Thursday, September 26, 2013

தமிழை இந்தியாவின் இரண்டாவது மொழி ஆக்குங்கள்!”
பி.ஆரோக்கிய வேல்
    
 ''இந்தியாவின் வடக்குப் பகுதியில் வாழும் நம்மில் பலரும், ஒருவிதமான அகங்காரத்திலேயே இருந்துவிட்டோம். அதனால்தான் நம் சொந்த நாட்டில் பேசப்படும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும், அதன் அருமை பெருமைகளையும்  அறிந்துகொள்ளவில்லை.
 
ஏழு கடல்களையும் மலைகளையும் தாண்டி தமிழ் மொழியின் தாக்கம் பன்னெடுங்காலமாக இருந்துவந்துள்ளது. நம் நாட்டில் ஏற்பட்ட கலாசார மறுமலர்ச்சிக்கு முக்கியக் காரணமாக விளங்கிய தமிழ் மொழிக்கு, உரிய மதிப்பையும் உயரிய நிலையையும் நாம் கொடுக்கத் தவறி விட்டோம். அதனால், இப்போதாவது விழித்துக்கொள்வது நல்லது.
 
இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழைப் போதிக்கும் திட்டங்களை நாம் வகுத்தாக வேண்டும். தமிழ் படிக்க முன்வரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிபுரிகிறவர்களும் தமிழ் மொழியைக் கற்க ஊக்கப்படுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டின் இரண்டாவது தேசிய மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்!'' - இந்திய நாடாளுமன்றத்தில் முழங்கிய இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. தருண் விஜய் என்றால் நம்ப முடியுமா? அதுவும், 'இந்திதான் இந்தியாவையே இணைக்கும் மொழி’ என்பதில் உறுதியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவரின் குரல் இது என்பது கூடுதல் வியப்பு!
'பி.ஜே.பி-யின் சிந்தனைச் சிற்பிகளில் ஒருவர்’ என்று சொல்லப்படும் தருண் விஜய், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சீடர். வாஜ்பாயைத் தொடர்ந்து 'பஞ்சன்யா’ என்ற ஆர்.எஸ்.எஸ். இதழுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்தவர். அவரைத் தொடர்புகொண்டு தமிழ்க்குறித்து அவர் பேசியதற்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம். நம்மைவிட மகிழ்ச்சியாக பேசத் தொடங்கினார் தருண் விஜய்...
 
''என்னுடைய தமிழ் ஆர்வத்தைப் பார்த்த என் மகள் சாம்பவி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அவளது தோழியிடமிருந்து தமிழ்ப் புத்தகங்கள் சிலவற்றை வாங்கிவந்து கொடுத்திருக்கிறாள். வசந்தி ஸ்டான்லி போன்ற சில நண்பர்களின் உதவியோடு தமிழ் படித்துவருகிறேன். தமிழ் முனிவர் அகத்தியர் தொடங்கி சுப்பிரமணிய பாரதி வரை தமிழ் அறிஞர்கள் பலரைப் பற்றி படித்திருக்கிறேன்.
 
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சமீபத்தில் சந்தித்தபோது தமிழில் 'வணக்கம்’ என்று சொன்னேன். அதோடு பாரதியின் கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றையும் அவருக்குப் பரிசளித்தேன்!''
 
'' 'இந்தி’யைத் தாய்மொழியாகக் கொண்ட உங்களுக்கு 'தமிழ்’ மொழி மீது எப்படி இந்த அளவுக்குக் காதல்?''
''கங்கையை வணங்குவதற்கு ஒருவர் கங்கை நதிக்கரையில்தான் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுபோலத்தான், தமிழின் மேன்மையைப் போற்றுவதற்கு நான் தமிழ்நாட்டில் வாழ்பவனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை!
தமிழ் மொழி, ஒரு வானவில் போன்றது. அதன் வண்ணங்களை பல மொழிகளிலும் காண முடியும். பாரத தேசத்தின் பண்பாட்டையும் ஞானத்தையும் தமிழ் தனக்குள் தேக்கி வைத்திருக்கிறது. இந்திய மொழிகள் பலவற்றுக்கும் அதுதான் ஊற்று மொழி. குறிப்பாக, விந்திய மலைக்குத் தெற்கே இருக்கும் அனைத்து மொழிகளிலும் தமிழின் தாக்கம் மிகவும் அதிகம். அதனால் தமிழ் மொழிக்காகப் பேசவேண்டியது 'இந்தியன்’ என்ற வகையில் எனது தர்மம்.
 
உலகின் எந்தப் பெருநகரங்களுக்குச் சென்றாலும் அங்கே ஜெர்மன், ஃப்ரெஞ்சு மொழிகளைக் கற்றுக்கொடுக்க ஏராளமான கல்வி நிலையங்கள் இருக்கின்றன. இந்த மொழிகளைக் காட்டிலும் இலக்கணமும் இலக்கியச் செறிவும்கொண்ட மொழி, தமிழ். ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, ஜெர்மன் மொழிகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவமும் மரியாதையும் ஏன் தமிழுக்குத் தரப்படவில்லை என்பதே என் ஆதங்கம்!''
 
''வட இந்தியர்கள் தமிழைத் தள்ளிவைப்பதற்கு என்ன காரணம்?''
'' 'இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற மாநிலம்’ என்று மட்டும்தான் தமிழ்நாட்டைப் பற்றி வட இந்தியப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கிறார்கள். ஆனால், ஏன் அப்படிப்பட்ட போராட்டம் அங்கு தோன்றியது என்பதன் பின்னணி சொல்லப்படவில்லை. இந்த வெறுப்பின் காரணமாகவோ என்னவோ... தமிழ்நாட்டின் சரித்திரப் பெருமைகளைப் பற்றியும், இலக்கிய வளங்களைப் பற்றியும் வடக்கில் இருக்கும் நாங்கள் தெரிந்துகொள்ளாமல் அறியாமை இருட்டிலேயே இருந்துவிட்டோம்!''
 
''ஆனால், ஆங்கில மொழியின் தாக்கம் தமிழ் மொழி உள்பட பல இந்திய மொழிகளை பெருமளவு பாதித்து இருக்கிறதே!''
''உண்மைதான்! இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் அனைத்தும் வர்த்தகத்துக்கும், விஞ்ஞானத்துக்கும், தொழில்நுட்பத்துக்கும் ஆங்கிலத்தை வெகுவாகச் சார்ந்திருக்கின்றன. 'ஆங்கிலம்தான் வளர்ச்சிக்கான வழி’ என்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. அபரிமிதமான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் ஜெர்மனி, ஃப்ரான்ஸ் உள்பட  ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும், சீனா, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகள் அனைத்திலும் ஆங்கிலம் இல்லை. அந்த நாடுகளில் எல்லாம் அவரவர் தாய்மொழிதான் கோலோச்சுகிறது. அதே நிலையை இந்தியாவிலும் சாத்தியப்படுத்த வேண்டும்!''
சர்க்கரையைத் தடுக்கும் காபி!-
டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்
 
ன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருட்கள் பலவற்றையும், இங்கே கடுமையாக விமர்சிக்கிறேன். ஒரு மாறுதலுக்காக, 'கெடுதல்' என்று இதுவரை கருதப்பட்ட காபி, மிக நல்ல மருத்துவக் குணங்கள் கொண்டது என்பதைப் பற்றி இந்த இதழில் பேசலாம் என நினைக்கிறேன்!
 
காபியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதில் முக்கிய இடம் வகிப்பது, கேஃபின். காபியின் பற்பல நல்ல குணங்களுக்கும், சில கெட்ட குணங்களுக்கும் காரணமாக அமைவது இந்த கேஃபின். இன்னொரு முக்கியமான வேதிப்பொருள், 'ஃபீனாலிக்ஸ்என்று அழைக்கப்படும் 'ஆன்டி - ஆக்ஸிடென்ட்ஸ்குழுமத்தைச் சேர்ந்தது. தற்போது காணப்படும் பல்வேறு வியாதிகளும் (சர்க்கரை, புற்று உட்பட) 'ஃப்ரீ ரேடிகல்ஸ்என்ற ஆக்ஸிஜன் சிதைவுப் பொருட்களால்தான் உண்டாகின்றன. இந்த சிதைவுப் பொருட்களை உறிஞ்சி எடுத்து, உடலைத் தூய்மைப்படுத்தும் பொருட்கள்தான் 'ஆன்டி - ஆக்ஸிடன்ட்ஸ். இவை காபியில் அபரிமிதமாக இருப்பதாக இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
 
காபியினால் விளையும் நன்மைகளையும், கட்டுப்படுத்தப்படும்/தடுக்கப்படும் வியாதிகளையும் பட்டியலிட்டால் நீங்கள் அசந்து போவீர்கள்! அது மிகமிக நீளமானதொரு பட்டியல். இங்கே ஒருசிலவற்றை மட்டும் பார்க்கலாம்.
கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 'நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்என்ற பிரபல மருத்துவ இதழில், ஒரு கட்டுரை வெளியானது. தினமும் 2-3 கப் காபி குடிப்பவர்களின் மரண விகிதம் 10-15 சதவிகிதம் குறைகிறது என்ற உண்மை, 12 வருடங்களாக 4 லட்சம் பேரிடம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் தெரிந்தது. ஆண்களைவிட பெண்களிடம் இந்த நன்மை அதிகமாகத் தெரிந்திருக்கிறது.
உலகம் முழுவதையும், குறிப்பாக நம் நாட்டை பயமுறுத்தி வரும் சர்க்கரை நோயையும் காபி தடுக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், டிரைகோனாலின், குவினின் மற்றும் மெக்னீசியம் போன்ற வேதிப்பொருட்கள் இன்சுலின் போலவே வேலை செய்து, சர்க்கரை உணவுப் பொருட்களைச் செரிமானம் செய்து, திசுக்களுக்குச் கொண்டு செல்கின்றன. ஆகவே, சர்க்கரை நோய் வருவதை 25 முதல் 50 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என்று 'சயின்ஸ் டெய்லிஇதழ் கூறுகிறது.
 
உற்சாகத்தைத் தூண்டி, உடல் உழைப்பை மிகுதியாக்கும் திறன் காபிக்கு உண்டு. ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களில் 75 சதவிகிதத்துக்கும் அதிகமானோரின் சிறுநீரில் கேஃபின் உள்ளது என்பதே இதற்கு சாட்சி என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
காபியிலிருக்கும் 'கேஃபிஸ்டால்' என்கிற வேதிப்பொருள் ரத்தத்தில் கொழுப்பை அதிகப்படுத்தும். அதனால் ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு அதிகமாகலாம் என்று வலுவான ஒரு கருத்து முதலில் இருந்தது. ஆனால், 2-3 கப்புக்கு மிகாமல் அருந்தினால்... கெடுதல் இல்லை - இதயத்துக்கு நல்லதுதான் என்பது தற்போதைய கருத்து.
 
'காபி குடிப்பதன் மூலம் மனஅழுத்த வியாதி, வெகுவாகக் குறையும். குறிப்பாக, பெண்களுக்கு. தற்கொலைகளை 50% வரை குறைக்க முடியும்' என்கிறது ஹார்வேர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி.
இவ்வளவு நல்ல குணங்களையுடைய காபியினால் கெடுதல்கள் என்று ஏதாவது வந்தால், அதற்கு காபிக்கொட்டை தூளுடன் கலக்கப்படும் மற்ற கொட்டைகளும், காபியில் கலக்கும் சர்க்கரை, பால், பாலுக்கு மாற்றுப் பொருளான 'கிரீமர், கிரீமரில் கலக்கப்படும் பல்வேறு கெமிக்கல்களும்தான் காரணம்.
http://cdnw.vikatan.com/aval/2013/09/zdynmu/images/p88a.jpg
காபியில் சுவைக்காக கலக்கப்படும் இன்னொரு பொருள், சிக்ரி. காபி 70 சதவிகிதமும், சிக்ரி 30 சதவிகிதமும் கலக்கப்படும். இதை ஒரு கலப்படப் பொருளாகவே பலரும் முதலில் நினைத்தனர். உண்மையில் ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் மிக அற்புதமாகக் கருதப்படுகிறது சிக்ரி. மூலிகைச் செடியான காசினியின் வேரிலிருந்து கிடைக்கும் பொடிதான் இது. சுவைக்குச் சுவை, அதோடு உடலுக்கு - முக்கியமாக ஈரல், குடல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கும் நன்மை கிடைக்கும்.
 
காபி நன்கு கொதிக்கும்போதுதான் நன்மை பயக்கும். அப்போதுதான் பல நல்ல வேதிப்பொருட்கள் காபி கொட்டையிலிருந்து கசிந்து வெளிவரும். கொதிக்கும் காபியை ஃபில்டரில் செலுத்தும்போது கேஃபிஸ்டால் போன்ற சில கெட்ட பொருட்கள் வடிகட்டப்பட்டு விடும். எஸ்பிரஸோ காபியும், இன்ஸ்டன்ட் காபியும்கூட நல்லதுதான். ஆனாலும், கொதிக்கும் காபியை டபராவில் ஆற்றிக் குடிப்பதுதான் மிகவும் சுவையானதும், சுகமானதும், நல்லதும்கூட. அப்போதுதான் நிறைய நுரை வரும் - அதில் நல்ல வேதிப்பொருட்கள் நிறைய மிதந்து வரும்.
 
சத்துக்கள் மிகவும் செறிந்துள்ள உணவுகளை 'சூப்பர் உணவுகள்' (Super Foods) என்று அழைக்கிறோம். மிகவும் சிறியதான அந்தப் பட்டியலில் தற்போது காபியும் இடம்பெற்றிருக்கிறது!
- நலம் வரும்...
 
அதிகபட்சம் 4 கப்!
'அல்ஸைமர்முதியவர்களைத் தாக்கும் ஞாபக மறதி நோய், 'பார்க்கின்ஸன் (முதியவர்களைத் தாக்கும் உடல் நடுக்க நோய்), ஈரல் நோய்கள், பித்தப்பை கற்கள், பல வகையான புற்றுநோய்கள், ஆண் மலட்டுத்தன்மை, 'கவுட்என்கிற மூட்டுவலி உள்ளிட்ட பலவற்றுக்கும் நல்ல மருந்து இந்த காபி என்கின்றன பல்வேறு ஆராய்ச்சிகள். 2 முதல் அதிகபட்சமாக 4 கப் வரை மட்டுமே அருந்த வேண்டும் என்பது முக்கியம். கர்ப்பிணிகள், 2 கப்புக்கு மேல் குடித்தால், குறைப்பிரசவம் போன்றவை நேரலாம். எனவே, அவர்கள் டீ அருந்தலாம்.
 
இந்தியா வந்த கதை!
எத்தியோப்பியாதான் காபியின் பூர்விகம். காபிக் கொட்டைகளை பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வறுத்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் கூடுதல் சுவை என்பது அவர்களின் கண்டுபிடிப்பு. எத்தியோப்பியாவில் இருந்து ஏமன், எகிப்து, துருக்கி, பிரேசில் என்று இது பரவியது. 1670-ல் இன்றைய கர்நாடக மாநில பகுதியைச் சேர்ந்த பாபா பூடான் என்கிற முஸ்லிம் பெரியவர், மெக்காவுக்கு 'ஹஜ்பயணம் சென்றார். அவர், ஏமன் நாட்டின் வழியாக திரும்பியபோது, காபியைச் சுவைக்க நேரிட்டது. நம் ஊரிலும் இது கிடைப்பதற்கு என்ன வழி என்று யோசித்தவர், பச்சைக் காபி கொட்டைகளை இடுப்பு பெல்ட்டில் மறைத்து எடுத்து வந்தார். மைசூர் அருகில் சந்திரகிரி மலையில் அவற்றை விதைத்தார். அனைத்தும் முளைத்தன. இந்தியாவில் காபி வேரூன்றியது இப்படித்தான்.

Thursday, September 19, 2013

சென்னைக்கு நடுவே கீச்... கீச்... கீச்!
நன்றி - ஆனந்த விகடன் 
    
சேர்ந்தாற்போல இரண்டு சிட்டுக்குருவிகளை சென்னையில் பார்ப்பதே அபூர்வம். ஆனால், அதிசயம்... ராயப்பேட்டை ஜாம்பஜாரில் இருக்கும் 'கேமரா’ சேகரின் வீட்டு மொட்டை மாடியில் நூற்றுக்கணக்கான கிளிகள் கச்சேரி நடத்துகின்றன.
 
தினமும் காலை, மாலை இருவேளையிலும் தன் வீட்டின் பிரதானக் கதவைத் தாழிட்டுக்கொள்கிறார் சேகர். அந்த இரண்டு மணி நேரமும் வீட்டுக்குள் நுழையவோ, வெளியேறவோ யாருக்கும் அனுமதி இல்லை. கிளிகளைத் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டின் காலிங் பெல்லையும் மொபைல் போனையும் ஆஃப் செய்துவிட்டு மௌனமாகக் காத்திருக்கிறார் சேகர். மொட்டை மாடி முழுக்க பரவிக்கிடக்கும் அரிசியை உண்பதற்காக எங்கிருந்தோ பறந்து வருகின்றன பச்சை விருந்தினர்கள். 'கீச்... கீச்...’ என்று கிளிப் பேச்சு கேட்பது, அத்தனை இனிமை.
 
''30 வருஷத்துக்கு முன்னாடி தர்மபுரியில் இருந்து அப்பாக்கிட்ட கோபப்பட்டு சென்னைக்குக் கிளம்பி வந்தேன். ஒரு நல்ல கேமரா மெக்கானிக்கா ஆகணும்னு அப்போ ஆசைப்பட்டேன். இன்னைக்கு சென்னையில் பேர் சொல்லிக்கிற மாதிரி ஒரு கேமரா மெக்கானிக்கா இருக்கேன். கொஞ்ச வருஷம் முன்னாலதான் இந்த ராயப்பேட்டை வீட்டுக்குக் குடிவந்தேன். உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு கிளிகளைப் பத்தி எதுவுமே தெரியாது. எப்போ இருந்து இந்தக் கிளிகள் எல்லாம் என்னைத் தேடி இங்கே வர ஆரம்பிச்சுதுன்னும் ஞாபகம் இல்லை. என்னோட மனைவி மாடியில காக்காவுக்கு சோறு, அரிசி, கோதுமை வைப்பாங்க. அந்தப் பழக்கம் எனக்கும் வந்தது. முதலில் காக்காவோட சேர்ந்து சில தடவை புறாக்களும் வந்துச்சு. ஆனா எப்போன்னு தெரியலை. ஒருநாள், 10 - 15 காக்காக்களுக்கு நடுவுல ஒரு கிளி சாப்பிட வந்துச்சு. எல்லாக் காக்காவும் சேர்ந்து அந்தக் கிளியைக் கொத்தி விரட்டிவிட்ருச்சு.
 
 
கொஞ்ச நாள் கழிச்சு, 10 கிளிகள் சேர்ந்து கோஷ்டியா வந்து சாப்பிட ஆரம்பிச்சது. இப்போ காக்காக்களுக்கு அமைதியா வேடிக்கை பார்க்கிறதைத் தவிர வேற வழி இல்லை. மொட்டை
 
 
 
மாடியில் ஒரு பக்கம் கிளிகளும், இன்னொரு பக்கம் காக்காக்களும் சாப்பிட ஆரம்பிச்சது. ஒரு வாரம்தான். பத்து இருபதாகி, இருபது நாப்பதாகி இப்போ 600 கிளிகள் தினமும் வந்து சாப்பிட்டுட்டுப் போகுதுங்க. காக்காக்கள் வர்றதை நிறுத்திச்சிருச்சு. எப்போவாச்சும் ஒண்ணு ரெண்டு காக்கா மட்டும் வரும்.
 
அதிகாலை அஞ்சு மணிக்கெல்லாம் அரிசி, கோதுமையை மொட்டை மாடி முழுக்கப் பரப்பி வெச்சிருவேன். ஆறு மணியில் இருந்து கிளிகள் வர ஆரம்பிக்கும். எட்டு மணி வரைக்கும் சாப்பிடும். அதே மாதிரி சாயங்காலம் நாலு மணிக்கு வந்து ஆறு மணிக்கு சொல்லி வைச்ச மாதிரி கிளம்பிரும்.
 
சென்னையில் பறவைகள் வாழ எங்கே இடம் இருக்குனு தெரியலை. ஆனா, இத்தனை கிளிகள் இங்கே இருக்குதேனு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. கிளிகளில் பெரும்பாலும் சிவப்பு மூக்குக் கிளிகள்தான் வரும். இப்போ புதுசா சில பஞ்சவர்ணக் கிளிகளும் வர ஆரம்பிச்சிருக்கு. இவ்ளோ கிளிகளுக்கும் போட, ஒரு நாளைக்கு 15 கிலோ ரேஷன் அரிசி தேவைப்படுது. இவ்ளோ ஜீவன்கள் என்னை நம்பி வருதுங்க. என் பர்ஸில் கடைசி ரூபா இருக்கிறவரைக்கும் நான் என் விருந்தினர்களுக்கு சாப்பாடு கொடுப்பேன் சார்!'' என்றார் சேகர்.