Saturday, August 31, 2024

தேங்கிய நீர்  பாக்டீரியாக்களின் பண்ணை 



நாம், நம் உடல் தகுதி (Fitness) குறித்து அக்கறை காட்டுகிறோமா?

இந்தியாவில் வசிப்பவர்களில் பாதிப் பேர் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாமலும், உடல் தகுதி இல்லாமலும் இருக்கிறார்கள்’ என்று ‘லான்செட்’ எனும் பிரபல மருத்துவ ஆய்விதழ் ஓர் அதிர்ச்சித் தகவலைத் தந்திருக்கிறது. 

ஆண்களில் 42 சதவிகிதம் பேரும், பெண்களில் 57 சதவிகிதம் பேரும் உடல்ரீதியாகச் செயலற்றவர்களாக இருக்கிறார்கள். 

உடல் செயல்பாடு இல்லாத இந்த நிலைமை 2000-ல் 22.3% என இருந்தது. 2022-ல் இது 49% என்று உயர்ந்தது. இந்த நிலைமை நீடித்தால், 2030-ல் இந்தியாவில் 60% பேர் போதுமான உடல் தகுதி இல்லாமல், பலவித நோய்களின் பிடியில் சிக்கிக்கொள்வார்கள்’ என்று அந்த ஆய்வறிக்கை கவலைப்படுகிறது.

இந்த ஆய்வின்படி, போதுமான உடல் உழைப்பும் உடல் செயல்பாடும் இல்லாத மக்கள் வசிக்கும் 195 உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த 25 வருடங்களில் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்களும் பக்கவாத பாதிப்புகளும் 50% அதிகரித்திருக்கின்றன. 

நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 10 கோடியாகவும், நுரையீரல் நோயாளிகளின் எண்ணிக்கை 5.5 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது. 

2016-ல் மட்டும் 2.8 கோடி பேர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கிறார்கள். 1990-ல் புற்றுநோயால் இறந்தவர்கள் 5.5 லட்சம் பேர். இந்த எண்ணிக்கை இப்போது 10.6 லட்சமாக உயர்ந்திருக்கிறது. 

இந்தப் பேராபத்துகளுக்கு, உடல் செயல்பாடு குறைந்துள்ளதும் ஒரு முக்கியக் காரணம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடல் இயக்கம் ஏன் அவசியம்?

‘வளர்ந்தவர்கள் அனைவருக்கும் தினசரி 45 நிமிடம் நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் பயிற்சி உள்ளிட்ட ஒரு காற்றலைப் பயிற்சி (Aerobic exercises) அவசியம். அல்லது வாரத்துக்கு 150 நிமிடம் முதல் 300 நிமிடம் வரை நடைப்பயிற்சி அவசியம்' என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிது. 

குழந்தைகளுக்கும், வளரிளம் பருவத்தினருக்கும் தினமும் 60 நிமிடம் உடற்பயிற்சி தேவை. கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அம்மாக்களுக்கும்கூட இது பொருந்தும். இதன்படி செய்தால், அவர்கள் உடல் தகுதி பெறுவது மட்டுமல்லாமல், மனநலமும் உறுதியாகும். வாழ்க்கைத் தரம் உயரும். 

உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, உடல் பருமன், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றாநோய்களைத் தவிர்க்கலாம். 30% அகால மரணங்களைத் தடுக்கலாம். 8% மனச்சோர்வு மற்றும் மறதி நோயிலிருந்தும் தப்பிக்க முடியும். 

மூத்தோருக்கு எலும்பும் தசைகளும் வலிமை பெற்றுவிடும் என்பதால், நடை தள்ளாட்டமும் தரையில் விழுவதும் தடுக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்படும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம்.


தற்போதைய வாழ்க்கைமுறை மாற்றங்களும் உடல் செயல்பாடு குறைந்து போனதற்குக் காரணம்'' என்கிறார், உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார மேம்பாட்டு இயக்குநர் டாக்டர் ருடிகர் க்ரெச். ‘‘

அமர்ந்தே பார்க்கும் வேலைகள் அதிகமாகி வருகின்றன. ஊரடங்கில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தபோது, ஆன்லைன் ஷாப்பிங்கில் இறங்கினோம். 

இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைப்பேசி பொத்தானைத் தட்டி, ஊறுகாயிலிருந்து ஸ்மார்ட் போன், டிவி வரை எல்லாவற்றையும் வரவழைத்து விடுகிறோம். கடைக்கு நடந்து செல்வதைக் குறைத்துக் கொண்டோம்.

கொரோனா காலத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல், கைப்பேசியைக் கொடுத்து, இணையவழி கற்றலுக்குப் பழக்கப்படுத்தினோம். அவர்கள் கைகளிலிருந்து கைப்பேசியை இப்போது வாங்க முடியவில்லை. வெளியில் விளையாடச் செல்லும் வழக்கத்தைக் கைவிட்டார்கள். 

பெரியவர்கள் ‘வீட்டிலிருந்து வேலை’ செய்ய ஆரம்பித்தோம். கொரோனா முடிவுக்கு வந்த பின்னும், நிறுவனங்கள் ‘வீட்டிலிருந்தே வேலை’ கோட்பாட்டை நம் தலையில் கட்டின. வெயிலில் அலைந்து திரிந்து வேலை செய்வதை ஒப்பிடும்போது அமர்ந்தே வேலை செய்வது சுலபமாகத் தோன்றலாம். ஆனால், இது நம் ஆரோக்கியத்துக்குக் குழி பறிக்கிறது என்பதை எத்தனை பேர் உணர்கிறோம்?’' 

காத்திருக்கும் ஆபத்துகள்

உடல் செயல்பாடு குறைவதால் மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, மறதி நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் தாக்குவது அதிகரிக்கும். மார்பகப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றால் அகால மரணங்கள் அதிகரிக்கும்

2020-க்கும் 2030-க்கும் இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் 50 கோடி மக்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.