Thursday, December 8, 2016

ன்குலாப் 




















உலக அளவில் புரட்சிகரச் சொல் என்றால், இன்குலாப்... தமிழக அளவில் புரட்சிகர முகம்!

அவர் பெயர் சாகுல் ஹமீது. தனது மகனுக்குத்தான் ‘இன்குலாப்’ என்று பெயர் வைத்தார். தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து புத்தகம் ஆக்கும் முயற்சியில் சாகுல் ஹமீது இறங்கியபோது, `‘உங்கள் மகன் பெயரான `இன்குலாப்' எனப் போட்டு இந்தத் தொகுப்பை வெளியிடுங்கள்’' என்று நண்பர் சொன்னார். 

கடந்த நாற்பது ஆண்டுகாலத் தமிழகத்தில் கனல் கவிதைகளைத் தந்த மனிதர், டிசம்பர் 1-ம் நாள் இயற்கையைத் தழுவினார்!

காரல்மார்க்ஸ் அவரது இதயம் என்றால், பெரியாரும் அம்பேத்கரும்தான் கண்கள். இந்த மூவர் சிந்தனையில் அவரது சொல்லும் செயலும் இருந்தன. தனது தத்துவத்துக்கு முரண்பாடாக எது நடந்தாலும் முன்னேறிவந்து கர்ஜிக்கும் சிங்கம்.
‘எழுத மாட்டேன்

ஒரு வரிகூட
நீ
ஒப்பும்படி!
மேட்டிமைத் திமிரும்
உன்
சபை வாசலில்கூட 
நீளவே நீளாது
என் மயிரின்

நிழலும்’ 

- என்று பிரகடனம் செய்து அதிகாரம் ஒப்பாத சொற்களை எழுதியபடியே வாழ்ந்தார். மயில் இறகுச் சொற்களால் அல்ல, மண்டை உடைக்கும் கற்களாக இருந்தன அவரது வார்த்தைகள்!


சிம்சன் தொழிலாளர்கள் மண்டைகள் உடைக்கப்பட்டு, வி.பி.சிந்தன் தாக்கப்பட்டபோது 



‘இந்த ரத்தத்தின் ஈரம் உலரு முன்
எங்கள் தோழர்கள் உங்களைச் சூறையாட வருவார்கள்’ 

என்று எஃகு இதயம்கொண்டவனால்தான் எழுத முடியும். வெறும் கைத்தட்டலுக்காக எழுத முடியாது!



கீழ்வெண்மணி நெருப்பில் 44 மனித மனங்கள் வெந்தபோது... 



‘சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே - ஒங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதிலே எண்ணெய் ஊத்துதே
எதையெதையோ சலுகையினு அறிவிக்கிறீங்க - நாங்க
எரியும்போது எவன் மசுரைப் புடுங்கப்போனீங்க?'



என்று ஆதிக்கச் சாதி நெருப்புக்கு கவி நெருப்பு வைக்க இன்குலாபால் மட்டுமே முடிந்தது.



வலதுசாரி தமிழ்த் தேசியத்தின் குறியீடாக இருக்கும் இராசராசசோழனுக்கு, தி.மு.க ஆட்சியில் சிலை வைத்தபோது...



`காலனி ஆதிக்கத் தொழு நோயின் தேமலை
பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு
மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்?'



என்று நிலப்பிரபுத்துவ எச்சத்தை எரித்தது இன்குலாப் பேனா. இப்படி, தமிழக வரலாற்றின் பல்வேறு நிகழ்வுகளுக்கு ‘பாயிரம்’ பாடிய பாவலன். அவரது கவியில் இருந்தும் அவரது வாழ்வில் இருந்தும் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு. ‘‘நான் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டவன். எனது ஆசிரியர் சங்கரவள்ளிநாயகம் (பிற்காலத்தில் ராசபாளையம், கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றங்களைத் தொடங்கிய பேராசிரியர்) பேச்சைக் கேட்டுத்தான் நான் உருவானேன்” என்றார். அந்த வழித்தடத்தில் பல மாணவர்களைப் புரட்சிகரமானவர்களை உருவாக்கிய பேராசிரியர் இன்குலாப்!



1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகுதான் பெரியார் மீதான விமர்சனத்தை, பல மார்க்சிய - லெனினிய அமைப்புகளே குறைத்தன. அதுவரை அவர்கள் அளவுகோல்களுக்குள் பெரியார் வர மாட்டார். 2009-ம் ஆண்டுக்குப் பிறகுதான் ஈழப்போராட்டமே பல மார்க்சிய லெனினிய அமைப்புகளுக்கு விடுதலைப் போராட்டம். அதற்கு முன்னால் அது இனப் பாசிசப் போராட்டம். ஆனால், 1983-ம் ஆண்டு காலகட்டத்திலேயே ஈழப்போராட்டத்தையும் பெரியார் பங்களிப்புகளையும் மிகச்சரியாக உள்வாங்கிய மார்க்சிஸ்ட் - லெனிஸ்ட் இன்குலாப்தான். அதிகாரவர்க்கம் எதை எல்லாம் எதிர்க்கிறதோ, அவை எல்லாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற உன்னதச் சிந்தனையை, தமிழ் மண்ணில் விதைத்தவர்களில் இன்குலாப் முக்கியமானவர். மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள் ஓரளவாவது தமிழகத்தில் ஒன்றிணைந்து செயல்பட அடித்தளம் அமைத்தவர்களில் இன்குலாப் முக்கியமானவர்.



தீராத ஆஸ்மா - மூக்கடைப்பு இருந்தது. ஆனாலும் எல்லா மேடைகளுக்கும் வந்தார். வராமல்போனாலும் அவர் சொற்கள் இருந்தன. ‘`பெரும் கலகத்தில் நான் முகம் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதன் சொற்களில் எனதும் ஒன்று’' என்றவர். ‘`அகமும் புறமும் கலகம் செய்பவன் நான்'’ என்று சொன்னவர் மட்டும் அல்ல, செயல்படுத்தியவர். 2006-ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு ‘கலைமாமணி’ விருது தந்தது. 2008-ம் ஆண்டு ஈழ இனப்படுகொலையைத் தடுக்கத் தவறிய முதலமைச்சர் கருணாநிதிக்கே அந்த விருதைத் திருப்பி அனுப்பிய தமிழ்ப் புலவன் இன்குலாப். 




















‘மனிதன், தமிழன், படைப்பாளி என்ற வகையில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகச் செயலாற்றவேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது. இந்த வகையில் ‘கலைமாமணி’ விருது எனக்கு கௌரவமாக இல்லாமல், முள்ளாகக் குத்திக்கொண்டிருக்கிறது. இதை தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தைத் தக்கவைத்துக்கொள்வதாக அமையும்’ என்று எழுதி, சாமரம் வீசும் புலவர் மரபை உடைத்தவர் இன்குலாப். `‘காலம், கவிஞனைப் புனைகிறது; கவிஞன், காலத்தைப் புனைகிறான்’' என்று இன்குலாப் சொன்னதற்கு, இன்குலாப்பே உதாரணம்.



‘எழுத்தைப் பார்; எழுதியவனைப் பார்க்காதே’ என்பார்கள். எழுத்தைப்போல எழுதியவன் நல்லவனாக, இனிமையானவனாக இருப்பது இல்லை என்பது அதன் பொருள். ஆனால், இன்குலாப் வாழ்க்கைக்கும் வார்த்தைகளுக்கும் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்துகாட்டியவர். எவருடனும் எளிதில் பழகிக் கலந்துவிடுவார். எவர் கருத்தையும் உன்னிப்பாகக் கவனிப்பார். தன்னைப் பற்றி பேசுவதைத் தவிர்ப்பார். புறம் பேசுவதையும் தவிர்ப்பார். லில்லி தேவசிகாமணி விருது, இன்குலாபுக்கும் ஜெயமோகனுக்கும் சேர்த்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ‘`இன்குலாப் எழுதிய ஒரு வரிகூட என்னைக் கவர்ந்தது இல்லை’' என்று ஜெயமோகன் சொன்னார். இதை இன்குலாபிடம் சொன்னபோது, ‘`அவரைக் கவர்ந்தால் அது இன்குலாப் வரியாக எப்படி இருக்க முடியும்?'’ என்று சிரித்தார். அவ்வளவுதான் அவரிடம் இருந்து வந்த விமர்சனம். 



‘`சிறுகதை உலகில் எனக்குப் பிறகு 25 ஆண்டுகளாக யாருமே இல்லை. பின்னோக்கிப் பார்க்கிறேன் யாருமே வரவில்லை’' என்று ஜெயகாந்தன் சொன்னபோது, ‘`எல்லோரும் அவருக்கு முன்னே போய்விட்டார்கள்’' என்று ஒற்றை வரியில் காலி செய்தவர் இன்குலாப். பாலஸ்தீனம், கியூபா பேசிய கம்யூனிஸ்ட்கள் ஈழம் பற்றிப் பேசத் தயங்கியபோது, ‘`அவர்களுக்கு எப்போதும் தூரப்பார்வைதான். கிட்டப்பார்வை கிடையாது’' என்றார். இப்படி அவருடனான உரையாடல்கள் ஒற்றை வரிகளில். ஆனால், ஆழமானதாக அமையும். உரக்கச் சொல்ல வேண்டியபோது உரக்கவும், மென்மையாகச் சொல்ல வேண்டும்போது மென்மையாவும் ஒலிக்கும் இன்குலாப் குரல்.



அவர் கவிதை நம் எல்லோர் கவிதையாகவும் ஆகவேண்டும். அது...

‘நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்

Friday, December 2, 2016

சாமானியனின் பணம் கருப்பா 

நாளை முதல் எவரும் பேன்ட் அணியக் கூடாது' என்பது அரசாங்கத்தின் உத்தரவு, கீழ்ப்படியத் தயார். ‘கட்டிக்கொள்ள வேட்டி எங்கே?’ என்ற அடுத்த கேள்வி பிறந்ததும், ‘50 நாட்கள் பொறுத்திருங்கள். வேட்டி தயாராகிவிடும்’ என்பது உத்தரவாதம். அப்படியானால், 50 நாட்கள் நிர்வாணமாக நிற்க வேண்டியதுதானே நிதர்சனம். படிக்கும்போது கோபம் வந்தாலும், இதுதான் இந்தியாவின் இன்றைய யதார்த்தம்!

‘நான் ஒரு சி.எம் என்றைக்குமே நான் ஒரு சி.எம் ஆகத்தான் இருப்பேன். என்னைப் பொறுத்தவரை சி.எம் என்றால் காமன் மேன்’ - என்று 2008-ம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக வெற்றி பெற்றபோது நரேந்திர மோடி சொன்னார். பன்ச் டயலாக் அடிப்பதில் அவர் ஒரு ரஜினி பட இயக்குநர். இவர் பி.எம் ஆனதும் சி.எம்-ஐ பற்றி கவலையேபடவில்லை என்பதற்கு உதாரணம்தான் இந்தியா முழுக்க நாம் பார்க்கும் காட்சிகள்.

சென்னை பெசன்ட் நகர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த புருஷோத்தமன், தனது மகள் திருமணத்துக்கு இரண்டரை லட்சம் ரூபாய் எடுப்பதற்கு 25 விதமான அத்தாட்சிப் பத்திரங்களுடன் அலைகிறார். 

ஆனால், பத்து வைகுண்டராஜனும் பத்து பி.ஆர்.பி-யும் பத்து ஆறுமுகச்சாமியும் இணைந்து சேர்த்த கலவையான பாரதிய ஜனதாவின் செல்லப்பிள்ளை கர்நாடக ஜனார்த்தன ரெட்டி, சுமார் 650 கோடி செலவில் திருமணம் நடத்துகிறார். மந்தைவெளியில் ஒருவர் 4,500 ரூபாய் மாற்றுவதற்கு 100-வது ஆளாக நிற்கிறார். ஆனால், தஞ்சாவூரில் கட்சிக் கரை வேட்டி கட்டிய ஒருவர் 2,000 ரூபாய் தாளை பெட்டியில் வைத்து பட்டுவாடா செய்கிறார். ஏ.டி.எம்-மில் 2,000 ரூபாய் எடுக்க, ஒருவர் இரண்டு மணி நேரம் நிற்கிறார். சிலருக்கு ஒரே வரிசை உள்ள கட்டுகளாகக் கிடைக்கிறது. இதுதான் கறுப்புப் பணம் ஒழிப்பா?

ஒரு லட்சம் ரூபாய் பழைய நோட்டு கொடுத்தால், 80 ஆயிரம் ரூபாய் புது நோட்டு. ஒரு கோடி ரூபாய் பழைய நோட்டு கொடுத்தால், 78 லட்சம் ரூபாய் புது நோட்டு. தங்கத்தில் கேட்டால், கிராம் 4,000 ரூபாய். இதுதான் 8-ம் தேதியில் இருந்து நடக்கும் வர்த்தகம் என்றால், நடந்தது சர்ஜிக்கல் அட்டாக்கா... கறுப்புப் பணத்துக்குப் பட்டவர்த்தனமாக வெட்டிவிட்ட கால்வாயா?

இந்தியாவில் யாரிடம் கறுப்புப் பணம் இருக்கிறது என, நரேந்திர மோடிக்கும் தெரியும்; குருமூர்த்திக்கும் தெரியும். அவர்கள் மனதில் வைத்துள்ள யாராவது வரிசையில் நின்றார்களா? அவர்கள் வருத்தப்பட்டு இருப்பார்களா? ஹார்ட் அட்டாக் வந்திருக்குமா? வராது. ஏனென்றால், கரன்சி வரவர, அவர்கள் அதை வெள்ளை ஆக்கிக்கொண்டே இருப்பவர்கள். 

பண்டிகைக் காலங்களில் மட்டும் பெரிய துணிக்கடை, நகைக்கடை முதலாளிகளிடம் வருமானவரித் துறையினர் ரெய்டு போவார்கள். ஏனென்றால், அப்போதுதான் அவர்களிடம் கரன்சி குவிந்திருக்கும். அடுத்த மாதம் பதுக்கப்பட்டுவிடும். மே, ஜூன் மாதங்களில் கல்வி நிறுவனங்களில் ரெய்டு நடக்கும். அடுத்த மாதம் மறைக்கப்பட்டுவிடும். நகையாக, நிலமாக, டாலராக மாறிவிடும்; வெளிநாடு பறந்துவிடும்; ஹவாலாவாகப் பரிணாமம் பெற்றுவிடும். தெலுங்குப் படத்தில் ரெய்டு வரும்போது கட்டில் மெத்தைக்குள் மொத்தமாகப் பணம் வைப்பது மாதிரி, இப்போது யாரும் வைப்பது இல்லை. அதெல்லாம் ‘பாலாஜி’ காலத்துப் பழைய ஸ்டைல். சினிமா இயக்குநர்களைவிட சில ஆடிட்டர்களுக்குக் கற்பனைவளம் அதிகம். அவர்கள்தான் பதுக்கலுக்கு பால பாடம் எடுப்பவர்கள். எனவேதான் கறுப்பு முதலைகள் கவலைப்படவில்லை.

ஒரு குடும்பம், தன்னிடம் இருந்த மொத்தப் பணத்தையும் ஒரு தனியார் வங்கியிடம் கொடுத்து, அவர்களிடம் இருந்ததை பண்டமாற்றாக மாற்றிக்கொண்டுவிட்டது. ஒருவர், தனக்குத் தெரிந்த பைனான்ஷியர்களை வரவைத்து, பெட்டிப் பெட்டியாகத் தாரைவார்த்துவிட்டார். ஒருவர், தனக்குத் தெரிந்த தொழிலதிபர்கள் அனைவருக்கும் 50 லட்சம் வீதம் பிரித்துக் கொடுத்துவிட்டார். ‘எவ்வளவு வேண்டுமானாலும் என்னிடம் கொடுங்கள்’ என்று ஒருவர் உட்கார்ந்துகொண்டு இருக்கிறார். பவர் புரோக்கர்களும், பான் புரோக்கர்களும், பைனான்ஷியல் புரோக்கர்களும், கந்து வட்டிக்காரர்களும் கைகோத்து நிற்கும் காட்சிதான் ஏக இந்தியாவில் எங்கும் இருக்கிறது.

சிறுகச்சிறுகச் சேமித்துவைத்தவர்கள், குடி மற்றும் ஊதாரிக் கணவனிடம் இருந்து மறைத்துவைத்தவர்கள், வங்கி மற்றும் ஏ.டி.எம் விவரம் தெரியாதவர்கள், வங்கிகள் புகாத கிராமத்தான்கள் ஆகியோர், கை பிசைந்து நிற்கும் காட்சிதான் ஏக இந்தியாவில் எங்கும் பார்க்க முடிகிறது. மோடி காட்ட நினைத்த, மாற்ற நினைத்த இந்தியா என்பது இதுதானா?

கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என மோடி நினைத்தால், 100-க்கு 110 மடங்கு ஆதரிக்கத்தான் வேண்டும். ஏனென்றால், இன்றைய அரசியல், இன்றைய தேர்தல், இன்றைய கட்சிகள் எதில் இயங்குகின்றன என்றால், கறுப்புப் பணத்தில்தான். அந்தப் புதைகுழியில் இருந்துவரும் ஒருவர், `இதை ஒழிக்கப்போகிறேன்' என அரசியல் உள்நோக்கத்துடன் அட்டென்ஷனைத் தன் பக்கம் திருப்புவதற்காக (ஹீரோ ஆவதற்காகவே) சொன்னாலும் ஆதரிக்கத்தான் வேண்டும். ஆனால், அதற்கான முயற்சிகள் சரியான முன்னேற்பாட்டுடன்தான் நடந்தனவா? 120 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் 14 லட்சம் கோடி ரூபாய் பணத்தை ‘இதோ இந்த நிமிடத்தில் இருந்து செல்லாது’ எனச் சொல்வதற்கு முன் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டனவா என்பதே கேள்வி.

`நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 86 சதவிகித ரூபாய் நோட்டுக்கள் செல்லாது' எனச் சொல்வதற்கு முன், அதே மதிப்பிலான மற்ற ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வைக்க முடியாது. ஆனால், 40 சதவிகித நோட்டுக்களை அச்சடித்திருந்தால், இந்தப் பிரச்னையே வந்திருக்காதே! 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுக்கள் தாராளமாகப் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும். பழைய 500 ரூபாய் செல்லாது என்றபோது, புதிய 500 ரூபாய் அச்சடித்து வைத்திருக்க வேண்டும்; 2,000 ரூபாய் நோட்டுக்கள் தேவையான அளவு இருந்திருக்க வேண்டும். இதை ஏன் செய்யவில்லை எனக் கேட்டால், ‘கேட்பவர்கள் எல்லாம் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள்’ என்று சொல்பவர் பிரதமரா? நரேந்திரமோடிக்கும் ஹெச்.ராஜாவுக்கும் வித்தியாசம் வேண்டாமா? ‘கறுப்புப் பணம் உள்ளவர்கள்தான் விமர்சிக்கின்றனர்’ எனச் சொல்கிறார் மோடி. ஏ.டி.எம் வரிசைகளில், வங்கி வாசல்களில் நிற்பவர்கள் எல்லாம் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் என்றால், இந்தியரில் எவருமே ‘வெள்ளை’ மனிதர் இல்லையா?‘பரத கண்டமே’ கறுப்புக் கண்டமா?

‘ஊழலுக்கு எதிராகவும் கறுப்புப் பணத்துக்கு எதிராகவும் மிகப்பெரிய போராட்டத்தை நாடு முன்னெடுத்துவருகிறது. இந்த யுத்தத்தில் சாமானிய மக்கள்தான் போர் வீரர்கள்’ என மோடி பேசி இருக்கிறார். கறுப்புப் பணம் மட்டும் அல்ல, ஊழல், எதேச்சதிகாரம், மதவாதம், சாதிவாதம் ஆகிய அனைத்துக்கு எதிரான போராட்டத்திலும் மக்கள்தான் மகத்தான போர்வீரர்கள். ஆனால், அந்த மக்கள் இப்போது ஐந்துக்கும் பத்துக்கும் அலைகிறார்கள் என்பது சி.எம்-முக்கு ஏன் தெரியவில்லை? ஒரு நோட்டைத் தடைசெய்திருக்கும்போது, மாற்று ரூபாய் நோட்டுக்கள் தயாராகக் கிடைத்தால், மோடியின் கறுப்புப் பணத்துக்கு எதிரான போராட்டத்துக்கு அவர் எதிர்பார்க்கும் மக்கள் நிச்சயம் வந்திருப்பார்கள். தான் பதவியில் இருந்த காலத்தில் மக்களைப் பற்றியே கவலைப்படாமல் ஆட்சி நடத்திய மன்மோகன் சிங், இன்று மகாயோக்கியர்போல பேசுவதைப் பார்த்து மக்கள் நிச்சயம் சிரித்திருப்பார்கள். ‘2ஜி புகழ்’, ‘ஏர்செல் மேக்ஸிஸ் புகழ்’ தி.மு.க மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்துவது பற்றிக் கடுப்பாகி இருப்பார்கள். மக்களின் கோபம் கறுப்புப் பண முதலைகள் பக்கம் போகாமல் மத்திய அரசாங்கத்தின் பக்கம் திசை மாறியதற்குக் காரணம் என்ன?

தான் நினைத்தது நடக்க வேண்டும், தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும், தான் நினைத்ததே சரி எனச் சொல்ல வேண்டும், தான் நினைத்ததையே செயல்படுத்திக் காட்ட வேண்டும் என நரேந்திர மோடி நினைப்பதுதான் எதேச்சதிகாரம், சர்வாதிகாரம். தான் நினைத்ததை மட்டும் செய்ய, எதற்கு அமைச்சரவை? எதற்கு நாடாளுமன்றம்?

நாடாளுமன்றம் கொந்தளிக்கிறது. ‘இங்கே நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உட்கார்ந்திருக்கிறார். அவருக்கே முன்கூட்டி இந்த விஷயம் தெரியுமா? தெரிந்திருந்தால் அவர் இதற்கு எதிராக ஆலோசனை கூறியிருப்பார்' என்று சரத் யாதவ் சொல்ல, அருண் ஜெட்லி பதிலே சொல்லவில்லை. சிரித்தபடி அமர்ந்திருந்தார் ஜெட்லி. ‘இது மத்திய அரசின் முடிவு. எங்களது கூட்டு முடிவு’ என ஜெட்லி சொல்லியிருக்க வேண்டும்.

அமைச்சரவை ஆறு மணிக்குக் கூடியதாகவும், அதில் பிரதமர் இதை அறிவித்ததாகவும், அவர்களை அதே அறையில் இருக்கவைத்துவிட்டு பிரதமர் தூர்தர்ஷனில் பேசியதாகவும் டெல்லி தகவல்கள் சொல்கின்றன. தூர்தர்ஷனில் நேரம் ஒதுக்கவைத்துவிட்டுத்தான் மத்திய அமைச்சரவை கூடி இருக்கிறது என்றால், மத்திய அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்து இருந்தாலும் அறிவிப்பு செய்யத் தயாராகவே மோடி இருந்திருப்பார். நீங்கள் எந்த வார்த்தையை வேண்டுமானாலும் பயன்படுத்துகள். உலகமயம், தாராளமயம், வளர்ச்சி, நாட்டுப் பாதுகாப்பு, வல்லரசு... எல்லா சொல்லாடல்களும் யாருக்காக? மக்களுக்காகத்தானே! அவர்களைப் பற்றிய புரிதலே இல்லாமல் அவர்களைப் பற்றிய சிரமம் அறியாமல் ‘தன்னை மட்டுமே நம்பி’ ஒரு முடிவை மோடி எடுத்துள்ளார். இந்தியா எதிர்பார்க்கும் புதிய இரும்பு மனிதர் இப்படித்தான் இருக்க வேண்டுமா? 

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற முகமாக அத்வானி இருப்பதால் புதுமுகம் காட்ட நினைத்தவர்களுக்கு மோடி பயன்பட்டார். மோடிக்கு அதனால் பயன் விளைந்தது. ஆனால், வந்ததும் அத்வானி, ஜோஷி போன்ற பெருந்தலைகள் காலி செய்யப்பட்டார்கள். ராஜ்நாத்சிங்கிடம் இருந்த தலைவர் பதவி பறிக்கப்பட்டது. சுஷ்மா சுவராஜ் உடல்நலம் இல்லாமல் ஆகிவிட்டார். அருண் ஜெட்லிக்கு அவர் துறையில் நடப்பதே தெரியவில்லை.  பாரதிய ஜனதாவின் பெருந்தலைகள் வீழ்த்தப்பட்டு ‘OM’ ஆக (ஒன் மேன்) நிற்கிறார் மோடி.

சரி... நாடாளுமன்றத்துக்கு வருகிறாரா என்றால் வரவில்லை. பேசுகிறாரா? பேசவில்லை. கோவாவிலும் பஞ்சாபிலும் சொல்லும் கர்ஜனைகளை நாடாளுமன்றத்தில் பேச மோடிக்கு என்ன தயக்கம்? அசுரபலத்தில் இருக்கிறது பாரதிய ஜனதா. யார் அவருடைய ஆட்சியைக் கலைத்துவிட முடியும்? எதிர்க்கட்சிகளின் கோரிக்கையே, ‘பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும்’ என்பதுதான். மோடிக்குப் பேசத் தெரியாதா? நன்றாகவே பேசுவார். அதற்கான உடல் மொழியும் குரல் மொழியும் உண்டு. ஆனால், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது அவருக்கு இருக்கும் மதிப்பின்மையையே இது காட்டுகிறது. 

பொதுவாக, நாடாளுமன்றம் நடக்கும்போது பிரதமரோ, சட்டமன்றம் நடக்கும்போது முதலமைச்சரோ வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார்கள்; அரசு சார்பு அறிவிப்புகளை வெளியே சொல்ல மாட்டார்கள். சபையில்தான் செய்வார்கள். இது மரபு. நாடாளுமன்றம் நடக்கும்போது மோடி வெளி நிகழ்ச்சியில் பேசுவார். ஏன், வெளிநாடே போய்விடுவார். வெளிநாடு போனால், யாரும் தங்கள் நாட்டைப் பற்றி தங்கள் நாட்டு உள்ளூர் அரசியலைப் பற்றி பேச மாட்டார்கள். ஆனால் மோடி, இந்திய அரசியல் பற்றி பேசினார். அதைவிட மோசமாக சமீபத்தில் ஜப்பான் சென்ற மோடி, ‘இந்தியாவில் இப்போது கல்யாணம் நடப்பதே கஷ்டமாகிவிட்டது. கறுப்புப் பணத்தை அந்த அளவுக்குக் கட்டுப்படுத்திவிட்டோம்’ எனச் சொல்லிச் சிரித்திருக்கிறார். சொந்த உழைப்பில் சம்பாதித்தவன் வீட்டில் கல்யாணம் நடப்பதுதான் கஷ்டமே தவிர, கர்நாடக ரெட்டி சகோதரர்களுக்கு இல்லையே மோடி? 

என்ன நினைக்கிறார் அவர்? வங்கியில் இல்லாமல் வீட்டில் இருப்பது எல்லாம் கறுப்புப் பணமா அல்லது வங்கியில் இருப்பது எல்லாம் நல்ல பணமா? கணக்குக் காட்ட முடியாத பணத்துக்கு 50 சதவிகிதம் வரி என்றால், 50 சதவிகிதக் கறுப்புப் பணத்தை அரசாங்கமே அங்கீகரிக்கிறது என்பதுதானே அர்த்தம்? அப்படியானால், அவர்கள் செய்வது கறுப்புப் பண ஒழிப்பா... அங்கீகாரமா?

கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியவர்கள் பட்டியலை வெளியிடுங்கள். ‘500 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்கள் பட்டியலைக் கொடுங்கள்’ என உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கிறது. அதைக் கொடுங்கள். ‘லோக்பால் அமைப்புக்கு இன்னமும் நீதிபதி நியமிக்கப்படவில்லை. ஏன் நியமிக்கவில்லை?’ என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா கொண்டுவாருங்கள். இவை அனைத்தையும் மோடியால் ஒரே நாளில் செய்ய முடியும். ஏன் செய்யவில்லை?

‘தினந்தோறும் தீபாவளிபோல மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்குவோம்’ என மோடி சொன்னார். ஏழை, மத்தியதர வர்க்கத்தின் வயிற்றில் இப்போது வெடி வெடிக்கிறது. இதைப் பார்த்து நரகாசுரர்கள் சிரிக்கிறார்களே நரேந்திரமோடி

Monday, November 28, 2016

ஃபிடல் சந்தேகம் இல்லாமல் சந்திக்கும் மனிதர்!














கடந்த நவம்பர் 25-ம் தேதி இரவில். கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றினார். ஏதோ முக்கியமான செய்திதான் என்று  மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  ‘கியூபா புரட்சியின் காமென்டர் இன் சீஃப் மறைந்து விட்டார். தொடர்ந்து வெற்றியை நோக்கி செல்லுங்கள் 'என்ற ஃபிடலின் புகழ்பெற்ற பொன்மொழியுடன் ரவுல் காஸ்ட்ரோ அறிவித்த போது, கியூபா மக்கள் மட்டுமல்ல, அர்ஜென்டினாவில் இருந்த மரடோனாவும் குலுங்கி அழத் தொடங்கி விட்டார். சர்ச்சைகளுக்குப் பெயர் போன ஒரு புகழ்பெற்ற கால்பந்து வீரர், ஒரு நாட்டின் தலைவர் ஒருவர் மறைவுக்கு கண்ணீர் வீடுகிறார் என்றால், அதன் பின்னணி பலமானது.
கடந்த 1959-ம் ஆம் ஆண்டு சேகுவராவுடன் சேர்ந்து கியூபா புரட்சியில் ஈடுபட்டு, படிஸ்டாவை ஆட்சியில் இருந்து அகற்றிய ஃபிடல் கியூபா மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல மரடோனாவின் வாழ்விலும் மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.. மரடோனா இன்று உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு  ஃபிடலும் ஒரு காரணம். 
கடந்த 1986-ம் ஆண்டு அர்ஜென்டினா 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு மரடோனாதான்கேப்டன். இந்தத் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில்,  7 வீரர்களை கடந்து சென்று மரடோனாவால் அடிக்கப்பட்ட மாயகோல் உலக மக்களை கட்டிப் போட்டிருந்தது, ஃபிடலையும் அந்த கோல் மயக்கியிருந்தது. உலகக் கோப்பையை வென்ற கையோடு மரடோனாவைத் தங்கள் நட்டுக்கு வருமாறு ஃபிடல் அழைப்பு விடுத்தார். ஆனாலும் தொடர்ச்சியான ஆட்டங்களால் மரடோனாவால் உடனடியாக கியூபா செல்ல முடியவில்லை.  கடந்த 1987-ம் ஆண்டு மரடோனா முதன்முறையாக கியூபாவுக்கு சென்றார். கியூபா தலைவர் கால்பந்து கிங்கை கட்டியணைத்து வரவேற்று மகிழ்ந்தார். மரடோனா, பாப்புலரான அர்ஜென்டினா 10-ம் எண் ஜெர்சியில் தனது கையொப்பமிட்டு ஃபிடலுக்கு பரிசாக வழங்கினார். 
















அந்தக் காலக்கட்டத்தில் புகழ்பெற்று விளங்கிய ஒரு கால்பந்து வீரனை தனது விருந்தினராக வைத்து பராமரிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்ததாக கூறி ஃபிடல் மகிழ்ந்தார்.  அப்போது தொடங்கிய நட்பு ஃபிடல் மரணம் அடையும் வரைத் தொடர்ந்தது. மரடோனாவுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கியூபாவுக்கு சென்று ஃபிடலை சந்திப்பது வழக்கம். ஃபிடலுக்கு பிடித்த கூடைப்பந்து , கால்பந்து, உலக அரசியல் குறித்து இருவரும் விவாதிப்பார்கள். 
ஃபிடலை பொறுத்த வரை, எந்த நேரமும் விழிப்பாகத்தான் இருப்பார். கவனம் சிதறினால் மரணம் என்பது ஃபிடலுக்குத் தெரியும். கியூபாவை, தனது மாகாணங்களில் ஒன்றாக இணைத்து விட வேண்டுமென்பது அமெரிக்காவின் நோக்கம். அதற்கு பெருந்தடையாக இருந்தது ஃபிடல். எனவே சிஐஏ, ஃபிடலை கொல்வதற்கு 50 ஆண்டுகளாக முயன்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 634 முறை கொலை முயற்சியில் ஈடுபட்டும்  தோல்வியைத் தழுவியது.
ஃபிடலின் காதலி மரிடா உள்ளிட்டவர்களை வைத்து கூட அவரை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது. அதனால், ஃபிடல் எந்த நேரமும் விழிப்புடன்தான் இருப்பார். எந்த அமெரிக்க அதிபரிடம் கேட்டாலும் ''ஃபிடலை நாங்கள் கொல்லவில்லை என்றால், என்ன கடவுள் அவரை ஒருநாள் எடுத்துக்  கொள்வார்' என்பார்கள். உலகிலேயே அதிக முறை கொலை முயற்சிக்குள்ளான நபர் ஃபிடலாகத்தான் இருக்கும். அப்படி உயிருக்கு விலை நிர்ணயிக்கப்பட்ட ஃபிடல் எந்த சந்தேகமும் இல்லாமல் ஒரு வெளிநாட்டு விளையாட்டு வீரர் ஒருவரை சந்திக்கிறார் என்றால் அது மரடோனோவாகத்தான் இருக்கும். இருவருக்கும் அந்தளவுக்கு நெருக்கம். 
இந்த நெருக்கம் அதிகரிக்க இன்னொரு காரணமும் இருந்தது. கடந்த 1983-ம் ஆண்டு மரடோனா இத்தாலியின் நேபோலி அணிக்காக விளையாடி வந்தார். அப்போதிருந்தே அவருக்கு 'கோகைன்' என்ற போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் இருந்தது. இதனால், கடந்த 2004-ம் ஆண்டு வாக்கில் மரடோனாவின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவரது உடல் எடை 127 கிலோவாக இருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், பியூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை பிழைக்க வைக்க கடுமையாகப் போராடினர். உலகம் முழுக்கவுள்ள அவரது ரசிகர்கள் மரடோனா உயிர்பிழைக்க பிரார்த்தனை நடத்தினர். தமிழகத்தில் உள்ள பல கிறிஸ்தவ ஆலயங்களில் கூட மரடோனா உயிர் பிழைக்க சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. இறுதியில் மரடோனா உயிர் பிழைத்துக் கொண்டார். ஆனால், உயிர் பிழைத்தாலும் போதை மருந்து பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக் கொண்டால்தான் உயிர் வாழ முடியும் என மருத்துவர்கள் உறுதிபடக் கூறினர். 

















இதையடுத்து, கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மரடோனாவை உடனடியாக தனது நாட்டுக்கு அழைத்துக் கொண்டார். ஹவானாவில் உள்ள லாபெராடா கிளீனிக் போதைக்கு அடிமையானவர்களை மீட்பதில் புகழ்பெற்றது. அந்த மருத்துவமனையில் மரடோனாவை ஃபிடல் அனுமதித்து சிகிச்சை அளித்தார். பல மாதங்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மரடோனா, போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டார். அவரது உடல் எடை சாதாரண நிலைக்கு வந்தது. பின்னர் மீண்டும் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டு, கடந்த 2010-ம் ஆண்டு அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு பயிற்சியாளராகவும் பொறுப்பேற்றார். அந்த வகையில் மரடோனாவின் உயிரை மீட்டு, தந்தவர் ஃபிடல். உடல் நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகிய ஃபிடலை அடிக்கடி சென்று  மரடோனா சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 
மரடோனாவும் ஃபிடலை தனது சிறிய தந்தை எனக் குறிப்பிடுவது வழக்கம். மரடோனாவின் உடலில் இரு உருவங்கள்தான் பச்சைக் குத்தப்பட்டிருக்கும். அதில் ஒன்று சே... மற்றொன்று ஃபிடலுடையது

Sunday, November 27, 2016

ஃபிடல் காஸ்ட்ரோவின் கடைசி உரை !




கியூபா' இந்த தேசத்தின் அடையாளமாக இருந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. உலக கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், கியூபா புரட்சியின் தலைவருமான ஃபிடல் காஸ்ட்ரோ உடல்நலம் குன்றி இன்று உயிரிழந்தார். உலகில் நீண்ட நாள் சேவையாற்றிய அரசியல் தலைவர்களில் மிக முக்கியமானவரும், முதன்மையானவருமான ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு வயது 90.

இவர் கடைசியாக உரை நிகழ்த்தியது க்யூபா கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது மாநாட்டில். கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி அவர் நிகழ்த்திய உரை மிக முக்கியமான உரையாகப் பார்க்கப்படுகிறது. ஃபிடல் காஸ்ட்ரோ கடைசியாக பேசியதாவது.

நெருக்கடியான காலகட்டங்களின்போது எந்தவொரு பகுதி மக்களையும் அணிதிரட்டுவதும், அவர்களுக்குத் தலைமையேற்பதும் மிகக் கடுமையான காரியம். ஆனால் அப்படி மக்களை அணிதிரட்டாமல் மாற்றங்கள் சாத்தியமில்லை. நான் ஏன் ஒரு சோசலிஸ்ட் ஆனேன்?. இன்னும் சரியாக கேட்க வேண்டும் என்றால், நான் ஏன் கம்யூனிஸ்ட் ஆனேன்?
ஏழைகளைச் சுரண்டுவதை தங்களது உரிமையாக எடுத்துக் கொண்டவர்களாலும், உழைப்பு, திறமை மற்றும் ஒட்டுமொத்த மனித சக்தியால் உருவாக்கப்படும் அனைத்து பொருட்செல்வத்தையும் முற்றாக அபகரித்துக் கொள்வது தங்களது உரிமையாக எடுத்துக் கொண்டவர்களால் வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்ட் என்ற வார்த்தை மிகவும் கீழ்த்தரமானதாக சித்தரிக்கப்பட்டு வந்துள்ளது. கம்யூனிச சித்தாந்தம் என்பது சிறுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. வரலாறு நெடுகிலும் மனிதர்கள், இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்ற மனநிலையிலேயே இருந்து வந்திருக்கிறார்கள்.

நாம் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் நான் எளிமையாகச் சொல்கிறேன். நான் ஏதும் அறியாதவனும் அல்ல, எல்லாம் தெரிந்தவனும் அல்ல; நான் பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்த போது நானாகவே எனது சித்தாந்தத்தைப் பெற்றுவிடவில்லை. நான் சட்டம் மற்றும் அரசியல் அறிவியல் மாணவனாக இருந்தபோது தனியாக பாடம் நடத்தும் ஆசிரியரைப் பெற்றிருக்கவில்லை. பெரும் கடல் போன்ற பாடமான அரசியல் அறிவியலுக்கு ஆசிரியரைப் பெற்றிருக்கவில்லை.
நான் 20 வயது இளைஞனாக இருந்தபோது விளையாட்டிலும், மலையேறுவதிலும் ஆர்வத்துடன் இருந்தேன். அந்த சமயத்தில் மார்க்சியம் - லெனினியம் குறித்து கற்பிக்கவும், படிக்கவும் உதவி செய்வதற்கு எந்த ஆசிரியரும் இல்லை; அந்த சமயத்தில் நான் மார்க்சிய, லெனினியக் கோட்பாடுகளைப் பற்றி லேசாக அறிந்திருந்தேன். அவ்வளவு தான். அதற்கு மேல் அதையும் நான் தெரிந்திருக்கவில்லை.
சோவியத் ஒன்றியத்தின் மீது முழுமையான நம்பிக்கை மட்டுமே என்னை உற்சாகமூட்டியது. மாமேதை லெனினின் பணிகள், சோவியத் புரட்சியின் 70 ஆண்டுகள் கழித்து மீறப்பட்டன. ரஷ்யப்புரட்சியைப் போன்று இன்னொரு புரட்சி நடப்பதற்கு 70 ஆண்டுகாலம் காத்திருக்கத் தேவைப்படாது என்று கருதுகிறேன். காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் நடைபெற்ற மிகப்பிரம்மாண்டமான போராட்டத்தின் விளைவாக எழுந்த சோவியத் புரட்சியைப் போன்றதொரு பிரம்மாண்டமான சமூகப் புரட்சியை இந்த மனித குலம் அவசியம் பார்க்க வேண்டியுள்ளது.
இன்றைக்கு பூமியின் தலைக்கு மேலே மிகமிகப்பெரிய ஆபத்து தொங்கிக் கொண்டிருக்கிறது; நவீன ஆயுதங்களின் பேரழிவு சக்தியிடமிருந்து அந்த ஆபத்து வந்துகொண்டிருக்கிறது; அந்த ஆயுதங்கள் இந்த புவிக்கோளத்தின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக் காத்திருக்கின்றன; புவியின் மீது மனிதகுலம் வாழ்வதை சாத்தியமற்றதாக மாற்றிடக் காத்திருக்கின்றன.

டைனோசர்கள் மறைந்ததைப் போல, இன்றைய உயிரினங்களும் மறைந்துபோகும் ஆபத்து காத்திருக்கிறது. ஒன்று, மிக அறிவார்ந்த வாழ்க்கையின் புதிய வடிவங்கள் எதிர்காலத்தில் உருவாகலாம்; அல்லது சூரியனின் வெப்பம், மெல்ல மெல்ல அதிகரித்து, சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களையும் துணைக்கோள்களையும் அது உருக்கி அழித்துவிடலாம். இதை பெருவாரியான விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.அவர்களது கோட்பாடுகளில் சில உண்மையாக இருக்குமானால்  நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு அதனுடைய வீச்சு புரியாமல் கூட இருக்கலாம்  அதை உணர்ந்து, இன்னும் கற்றுக்கொண்டு எதார்த்தத்திற்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
புவிக்கோளத்தின் உயிரினங்கள், காலவெளியில் இன்னும் நீண்ட காலத்திற்கு உயிர்வாழுமானால், எதிர்காலச் சந்ததியினர், நாம் அறிந்துகொண்டு பங்காற்றியதைவிட இன்னும் அதிகமாக அறிந்துகொண்டு செயலாற்றுவார்கள்.ஆனால், அவர்கள் முதலில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றைத் தீர்த்தாக வேண்டும்.
உண்மையில் கோடிக்கணக்கான மனிதர்களுக்கு தேவைப்படுவதைவிட, மிக மிகக் குறைவான குடிநீரும், இயற்கை வளங்களுமே உள்ளது. இந்நிலையில் தவிர்க்க முடியாத வகையில் துன்ப துயரங்களுக்குள் சிக்கியிருக்கும் மக்களுக்கு - எப்படி உணவளிப்பது என்பதைப் பற்றி அவர்கள் யோசித்தாக வேண்டும். நீங்கள் ஆச்சரியப்படலாம், எனது இந்தப் பேச்சில் அரசியல் எங்கே போனது என்று யோசிக்கலாம். நான் இதையெல்லாம் சொல்வதற்கு வருத்தப்படுகிறேன்; ஆனால் இன்றைக்கு அரசியல் என்பது நான் கூறிய இந்த வார்த்தைகளில்தான் அடங்கியிருக்கிறது.
மனிதர்கள் மேலும் மேலும் இந்த உண்மைகளைப் பற்றி கவலைப்பட வேண்டும். இன்னும் ஆதாம் - ஏவாள் காலத்திய மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடக்கக்கூடாது. எந்தவிதமான தொழில்நுட்பமும் சென்றடையாத, பசியோடு காத்திருக்கும் கோடிக்கணக்கான ஆப்பிரிக்க மக்களுக்கு யார் உணவளிப்பது? மழை இல்லை, அணைகள் இல்லை, நிலத்தடி நீர் இல்லை; முற்றிலும் மணலால் மூடப்பட்ட அந்தப் பிரதேசத்தின் மக்களுக்கு யார் உணவு தருவது?
இந்தப் பிரச்சனைகள் அனைத்திலும் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி, அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த அடிப்படை அம்சங்களின் மீது இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை எனக் கருதுகிறேன். விரைவில் எனக்கு 90 வயது ஆகப்போகிறது. 90 வயது குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கருத்தும் இல்லை. அதில் பெரிதாக மகிழ்ச்சியடைவதற்கும் ஒன்றும் இல்லை. நானும் விரைவில் எல்லோரையும் போலவே மரிக்கப்போகிறேன். நாம் எல்லோருமே அந்த நிலையை எட்டுவோம்.
ஆனால் கியூபக் கம்யூனிஸ்ட்டுகளின் சிந்தனைகள் என்றென்றும் ஒரு புவிக்கோளத்தின் அழியாத சின்னமாக மிளிரும்; மனிதகுலத்தின் மாண்புகளைக் காப்பதற்காக அந்தச் சிந்தனைகள் செயலாற்றிக் கொண்டே இருக்கும்; மனித குலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் பொருட்களையும், கலாச்சாரச் செல்வங்களையும் அது உற்பத்தி செய்துகொண்டே இருக்கும்; அந்த மகத்தான பொன்னுலகத்தைப் பெறுவதற்காக நாம் ஓய்வின்றி போராடுவது அவசியம்.
லத்தீன் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள எனது சகோதரர்களே, கியூப மக்களும், கியூப மக்களின் சிந்தனைகளும் மகத்தான வெற்றி பெறுவது என்பது உறுதி. இத்தகையதொரு மாநாட்டு அரங்கில் நான் உரையாற்றுவது இதுவே கடைசியாக இருக்கலாம். தொடர்ந்து முன்னேறுவோம்; அந்தப் பாதையை மிகச்சரியானதாக இருக்குமாறு செப்பனிடுவோம்; அதற்காக நாம் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தின் மீது அதிகபட்ச விசுவாசத்துடனும் மிக உயர்ந்த ஒன்றுபட்ட சக்தியுடனும் முன்னேறுவோம். நம்முடைய இந்தப் பயணம் எவராலும் தடுக்க முடியாதது.
இவ்வாறு ஃபிடல் காஸ்ட்ரோ பேசியிருந்தார்.
அவர் அன்று சொன்னதைப்போல இதுவே அவரது இறுதி உரையாகவும் மாறிப்போனது தான் சோகம்

Tuesday, November 1, 2016

தேவதாசி என்னும் புனித விபச்சாரம்

 
பிறருக்கு மிகவும் கொடுமையாகத் திகழும் சில விஷயங்களைப் பற்றி பேசும்போதும், கருத்து தெரிவிக்கும்போதும் நமக்கு மிகச் சுலபமாக இருக்கிறது. நாம் அந்தக் கொடுமைகளை அனுபவிப்பதில்லை. மிஞ்சிப்போனால் எவரோ எழுதியதைப் படிக்கிறோம், அல்லது எவரோ யாரிடமோ சொல்லும்போது கேட்டுக்கொள்கிறோம். பெரும்பாலும் கருத்துத் தெரிவித்தலுக்கு முன்பு நடக்கும் இந்த 'தெரிந்துகொள்தல்' படலம் மிகுந்த ஆராய்ச்சிக்கெல்லாம் நம்மை உட்படுத்துவதில்லை, குளிர்சாதன அறையிலேயே நடந்து முடிகிறது. தேவதாசி முறையைப் பற்றிய சில கலை ஆர்வலர்களின் கருத்துக்கள் இதுப்பொன்றவைதான். 

16 வயதே நிரம்பிய ரூபா தேவதாசி முறையில் கர்நாடகாவின் எல்லம்மா கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர். அவர் சொல்கிறார், "11வயதில் நான் பருவத்திற்கு வரும் முன்பே என் கன்னித்தன்மையை அர்ப்பணித்துவிட்டேன். முதல் முறை மிகவும் வலிதருவதாக இருந்தது. என்னுடன் இரவைக் கழித்தவர் ரேசர் ப்ளேடுகளால் என் பிறப்புறுப்பில் கீறலகளைப் போட்டார். இப்போது எனக்கு பழகிவிட்டது". இது 'ஒரு' தேவதாசியின் கதை. இந்தியக் கோவில்களின் வரலாறு நெடுகே கோடிக்கணக்கான ரூபாக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் பிறப்புறுப்புகளும், உடல்களும் உயர்சாதி ஆண்களால் பொழுதுபோக்கு மைதானங்களைப் போல பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கொஞ்சம் ஆழமாய்த் தேடினால், தேவதாசிகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நெஞ்சை உறைய வைப்பதாக, கண்ணில் நீர் தழும்ப வைக்கும் கொடூரத்துடனேயே இருக்கின்றன.

இந்தியாவெங்கும் தேவதாசிகள் உருவானது புத்தமதம் அழிந்தபின்புதான் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. காமத்தை தன் மூலப்பொருளாகக் கொண்டு எழுதிய வாத்சாயனரோ, ஜடாகா கதைகளிலோ தேவதாசிகளைப் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால் அவற்றுக்குப் பின், அதாவது புத்தமதம் இந்தியாவில் இருந்து விரட்டப்பட்டு சைவ-வைணவம் தழைத்தோங்கத் துவங்கிய காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளிலும்,  குறிப்புகளிலும் தேவதாசிகளைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இன்னும் அதிர்ச்சியூட்டும் செய்தி, புத்த துறவிகளாக இருந்தப் பெண்களை தேவதாசி முறையில் விபச்சாரப் பெண்களாக அக்காலத்திய சைவ-வைணவ புரோகிதர்கள் வலுக்கட்டாயமாக ஆக்கினார்கள் என்ற தகவலும் உள்ளது. ஜைன மதத்துறவிகளையும், புத்தமதத் துறவிகளையும் (ஆண் துறவிகளை) கழுவிலேற்றும், கொதிக்கும் சுண்ணாம்பில் எறியும் காட்சிகள் புடைப்போவியங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் உள்ளதை இன்றும் காணலாம். இப்போது பெண் துறவிகள் என்ன ஆனார்கள் என்ற கேள்வியையும், மேலே சொல்லப்பட்டுள்ள புத்தமத வீழ்ச்சியின் காலத்தையும், தேவதாசி முறையின் துவக்கத்தையும் ஒன்றிணைத்தோமானால் நமக்கு பதில் எளிதில் கிடைத்துவிடுகிறது.இப்படித் தோன்றிய இந்த முறை பின் வழிவழியாக தொடர தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை பயன்படுத்திக்கொண்டனர்.

தேவதாசி எனப்படும் தேவரடியார் முறையை நிறுவனமயமாக்கிய பெறுமை நம் ஊர் மன்னன் ராஜராஜசோழனையே சேரும். தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட போது அதற்காக நாடெங்கிலும் இருந்து 400 சின்னப்பெண்கள் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டனர். பெரும்பாலும் ஏழைக் கூலிகள், விவசாயிகளின் குழந்தைகளான இவர்கள் வறுமையின் காரணமாக விற்கப்பட்டிருக்கிறார்கள். ராஜராஜசோழனின் காலம் பார்ப்பனர்களுக்கும், அரசகுடும்பங்களுக்கும் பொற்காலமாக விளங்கியதேயொழிய ஏழைகளுக்கும், சாதிய படிமத்தில் கீழே இருந்தவர்களுக்கும் அல்ல. பார்ப்பனர்களுக்கு கிராமம் கிராமமாக அள்ளிவழங்கிய சோழர்கள்தான் வண்ணார்களின் சலவைக்கல்லுக்கு வரி விதித்த கேலிக்கூத்தையும் செய்தார்கள். பெண்களை உடன்கட்டை ஏறச்செய்வது, வர்ணாசிரம தர்மத்தை முறைப்படி கடைபிடிப்பது, தாழ்த்தப்பட்டோர் பள்ளங்களிலும், உயர்சாதியினர் மேடான இடங்களிலும் வாழவேண்டும் என உத்தரவிட்டது,  பறைச்சேரி, கம்மாளச்சேரி, வண்ணாரச்சேரி என்று ஏழைகளைப் பிரித்து தனிச்சேரிகளில் வைத்தது என ராஜராஜசோழன் நிறுவனமயமாக்கிய அசிங்கங்கள் ஏராளம், ஏராளம். அவன் ஆரம்பித்து வைத்த அவளங்கள் தான் இன்னும் நம் நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.  இதைப் பற்றிப் பேசினால் தனிப்புத்தகமே வேண்டுமென்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

ஏழைக் குடும்பப் பெண்களை கடவுளின் பேரால் விபச்சாரிகளாக மாற்றியாகிவிட்டது. இப்போது இழப்பீடு வழங்கவேண்டுமல்லவா? அப்போதுதானே தொடர்ந்து தேவதாசியாக பெண்கள் வருவார்கள்! அதற்காக சோழர் காலத்தில் நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தரிசு நிலங்களை தேவதாசிகளுக்கும், விளைநிலங்களை பூசாரிகளுக்கும் ஒதுக்கிய பாரபட்சமும் நிகழ்ந்தேறியுள்ளது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளின் போது கோவில் நகைகளை அணிந்து இவர்கள் ஆடியிருக்கின்றனர். திருமணம் போன்ற சடங்குகளில் இவர்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கப்பட்டிருக்கிறது. பின் கால ஓட்டத்தில் உடலுக்கு காசு என்ற அளவில் இந்த மரியாதை சுருங்கியது தனிக்கதை. இப்படி வழிவழியாக கோவிலில் தேவரடியார்களாக இருக்கும் இப்பெண்களின் ஆண் குழந்தைகள் நாதஸ்வரம், மிருதங்கம், தவில் போன்ற இசைக்கருவிகளைக் கற்று கோவிலிலேயே பணி செய்திருக்கிறார்கள். விபச்சாரம் ஒழிந்துவிட்டாலும் இன்னமும் கோவில்களில் இசைப்பணி புரியும் சமூகத்தவர்கள் இவர்கள் வழி வந்தவர்களே.

தேவதாசி முறை குறித்த டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை ஒன்று, ஆளும் வர்க்கம் மற்றும் கடவுளை முழுதாய் கையில் வைத்திருந்த (வைத்திருக்கும்) பார்ப்பன வர்க்கத்திற்கும் நிலவிய காமத்தேவைக்கு வடிகாலாக தேவதாசி முறை பயன்பட்டதாகவும், அதன்காரணமாக தங்களிடமிருந்த கடவுள் மற்றும் மதத்தை பயன்படுத்தி தேவதாசி முறையை தோற்றுவித்தனர் என்றும் தெளிவாகத் தெரிவிக்கிறது. இதில் ஈடுபடுத்தப்பட்ட அத்துணை பெண் குழந்தைகளும் தாழ்த்தப்பட்ட சாதியை, சூத்திர வர்ணத்தைச் சேர்ந்தவர்கள். சூத்திர ஆண்கள் மனுதர்மப்படி தீண்டப்படக்கூடாதவர்கள், ஆனால் காமத்தில் ஏது தீண்டாமை? எல்லாவற்றுக்கும் தான் மனுதர்மத்தில் பரிகாரமும் இருக்கிறதே!!!

இப்படி கடவுளுக்கு நேர்ந்துவிடப்பட்ட தேவரடியார்கள் அங்கேயே பகல் நேரத்தில் ஆடல், பாடல்களைக் கற்று இரவு நேரங்களில் விபச்சாரம் செய்வதுமாக இருந்திருக்கிறார்கள். பணம் மிகுந்த சில செல்வந்தர்கள் ஒரே பெண்ணை வைத்திருந்த கதைகளும் உண்டு. இந்தத் தொழிலில் வரும் வரும்படியில் ஏழ்மையில் உழலும் தங்கள் குடும்பத்தைக் காக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள எல்லம்மா தெய்வத்திற்கு இன்னமும் பெண் குழந்தைகள் தேவதாசிகளாக நேர்ந்துவிடப்படுகிறார்கள். ஏழ்மையான சூழ்நிலையில் இப்படி ஆக்கப்படும் குழந்தைகள் தங்கள் உடலை விற்று குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள். ஏழு, எட்டு வயதிலேயே விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் இவர்கள் ஓரவிற்கு உடல் ஒத்துழைக்கும் வரை இத்தொழிலைச் செய்துவிட்டு 45வயதிற்கு மேல் கோவில் வாசலில் பிச்சை எடுக்கத் துவங்கிவிடுகிறார்கள். அரசால் சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்ட பழக்கமாக இருந்தாலும், கோவில் பூசாரிகள் இன்னமும் இச்சடங்குகளைச் செய்து பெண்களை தேவதாசிகளாக அனுமதிக்கிறார்கள்.

பெரும்பாலும் தேவதாசிகளாக தங்கள் குழந்தைகளை ஆக்கும் ஏழைப் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் விபச்சாரம்தான் செய்யப்போகிறார்கள் என்று தெரிந்தும், கடவுள்-மதம் எனக் காரணங்களைச் சொல்லி தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்கிறார்கள். பல நேரங்களில் பச்சிளங்குழந்தைகள் கூட நேர்ந்துவிடப்படுகின்றன. இந்த குழந்தைகளை அங்கு ஏற்கனவே இருக்கும் ஜோகினிக்கள் (தாசிகள்) வளர்த்து, ஏழெட்டு வயதிலேயே படுக்கையறைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

இந்திய தேவதாசி முறை குறித்து எழுதியிருக்கும் ஜோகன் ஷங்கர் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இம்முறைக்கான மூலகாரணம் அக்காலத்திய புரோகித சமூகம் (பார்ப்பன சாதி) ஏனைய சமூகங்களை தனக்குக் கீழாக எப்போதும் வைத்திருக்க வேண்டுமென்பதால் அவர்களின் சுயமரியாதையை பாதிக்கும் வண்ணம் உருவாக்கியதே தேவதாசி முறை ஆகும் என்று குறிப்பிடுகிறார்கள். சாதி அடுக்கை காப்பாற்றும் அதே நேரம், காமவேட்கையையும் தீர்த்துக்கொள்ளும் முறையாகவே இது இருந்திருக்கிறது. கடவுளின் மனைவிகள் என நேர்ந்துவிடப்பட்டப் பெண்களை உயர்சாதி மனிதர்கள் மாறி மாறி புணர்ந்ததை கலாச்சார வளம் பொருந்தியதாய் பீற்றிக்கொள்ளும் ஒரு சமூகம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது நகைமுரண்.
தேவதாசி முறைக்கு எதிராக பல சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், இன்னமும் இந்தியாவில் 2.5லட்சம் மேலான தேவதாசிகள் இருக்கிறார்கள் என இந்திய பெண்கள் ஆணைய அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். ஆந்திராவில் 16,625 தேவதாசிகளும், கர்நாடகவாவில் 22,941 தேவதாசிகளும், மஹராஷ்ட்ராவில் 2479 தேவதாசிகளும் உள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை
தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ராஜராஜசோழனால் முழுவீச்சில் நிறுவனமயமாக்கப்பட்ட தேவதாசி முறை இன்று தமிழ்நாட்டில் முற்றிலும் அழிக்கப்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று. இதில் பெரியார், முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையார் ஆகியோரது பணி மிகவும் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

இப்படி சாதியின் பேரால், கடவுளின் பேரால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பெண்களை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த ஒரு அசிங்கமான வழக்கத்தை பரதத்தில் பட்டம் பெற்ற சிலர் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். ஒருவேளை அந்த முறை எல்லாம் இன்னமும் வழக்கத்தில் இருந்திருந்தால் நாம் காஞ்சிகாமகோடி போன்றோரின் பிடியில் சிக்கியிருக்க வேண்டியதில்லையே என அவர்கள் உள்ளுக்குள் நினைத்தார்களோ என்னவோ!!

எல்லாவற்றுக்கும் மேலாக நம் ஊரில் மிகப்பெரிய கெட்டவார்த்தையாக கருதப்படுவனவற்றில் முக்கியமான ஒன்று "தேவடியா மகனே" என்பது. ஒருவேளை தேவரடியார்கள் நம் சமூகத்தில் மிகுந்த மரியாதையுடன், வளத்துடன் நடத்தப்பட்டிருந்தார்களேயானால் அவர்களின் பெயரில் எப்படி ஒரு கெட்டவார்த்தை உருவாகியிருக்க முடியும்? இன்று தேவதாசி முறையை போற்றிப்புகழக் கிளம்பியிருக்கும் மேட்டுக்குடி கூட்டத்தை நாம் "மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தேவடியா மகன்களே.. தேவடியா மகள்களே" எனக் குறிப்பிட்டால் பொறுத்துக் கொள்வார்களா?

விபச்சாரம் புனித விபச்சாரமாக சித்தரிக்கப்பட்டாலும் விபச்சாரம், விபச்சாரம் தானே! இல்லை அது புனிதம் தான் என்றால் அந்தத் தொழிலுக்கு வக்காலத்து வாங்கும் மேட்டுக்குடி கலை ஆர்வலர்கள் உடனடியாக அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று தங்களை தேவதாசிகளாக பதிவுசெய்துகொண்டு எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துவோம்.

Tuesday, October 25, 2016


எப்பதான் செய்ய போறோம் 

சில விஷயங்களை  உடனே செய்துவிட சபதம் எடுப்போம். ஆனால் செய்ய மாட்டோம். ஆனால், அவை எல்லாம் உடனே செய்யவேண்டிய அவசியமான வேலைகள். அப்படித் தள்ளிப்போடும் 20 விஷயங்கள்.

ஜிம்முக்குப் போய் ஜம்முனு ஆக நினைப்போம். `வருஷ ஃபீஸ் பத்தாயிரம்’ எனச் சொன்னதும் உடனே அதைக் கட்டி மெம்பரும் ஆகிவிடுவோம். ஒரு வாரம் போவோம்... அதற்குப் பிறகு அந்தப் பக்கம் ஒதுங்க மாட்டோம்; மறந்தேபோவோம்!

செய்கிற செலவுகளை எல்லாம் குறிப்பு எடுத்துவைத்துக் கொண்டு, சிக்கனமாகச் செலவழித்து, காசுசேர்க்க நினைப்போம்; அதற்காக ஆண்ட்ராய்டில் ஒரு ஆப்கூட இன்ஸ்டால் பண்ணுவோம். ஆனால், அப்பேட் மட்டும் பண்ண மாட்டோம்!

மாதந்தோறும் சில ஆயிரம் ரூபாய்களை மியூச்சுவல் ஃபண்டில் அல்லது வேறு சில வழிகளில் சேமிக்க நினைப்போம். அதைப் பற்றி எல்லா நூல்களையும் படிப்போம். ஆனால், சேமிக்க மாட்டோம்ல!


நிறைய வாசிக்க நினைத்து, ஒவ்வொரு புக் ஃபேரிலும் சல்லிசாகக் கிடைக்கிற புத்தகங்களை, கெத்துக்காக வாங்கிக் குவிப்போம். ஆனால், அதை எல்லாம் அடுத்த புக் ஃபேர் வரும் வரை புரட்டிக்கூடப் பார்க்க மாட்டோம்!

கல்லூரி, பள்ளித் தோழர்கள் மீது உயிரையே வைத்திருப்போம். அவர்களை அடிக்கடி சந்தித்துப் பேச நினைப்போம். ஆனால், ஏதாவது உதவி தேவைப்படும்போதுதான் அவர்களை அழைத்துப் பேசுவோம்!

இயற்கை உணவுகள் சாப்பிடுவது, ஃப்ரெஷ்ஷான காய்கறிகள் பழங்கள் உண்பது, ஹெல்த்தியான லைஃப்ஸ்டைலுக்கு மாறுவது... எனப் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவெடுத்து வைத்திருப்போம் .ஆனால், மாறுவதற்கான சந்தர்ப்பம் மட்டும் அமையாது!

நண்பரிடமோ, உறவினரிடமோ ஏதோ சண்டைக்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல் இருப்போம். அவரைப் பார்த்து மன்னிப்பு கேட்கக்கூடத் தோன்றும். ஆனால், அதற்கு நல்ல நாள் அமையாது. எதற்காக சண்டை என்பதே மறந்தாலும் மன்னிப்பு கேட்க சந்தர்ப்பம் மட்டும் வாய்க்காது!

பல்லில், இடுப்பில், முதுகில் மூட்டுக்களில்... என எங்கேயாவது சின்னதாக ஒரு வலி தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். அதை ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுத்துக்கொள்ள நினைப்போம். ஆனால், பண்ண மாட்டோம். கடைசியில் `கிட்னியில் கல்’ என டெஸ்ட் ரிப்போர்ட் வரும்போது `ஓஓஓஓ’ என அழுவோம்!

கார் அல்லது பைக்குக்கு இன்ஷூரன்ஸ் முடிந்துபோய் இருக்கும். நாளைக்கே பண்ணிவிட வேண்டும் என நினைத்திருப்போம். ஆனால், கார் ரிப்பேர் ஆகியோ, வெள்ளத்தில் சிக்கியோ, வீணாய்ப்போன பிறகுதான்  `ச்சே அப்பயே பண்ணிருக்கலாம்’ என உரைக்கும்!

கார் அல்லது பைக்கில் ஏதோ ஒரு பாகத்தில் சின்னதாக ஏதாவது ஒரு குறை இருக்கும். அது தொடர்ந்து சத்தம் போட்டு அறிவுறுத்தும். அதைக் கொண்டுபோய் சரிபண்ண வேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்போம். ஆனால், காட்ட மாட்டோம். கடைசியில் `மொத்தமாக இன்ஜினே போச்சு’ என்று மெக்கானிக் சொல்லும்போது மெக்கானிக் மேல் கடுப்பாவோம்!

வீட்டை பளிச் என மாற்ற வேண்டும். ஃபேன் தூசியாக இருக்கிறது, ஒட்டடை ஜாஸ்தியாக இருக்கிறது, பாத்ரூம் மஞ்சள் கறையாக ஜொலிக்கிறது, இண்டுஇடுக்கு விடாமல் சுத்தம் பண்ண வேண்டும் எனப் போன நூற்றாண்டில் திட்டம் போட்டிருப்போம். பத்து ஆயுதபூஜைகள் தாண்டிய பிறகும் அதைச் செய்யவே மாட்டோம்!

வீட்டில் இருக்கிற  முதியவர்களுக்கு சின்னச் சின்ன ஆசைகள் எப்போதும் உண்டு. நாம் அவர்களோடு பேச வேண்டும், அவர்களிடம் அறிவுரைகள் கேட்க வேண்டும், அவர்களை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு குலதெய்வம் கோயிலுக்குச் செல்ல வேண்டும்... என விரும்புவார்கள். அந்த ஆசைகள் நமக்கும் தெரியும். நாமும் அவர்கள் விரும்பியதை எல்லாம் செய்யவே நினைப்போம். ஆனால், அதைச் செய்வதற்கான நேரம்தான் நம்மிடம் இருக்காது!

மாஸ்டர் ஹெல்த் செக்கப், மைனர் ஹெல்த் செக்அப் என விதவிதமாக கத்தைக் கத்தையாக மருத்துவமனைகளில் விசாரித்துவைத்திருப்போம். நாளைக்குப் பண்ணிடுவோம், நாளன்னிக்குப் பண்ணிடுவோம் எனத் தள்ளிப்போட்டுத் தள்ளிப்போட்டு...

குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும், அவர்களுக்குக் கதை சொல்ல வேண்டும், அவர்களுக்குப் பாடம் சொல்லித் தரவேண்டும் என ஆசைப்படுவோம். நம் குழந்தை வளர்ந்து, திருமணமாகி, குழந்தையே பெற்றுக்கொண்டுவிடும். ஆனால், நாம் மொபைலை நோண்டிக்கொண்டே சீரியல் பார்த்துக்கொண்டிருப்போம்!

அடுத்தமாதமே  கடன் எல்லாவற்றையும் கொஞ்ச கொஞ்சமாக அடைத்துவிட்டு, ஜீரோ கடனாளி ஆகி, ஹேப்பி வாழ்க்கை வாழ ஆசைப்படுவோம். ஆனால், ஒரு கடன் முடிக்கும் முன்பே இன்னொரு கடனை வாங்கி டாப்அப் பண்ணி போய்க்கொண்டே இருப்போம்!

வீட்டில் ஏதாவது வொயர் பிய்ந்து தொங்கும். அதைச் சரிசெய்ய இரண்டு நிமிடங்கள்தான் ஆகும். ஆனால், அதைச் செய்யமாட்டோம். மழை வந்து யாருக்காவது அல்லது நமக்கே ஷாக் அடித்து கத்தி கூப்பாடு போட்டபின்புதான் கட்டிங் பிளேயரோடு களமாடக் கிளம்புவோம்!

Friday, October 14, 2016

முதல் உதவி 
முதல் உதவி செய்யும்போது செய்யக் கூடாத  ஏழு விஷயங்கள்...
கையில் தீக்காயம் பட்டுவிட்டால், உடனே ஓடிப்போய் பல ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டில் வாங்கி வைத்த தீக்காய க்ரீமைத் தடவுவோம். அப்படிச் செய்யக் கூடாது. தீக்காயம்பட்ட இடத்தை, முதலில் தண்ணீரில் 15 நிமிடங்களாவது வைக்கவேண்டும். இது தோலில்பட்ட அதிக உஷ்ணத்தைக் குறைக்கும். தீக்காயம் பட்டதும் மருந்து எதையும் தேய்க்கக் கூடாது. இப்படித் தேய்ப்பது உஷ்ணத்தை அப்படியே தேக்கிவைத்துவிடும். எந்த மருந்தாக இருந்தாலும் 20 நிமிடங்களுக்குப் பிறகுதான். (எக்ஸ்பயரி ஆனதா என்பதை கவனிக்கவேண்டும்.)
லிப்பு வந்தவரை, ஒருபக்கமாகத் திருப்பிப் படுக்கவைக்க வேண்டும். மல்லாந்து படுக்கவைத்தால், வாயில் நுரை தள்ளினாலோ, வாந்தி எடுத்தாலோ, அவை நுரையீரலுக்குச் சென்று உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இரும்புப் பொருட்களை கையில் திணிக்கக் கூடாது. பாதிக்கப்பட்டவர் தன்னையே காயப்படுத்திக்கொள்ள நேரும். நோயாளிக்கு நினைவு திரும்பும் வரை தண்ணீரோ, வேறு திரவமோ தரக் கூடாது. அவை மூச்சுக்குழாய்க்குள் சென்று சுவாசத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடும்.வலிப்பு வரும்போது தலை தரையில் இடித்துக்கொள்ளாமல் இருக்க, தலையை மடியிலோ அல்லது தலையணையிலோ வைக்கலாம்.
ரு விபத்து நடந்து காருக்குள் அல்லது பைக்கின் கீழ் யாராவது சிக்கிக்கொண்டால், உடனே பாய்ந்து சென்று அவரை வெளியே இழுத்துப்போட்டுக் காப்பாற்ற முயற்சி செய்வோம். அப்படிச் செய்வது சமயங்களில் ஆபத்தாகிவிடும். முதுகு எலும்புகளிலோ, முக்கிய உறுப்புகளிலோ காயம்பட்டிருந்தால், இப்படி இழுக்கும்போது நிலைமை மோசமாகிவிடும். வண்டி, பற்றி எரிகிறது அல்லது பள்ளத்தில் விழப்போகிறது... வேறு வழியே இல்லை என்ற பட்சத்தில், பாதிக்கப்பட்ட நபரை இழுத்துப்போட்டுக் காப்பாற்றலாம் தவறு இல்லை. அவசரம் இல்லையென்றால் முதலில் செய்யவேண்டியது, ஆம்புலன்ஸை அழைப்பது; வாகனத்தின் இன்ஜினை ஆஃப் செய்வது, பேட்டரிக்குச் செல்லும் மின்சாரத்தைத் துண்டிப்பது, ரத்தம் பாய்ந்துகொண்டிருந்தால், அதைத் தடுப்பது, விபத்துக்கு உள்ளானவரைச் சாந்தப்படுத்துவது.
காய்ச்சலால் உடல் அனலாகக் கொதிக்க ஆரம்பித்தால், குளிரில் உடல் நடுங்கும். உடனே நோயாளியின் மீது நான்கு போர்வைகளைப் போத்தி ஒரே அமுக்காக அமுக்குவோம். அப்படிச் செய்வது மிகவும் தவறு. அது ஏற்கெனவே கொதிக்கும் உடலின் வெப்பநிலையை மேலும் அதிகமாக்கி, உடலை இன்னும் மோசமாக மாற்றும். காய்ச்சலால் உடல் கொதித்தால், வெப்பத்தைக் குறைக்கவே முயற்சி செய்ய வேண்டும். வெதுவெதுப்பான நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
திர்பாராத சந்தர்ப்பங்களில் முன்னால் சென்று உதவ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே அவசியம் இருக்கவேண்டிய குணம். ஆனால், உதவுவதற்கு முன்னால் நாம் செய்யும் காரியங்களால் நிலைமை மோசமாகிவிடக் கூடாது என்பதையும், விபத்தில் நாமும் சிக்கிவிடக் கூடாது என்பதையும் மனதில்கொள்ள வேண்டும். தண்ணீரில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற உடனே பாய்வது நல்லதுதான். உங்களுக்கு நீச்சல் தெரியாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு முடிவு எடுப்பதே புத்திசாலித்தனம். மின்சாரத் தாக்குதலுக்குள்ளான நபரின் கையைப் பிடித்து இழுத்தால், நமக்கும் ஷாக் அடிக்கும் என்பதை உணர்ந்து சுவிட்ச்சை அணைப்பதே விவேகம்.
ஹார்ட் அட்டாக் வந்து யாராவது சரிந்துவிட்டால், உடனே வாயோடு வாய் வைத்து ஊதி, அவருக்கு உதவ முன்வருவோம். நல்ல எண்ணம்தான் என்றாலும், அது அவசியம் இல்லை. சி.பி.ஆர் cardiopulmonary resuscitation முதல் உதவி சிகிச்சையில், கைகளால் மட்டுமே உதவ அறிவுறுத்துகிறது. மயக்கம் அடைந்த நபரின் நெஞ்சுக்கு மத்தியில் கைகளை வைத்து வேகமாக விட்டுவிட்டு அழுத்த வேண்டும்.
கைகளிலோ, கால்களிலோ அடிப்பட்டு ரத்தம் வழிந்தால், உடனே ஒரு துணியைக் கிழித்து, ரத்த ஓட்டத்தைத் தடைசெய்யும் வகையில் காயம்பட்ட இடத்துக்கு சற்று மேலே டைட்டாகக் கட்டிவிடுவது நம் பழைய சினிமா பாணி. ஆனால், அப்படிச் செய்வது மிகவும் ஆபத்தானது. அடிபட்ட இடத்தை நீரால் கழுவி, அந்த இடத்தில் அதிக அழுத்தம் தரமால் கட்டுப்போடவேண்டும். முடிந்தால், கைகளை அல்லது கால்களை உயர்த்திவைக்கலாம்

Monday, October 10, 2016

சாவைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும்’’ என்று முழங்கியவர் சேகுவேரா. அவருடைய நினைவுத் தினம் இன்று.

அப்போது ‘சே’வுக்கு 27 வயதுதான். கியூபா தனது சொந்த நாடு என்ற காரணத்தினால் ஃபிடல் காஸ்ட்ரோ போராட வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால், ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு தேசத்தில் அந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம்வைத்து ஆயுதம் எடுப்பது என்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இந்தக் காரணத்தால்தான் சேகுவேரா மனிதருள் மாணிக்கமாகப் போற்றப்படுகிறார்.
1958-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புரட்சிப் படை ஹவானாவுக்குள் ஊடுருவியபோது, கியூபா முழுவதும் காஸ்ட்ரோவிடம் வந்துசேர்ந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றி உலக நாடுகள் அனைத்தையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அப்போது, ‘டைம்’ பத்திரிகையானது இவ்வாறு ஒரு தலையங்கம் எழுதியது. ‘புரட்சிகளின் மூளை சே’ என்று.
கியூபா விடுதலையடைந்து காஸ்ட்ரோ அதிபர் ஆனபிறகு, ‘சே’ விவசாயத் துறையின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின், கியூபா தேசிய வங்கியில் தலைவராக நியமனம் செய்யப்பட்டு ரூபாய் நோட்டுகளில் ‘சே’ எனக் கையெழுத்திடும் அளவுக்கு உயர்ந்தார். பின், தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவ்வளவு பதவிகள் வகித்தபோதும் எப்போதும் தன்னை ஒரு சராசரி குடிமகனாகவே நினைத்து விவசாயம் செய்துவந்தார். சேகுவேராவுக்கும் ஃபிடலுக்கும் இடையே யுத்தத்துக்கு முன்னும், பின்னும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் நட்பை உயிரினும் மேலாகப் போற்றி வந்தனர்.
‘‘அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை, ஒரு மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாக தன்னால் வேரறுக்க முடியும்’’ என்று ஒருமித்த மனதோடு நம்பினார். கியூபாவுக்கு ஆயுதங்கள் தருவதாக ரஷ்யா சொன்னபோது, ‘‘ரஷ்யாவின் ஆயுதங்கள் கியூபாவில் இறங்கினால், அவைகள் அமெரிக்காவின் பெருநகரங்களைக் குறிவைக்கும்’’ என்று தைரியமாகச் சொன்னார் ‘சே’. இதற்குக் காரணம், கியூபா மீது அமெரிக்கா போட்ட பொருளாதாரத் தடையே ஆகும். அமெரிக்க தனியார் தொலைக்காட்சி ஒன்று, நேர்காணலுக்காக ‘சே’வை அழைத்தது. அதில், ‘‘அமெரிக்கா ஒரு ‘கழுதைப்புலி.’ அதன், ஏகாதிபத்தியத்தை நான் அடியோடு கருவறுப்பேன்’’ என்று அமெரிக்க மண்ணிலேயே கம்பீரமாக கர்ஜித்தார்.
‘சே’வின் கடைசி நிமிடங்கள்!
1967 அக்டோபர் 8-ம் தேதி காலைவேளையில்... யூரோ கணவாயை கெரில்லா வீரகளுடன் கடந்துசென்றார் சே. அங்கு ஆடு மேய்க்கும் பெண்ணின் மீது பரிதாபப்பட்டு 50 பெஸோக்களைப் பரிசளித்தார். நண்பகல் வேளையில் அந்தப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்தார். ‘சே’வைச் சுற்றி வளைத்த ராணுவம் சரமாரியாகச் சுட்டுத்தள்ளியது. பதிலுக்கு, கெரில்லா வீரர்களும் தாக்குதல் நடத்தினர். ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ‘சே’வின் காலில் குண்டடிப்பட்டது. அப்போது, ‘சே’ சொன்னார்... ‘‘நான் இறப்பதைக் காட்டிலும் உயிரோடு இருப்பதுதான் உங்களுக்குப் பயன் தரும்’’ என்று.
குண்டடிப்பட்ட ‘சே’வை, வீரர்கள் கைத்தாங்கலாக அழைத்துச்சென்று பள்ளிக்கூடம் ஒன்றில் தங்கவைத்தனர். ‘சே’, கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், அவருக்கு அந்தப் பள்ளிக்கூடத்தில் உணவுகொடுத்துப் பேசிக்கொண்டிருந்த ஆசிரியை ஜூலியஸ் கோர்ட்டஸ் என்னும் 19 வயது பெண்மணியிடம், பள்ளிக்கூடச் சூழலைப் பார்த்துவிட்டு இவ்வாறாகச் சொன்னார். ‘‘இதுபோன்றச் சூழலில் எப்படிக் குழந்தைகள் இங்கு படிப்பார்கள்? ஒருவேளை நான் பிழைத்தால், உங்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருவேன்.’’ ‘சே’ எப்போதும் ஒரு புரட்சியாளர்தான். ஆம், மக்களுக்கான புரட்சியாளர் அவர்.
‘‘ ‘சே’வைச் சுட்டுக்கொல்ல வேண்டும். யார் அந்தக் காரியத்தை செய்கிறீர்கள்’’ என்று கேட்டபோது, ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அந்தக் கொடும்செயலைச் செய்வதற்கு ஒப்புக்கொள்கிறான். கைகள் கட்டப்பட்ட நிலையில் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ‘சே’, ‘‘மண்டியிட்டு உயிர்வாழ்வதைவிட நின்றுகொண்டு சாவது எவ்வளவோ மேல்’’ என்றார். ஆனால், அந்த ராணுவ வீரனோ, ‘சே’ வை ஒரு கோழைபோல் கொல்வதற்குத் தயாரானான்.
‘‘கடைசி நிமிடத்தில்கூட என்னை நிற்கவைத்துச் சுடுங்கள்’’ என்றார் ‘சே’. ஆனால், அந்தக் கோழையோ ‘சே’வின் பார்வையைக்கூட நம்மால் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலோ என்னவோ, அந்த மாவீரர் சொன்னதை அலட்சியப்படுத்தினான்.
“கோழையே... நீ சுடுவது ஒரு ‘சே’வை அல்ல. ஒரு சாதாரண மனிதனைத்தான்” என்று இதயம் கிழிக்க, கண்கள் மின்ன தன்னுடைய கடைசி வார்த்தைகளை உமிழ்ந்தார் ‘சே.

எந்தத் தேசம் அவரை அழிப்பதில் தீவிர முனைப்புக் காட்டியதோ, எந்தத் தேசம் அவர் வரலாற்றை முழுவதும் அழிக்க வேண்டும் என்று எண்ணியதோ, அந்தத் தேசத்தில்தான் இன்று ‘சே’வின் முகம் பதிக்கப்பட்ட பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன. எந்தத் தேசம் அவர் பெயரைக் காற்றில் கரைந்துபோக நினைத்ததோ, அந்தப் பெயர்தான் உலகம் முழுவதும் காற்றில் கலந்து கோடிக்கணக்கான இளைஞர்களின் தாரக மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது.
கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலையில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா? ‘‘ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்களாக இருந்தனர். நாங்கள் ‘சே’வைப்போல இருப்போம்!”
“விளைவுகளை ஏற்படுத்தாத எந்த ஒரு சொல்லும் வீணானது’’ என்பதே அவர் அடிக்கடி சொல்லும் முழக்கம். ஆம்... அவர் அழிக்கப்படவில்லை. ‘சே’ எனும் சொல்லாக வாழ்ந்துகொண்டிருக்கிறார், மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்த

Friday, September 16, 2016

பேலியோ டயட்!  - நமக்கு ஏத்த டயட் 

‘நம் உணவும் மனமும்தான் நம் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. மனிதன் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலத்தில், வேட்டை​யாடிய மிருகத்தின் இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்டவற்றைத்தான் சாப்பிட்டான். சிறிது காய்கறி, பழங்கள் சேர்த்துக் கொண்டாலும், விவசாய சமூகமாக மாறியபிறகே நெல், கோதுமை உள்ளிட்டவற்றுக்குப் பழகினான்.
10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலத்தை கற்காலம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். அதற்கு முன்பு வரை பல லட்சம் ஆண்டுகள் வேட்டைச் சமூகமாக, கற்கால மனிதனாகத்தான் வாழ்ந்துவந்தான். அந்த மரபணுக்கள்தான் இன்றும் நம் உடலில் தொடர்கின்றன.கற்கால மனிதனின் உணவுப் பழக்கம் அவனை ஆரோக்கியமாகவும் ஆற்றல் மிக்கவனாகவும் வைத்திருந்தது. அந்த உணவுப் பழக்கத்துக்கு மீண்டும் மாறுவதையே பேலியோ டயட் என்கின்றனர். இன்றைக்கு, சர்க்கரைநோய், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உணவுதான் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. உணவைப் பதப்படுத்தி, பக்குவப்படுத்தும் பழக்கமே எல்லா நோய்களுக்கும் காரணம் என்​கின்றனர். இந்த சூழலில், பேலியோ டயட் பற்றிய ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டுவருகிறது.
உடல் பருமனைக் குறைக்க பலரும் பல வழிகளை நாடுகிறார்கள். விதவிதமான டயட்டுகள், வித​விதமான பயிற்சிகள் என உடல் பருமனுக்கு அஞ்சி ஏதேதோ செய்கிறார்கள். இதில், தற்போது முதலிடத்தில் இருப்பது ‘பேலியோ டயட்’. பேலியோ டயட் என்றால் என்ன என்று தெரியாமலேயே நண்பர் சொன்னார், உறவினர் பின்பற்று​கிறார் என்று ஆளாளுக்கு ஒரு புரிதல் வைத்துக்கொண்டு களத்தில் இறங்குகிறார்கள். உண்மையில் பேலியோ டயட் என்றால் என்ன, அதை எப்படிப் பின்பற்றுவது, பேலியோ டயட் எல்லோருக்கும் ஏற்றதா என்பவற்றைத் தெளிவாக விளக்கு​கிறார். மருத்துவக்கல்லூரி மூத்த உதவி பேராசிரியர், ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ். யார் எவ்வளவு சாப்பிடலாம், பேலியோ டயட் பழகிவிட்டதை எப்படி அறிவது, நம் வாழ்வியலில் எவ்வளவு சுலபமாக பேலியோவை பழகிக் கொள்ள முடியும் என்பதை விளக்குகிறார் ‘ஆரோக்கியம்  மற்றும் நல்வாழ்வு’ அமைப்பின் பேலியோ டயட் நிபுணர் ஷங்கர் ஜி.
நாம் ஏன் உணவு உண்கிறோம்?
தாயின் கருவறையில் இருக்கும்போதும், அதன் பின்னரும் உடல் உறுப்புக்கள் உருவாக, வளர்ச்சி பெற உணவு தேவை.
நம் உடல் இயங்க ஆற்றல் தேவை. ஆற்றலைத் தருவது உணவு. போதுமான ஆற்றல், ஊட்டச்சத்து கிடைப்பதன் மூலமே உடல் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது.

உணவில் என்னென்ன இருக்க வேண்டும்?
1. மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்)
2. கொழுப்புச்சத்து (ஃபேட்)
3. புரதம்
4. வைட்டமின்கள்
5. நார்ச்சத்து
5. தாதுஉப்புக்கள் (மினரல்ஸ்)
6. நீர்
7. நுண்ணூட்டச்சத்துக்கள்

கலோரி

*ஆற்றலை அளவிட பயன்படும் அலகு. நம் அன்றாட வாழ்க்கைமுறையில், ஒரு நாளைக்கு நாம் சாப்பிடுவதன் மூலமும் பருகுவதன் மூலமும் எவ்வளவு ஆற்றல் கிடைக்கிறது. அதை, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றின் மூலம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை அளவிட கலோரி என்ற அளவு பயன்படுகிறது.
*ஒரு கலோரி என்பது ஒரு கிராம் நீரை ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பப்படுத்தும் அளவு. 

*ஒரு கிலோ கலோரி என்பது ஒரு கிலோ கிராம் எடையுள்ள நீரை, ஒரு டிகிரி செல்சியஸ் அளவு வெப்பத்தை உயர்த்தத் தேவைப்படும் ஆற்றல்.

*மனிதன் உயிர்வாழ ஆற்றல் தேவை. ஆற்றல் இல்லை எனில், செல்கள் உயிரிழக்கும். இதயமும் நுரையீரலும் செயல்பாட்டை நிறுத்தும். 

*ஊட்டச்சத்தும் ஆக்சிஜனும் கிடைக்கவில்லை எனில், மூளை தன்  இயக்கத்தை நிறுத்திவிடும்.

*ஒரு நாள் உடல் இயக்கத்துக்குத் தேவையான அளவைக்காட்டிலும் அதிகமாகவோ குறைவாகவோ கலோரி கிடைத்தால், அது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

*கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்து மூலம் இந்த ஆற்றல் கிடைக்கிறது. 
*ஒரு கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தில் இருந்து தலா 4 கலோரி கிடைக்கிறது. அதுவே, ஒரு கிராம் கொழுப்புச் சத்தில் இருந்து 9 கலோரி கிடைக்கின்றது.

*243 கிராம் எடைகொண்ட பச்சை முட்டையைச் சாப்பிடுகிறோம் என்றால் அதில் இருந்து நமக்கு 348 கலோரி கிடைக்கும். இதில், 216 கலோரி கொழுப்பில் இருந்தும், 124 கலோரி புரதத்தில் இருந்தும், எட்டு கலோரி கார்போஹைட்ரேட்டில் இருந்தும் கிடைக்கும்.

*கலோரி தேவை அனைவருக்கும் ஒரேமாதிரியான அளவில் இருக்காது. 25 வயதான, 6 அடி உயரம் கொண்ட ஒரு கால்பந்து வீரருக்கு அதிக கலோரி தேவைப்படும். அதே அளவு கலோரி 75 வயதான ஒரு முதியவருக்கு தேவைஇல்லை. 

*சராசரியாக, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரி தேவை என்பது குறித்து விவாதம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

*பொதுவாக, ஒரு நாளைக்கு 2000 முதல் 2500 கலோரி தேவை என்று சொல்லப்படுகிறது.

ஆற்றலாக மாறும் சத்துக்கள்

*உணவில் உள்ள மாவுச்சத்து, கொழுப்புச்​சத்து, புரதச்சத்து ஆகிய மூன்று மட்டுமே ஆற்றலாக மாற்றப்படுகின்றன. 
*அதிலும், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச்சத்து இரண்டுமே பிரதானமாக உடலில் ஆற்றலாக மாற்றப்படுகின்றன. எனவே, நம் உடல் சீராக ஆரோக்கியமாக இயங்க, இந்த இரண்டுமே மிகவும் அவசியமானவை. 

*சில சமயங்களில் நாம் சாப்பிடாமல் இருக்கும்போது, நம் உடலில் ஏற்கெனவே உள்ள புரதங்களை உடைத்து, உடல் தனக்கான ஆற்றலைத் தயாரித்துக்கொள்கிறது. ஆனால், தொடர்ந்து இவ்வாறு இருக்க முடியாது. 

*ஒருகட்டத்தில் உடலில் உள்ள புரதங்கள் முழுமையாகத் தீரும்போது நம் உடல் இயங்க முடியாமல்போகிறது. எனவேதான், குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரால் தொடர்ந்துப் பட்டினியாக இருக்க முடியாமல்போகிறது.   

உண்ட பிறகு என்ன நடக்கிறது?

*உணவை உண்ட பிறகு, அந்த உணவில் உள்ள மாவுச்சத்தும் கொழுப்புச்சத்தும் ஆற்றலாக மாற்றப்படுகின்றன. 
*இப்படி மாற்றப்படும் ஆற்றல் நம் உடலின் அன்றாட செயல்படுகளுக்காகச் செலவிடப்படுகிறது. 

*எஞ்சிய ஆற்றல் கொழுப்பாக மாற்றப்​பட்டு உடலில் சேமிக்கப்படுகிறது. அதாவது, தேவைப்படும்போது ஆற்றலாக மாற்றுவதற்காக கொழுப்பை உடல் சேமிக்கிறது.

நம் அன்றாட உணவு
*நம் அன்றாட உணவில், கார்போ​ஹைட்ரேட் அதிகமாகவும், கொழுப்பு, புரதம் குறைவாகவும் உள்ளன. 

*கார்போஹைட்ரேட் உடனடியாக செரிமானம் ஆகி, குளுக்​கோஸாக மாற்றப்படுகிறது. 

*அளவுக்கு அதிகமான குளுக்கோஸ் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் பல பகுதிகளில் சேகரிக்கப்படுகிறது.

பேலியோ டயட்
*கார்போஹைட்ரேட் குறைவாகவும்  நல்ல கொழுப்பை அதிகமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டிய டயட் இது. 

*விவசாயம் கண்டுபிடிப்பதற்கு முந்தைய கற்காலத்தை, `பேலியோலித்திக்’ என்பார்கள். இப்போது, உண்பதைப் போன்று அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களைத் தவிர்த்து, நல்ல கொழுப்பு அடங்கிய முட்டை, மீன், இறைச்சி, விதைகள், கொட்டைகள், போன்றவற்றை உண்பதே பேலியோ டயட். 

*இது உடல் பருமனைக் குறைக்க குறிப்பிட்ட காலத்துக்குப் பாிந்துரைக்கப்படும் டயட் முறை அல்ல. வாழ்நாள் முழுமைக்குமான ஓர் ஆரோக்கியம் தரும் உணவுமுறை.  

*பேலியோவுக்கும் பிற டயட் முறைகளுக்கும் உள்ள வேறுபாடு 

*பெரும்பாலான டயட் முறைகளில்,  உணவைக் குறைப்பதன் மூலம் கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து குறைவாக எடுக்கப்படும். பேலியோவில்  மாவுச்சத்து மட்டுமே குறைவாக எடுக்கப்படுகிறது.

*பெரும்பாலான பிற உணவு முறைகளில் சாப்பிடும் கலோரிகளைக் கணக்கு பார்த்துச் சாப்பிட வேண்டும். பேலியோவில் கலோரி கணக்கு கிடையாது.

பேலியோவைப் பின்பற்றுவது எப்படி?

*பேலியோ டயட்டில் தினசரி, ஒவ்வொரு ​வேளையும்  இவ்வளவுதான் உண்ண வேண்டும் என்று கலோரி அளவுக் கணக்கு எதுவும் இல்லை. 

*முட்டை, இறைச்சி போன்றவற்றை வயிறு நிரம்பும்வரை சாப்பிடலாம். வயிறு நிரம்பியதும் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். 

*பேலியோவில், கொழுப்பே பிரதானமான எரிபொருள். எனவே, கொழுப்பு நிறைந்த இறைச்சியே நல்லது. கொழுப்புக் குறைவான தோல் நீக்கப்பட்ட சிக்கன், லீன் கட் என்று சொல்லக்கூடிய உணவுகளைத் தவிர்த்து கொழுப்புடன் சேர்ந்த உணவுகளையே உண்ண வேண்டும். 

*உணவுகளை எண்ணெயில் பொறிப்பதைத் தவிர்த்து, வேகவைத்தோ, கிரில் செய்தோ, அவன், வாணலியில் சமைத்தோ சாப்பிடலாம். 
*சமையலில் நெய், வெண்ணெய், ஹைட்ர ஜனேட் செய்யப்படாத செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில், வெண்ணெய், நெய் சேர்த்துக்கொள்ளலாம். 

*கடலை எண்ணெய், சூரியகாந்தி, ரைஸ்பிரான், கடுகு எண்ணெய், பருத்திக்கொட்டை எண்ணெய், வனஸ்பதி ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

*இது கொஞ்சம் காஸ்ட்லியான டயட் என்றாலும் இதைப் பின்பற்றி, பலர் உடல் எடை குறைப்பு  செய்திருக்கிறார்கள். 

*ரத்த சர்க்கரையை ஏற்றும் உணவுகள் அறவே தவிர்க்கப்படுவதால், டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்களின் ரத்த சர்க்கரை அளவுகள் நார்மல் அளவுக்குக் குறைந்த​தற்கான ஆதாரங்கள் உள்ளன.

பேலியோ டயட்டை எப்படி ஆரம்பிப்பது?

*இது, குறிப்பிட்ட காலத்துக்கான உணவு முறை இல்லை. வாழ்நாள் முழுவதுக்குமான  டயட் என்பதால், மருத்துவரின் ஆலோசனை பெற்று, உடனே ஆரம்பிக்கலாம்.

*சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக உள்ளவர்கள் பேலியோ டயட் ஆரம்பிப்பதற்கு முன்னர் ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. 

*பேலியோ டயட்டை பின்பற்ற ஆரம்பித்த பிறகு, சில வாரங்கள் கழித்தோ அல்லது ஒரு மாதம் முடிந்த பிறகோ மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். பேலியோ டயட் பின்பற்றியதால் பலன் கிடைத்துள்ளதா, இல்லையா என்பதை ரத்தப் பரிசோதனை சொல்லிவிடும்.

*பின்னர், இதையே தங்கள் வாழ்க்கை முழுவதும் பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.

*பேலியோ டயட் முறைக்கு மாறும் போது, முதல் இரண்டு வாரங்களுக்கு சிரமப்படுவார்கள். தலைவலி, உடல்சோர்வு, களைப்பு, அதிகப் பசி ஆகிய பிரச்னைகள் ஆரம்பத்தில் வரும்.

*காபி, டீ அதிகம் சாப்பிட்டவர்களுக்கு பேலியோ டயட்டில் முழுமையாக உடல் ஈடுபட, சிறிது காலமாவது தேவைப்படும்.

*அதிகப் பசி போல உணர்வு வரும். ஆனால் அது பசி கிடையாது. அதன்பெயர் கிரேவிங்.குளுக்கோஸ்க்கான தேடல்தான் பசி போன்ற உணர்வாய் ஏற்படும்.

*எப்போது எல்லாம் பசி உணர்வு வருகிறதோ தண்ணீர், உப்பு சிறிது சேர்த்து எலுமிச்சை பழச்சாறு அருந்தலாம். பசி உணர்வு அடங்கவில்லை எனில், நட்ஸ், தேங்காய், கீரைகள், சாலட், முட்டை சாப்பிடலாம்.


உடற்பயிற்சி
பேலியோ டயட் மூலம் கொழுப்புச்சத்து கலோரியாக மாற்றப்படுகிறது. தேவையற்ற கலோரி கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேகரிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. உடல் ஃபிட்டாக தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். தினசரி 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி. பிறகு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது நீச்சல், ஜாகிங் உள்ளிட்ட கார்டியோ பயிற்சிகள் செய்யலாம்.

இதயநோய், சர்க்கரைநோய், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள், பேலியோ டயட் மேற்கொள்ளும் முன் மருத்துவரைச் சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். மருத்துவரிடம் உங்கள் உடல் நலம் குறித்து முழுமையாகக் கேட்டு அறிந்த பிறகு, அவர் பரிந்துரைத்தால் மட்டுமே பேலியோ டயட்டை மேற்கொள்ள வேண்டும். 

வெளியூர் அல்லது உறவினர் வீடுகளுக்கு சென்றால் என்ன செய்வது?

முடிந்த வரை மாவுச்சத்து குறைந்த உணவை உண்பது நல்லது. அப்படி முடியவில்லை என்றால், ஒரு நாள் மட்டும் மாவுச்சத்து உணவை எடுக்கலாம். 

பேலியோ டயட்டில் அனைத்துச் சத்துக்களும் கிடைக்குமா?

நம் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளதா என்பதுதான் பேலியோவின் கேள்வி. சுவை அறிந்து உணவைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. சத்துக்கள் எதில் அதிகம் என்று தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவதே பேலியோ டயட்டின் அடிப்படை. உடல் ஆரோக்கியத்துக்கு ருசி தேவைஇல்லை. நல்ல புரதம், நல்ல கொழுப்பு,  குறிப்பிட்ட அளவு மாவுச்சத்து, அமினோஅமிலங்கள், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் உடலுக்குத் தேவை. பேலியோ டயட்டில் அனைத்துச் சத்துக்களும் உடலுக்குத் தேவையான அளவு கிடைக்கும்.

நமது உடல் அமைப்பின்படி, பேலி​யோவே உடலுக்கு ஏற்றது. இந்த டயட்டில் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும்.

*போதுமான அளவு நீர் அருந்தவில்லை என்றால், நீர்வற்றிப்போதல் (டிஹை​டிரேஷன்) ஏற்படும்.

*உணவில் தாதுக்கள் இல்லை என்றால் ரத்தசோகை (அனிமியா) போன்ற நோய்கள் ஏற்படும்.

*உணவில் உயிர்ச்சத்துக்கள் இல்லை என்றால் எலும்புருக்கி (ரிக்கட்ஸ்) போன்ற நோய்கள் ஏற்படும்.

*உணவில் புரதம் இல்லை  என்றால் குவாஷியோக்கர் போன்ற நோய்கள் ஏற்படும்.   

*உணவில் கொழுப்பு இல்லை என்றால் கொழுப்புச்சோகை (எசென்சியல் ஃபேட்டி ஆசிட் டெபிசியன்ஸி) போன்ற நோய்கள் ஏற்படும்.

*ஆனால், மாவுச்சத்துக் குறைபாடு என்ற நோயே கிடையாது. ஏனென்றால், நமது உடலுக்குத் தேவையான மிகக்குறைந்த அளவிலான மாவுச்சத்து (தினமும் 45 கிராமிற்கு குறைவாக) பேலியோவில் கிடைத்துவிடும்.    

மாவுச்சத்தை ஏன் தவிர்க்க வேண்டும்?

பருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்ரேட் தவிர்த்து, சத்துக்கள் எதுவும் சாதத்தில் இல்லை. 

கார்போஹைட்ரேட் உள்ளதால் சாதம் சாப்பிட்ட உடனே எனர்ஜி கிடைக்கும். மேலும், உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் என்பதால், அதிக மாவுச்சத்தைத் தவிர்க்க வேண்டும். 

மாவுச்சத்து நிறைந்த அரிசி, கோதுமை, மற்ற தானியங்கள், பருப்பு-பயறு வகைகளைச் சாப்பிடும்போது, மீண்டும் மீண்டும் இவற்றைச் சாப்பிட வேண்டும் என்றே உடலும் நாவும் செல்லும். இந்த கிரேவிங் உணர்வு மாவுச்சத்து சாப்பிடுவதால்தான் ஏற்படுகிறது. மாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

மாவுச்சத்தைத் தவிர்க்க அல்லது குறைக்க பின்வருபவற்றைத் தவிர்ப்பது அவசியம்

*சர்க்கரை, தேன், வெல்லம், கருப்பட்டி.

*அரிசி, கோதுமை, மைதா, சிறுதானியங்கள், அனைத்து தானியங்கள்.

*அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த மா, பலா போன்ற பழங்கள், பழச்சாறுகள்.

*உருளை, கருணை உள்ளிட்ட கிழங்கு வகைகள்.

மாவுச்சத்துக் குறைந்தால் செல்கள் பாதிப்படையுமா?

*60 கிலோ எடை உள்ள ஒருவர் 45 மி.கி-க்குக் குறைவாக மாவுச்சத்து சாப்பிட்டால் உடல் பாதிப்படையும். ஆனால், பேலியோவில் சாப்பிடும் சிக்கன் போன்ற உணவுகளிலேயே இந்த அளவு மாவுச்சத்து இருப்பதால், செல்கள் பாதிப்படைவது இல்லை.   

*உடல் இயங்குவதற்குத் தேவையான சக்தி​யானது மாவுச்சத்துக்குப் பதில், கொழுப்​புச் சத்தில் இருந்தே கிடைத்து​விடு​வதால், பாதிப்பு ஏற்படாது.

மாவுச்சத்து, கொழுப்புச்சத்து அதிகமானால்...

உணவில் உள்ள மாவுச்சத்தும் சரி, கொழுப்புச்சத்தும் சரி, அது கொழுப்பாகவே சேமிக்கப்படுகிறது. ஆனால், நமது உணவில் இருக்கும் சக்தியில் எத்தனை சதவிகிதம் சேமிக்கப்படவேண்டும், எத்தனை சதவிகிதம் செலவழிக்கப்படவேண்டும் என்று தீர்மானிப்​பது நமது உணவில் இருக்கும் மாவுச்சத்துதான்.

*மாவுச்சத்து அதிகமாகவும் கொழுப்புச்சத்து குறைவாகவும் எடுத்துக்​கொண்டால், உணவின் பெரும்பகுதி கொழுப்​பாக மாற்றப்பட்டு உடலின் பல பகுதிகளில் சேமிக்கப்படும்.

*மாவுச்சத்து மற்றும் கொழுப்புச்சத்தை சம அளவில் உட்கொண்டால், உணவின் பெரும்பகுதி கொழுப்பாகவே சேமிக்கப்படும்.

*மாவுச்சத்து மற்றும் கொழுப்புச் சத்தைக் குறைவாக எடுத்துக்கொண்டால் உடல் இயக்கத்துக்குத் தேவையான ஆற்றல் இல்லாமல் உறுப்புகள் பாதிக்கப்படும். இது உயிருக்கு ஆபத்தான நிலை. பசி, பட்டினி மரணம் ஏற்படுவது இப்படித்தான். 

*மாவுச்சத்தைக் குறைவாகவும் கொழுப்புச்சத்தை அதிகமாகவும் எடுத்துக்கொண்டால், கொழுப்பு மிகமிகக் குறைவாகவே சேகரிக்கப்படும்.


அதிகக் கொழுப்பு எடுப்பதால் கணையம், கல்லீரல் பாதிக்காதா?

*கொழுப்பை செரிமானம் செய்ய கல்லீரலில் இருந்து வரும் பித்தநீரும், கணையத்தில் இருந்து லைபேஸ் உள்ளிட்ட என்ஸைம்களும் தேவை.  

*அதிகமாகக் கொழுப்புச் சாப்பிட்டால் பித்தநீரைச் சுரக்கும் கல்லீரல் மற்றும் என்ஸைமை உற்பத்தி செய்யும் கணையம் பாதிக்கப்படாதா? என்று கேட்கின்றனர். 

*பல லட்சம் ஆண்டுகளாக கொழுப்பையே பிரதான உணவாக சாப்பிட்டவர்கள் மனிதர்கள். அந்த மரபணுக்கள் நம் உடலில் உள்ளன. எனவே, பித்தநீரும், கணையநீரும் இன்றும் அதிகமாகவே சுரக்கின்றன. குறைந்த அளவிலேயே இன்சுலினும் சுரக்கிறது.

*பேலியோ சாப்பிடும்போது தேவைப்படும் அளவு பித்தநீரும், கணைய நீரும் இயற்கையாகச் சுரக்கும்படிதான் நமது உடல் அமைப்பு உள்ளது. அதேபோல், தற்போது சுரக்கும் இன்சுலின் அளவே பேலியோ உணவு முறைக்குப் போதுமானது.

*அதிக அளவு மாவுச்சத்து உணவை சாப்பிடும்போது, அதிகம் இன்சுலின் தேவைப்படுகிறது. குறைவான பித்தநீரும், கணையநீரும் தேவைப்படுகின்றன.   

*அதாவது, பேலியோவில் இயல்பான அளவு பித்தநீரும், இயல்பான அளவு கணையநீரும், இயல்பான அளவு இன்சுலினும் தேவை.  

*மாவுச்சத்து உணவில் குறைவான அளவு பித்தநீரும், குறைவான அளவு கணையநீரும், அதிக அளவு இன்சுலினும் தேவை.  


அனைவரும் பேலியோவைப் பின்பற்றலாமா?    

கொழுப்பு மற்றும் ஆற்றல் தொடர்பான வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த உணவுமுறையை மருத்துவரின் ஆலோசனை மற்றும் பரிந்துரை இல்லாமல் சாப்பிடக் கூடாது.


பேலியோ டயட்

காலை உணவு:   100 கிராம் பாதாம் கொட்டைகள். பாதாமை வாணலியில் வறுத்து அல்லது நீரில் 12 மணிநேரம் ஊறவிட்டு தோலுடன் உண்பது சிறந்தது. பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம். (அதன் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)

மதிய உணவு:   நான்கு முட்டை (மஞ்சள் கருவுடன் உண்ண வேண்டும்). ஆம்லெட், ஆஃப்பாயில் என எப்படி வேண்டுமானாலும் சமைத்து உண்ணலாம். முட்டையுடன் உப்பு, வெங்காயம், தக்காளி போன்றவற்றைச் சேர்க்கலாம்.

மாலைச் சிற்றுண்டி:   ஒரு கிளாஸ் பால் அருந்த வேண்டும். கால் கிலோ அளவிலான பேலியோ காய்கறிகளைச் சேர்க்க வேண்டும். காய்கறிகளை சாலடாகவோ, வாணலியில் நெய் விட்டு வதக்கி எடுத்தோ உண்ணலாம்.

இரவு உணவு:   இறைச்சி, மீன், தோலுடன் உள்ள கோழி போன்றவற்றைப் போதுமான அளவு உட்கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.


குழந்தைகளுக்கான பேலியோ டயட்
*பருப்பு சாதத்துக்கு பதிலாக இரண்டு முட்டை​கள்.
*அனைத்து வகை கீரைகள்.
*இட்லி, தோசைக்குப் பதிலாக காய்கறிகள்.
*கிழங்கு வகைகள்.
*பசும்பால் கிடைத்தால் மட்டும் கொடுக்​கலாம்.
*வளரும் குழந்தைகளுக்கு வேர்க்கடலை, கொண்டைக்​கடலை தரலாம்.
*இனிப்பு கொடுக்க நினைத்தால், வீட்டில் செய்த பலகாரங்களை மட்டும் தரலாம்.

சைவ உணவு பேலியோ டயட்
காலை - மதிய உணவுகளும், மாலைச் சிற்றுண்டியும் அசைவ டயட்டில் இருப்பது போல பாதாம், முட்டை போன்றவற்றை இதிலும் எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவாக இறைச்சிக்குப் பதிலாக பனீர் மஞ்சூரியன்,  பனீர் டிக்கா,  பனீர் பட்டர் மசாலா சேர்த்துக்கொள்ளலாம். இதையும் அளவு பார்க்காமல் பசி அடங்கும் வரை உண்ணலாம்.

பெரியவர்கள் பேலியோ டயட்டை எப்படித் திட்டமிடலாம்?

காலை உணவாக நான்கு முட்டை.
மதிய வேளையில், பேலியோவுக்கு ஏற்ற காய்கறிகள் அல்லது கீரை, இதனுடன் 30 கிராம் வெண்ணெய். ஏனெனில் காய்கறி மற்றும் கீரையில் கொழுப்புச்சத்து இல்லை.

இரவில் பாதாம்  அல்லது பனீர்  அல்லது இறைச்சி சாப்பிடலாம். ஹெவி உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

தவிர்க்கவேண்டிய இறைச்சி வகைகள்

கொழுப்பு அகற்றப்பட்ட இறைச்சி வகைகள் தவிர்க்கப்பட வேண்டியவை. 

உதாரணமாக தோல் அகற்றப்பட்ட கோழி, மற்றும் தோல் அகற்றப்பட்ட மீன் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். 

துரித உணவகங்களில் கிடைக்கும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட, ரசாயனங்கள் சேர்க்கப்​பட்ட இறைச்சி உணவுகளைத் தவிர்க்க ​வேண்டும்.

கருவாடு (மிதமான அளவுகளில் உண்ணலாம். தினமும் வேண்டாம்) முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டும் உண்பது தவிர்க்கப்பட வேண்டும். மஞ்சள் கருவுடன் சேர்த்த முழு முட்டையை உண்ண வேண்டும்.

அதீத உடல் எடை கொண்டவருக்கான டயட்!

பட்டர் டீ / காபி
காபி, டீ குடிக்க விருப்பம் இருப்பவர்கள், காபி/டீயில் 30 கிராம் வெண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கி, அதில் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அருந்தலாம். 

இந்த ஒரு கப் குடித்தாலே 3-4 மணி நேரம் பசிக்காது. பால் சேர்ப்பதோ தவிர்ப்பதோ அவரவர் விருப்பம்.

மதியம்
முட்டை அல்லது காய்கறி.

இரவு
பேலியோ டயட்டை பொறுத்தவரை, இரவு உணவு எப்போதும், ஹெவியாக இருக்க வேண்டும். ஏனெனில், இரவு 9 மணிக்கு சாப்பிட்டு, மறுநாள் 9 மணிக்கு காலை உணவு சாப்பிடுவதால் அதிக இடைவேளை இருக்கும். பசி, சோர்வு ஆகியவை தடுக்கவும், உடலி்ல் ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏறாமல் இருக்க இரவு உணவை ஹெவியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு வேளை உணவாக நட்ஸ்
நட்ஸையே உணவாகச் சாப்பிடுவது பேலியோ டயட்டின் முறை. இதில், இரண்டு வகை நட்ஸை உணவாகச் சாப்பிட வேண்டும்.

பிஸ்தா - 100 கிராம்
பாதாம் - 100 கிராம்

பாதாமை 24 மணி நேரம் ஊறவைத்து, மறுநாள் காலை சாப்பிட வேண்டும். விதைகளில் உள்ள பைடிக் ஆசிட்டை (phytic acid) குறைப்பதற்காக பாதாம்களை ஊறவைத்துச் சாப்பிடுவது நல்லது. 

ஊறவைத்த பாதாமை உலர்த்திவிட்டு, வாணலியில் நெய் விட்டு வறுத்து, விருப்பபட்டால் உப்பு, எலுமிச்சைப் பழச்சாறு தூவிச் சாப்பிடலாம். 

பாதாம், பிஸ்தாவில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளதால் இவற்றை ஒருவேளை உணவாகச் சாப்பிடுவது நல்லது.

பேலியோவில் தவிர்க்கவேண்டிய உணவுகள்

*கிழங்கு வகைகள்: உருளைக்கிழங்கு, கருணைகிழங்கு, மரவள்ளி, சர்க்கரைவள்ளி, பனங்கிழங்கு.
*பருப்பு - பயறு வகைகள்: பீன்ஸ் (அனைத்து வகைகளும்), சுண்டல், பச்சைப் பட்டாணி - பருப்புவகைகள் அனைத்தும்.

*பீன்ஸ் வகை சார்ந்த காய்கறிகள் - பீன்ஸ், அவரையினம், பட்டாணி , மொச்சை போன்றவை.

*சோயா, டோஃபு (சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் பால்கட்டி), மீல்மேக்கர்.

*வேர்க்கடலை, கொண்டைக்கடலை போன்ற கடலை வகை உணவுகள்.

*அரிசி, கோதுமை, தானியங்கள், சிறுதானியங்கள் என அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

*பேக்கரிகளில், உணவகங்களில் விற்கப்படும் உணவுகள், முறுக்கு, சீடை போன்ற பலகாரங்கள், இனிப்பு வகைகள் மற்றும் இதர ஜங்க் உணவுகள் என இவை அனைத்தையும் அறவே தவிர்க்கவேண்டும்.

*பழச்சாறு, குளிர்பானங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இவற்றில் வெறும் சர்க்கரை மட்டுமே உள்ளது.

*எல்லா விதைகளிலும் பைடிக் ஆசிட் உள்ளது. இது, உணவுடன் சேரும்போது ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கப்படுவதைத் தடுத்துவிடுகிறது. 

*உதாரணத்துக்கு, கீரையுடன் பருப்பு சேர்த்துச் சாப்பிடும்போது, கீரையில் உள்ள இரும்புச்சத்தை உடலில் சேரவிடாமல் பருப்பு தடுக்கும் என்பது பேலியோ டயட்டின் கருத்து. 

*பீன்ஸ், தானியங்கள் போன்றவை வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும். வாயுத் தொல்லை, இரிட்டபுள் பவுல் சின்ட்ரோம் போன்ற வயிறு தொடர்பான கோளாறுகளை உருவாக்குகிறது. 

*பாக்கெட் உணவுகள், பிரிசர்வேட்டிவ் பயன்படுத்தித் தயாரித்த உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.

*சோயா சேர்க்கப்பட்ட அனைத்து உணவுகள், கோதுமை, மைதா கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

பேலியோவில் உண்ணக்கூடியவை

*தக்காளி
*வெண்டைக்காய்
*கத்திரிக்காய்
*வாழைத்தண்டு
*வாழைப்பூ
*கோவைக்காய்
*புரோகோலி
*காலிஃபிளவர்
*முட்டைக்கோஸ்
*பாகற்காய் 
*பீட்ரூட் 
*வெங்காயம் 
*சுண்டைக்காய் 
*முருங்கை 
*ஆஸ்பாரகஸ் (Asparagus, அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த காய்கறி வகை. குச்சி போன்று இருக்கும்.)
*ருபார்ப் (Rhubarb, இளவேல் சீனி.)

*ஆலிவ் 
*கேரட்

*செலரி 
*வெள்ளரி 
*குடைமிளகாய் 
*பச்சை, சிவப்பு மிளகாய் 
*பூசணி 
*காளான் 
*தேங்காய் 
*பூண்டு 
*இஞ்சி 
*கொத்தமல்லி 
*மஞ்சள் கிழங்கு 
*புடலங்காய்
*அனைத்து வகை கீரைகள்
*அவகேடோ
*எலுமிச்சைப் பழம்
*பெரிய நெல்லிக்காய்
*கடல் உணவுகள்
*சிக்கன்
*முட்டை

*அனைத்து இறைச்சி வகைகள்
*பால் பொருட்கள் (பசும் பாலால் தயாரிக்கப்பட்டவை)
*நட்ஸ் - பாதாம், பிஸ்தா

பேலியோ டயட்டை பின்பற்றுபவர்கள் மூன்று வேளையும் வீட்டில் சமைத்த உணவை உண்பதே நல்லது.

சமையல் எண்ணெயாக நெய், வெண்ணெய், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். சாலட்டுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம்.

இவை எடைக் குறைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும் பொதுவான பேலியோ டயட். 

சைவர்கள், அசைவர்கள் என இருவரும் பின்பற்றலாம். வசதி உள்ளவர்கள் பாதாம் சேர்க்கலாம், முடியாதவர்கள் பட்டர் டீ உட்கொள்ளலாம். முட்டைகூட சேர்க்காத சைவர்களும் முட்டைக்குப் பதில் பேலியோ காய்கறிகளை உண்டு பயனடைந்து வருகிறார்கள்.

சமைக்கும் முறை
வேக வைக்கபட்ட, கிரில்டு உணவுகள், சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய மசாலாக்கள் பயன்படுத்தலாம்.

அதீத வெப்பத்தில் சமையலை செய்யக் கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

செயற்கையான சுவையூட்டிகளைத் தவிர்க்க வேண்டும்.


மாவுச்சத்துக்குப் பழக்கப்பட்ட உடல் பேலியோவுக்கு எப்படி மாறும்?
ஒருவருக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் மாவுச்சத்தின் அளவு மிகக்குறைவே.  

*உடல் எடையின்படி ஒரு கிலோவுக்கு 750 மி.கி மட்டுமே மாவுச்சத்து தேவை. அதாவது 60 கிலோ உள்ளவருக்கு ஒரு நாளைக்கு 45 கிராம் மாவுச்சத்து தேவை.அதிக மாவுச்சத்தினால்தான் பல நோய்கள் ஏற்படுகின்றன.

*நமது உடலில் ரத்தத்தில் குளுக்கோஸைக் குறைக்கும் ஹார்மோன் இன்சுலின் மட்டுமே.  

*ரத்தத்தில் குளுக்கோஸை அதிகரிக்கும் ஹார்மோன்கள் பல உள்ளன.  நாம் சாப்பிடும் அனைத்து மாவுச்சத்தும் இன்சுலின் என்ற ஒரே ஹார்மோனை மட்டுமே நம்பி உள்ளன.

*கொழுப்பை உண்ணும்போது அதன் மேல் பல ஹார்மோன்கள் செயல்படுவதால், மாவுச்சத்துக்குப் பழக்கப்பட்ட உடல் பேலியோவுக்கு மாறுவது எளிதே.  

*ஆனால், பல லட்சம் ஆண்டுகளாக கொழுப்புக்குப் பழக்கப்பட்ட நமது உடலை சில ஆயிரம் ஆண்டுகளாக மாவுச்சத்துக்கு மாற்றியதே பல நோய்களுக்குக் காரணம்.   

பேலியோவுக்கு உடல் பழகிவிட்டதை எப்படி அறியமுடியும்?

பேலியோ டயட்டுக்கு உடல் பழகிவிட்டது என்பதை எப்படி உணர வேண்டுமென்றால், அவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் பசி உணர்வு நின்றுவிடும். சாதாரணமாக டயட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி பசி ஏற்பட்டு, எப்போது இந்த டயட்டில் இருந்து வெளியே வருவோம் என்ற எண்ணமே இருக்கும். ஆனால் பேலியோ டயட்டுக்குப் பழகின உடல், அடிக்கடி பசி உணர்வை ஏற்படுத்தாது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்றபடி மூன்று, நான்கு வேளை மட்டும்தான் பசி எடுக்கும். இதனால், இந்த டயட்டை வாழ்நாள் முழுதும் பின்பற்றலாம்.

கலோரிகளைக் குறைத்து, பசியால் வாடும் டயட் இது கிடையாது. உங்களுக்கு எவ்வளவு தேவையோ, அவற்றைத் தாராளமாகச் சாப்பிடலாம் என்பதே பேலியோ டயட்டின் முறை. இந்த டயட்டின் வெற்றி, ‘போதும் உணவு’ என்ற உணர்வைத் தரும். ஆதலால் நீங்களாக நினைத்தாலும் அதிகமாகச் சாப்பிட முடியாது.

பேலியோ டயட் பலன்கள்

*உடல் எடை குறைகிறது. உடலில் தங்கியிருந்த கொழுப்பை எனர்ஜிக்காக பயன்படுத்தும்.

*ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கும்.

*அலர்ஜி தொந்தரவுகளைக் குறைக்கும்.

*நாள் முழுவதும் சமச்சீரான எனர்ஜி கிடைக்கும். சோர்வு நிலை வராமல் தடுக்கும்.

*சீரான தூக்கம் கிடைக்கும்

*உடல்பருமன், சர்க்கரை நோய், இதய நோய், ஆட்டோ-இம்யூன் டிஸ்ஆர்டர்ஸ், இரிட்டபிள் பவுல் சி்ண்ட்ரோம், ஹார்மோன் பிரச்னைகள்   ஆகியவற்றைக் கட்டுப்படுத்ததுகிறது