Thursday, April 25, 2013

வாசித்ததில் நேசித்தது 
 
மாறுதல்
 
இந்த நிலத்தை வைத்து
 
விவசாயம் செய்தால்
 
நான் ஏழை...
 
இதே நிலத்தை வைத்து
 
வியாபாரம் செய்தால்
 
நான் பணக்காரன்!
 
- சிறி.ப.வில்லியம்ஸ்
வாசித்ததில் நேசித்தது 
 
ஊழ்வினை
 
திருமணத்துக்கு முன்பு
கூட்டத்தில்
பெண்களை இடிக்கும் ஒருவனால்...
மாடியில் துணி காயப்போடும் பெண்ணை
நூல்விடும் ஒருவனால்...
மாடர்ன் டிரெஸ் அணிந்தவளை
குறுகுறுவெனப் பார்க்கும் ஒருவனால்...
ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடி வைத்து
பெண்களுடன் சாட் செய்யும் ஒருவனால்...
திருமணத்துக்குப் பின்பு
தன் மனைவியை
கூட்டத்தில் செல்ல
மாடியில் துணி காயப்போட
மாடர்ன் டிரெஸ் அணிய
ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் ஓப்பன் செய்ய
அனுமதிக்க முடிவதில்லை!
 
- கட்டளை ஜெயா

Thursday, April 18, 2013

மண் சம்மர். - (நன்றி: ஆனந்த விகடன்)
 
க்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்னரே வறுத்தெடுக்கிறது வெயில்! இந்தக் கொடும் வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்பைச் சமாளிக்க அதிக அளவு தண்ணீர் அருந்தச் சொல்கிறார்கள். அதே சமயம், அந்தத் தண்ணீர் சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். மின்சார ரெஃப்ரிஜிரேட்டர்களில் குளிர்ச்சி ஏற்படுத்திக் குடிக்கும் நீர் அத்தனை ஆரோக்கியமானது அல்ல என்ற கருத்து நிலவுகிறது. அவை இயங்குவதற்குப் போதுமான மின்சாரமும் இல்லை. இந்த நிலையில், வெயில் அனலை எப்படித்தான் சமாளிப்பது?
மண்ணால் ஆன ரெஃப்ரிஜிரேட்டர், மண்ணால் ஆன வாட்டர் பியூரிஃபயர் ஆகியவற்றின் மூலம்தான்! ஆம்... மண்பானையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக மண்ணால் ஆன வீட்டு உபயோகப் பொருட்கள்தான் இப்போது சந்தையில் சக்கைப்போடு போடுகின்றன. அந்த மண் பொருட்கள்பற்றி ஒரு ரவுண்ட்அப்...
மண் ஃப்ரிஜ்
பெரும்பாலான நேரம் மின்சாரமே காணாப் பொருளாகிவிட்டதால், இப்போது ரெஃப்ரிஜி ரேட்டர் இருந்தும் இல்லாத நிலைதான். இந்த மண் ஃப்ரிஜ்ஜுக்கு மின்சாரம் தேவையில்லை. ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் மூலமே குளிர்ச்சியை ஏற்படுத்திக்கொள்ளும் இந்த ஃப்ரிஜ், 50 லிட்டர் கொள்ளளவு கொண்டது. 5 கிலோ வரை காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் இதர பொருட்களை வைக்கலாம். இந்த ஃப்ரிஜ்ஜின் மேல்பாகத்தில் ஊற்றும் தண்ணீர், சிறிது சிறிதாகக் கீழிறங்கி குளுமையை உண்டாக்கும். மின்சார ஃப்ரிஜ் போலவே, சேம்பருக்குள் 15 முதல் 18 டிகிரி செல்சியஸ் வரை குளிர்நிலை நிலவுகிறது. 10 லிட்டர் வரை தண்ணீர் ஊற்றி வைத்துக்கொண்டு அதைக் குடிநீராகப் பயன்படுத்தலாம். இதில் வைக்கப்படும் காய்கறிகள் மூன்று நாட்கள் வரை கெடாது. முழுக்க சுட்ட மண்ணால் செய்யப்பட்ட இந்த ஃப்ரிஜ்ஜை மாதத்துக்கு ஒருமுறை சுத்தப்படுத்துவது மட்டுமே இதன் அதிகபட்சப் பராமரிப்பு. காற்றோட்டம் உள்ள ஜன்னல் அருகில் வைத்துக்கொண்டால், சேம்பரின் குளிர்பதம் இன்னும் அதிகரிக்கும். விலை 4,000 முதல் 5,000 ரூபாய் வரை. பத்திரமாகப் பராமரிக்கும் முறையைப் பொறுத்துப் பல வருடங்கள் பயன்படுத்தலாம்!
வாட்டர் பியூரிஃபயர்
முழுக்கவே மண்ணால் செய்யப்பட்ட இந்த நீர் சுத்திகரிப் பான் 10, 15 மற்றும் 20 லிட்டர் கொள்ளளவுகளில் கிடைக்கிறது. விலை 800 ரூபாய் முதல் 1,100 ரூபாய் வரை. இதன் உள்ளே பொருத்தப் பட்டு இருக்கும் மண்ணால்செய்யப் பட்ட கேண்டில் (நீரை வடிகட்டும் உருளை) தண்ணீரை வடிகட்டி, சிறிது சிறிதாக கலனின் அடிப்பகுதியில் சேமிக்கிறது. இயற்கை முறையிலான சுத்திகரிப்பு என்பதால், பிற நீர் சுத்திகரிப்பான்களைவிட தண்ணீர் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். மாதத்துக்கு ஒரு முறை கேண்டில்களை வெந்நீரில் காயவைத்து சுத்தப்படுத்தினால் போதும். மின்சாரம் தேவை இல்லாத இந்த சுத்திகரிப்பான், தண்ணீரைச் சுத்திகரிப்பதோடு குளுமையாகவும் வைத்திருக்கிறது. ஆக, ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!
மண் குக்கர்
பால் குக்கர் போன்ற இயக்கம்தான். ஆனால், உள்ளே அழுத்தத்தை வைத்துக்கொள்ளாது என்பதால், விசில் அடித்துக் கொண்டே இருக்கும். அரிசி, பருப்பு, பால் என குக்கரில் சமைக்கும் எல்லாவற்றையுமே இதிலும் சமைக்க முடியும். மேல் மூடியைக் கழற்றிவிட்டால், வறுவல், பொரியலுக்குக்கூடப் பயன்படுத் தலாம். இந்த மண் குக்கர் விரைவில் சூடாகி வெப்பத்தைச் சேமித்து எளிதில் கடத்தும் திறன் உடையவை என்பதால், 50 சதவிகிதம் வரை எரிபொருள் சேமிப்பும் கியாரன்ட்டி. 2 மற்றும் 3 லிட்டர் அளவுகளில் கிடைக்கும் இந்த குக்கர்களின் விலை 700 முதல் 800 ரூபாய் வரை. இவை தவிர, வாட்டர் கன்டெய்னர்கள், டின்னர் செட் உட்பட 29 வகையான பொருட்கள் சந்தையில் உள்ளன.
நமக்குத்தான் இவை புதுசாகத் தோன்றுகின்றன. ஆனால், வட மாநிலங்களில் இந்தப் பொருட்கள் நீண்டகாலமாகப் பயன்பாட்டில் உள்ளன. இப்போது குஜராத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுவதால், விலை சற்று அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே தயாரிக்கும் நிலையோ, அதிகமான பயன்பாடோ வந்தால், விலை குறைய வாய்ப்புகள் அதிகம். வீட்டில் இந்த மண் பொருட்களைக் குழந்தைகள் கைக்கு எட்டாத இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற பாதுகாப்பு அம்சத்தைத் தவிர, எந்தக் குறைபாடும் இல்லை!
மனதை தொட்ட மனம் திறந்த மடல் 
சமூகப் பிரச்னைகளை சாதிச் சாயத்துடன் அணுக வேண்டாம்!
ன்பிற்கினிய பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ஐயா அவர்களுக்கு...
வணக்கம். வளர்க நலம். உங்கள் திறந்த மடல் மூலம் அழுகிக்கிடக்கும் அரசியல் உலகில் ஓர் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்துக்கு அடித்தளம் அமைத்திருக்கிறீர்கள். நன்றி. விமர்சனம் எவ்வளவு நியாயமாக இருப்பினும், விமர்சித்தவனை வீழ்த்துவதற்கு வியூகம் வகிக்கும் தலைவர்களுக்கு நடுவில், அரசியல் நாகரிகம் அணுவளவும் பழுதுபடாமல், அர்த்தம் செறிந்த கேள்விகளுடன் விளக்கம் அளித்திருக்கும் உங்கள் விவேகமான அணுகுமுறை பாராட்டுக்குரியது.
 
'காதல் நாடகம்’ கண்டனத்துக்குரியது என்பதில் யாருக்கும் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. அடுப்பாரும் கொடுப்பாரும் இன்றித் தம்முள் தாமே எதிர்பட்டு, உள்ளத்தளவில் ஒன்றிக் கலக்கும் உணர்வில் கனிவதுதான் உண்மையான காதல் என்று, தெளிந்த இனம் நம் தமிழினம். ஓர் ஆணிடம் ஒரு பெண்ணும், ஒரு பெண்ணிடம் ஓர் ஆணும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி முற்றாகத் தன்னை இழப்பதுதான் காதலுக்குரிய ஒரே இலக்கணம். இந்த மாற்றமிலா உண்மையை மறுப்பதில் நியாயமுமில்லை; நேர்மையுமில்லை. நீங்கள் நெறிசார்ந்த காதலுக்கு எதிரியில்லை என்பதில் மகிழ்ச்சி.
'நாகரிக சமுதாயத்தில் காதல் திருமணங்களுக்கோ, கலப்புத் திருமணங்களுக்கோ தடைவிதிப்பது சரியில்லை. பல காதல் கலப்புத் திருமணங்களை நானே முன் நின்று நடத்திவைத்திருக்கிறேன்’ என்று நீங்கள் வழங்கியிருக்கும் வாக்குமூலம் வரவேற்கத்தக்கது.
 
'பொருளாதார அடிப்படையில் வசதியான குடும்பப் பெண்களுக்கு வலை விரிப்பதும், காதல் வலையில் விழுந்த பின்பு கடத்திச் சென்று லட்சம், கோடிகளில் பேரம் பேசுவதும், ஏழைப் பெண்களைத் திருமணம் செய்து, சில மாதங்களில் வாழாவெட்டியாக்குவதும் காதல் நாடகமன்றி வேறென்ன?’ என்ற உங்கள் கேள்வியில் நிறைந்திருக்கும் நியாயத்தை யார்தான் நிராகரிக்க முடியும்? ஆனால், இந்த இழிந்த காதல் கபட நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் ஈடுபடுகின்றனர் என்று சாதிக்க முயல்வது சரியா? அன்பு கூர்ந்து யோசியுங்கள்.
 
பண்பற்ற மனிதர்களும், பாலியல் வன்முறைக்குப் பெண்களைப் பலியாக்கும் பாழ்பட்ட மிருகங்களும், பணத்துக்காக எந்த இழி செயலிலும் இறங்கும் அறம் பிறழ்ந்த பாதகர்களும் இல்லாத சாதி என்று ஏதாவது ஒன்று உண்டா? 'சாதிகள் ஒழிய வேண்டும் என்பதில் தமிழகத்தில் உள்ள அனைவரையும்விட அதிகமான அக்கறைகொண்டவன் நான்’ என்று சொல்லும் நீங்கள், குறிப்பிட்ட ஓர் அமைப்புக்கு எதிராக உங்கள் ஆற்றல் முழுவதையும் விரயமாக்குவது அவசியம்தானா? சாதிகளை மையமாக்கிப் பூசல்களை வளர்ப்பதனால் புத்துலக சமுதாயம் பூத்துவிடுமா?
 
'ஒரு லட்சம் சாதி இந்துப் பெண்களின் வயிற்றிலாவது தலித்துகளின் கரு வளர வேண்டும்’ என்று சிலர் முழங்கியதற்காக ஒரு கோடி தலித்துகளையும் ஒதுக்கிவிடக் கூடுமா? வரம்பு கடந்து வன்முறையை வளர்க்கும் வகையில் சிலர் பேச முற்படும்போது மனதளவில் அவர்கள் காயம்பட்டவர்கள் என்ற பரிந்துணர்வோடு, அவர்களுடைய பேச்சுக்கான சமூகக் காரணிகளை நாம் ஆய்ந்துபார்க்க வேண்டும். 'ஒரு பகுதி மக்கள் மற்றொரு பகுதி மக்கள் மீது சந்தேகம் பூண்டிருப்பது சமூகத்தைப் பாதிக்கும். பசித்திருக்கும் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு உணவும், நிர்வாணமாக நிற்பவர்க்கு ஆடையும் வழங்குவது குறித்துச் சிந்திக்க நேரமின்றி ஒருவருக்கொருவர் மோதலில் மூழ்கிக்கிடப்பது நியாயமா?’ என்று, அண்ணல் காந்தி அன்று கேட்டது இன்றும் பொருந்தக்கூடியதாக இல்லையா?
 
'படித்து முடித்து வேலைக்குச் சென்று பெண்ணுக்கு 21 வயது முடிவடைந்த பின்னர் நடக்கும் காதல் திருமணங்களை அனுமதிக்கலாம் என்ற எங்கள் நிலைப்பாட்டை கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வலுப்படுத்தியிருக்கிறது’ என்கிறீர்கள். இந்த விஷயத்தில் பெண்ணைப் பெற்ற அனைவரும் உங்களை அழுத்தமாக ஆதரிப்பார்கள் என்பது உண்மை. சிறுமிகளின் 'காதல்’, ஹார்மோன் கோளாறுகளால் கனன்றெழும் உடல் கவர்ச்சி என்பதும் அறிவியல் பூர்வமான உண்மையே. இந்தக் கருத்தை நுகர்வுக் கலாசாரத்தில் சிக்கிச் சீரழியும் இளைய தலைமுறையிடம் அழுத்தமாக நீங்கள் அன்றாடம் அறிவுறுத்துங்கள். ஆனால், சாதிச் சாயத்துடன் நீங்கள் சமூகப் பிரச்னைகளை அணுகுவதில்தான் என்னைப் போன்றவர்கள் உங்களுடன் முரண்பட நேர்கிறது.
 
என்னிடம் நீங்கள் கேட்டிருக்கும் மூன்று கேள்விகளும் மிக முக்கியமானவை. 'இந்திய விடுதலைக்குப் பிந்தைய 65 ஆண்டுகளில் நடந்த காதல் திருமணங்களால் சாதியற்ற சமுதாயம் உருவாகிவிட்டதா?’ என்று கேட்கிறீர்கள். 'உருவாகிவிடவில்லை’ என்று வருத்தத்துடன் ஒப்புக்கொள்கிறேன். 'இந்த மண்ணில் ஈராயிரம் ஆண்டுகளாக நம் சாதி முறை சமயரீதியாக, தத்துவ ரீதியாக, அமைப்பு ரீதியாக, மனுஸ்மிருதி போன்ற சட்டரீதியாக, சமூகக் கட்டுப்பாடாக, மாறுதல்களே இல்லாமல், மாற்றவும் முடியாமல், இன்று வரை நிரந்தரமாக, இறைவனின் ஆணையாகக் கெட்டிப்படுத்தப்பட்டுவிட்டது. சாதிக்குள் மட்டுமே திருமணம் என்ற தவறான சமூகக் கட்டுப்பாட்டால், சாதிப் பரம்பரை, சாதிச் சடங்கு, சாதிக் கடவுள், சாதி ஆசாரம் என்ற வழிமுறை காரணமாக சாதித் தனித்துவம் உடைக்க முடியாதபடி இறுகிவிட்டது’ என்ற ஞானையாவின் விளக்கம்தான் உங்கள் கேள்விக்குச் சரியான பதில். இப்படி இறுகிக் கெட்டிப்பட்டுக் கிடக்கும் சாதிய அமைப்பு நீடிப்பது உங்களுக்குச் சம்மதமா? இந்த மோசமான அமைப்பு முறையில் சமூக நீதி சாத்தியமா? 'காதல் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளைச் சாதியற்றவர்களாகப் பதிவுசெய்திருக்கிறார்கள்?’ என்று கேட்கிறீர்கள். காதல் திருமணம் செய்துகொண்டவர்களில் ஆண் சார்ந்திருக்கும் சாதியையே பிள்ளைகளுக்குப் பதிவுசெய்யும் வழக்கம், ஆணாதிக்கத்தின் எச்சம். இதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. ஒரு தனி மனிதன் சாதியைத் தவிர்க்க விரும்பினாலும் அரசு அவன் தலை மீது அதைத் திணித்துவிடுகிறதே... சட்டம்தானே சாதியைக் காப்பாற்றுகிறது? அதை எதிர்த்துப் போராடப் புறப்படுவோம்.
 
'நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசியல் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை. சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால், என் எதிர்ப்பைக் காட்டிக்கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு’ என்று, பெரியார் மிகச் சரியாகச் சிந்தித்து, சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதை நீங்கள் நினைந்து பார்ப்பது நல்லது.
 
'சாதி என்பதே இருக்கக் கூடாது. சாதிப் பிரிவுகள்தாம் நம்மை ஒருவருக்கொருவர் ஒற்றுமையில்லாமல் ஆக்கிவிட்டன. நாம் யாவரும் சமம் என்ற நிலை வரவேண்டும். ஆதிதிராவிடர், ஹரிஜனம், தாழ்த்தப்பட்டவர், பறையர், பஞ்சமர், தீண்டாதவன், புலையன் ஆகிய பட்டங்களை ஒழித்தாலொழிய இப்பழங்குடி மக்கள் மனிதத்தன்மையுடன் வாழ முடியாது. தோழர்களே... திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்நாட்டில் பள்ளன், பறையன் என்ற இழிஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியை வழங்குகிறேன்’ என்ற, பெரியாரின் பாதையில் உங்கள் பயணம் தொடர வேண்டும் என்பது என் பெருவிருப்பம்.
 
எனக்கு என் மூக்கின் முனை​யளவும் சாதி உணர்ச்சி என்றும் இருந்ததில்லை. என் மகனும் மகளும், சாதி, மதங்களை மீறிய மனிதம் சார்ந்து நடப்பவர்கள் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. ஆனால், பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிலையிலும் சாதியை முன் நிறுத்தும் அரசியலமைப்பு மாற்றப்படாத​வரை சாதிப் பதிவு தவிர்க்க முடியாதது. இன்றைய முதல் தேவை சாதியுணர்வுகொள்ளாமல் இருப்பது; சாதியை முன்வைத்துப் பூசலை வளர்க்காமல் சமத்துவம் காண்பது. இந்தப் பார்வை எனக்கும், என் பிள்ளைகளுக்கும் உண்டு. அனைவருக்கும் இது அவசியம் என்பதுதான் சமூக நீதிக்கான பாதை.
 
'சாதிகள் சாகாத வரை தமிழ்ச் சாதி மேன்மையுறாது. அதனால் சாதியைச் சாகடியுங்கள். காதல் கலப்புத் திருமணங்களை ஆதரியுங்கள். காதலை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியுங்கள்’ என்று நான் பேசியது உண்மை. நீங்கள் காதலுக்கு எதிரி இல்லை. அதனால், என் பேச்சில் நீங்கள் காயப்பட வாய்ப்பு இல்லை. நாடகக் காதலை யார் நடத்தினாலும் அவர்களை உங்களோடு சேர்ந்து கடுமையாக நானும் எதிர்க்கிறேன். நீங்கள் சொல்லும் சிலர் செய்யும் தவறுகளை நானும் ஆதாரங்களோடு அறிவேன். அதற்காக அனைவரையும் பழித்தல் சரியில்லை என்கிறேன்; தர்மபுரிக் கலவரத்தில் நியாயம் இல்லை என்கிறேன்.
 
'தமிழன் வாழ்ந்தால் தட்டிக்கொடு; தமிழினம் வீழ்ந்தால் முட்டுக்கொடு’ என்று முழங்கிய நீங்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சம வாய்ப்பு சாத்தியப்படுவதுதான் சமூக நீதி என்று தெளிவாக உணர்ந்த நீங்கள் - சாதிய அமைப்புகளோடு சங்கமித்தது, உங்கள் அரசியல் பயணத்தில் நீங்களாக வலிந்து தேடிக்கொண்ட வீழ்ச்சி என்றே நான் நம்புகிறேன். மதுவை ஒழிக்கவும். புகையிலையைத் தவிர்க்கவும் இடைவிடாமல் போராடும் நீங்கள், கட்டுப்பாடற்ற ஊடகங்கள் பெருகிவரும் நிலையில், தொலைந்துபோன நம் தொன்மையான கலை, இலக்கியப் பண்பாட்டுக் கூறு​களை மீட்டெடுக்கும் முயற்சி​யில் சமரசமின்றி நீங்கள் முன்​னெடுக்க வேண்டிய முக்கிய​மான பணிகளில் இருந்து திசை மாறி​விட்டதற்காக வருந்து​கிறேன்.
 
தாய்மொழிக் கல்வி, சமச்சீர் கல்வி குறித்த உங்கள் பார்வை, தமிழகத்தின் வளர்ச்சிக்கான உங்கள் தொலைநோக்கு, அரசின் தவறுகளைக் கறாராக விமர்சிக்கும் துணிவு, வட மாவட்டங்களில் தலித்துகளும் வன்னியரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பெருமைக்குரியவை. ஆனால், இந்தப் பெருமைகள் உங்கள் சமீபகாலச் சாதிய நடவடிக்கைகளால் சாரமற்றுப்போய்விட்டதை நீங்கள் ஏன் உணரவில்லை?
 
'மாற்றங்கள் ஏற்படுத்தும் மகத்தான எந்திரம் காலம் ஒன்றுதான்’ என்று சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். கீழ்வெண்மணி முதல் தர்மபுரி வரை ஆயிரம் கொடுமைகளை அனுபவித்துவிட்ட மக்களை அன்போடு அரவணைத்து, அனைத்துச் சாதியினரின் அன்பைப் பெற்றவராய், நீங்கள் மாற வேண்டும். இரண்டு திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கவும், மதுவின் வாசம் வீசாத மாநிலமாக நம் மண்ணை மாற்றியமைக்கவும். குறைந்தபட்ச கொள்கைத் திட்டங்களின் அடிப்படையில் மாற்று அரசியல் அணியை வலிமை​யாக உருவாக்கவும் உங்கள் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தும் தலைவராக நீங்கள் மாற வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் சொந்த சாதி நலன் குறித்துச் சிந்திப்பவர் என்ற பிம்பத்தை உடைத்தெறிய வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சித் தமிழினத்தின் பாதுகாப்புக் கவசமாக இனி மாற வேண்டும். உங்கள் பயணம் சாதிகளற்ற, சமதர்ம இலக்கை நோக்கி நடக்க வேண்டும். இந்த மாற்றங்கள் நிகழும்போது, சாதாரண மணியனை விடுங்கள், ஒட்டுமொத்த தமிழினமே உங்கள் பின்னால் அணிவகுக்கும். அப்படி நீங்கள் மாறுவீர்களா மருத்துவரே?
தங்கள் அன்புள்ள,
 
- தமிழருவி மணியன்

Tuesday, April 9, 2013

காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள்? அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் தகவல்

காலை உணவுக்கு பழைய சோறு (கஞ்சி) சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளிலும் நல்லது என்பது அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பழைய சோறு

முன்பெல்லாம் பெரும்பாலான வீடுகளில் காலை உணவு கஞ்சி என்று அழைக்கப்படும் பழைய சோறுதான். துவையலுடன் சேர்த்து பழைய சோறு சாப்பிடும் ருசியே தனி. மோர், தயிர் சேர்த்து கூட்டுக்கு வெங்காயத்தை கடித்து பழைய சோறை சாப்பிட்டால் சுவையோ சுவைதான். இப்போது உள்ளது போல் அளவு பார்த்து இல்லாமல் எல்லா வீடுகளிலுமே எப்போதும் கூடுதலாகத்தான் சாதம் வடிப்பார்கள். அதுவும் சம்பா அரிசி சோறாக இருந்தால் சிறப்பு.
இரவு சாப்பாடு முடிந்து எஞ்சியுள்ள சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்துவிடுவார்கள். மறுநாள் காலையில் சற்று புளித்த சுவையுடன் நுரை தள்ளிய நிலையில் பழைய சோறு தயாராகிவிடும். பழைய சோறு தண்ணீரில் சிறிது உப்பு போட்டுக் குடிப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். உடல் சூட்டை தணித்துவிடும் ஆற்றல் இந்த தண்ணீருக்கு உண்டு.

உணவுமுறை மாற்றம்

கால மாற்றம், நாகரீகம் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் பழைய சோறு இருந்த இடத்தை இப்போது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, நூடுல்ஸ் போன்ற உணவுகள் ஆக்கிரமித்துவிட்டன.
கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இப்போது எல்லாம் இரவுகூட டிபன்தான். எனவே, மறுநாள் காலையில் பழைய சோறு சாப்பிடுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு

இந்த நிலையில், பழைய சோறு என்றும், கஞ்சி என்றும் நாமெல்லாம் உதாசீதனப்படுத்திய அந்த மகத்தான உணவின் மகத்துவத்தையும், பல்வேறு விதமான பயன்பாடுகளையும் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். தென்னிந்தியர்கள் காலை உணவாக பயன்படுத்தும் பழைய சோற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இவ்வளவு சத்துகள் அடங்கி உள்ளனவா? என்று வியந்து போனார்கள். அவர்களின் ஆய்வில் தெரிய வந்த விவரங்கள் வருமாறு:–
பழைய சோறு, காலை உணவுக்கு மிகவும் பொருத்தமான உணவு ஆகும். மற்ற உணவு பதார்த்தங்களில் இல்லாத வகையில் பழைய சோற்றில் அரிய வைட்டமின்களான பி–6, பி–12 ஆகியவை மிகுதியாக காணப்படுகிறது. பழைய சோற்றில் உருவாகும் கோடிக்கணக்கான நல்லதன்மை கொண்ட பாக்டீரியாக்கள் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவும். அதில் நோய் எதிர்ப்பு மற்றும் நோய் தடுப்புக்கான காரணீகள் ஏராளமாக உள்ளன.

என்னென்ன பயன்கள்?

கஞ்சி சாப்பிடுவதால் சிறுகுடலில் உருவாகும் பாக்டீரியாக்கள் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பதுடன் அவற்றை நோய் உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கின்றன.
காலை உணவாக சாப்பிடும் பழைய கஞ்சி எளிதில் ஜீரணமாகிவிடும். அது வயது முதிர்ந்த தோற்றத்தையும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களையும் நீக்கும். ஜீரணம் தொடர்பான எந்த பிரச்சினையும் வராது. சூடு தணிந்து உடம்பு குளிர்ச்சியாக இருக்கும். பழைய சோறு நார்ச்சத்து கொண்டதாக இருப்பதால் மலச்சிக்கல் பறந்துவிடும். மந்தநிலை போய் உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

என்றும் இளமை

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் பழைய சோறுக்கு உண்டு. உடலில் சோர்வே ஏற்படாது. பழைய சோறு சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். சோர்வு அண்டாது. அனைத்து விதமான ஒவ்வாமைகளும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் காணாமல் போய்விடும். எந்தவித அல்சரும் நெருங்காது. உடல் இளமையாகவும், தோற்றப்பொலிவுடனும் இருக்கும்.
மேற்கண்ட தகவல்களை அமெரிக்க விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மண்பானையில் தண்ணீர் ஊற்றி செய்யப்படும் பழைய சோறு இன்னும் அதிக சுவையுடன் மணம் கொண்டதாக இருக்கும். இன்றும் கிராமப்புறங்களில் கல் சட்டி என்று சொல்லப்படும் மண்பானையில்தான் பழைய சோறு போட்டுவைப்பார்கள்.

கல் சட்டி

பல வீடுகளில் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தப்பட்டு வரும் கல்சட்டிகள்கூட இருக்கத்தான் செய்கின்றன. பழைய சோறுக்கு சம்பா அரிசிதான் மிகவும் ஏற்றது ஆகும். காரணம், அதில் ஏராளமான ஊட்டச்சத்துகளும் தாதுபொருட்களும் அடங்கி உள்ளன.
எப்போதுமே நம்மவர்கள் சொல்வதை நம்பாமல் வெளிநாட்டினர் கூறுவதை அப்படியே வேதவாக்காக கருதுவது நமது வழக்கம். இப்போது வெளிநாட்டு விஞ்ஞானிகளே பழைய சோற்றின் மகத்துவத்தை சொல்லிவிட்டார்கள். இனிமேலும் என்ன யோசனை? இன்றைய நாகரீக உணவுகளுக்கு விடை கொடுத்துவிட்டு முன்பு இருந்ததைப்போல காலை உணவுக்கு பழைய சோறு சாப்பிடுவோம். உடல் நலனை பாதுகாப்போம்.
செய்தியும் சிந்தனையும் 


கோபுர ரகசியமும், நம் முன்னோரின் விஞ்ஞான அறிவாற்றலும்!!!
முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?! ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது
.