உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சுமா?
பாரதி தம்பி, படங்கள்: கே.குணசீலன்
'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது’ என்பார்கள். உண்மையில் எந்த உழவனும் கணக்குப் பார்ப்பது இல்லை. பச்சை நெல்லின் பால் வாசம் வீசும் மார்கழிப் பனியில், வரப்பில் நடந்தபடியே தன் குழந்தைகளைப் போல பயிர்களை நேசிக்கும் விவசாயி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் பார்ப்பான். யூரியா, டி.ஏ.பி., விலையைப் பார்ப்பான். ஒருபோதும் வரவு-செலவு கணக்குப் பார்ப்பது இல்லை. உழுவதும் உழைப்பதும் தனது பிறவிப் பெருங்கடன் என்று எண்ணியே காலம் எல்லாம் சேற்றில் நிற்கிறார்கள் விவசாயிகள். ஆனால், அது பார்க்கப்பட வேண்டிய கணக்கு. 'விவசாயிகளின் நிலை பரிதாபம்’ என்று அனுதாபப்படுவது இருக்கட்டும். அந்த அவலம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது, மும்பை பங்குச் சந்தையின் வணிகக் கணக்கு அல்ல; வங்கி அரை வருடக் கணக்கு முடிவும் அல்ல. நம் ஊருக்கும் உலகுக்கும் சோறு போடும் உழவர்களின் வாழ்க்கை குறித்த குறுக்குவெட்டுச் சித்திரம்!
தஞ்சாவூருக்கு அருகே உள்ள காசவளநாடு புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, குமார். இவர் இப்போதுதான் அறுவடையை முடித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செலவானது என்று குமார் சொல்லும் வரவு-செலவுக் கணக்கு இதோ...
ஒரு ஏக்கருக்கான உழவுக் கணக்கு
மேலே உள்ளவற்றை மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால், 24,600 ரூபாய் வருகிறது. இது செலவு. இனி, வரவுக் கணக்கைப் பார்ப்போம்.
தற்போதைய நிலையில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல்லின் விலை, 850 ரூபாய். ஒரு ஏக்கருக்கு சுமார் 36 மூட்டை என்பது அதிகபட்ச விளைச்சல். பெரும்பாலும் 30 மூட்டைகள் தான் விளைகின்றன என்றபோதிலும் நாம் 36 மூட்டைகள் என்றே எடுத்துக்கொள்வோம். இதன்படி கணக்கிட்டால், மொத்தம் 30,600 ரூபாய் வருகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் 6,000 ரூபாய் லாபம். அதாவது 24,000 ரூபாய் முதலீடு செய்து, ஐந்து மாதங்கள் கடுமையாக உழைத்தால் கிடைக்கும் லாபம் வெறும் 6,000 ரூபாய். இதை ஐந்து மாதங்களுக்கான சம்பளமாகக் கணக்கிட்டால், ஒரு மாதத்துக்கு 1,200 ரூபாய். நாள் கூலியாகக் கணக்கிட்டால், தினம் 40 ரூபாய். மத்திய அரசின் திட்டக்குழு அறிக்கையின்படி, கிராமப்புறங்களில் 28 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால், அவர்கள் ஏழை இல்லை. எனில், நம் விவசாயிகள் ஒரு நாளைக்கு 40 ரூபாய் சம்பாதிப்பதால், அவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் என்ற அரிய உண்மையை நாம் இதன் மூலம் தெரிந்துகொள்கிறோம்.
இந்த வரவு-செலவுக் கணக்கு மிகவும் பெருந்தன்மையானது என்பதால்தான், மேற்கண்ட 6,000 ரூபாய் லாபமும் கிடைத்துள்ளது. அது என்ன பெருந்தன்மை? விவசாய வேலைகளைப் பொறுத்தவரை நாற்றங்கால் சேறு அடிப்பதில் தொடங்கி, அறுவடை முடியும் வரை குடும்பத்து ஆட்கள் அத்தனை பேருமே வெவ்வேறு வகைகளில் வேலைபார்க்க வேண்டியிருக்கும். அவர்களுக்கான கூலி எதுவும் இங்கு கணக்கிடப்படவில்லை. ஏனெனில், அதை வெறுமனே 'வேலை’ என்று கருத முடியாது. பயிர், பருவம் பிடிக்கும் நாளில், வீட்டுக்கூடத்தில் அமர்ந்து சோற்றில் கை வைக்கும்போது, தாழ்வாரத்தில் ஒரு சொட்டு மழைநீர் விழுந்தால், அவன் ஈரக்குலை நடுங்கும். ஏனெனில், பால் வைக்கும் பருவத்தில் மழை பெய்தால், அனைத்தும் பாழ். எல்லாம் கருக்காயாகப் போய்விடும். செய்த செலவும் இட்ட உழைப்பும் வீண். நாள் தவறாமல் வயலுக்குச் சென்று நீர் பாய்ச்சவும் வடியவைக்கவும் வேண்டும். இதற்கு என்ன கூலி நிர்ணயிப்பது?
காவிரி நீர், பல வருடங்கள் வருவது இல்லை என்பது நமக்குத் தெரியும். அப்போதெல்லாம் விவசாயிகள் போர்வெல் வைத்திருப்பவர்களிடம் காசுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு 100 ரூபாய். சில ஊர்களில் இது நெல்லாகக் கணக்கிடப்படுகிறது. ஒரு பருவம் முழுவதும் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளலாம். அறுவடைக்குப் பின்னர் ஒரு ஏக்கருக்கு ஆறு மூட்டைகள் நெல் கொடுத்துவிட வேண்டும்.
நெற்பயிர் நேராக இருந்தால்தான், அறுவடை இயந்திரம் விறுவிறுவென அறுக்கும். ஒருவேளை காற்றடித்து பயிர்கள் வயலில் சாய்ந்துகிடந்தால், அறுக்க நேரமாகும். ஒரு ஏக்கர் அறுக்க வழக்கமாக ஒரு மணி நேரம் என்றால், பயிர் சாய்ந்திருந்தால் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். அது அறுவடைச் செலவில், இன்னும் 1,000 ரூபாயை அதிகரிக்கும்.
இவற்றையும் செலவில் சேர்த்தால், ஒரு ஏக்கர் நெல் விவசாயத்துக்கு விவசாயி, தன் கையில் இருந்து 5,000 ரூபாய் செலவழிக்கிறார் என்பதே உண்மை. இவ்வளவு இடர் நிறைந்த, லாபமற்ற தொழிலை எப்படி விவசாயிகள் இடைவிடாமல் செய்து வருகின்றனர்? தஞ்சாவூர் விவசாயி ஒருவரிடம் கேட்டால், அவர் சொல்கிறார்...
''ஒரு வெள்ளாமைக்காரன் நிலத்தைச் சும்மாப் போட்டிருந்தா, ஊர்ல அப்புறம் நம்மளை ஒரு பய மதிக்க மாட்டான். ஒரு நல்ல நாள்ல நாலு வீட்டுப் பொங்கப் பானையில அள்ளிப்போட, என் வயல்ல வெளஞ்ச அரிசி வேணும்ல தம்பி!''
No comments:
Post a Comment