத்தை வீசிட்டுப் போற வண்டிங்க, காடு, மலைன்னு விதவிதமான இடங்கள், அந்நியமான முகங்கள்னு அது புது அனுபவமா இருந்தது.


அதன்பிறகு எல்லாமே பழகிடுச்சு. மூணே மாசத்துல எனக்கு லாரி ஓட்டக் கத்துக்கொடுத்திட்டார். டிரைவர், க்ளீனர்னு வெளியாள்கள் யாரையும் வேலைக்கு வெச்சுக்கிறதில்லை. நாங்க ரெண்டு பேரும்தான். சரக்கை ஏத்தி, தார்ப்பாயைப் போட்டு நான் மேல ஏறி கயிறு போடுவேன். அவர் கீழே நின்று வாங்குவார். கை காச்சுப் போற அளவுக்குக் கடினமான வேலை அது. போகப் போகப் பழகிடுச்சு. 

ஆறு, குளம்னு தண்ணி கண்ட இடத்துல வண்டியை நிறுத்திட்டுக் குளிப்போம். வெயில் காலத்துல ஆங்காங்கே சேட்டுமார்கள் சேலையில தடுப்புக்கட்டி அண்டாவுல தண்ணி வெச்சிருப்பாங்க. அப்படியே மேலே அள்ளி ஊத்திக்கிட்டு ஈர உடையோட உட்கார்ந்து ஓட்டுவோம். பத்து நிமிஷத்துல காய்ந்துவிடும். 

அரிசி, எண்ணெய், ஸ்டவ்னு எல்லா பொருள்களும் வண்டியிலேயே வெச்சிருக்கேன். அவர் ஓட்டும்போது உள்ளே வெச்சே சமைச்சுடுவேன். 400 கிலோ மீட்டருக்கு ஒருத்தர்னு மாத்தி மாத்தி ஓட்டுவோம். பதிமூணு வருஷங்களாச்சு... இந்த ஸ்டீயரிங்கைத் தொட்டு. மாசத்துல இருபது நாள்கள் ரோட்டுலதான் எங்க வாழ்க்கை.  ஆண்டவன் கருணையில, இன்னைக்கு வரைக்கும் வண்டி மேல சின்னதா ஒரு கீறல்கூட விழலை. அதுதான் பெரிய கொடுப்பினை.'' -  நம்பிக்கையோடு பேசுகிறார் செல்வமணி. 

மனைவியைப் பற்றி பெருமிதத்தோடு பேசுகிறார் கோபால். 

“தொடக்கத்துல, `பொஞ்சாதியை லாரி ஓட்ட விட்டுட்டானே'னு சாதிசனங்க பேசுறதை நினைச்சு சங்கடமா இருந்தது. எவ்வளவோ சொன்னேன். விடாப்பிடியா டிரைவிங் கத்துக்கிட்டா. இப்போ என்னைவிடவும் நிதானமா, பொறுப்பா ஓட்டுறா. நான் 400 கிலோ மீட்டர் ஓட்டினா, இவ 500 கி.மீ ஓட்டுவா. எனக்குத் தண்ணியடிக்கிற பழக்கம் இருந்தது. இவ பக்கத்துலேயே இருக்கிறதால அதை விட்டுட்டேன். புகைப்பழக்கத்தை மட்டும் விட முடியலை. லாரியில உக்காந்து புகை பிடிச்சா இவளுக்கு இருமல் வரும். `நானும்தான் வண்டி ஓட்டுறேன். இப்படியா புகைக்கிறேன்?'னு திட்டுவா. இப்போ அதையும் விட்டுட்டேன். நிறைய கதைகள் பேசுவோம். நான் வண்டி ஓட்டிக்கிட்டிருந்தா அவளே ஊட்டி விடுவா. வண்டி ஓட்டும்போது அழகா பாடுவா. ரோட்டுல போற முகம் தெரியாத மனிதர்கள் எல்லாம் நின்று பாராட்டிட்டுப் போகும்போது பெருமையா இருக்கும்'' - மகிழ்ச்சியாகச் சொல்கிறார் கோபால். 

மெல்லிய வெட்கத்தோடு தொடர்கிறார் செல்வமணி. 

“இப்போ, இந்த லாரியே ஒரு தோழி மாதிரி ஆகிடுச்சு. கஷ்டமோ, சந்தோஷமோ இதுக்கிட்ட பேசிக்கிட்டே ஓட்டும்போது மனசுக்கு இதமா இருக்கும்.

எனக்கு ரெண்டு பசங்க. அவங்களை நல்லா படிக்கவெச்சுட்டேன். மூத்தவன் எம்.பி.ஏ முடிச்சுட்டு பெங்களூருல வேலை செய்றான். சின்னவனும் ஐ.டி.ஐ படிப்பு முடிச்சுட்டு வேலை பார்க்கிறான். லாரிச்சூடு படாம அவனுங்களை மீட்டுட்டோம். எட்டு லட்சம் ரூபாய்ல ஒரு வீடும் கட்டிட்டோம். இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு. ரெண்டு வருஷங்கள், ரெண்டு பேரும் லாரி ஓட்டினா, அதையும் அடைச்சுட்டு நிம்மதியா வீட்டுல உட்காரலாம்னு நினைக்கிறேன். ஆண்டவன் என்ன நினைக்கிறான்னு தெரியலை'' - டயரைத் தட்டி சோதித்தபடியே சொல்கிறார் செல்வமணி. தன் மனைவியைப் பார்த்துக்கொண்டிருந்த கோபாலின் கண்கள் கலங்கிப்போயிருந்தன