Thursday, August 25, 2016


கலாச்சாரமும் காதலும் 
(சமீபத்தில் படித்தது)

ரசனை மண்ணுக்குரியதா? அது ஏன் ஏரியாவுக்கு ஏரியா மாறிவிடுகிறது' என அடிக்கடி யோசிப்பேன். `பெங்களூர் டேஸ்' ஏன் தமிழில் ஓடவில்லை?, `ஆட்டோகிராஃப்' ஏன் தெலுங்கில் ஓடவில்லை?, `துப்பாக்கி' ஏன் இந்தியில் ஓடவில்லை?

கலாசாரப் பரிவர்த்தனைகள் (Cross Cultural Management) பற்றி நிறைய கார்ப்பரேட் பயிற்சிகள் எடுக்கும்போது பிரியதர்ஷனையும் பிரபுதேவாவையும் ஒப்பிட்டுப் பேசுவேன். தான் எடுத்த கிளாசிக்கல் மலையாள காமெடிகளையே இந்தியில் மூன்றாம் தரப் படங்களாக ஆக்கியவர் பிரியதர்ஷன். பிறரின் ஹிட்ஸை இந்திக்கு மொழிமாற்றம் செய்து இந்தியாவின் முன்னணி கமர்ஷியல் டைரக்டர் ஆனவர் பிரபுதேவா. 

மண் சார்ந்த பண்பாட்டுக் குறியீடுகள் மற்றும் நம்பிக்கைகள் ஒவ்வொரு கதையின் அடிநாதத்திலும் உள்ளன. அதை ஒதுக்கிவிட்டு வேறு மொழியில் கதை பண்ண முடியாது. கலாசாரம் தெரியாமல் காலடி வைத்தால், தோல்விதான். சினிமா மட்டும் அல்ல, வாழ்க்கையிலும்!

#கெளரவக்_காதல்

காதலிக்கும்போது கலாசார ஒற்றுமைகள் தெரியும்; கல்யாணத்துக்குப் பிறகு கலாசார வேற்றுமைகளே தெரியும்.

`இன்று சாதிக் காதலுக்குப் பெரும் தடை இல்லை' என நகர்புறத்தில் சாதிக்கிறார்கள்.ஆனாலும் மேட்ரிமோனியல் விளம்பரங்களில் சாதி விஸ்வரூபம் எடுத்து வளர்ந்துள்ளது தெரிகிறது. கிராமங்களில் இன்றும் காதலர்களைப் பிரித்து, தாழ்த்தப்பட்ட சாதிப் பையனைக் கொல்கிறார்கள்.

#இரு_நபர்கள்

நகரத்துக் காதல் கல்யாணங்களும் விவாகரத்துக்காக கோர்ட்டில் நிற்கக் காரணம், அடிப்படைப் புரிதல் இன்மைதான். திருமணம் என்பது, மேற்குக் கலாசாரத்தில் வேண்டுமானால் இரு நபர்கள்சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் இங்கு, இரு குடும்பங்களைச் சார்ந்தது; இரு கலாசாரங்களைச் சார்ந்தது.

காதலிக்கும்போது காதலிக்கும் ஆள் மட்டும்தான் தெரியும். கல்யாணத்துக்குப் பிறகு பின்புலத்தில் உள்ள மொத்தக் கலாசாரமும் தெரியும். அதை எதிர் நோக்குவதில் வெற்றி பெறாதவர்கள்தான் திருமணத்தில் தோற்றுப்போகிறார்கள்.

 #காதல்_கத்திரிக்காய் 

எந்த முறையில் திருணம் என்று ஆரம்பித்து, அதன் பிறகு எல்லாவற்றிலும் `எங்க பழக்கம் இது... உங்க பழக்கம் அது!' என்று யோசிக்க வைக்கும்.

இதனால் காதலைக் கைவிட வேண்டாம் பாஸ். கல்யாணத்துக்கு முன்னர் எல்லாவற்றையும் பேசிவிடுங்கள். சின்னச் சின்ன விஷயங்கள்தான் வாழ்க்கையில் பின்னால் பெரிய பெரிய டார்ச்சர்களைக் கொடுக்கும்.

பீட்சா ஆர்டர் செய்துகொள்ளலாம் இப்போது. ஆனால், கல்யாணத்துக்குப் பிறகு எண்ணெய்க் கத்திரிக்காய் செய்தால் சாப்பிடப் பிடிக்குமா என்பதையும் பேசிவிடுங்கள்.

#மிதி_மொழி 

நம் வேலைச் சூழலில் பாஸை அமெரிக்கக் கலாசாரத்தில் பெயர் சொல்லி அழைக்கச் சொல்கிறார்கள். ஆசிரியரைப் பார்த்தால் இங்கிலாந்து கலாசாரப்படி “சார்...” என்று விளிப்போம். வடக்கத்திய ஆள் பழக்கப்பட்டால், “ஹரே யார்?” என்போம்.. பற்றாக்குறைக்கு ரஹ்மானும் ஹாரிஸும் வேறு பன்மொழி வார்த்தைகளைப் புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள். 

சரி, நம் ஒரிஜினல் கலாசாரம் எது? உங்கள் காலை யாராவது தெரியாமல் மிதிக்கும்போது வரும் மொழிதான் உங்கள் நிஜமான கலாசாரம்!

#விசில்

உலக மயமாக்கம் இன்று பன்னாட்டுக் கலாசாரத்தை இங்கு கொண்டுவந்து குவித்துள்ளது. வர்த்தகம் மெதுவாக கீழைக் கலாசாரங்களை அழித்து ஒரு mono culture யை உருவாக்க முயற்சி செய்துவருகிறது. இன்றுகூட உங்கள் ஊரிலேயே உங்கள் உணவு கிடைக்காவிட்டாலும் பன்னாட்டு பிராண்ட் உணவுகள் அனைத்தும் கிடைக்கும். 

உணவு முதல் உணர்வு வரை அனைத்தையும் உங்களை கவ்வியுள்ள கலாசாரம் தீர்மானிக்கிறது. அதனால்தான் மாலில் உங்களால் தலையணை சைஸில் குற்ற உணர்ச்சி இல்லாமல் பாப்கார்ன் வாங்க முடிகிறது. தனியாக உள்ளபோது விசில் அடிக்காமல் படம் பார்க்க முடிகிறது. 

அண்மையில் கேட்ட முத்து இது: 

தலைவர் படத்தை எல்லாம் மாலில் பார்க்கக் கூடாது. லோக்கல் தியேட்டரில் பார்க்கணும். அப்பதான் அந்த ஃபீல் கிடைக்கும்!

#அர்ஜென்ட்

இன்று பலரின் பிரச்னை அவசரம்தான். நினைத்ததும் நுகரக் கிடைக்கும் வசதிகள் வாய்க்கையில், எல்லாவற்றையும் உடனே அடைந்துவிட ஆசைப்படுகிறோம். எதை வாங்கவும் ஆப்பு வைத்திருக்கிறோம். I mean app. அதனால் நாம் சொன்னதும் எதிராளி உடனடியாகப் புரிந்துகொள்ள வில்லை என்றால் நம்மால் தாங்க முடிவதில்லை.

செல்லைத் தூக்கிப் போட்டு உடைக்கும் பழக்கம் சகஜமாகிவருகிறது. உடைவது கைபேசி மட்டும்தானா?

#நோ_மொபைல்

மண்டை சூடாகும் இளம்பிராயத்தினர் ரிலாக்ஸ் ஆக, சில க்விக் டிப்ஸ்! 

இரவில் மொபைலை நோண்டாமல் எட்டு மணி நேரத் தூக்கம், கூடுதல் குளிர்வைத் தரும். Old fashioned?

ஒரு நல்ல செய்தி, Phone fasting பிரபலமாகி வருகிறது. அப்படியென்றால்? மாதத்துக்கு ஒரு நாள் மொபைல் இல்லாமல் வாழ்வது!

என்னைத் திட்டாதீர்கள். இன்னொன்றையும் சொல்கிறேன். `கவிதைகள் படிப்பது, உங்கள் மூளையின் இளகுத்தன்மையையே (Cerebral Plasticity) மாற்றுகிறது' என்று படித்தேன். மூளை இறுக்கம் அடைவதால்தான் மூப்பும், அதைச் சார்ந்த மறதிக் கோளாறுகளும் வருகின்றன.இசையும் கவிதையும் இளமையுடன் வைத்திருக்கும் என்கிறது அறிவியல்.

ஜிம் போவதைப்போல மனுஷ்ய புத்திரன், கலாப்ரியா, ஞானக்கூத்தன் கவிதைகளையும் கொஞ்சம் படியுங்கள். Feel Young!

No comments:

Post a Comment