Wednesday, May 28, 2014

உணவும் அதை தேர்ந்தெடுப்பதும்

உணவியல் அறிஞர் மைக்கேல் போலன் உணவு விதிகள் என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் 10 கட்டளைகளை நாம் எதைச் சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான விதிகளை அவர் எளிமையாக வரையறை செய்திருக்கிறார். போலனின் வரையறைகளில் பல நாமும் பின்பற்ற வேண்டியதே.

1  உணவுப் பொருட்கள் வாங்க கடைக்குப் போகும்போது, உங்கள் தாத்தா அல்லது பாட்டியை கடைக்கு அழைத்துக்கொண்டு போங்கள். அவர்கள் எதையெல்லாம் சாப்பிட அருகதை அற்றது என்று ஒதுக்குகிறார்களோ, அவற்றை வாங்காதீர்கள்

2  உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவற்காகவே உருவாக்கப்பட்ட உணவு என்று பெரிதாக விளம்பரம் செய்யப்படும் உணவுகளைத் தேர்வுசெய்ய வேண்டாம்.

3  சிப்ஸ், நொறுக்குத்தீனிகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை ஒதுக்கி அதற்குப் பதிலாக பழங்கள், கொட்டைகள், பச்சைக்காய்கறிகளை உண்ணப் பழகுங்கள்.

4  இயந்திரங்களால் சமைக்கப்படும் உணவுகளை ஒதுக்குங்கள். மனிதர்களால் சமைக்கப்படும் உணவில் உள்ள கவனமும் ருசியும் அக்கறையும் ஒருபோதும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் உணவுகளில் இருக்காது.

5  அந்தந்தப் பருவ காலங்களில் விளைகின்ற பழங்கள், காய்கறிகள், கீரைகளை உண்ணுங்கள்.

6.  நான்கு காலில் உள்ள விலங்குகளை உண்பது செரிமானம் செய்ய நேரமாகும். ஆகவே, குறைவாக உண்ண வேண்டும். பறவைகளின் இறைச்சி சாப்பிடக்கூடியது. ஆனால், அளவோடு அறிந்து சாப்பிட வேண்டும்

7  இயற்கையாக விளையக்கூடிய தானியங்கள், காய்கறிகள், அரிசியைத் தேர்வுசெய்து சாப்பிடுங்கள். ரசாயன உரமிடப்பட்ட காய்கறிகளில் அதன் பாதிப்பு இருக்கவே செய்யும்.

8  உப்பும் சர்க்கரையும் அதிகம் சேர்க்காத உணவாக தேர்வு செய்யுங்கள். இரண்டையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

9  செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து இயற்கையாக கிடைக்கும் பழச்சாறு, மோர், இளநீர் போன்றவற்றை குடியுங்கள்.

10 தேவையான உணவுப்பொருட்களை தரம் அறிந்து தேடிப்பார்த்து வாங்க வேண்டும். விவசாயியிடம் இருந்து நேரடியாக உணவுப்பொருட்களை பெற முடிந்தால் மிகவும் நல்லது.

Thursday, May 22, 2014

15 மாதங்களில் பிரதமர் ஆவது எப்படி?
கில்லாடி மோடி
ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்
'இந்தியப் பிரதமர் பதவிக்கு முயற்சிக்கலாமே!’ என்று மோடி சிந்தித்த தினத்திலிருந்து, அடுத்த 15-வது மாதத்தில் அவர் இந்தியப் பிரதமர். இது எப்படிச் சாத்தியம்?
 
''டெல்லிக்கு வரத் தயாராகிறீர்களா?'' - 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதக் கடைசியில் கேட்கப்பட்ட கேள்வி இது!
 
''ஊகமான கேள்விக்குப் பதில் தர மாட்டேன்'' - என்று பதில் சொன்னவர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. சபர்மதியில் கிடைத்த தொடர் வெற்றி, யமுனையிலும் தொடக்கப் புள்ளியை வைத்துவிட்டது.
 
அன்று மோடியை மீண்டும் குஜராத் முதல்வர் ஆக்க, அத்வானி, சுஷ்மா, ராஜ்நாத், நிதின் கட்கரி, அருண்ஜெட்லி என அரை டஜன் தலைவர்கள் வந்து 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பேசினார்கள். ஆனால் இன்று, மோடியைப் பிரதமர் ஆக்க இவர்கள் யாருமே தேவைப்படவில்லை. தன்னைப் பிரதமர் ஆக்க, தான் மட்டுமே போதும் என்று மோடி நினைத்தார். மக்கள் நினைப்பும் அப்படியே ஆனதுதான், 336 தொகுதிகளை வாரிக் கொடுத்தது. இது, பா.ஜ.க-வுக்குக் கிடைத்த வெற்றி அல்ல; மோடியின் வெற்றி என்பதை அத்வானி அறிவார். அதனால்தான் அமைதியாக இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்-ஸும் இதை அறியும். அதனால்தான் பக்குவமாக மோடியைப் பயன்படுத்தப் பார்க்கிறது.
 
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. வழக்கம் போல் மதத் தீவிர          வாதம் பற்றிய வகுப்புதான் அது. உணவு இடைவேளையில் பத்திரிகையாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத். 'பிரதமர் பதவிக்கு மோடிதான் சரியான ஆள். ஆர்.எஸ்.எஸ்-ஸின் வளர்ப்பு’ என்றவர், '2014-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், 25 ஆண்டுகள் இந்தியாவை அந்தக் கட்சிதான் ஆளும். ஒருவேளை வராமல்போனால், இன்னொரு 100 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. ஆட்சி வரவே முடியாது’ என்றாராம். இத்தகைய அரிய வாய்ப்புக்குச் சரியான ஆள் மோடிதான் என்பதைத் தேர்வு செய்ததில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆபரேஷன் ஆரம்பம் ஆகிறது.
 
இந்தியப் பிரிவினைக்கு வித்திட்ட ஜின்னாவைப் புகழ்ந்து அத்வானி பேசியதில் இருந்தே, ஆர்.எஸ்.எஸ். அவரை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டது. குஜராத்தில், திடீர் பிம்பமாக  மோடி எழுந்து வருவதைப் பார்த்துத் தூக்கிக் கொண்டார்கள். 'எனக்குக் குஜராத்தை முன்னேற்றுவது மட்டுமே குறிக்கோள். என் மனதில் இருப்பது குஜராத்... குஜராத்... குஜராத்!’ என்று 2012 டிசம்பர் வரை சொல்லிக்கொண்டிருந்த மோடிக்கு, பிரதமர் கனவைப் புகட்டியது ஆர்.எஸ்.எஸ்.
 
'2009-ம் ஆண்டுத் தேர்தலில் தோற்றுப்போன பழைய அத்வானி முகத்தைவிட, புதிய மோடி முகம் எடுபடும்’ என்று பலரும் நினைத்து 'நமோ’ பாடத் தொடங்கினார்கள். ஊகமாக அல்ல, உண்மையாகவே 2013 ஜனவரியிலேயே டெல்லி கிளம்பத் தயாராகிவிட்டார் மோடி.
 
சோனியாவும் ராகுலும் குஜராத் வந்து மோடிக்கு 'மரண வியாபாரி’ என்ற பட்டம் கொடுத்துச் சீண்டியது, வசதியாகிப்போனது. ''என்னால் குஜராத்தை இவ்வளவு முன்னேற்ற முடிந்தது என்றால், சகோதரி சோனியா, இளவரசர் ராகுலால் ஏன் முடியவில்லை? அவர்கள் நோக்கம் வளர்ச்சி அல்ல, கொள்ளை!'' என்று தொடங்கினார் மோடி.
 
மூன்றாவது முறை வென்றதும் 'நமோ கோஷத்துக்கு’ அகில இந்தியக் கவனம் கிடைத்தது. 'இதற்கு என்ன காரணம்?’ என்று கேட்கப்பட்டபோது, 'குஜராத்தை மோடி சுபிட்சம் ஆக்கிவிட்டார்’ என்று பரப்பப்பட்டது. இந்தக் குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த சுஷ்மா சுவராஜ், மோடியைப் பெருமைப்படுத்தும் விதமாக, 'பிரதமர் பதவிக்கே தகுதியானவர் மோடி’ என்று சும்மா பேச்சுக்குப் புகழ்ந்தார்... அதுதான் ஆரம்பம்!
 
 
ஆர்.எஸ்.எஸ்-ஸின் கனவுக்கு, சரியான ஆளாக நரேந்திர மோடி கண்ணுக்குத் தெரிந்தார். மேல்மட்டத்து விவாதங்களில் அவரது பெயர் அடிபட ஆரம்பித்தபோது, அத்வானி பதற்றம் ஆனார். ஆனால், தன்னுடைய பிடிவாதங்களில் ஆர்.எஸ்.எஸ். எப்போதும் விட்டுக்கொடுத்தது இல்லை. அந்த அமைப்பு, ராஜ்நாத் சிங்கின் சம்மதத்தை முதலில் வாங்கியது. மெதுவாகக் காய் நகர்த்தினார் ராஜ்நாத். ஆரம்பத்தில் மோடி தயங்கினார்; பின்னர் சம்மதித்தார்; ஆனால் நிபந்தனையுடன். 'என்னைப் பிரதமர் வேட்பாளராக அறிவியுங்கள்’ என்பதே அவரது நிபந்தனை. இந்த வார்த்தையை அத்வானி ஏற்க மாட்டார் என்பதால், 'பிரசாரக் குழுத் தலைவர்’ என்ற ஒரு புதிய பதவியைக் கண்டுபிடித்தார்கள்.
 
2013 ஜனவரி முதல் மே வரைக்கும் இதை ரகசியமாகவே வைத்திருந்தது ஆர்.எஸ்.எஸ்., ஜூன் மாதம் கோவா பா.ஜ.க. நிர்வாகக் குழுவில் அறிவிக்கத் திட்டமிட்டது. அதைத் தெரிந்துகொண்டு அங்கு அத்வானி வரவில்லை. கோவாவில் மோடி பெயர் அறிவிப்பதற்கு முன்னதாக அத்வானி வீட்டுக்குப் போனவர்கள் சுரேஷ் சோனி, தத்தாத்ரேயா ஹோபலே. இருவரும்
 
ஆர்.எஸ்.எஸ்-ஸின் முக்கியமான தலைவர்கள். அத்வானி ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் பய்யாஜி ஜோஷி ஆகிய இருவரும் போனில் பேசி கட்டாயப்படுத்தினார்கள். 'பிதாமகன் பீஷ்மர், அம்புப் படுக்கையில் படுத்தபடி பாண்டவர்களுக்குப் போதனை செய்கிறார்’ என்று ட்விட்டரில் கண்ணீர்விட்டார் அத்வானி. அவரிடம் இருந்து அந்தஸ்து பறிக்கப்பட்டது!
 
அதற்குச் சில நாட்களுக்கு முன், புதிய நிர்வாகிகள் பட்டியலோடு அத்வானியைச் சந்தித்தார் ராஜ்நாத் சிங். கட்சியின் பொதுச் செயலாளர் என்ற இடத்தில் மோடியின் வலது கரமான அமித் ஷா பெயர் அதில் இருந்தது. 'குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றவரை பொதுச் செயலாளர் ஆக்கக் கூடாது’ என்று சொல்லிப்பார்த்தார் அத்வானி. அதை ராஜ்நாத் சிங் ஏற்கவில்லை. 'மக்கள் நம்பிக்கையைப் பெற்ற மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்குப் பதவி கொடுங்கள்’ என்றும் அத்வானி சொன்னார். அதையும் ராஜ்நாத் ஏற்கவில்லை. ஸ்மிருதி ராணி, மீனாட்சி லேக்கி... போன்ற மோடிக்கு வேண்டியவர்கள் பெயர்களே அதிகம் இருந்தன.
 
நிர்வாகிகள் மொத்தமே அவரது ஆட்களாகப் போடப்படுவதை அத்வானி உணர்ந்தார். வெள்ளம் தலைக்கு மேல் ஆகஸ்ட் மாதங்களில் போய்விட்டது. செப்டம்பரில் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட்டது. 'மோடி பெயரைச் சொல்லி தேர்தலைச் சந்தித்தால் எப்படி இருக்கும்?, சொல்லாமல் தேர்தலைச் சந்தித்தால் எத்தனை இடம் பிடிப்போம்?’ என்று பா.ஜ.க-வின் தேர்தல் ஆய்வாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கணிப்பு நடத்தினார். 'பெயரை அறிவித்தால்தான் பயன் உண்டு!’ என்று அவரும் சொன்னார். பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார்.
 
'ஏக் பாரத்... ஷ்ரேட் பாரத்’ (ஓர் இந்தியா; மாபெரும் இந்தியா), 'காங்கிரஸ் முகத் பாரத் நிர்மான்’ (காங்கிரஸ் இல்லாத இந்தியா) என்ற இரண்டு முழக்கங்களை முன்வைத்தார் மோடி. குஜராத்துக்குள் என்னவெல்லாம் செய்தாரோ, அதையெல்லாம் இந்தியாவுக்குள்ளும் பரப்பினார். தொடர் யாத்திரைகள் தான் அவர் பாணி. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய யாத்திரையில் தான் மட்டுமே பங்கேற்றார். மற்றவர்களுக்கு அழைப்புகூட இல்லை.
 
 
திரும்பிய பக்கமெல்லாம் மோடி. நேரில், பேரணியில், ஃப்ளெக்ஸில், ஃபேஸ்புக்கில்... அவர் உருவம். 3டி தொழில்நுட்பம் வரை கபளீகரம் செய்தார்கள். ஒரே நேரத்தில் 53 இடங்களில் மோடி பேசுவது மாதிரி செய்தார்கள். குறிப்பிட்ட நிறுவனம், வேறு யாருக்கும் இந்த வசதியை செய்துதர முடியாத அளவுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. உத்தரப்பிரதேசம் முழுக்கவே ரதம் போனது. கலை நிகழ்ச்சிகள் நடத்தியது. மாலை வேளையில் மோடி பேச்சை ஒளிப்பரப்பியது. தாமரை சின்னம் போட்ட கப் கேக் தரப்பட்டது. குழந்தைகளுக்கு மோடி முகம் கொண்ட மாஸ்க் வழங்கப்பட்டது.
 
வடநாட்டில் பா.ஜ.க. மகளிர் அணியினர் வீடு வீடாகப் போய் வாசலில் உட்கார்ந்து தாமரை மெஹந்தி போட்டார்கள். இதன் உச்சமாக பிளாஸ்டர் ஆஃப் பாரீஸில் சின்னச் சின்ன மோடி சிலைகளை 100 ரூபாய்க்கு விற்றார்கள். அதில் காவி குர்தா, வெள்ளை ஓவர் கோர்ட் போட்டிருந்தார் மோடி. ஆனால், தினமும் அவர் ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு விதமான உடையில் தோன்றினார். எம்.ஜி.ஆருக்கு அடுத்து விதவிதமான ஸோலோ ஸ்டில் மோடிக்குத்தான் இருக்கிறது என்று சொல்லும் அளவுக்குப் படம் காட்டினார்.
 
காங்கிரஸுக்கு அம்பானி என்றால், மோடிக்கு அதானி. ஹெலிகாப்டரில், இந்தியாவின் எட்டுத்திக்கும் வலம் வந்தார். லட்சக்கணக்கான கிலோமீட்டர்கள், நூற்றுக்கணக்கான கூட்டங்கள், கோடிக்கணக்கான மக்கள் சந்திப்பு என்று கடந்த ஜனவரி முதல் மே வரைக்குமான ஐந்து மாத காலம் அசராமல் அலைந்தார். இப்போது, அறுவடையும் செய்துவிட்டார் மோடி!
 
''நேரு குடும்பத்தவருக்கு, குஜராத்திகளைக் கண்டாலே பிடிக்காது. படேல், மொரார்ஜி தேசாயை மோசமாக நடத்தினார்கள். இப்போது என்னைக் குறிவைத்துள்ளார்கள்'' என்று சொன்ன குஜராத்தி மோடி, காங்கிரஸைப் பழிவாங்கிவிட்டார். அவரது லட்சியம் நிறைவேறிவிட்டது.
 
''300 எம்.பி-க்களைத் தாருங்கள். இந்தியாவை 60 மாதங்களில் மாற்றிக் காட்டுகிறேன்'' என்றும் மோடி சொன்னார். அவரைப் பிரதமர் வேட்பாளராகக் கொண்டுவந்த ஆர்.எஸ்.எஸ்., வெவ்வேறு அஜெண்டாவுடன் நிற்கிறது. ராமர் கோயில், காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து, பொது சிவில் சட்டம் என்ற மூன்றும் அவர்களுக்குப் பிரதானம். ஆனால், பிரதமர் மோடிக்கு எது முக்கியம்?
 
நாம் பார்க்கப்போகும் இந்திய அரசியல்... இனி இதுதான்!
பகீர் பானங்கள்!
- S. ராமகிருஷ்ணன் 
 
கொளுத்தும் வெயிலை தாங்க முடியாமல் ஏதாவது குடிக்கலாம் என்று தேடினால் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மட்டுமே கிடைக்கின்றன. உணவுச் சந்தையில் கேள்வியே இல்லாமல் கொள்ளையடிக்கப்படுகிற பொருள் குளிர்பானங்கள்தான். முன்பு வீட்டுக்கு யாராவது முக்கிய விருந்தினர் வந்துவிட்டால் சோடா, கலர் வாங்கிவந்து தருவார்கள். விருந்தினர் குடித்தது போக மிச்சம் வைத்த கலரைக் குடிக்க போட்டா போட்டி நடக்கும்.
 
திருமண வீடுகள், திருவிழாக்களில் கலர் குடிப்பது என்பது சந்தோஷத்தின் அடையாளம். சாக்ரீம் பவுடரைத் தண்ணீரில் கரைத்து ஒரு பாட்டில் கலர் ஐந்து பைசா என பள்ளியில் விற்பார்கள். வாங்கிக் குடித்திருக்கிறேன்.
 
இன்று வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியில் வெயில் காலமோ, மழைக்காலமோ எப்போதும் இரண்டு லிட்டர் கலர் பாட்டில் இருக்கிறது. உப்புமா சாப்பிடுவதாக இருந்தால்கூட ஒரு டம்ளர் கலர் ஊற்றி குடிக்கிறார்கள். 'நான் சோடா கலர் குடிப்பது இல்லை. பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளைத்தான் குடிக்கிறேன்’ என்று ஒரு பிரிவினர் பெருமையடித்துக்கொள்கிறார்கள். 'கழுதை விட்டையில் முன்விட்டை என்ன... பின்விட்டை என்ன?’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோல உடலைக் கெடுப்பதில் கார்பனேட்டட் குளிர்பானங்களும் பாக்கெட் பழச்சாறுகளும் ஒன்றுபோலதான். ரெடிமேட் பழச்சாறில், 10 சதவிகிதம் மட்டுமே பழச்சாறு உள்ளது. மீதமெல்லாம், சர்க்கரை, நீர், செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் மட்டுமே.
ஒரு குளிர்பான நிறுவனம் ஆண்டுக்கு 300 கோடி விளம்பரத்துக்கு செலவு செய்கிறது. 50 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிப்பதற்கு விநியோகச் செலவு உள்பட சேர்ந்து 5 முதல் 7 ரூபாய் ஆகக் கூடும் என்கிறார்கள். ஒரு லிட்டருக்கு 43 ரூபாய் லாபம் என்றால், ஆண்டுக்கு விற்பனையாகும் 430 கோடி பாட்டில்களுக்கு எவ்வளவு பணம் என்று நீங்களே கணக்குப் போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.
 
குளிர்பானச் சந்தை வெறும் தாகம் தணிக்கும் விவகாரம் இல்லை. அது உடலைக் கெடுப்பதில் பன்னாட்டு நிறுவனங்களின் யுத்த களம். இரண்டு முக்கிய அமெரிக்க நிறுவனங்களே இந்தியக் குளிர்பானச் சந்தையின் 70 சதவிகிதத்தை தனது கையில் வைத்திருக்கின்றன. பிரபல நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பாடகர்கள் என அத்தனை பேரும் அவர்கள் பாக்கெட்டில்!
இந்தக் குளிர்பான நிறுவனங்கள் நோ டு H2o அதாவது தண்ணீரை வேண்டாம் என்று ஒதுக்குங்கள் என்று ஒரு புதிய முழக்கத்தை உலகெங்கும் எழுப்பிவருகின்றன. தாகம் எடுத்தால் யாரும் தண்ணீர் குடித்துவிடக் கூடாது. மென்பானங்களில் ஒன்றைத்தான் குடிக்க வேண்டும். இதுதான் சந்தையின் இலக்கு. இந்தச் சந்தைக்கு நம்மை அறியாமலே நாம் பலியாகிவருவதோடு அடுத்த தலைமுறையை இதற்கு காவுகொடுக்கவும் தயார் ஆகிவிட்டோம் என்பதே நிஜம்.
 
பள்ளியில் படிக்கும் மாணவர் எவருக்கும் பன்னாட்டு குளிர்பானங்களின் பெயர்களைத் தவிர வேறு எந்த பானமும் தெரிவது இல்லை. ஒரு மாணவனிடம் 'பானாகாரம் குடித்திருக்கிறாயா?’ எனக் கேட்டபோது 'அது என்ன பானாகாரம்?’ என்று கேலியாகக் கேட்டான்.
 
 
'புளியும் வெல்லமும் சேர்த்துச் செய்வார்களே... பானகம்’ என்றதும் 'அப்படி ஒரு பெயரைக்கூட நான் கேள்விப்பட்டதே இல்லை’ என்றான். அங்கிருந்த ஆசிரியர்கள் பலரும்கூட தங்களுக்கும் அப்படியான பானம் எதையும் தெரியாது என்றார்கள்
 
'நீர்மோரும் பானாகாரமும் பதநீரும் பழச்சாறுகளும்தானே வெயில் காலத்தில் சூடு தணிப்பவை. ருசியான நொங்கு சாப்பிடுவது, வெள்ளரிப்பிஞ்சுகள், வெள்ளரிப்பழம் என எத்தனையோ இருக்கிறதே! அதை விட்டு ஏன் இந்த கார்பனேட்டட் குளிர்பானங்கள்?’ என்று கேட்டால் 'இதற்கு இணை கிடையாது. மலையில் இருந்து தலைகீழாக குதித்ததுபோல இருக்கும்’ என்கிறார்கள்.
ஒருமுறை கோடைக்காலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் நண்பர்களுடன் டிரக்கிங் போயிருந்தபோது வெக்கை தாள முடியாமல் தண்ணீர் குடித்துக்கொண்டே இருந்தேன். காட்டில் எங்களுக்கு வழிகாட்டியாக வந்த ஆதிவாசி இளைஞன் ஒருவன் காட்டுச்செடி போன்ற ஒன்றை பறித்துவந்து 'இதன் வேரை சவைத்து சாற்றை உறிஞ்சிக்கொள்ளுங்கள்’ என்றான்.
 
இதை சாப்பிட்டு எப்படி தாகம் தணியும் என்று புரியாமல் அதை வாயிலிட்டு சவைக்க ஆரம்பித்தேன். ஆச்சர்யம்... அந்தச் சாறு தொண்டையில் குளிர்ச்சி ஏற்படுத்தியதோடு உடலுக்குள் போன சில நிமிஷங்களில் கண்ணில் இருந்த வெக்கை தணிந்து கண் குளிர்ச்சியானதை உணர முடிந்தது. நாவறட்சியும் அடங்கிவிட்டது. அது என்ன வேர் என்று இளைஞனிடம் கேட்டபோது அது மூலிகை என்று சொல்லிவிட்டு அதைப் பற்றி நான் சொல்லக் கூடாது என்றான். ஒரு வேரை ஐந்து நிமிடம் வாயிலிட்டு சவைப்பதன் வழியே உடல் வெக்கையை போக்கிவிட முடியும் என்ற மருத்துவம் நம்மிடம் இருக்கிறது. ஆனால், அதை நாம் முறையாகப் பகிர்ந்துகொள்ளவில்லை. பெருவாரியான மக்கள் பயன்படுத்தும்படியாக அறிமுகப்படுத்தவும் இல்லை.
 
இன்று குடிக்கிற காபியைக்கூட குளிர்ச்சியான கோல்டு காபியாக வேண்டும் எனக் கேட்கும் தலைமுறை வந்துவிட்டது. ஒருகாலத்தில் காபி டம்ளரை தொட்டால் கையில் சூடு தெரிய வேண்டும் என்று காபி குடிப்பவர்கள் நினைத்தார்கள். ஆறிப்போன காபியை மனுஷன் குடிப்பானா என சண்டையிடும் வீடுகளை எனக்கே தெரியும். இன்று கோல்டு காபி, ஐஸ் டீ என சூடான பானங்களை குளிர்ச்சியாக்கிக் குடிக்கிறார்கள். சூட்டில் இருந்து குளிர்ச்சியை நோக்கி மாறியிருக்கிறது நமது உணவுப்பழக்கம். குளிர்ச்சிக்கு என தனி விலை வைத்து விற்பதுதான் இன்றைய தந்திரம்.
 
முன்பெல்லாம் கோடை துவங்கியதும் இலவச தண்ணீர் பந்தல், மோர் பந்தல், பானாகாரம் தருவது என்று நிறைய சேவைகள் நடக்கும். இலவசமாக தென்னை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகள்கூட வீசிக்கொள்வதற்காக தருவார்கள். இன்று அப்படி எதுவும் கண்ணில் படுவது இல்லை. வணிகச் சந்தையின் பெருக்கம் சேவையை முடக்கிவிட்டிருக்கிறது.
 
சங்க காலத்தில் இப்படியான பானங்களுக்கு சுவை நீர் என்று பெயர். கருப்பஞ்சாறும், இளநீரும், மோரும், பலவகையான பழச்சாறுகளும் குடித்திருக்கிறார்கள். பதிற்றுப்பத்தில் தீம்பிழி எந்திரம் என்ற சொல் காணப்படுகிறது. அது கருவியைக் கொண்டு பழத்தைச் சாறு பிழிந்து எடுத்திருக்கிறார்கள் என்பதையே சுட்டுகிறது.
 
 
The Five Soft Drink Monsters  என்று மைக் ஆடம்ஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். குளிர்பானங்கள் எந்த அளவு கெடுதல் செய்யக் கூடியவை என்பதைப் புட்டுப்புட்டு வைக்கிறார். அதாவது டின்னில் அடைக்கப்படும் குளிர்பானங்களில் அது நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க பென்ஸாயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. சுவைக்காக காபின் கலக்கப்படுகிறது. குளிர்பானங்கள் வரும் பெட் பாட்டில்களில், பிஸ்பினால் ஏ என்ற ரசாயனப்பூச்சு உள்ளது. சர்க்கரைக்குப் பதிலான இனிப்புச் சுவை தருவதற்காகச் ஆஸ்பர்டேம் (Aspartame)  என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இப்படியான ரசாயனங்கள் காரணமாக நமக்கு சுவாச ஒவ்வாமை மற்றும் தோல் நோய்கள், இதய நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
 
 
உடலில் உள்ள கால்சியம் சத்து குறையவும், பாஸ்பரஸ் அளவு உயரவும் இந்த குளிர்பானங்கள் காரணமாக இருப்பதனால் குளிர்பானங்களை அதிகம் குடித்தால் உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவு குறைந்துபோய் தசைகள் சக்தி இழந்துவிடுகின்றன. குளிர்பானங்களைத் தொடர்ந்து குடிப்பதால் பற்சிதைவும், சிறுநீரகக் கோளாறுகளும் ஏற்படுவதைத் தடுக்கவே முடியாது என்கிறார் மைக் ஆடம்ஸ்.
 
எப்படி இவ்வளவு வேகமாக நம்மிடையே பரவியது இந்தக் குளிர்பான பழக்கம். பதிலுக்காக காலத்தின் பின்திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.
மேடைப் பேச்சாளர்கள் பேச்சின் ஊடே சோடா குடிப்பது, சண்டையில் சோடா பாட்டில் வீசுவது நமக்குத் தெரியும். சோடா எப்படி எப்போது அறிமுகமானது? அது சுவாரஸ்யமான வரலாறு.
 
ஐரோப்பாவில் 17-ம் நூற்றாண்டில்தான் முதன்முதலாக மென்பானங்கள் விற்பது துவங்கியது. அப்போது தேன் கலந்த எலுமிச்சை சாறு விற்பனை செய்யப்பட்டது. 1676-ல் பாரீஸில் இதன் விற்பனை உரிமையை ஒரு நிறுவனம் பெற்று ஏகபோக உரிமையாக்கியது.
 
1767-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோசப் பிரீஸ்ட்லீ என்பவரே கார்பனேட்டட் பானமான சோடாவை உருவாக்கியவர். இங்கிலாந்தின் லீட்ஸில் வசித்த ஜோசப் பிரீஸ்ட்லீ மது தயாரிப்புக்காகப் புளிக்கச் செய்து காய்ச்சிப் பதப்படுத்திய பார்லி பீப்பாய்களில் இருந்த கரியமில வாயுவை ஒரு காலி குவளைக்குள் பிடித்து அதில் தண்ணீரை ஒரு குறிப்பிட்ட அளவு கலந்தார். அது சுவையான நீராக மாறியது. அப்படித்தான் சோடா தயாரிக்கப்பட்டது.
ஜான் மெர்வின் நூத் என்பவரே இதை வணிக ரீதியாக மாற்றினார். ஆரம்ப காலங்களில் சோடா மருந்து கடைகளில் மட்டுமே விற்கப்பட்டது. இது பின்னாளில் ஸ்வீடன் ரசாயனவாதி டோர்பென் பெர்க்மென் வடிவமைத்த சோடா இயந்திரம் மூலம் பெருமளவு தயாரிக்கப்பட்டது. சோடாவோடு பல்வேறு சுவைகளை ஒன்று சேர்ந்தவர் ஜோசப் பெர்சிலிஸ். 19-ம் நூற்றாண்டில் இதுபோன்ற செயற்கை பானங்களைக் குடிப்பதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. மருந்துக் கடைகளில் மட்டுமே இவை மூலிகை பானங்கள் என விற்கப்பட்டன.
 
அப்போது கண்ணாடி பாட்டில்கள் தயாரிக்கும் தொழில் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. ஆகவே, சோடா பவுண்டன் எனப்படும் சோடா இயந்திரங்களில் இருந்தே மக்கள் இவற்றை வாங்கிக் குடித்தார்கள். சோடியம் பைகார்பனேட் கொண்டு உருவாக்கப்பட்டதால் அது சோடா எனப்பட்டது. வயிறு உபாதைகளுக்கு மருந்தாக டாக்டர்களால் சிபாரிசு செய்யப்பட்ட சோடாவுக்கு 1800-களில் வரி போடப்பட்டது. பிரிட்டனில் ஒரு பாட்டிலுக்கு 3 பென்ஸ் வரி. பாட்டிலில் அடைக்கப்பட்ட சோடா 1835-ல் சந்தைக்கு வந்தது. 1851-ல் அயர்லாந்தில் ஜிஞ்சர் சோடா அறிமுகமாகி புகழ்பெற்றது. சோடா பாட்டில் மூடியை உருவாக்கியவர் வில்லியம் பெயிண்டர்.
 
நம் ஊரில் விற்கப்படும் கோலி சோடா பாட்டிலை 1873-ல் உருவாக்கியவர் ஹிரம் காட் (Hiram Codd)என்ற ஆங்கிலேயர். இவரது கோப்ஸ் கிளாஸ் ஒர்க் கம்பெனிதான் கோலி சோடா பாட்டில்களைத் தயாரித்து விற்பனை செய்யத் துவங்கியது. 1881-ல்தான் சோடாவோடு வண்ணம் சேர்க்கப்பட்டு ரசாயன சுவையூட்டி மூலம் குளிர்பானம் உருவாக்கபட்டது.
 
1886-ல் டாக்டர் ஜான் பெம்பர்ட்ன் கோக்கை உருவாக்கினார். 1898-ல் காலெப் பிராதம் பெப்சி கோலாவை உருவாக்கினார். 1899-ல்தான் கண்ணாடி பாட்டில்கள் தானியங்கி இயந்திரங்களின் மூலம் பெருமளவில் உற்பத்தியாகின. 1920-களில் தானியங்கி குளிர்பான இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. 1957-ல் அலுமினிய டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் அறிமுகமாகின.
 
இந்தியாவுக்கு இதுபோன்ற குளிர்பானங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்குள்தான் அறிமுகமாகின. அதிலும் 1977-ல் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் கூட்டாகவே தொழில் துவங்க வேண்டும் என்ற ஜனதா அரசின் நிர்பந்தம் காரணமாக கோக் இந்திய சந்தையை விட்டு வெளியேறியது. பின்பு 1990-ல்களில் தாராளமயமான சந்தை காரணமாக பார்லேயுடன் இணைந்து தனது சந்தையை உருவாக்கிக்கொண்டது.
வேதனை போக்கும் வேலிப்பருத்தி..!
 
மனிதனுக்கான மருத்துவத்தை இலைகளில் வைத்திருக்கிறது, இயற்கை... இந்த உண்மையை சித்தர்கள் உணர்ந்து கொண்டதால்தான் சித்த மருத்துவம் உருவானது. ஆங்கில மருந்துகளுக்கெல்லாம் அடிப்படையாக இருந்தவை சித்தர்களின் ஆராய்ச்சிகள்தான். இன்றைக்கும் பல்வேறு ஆங்கில மருந்துகள் தயாரிப்பில் மூலிகைச்சாறுகள் சேர்க்கப்படுகின்றன.
 
 
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேலியோரங்களில் படர்ந்து கிடக்கும் அற்புதமான மூலிகைதான் வேலிப்பருத்தி... இதய வடிவ இலைகள், இரட்டைக் காய்கள், முட்டை வடிவ விதைகளுக்குள் பட்டு போன்ற பஞ்சுகள் கொண்ட வேலிப்பருத்திக்கு, 'உத்தாமணி’ என்ற பெயரும் இருக்கிறது. சித்த மருத்துவத்தில் பெரும்பாலும் உத்தாமணி என்றே குறிப்பிடுகிறார்கள்.
 
இயற்கை வளங்கள் அனைத்தையும் அழித்த மனிதன் காற்றைக்கூட விட்டு வைக்கவில்லை. கழிவுகளுக்குக் காற்றை காவு கொடுத்துவிட்டு, ஆக்சிஜன் பார்லர்களில் காசு கொடுத்து சுத்தக் காற்று சுவாசிக்கும் நிலை வந்தே விட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரும் மனிதர்கள், முகத்தை முழுவதும் மூடிக் கொண்டுதான் பயணிக்கிறார்கள். அந்தளவுக்கு மாசடைந்து கிடக்கிறது, காற்று. அதையும் மீறி பலருக்கு ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள்.
 
மூச்சிரைப்பைப் போக்கும் கற்பக மிளகு!
 
சுவாசக் கோளாறை சரி செய்வதற்கு, எளிமையான தீர்வு வேலிப்பருத்தி. இதன் இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து, தினமும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால்... ஆஸ்துமா, அலறியடித்துக் கொண்டு ஓடிவிடும். இச்சாறை லேசாக சூடாக்கி, ஆற வைத்து தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் ஒரு மண்டலம் (48 நாட்கள்) குடித்து வந்தால் சுவாச, காச நோய்கள் காணாமல் போய்விடும். இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து உண்டு வந்தால், வாயுவால் உண்டாகும் நோய்கள், கைகால் குடைச்சல், இளைப்பு, இருமல், கோழைக்கட்டு நீங்கும். ஒரு குவளையில் கொஞ்சம் மிளகை இட்டு அவை மூழ்கும் அளவுக்கு வேலிப் பருத்தி இலைச்சாறை ஊற்றி, ஊற வைத்து எடுத்து வெயிலில் ஏழு நாட்கள் காய வைத்தால்... அதன் பெயர் 'கற்பக மிளகு’. 'கற்பக மிளகை, தினமும் ஒரு மிளகு வீதம் உட்கொண்டால் மூச்சிரைப்பு நோய் முற்றி லும் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம்.
 
உடல் வலுப்பெற!
 
ஊட்டச்சத்து பானங்கள் குடிக்கும் குழந்தைகள் வேண்டுமானால், 'நான் வளர்கிறேனே மம்மி’ என விளம்பரங்களில் காட்டப்படுவது போல வேகமாக வளரலாம். ஆனால், உணவுக்கே வழியில்லாத குழந்தை கள் ஊட்டச்சத்துக்கு எங்கு போவார்கள்? ஏழை வீட்டுப் பிள்ளைகள், மார்புக்கூடு முன்தள்ளி நோஞ்சானாகவே வளர்கின்றன. இன்னும் சில குழந்தைகள் என்னதான் ஊட்டச்சத்து கொடுத்தாலும் நோஞ்சானாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் உடல் வலுப்பெற உதவுகிறது, வேலிப்பருத்தி. இதன் இலையை நிழலில் உலர்த்தி, பொடி செய்துகொண்டு அதில் ஒரு தேக்கரண்டி, சீரகப்பொடி, அருகம்புல் பொடி ஆகியவற்றில் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கஷாயம் செய்து... பனங்கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் நோஞ்சான் தன்மை நீங்கி, உடல் வலுப்பெறும்.
 
ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்!
 
நாளைய இந்தியாவை வழி நடத்த வேண்டிய இளைஞர்கள், இருபத்தைந்து வயதிலேயே ரத்த அழுத்தம் ஏறிக் கிடக்கிறார்கள். 'பி.பி’ எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் 'பிளட் பிரஷர்’ உள்ளவர் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு ஆங்கில மருத்துவத்தில் மாத்திரைகள் உண்டு. ஆனால், காலம் முழுவதும் விழுங்கிக் கொண்டே இருக்கவேண்டும். இடையில் நிறுத்தினால், மீண்டும் ரத்த அழுத்தம் எகிறிவிடும். 'இதற்கு வேறு வழியே இல்லையா?’ என கேட்பவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கிறது வேலிப்பருத்தி.
 
வேலிப்பருத்தி இலைகள் ஆறினை எடுத்து சுத்தம் செய்து, அப்போது கறந்த ஆடு அல்லது மாட்டுப் பாலில் அரை டம்ளர் எடுத்துக் கொள்ள வேண்டும். கறந்த பால் கிடைக்காத பட்சத்தில் கொதிக்க வைத்த பாலை அரை டம்ளர் எடுத்துக் கொள்ளலாம். பாலில் இலையைப் போட்டு நன்றாக அரைத்து, 'பிரம்ம முகூர்த்த வேளை’ எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் அருந்த வேண்டும். இப்படி, தொடர்ந்து 48 நாட்கள் செய்துவந்தால்... ரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து ரத்த அழுத்தம் குறையும். எவ்விதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இந்த மருந்து, உடல் அசதியைப் போக்கி நரம்புகளைப் புத்துணர்வு பெறச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது.
 
வயதுக்கு வர வைக்கும் வேலிப்பருத்தி!
 
வேலிப்பருத்தி இலைச்சாறு, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்து, காய்ச்சி இளஞ்சூட்டில் பற்று போட்டால்... வாத வலி, வீக்கம் குறையும். யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் விரைவில் குணமாகும். காணாக்கடி, அரிப்பு, தடிப்பு, கீழ்வாதம், முடக்குவாதம், இடுப்புவலி ஆகியவற்றுக்கு வேலிப்பருத்தி இலைச்சாறை வதக்கி, துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தால் குணமாகும். குறிப்பிட்ட வயது வந்த பிறகும், பெண்கள் ருதுவாகாமல் இருந்தால், ஆறு வேலிப்பருத்தி இலை, மூன்று மிளகு ஆகியவற்றை மை போல அரைத்து, 10 தினங்கள் தொடர்ந்து உண்டு வந்தால் நிச்சயம் பலன் கொடுக்கும். வேலிப்பருத்தி இலைச்சாறு, தேன் இரண்டை யும் கலந்து தினமும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால்... பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி தீரும் என்கிறார்கள், சித்தர்கள்.
இத்தனை பயன்பாடு மிகுந்த வேலிப் பருத்தியை இனியாவது பயன்படுத்தி, நோயற்ற வாழ்வு வாழ்வோம்...

வாத நோய்க்கு மருந்து!
வேலிப்பருத்தியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் காளிமுத்து, ''வேலி ஓரங்களில் படர்ந்து, மனிதனின் வலிகளைக் குறைக்கும் அற்புதமான மூலிகை வேலிப்பருத்தி. இது மிகச் சிறந்த வலிநிவாரணியாகவும், கிருமிநாசினியாகவும், சிறுநீர்ப் பெருக்கியாகவும் பயன் படுகிறது. வேலிப்பருத்தி இலையைப் பறித்து, அரைத்து, துணியில் கட்டி, சூடாக உள்ள தோசைக்கல்லில் துணியை வைத்து எடுத்து ஒத்தடம் கொடுத்தால் ரத்தகட்டு, முழங்கால் வலி, வாதநோய் குறையும்'' என்றார்.

Friday, May 16, 2014

சாதி முக்கியமா... சந்ததி முக்கியமா?
ரீ.சிவக்குமார், படம்: ஜெ.வேங்கடராஜ்
கமணம் என்பதே ஆகாத மணம்தான். சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராக அரசியல்ரீதியான எதிர்ப்புகள் இப்போது பரவலாகப் பெருகி வருகின்றன. ஆனால், அரை நூற்றாண்டுக்கு முன்னரே விதவைகள் நிலைமை, உடன்கட்டை ஏறுதல் போன்ற பெண்களின் மீது திணிக்கப்பட்ட கொடிய வழக்கங்களுக்கு, சாதித் தூய்மையைக் காப்பாற்றும் அகமண முறை எப்படிக் காரணமாக இருந்தது என்பதை, அம்பேத்கர் விரிவாக விளக்கியிருக்கிறார்.
 
அரசியல்ரீதியாக மட்டும் அல்லாமல், அறிவியல் மற்றும் மருத்துவரீதியாகவும் சொந்தங்களுக்குள், சொந்த சாதிக்குள் நடைபெறும் திருமணம் எப்படி ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பதிவுசெய்ய விரும்பினேன். அதன் விளைவுதான் இந்தக் குறும்படம்!'' -  நிதானமாக, மிகத் தீர்க்கமாகப் பேசுகிறார் பூங்குழலி.
 
 'கருந்திணை’ என்ற மாற்றுவாழ்வியலுக்கான பெரியார் அமைப்பின் சார்பில், மருத்துவரீதியாகவும் மரபியல்ரீதியாகவும் நெருங்கிய சொந்தங்களுக்குள் நடைபெறும் திருமணம் ஏற்படுத்தும் பாதிப்புகளை 'தீ வரைவு’ என்ற குறும்படத்தில் விரிவாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் பூங்குழலி.
 
  'தீ வரைவு’ என்றால், தீய திருமணம் என்று பொருள். இந்தக் குறும்படத்தை, கல்லூரிகளில் திரையிடவிருக்கிறார். பெண்ணியம், பெரியாரியம் இரண்டிலும் ஈடுபாடுகொண்ட பூங்குழலி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் மகள்.
 
 
சமீபத்திய மரபணு ஆய்வு முடிவுகள், இந்திய மக்களிடம் 72 இனங்களின் சாயல்கள் இருப்பதாகத் தெரிவித்திருப்பதைச் சொல்லும் இந்தக் குறும்படம், 'எனவே, கலப்பே இல்லாத தூய இனம் என்பது சாத்தியம் இல்லை’ என்கிறது.
 
மருத்துவ நிபுணர்களும் நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்வதன் ஆபத்தை இந்தப் படத்தில் எடுத்துச் சொல்கிறார்கள். ''நமது ஒவ்வொரு திசுக்களிலும் 46 வகையான மரபணுச் சரங்கள் உள்ளன. இவைதான் நமது பண்புகளையும் நோய்க்கூறுகளையும் காலங்காலமாக நம் மரபணுக்களில் கடத்துகின்றன. எனவே, நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்யும்போது, பரம்பரை நோய்கள் மரபணுரீதியாகத் தொடர்வதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன'' என்கிறார் மரபணு ஆராய்ச்சியாளர் அரவிந்த் ராமநாதன்.
 
கும்பகோணத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மஞ்சுளா, தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மூலம் இதை எளிதாக அறிய முடியும் என்கிறார். அதற்கு ரத்தமும் உயிருமான சாட்சியங்களாகச் சொந்தங்களுக்குள் திருமணம் செய்து பாதிப்புக்கு உள்ளானவரின் பேட்டி களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவை மனதை அதிரவைக்கின்றன.  
       
கும்பகோணத்தைச் சேர்ந்த சுஜிதா என்கிற பெண்ணுக்கு, மூன்று பிரசவங்களிலும் வயிற்றுக்குள் குழந்தை இறந்தே பிறந்ததை அவரது தாயார் கண்ணீர் மல்கக் கூறுகிறார். இத்தகைய திருமணங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை வயிற்றுக்குள் இருக்கும்போதே ஸ்கேன் மூலம் தெரிந்துகொள்பவர்கள், கலங்கிய கண்களுடன் கருச்சிதைவு செய்துகொள்வதையும் அறிய முடிகிறது.
 
''மனிதர்களிடையே, இதுவரை 18- விதமான ஊனங்கள் அடையாளம் கண்டு வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை தாண்டியும் நூற்றுக் கணக்கான ஊனங்கள் உள்ளன. பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள், நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்துகொண்டதால் உருவானவர்களே'' என்கிறார் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தீபக்.
 
 
''இப்படிக் குறைபாடுள்ள குழந்தைகள் பிறந்தவுடன் பெரும்பாலும் பெண்கள் மீதுதான் பழி போடப்படுகிறது. இந்த நோய்க்கூறுகள் கணவன், மனைவி என யாருடைய பரம்பரையில் இருந்தும் வந்திருக்கலாம். ஆனால், இதற்கு மனைவிதான் காரணம் என்று ஆண்கள் அந்தப் பெண்ணையும், மாற்றுத்திறனாளிக் குழந்தையையும் கைவிடுவது சாதாரணமாக நடக்கிறது'' என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் டாக்டர் ஜெயந்தினி.
 
''சரி, நோய் மட்டும் பரம்பரை, பரம்பரையா வரும்னு சொல்றீங்களே. எங்க சாதி வீரமும் அப்படிப் பரம்பரை பரம்பரையா வராதா?'' என்று ஒரு கிராமத்து இளைஞர் கேள்வி எழுப்புகிறார்.
 
''இல்லை. வீரம் மாதிரியான குணங்கள் பிறப்பில் இருந்தே ஒருவருக்கு வருவது இல்லை. அவருடைய வளரும் சூழல்தான் அதை உருவாக்குகிறது. ஆனால் நோய்க்கூறுகள், மரபணு வழியாகப் பரம்பரை, பரம்பரையாகத் தொடரும் சாத்தியம் உள்ளது'' என்கிறார் மானுடவியல் ஆய்வாளர் சத்தியபால்.
 
மரபணு ஆராய்ச்சியாளர் அரவிந்த் ராமநாதனோ, ''வெவ்வேறு கலாசாரப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் புதிய கலாசார அனுபவமுள்ள, அறிவுத்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இனக்கலப்பு இல்லை என்றால், பரிணாம வளர்ச்சி என்பதே இல்லை. எனவே, சாதியைக் கடப்பது மட்டுமல்லாமல், மதம் கடந்து, இனம் கடந்து திருமணங்கள் செய்யப்பட வேண்டும்'' என்கிறார்.
 
''சொந்தங்களுக்குள் திருமணம் என்பது, வேறு ஒன்றும் இல்லை, சொந்தச் சாதிக்குள் நடைபெறும் திருமணம்தான். மீண்டும் மீண்டும் இப்படி நடைபெறுகிற நமது திருமணங்கள் நம்மைக் குறுகியக் கலாசாரத்துக்குள் அடைத்து அறிவுத்திறனை மழுங்கடிக்கிறது என்பதை நாம் உணரவேண்டிய தருணம் இது'' என்கிறார் பூங்குழலி.
 
மீண்டும் மீண்டும் அகமண முறையை ஆதரித்து இந்தக் குறும்படத்தில் பேசுபவர்கள் ஒரே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார்கள். 'சொத்தையும் சொந்தங்களையும் தக்கவைத்துக்கொள்ளத்தான் சொந்தங்களுக்குள் திருமணம் செய்துகொள்கிறோம்’.
 
'சொத்தையும் சாதியையும் காப்பாற்றுவது சரி, அடுத்த தலைமுறையைக் காப்பாற்றுவதில் உங்களுக்கு அக்கறை இல்லையா?’ என்ற கேள்வியைத்தான் அழுத்தமாகக் கேட்கிறது 'தீ வரைவு’.

Thursday, May 15, 2014

கற்க கசடற.... விற்க அதற்குத் தக
பாரதி தம்பி, ஓவியம்: ஹாசிப்கான்
 
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விடுவதைக் காட்டிலும் பிள்ளைக்கு எல்.கே.ஜி. சீட் வாங்குவதுதான் இன்றைய தேதிக்கு சவால்!
 
சிபாரிசு, நன்கொடை, காத்திருப்பு, அவமானம்... என இதன்பொருட்டு எந்தத் துன்பங்களையும் சுமக்க, பெற்றோர்கள் தயார். குழந்தை பிறந்து தவழ ஆரம்பிக்கும்போதே போர்க்களத்துக்குத் தயாராவதைப் போல ஒவ்வொன்றாக விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். எந்தப் பள்ளி, எவ்வளவு ஃபீஸ், யாரைப் பிடித்தால் சீட் கிடைக்கும், ஒருவேளை இந்தப் பள்ளியில் சீட் கிடைக்காவிட்டால் வேறு எந்தப் பள்ளியில் சேர்ப்பது என... கல்யாணத்துக்கு வரன் பார்ப்பதைவிடவும் அதிகமான விசாரணைகள். மழலை மாறாத மூன்று வயதுக் குழந்தையைப் பள்ளிக்கூடம் அனுப்ப, ஒட்டுமொத்தக் குடும்பமும் சிந்திக்கிறது; உழைக்கிறது. இதுவா, அதுவா, மெட்ரிக்கா, சி.பி.எஸ்.சி-யா எனப் பட்டிமன்றம் நடத்துகிறது.
 
 
பெற்றோர் சும்மா இருந்தால்கூட சுற்றி இருப்பவர்களும் சொந்தக்காரர்களும் 'என்னாச்சு... பையனை எந்த ஸ்கூல்ல போடப் போறீங்க?’ என்று விசாரிக் கின்றனர்; புத்திமதி சொல்கின்றனர். விளைவு, பள்ளியில் சேர்த்துவிட்ட பிறகு யாராவது, 'அந்த ஸ்கூல் பிரமாதமா இருக்கு!’ என்று வேறு ஒரு பள்ளியைச் சொல்லிவிட்டால், 'தவறு இழைத்துவிட் டோமோ?’ என்று பெற்றோர்கள் குற்றணர்வு அடைகிறார்கள். மொத்தத்தில், பெற்றோரின் சிந்தனை யின் ஒவ்வோர் இழையும் பிள்ளையின் பள்ளிக்கூடத்தைச் சுற்றியே பின்னப்படுகிறது.
 
''போன பிப்ரவரி மாசம், சென்னை, வளசரவாக்கத்தில் இருக்கிற ஒரு ஸ்கூல்ல என் பையனுக்கு பிரி-கே.ஜி. சீட் கேட்கப் போனேன். 'நீங்க மூணு வருஷத்துக்கு முன்னாடியே குழந்தை பிறந்ததுமே வந்திருக்கணும். அப்பவே எல்லாம் புக் ஆகிடுச்சு’னு சொன்னது, தாங்க முடியாத கொடுமை. என் பையனுக்கு வயசே ரெண்டரைதான் ஆகுது. மூணு வருஷத்துக்கு முன்னாடியே புக் பண்ணணும்னா, குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடியே பண்ணிடணும் போல இருக்கு'' என்று அதிர்ச்சி விலகாமல் சொன்னார் அந்த நண்பர். இதுபோல பெற்றோர்களுக்குப் பல அதிர்ச்சிகள்.
 
சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள சி.பி.எஸ்.சி. பள்ளி ஒன்றில் தன் இரண்டரை வயது மகளை பிரி-கே.ஜி-யில் சேர்க்க 1.80 லட்சம் ரூபாய் கட்டியிருக்கிறார் ஒருவர். வெவ்வேறு பெயர்களில் வசூலிக்கப்படும் மற்ற கட்டணங்களையும் சேர்த்தால், இது இரண்டு லட்ச ரூபாய் ஆகிவிடும்.
 
இரண்டரை வயதுக் குழந்தையை, பால்வாடிக்கு அனுப்ப இரண்டு லட்சமா?
''இதில் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை. அதுக்கு எந்த ரசீதும் கிடையாது. பணத்தைக் கொடுத்ததும் எண்ணிவெச்சுக்குவாங்க, அவ்வளவுதான். என்கிட்ட பணத்தை வாங்கிட்டு, 'கவுன்டர்ல அப்ளிகேஷன் வாங்கிக்கோங்க’னு சொன்னார் ஒருவர். அங்கே போய்க் கேட்டா, 500 ரூபாய் கேட்கிறாங்க. 'இப்பத்தானே உள்ளே ஒரு லட்சம் கொடுத்தேன்’னு சொன்னா, 'அது வேற, இது வேற. அப்ளிகேஷன் விலை 500 ரூபாய்’னு பதில் வருது. சரினு அதையும் கொடுத்து வாங்கி நிரப்பிக் கொடுத்தா, 'புராசஸிங் ஃபீஸ்’னு சொல்லி இன்னொரு 500 ரூபாய் கேட்கிறாங்க. ஹவுஸிங் லோன் வாங்கும்போதுதான், புராசஸிங் ஃபீஸ் எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். இப்போ பிள்ளையை ஸ்கூல்ல சேர்க்கவே இந்த நிலைமை'' என்று புலம்புகிறார். பெரும்பாக்கத்தில் உள்ள நான்கைந்து பள்ளிகளில் அதுவே சிறந்தது என்று எல்லோரும் சொல்வதால், அதில் கொண்டுபோய் சேர்த்துள்ளார். மீதம் உள்ள 80 ஆயிரம் ரூபாயை இன்னும் ஒரு மாதத்தில் கட்ட வேண்டுமாம்.
 
எல்லாம் முடிந்த நிலையில் இப்போது பள்ளி நிர்வாகத்திடம் இருந்து இவருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'குழந்தைக்கு எல்லா சொட்டு மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளதா? உடல்நிலை, மனநிலை சரியாக உள்ளனவா? ஏதேனும் நோய்கள் இருக்கின்றனவா?’ என்று ஊர்ப்பட்ட கேள்விகள். இவற்றுக்கு எல்லாம் பதில் வாங்கி மருத்துவச்சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும். ''இதுல என்ன கொடுமைனா, இந்த நிமிஷம் வரைக்கும் அவங்க என் மகளைப் பார்க்கவே இல்லை. ஆளையே பார்க்காம அட்மிஷன் போட்டுட்டாங்க. பணம் மட்டும்தான் அவங்களோட நோக்கம்'' என்று தெள்ளத் தெளிவாகப் பேசும் அவர், பிறகு ஏன் அந்தப் பள்ளியிலேயே கொண்டு சேர்க்கிறார்?
 
''வேற வழி இல்லைங்க. ஊர்ல எல்லா ஸ்கூலும் இப்படித்தான் இருக்கு. அதுல ஏதோ ஒரு ஸ்கூலைத்தான் நாம செலக்ட் பண்ணணும். 'வீட்டுப் பக்கத்துல இருக்கிற சின்ன ஸ்கூல்ல சேர்க்க வேண்டியதுதானே?’னு கேட்கலாம். என்ன பிரச்னைனா, நான் குடியிருக்கிற அப்பார்ட்மென்ட்ல எப்படியும் 30 குழந்தைகள் இருப்பாங்க. பெரும்பாலான குழந்தைகள் அந்த ஸ்கூல்லதான் படிக்கிறாங்க. நான் மட்டும் சின்ன ஸ்கூல்ல சேர்த்துவிட்டா, அது என் மகளோட மனசுல தாழ்வுமனப்பான்மையை உருவாக்கிடுமோனு பயமா இருக்கு. எனக்கு என் மகளோட எதிர்காலம்தானேங்க முக்கியம்'' என்கிறார்.
 
பெற்றோர்களின் இந்த எண்ண ஓட்டம் உண்மைதான் என்றபோதிலும், இதில் குழந்தைகளை மட்டுமே காரணமாகச் சொல்வது முழு உண்மை அல்ல. பெற்றோர்களைப் பொறுத்தவரை, தங்கள் குழந்தைகள் புகழ்பெற்ற பள்ளியில் படிப்பதைத்தான் விரும்புகின்றனர். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இத்தகைய பெயர் வாங்கிய பள்ளியில் படித்தால்தான், தரமான கல்வி கிடைக்கும். அதுதான் குழந்தையின் எதிர்காலத்தை உத்தரவாதப் படுத்தும் என்ற எண்ணம். இரண்டாவது, அத்தகைய பெரிய பள்ளிக்கூடங்களில் தன் பிள்ளை படிப்பதுதான் தங்களுக்குக் கௌரவம். ஒரு பள்ளியை இறுதி செய்வதில் இந்த இரண்டும் பெரும்பங்கு வகிக்கின்றன!
 
 
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள டி.ஏ.வி. பள்ளிக்கூடம் இதற்குச் சிறந்த உதாரணம். ஒவ்வோர் ஆண்டும் இங்கு விண்ணப்பப் படிவம் வாங்கும்போது நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் சாலையோர பிளாட்பாரத்தில் நாளிதழ்களை விரித்துப்போட்டு இரவெல்லாம் படுத்திருப்பார்கள். உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள், அதிகாரிகள், வி.ஐ.பி-கள்... எனப் பலரும் அங்கு 'பெர்த்’ பிடித்திருப்பார்கள்.
 
கடந்த ஆண்டு ஒரு நள்ளிரவில் அங்கு சென்றபோது, கிட்டத்தட்ட அண்ணாசாலை வரைக்கும் வரிசையாகப் பெற்றோர்கள் படுத்திருந்தார்கள். தற்காலிக டீக்கடைகள்கூட முளைத்திருந்தன. அப்போது, திடீர் என ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. போலீஸைப் பார்த்ததும் மக்கள் கொஞ்சம் பயந்து எழுந்துகொள்ள, ஜீப்பில் இருந்து மஃப்டி உடையில் இறங்கிய இன்ஸ்பெக்டர், அதுவரை அங்கு படுத்திருந்த தன் மனைவியை ஜீப்பில் ஏற்றி அனுப்பிவிட்டு அவர் படுத்துக்கொண்டார். இத்தனைக்கும் அந்தப் பள்ளியில் சீட் கிடைக்கப்போவது உறுதி அல்ல. வெறுமனே விண்ணப்பப் படிவம் வாங்கவே இவ்வளவு போட்டி.
 
இப்படி தமிழ்நாடு முழுக்க பல பள்ளிக்கூடங்கள் உள்ளன. பெற்றோர்கள் எப்படியாவது அதில் சீட் வாங்கத் துடிக்கின்றனர். தங்களுக்குச் சாத்தியமான அத்தனை தொடர்புகளையும் பயன்படுத்துகின்றனர்.
 
னக்குத் தெரிந்த ஒரு குடும்பம், எட்டாம் வகுப்புப் படித்து முடித்துள்ள தன் மகனை சென்னையின் புகழ்பெற்ற ஒரு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, திண்டுக்கல்லில் இருந்து முகப்பேருக்குக் குடிபெயர்ந்து இருக்கிறது. அவர்களுக்கு சென்னையில் வேறு எந்த வேலையும் இல்லை. பார்த்துகொண்டிருந்த வேலையை இதற்காகவே விட்டுவிட்டு, வேறு வேலையில் சேர்ந்திருக்கிறார் அந்தக் குடும்பத் தலைவர். ''பசங்களோட எதிர்காலம் நல்லா இருக்கணும்னா, இதை எல்லாம் செஞ்சுதான் சார் ஆகணும்'' என்கிறார்.
 
வேலையை விடுவது, ஊர் மாறுவது மட்டுமா... புகழ்பெற்ற பள்ளிகளில் மகனை/மகளைச் சேர்ப்பதற்காகப் பெற்றோர்கள் செய்யும் 'தியாகத்தின்’ பட்டியல் இன்னமும் நீளும்!
 
பள்ளிக்கூடத்துக்கு அருகே வீடு மாற்றுவது, நகைகளை அடமானம் வைப்பது, சொத்துகளை விற்பது, ஊரே கழுவி ஊற்றும் ஊழல்வாதியாக இருந்தாலும் மானம் மரியாதை பார்க்காமல் சிபாரிசுக் கடிதம் வாங்க அலைவது, பணத்தையும் பிடுங்கிக்கொண்டு தடித்தனமாகப் பேசும் பள்ளி நிர்வாகத்தை எதிர்க்க முடியாத இயலாமை, நெருங்கிய சொந்தங்களின் திருமணத்துக்குக்கூட குடும்பத்துடன் செல்ல முடியாத கொடுமை, இவற்றின் பலனாக நிம்மதி இழந்து, தூக்கம் கெட்டுப் பரிதவிப்பது... என்று பெற்றோர்களின் 'தியாகம்’ பெரியது.
 
பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி இந்தத் துன்பங்களை ஏற்கின்றனர். ஆனால், இந்தத் தியாகத்தின் பயனாளிகள் யார்?
 
''நம்ம வாழ்க்கைதான் இப்படிப் போயிடுச்சு. பசங்களாவது நல்லா இருக்கட்டும்'' என்ற ஏக்கம்தான் எல்லாவற்றுக்குமான அடிப்படை. அவர்கள் தங்கள் தலைமுறையின் வளர்ச்சியை, தான் நிற்கும் இடத்தில் இருந்து ஓர் அடியேனும் முன் நகர்த்த நினைக்கின்றனர். சிலர், நான்கு தலைமுறை முன்னேற்றத்தை ஒரே தாவலில் கடந்துவிட முயற்சிக்கின்றனர். தன் முதுகுக்கு இந்தப் பாரம் அதிகம் என்று தெரிந்தாலும் சுமப்பது அதனால்தான். அந்த அன்பில் பழுது ஏதும் இல்லை. ஆனால், இந்தக் கண்மூடித்தன மான அன்புதான், கல்வியின் பெயரால் பெற்றோர்கள் சுரண்டப்படுவதற்கான அடிப்படை.
 
உயிருக்குப் போராடும் ஒருவரை, 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர். எப்படியாவது காப்பாத்திடுங்க’ என்று சொல்லிச் சேர்க்கும்போது, நிபந்தனையற்று நம்மைச் சுரண்டும் உரிமையையும் சேர்த்தே வழங்கிவிடுகிறோம். 'என் பிள்ளை வாழ்க்கை நல்லா இருந்தா போதும்’ என்று எண்ணி, புகழ்பெற்ற தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லும்போதும் இதுதான் நடக்கிறது.
 
அவர்கள், ரத்தமும் சதையுமான உங்கள் பிள்ளையை, பணம் காய்க்கும் இயந்திரமாகப் பார்க்கிறார்கள். ஒரு பள்ளியில் எல்.கே.ஜி-க்கு 50 ஆயிரம் கட்டணம் வாங்குகின்றனர் என்று வையுங்கள். ஒரு செக்ஷனுக்கு 50 பேர் என்றால் நான்கு செக்ஷன்களுக்கு 200 பேர். மொத்தம் ஒரு கோடி ரூபாய். அப்படியே ஒவ்வொரு வகுப்பறையாகக் கணக்கிட்டால், இந்தத் தொகையின் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம். புற்றீசல் போல பல்கிப் பெருகியிருக்கும் தனியார் பள்ளிகளின் ஒரே இலக்கு, இந்தப் பணம்தான். அதே நேரம், அவர்கள் தங்களுக்குச் சந்தையில் டிமாண்ட் இருப்பது போன்ற தோற்றத்தையும் தக்கவைக்க வேண்டியிருக்கிறது. ''அஞ்சு சீட்தான் இருக்கு'' என்று உள்ளே வரும் ஒவ்வொரு பெற்றோரிடமும் சொல்கிறார்கள். விளைவு... ஐந்தில் ஒன்றைப் பெற்றிட பெற்றோர்கள் துடிக்கின்றனர்.
 
இன்று, தமிழ்நாட்டில் மட்டும் 3,890 மெட்ரிக் பள்ளிகளும், 499 சி.பி.எஸ்.சி. பள்ளிகளும் இருக்கின்றன. பளபளக்கும் பிரமாண்ட கட்டடங்களைக்கொண்டிருப்பவை மட்டுமல்ல; தெருமுக்கில் நான்கு கிரவுண்டு இடத்தில் நடத்தப்படும் பள்ளியும் இதில் அடக்கம். எதுவாக இருந்தாலும் குறைந்தது 10 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, 30 ஆயிரம், 40 ஆயிரம், 50 ஆயிரம் என்று அதிகரித்துக் கொண்டே போகிறது.
 
10 ஆயிரம் சம்பாதிப்பவர், கடன் வாங்கி தன் பிள்ளையை 50 ஆயிரம் ரூபாய் பள்ளியில் சேர்க்கிறார் என்றால், 20 ஆயிரம் சம்பாதிப்பவர் ஒரு லட்ச ரூபாய் பள்ளியில் சேர்க்கிறார். தொகை அதிகரிக்க... அதிகரிக்க, தங்கள் கௌரவத்தின் படிநிலை உயர்வதாகவும், குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்பு உத்தரவாதப்படுவதாகவும் பெற்றோர்கள் கருதுகின்றனர். ஆனால், '10 ஆயிரம் ரூபாய் ஸ்கூல், 30 ஆயிரம் ரூபாய் ஸ்கூல்’ என்று பள்ளிக்கூடங்களைப் பணத்தை வைத்து பாகுபடுத்துவதன் மூலம், சிறுவயதிலேயே குழந்தைகளின் மனதில் ஏற்றத்தாழ்வுகள் இயல்பானவை என்று பதிந்துபோகிறது.
 
ஒரு தெருவில் 10 குழந்தைகள் இருக்கிறார்கள், அதில் 4 பேர் பணக்காரப் பள்ளியிலும், 4 பேர் ஓரளவு பணக்காரப் பள்ளியிலும், 2 பேர் அரசுப் பள்ளியிலும் படிக்கிறார்கள் என்றால்... அந்த 10 குழந்தைகளின் நட்பு எப்படி சம இயல்புள்ளதாக இருக்கும்? பள்ளியில் ஏழை நண்பன், தெருவில் பணக்கார நண்பன் என்ற முரண்பாடு, அவர்களுக்குப் பயிற்றுவிப்பது என்ன? ஏற்றத்தாழ்வுகளும் வேறுபாடுகளும் மிகவும் சாதாரணமானவை என எண்ணத் தொடங்குகிறார்கள். இது கல்வியுடன் மட்டும் முடியாமல் உணவில், உடையில், பயன்படுத்தும் பொருள்களில், வாகனங்களில்... என அனைத்து வேறுபாடுகளிலும் நீள்கிறது.
சாதி வேற்றுமைகூட அவர்களுக்குத் துருத்தலாகத் தெரியவில்லை. அதையும் ஓர் இயல்பு போல ஏற்றுக்கொள்கின்றனர். நாகரிகத்தை வளர்க்கவேண்டிய கல்வி, அநாகரிகத்தையும், சமத்துவத்தை உருவாக்க வேண்டிய கல்வி, பாகுபாட்டையும் வளர்ப்பது இவ்வாறுதான். பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் இந்த அநீதியான கல்விக்கு அடிப்படையாக இருப்பது எது?
மர்மம் விதைக்கும் நியூட்ரினோ
பாரதி தம்பி, படங்கள்: வீ.சக்தி அருணகிரி
 
டுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தை அலறவைக்கப்போகிற சொல்... 'நியூட்ரினோ’!
1,450 கோடி ரூபாய் செலவிலான நியூட்ரினோ ஆய்வு மையம் தேனி அருகே தேவாரம் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்தத் திட்டம் தங்களுக்கு நன்மையானதா, தீமையானதா என்பது யாருக்கும் தெரியவில்லை. பலர் அஞ்சுகின்றனர்; சிலர் நன்மை நடக்கும் என்கின்றனர். ஆனால், யாருக்கும் நியூட்ரினோ திட்டம் என்பது என்ன என்பதுகூட தெரியவில்லை. தெரிந்தது எல்லாம், 'பூமிக்குள்ள பெருசா குகை தோண்டி எதையோ ஆராய்ச்சி செய்யப்போறாங்க’ என்பது மட்டும்தான். இந்தப் பகுதியில் உள்ள அமைப்புகளும் இயக்கங்களும்கூட, இதைப் பற்றி அதிகம் அறியவில்லை. அந்த அளவுக்கு அரசு இந்தத் திட்டம் பற்றி மௌனம் காக்கிறது.
 
இதற்கிடையில் கேரள கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன், 'நியூட்ரினோ ஆய்வு மையம் என்பது, அணுக் கழிவுகளைக் கொட்டுவதற்காகவே உருவாக்கப்படுகிறது’ என்று கூறியிருப்பது சர்ச்சையை வலுவாக்கியுள்ளது.
 
நியூட்ரினோ திட்டம் என்றால் என்ன?
 
''நியூட்ரினோ என்பது சூரியனில் இருந்தும், இந்தப் பேரண்டத்தின் மற்ற விண்மீன்களில் இருந்தும் வெளிப்படும் துகள். இது மிக, மிக நுண்ணியது. எந்த அளவுக்கு என்றால், ஒரு மில்லிகிராம் எடையில் பல கோடி, கோடி நியூட்ரினோ துகள்கள் இருக்கும். மனிதன் இதுவரை கண்டறிந்த பொருள்களிலேயே எடை குறைந்தது இதுதான். இந்த நியூட்ரினோ துகள், கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியது. தன் எதிரில் உள்ள எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியது. உதாரணமாக, இப்போது இதை வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணத்தில்கூட, பல்லாயிரம் கோடி நியூட்ரினோ துகள்கள் உங்களை ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கும். மனித உடம்பை மட்டுமல்ல... மொத்த பூமியையும் குறுக்கும் நெடுக்குமாக ஒவ்வொரு கணமும் கோடானு கோடி நியூட்ரினோக்கள் ஊடுருவிச் சென்றுகொண்டே இருக்கின்றன. பூமியின் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் ஊடுருவி சென்று அண்ட சராசரத்தில் கலந்துவிடுகின்றன.
 
பொதுவாக ஒரு பொருளை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால், அது மற்ற பொருள்களுடன் எப்படி வினை புரிகிறது என்பதை வைத்தே அந்த ஆய்வு செய்யப்படும். ஆனால் நியூட்ரினோ என்பது, வேறு எந்தப் பொருளுடனும் வினை புரியாத, மின்காந்த சக்தியற்ற ஒரு துகள். யாருடனும் ஒரு வார்த்தைக்கூடப் பேசாத இறுக்கமான ஒரு நபரைப் புரிந்துகொள்வது சிரமம்தானே..? நியூட்ரினோவுக்கும் அது பொருந்தும். இதனால் நியூட்ரினோ மீதான உலக விஞ்ஞானிகளின் ஆய்வு மோகம் அதிகரித்தது.
 
 
1956-ல் ஃபெடரிக் ரெய்னஸ் என்கிற அறிவியலாளர், நியூட்ரினோ துகள் இருப்பதை தனது ஆய்வுகள் மூலம் அறிவியல்பூர்வமாக நிரூபித்தார். இதற்காக பின்னர் இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. எனினும், அதன் பிறகான நியூட்ரினோ ஆய்வுகள் ஒன்றும் சூடுபிடித்துவிடவில்லை. மெத்தப் படித்த அறிவியலுக்கு அந்தச் சின்னஞ்சிறிய துகள்கள் இப்போது வரை சவால்விடுகின்றன.
 
நியூட்ரினோ ஆய்வில் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக இருப்பது, பூமியின் மேற்பரப்பின் மீது பரவியிருக்கும் காஸ்மிக் கதிர்கள்தான். நியூட்ரினோ சோதனையின் போது காஸ்மிக் கதிர்களும் வினை புரிகின்றன. இதனால் சோதனையின் முடிவில், இது காஸ்மிக் கதிர் ஏற்படுத்தியதா, நியூட்ரினோ ஏற்படுத்தியதா என்று குழப்பம் வந்துவிடுகிறது. ஆகவே, காஸ்மிக் கதிர் ஊடுருவாத இடத்தில் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது.
 
1985-ல் ஜப்பானில் 1,000 மீட்டர் சுரங்கம் அமைத்து ஆராய்ச்சியைத் தொடங்கினார்கள். கனடாவின் சட்பரி (Sudbury) என்ற இடத்தில் 2,000 மீட்டர் ஆழத்திலும், ஃபிரான்ஸ் நாட்டில் ஆன்ட்டெரீஸ் (Antares) என்ற இடத்தில் கடலுக்கு அடியில் 2,500 மீட்டர் ஆழத்திலும் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அன்டார்டிகா பனிப் பிரதேசத்தில் 2,000 மீட்டர் ஆழத்தில் துளையிட்டு நியூட்ரினோ ஆய்வகத்தை நிறுவியுள்ளது அமெரிக்கா. இப்போது இந்தியாவில் முதன்முறையாக தேனியில் நிலத்துக்கும் கீழே சுமார் 2.5 கி.மீ. ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்போகின்றனர். இதுதான் உலகளாவிய அளவில் நியூட்ரினோ ஆய்வின் வரலாறு'' என்று விளக்குகிறார் 'சிறகு’ இணையதளத்தில் இதுகுறித்து கட்டுரைகள் எழுதி வரும் சாகுல் ஹமீது. மதுரையைச் சேர்ந்த இவர், இப்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
 
ஏன் தேனி?
 
தேனி, தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் கிராம எல்லையில் உள்ள மலைப்பகுதிதான் ஆய்வகம் அமையவிருக்கும் இடம். இதை India-based Neutrino Observatory (INO) என்கிறார்கள். சுருக்கமாக, ஐ.என்.ஓ.
 
கடந்த பிப்ரவரி மாதம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட மன்மோகன் சிங், இந்தத் திட்டத்துக்கு 1,450 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கினார். எனினும், பல்லாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு தொடங்கிவிட்டது. கோலார் தங்கச் சுரங்கத்தில் 2,500 மீட்டர் ஆழத்தில் செயல்பட்டுவந்த ஆரம்ப நிலையிலான நியூட்ரினோ ஆய்வு, 1992-ல் சுரங்கம் மூடப்பட்டதும் தனது பணிகளையும் நிறுத்திக்கொண்டது. அதன் பிறகு புதிய ஆய்வகம் அமைக்க இடம் தேடி அலைந்தனர். முதலில் தேர்வு செய்யப்பட்டது முதுமலை காட்டில் உள்ள 'சிங்காரா’ என்ற இடம். அது வனவிலங்குகள் செறிவாக வசிக்கும் ரிசர்வ் வனப்பகுதி என்பதாலும், எதிர்ப்புகள் பலமாக இருந்ததாலும் திட்டம் கைவிடப்பட்டது. பிறகு, பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் தேனியில் வந்து நிலைகொண்டது. இப்போது பொட்டிபுரத்தில் ஐ.என்.ஓ. செயல்படுத்தப்படும் இடத்தைச் சுற்றி சுமார் ஐந்து கி.மீ. சுற்றளவுக்கு கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளது. உள்ளே பிரமாண்டத் தண்ணீர் தொட்டி ஒன்று  கட்டப்பட்டுள்ளது. அந்தத் தொட்டிக்கு உப்புக்கோட்டை முல்லைப்பெரியாற்றில் இருந்து குழாய் மூலமாகத் தண்ணீர் வருகிறது. சுரங்கம் தோண்டுவதற்கான வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
 
 
என்னதான் பிரச்னை?
 
'இதுதான் திட்டம், இதைத்தான் செய்யப்போகிறோம்’ என்று மக்களுக்கு விளக்காததுதான் முதல் பிரச்னை. உலகில் வெகுசில இடங்களில் மட்டுமே இருக்கும் அறிவியல் ஆய்வகத்தைக் கொண்டுவரப் போகும் நிலையில், அதுகுறித்து மக்களிடம் விளக்கிச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அரசோ, ஆரம்பத்தில் இருந்தே மிகவும் மர்மமான அணுகுமுறையைக் கையாள்கிறது. அரசியல் கட்சிகளும்கூட இந்த விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றன. வழக்கமாக இதுபோன்ற பெருந்திட்டங்களை 'நாங்கள்தான் கொண்டுவந்தோம்’ என்று கட்சிகள் உரிமை கோருவார்கள். ஆனால், தேர்தல் சமயமாக இருந்தும்கூட யாரும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. யாருடைய கவனத்திலும் நிகழ்ச்சி நிரலிலும் இந்தத் திட்டம் இடம்பெறாதது ஏன்?
 
''நாங்கள் இந்தத் திட்டம் கொண்டு வரப்படுவதை எதிர்த்து சாலை மறியல் செய்தோம். ஆனால், ஊருக்குள் புகுந்து எங்களை எல்லாம் பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் உட்காரவைத்து, ஐந்து பேர் மீது வழக்குப் போட்டு கடுமையாக மிரட்டினார்கள்'' என்று இப்போதும் அச்சத்துடன் பேசுகின்றனர் ஐ.என்.ஓ. திட்டத்தின் நுழைவிடத்தில் உள்ள புதுக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள். மிகவும் செழிப்பான இந்தப் பகுதியில் ஏராளமான காய்கறிகள் விளைகின்றன. எதிர்காலத்தில் நிலம் பறிக்கப்படலாம் அல்லது நீர் பஞ்சம் ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படலாம் என்பது இந்த மக்களின் பயம். தங்களை ஊரைவிட்டே காலி செய்துவிடுவார்களோ என்றும் அஞ்சுகின்றனர். வைகை அணைக்கு தங்கள் கிராமங்களைத் தாரை வார்த்தவர்களை அறிந்துள்ள இவர்கள், தங்களுக்கும் அந்த நிலை வரலாம் என்று நினைக்கின்றனர்.
 
இந்தப் பகுதி கிராமங்களில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நியூட்ரினோ திட்டம் குறித்து சில விஞ்ஞானிகள் மூலம் விழிப்பு உணர்வுக் கூட்டங்களை நடத்தியது ஐ.என்.ஓ. அதன் பிறகு, யாரும் எதையும் கண்டுகொள்ளவே இல்லை. ஒருவேளை, கூடங்குளம் போராட்டத்தில் இருந்து படிப்பினையைக் கற்றுக்கொண்டிருக்கும் அரசு, நியூட்ரினோ திட்டத்தை வேறுவிதமாக அணுக முடிவெடுத்து இப்படிச் செய்யக்கூடும்.
 
''முதலில் இந்தத் திட்டம் குறித்த முழுமையான விளக்கத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதுதான் எங்கள் கோரிக்கை'' என்கிறார் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலாளரான மோகன்.
 
தேவாரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் பேசும்போது, ''கேரளாவைச் சேர்ந்த ஒருவர், ஐ.என்.ஓ. திட்டம் அமையும் இடத்தைச் சுற்றியுள்ள இடங்களை வளைத்து, வளைத்து வாங்குகிறார். நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு பத்திரப்பதிவு முடிந்ததும், பத்திரத்தை நம்மிடமே கொடுத்து, 'கேட்கும்போது நிலத்தைத் தந்தால் போதும்’ என்று சொல்லிவிடுகிறார். என்னிடம்கூட இப்படி 10 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். யாராவது பணத்தையும் கொடுத்து, நிலத்தையும் திருப்பித் தருவார்களா? ஐ.என்.ஓ-வுக்காக மறைமுகமாக நிலம் வாங்கப்படுகிறது என்பதுதான் எங்கள் சந்தேகம்'' என்கிறார்.
 
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பா?
 
நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு என்ன பிரச்னை வரும்? 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜனிடம் பேசியபோது, ''மேற்குத் தொடர்ச்சிமலை என்பது, பல்லுயிரியல் சூழலில் முக்கியமான பகுதி. தமிழ்நாட்டு நதிகளின் பிறப்பிடமும்கூட. நிறைய அணைகளுக்கான நீர்ப்பிடிப்புப் பகுதியும் அதுதான். தற்போது நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட அணைகள் இருக்கின்றன. இந்த நிலையில், சுமார் 2.5 கி.மீ. ஆழத்துக்கு பூமிக்குள் சுரங்கம் தோண்டும்போது ஏராளமான வெடிமருந்துகளை வெடிக்கச் செய்து பாறைகளைத் தகர்க்க வேண்டும். அது அணைகளுக்கும், மலைகளுக்கும், காடுகளுக்கும், உயிரினங்களுக்கும் நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
 
மற்ற நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகங்களிலும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் செயல்பட்டு வந்த ஆய்வகம் மூடப்பட்டுவிட்டது. ஜப்பானில் செயல்பட்டு வந்த ஆய்வகத்தின் உள்ளே சோதனைக் குழாய்கள் வெடித்துச் சிதறி மறுபடியும் அமைத்தனர். இப்போது மீண்டும் அது செயல்படாமல் உள்ளது. ஆகவே, இங்கு எந்தப் பாதிப்புமே வராது என்று யாரும் உத்தரவாதம் தர முடியாது. மேலும், 2.5 கி.மீ. சுரங்கம் தோண்டும்போது உருவாகும் தூசி மண்டலம், அந்தப் பகுதியை கடுமையாக மாசுப்படுத்தும். உடைக்கப்பட்ட பாறைகளை அள்ளிக்கொண்டு நூற்றுக்கணக்கான லாரிகள் குறுக்கும் நெடுக்குமாகப் பாயும். அந்தப் பகுதி கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்'' என்கிறார்.
 
 
மத்திய அரசின் 'விஞ்ஞான் பிரசார்’ அமைப்பில் பணிபுரியும் விஞ்ஞானியும் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரனின் கருத்து வேறாக உள்ளது.
 
''நியூட்ரினோ ஆய்வகம் என்பது, 100 சதவிகிதம் தெளிவான அறிவியல். அந்த அறிவியலில் கடுகளவும் பிரச்னை இல்லை. அதேபோல சுரங்கம் தோண்டுவதால் அணை பாதிக்கும், சூழல் கெடும் என்பதும் கற்பனையே. உதாரணமாக, சென்னையில் இப்போது மெட்ரோ ரயில் வேலைகள் நடக்கின்றன. கிட்டத்தட்ட 50 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைக்கிறார்கள். அதனால் ஏதாவது பெரும் பிரச்னை வந்துவிட்டதா? சென்னை போன்ற நகர்ப் பகுதியிலேயே இதை வெற்றிகரமாகக் கையாள முடியும் எனும்போது அங்கு இன்னும் சுலபமாகச் செய்ய முடியும்'' என்கிறார்.
 
அணுக்கழிவைக் கொட்டப்போகிறார்களா?
இதுதான் இருப்பதிலேயே ஆபத்தானதும், விடை காண வேண்டியதுமான சந்தேகம். அச்சுதானந்தன் மட்டுமல்ல... பத்மநாபன் என்கிற விஞ்ஞானிகூட இதுகுறித்து தொடர்ந்து எழுதிவருகிறார்.
 
அவர் தனது கட்டுரை ஒன்றில், 'சென்னை தரமணியில் உள்ள கணிதவியல் அறிவியல் நிறுவனம் (The Institute of Mathematical Sciences)தான், ஐ.என்.ஓ-வுக்கான பணிகளைச் செய்து வருகிறது. இந்தக் கணிதவியல் கழகம், ஐ.என்.ஓ-வுக்கான சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவதற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பத்தில் ஐ.என்.ஓ. என்பதை, 'அணு உலை/அணு உலை எரிபொருள் உலை/ அணு உலைக் கழிவுகள்’ என்று வகையின் கீழ்தான் குறிப்பிட்டுள்ளனர். அந்தப் பகுதியில் அணு உலை அமைக்கவோ, அணு உலை எரிபொருள் ஆலை அமைக்கவோ முடியாது. ஏனெனில், அந்த அளவுக்கான தண்ணீர் வளம் அங்கு இல்லை. ஆக, அணுக் கழிவுகளைக் கொட்டுவது மட்டும்தான் மிச்சம் இருக்கும் ஒரே வாய்ப்பு’ என்று எழுதியுள்ளார் பத்மநாபன்.
 
இதையேதான் சுந்தர்ராஜனும் கூறுகிறார். ''2013 மே 6-ல் உச்ச நீதிமன்றம் கொடுத்தத் தீர்ப்பில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்திய அணு உலைக் கழிவுகளை எங்கு புதைப்பது (Deep geological repository) என்பதை இந்திய அணுசக்திக் கழகம் முடிவுசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதுவரைக்கும் இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் அணு உலைக் கழிவுகளை ஆங்காங்கே வைத்துள்ளனர். அவற்றை மொத்தமாக ஓர் இடத்தில் புதைத்தாக வேண்டும்.
 
 
தேனியில், நியூட்ரினோ ஆய்வு மையம் என்ற பெயரில் இதைத்தான் செய்யப்போகிறார்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை ஐ.என்.ஓ. தரப்பில் இருந்து எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை. மேலும், மதுரை -
 
வடபழஞ்சியில் அணுக்கழிவு ஆய்வு மையம் அமைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதுவும் சந்தேகத்தை அதிகரிக்கிறது. அவர்கள் ஐ.என்.ஓ-வை அமைத்தாலும்கூட அதில் அணு உலைக் கழிவுகளையும் கொட்ட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை'' என்கிறார்.
 
ஆனால், த.வி.வெங்கடேஸ்வரன் இதை மறுக்கிறார். ''ஐ.என்.ஓ. ஆய்வகத்தில் அணு உலைக் கழிவுகளைக் கொட்டுவது என்பது சாத்தியமே இல்லாதது. காஸ்மிக் கதிர்களை வரவிடாமல் தடுத்து நியூட்ரினோவைப் பற்றி ஆய்வு செய்யத்தான் பூமியின் அடியாழத்துக்குச் செல்கிறோம். அப்படி இருக்கும்போது, கதிர்வீச்சை உமிழக்கூடிய அணுக் கழிவை எப்படி அதற்குள் கொட்ட முடியும்? அதிகம் வேண்டாம்... ஒரே ஒரு சாக்கு மூட்டை அளவு அணுக் கழிவைக் கட்டி அந்தச் சுரங்கத்தில் போட்டுவிட்டால்கூட நியூட்ரினோ ஆய்வை நடத்தவே முடியாது. 10 ஆயிரம் வாட்ஸ் மின்விளக்கின் முன்பு ஒரு மெழுகுவத்தியை வைத்தால், அந்த ஒளியைப் பார்க்க முடியாது இல்லையா... அதுபோல'' என்கிறார்.
 
ஆய்வின் நோக்கம் என்ன?
சரி, இவ்வளவு மெனக்கெட்டு, இத்தனை ஆயிரம் கோடிகளைக் கொட்டி, உலகம் முழுவதும் நடைபெறும் நியூட்ரினோ ஆய்வின் நோக்கம்தான் என்ன?
 
இதற்கு, தீர்மானமான விடை எதையும் சொல்ல இயலாது. ஏனெனில், அறிவியல் ஆய்வு என்பதே அனுமானங்களைச் சோதித்துப் பார்ப்பதுதான். சோதனையின் முடிவுகளில் இருந்து அது அடுத்த கட்டத்தை அடைகிறது. உதாரணமாக, நாம் பேசும் அலைபேசிகளின் அடிப்படை என்ன? ஒலி அலைகள் மின் சைகைகளாக மாற்றப்பட்டு, அவை மீண்டும் ஒலி அலைகளாகப் பெறப்படுகின்றன. இதுகுறித்த ஆரம்பக்கட்ட சோதனையின்போது, 'இதனால் என்ன லாபம்?’ என்று கேட்டிருந்தால், என்ன விடை கூறியிருக்க முடியும்?
 
1897-ல் ரூதர்போர்டு எலெக்ட்ரானைக் கண்டறிந்தார். அந்த எலெக்ட்ரான் துகள் மூலம்தான் இன்று நம் கம்ப்யூட்டர்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதை, அன்றைய நாளில் யாரும் யூகித்திருக்க முடியாது. ஆகவே, அறிவியல் ஆய்வுகளின் நோக்கத்தை திட்டவட்டமாக வரையறுத்துக் கூற முடியாது.
 
 
ஒருவேளை, நியூட்ரினோவைக் கையாளும் சாத்தியத்தைப் பெற்றுவிட்டால், முற்றிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஓர் அறிவியல் உலகத்துக்குள் நாம் பிரவேசிக்கக்கூடும். ஒளியின் வேகத்துக்கு இணையாகச் செல்லும் திறன்கொண்ட நியூட்ரினோ பூமியையே ஊடுருவிச் செல்லும் என்றால், மொத்த பூமியின் ஒவ்வொரு விநாடி அசைவையும் கண்காணிக்கும் சாத்தியம் உருவாகலாம். இந்தப் பேரண்டத்தின் பல ரகசியங்கள் திறக்கப்படலாம். இவை எல்லாமே யூகிக்கப்படும் சாத்தியங்களே. ஆனால், அவை நடக்குமா, நடக்காதா, நடந்தால் எப்போது நடக்கும்... எதுவும் தெரியாது.
 
அறிவியலா? தொழில்நுட்பமா?
''அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. அறிவியல், ஒரு விஷயத்தைச் சோதனை செய்து கண்டுபிடிக்கும். தொழில்நுட்பம், அதைச் செயல்படுத்தும். அறிவியல் ஆய்வுகளுக்கு மிகப் பெரும் முதலீடு தேவை. இந்தியா போன்ற பொருளாதாரரீதியாக இன்னும் தன்னிறைவை அடையாத, கோடிக்கணக்கான ஏழைகளைக் கொண்ட ஒரு நாடு, அறிவியல் ஆய்வுகளுக்கு பல்லாயிரம் கோடி பணத்தை வாரி இறைப்பது மிகவும் தவறானது. மாறாக, மேலை நாடுகளில் கண்டறியப்படும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் நாம் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்.
 
நியூட்ரினோ என்பது அறிவியல்; அதுவும் விடை தெரியாத, இந்தத் துகளின் மூலம் நன்மை விளையுமா, விளையாதா என்று யூகிக்க முடியாத அறிவியல். உலகம் முழுவதும் எத்தனையோ ஆயிரம் கோடிகளை அள்ளிக் கொட்டி ஆய்வு செய்தும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது, இந்தியா களம் இறங்குகிறது. தொடக்கத்தில் 1,450 கோடி ரூபாய் என்றால், போகப் போக எவ்வளவு செலவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
 
 
இந்திய மக்கள், இப்படி ஓர் ஆய்வகம் வேண்டும் என்று கேட்டார்களா? அவர்கள் கேட்பது எல்லாம் தரமான குடிநீர், நல்ல சாலைகள், வேலைக்கும் உணவுக்குமான உத்தரவாதம், குடியிருக்க வீடுகள், தரமான கல்வி, மருத்துவம் போன்றவைதான். இவற்றைச் செய்துதராத அரசு, நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதால் என்ன பயன்?
 
யாரோ சில நூறு விஞ்ஞானிகளின் அறிவை நிரூபிக்க, கோடிக்கணக்கான மக்களின் ரத்தமும் வியர்வையுமான வரிப்பணம் செலவிடப்படுவது என்ன நியாயம்? கேட்டால் வல்லரசு என்பார்கள். பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்தபோதும், இதே போன்ற வெற்றுப் பெருமிதம்தானே பேசப்பட்டது?!'' என்று கேட்கிறார் சாகுல் ஹமீது.
 
கண்ணுக்குத் தெரியாத நியூட்ரினோவைக் கண்டறிய பல்லாயிரம் கோடியை ஒதுக்கும் இந்திய அரசு, கண்ணுக்குத் தெரியும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கேவலத்தை ஒழிக்க எத்தனை ஆயிரம் கோடியை ஒதுக்கியது? அதற்கு ஒரு கருவி செய்ய எந்த ஆய்வகத்தை அமைத்தது? இரண்டையும் நேருக்குநேர் வைப்பது பொருத்தமற்ற ஒப்பீடு என்று சொல்ல முடியாது. அடிப்படை வசதிகள்கூட நிறைவேறாத, தெருப் புழுதிகளில், சாக்கடை ஓரங்களில் தலைமுறை தலைமுறையாக வாழ்கிற மக்களைக்கொண்ட இந்தியா போன்ற ஒரு நாடு, எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற கேள்விதான் இதற்கான அடிப்படை.
 

வேலைவாய்ப்புக்கு வழி இல்லை!
 
இந்த ஐ.என்.ஓ. திட்டத்தின் செயல்பாட்டில் பல ஆய்வு நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் இணைந்துள்ளன. டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம், பாபா அணுசக்தி ஆய்வு மையம், சகா அணு இயற்பியல் நிறுவனம், இந்திரா காந்தி அணு ஆய்வு மையம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி-மும்பை என்று நீளும் இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழகமும் இருக்கிறது.
 
பொதுவாக, இதுபோன்ற திட்டங்களில் வேலைவாய்ப்பு என்பது பிரதான அம்சமாகப் பேசப்படும். ஆனால், ஐ.என்.ஓ.-வைப் பொறுத்தவரை இது ஓர் அறிவியல் ஆய்வகம் என்பதால் பெரிய அளவில் வேலைவாய்ப்புக்கு வழியில்லை. வெகுசிலருக்கு, அடிமட்ட வேலைகள் கிடைக்கலாம்.
 
 இங்கு அமைக்கப்படும் ஐ.என்.ஓ. ஆய்வகம் என்பது, உலகளாவிய நியூட்ரினோ ஆய்வின் ஓர் அங்கம். மற்ற நாடுகளின் ஆய்வகங்களில் இருந்து நியூட்ரினோ இங்கு அனுப்பப்பட்டு, இங்கிருந்து அங்கு அனுப்பப்பட்டு ஆய்வுகள் நடத்தப்படும்