Monday, February 3, 2025

ரஜினிகாந்தும்  தமிழக அரசு மருத்துவமனையும் 

திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு , Aortic aneursym ஏற்பட்டது, அதற்கான சிகிச்சை முடிந்து நேற்று நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் .

அதைப்பார்த்த பலரும் " காசு இருப்பவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு போலாம்.

காசு இல்லாத ஏழைகள் அரசு மருத்துவமனைக்குத் தான் போகனும். அங்கே இந்த நோயை கண்டுபிடிப்பார்களா ? சரியான சிகிச்சை கிடைக்குமா ?  என்று கமெண்ட் செய்தனர்.

நேற்று மதியம் ஒரு முதியவர், காய்ச்சல் சளி இருமலுக்கு சிகிச்சை பெற என் கிளினிக் வந்திருந்தார்.

கையில் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சைப்பெற்ற நோட்டை வைத்திருந்தார் .

அதை வாங்கி பார்த்ததில் , எனக்கு பயங்கர ஆச்சர்யம்.

Diagnosis : Aortic aneursym with hematoma என்று எழுதியிருந்தது.

திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்பட்ட அதே aortic aneurysm என்ற நோயை, இந்த முதியவருக்கு திருவாரூர் அரசு மருத்துவமனையில் diagnosis செய்து, சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அனைத்து வகையான நோய்களும் diagnose செய்யப்படும். அதற்குரிய சிறப்பு சிகிச்சையும் வழங்கப்படும்.

2014ல் நான் கிளினிக் தொடங்கிய சமயத்தில் Vildagliptin 50mg என்ற சுகர் மாத்திரையின் விலை ₹25 .

தற்போது அதே மாத்திரை, வடுவூர் PHC ( அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்) வாங்கி சாப்பிடுவதாக ஒரு பாட்டி தனது நோட்டைக் காட்டினார். அதில் VILDAGLIPTIN 50MG என்று எழுதியிருந்தது.

கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் PRO PL என்ற பவுடரின் விலை ₹695.

B PROTIN, D PROTIN போன்ற உலக பிரசித்தி பெற்ற பவுடர்களை தயார் செய்யும் BRITISH BIOLOGICALS எனப்படும் நிறுவனத்தின் தயாரிப்பு தான் இந்த PRO PL பவுடர்.

இதைத்தான் தமிழக அரசு இலவசாமாக, பாட்டில் பாட்டிலா தராங்க.

- Dr Suriya Prakash Post

வாசித்ததில் நேசித்தது


சாக்ரடீஸை படியுங்கள்' என்ற போது நீங்கள் கிரேக்கனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'கார்ல் மார்க்ஸை படியுங்கள்'என்ற போது நீங்கள் யூதனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸை படியுங்கள்' என்றபோது நீங்கள் ஜெர்மானியனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'விளாடிமிர் லெனினை படியுங்கள்" என்றபோது நீங்கள் ரஷ்யனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'எர்னஸ்டோ சே குவேராவை படியுங்கள்' என்றபோது நீங்கள் அர்ஜென்ட்டினியனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'ஜான் லாக்கை படியுங்கள்' என்ற போது நீங்கள் சுதந்திரவாதியா? என்று கேள்வி எழுப்பவில்லை

'ஃபிடல் காஸ்ட்ரோவை படியுங்கள்' என்றபோது நீங்கள் கியூபனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'நெல்சன் மண்டேலாவை படியுங்கள்' என்ற போது நீங்கள் தென் ஆப்பிரிக்கனா? என்று கேள்வி எழுப்பவில்லை..

'ஃப்ரெட்ரிக் டக்ளஸ், ஆபிரகாம் லிங்கனை படியுங்கள்' என்ற போது நீங்கள் அமெரிக்கனா? என்று கேள்வி எழுப்பவில்லை..

'மார்ட்டின் லூதர் கிங்கை படியுங்கள்' என்ற போது நீங்கள் நீக்ரோவா? என்று கேள்வி எழுப்பவில்லை..

'சார்லஸ் டி கோளலை படியுங்கள்' என்ற போது நீங்கள் பிரெஞ்சுக்காரனா? என்று கேள்வி எழுப்பவில்லை..

'வில்லியம் வாலஸை படியுங்கள்' என்ற போது நீங்கள் ஸ்காடிஷ்ஸா?' என்று கேள்வி எழுப்பவில்லை..

'மாவோ சேதுங்கை படியுங்கள் என்ற போது நீங்கள் சீனனா? என்று கேள்வி எழுப்பவில்லை..

ஆனால்

தன் வாழ்நாளில் 46 லட்சம் புத்தகங்களை வாசித்த, உலகின் மிகப்பெரிய வடிவிலான அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த, 15000 பக்கங்களை எழுதி 55க்கும் மேற்பட்ட புத்தகங்களாக வெளியிட்ட, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் பகுத்தறிவு பொதுவுடைமையை போதித்த, காலனி ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியாவிற்காக போராடிய, சாதிமத ஆதிக்க ஒடுக்குமுறையை எதிர்த்து இந்தியாவிற்குள் போராடிய..

'பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் M.A., Ph.D., M.Sc., D.Sc., Barrister-at-Law, L.L.D., D.Litt. அவர்களை படியுங்கள்' என்றால் மட்டும்

ஏன் நீங்கள் தலித்தா?' என்ற மூர்க்கத்தனமான கேள்வி எழுகிறது?

நன்றி: முனைவா் ம. குமரவேல்
அம்பேத்கர் நினைவலைகள்


நம் எல்லோரையும் குறித்த பெரும்பாலான முக்கியத் தகவல்கள் இணையவெளியில் கசிந்து கிடக்கின்றன. உங்கள் பிறந்த தேதி, ராசி, நட்சத்திரம், உங்களது பத்தாவது மதிப்பெண் எல்லாம் சரியாகச் சொன்னாலும் போன் அழைப்புகளை நம்ப வேண்டாம்.

டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளைத் தவிர, எந்த வங்கிப் பணியாளரும் வாடிக்கையாளரை போனில் தொடர்பு கொள்ள மாட்டார்கள். அப்படியே அழைத்தாலும் பணம் அனுப்பச் சொல்லிக் கேட்கவே மாட்டார்கள். சிக்கலில் இருக்கிறேன் என்று பணம் கேட்டு நண்பரிடம் இருந்துவரும் உள்பெட்டி செய்தி அனைத்துமே மோசடிதான். 

பணம் வேண்டும் என்றால் நண்பர்கள் போனில் அழைப்பார்களே தவிர வெறும் செய்தி அனுப்ப மாட்டார்கள். 

பணம் தர வேண்டும் என செல்பேசியில் வரும் எதையும் நம்பாதீர்கள். ‘நீங்கள் வீட்டுக்கு வாருங்கள் பேசுவோம், அல்லது உங்கள் அலுவலகத்திற்கு நானே நேரில் வருகிறேன்’ எனச் சொல்லுங்கள்

ஒருவரிடமிருந்து பணத்தை உடனடியாக மோசடி செய்ய வேண்டுமெனில் அவரை யோசிக்கவிடாமல் செய்ய வேண்டும், இதற்கு இரண்டு உத்திகள் போதுமானவை. முதலாவது அவருக்கு அதீத பயம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும். 

உங்கள் வங்கிக் கணக்கு இன்றுடன் முடக்கப்படுகிறது, நீங்கள் வருமான வரி ஏமாற்றியதால் கைது நடவடிக்கை தொடங்குகிறோம், உங்கள் மகன்/மகள் விபத்தில் சிக்கிவிட்டார், போதைப் பொருள் வழக்கில் அரெஸ்ட் செய்திருக்கிறோம். உங்கள் புகைப்படம் வெளியில் வந்தால் மொத்தச் சமூகமும் சிரிக்கும் என இவையெல்லாம் முதல் உத்தி. போலி லோன் செயலிகளின் கலெக்‌ஷன் பணியாளர்கள் இதைவிட மார்பிங் புகைப்படங்களை அனுப்பி மிரட்டுவார்கள் ஆனாலும் துளி பயமின்றி, காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.

உங்களுக்கு போனஸ் வந்திருக்கிறது, பரிசு விழுந்திருக்கிறது, ஒரு ரூபாய் இன்வெஸ்ட் செய்தால் நூறு ரூபாய், க்ரிப்டோ முதலீடு,  வீடியோவை லைக் செய்தால் காசு, ஸ்க்ரீன் ஷாட் அனுப்பினால் காசு என சதுரங்க வேட்டை வகையில் அழைப்புகள் வந்தாலே உஷாராகிவிட வேண்டும்

இந்தச் சிறிய தொகையை மட்டும் செலுத்தினால் போதும், இத்தனை லட்சம் உங்களுக்குச் சொந்தம்’ என வரும் அத்தனை அழைப்புகளும் மோசடிதான்.

நம்மைப் பணக்காரனாகவோ, அதிர்ஷ்டசாலியாகவோ ஆக்குவதற்காக எந்த நிறுவனமும் தொடங்கப்படுவதில்லை என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும்.

ஒருவேளை மோசடியில் சிக்கிக்கொண்டீர்கள். முதல் முறை பணத்தை இழந்துவிட்டீர்கள் என்றால், ‘இழந்ததை மீட்கிறேன்’ என மீண்டும் மீண்டும் மோசடியாளர்களுக்குப் பணம் அனுப்புவதை நிறுத்துங்கள்.

‘சிறிய தொகை... இதைத் தந்தால் போதும், முந்தைய தொகையும் சேர்த்து கிடைத்துவிடும்’ எனத் தொடர்ந்து பணம் கேட்டுப் பெருந்தொகையை மோசடி செய்வதுதான் நவீன மோசடிகளில் மாறாமல் இருக்கும் ஓர் உளவியல் உத்தி.

முதலில் முதலீடு செய்த ஐம்பதாயிரத்தை மீட்க மீண்டும் ஒரு ஐம்பதாயிரம், இப்போது ஒரு லட்சத்தை மீட்க மீண்டும் ஒரு லட்சம் என உங்கள் கவனத்திற்கு வராமலே ஐந்து லட்சத்தை இழந்திருப்பீர்கள். சிறுகச் சிறுக சேமித்தால் எப்படிப் பெரும் பணம் சேருமோ, அதுபோலவே சிறுகச் சிறுக இழந்தாலும் பெரும் பணம் இழப்பு நேரும்,

ஆகவே மோசடியில் ஒருமுறை பணம் இழந்துவிட்டால், புகார் தந்துவிட்டு ‘போனது போனதுதான்’ எனக் காவல்துறை நடவடிக்கைக்காகக் காத்திருங்கள். மோசடியாளர்கள் மீண்டும் அழைத்துப் பணம் கேட்டு மிரட்டுவார்கள், கெஞ்சுவார்கள், கோபமூட்டுவார்கள், அவர்களது எண்ணை பிளாக் செய்துவிடுங்கள். முதல்முறை இழந்த மன வலி இருக்கத்தான் செய்யும். ஆனால், இரண்டாவது முறை, மூன்றாவது என அனுப்ப அனுப்ப, மொத்தக் கையிருப்பும் கரைந்து வாழ்வு விரக்தியாகிவிடும்.

அதுபோலவே சமூகத்தை இணைத்திருக்கக் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களே இப்போது விலகியிருக்கக் காரணமாக இருக்கின்றன. சதா நேரமும் மொபைலில் மூழ்கிக் கிடப்பதால் அருகில் இருக்கும் மனிதர்கள் தெரிவதில்லை. தெரியாத விஷயங்களுக்குப் பணம் அனுப்பும்போது, ஒரு நண்பரிடமாவது கேட்டு, அதுகுறித்த தெளிவுபெற்ற பிறகு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்.

மேலும் எத்தனை சட்டங்கள் வந்தாலும், தண்டனைகள் கடுமையானாலும், இந்த இணைய வேதாளங்கள் விக்ரமாதித்தனைப் போல நம் முதுகில் அனுதினமும் ஏறத் துடித்துக்கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் மோசடி அழைப்புகள் மூலம் உங்களைக் குறி வைப்பார்கள். அழைப்பை ஏற்ற முதல் நொடியில், ‘ஆளை விடு சாமி, இது மோசடி' என நீங்கள் இனம் கண்டு கொள்ளவேண்டும் 

விழிப்புணர்வே மோசடிகளுக்கு எதிரான ஓர் ஆயுதம்!