Friday, December 19, 2014

பின்லாந்து என்ற நாடு, நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலக அளவில் 'கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.
 
 'பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED-organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு PISA-Programme for international students assessment என்று பெயர். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள் பின்வரிசையில் இருக்க... பின்லாந்து எப்போதும் முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
 
 
பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல், இரண்டரை வயதில்ப்ரீ-கே.ஜி., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை. கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்துகொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான். இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை.
 
 
ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டுக்கும் உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம். முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரஸ் ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். கற்றலில் போட்டி கிடையாது என்பதால்,  தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் டென்ஷன் மாணவர்களுக்கு இல்லை. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.
 
 
இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார். ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது. முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். கோடீஸ்வரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்... அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். 'என் பொண்ணு இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். 'டியூஷன்’ என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை.
 
தேர்வுகளை அடிப்படையாகக்கொள்ளாத இந்தக் கல்விமுறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். இது எப்படி என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்.  அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது. உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில்  இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை.
 
பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்துவருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது. ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. 'பின்லாந்து கல்விமுறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது. றிமிஷிகி ஆய்வில் எல்லா நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை வந்தடைய முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க முடியும்’ என்கிறார்கள். இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை; மதிக்கத்தக்க மனநிலை. கல்வியில் இருந்து நாம் பெறவேண்டிய சாராம்சம் இதுதான். 
 
இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும், பராமரிப்பதிலும் பின்லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. சொல்லப்போனால் பின்லாந்து ஆசிரியர்கள்தான் இதற்கு முழுமுதல் காரணம். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள் லட்சியம். அதேநேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!
 
மேல்நிலை வகுப்பில் டாப் 10 இடம் பிடிக்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் புராஜெக்ட், குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது, நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று... என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!
 
முன்னோடி முயற்சி!
சில ஆண்டுகளுக்கு முன்பு, திண்டுக்கல் மாவட்ட அரசுப் பள்ளிகளில் படித்த டிஸ்லெக்ஸியா, ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடுகள் உடைய குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குச் சிறப்புக் கவனம் தரும் வகையிலான திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவராக வள்ளலார் இருந்தபோது, தேசிய மனநல மற்றும் நரம்பியல் பல்கலைக்கழகத்துடன் (NIMHANS) இணைந்து செயல்படுத்திய இந்தத் திட்டத்தினால் ஏராளமான குழந்தைகள் இனம் காணப்பட்டனர். இவர்களுக்காக மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலக வளாகத்திலேயே ஒரு சிறப்புப் பள்ளியும் திறக்கப்பட்டது. இங்கு தரப்பட்ட பயிற்சியின்மூலம் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்ட பல குழந்தைகள் வழக்கமான பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டின் முன்னோடித் திட்டமான இது, இப்போதும் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது!
 
“தாய்மொழி கல்விதான் சிறந்தது!”
2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் பின்லாந்தின் கல்வி அமைச்சராக இருந்த ஹென்னா மரியா விர்க்குனன் (Henna maria virkkunen), பின்லாந்தின் கல்விமுறை குறித்து www.hechingerreport.org என்ற கல்வி இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள்...
 
 
''பின்லாந்து ஆசிரியர்கள் சிறப்பாகச் செயல்படுவது எப்படி?''
''பின்லாந்தில் ஆசிரியர் பணி மிகவும் மதிப்புமிக்க இடத்தில் இருக்கிறது. இளைஞர்கள் ஆசிரியர் ஆவதை தங்கள் லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆசிரியர் பயிற்சி படிப்பு, பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அது ஆராய்ச்சி அடிப்படையில் அமைந்துள்ளது. ஆசிரியர்கள் கற்பித்தலில் புதிய உத்திகளைக் கையாளலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. அதேபோல, எங்கள் கல்விமுறை நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் அடிப்படையாகக் கொண்டது. பள்ளிகளில் ஆய்வு நடைபெறும் என்றாலும் அதன் நோக்கம், ஆசிரியர்களைக் கண்காணிப்பது அல்ல; கல்விநிலையை மேம்படுத்துவதாகவே இருக்கும். நாம் எல்லோரும் மனிதர்கள். நம்பிக்கைதான் அடிப்படையாக இருக்க வேண்டும்''
 
''பின்லாந்தில் புலம்பெயர்ந்து வரும் அகதிகளின் குழந்தைகளுக்கு எவ்வாறு போதிக்கப்படுகிறது?''
''எங்கள் நாட்டில் அகதிகள் குறைவு. ஹெல்சின்கி (Helsinki) என்ற பகுதியில் அதிகபட்சமாக 30 சதவிகித மாணவர்கள் புலம்பெயர்ந்தோர். பலவீனமான கல்வி மற்றும் சமூகப் பின்னணியில் இருந்துவரும் இவர்களை, வழக்கமான பள்ளிகளுக்கு அனுப்பும் முன்பாக, ஒரு வருட காலம் சிறப்புப் பள்ளிகளுக்கு அனுப்பி தயார்படுத்துகிறோம். அதைப்போலவே புலம்பெயர் குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மொழியைக் கற்பிப்பதில் முனைப்புடன் இருக்கிறோம். தாய்மொழியைப் பயில்வதன்மூலம்தான் ஒரு குழந்தை உண்மையான கல்வியைப் பெற முடியும். ஹெல்சின்கி பகுதியில்
44 வேறுபட்ட தாய்மொழிகளைக்கொண்ட புலம்பெயர் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு 44 மொழிகளில் கற்பிக்கப்படுகிறது. எங்களுக்கு இது சவாலான வேலைதான். என்றாலும் தாய்மொழியைக் கற்பது மிகவும் அவசியம். தாய்மொழியில் சரியாக எழுத, பேச, படிக்க, சிந்திக்கக் கற்றுக்கொள்ளும்போதுதான் பின்னிஷ் (Finnish- பின்லாந்து மொழி), ஆங்கிலம் போன்ற மற்ற மொழிகளைச் சரியாகப் படிக்க முடியும்!''
 
''பின்லாந்து கல்விமுறையில் இருந்து மற்ற நாடுகள் கற்றுக்கொள்ளவேண்டியது என்ன?''
''இது கடினமான கேள்வி. கல்வி என்பது ஒரு நாட்டின் உள்ளூர் மக்களுடனும் வரலாற்றுடனும் இணைந்திருக்கிறது. அதனால் ஒரு நாட்டின் கல்விமுறையை இன்னோரு நாட்டுக்குப் பொருத்துவது சரியாக இருக்காது. ஆனால், மிகச் சிறந்த ஆசிரியர்கள்தான் சிறந்த கல்விக்கான அடிப்படை. ஆசிரியர் பயிற்சியில் முழுக் கவனம் செலுத்தி வடிவமைப்பதும், அவர்களின் பணிபுரியும் சூழலை ஆரோக்கியமானதாக மாற்றி அமைப்பதும் முக்கியம். நல்ல ஊதியம் அளிப்பதும் அவசியமானது என்றபோதிலும் அது ஒரு நிபந்தனை அல்ல. பின்லாந்தில் மற்ற தொழில் துறை பணிகளில் இருப்போர் பெறும் சராசரி ஊதியத்தையே ஆசிரியர்களும் பெறுகின்றனர்!''
 
''பின்லாந்து கல்விமுறை குறித்து அதிகம் அறியப்படாத செய்திகள் எவை?''
''எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான வகுப்பறையில்தான் கற்பிக்கிறோம். நல்ல பள்ளி, புகழ்பெற்ற பள்ளி, மோசமான பள்ளி... என்ற பிரிவினைகள் எங்கள் நாட்டில் இல்லை. கற்றல் குறைபாட்டுடன் இருக்கும் குழந்தைகளிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். முக்கியமாக, வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 21 பேர்தான். அதைத் தாண்டினால் ஆசிரியரால் தனிப்பட்ட கவனம் செலுத்த முடியாது. அதேபோல எங்கள் மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் நேரம் மிகவும் குறைவு. ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்பறையில் இருப்பதாலேயே மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்பதை நாங்கள் நம்பவில்லை. விளையாடவும், பொழுதுபோக்கவும், வீட்டுப்பாடம் செய்யவும் அவர்களுக்கு நேரம் தர வேண்டும்!''
கீரை கொடுக்கும் பணம் 
 
யற்கை, மனிதகுலத்துக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் ஒன்று, கீரை. 'உணவே மருந்து’ என்ற தத்துவத்தின்படி உணவு மற்றும் மருந்தாகப் பயன்படும் கீரைகளுக்கு சமீப ஆண்டுகளாக மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன்காரணமாக, விவசாயிகளுக்கு அட்டகாசமான வருமானம் உறுதியாகிக் கொண்டிருக்கிறது. 50 சென்ட் இடத்தில் கீரை சாகுபடி செய்வதன் மூலமாக ஆண்டுக்கு மூன்று லட்ச ரூபாய்க்கும் மேல் லாபம் பார்க்கும் சிவகங்கை மாவட்டம், மேலச்சாலுர் கிராமத்தைச் சேர்ந்த போஸ் மற்றும் நாராயணன் சகோதரர்களே இதற்கு சாட்சி!  
 
 
சிவகங்கை  மேலூர் சாலையில் பத்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, சாலூர் பிரிவு. இங்கிருந்து பிரியும் கிராமத்துச் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் வருகிறது, மேலச்சாலூர். விவசாயத்தைப் பிரதானத் தொழிலாக கொண்ட அழகிய கிராமம்.
 
குறைந்த தண்ணீர்! குறைந்த நாட்கள்! அதிக வருமானம்!
 
நம்மிடம் முதலில் பேசியவர் மூத்தவர் போஸ். ''பூர்விகமாகவே நாங்க விவசாயக் குடும்பம். இந்த 50 சென்ட் இடம்தான் எங்க கடைசி சொத்து. இதுல விளையற வெள்ளாமையை வெச்சுதான் வண்டி ஓடிக்கிட்டு இருக்கு. எங்க மாவட்டமே வறண்ட பூமி. மழையை நம்பித்தான் பெரும்பாலும் வெள்ளாமை செய்றாங்க. எங்களுக்கு கிணத்துப் பாசனம் இருக்கு. ஆனா, அது அஞ்சு பேருக்கு சொந்தமான கிணறு. அதுலயும் தண்ணி கொஞ்சமாத்தான் இருக்கு. அஞ்சு நாளைக்கு ஒரு தடவை கிடைக்குற பங்கு தண்ணியை வெச்சு ஆரம்பத்துல கருணைக்கிழங்கு வெள்ளாமை செஞ்சோம். காலப்போக்குல மழை இல்லாம போனதால அதையும் செய்ய முடியல. அடுத்து கொறைஞ்ச தண்ணிய வெச்சு என்ன வெள்ளாமை செய்யலாம்னு யோசிச்சு, கீரை சாகுபடியில இறங்கினோம்.
 
 
எடுத்ததும் கொஞ்ச இடத்துல மட்டும் கீரை விதைச்சோம். எங்க நல்ல நேரம் அந்த தடவை நல்ல மகசூல் கிடைச்சதும் அதிலிருந்து முழுக்க கீரை விவசாயத்துல இறங்கிட்டோம். எங்க மண்ணு கரிசல் மண்ணும், செம்மண்ணும் கலந்த கலவை. அதனால சிவப்புப் பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி, பச்சைப் பொன்னாங்கண்ணி, பருப்புக்கீரை, புளிச்சக்கீரை, தண்டங்கீரை, பாலக்கீரை, கரிசலாங்கண்ணி, வெந்தயக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, மஞ்சள்கரிசலாங்கண்ணி, சிறுகீரைனு பலவகையான கீரைகளை இயற்கை முறையில சாகுபடி செய்றோம்'' என்று தாங்கள் கீரை விவசாயிகளாக மாறிய கதையைச் சொன்ன போஸைத் தொடர்ந்த இளையவர் நாராயணன், கீரை சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
அது அப்படியே பாடமாக இங்கே...
 
 
நான்கு நாட்களுக்கு ஒரு பாசனம்!
 
''50 சென்ட் நிலத்தில் பத்து டன் குப்பை உரத்தை (மாட்டுச்சாணம், ஆட்டுப்புழுக்கை கலந்தது) கொட்டி, 5 கலப்பை கொண்டு நிலத்தை உழுது, ஆறவிட வேண்டும். பிறகு, 4 கலப்பை மூலம் உழுது, நிலத்தை மட்டம் கட்டி, பரம்படிக்க வேண்டும். அதன் பிறகு, 10 அடிக்கு 10 அடி அளவில் சதுரப் பாத்திகளை அமைக்க வேண்டும். 50 சென்ட் நிலத்தில் சராசரியாக 200 பாத்திகளை அமைக்கலாம். அனைத்து பாத்திகளிலும் ஒரே ரக கீரையை விதைக்காமல், ஒரு பாத்திக்கு ஒரு ரகம் என மாற்றி மாற்றி விதைக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 50 கிராம் விதையைத் தூவினால் போதுமானது. தூவிய பிறகு, கைகளால் விதைகளை நன்றாகப் பரப்பி பாத்திகளில் தண்ணீர் நிற்பது போல பாசனம் செய்ய வேண்டும். ஐந்து நாட்களில் கீரை தழையத் தொடங்கும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை பாத்தி நன்றாக நனையுமாறு பாசனம் செய்தால் போதுமானது.
 
பூச்சித்தாக்குதலுக்குப் பிரண்டைக் கரைசல்!
 
 
15-ம் நாள் களை எடுத்து, செம்பூச்சித் தாக்குதல் நிகழாமல் தடுக்க, ஒரு பாத் திக்கு, வேப்பங்கொட்டை10 கிராம், பிரண்டைக்கொழுந்து 2 கிராம், கோழிக் கழிவு 2 கிராம், சோற்றுக்கற்றாழை 5 கிராம் ஆகியவற்றைக் கலந்து உரலில் இட்டு நன்கு இடித்து வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி, மூழ்கும் வரை நீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து, அதிலிருந்து வரும் கஷாயத்தை வடிகட்டி, தெளிப்பான் மூலமாக கீரைகளில் தெளித்தால் பூச்சிகள் தாக்காது.
 
மாதம் 2 டன் !
அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, தண்டுக் கீரை போன்ற கீரைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை அறுத்து, களை எடுத்து பாசனம் செய்தால் தண்டுகளில் தழைத்து அடுத்த15 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். மல்லித்தழை, வெந்தயக்கீரை போன்ற சில கீரைகளை 30 நாட்களில் வேரோடு பிடுங்கி, நிலத்தை மண்வெட்டியால் கொத்திவிட்டு, மறுபடியும் விதை தூவி விட வேண்டும்.
50 சென்ட் நிலத்தில் அனைத்து கீரைகளையும் சேர்த்து சராசரியாக மாதம் இரண்டு டன் அளவுக்கு அறுவடை செய்யலாம்.'
 
மாதம் 30 ஆயிரம் லாபம்!
 
சாகுபடிப் பாடம் முடித்த நாராயணனைத் தொடர்ந்து, வருமானம் பற்றிச் சொன்னார், போஸ். ''மாசம் சராசரியா ரெண்டு டன் கீரை கிடைக்குது. விற்பனைக்கு எந்த வில்லங்கமும் இல்லை. 200 கிராம் எடையில முடிச்சு போடுறோம். பாத்திக்கு 50 முடிச்சுங்குற கணக்குல 200 பாத்திக்கு மாசம் 10 ஆயிரம் முடிச்சுகள் கிடைக்குது. பாலக்கீரை, வெந்தயக்கீரை, மணத்தக்காளி கீரைகளை ஒரு முடி 10 ரூபாய்க்கும், சாதாரண கீரைகளை 5 ரூபாய்க்கும், மஞ்சள் கரிசலாங்கண்ணியை 50 ரூபாய்க்கும் விற்பனை செய்றோம். வியாபாரிகளே நேரடியா வந்து வாங்கிட்டுப் போறாங்க. அதனால போக்குவரத்துச் செலவு இல்ல. சராசரியா ஒரு முடிச்சு 5 ரூபாய்னு விலை வெச்சுகிட்டாலும், 10 ஆயிரம் முடிச்சுக்கு 50 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும். இதுல சாகுபடிச் செலவு 20 ஆயிரம் ரூபாய் போக 30 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும். வருஷத்துக்கு ஒரு தடவை குப்பை அடிக்கறது, உழவு, பாத்தி பிடிக்கறதுனு30 ஆயிரம் ரூபாய் செலவாகும். எல்லாம் போக, வருஷத்துக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்' என்றார்.
 
நிறைவாகப் பேசிய சகோதரர்கள், 'மத்த பயிர்களை வெச்சுட்டு மாசக்கணக்குல காத்துக்கிட்டு இருக்கறதை விட, தினமும் வருமானம் கொடுக்குற கீரையை இயற்கை முறையில விவசாயம் செய்தால் நிச்சயம் நல்ல வருமானம் பாக்கலாம். விதைக்கறதுக்கு முன்ன ஏற்கெனவே கீரை சாகுபடியில அனுபவம் இருக்கற விவசாயிகளையும், வியாபாரிகளையும் கலந்துக்கிட்டு சாகுபடியில இறங்கினா நிச்சய வருமானம் கிடைக்கும். நம்மளோட ஈடுபாடும், உழைப்பும் இல்லைனா ஒரு ஏக்கர்ல விதைச்சாலும் இந்த வருமானம் கிடைக்காதுங்கிறதையும் விவசாயிகள் நினைவில வெச்சுக்கணும்'' என்று சொல்லி விடை கொடுத்தனர்.