Wednesday, June 7, 2017

தினம் 3 பேரீச்சம் பழம்... பலன்கள் பல!


`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - பைபில் 
பேரீச்சை... பனை வகையைச் சேர்ந்த இந்த மரத்தை அதன் இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. குறைந்த மூலதனத்தில் நிறைவான பலன் தரக்கூடிய இந்த பழத்தை சாப்பிடுவதற்கென நேரம் ஒதுக்கத் தேவையில்லை. ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுபோலச் சாப்பிடலாம். ஃப்ரெஷ்ஷாகவோ, உலர்த்தியோ எப்படிச் சாப்பிட்டாலும் ஏராளமான பலன்களை அள்ளித்தருகின்றது. உண்ணத்தகுந்தது மட்டுமல்ல பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியது.
 

மலச்சிக்கல் தீர்க்கும்!

'பேரீச்சை மலச்சிக்கலை உண்டாக்கும்' என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், உண்மையில் பேரீச்சை ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலைச் சரிசெய்ய, முதல்நாள் இரவே மூன்று பேரீச்சையை நீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் அவற்றின் சாற்றைக் குடிக்கலாம். பேரீச்சையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது; கரையக்கூடியது. இது செரிமான மண்டலப் பாதையில் உள்ள நீரை வெளியேற்ற உதவுகிறது. குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகும் இது செரிமானச் சக்தியை அதிகரிக்கும்.
 
இரும்புச்சத்து அதிகரிக்கும்! 

பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத் தரும். ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. 
இதயத்தை இதமாக்கும்!
இதில் நிறைந்துள்ள பொட்டாசியம், இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. பலவீனமான இதயத்துக்கு பலம் தரும். இதயத்துக்கு இம்சை தரக்கூடிய கெட்ட கொழுப்பைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. 
இன்ஸ்டன்ட் எனர்ஜி!
பேரீச்சையில் இயற்கையாகவே இனிப்பு அதிகம். சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் நிறைந்துள்ளன. மதிய நேரங்களில் ஏற்படும் மந்தநிலையை சீர்செய்து உடலுக்குத் தேவையான உடனடி எனர்ஜியைத் தரும். மேலும், இதில் நிறைந்துள்ள மாவுச்சத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். 
எலும்பை வலுவாக்கும்!
இதில் உள்ள மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற நுண் சத்துகள் எலும்பை வலுவாக்கும். பேரீச்சையை உணவுடனும் சேர்த்துக் கொள்ளலாம். எலும்பின் வளர்ச்சிக்கு உதவும். மேலும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோயில் இருந்து நம்மைக் காக்கிறது. குறிப்பாக, பெண்கள் பேரீச்சையை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்தும். வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது. 
நினைவாற்றல் பெருக்கும்!
இதில் உள்ள வைட்டமின் மற்றும் பொட்டாசியம் சத்துகள் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. நரம்பு மண்டலச் செயல்பாட்டை அதிகரிக்கவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவும். ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது.  

கூடுதல் பலன்கள்!
* தினமும் ஆறு பழங்களைச் சாப்பிட்டுவர உடல் எடை அதிகரிக்கும்.
* தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமடையும். 
* பேரீச்சையில் உள்ள கரிம சல்ஃபர், உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் ஒவ்வாமையைச் சரிசெய்யும்.
* பெண்களுக்குச் சீரான மாதவிடாய்ச் சுழற்சியை ஏற்படுத்தும். 
* வயிற்றுப் புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடியது.

Thursday, June 1, 2017


வெந்நீர்... உடலுக்கு உரம்


நீரைக் காய்ச்சிக் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக நம் பாரம்பர்ய மருத்துவம் கூறுகிறது. 
நீரைக் காய்ச்சிக் குடிப்பதுதான் சிறந்தது என்கிறது சித்த மருத்துவம். அதைத்தான், மோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கி உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி’ என்று தேரையர் தனது 'பிணி அணுகா விதி' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, நீரைக் காய்ச்சியும் மோரை நீர் சேர்த்துக் கலந்தும் நெய்யை உருக்கியும் சாப்பிட வேண்டும் என்பதே அதன் பொருள். மேலும், இயற்கை மருத்துவத்தில் வெந்நீரின் மகிமை பற்றி பேசும் ஏராளமான பாடல்கள் காணக்கிடக்கின்றன.
அப்படி பதார்த்த குண சிந்தாமணியின் ஒரு பாடலில்,
`நெஞ்செரிப்பு நெற்றிவலி நீங்காப் புளியேப்பம்
வஞ்சமுற வந்த வயிற்றுநோய் - விஞ்சியே
வீழாமக் கட்டோடு வெப்பிருமற் சுட்டநீர்
ஆழாக்குட் கொள்ள அறும்' என்று குறிப்பிட்டுள்ளது.
`வெந்நீர் அருந்துவதால் நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் மறைந்து உணவு செரிமானமாகும். எந்த வகையான தலைவலியாக இருந்தாலும், மிதமானச் சூடுள்ள வெந்நீரைக் குடித்தால், நரம்புகளுக்கு இளக்கம் கொடுத்து, தலைவலியைக் குறைக்கும். அடிக்கடி வெந்நீர் குடித்துவருவதால் பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். வாய்வுப் பிரச்னைகள் குறையும். உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும்’ என்று கூறுகிறது இந்தப் பாடல். 
இது தவிர, வெந்நீர் குடிப்பதால், மலச்சிக்கல் தீரும்; உடல் எடை குறைக்க உதவும்; உண்ட உணவு எளிதில் செரிமானமாகும்; சளி, இருமல், தொண்டைப்புண் நீங்கும்; ரத்த ஓட்டம் அதிகரிக்கும்; நரம்பு மண்டலத்தைச் சுத்திகரிக்கும்; பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய்க் கால வயிற்றுவலி நீங்கும்; முதுமையைத் தள்ளிப்போடும்; தோல் நலத்தைப் பாதுகாக்கும்; தொற்றுநோய்க் கிருமிகளை வெளியேற்றும்; முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்; பொடுகுத் தொல்லை நீங்கும்; முடியின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும். 
இவை மட்டுமல்லாமல், `வெந்நீரை எந்தப் பாத்திரத்தில் ஊற்றிக் குடிக்கிறோமோ அதற்கேற்ப பலன்கள் மாறுபடும்’ என்றும் சித்த மருத்துவம் கூறுகிறது. அதன்படி, தங்கப் பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றிவைத்துக் குடித்தால் வாத நோய், சுவையின்மை, உடல் உஷ்ணம், வெப்புநோய் போன்றவை நீங்கும்.
வெள்ளிப் பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி வைத்துக் குடித்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவும். இரும்புப் பாத்திரம் ரத்தச்சோகை நீங்கச் செய்யும். நரம்புகள் உறுதியாகும். உடலின் வெப்பநிலையை சீராக்கும். காய்ச்சி ஆறவைத்த நீரைக் குடிப்பதால் விக்கல், பித்தநோய், காதுவலி, வாந்தி, மயக்கம், உடற்சூடு, வயிற்றுப்புண் போன்றவற்றைத் தீர்க்கும். உதாரணமாக ஒரு லிட்டர் நீர் எடுத்துக்கொண்டால் அதை கால் லிட்டராகும் வரை காய்ச்சிக் குடித்தால் உடற்சூடு நீங்கும். அரை பங்காகும் வரை காய்ச்சிய நீரை குடித்தால் வாதம், பித்தம் விலகும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் குடித்தால் வாதம், பித்தம், கபம் பிரச்னைகள் நீங்கும். மூன்றில் ஒரு பங்காகும் வரை காய்ச்சிய நீரைக் குடித்தால், உடல்சூட்டைக் குறைக்கும்; கடுமையான ஜுரம், வயிற்றுப்போக்கு, வாதம், பித்தம், கபம் பிரச்னைகளைப் போக்கும்.
எட்டில் ஒரு பங்காகும்வரை காய்ச்சிய நீரை வெள்ளிப் பாத்திரத்தில் வைத்துக் குடித்து வந்தால், உடல் சூட்டைக் குறைக்கும்; நாவறட்சி, அல்சர், பித்தவெடிப்பு பாதிப்புகளை நீக்கும். அதேபோல, சாப்பிடுவதற்கு முன்னர் வெந்நீர் குடித்தால் உடல் இளைக்கும். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் பசியை மட்டுப்படுத்தும். சாப்பிட்ட பின்னர் வெந்நீர் குடிப்பது ஜீரண உறுப்புகளைத் தூண்டி, செரிமானச் சக்தியை அதிகரிக்கும்.

நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு!

சுகுணா திவாகர், படங்கள்: ஏ.சிதம்பரம், வி.ஸ்ரீனிவாசலு

ஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு தொடங்க இருக்கிற நேரத்தில் வந்திருக்கிறது ‘நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்குத் தடை’ என்கிற மோடி அரசின் அறிவிப்பு. 
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாள் தொடங்கியே மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள்மீது தாக்குதல், மாட்டிறைச்சியை விற்பவர்களாக, சாப்பிடுபவர்களாகத் தாங்கள் சந்தேகப்படு பவர்களை எல்லாம் அடித்து உதைத்தல் எனப் `பசுவதைத் தடுப்பு' என்னும் பெயரால் சட்டத்தைக் கையில் எடுத்தனர் சிலர். உத்திரப்பிரதேசத்தில் தாத்ரி என்னும் கிராமத்தில் முகமது இக்லாக் என்னும் இஸ்லாமியரைக் கொலை செய்தனர். மாட்டுத்தோலை உரித்ததற்காக நாட்டின் பல பகுதிகளில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தினர். இப்போது அவர்கள் கையிலேயே சட்டத்தைத் தந்திருக்கிறார் மோடி.
இந்துத்வா அரசியலை முன்னெடுக்கிற வர்களின் அரசியல் ஆயுதங்களில் ஒன்று ‘பசுவதைத் தடுப்பு’. 
‘பசுவதைத் தடுப்புச் சட்டம்’ என்ற பெயரில் கொண்டுவராமல் ‘சந்தைகளில் இறைச்சிக்காகக் கால்நடைகளை விற்கத் தடை’ என்று   தந்திரமாக ச் சட்டம்  கொண்டுவந்திருக்கிறார் மோடி! 

‘பசு புனிதமானது’ என்கிற மதவாத அரசியல்தான் இதன் அடிப்படை. பசுவைப் புனிதமாகக் கருதி அவற்றைக் காப்பதே இந்தியக் கலாசாரம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

பசு புனிதமா? 
- வேதகாலத்தில் உயர்சாதியினரும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் டி.டி.கோசாம்பி, டி.என்.ஜா தொடங்கி அம்பேத்கர் வரை பலர் சான்றுகளுடன் விளக்கியுள்ளனர்.

- விருந்தினர்களை உபசரிக்கும் சடங்கான ஆர்கியம் அல்லது மதுபர்கம் என்று மிகப் பிரபலமாக அழைக்கப்பட்ட ஒரு சடங்கு குறித்துப் பிற்கால வேத நூல்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றன. 

- விருந்துக்குப் பொருத்தமான பசுக்கள்’ என்ற பொருள் தரும் அதிதினிர் (Athithinir) என்ற சொல் ரிக் வேதத்தில் (X-68.3) காணப்படுகிறது. திருமண விழாவின்போது பசு பலி தரப்பட்டது குறித்து ரிக்வேதப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. 

- ஆட்சியாளர்களோ, மரியாதைக்குரியவர்களோ விருந்தினர்களாக வந்தால், மக்கள் காளைகளையோ, பசுக்களையோ பலியிட்டார்கள் என்று அய்த்தரேய பிராமணத்தில் சொல்லப்பட்டுள்ளது” என்கிறார் ஆய்வாளர் டி.என். ஜா. ‘புனிதப்பசு என்னும் கட்டுக்கதை’ என்று ஒரு நூலே எழுதியிருக்கிறார் அவர்.


- மத நூல்களிலும் தர்மசாஸ்திர நூல்களிலும் மட்டுமல்ல, ஆரம்பகால இந்திய மருத்துவ நூல்களும் மாட்டிறைச்சியின் மருத்துவக் குணங்களைப் பற்றிப் பேசுகின்றன” என்கிறார் டி.என்.ஜா. 
மூச்சுத் திணறல், மூக்கடைப்பு, இருமல், தொடர்ச்சியான காய்ச்சல் ஆகியவற்றுக்கு மாட்டிறைச்சி நல்ல மருந்து என கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய மருத்துவ நூல்களான சரக சம்ஹிதமும் சுஸ்ருதா சம்ஹிதமும்  

*அப்படியானால் எப்போது பசு புனிதமாக்கப்பட்டது?* 


- வேள்விகளில் மாடுகள், குதிரைகள் போன்றவை பலியிடப்பட்டன. இந்த வேள்விகளால் கால்நடைச் செல்வங்கள் அழிவதைப் பௌத்தம் கடுமையாக எதிர்த்தது. ஒருகட்டத்தில், வைதீகத்தைவிட பௌத்தத்தின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்தது. 

- பௌத்தத்தைவிடத் தங்களை மேலானவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் காட்டிக்கொள்வதற்காகவே பிராமணர்கள் முற்றிலுமாக இறைச்சி உண்ணுவதைக் கைவிட்டனர்’ 

- ஆடு, கோழி சாப்பிட்டு மாட்டிறைச்சியை விலக்கிவைத்த சாதி இந்துக்கள், மாட்டிறைச்சி உண்ணும் தீண்டத்தகாதவர்கள் என மூன்று பிரிவுகள் உருவாயின” 


- இன்றளவும் பசுவைப் புனிதமாகக் கருதும் கலாசாரம் என்பது வட இந்தியாவில்தான் செல்வாக்குடன் இருக்கிறதே தவிர, தென்னிந்தியாவில் அத்தகைய மனப்போக்கு குறைவே. காரணம், ‘பசு புனிதம்’ என்று சொல்லி மாட்டிறைச்சியை விலக்கிவைத்த கலாசாரத்தைத் தமிழ் இலக்கியங்கள் எதிலும் பார்க்கமுடியாது. 

- புலையன் ஆவுரித்துத் தின்றான்,  பாணன் கன்றை உரித்துத் தின்றான்' என்று நற்றிணையிலும், வீரர்கள் கொழுத்த பசு இறைச்சியை உண்டனர், விருந்தினர்க்கு மாட்டு இறைச்சியும் வெண்ணரிசிச் சோறும் கொடுத்தனர் என்கிற செய்திகளும்கூட சிறுபாணாற்றுப்படை போன்ற நூல்களில் விவரிக்கப்படுகின்றன. 

- உழவர்கள் கூடப் பசு இறைச்சியைத் தின்றதை அகநானூறு பதிவுசெய்கிறது” என்கிறார் ஆய்வாளர் அ.கா.பெருமாள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மற்றும் சில இடைநிலைச் சாதியினர் மாட்டுக்கறி உண்கின்றனர். பெரும்பாலான இடைநிலைச் சாதியினர் மாட்டிறைச்சி உண்பதில்லை. 
- கேரளாவிலோ தலித்துகள், முஸ்லிம்கள் மட்டுமல்ல, பெரும்பாலான இந்து இடைநிலைச் சாதியினரும் மாட்டிறைச்சி உண்கின்றனர். மீனும் மாட்டு மாமிசமும் கேரளாவின் அடையாள உணவுகள். எனவே 'பசு புனிதம்' என்பது ஒட்டுமொத்த இந்துக்களின், இந்தியர்களின் கலாசாரம் அல்ல.
- ‘பசு புனிதம்’ என்பது வடமாநிலங்களில் இந்து உயர் சாதியினரின் நம்பிக்கையாக மட்டும் இருந்தது. ஆனால், அதை முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலாக மாற்றியது தொடக்ககால இந்துத்துவ வாதிகள். 1881-ல் முதன் முறையாக ‘கோரக்‌ஷண சபா’ என்ற முதல் பசுப்பாதுகாப்பு அமைப்பைத் தொடங்கினார், ஆரிய சமாஜத்தைத் தோற்று வித்த தயானந்த சரஸ்வதி. தொடர்ச்சியாக ஆரிய சமாஜம், இந்துமகா சபா, ஜனசங்கம் என்று இந்துத்துவ அமைப்புகள் பசுப்பாதுகாப்பு அரசியலை முன்னெடுத்தன.

விவசாயத்துக்காகத்தானா?
- தங்களுடைய மதவாத அரசியலை மறைக்க ‘கால்நடைகளைக் காக்கவும் விவசாயிகளைப் பாதுகாக்கவும்தான் இந்தத் தடை’ என்கிறார்கள் மோடி பக்தர்கள். 


- டெல்லியில் பல நாட்களாக நிர்வாணப் போராட்டம் வரை நடத்திய தமிழக விவசாயிகளைச் சந்திக்க முன்வராத நரேந்திர மோடி, ‘விவசாயிகளைப் பாதுகாப்பதற்காகத்தான் மாட்டிறைச்சித் தடையைக் கொண்டுவருகிறார்’ என்று சொல்வதை நம்புவது, ‘கேப்பையில் நெய்தான் வடிகிறது’ என்று ஒப்புக்கொள்வதற்குச் சமம். 



- பால் வற்றிப்போன, வயதான மாடுகளைப் பராமரிப்பதற்கு என்ன வழி என்பதற்கு இதுவரை பசுப்பாதுகாப்பாளர்களிடம் எந்த பதிலும் இல்லை. 

- பசுவதைத் தடுப்புச் சட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் இருந்து மேற்குவங்கம் வழியாகத் திருட்டுத்தனமாக வங்காளதேசத்துக்கு ஆண்டுக்கு ஒரு கோடி கால்நடைகள் (அதன் மதிப்பு 3,126 கோடி) கொண்டுசெல்லப்படுகின்றன. 


- பசுப்பாதுகாப்பு’ என்பதற்குப் பால் உற்பத்தி முதன்மைக் காரணமாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் 2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கால்நடைக் கணக்கெடுப்பின்படி பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்களான ஹரியானா(77%), பஞ்சாப்(67%), உத்தரப்பிரதேசம்(61%), குஜராத்(51%), ராஜஸ்தான்(50%) ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தியில் பெருமளவு எருமை மாடுகளே ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. மொத்த பால் உற்பத்தியில் பசுக்களின் பங்கு பாதி அளவுக்கும் குறைவாகவே உள்ளது.
- இதுவே பசுவதைத் தடைச் சட்டம் நடைமுறையில் இல்லாத கேரளா(93%), மேற்கு வங்கம்(96.5%) மற்றும் அசாம்(91%) ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தியில் பசுக்களின் பங்களிப்பு 90% க்கு மேல் இருக்கிறது. 

 - மாட்டுத் தோல், மாட்டுக் கறி சார்ந்த தொழில்கள் தடையின்றி நடக்கும் மாநிலங்களில் விவசாயிகள் அதிக அளவில் பசுவை வளர்க்கின்றனர். ஆனால், பசுவதை தடைசெய்யப்பட்ட மாநிலங்களில் பசு வளர்ப்பு குறைந்து எருமை வளர்ப்பு அதிகரித்துள்ளது. 

- பசு வதைத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள மாநிலங்களில் பல்வேறு நாட்டு மாடு இனங்கள் அழிந்து வருகின்றன. 2006-ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் தேசிய விலங்கு மரபணு வள ஆணையம் எடுத்த கள ஆய்வின்படி,  `ஹரியானா பசு’ என்னும் தனி இனத்தின் எண்ணிக்கை தொடர்ச்சியாகச் சரிவடைந்து வந்துள்ளது. 

- புதிய தடைச் சட்டத்தின்படி ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்குதான் கால்நடைகளை விற்கவேண்டுமாம். வயதான, பால் சுரக்காத மாட்டை ஒரு விவசாயியிடம் இன்னொரு விவசாயியிடமிருந்து ஏன் வாங்கப்போகிறார்?


- விவசாயிகள் மாடுகளை வளர்க்கவே முடியாத சூழல் உருவாகுமானால் அது இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கான உற்பத்தியை பெரிய அளவில் பாதிக்கும். இறைச்சி, பால் மற்றும் பால்பொருள்களையும் கூட இறக்குமதி செய்ய வேண்டிய நிலைதான் எதிர்காலத்தில் உருவாகும். 
- 2016ஆம் ஆண்டுக் கணக்கின்படி உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவும் பிரேசிலும்தான் முதலிடம் வகிக்கின்றன . 

- முஸ்லிம் பெயரில் இந்த ஏற்றுமதி நிறுவனங்களை நடத்துபவர்களில் கணிசமானவர்கள் உயர்சாதி இந்துக்கள்’ என்பது அம்பலப்படுத்தப்பட்டு, ‘உள்ளூரில் பசுவதைத் தடுப்பு, வெளிநாட்டில் ஏற்றுமதியா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. 

- ஒருவேளை, வீம்புக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் தடை விதித்தால், அது பொருளாதாரத் தற்கொலையாகத்தான்  இருக்கும். 

*விவசாயிகளை அழிக்கும், கால்நடைகளையும் பொருளாதாரத்தையும் அழிக்கும் முட்டாள்தனம் இவை இரண்டும் இணைந்ததுதான் மோடியின் ‘இறைச்சிக்குத் தடை'ச் சட்டம். மொத்தத்தில், இந்தத் தடை நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு*