Thursday, June 7, 2018

இட ஒதுக்கீடு – சில கேள்விகளும் சில பதில்களும்

நன்றி - இ.பு.ஞானப்பிரகாசன்


Godfathers of Reservation in India

குஜராத்தில் படேல் இனத்தினர் நடத்திய கலவரம் மீண்டும் இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ள இவ்வேளையில்… என நான் இந்தக் கட்டுரையைத் தொடங்கினால் அது பொய்யாகி விடும்!

இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் எப்பொழுதுமே இங்கு நடந்தபடிதான் இருக்கின்றன. இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டவர்களாகத் தங்களைக் கருதுபவர்களும் சரி, அந்தத் திட்டத்தினால் பலனடைபவர்களும் சரி, இட ஒதுக்கீட்டை இழிவான ஓர் ஏற்பாடாகத்தான் பார்க்கிறார்கள்.

இன்றுதான் என்றில்லை, இட ஒதுக்கீட்டுச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது முதலே அது இப்படிக் கொஞ்சம் கீழ்ப் பார்வையில்தான் அணுகப்படுகிறது என்பதை நம் தாத்தா-பாட்டிகள், அப்பா-அம்மாக்கள் போன்ற முந்தைய தலைமுறையினர் இது பற்றிப் பேசும்பொழுது அறியலாம்.

ஊடகம் என்பது அரசு – தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே இருந்த காலத்தில் பொதுமக்களிடம் இப்படி ஒரு கருத்து நிலவியது பெரிய பாதிப்பை சமூக அளவில் ஏற்படுத்தவில்லை (அல்லது அப்படி ஏற்பட்டது வெளியில் தெரியவில்லை). ஆனால், சமூக வலைத்தளங்கள் கோலோச்சும் இக்காலக்கட்டத்தில் ஊடகம் என்பது ஒவ்வொரு தனி ஆளுடைய கையிலும் இருக்கிறது. தனி ஒரு மனிதர் நினைத்தால் கூடத் தன் கருத்தை உலகமெங்கும் ஒரே நேரத்தில் பார்வைக்கு முடிகிற இற்றை நாளில், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வையே தீர்மானிக்கக்கூடிய இட ஒதுக்கீடு போன்ற விதயங்கள் பற்றிப் பொதுமக்களிடம் தவறான புரிதல் இருப்பது எவ்வளவு அபாயகரமானது என்பதன் கண்கூடான எடுத்துக்காட்டுதான் படேல் இனத்தினரின் கலவரம்.

சூலை மாதம் தொடங்கப்பட்ட ஓர் இயக்கம், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துடையவர்களை ஒரே மாதத்தில் திரட்டி, நாடே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவுக்கு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டத்தை அடுத்த ஆகஸ்டிலேயே நிகழ்த்த முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் சமூக வலைத்தளங்கள்.

சமூக நீதியை நிலை நாட்டுவதற்காக எத்தனையோ போராளிகளும் அறிஞர்களும் அரும்பாடுபட்டு உருவாக்கிய இட ஒதுக்கீட்டுச் சட்டம் பற்றி மொத்த சமூகமும் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதை இனியும் வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது; இது பற்றி இன்றைய படித்த இளைஞர்கள் எழுப்பும் கிடுக்கிப்பிடிக் கேள்விகளுக்குப் பதிலளித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை இனியாவது சமூக ஆர்வலர்களும், தலைவர்களும், அறிஞர் பெருமக்களும், அரசும் உணர வேண்டிய தறுவாய் இது!

சமூகத்தின் மீது அக்கறை உள்ளவன் எனும் முறையில், இட ஒதுக்கீடு பற்றிக் காலங்காலமாக எழுப்பப்பட்டு வரும் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த விளக்கங்களை இங்கு முன்வைக்கிறேன்.

கேள்வி (1): அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டிய அரசு, இட ஒதுக்கீடு எனும் பெயரில் ஒரு தரப்பினருக்கு மட்டும் சலுகைகளை வாரி வழங்குவது முறையா?

நான் பார்த்த வரையில், நம் சமூகத்தில் மிகப் பெரும்பாலானோர் இட ஒதுக்கீட்டை சலுகை என்றுதான் நினைக்கிறார்கள். அதுவே முதல்பெரும் தவறு! இட ஒதுக்கீடு என்பது சலுகையே இல்லை. அனைவருக்கும் சரிநிகராக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான நுட்பமான ஓர் ஏற்பாடு அது, அவ்வளவுதான்.

Is this Not Reservation?
ஓட்டப் போட்டி (running race) பார்த்திருக்கிறீர்களா? அதில் வீரர்களை எப்பொழுதும் நேர்க்கோட்டில் நிறுத்த மாட்டார்கள். ஒருவர் பின் ஒருவராகத்தான் நிறுத்துவார்கள். ஏன்? இப்படி நிறுத்தினால், முன்னால் நிற்பவர் முதலில் ஓடிப் போய் எல்லைக்கோட்டைத் தொட்டு விட மாட்டாரா? அப்படியானால், ஓட்டப் போட்டிகளில் முதலில் நிற்பவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது எனப் பொருளா?

அப்படி இல்லை! ஓட்டப்போட்டிகள் நடத்தப்படும் திடல்கள் (மைதானங்கள்) எப்பொழுதும் வட்ட அல்லது நீள்வட்ட வடிவில்தான் இருக்கும். ஒரு வட்டம், அதற்குள் இன்னொரு வட்டம் என வரையும்பொழுது ஒன்றை விட ஒன்று சிறிதாக இருப்பது இயல்பு. ஓட்டப்போட்டித் திடல்களும் இப்படித்தான். அவற்றில் ஓடுதடங்கள் (runways) வட்ட அல்லது நீள்வட்ட வடிவில் ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்துள்ளன.

இந்நிலையில் எல்லோரையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்திப் போட்டியை நடத்தினால், ஓட வேண்டிய தொலைவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும். திடலின் உள்வட்ட ஓடுதடத்தின் சுற்றளவு குறைவாகவும், அதற்கு அடுத்தடுத்த ஓடுதடங்களின் சுற்றளவு கூடுதலாகவும் இருப்பதால், உள்வட்டத்தில் ஓடுபவரை விட வெளிவட்டத்தில் ஓடுபவர் கூடுதலான தொலைவைக் கடக்க வேண்டியிருக்கும். இதனால்தான் ஓட்டப்போட்டிகளில் எப்பொழுதும் ஒருவர் பின் ஒருவராக வீரர்கள் நிற்க வைக்கப்படுகிறார்கள்.

இட ஒதுக்கீடு என்பதும் இப்படித்தான் நண்பர்களே!

தலைமுறை தலைமுறையாகப் படித்த குடும்பத்திலிருந்து வரும் மாணவரையும், பற்பல தலைமுறைகளாகக் கல்வி உரிமையே மறுக்கப்பட்டு இந்தத் தலைமுறையில் முதல் ஆளாகப் படிக்க வரும் மாணவரையும் எப்படி ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தி இந்த சமூகப் போட்டியில் ஓட விட முடியும்? அது எப்படி முறையாகும்? அதனால்தான் இட ஒதுக்கீடு எனும் பெயரால் சிலர் சற்று முன்னே நிறுத்தப்படுகிறார்கள்.

நெஞ்சைத் தொட்டுச் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே! முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் அன்றும் இன்றும் இடையிலும் தொடர்ந்து கல்வி கற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். வெள்ளையர்கள் வருகைக்கு முன்பான தமிழ் அரசர்கள் காலத்தில் இருந்த குருகுலக் கல்வி முறையிலாகட்டும், பிரிட்டிஷ் இந்தியா காலத்தின் திண்ணைப் பள்ளிக்கூடக் காலத்திலாகட்டும், விடுதலை பெற்ற இந்தியாவிலாகட்டும், முற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கல்வி பயின்றுதான் வருகிறார்கள். அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து படிக்க வருகிற மாணவர்களுக்கு மரபணு வாயிலாகவே கல்வியறிவு ஓரளவுக்கு உண்டு. படிப்பு என்பது அவர்கள் குருதியில் (blood) ஊறியது. தவிரவும், படிப்பில் ஏதாவது ஐயங்கள் எழுந்தால் கற்பிக்க அவர்களுக்கு வீட்டிலேயே ஆட்கள் உண்டு. படிக்கிற பிள்ளைக்கு எப்படிப்பட்ட சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்கிற புரிதல் அவர்கள் குடும்பத்தினருக்கு உண்டு. கல்வி என்பது வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதை உணர்ந்த பெற்றோர்கள் அவர்களுக்கு உண்டு. வீட்டிலும் வெளியிலும் அவர்கள் பழகும் இடங்களில் படித்த சமூகச் சூழல் அவர்களுக்கு உண்டு. என்ன படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும், எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவெல்லாம் வழிகாட்ட நிறைய பேர் அவர்களுக்கு உண்டு.

இதுவே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை எடுத்துக் கொண்டால், பெரும்பாலும் அவர்களின் பெற்றோர்கள் படித்தவர்களாக இல்லை. படிப்பில் ஏதாவது ஐயம் ஏற்பட்டால் தனியாகச் செலவு செய்து மாலை வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய நிலை. சரியாகப் படிக்காவிட்டால், பெரியவர்களை மதித்து நடக்காவிட்டால் எந்நேரமும் படிப்பு நிறுத்தப்படுகிற சூழல்.

இப்படி மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் கொண்ட இருவேறு பின்னணிகளிலிருந்து வருகிற இந்த மாணவர்களில், கல்விக்கு உகந்த சூழல் இல்லாத இடத்திலிருந்து வரும் மாணவர் எடுக்கும் ஐம்பது மதிப்பெண்ணும், முழுக்க முழுக்கக் கல்வி சார்ந்த பின்னணியிலிருந்து வருகிற மாணவர் எடுக்கும் நூறு மதிப்பெண்ணும் ஒன்றா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! உண்மையில், உவப்பில்லாத (adverse) பின்னணியிலிருந்து வரும் மாணவர் எடுக்கும் அந்த ஐம்பது மதிப்பெண், நல்ல பின்னணியிலிருந்து வரும் மாணவர் எடுக்கிற நூறு மதிப்பெண்ணை விடப் பெரியது இல்லையா? அப்படிப்பட்ட மாணவர்களுக்கு மற்றவர்களை விட மதிப்பெண் தகுதியைக் (mark eligibility) குறைத்து வரையறுப்பது எப்படித் தவறாகும்?

அப்பாவோ அம்மாவோ படித்தவர்களாக இல்லாத நிலையில் ஆங்கிலம், கணிதம், இந்தி என ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியே சிறப்பு வகுப்புகளுக்குச் செலவழித்துப் படிக்க வேண்டியிருக்கிற இட ஒதுக்கீட்டு வகுப்பினரிடம், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை விடக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் கட்டணத்தைக் குறைத்து வாங்குவது எப்படி சலுகையாகும்?

சரியான சூழல் இல்லாததால் படிக்க முடியாமல் தேர்வுகளில் தோல்வியுறுவது, கல்வி இடைநிறுத்தப்படுவது போன்ற பல காரணங்களால் உரிய வயதுக்குள் படிப்பை முடிக்க முடியாத அவர்களுக்காக வயது வரம்பைத் (age limit) தளர்த்துவது எப்படிப் பாகுபாடு (discrimination) ஆகும்?

இப்பொழுது, இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு சொல்லுங்கள்! இட ஒதுக்கீடு என்பது சலுகையா?

கேள்வி (2): ஏழைகள் எல்லா சாதிகளிலும்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்க, குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது ஏன்?

இப்படிக் கேட்கும் நாம் முதலில் ஒரு விதயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்! இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தற்பொழுது கடைப்பிடிக்கப்பட்டு வருவது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக் கொள்கைதானே தவிர, பொருளாதார அடிப்படையிலானது இல்லை. காரணம், இன்னின்ன சாதிகளைச் சேர்ந்தவர்கள் படிக்கக்கூடாது, இன்னின்ன சாதிகளைச் சேர்ந்தவர்கள் இன்னின்ன தொழில்களை மட்டும்தான் செய்ய வேண்டும் என்று நூற்றாண்டுக் கணக்காக இருந்து வந்த, வருகிற அடக்குமுறைகள் அனைத்தும் சாதியை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டமைக்கப்பட்டனவே தவிர, பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இல்லை. ஏழை என்கிற காரணத்தால் யாருக்கும் கல்வி மறுக்கப்படவில்லை, குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர் என்கிற காரணத்தைக் காட்டித்தான் மறுக்கப்பட்டது. எனவேதான், அதே சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. இங்கு மட்டுமில்லை, தென் ஆப்பிரிக்கா, மலேசியா என நிறம், இனம், பாலினம் போன்ற பிறப்பு அடிப்படையிலான காரணங்களைக் காட்டி எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ அப்படிப்பட்ட நாடுகளிலெல்லாம் பாதிக்கப்பட்ட சமூகத்தினரை மேலே கொண்டு வர அவர்களுக்கெனத் தனியே ஒதுக்கீடு வழங்குவது வழக்கமான ஒன்றுதான்.

கேள்வி (3): இட ஒதுக்கீடு பெறும் சாதிகளிலும் வசதி படைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்; முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களிலும் ஏழைகள் பலர் இருக்கிறார்கள். அப்படியிருக்க, இட ஒதுக்கீட்டை சாதி அடிப்படையில் செயல்படுத்தி வசதி படைத்தவர்களும் அதன் பலனைப் பெறும்படியும், உண்மையாக அரசு உதவி தேவைப்படும் ஏழைகள் பலருக்கு அது கிடைக்காமல் போகும்படியும் செய்வது எப்படி முறையாகும்?

இட ஒதுக்கீடு பெறும் சாதிகளைச் சேர்ந்தவர்களில் வசதியுள்ளவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் எத்தனை பேர் படித்தவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி.

முதல் தலைமுறை மாணவர்கள், படிப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை மேலே பார்த்தோம். அவை அனைத்தும் கல்வி உரிமை மறுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கும் பொருந்தும்தானே? எனில், இதில் ஏழை – பணக்கார வேறுபாடு எங்கிருந்து வந்தது?

இட ஒதுக்கீடு என்பது ஏழைகளைக் கைதூக்கி விடுவதற்கானதாக இருந்தால், ‘பிற்படுத்தப்பட்டோர் (BC)’ எனும் ஒரு பிரிவை இட ஒதுக்கீட்டின் கீழ்க் கொண்டு வர வேண்டிய தேவையே இல்லையே. ஏனெனில், இந்தப் பிரிவில் வருகிற பெரும்பாலோர் நாடார், நாயக்கர், கவுண்டர், மணியக்காரர் என ஆண்ட சாதியைச் சேர்ந்தவர்கள்தான். தலைமுறை தலைமுறையாகப் பண்ணையார்களாகவும், சமீன்தார்களாகவும், ஊரை ஆளும் தலைவர்களாகவும் இருந்த, இருக்கிற இவர்கள் யாரும் வசதியில்லாதவர்கள் கிடையாது. அப்படியிருந்தும், இவர்களையும் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்க்கக் காரணம், இவர்களும் படிக்காதவர்கள்தான் என்பதால்தான்.

ஆக, முன்பே கூறியபடி, இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டமே, குறிப்பிட்ட சாதியில் பிறந்து விட்ட ஒரே காரணத்துக்காகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட, குறிப்பிட்ட தொழில் தவிர மற்றவற்றைச் செய்யக்கூடாது எனத் தடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியும், விரும்பிய பணியைச் செய்யும் உரிமையும் கிடைப்பதற்காகத்தான். அப்படிப் பாதிக்கப்பட்ட மக்கள் ஏழைகளிலும் இருக்கிறார்கள், பணக்காரர்களிலும் இருக்கிறார்கள் எனும்பொழுது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டுச் சட்டம் செயல்படவில்லை எனக் குறை சொல்வதும், அவ்வாறு மாற்றியமைக்கக் கோருவதும் எந்த விதத்தில் நியாயம் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

கேள்வி (4): இப்படி வகுப்புவாரியாகக் கல்வி இடங்களையும் பணியிடங்களையும் வழங்குவதால் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த எத்தனையோ பேர் திறமையும், தகுதியும் இருந்தும் புறக்கணிக்கப்படுகிறார்களே?

உண்மைதான். ஆனால், அப்படிப் புறக்கணிக்கப்படுவதால் அவர்கள் யாருக்கும் மேற்கொண்டு படிப்போ, வேலைவாய்ப்போ கிடைக்காமல் போய்விடுவதில்லை. அரசுக் கல்வியோ, அரசுப் பணியோ கிடைக்காமல் போனாலும் தனியாரிடமிருந்து அவர்கள் தங்களுக்குண்டான வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டு விடுகிறார்கள். காரணம், மற்ற சாதிகளைச் சேர்ந்தவர்களை விட அவர்கள் பெறும் மதிப்பெண் கூடுதல். ஆனால், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை விடக் குறைந்த மதிப்பெண் பெறும் மற்ற சாதி மாணவர்களுக்கு அரசின் இட ஒதுக்கீடும் இல்லாவிட்டால் அவர்கள் நிலைமை என்னாகும்? எந்தத் தனியார் நிறுவனம் அவர்களை ஏற்றுக் கொள்ள முன்வரும்? இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இந்தியாவில் ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், அரசின் மிக உயர்ந்த பதவிகளிலும், சமூகத்தின் மதிப்பு மிகுந்த இடங்களிலும் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் இன்றும் நிறைய பேர் இருக்கவே இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டு முறை உண்மையிலேயே முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களைப் பாதிப்பதாக இருந்தால், அந்த சமூகத்தில் இருந்து இத்தனை பேர் இந்தப் பதவிகளுக்கு வந்திருக்க முடியுமா என்பதைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்!

அதே போல, இத்தனை ஆண்டுகளாக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டும் இன்னும் அவர்களில் பெரும்பாலோர் கல்வி பெறாதவர்களாகவும், பல விதங்களிலும் பின்தங்கியவர்களாகவும்தான் இருக்கிறார்கள். சமூகத்தில் ஒரு சாரார் இப்படி அடிப்படை நல்வாழ்வைக் கூட எட்டிப் பிடிக்க முடியாத நிலைமையில் இருக்கும்பொழுது, சாதிய அமைப்பு முறையை உருவாக்கி அவர்களின் இந்த நிலைமைக்குக் காரணமாக இருந்த முற்பட்ட வகுப்பினர், அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களுக்கு மட்டும் தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய இடம் தொடர்ந்து எல்லாக் காலக்கட்டங்களிலும் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மனிதத்தன்மையா?

கேள்வி (5): வகுப்புவாரி இட ஒதுக்கீடு எனும் பெயரில் இப்படித் திறமையான மாணவர்கள் எல்லாரையும் ஒதுக்கிவிட்டுத் திறமையில்லாதவர்களைப் பணியில் அமர்த்தினால் நாடு எப்படி முன்னேறும்?

குறைவான மதிப்பெண் பெறுபவர்கள் எல்லாரும் முட்டாள்களோ, கூடுதலான மதிப்பெண் பெறுபவர்கள் எல்லாரும் மேதாவிகளோ கிடையாது. அப்படியே இருந்தாலும், திறமை உள்ளவர்கள் எல்லாரும் தங்கள் பணியில் முழுத்திறனையும் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு எந்த உறுதிப்பாடும் (guarantee) இல்லை.

என்னதான் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையாக இருப்பினும் குறைந்தளவு (minimum) தேர்ச்சியாவது பெற்றவர்களுக்குத்தான் இடங்கள் வழங்கப்படுகின்றனவே தவிர, எல்லாருக்கும் தூக்கிக் கொடுத்து விடப்படுவதில்லை. குறிப்பிட்ட ஒரு பணியைத் திறம்படச் செய்ய என்னென்ன தகுதிகளெல்லாம் தேவைப்படுமோ அவைதான் அந்தப் பணிக்கான குறைந்தளவுத் தகுதியாக வரையறுக்கப்பட்டிருக்கும் என்பது தெளிவு. ஆகவே, போதுமான தகுதியைப் பெற்ற பிறகுதான் எல்லோரும் அவரவர் இருக்கைகளை அடைந்திருக்கிறார்கள், அடைகிறார்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இட ஒதுக்கீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே கூறப்பட்டு வரும் இந்தக் குற்றச்சாட்டைத் தவிடுபொடியாக்கும் விதத்தில் ஆய்வு முடிவு ஒன்றும் வெளிவந்திருக்கிறது.

மிச்சிகன் பல்கலைக்கழகம், தில்லிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பொருளாதாரப் பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில், இட ஒதுக்கீட்டால் திறமையோ உற்பத்தித் திறனோ பாதிக்கப்படுவதில்லை என்பது உறுதியாகி உள்ளது. சொல்லப் போனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் உயர் பதவிகளில் அமர்த்தப்படும்பொழுது தங்கள் திறமையை வெளிக்காட்டுவதற்காக மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுவதாகவும் ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர். (மேலும் விவரங்களுக்கு: http://goo.gl/yMZrp3).

தன்னிடம் இருக்கும் மனித ஆற்றல் முழுவதையும் பயன்படுத்துவதன் மூலம்தான் ஒரு சமூகம் முழு வேகத்தோடு முன்னேற முடியுமே ஒழிய, மேல் மட்டத்தில் இருக்கும் மிகச் சிலருக்கு மட்டும் வாய்ப்புக் கொடுத்து, மற்றவர்கள் எப்படியோ போகட்டும் என விட்டுவிட்டால் அது நடக்காது. சலுகையோ, முன்னுரிமையோ, நெறித் தளர்வோ (relaxation) எந்தப் பெயரில் வேண்டுமானாலும் குறிப்பிட்டுக் கொள்ளுங்கள். ஆனால், அப்படி ஏதாவது ஒன்றை வழங்கியாவது அனைவரையும் படித்தவர்களாகவும், துறைசார் திறமையுள்ளவர்களாகவும் மாற்றுவதுதான் மனித ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தும் ஒரே வழி. ஆக, இட ஒதுக்கீடு என்பது நாட்டின் முன்னேற்றத்தை விட்டுக் கொடுத்து மக்களை வளர்ச்சி அடையச் செய்வது இல்லை. நாட்டை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் மற்ற எல்லாத் திட்டங்களையும் போலத்தான் அதுவும். எனவே, இட ஒதுக்கீட்டின் மூலம் நாடு முன்னேறாமல் போகிறது என்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது.

கேள்வி (6): அந்தக் காலத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் தீவிரமாக இருந்தன என்பதற்காக இன்றும் இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமா?

இந்தக் காலத்தில் மட்டும் என்ன வாழ்கிறது? இன்றைக்கும் நம் சமூகத்தில் இரட்டைச் சுடுகாட்டு முறை இருக்கத்தான் செய்கிறது. இன்றும் ஊர்ப்புறங்களில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கத்தான்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் வளர்க்கும் நாய் தங்கள் எல்லைக்குள் நுழையக்கூடாது எனப் பட்டப் பகலில் வெட்ட வெளிப்படையாகப் பலகை மாட்டியிருக்கும் கிராமங்கள் இன்றும்தான் இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் எவ்வளவுதான் முன்னேறி விட்டாலும் படிப்பு, பணம், செல்வாக்கு எனப் பன்மடங்கு உயர்ந்து விட்டாலும் அதனால் அவர் முற்பட்ட சாதியினரின் வீட்டுக்குப் போய்க் கதவு தட்டிப் பெண் கேட்டு விட முடியாது.

'நாட்டாமை' படம் பார்த்திருப்பீர்கள். அதில், பெரிய வணிகராகவும், ஆளுநர் முதலானோர் மதிக்கும் அதிகாரமும் செல்வாக்கும் உடையவராகவும் உள்ள ஜெய்கணேஷ் தன் ஊரின் நாட்டாமையான சரத்குமாரிடம் கைகட்டிக் குனிந்து பணிந்து பேசும் காட்சி ஒன்று வரும். அதுதான் இன்றும் இந்திய கிராமங்களின் நிலைமை.

சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த அளவுக்கு சாதி வேறுபாடு இல்லாவிட்டாலும், இங்கும் பொதுமக்கள் வாழும் பகுதியும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியான சேரிகளும் தனித் தனியாகப் பிரித்துத்தான் வைக்கப்பட்டுள்ளன என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று!

பன்னாட்டு நிறுவனங்களிலும், தகவல்தொழில்நுட்பப் பெருநிறுவனங்களிலும் கூட உள்ளுக்குள் சாதிப் பாகுபாடு மிக நாசுக்காகக் கடைப்பிடிக்கப்படத்தான் செய்கிறது; தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் அதனால் மனம் குமுறத்தான் செய்கிறார்கள்.

ஆக, இன்னும் எதுவும் அவ்வளவு மாறிவிடவில்லை நண்பர்களே! பார்க்கப் போனால், முன்பை விட நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகியிருக்கிறது.

‘கௌரவக் கொலை’ என்கிற பெயரில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் கொடுமை இதற்கு முன் தமிழ்நாடு காணாத பேரிழிவு! தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை மணந்து கொண்டதற்காகப் பெற்ற தாயே மகளைக் கதறக் கதற நஞ்சு கொடுத்துக் கொல்வது, இதற்கென ஓர் அமைப்பே நடத்திக் கொண்டு, முற்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணிடம் தாழ்த்தப்பட்ட சமூகத்து இளைஞர் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் கூடத் தூக்கிக் கொண்டு போய்த் தலையை வெட்டிவிட்டுத் தண்டவாளத்தில் வீசுவது போன்றவையெல்லாம் அம்பேத்கர் - பெரியார் காலத்தில் கூட நடந்ததில்லை.

இவை ஒருபுறம் இருக்க, கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய மட்டங்களில் பார்க்கும்பொழுது, இத்தனை நீண்ட காலமாக இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்தியும் அந்தப் பிரிவைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலோர் இன்றும் அடிமட்டத் தொழில்களைச் செய்பவர்களாகவும், மிகவும் கடைமட்ட வாழ்க்கை முறையில் உழல்பவர்களாகவும், சேரி - குப்பம் போன்ற மிக மிக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வாழ்பவர்களாகவுமே இருக்கிறார்கள். இந்த சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களிலும் பெரும்பான்மையானோர் முதல் தலைமுறை மாணவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஆக, எப்படிப் பார்த்தாலும் இட ஒதுக்கீட்டுக்குத் தேவை இன்றும் இருக்கிறது என்பதே உண்மை!

கேள்வி (7): இத்தனை ஆண்டுகளாக இட ஒதுக்கீடு வழங்கியும் பெரும்பான்மையினர் இன்றும் படிக்காதவர்களாகவும், பின்தங்கியவர்களாகவும்தான் இருக்கிறார்கள் எனில், அந்தத் திட்டம் தோல்வியடைந்து விட்டதாகத்தானே பொருள்? அப்புறம் ஏன் அதைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்?

ஒரு காலத்தில் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் அரசு ஊழியர், ஆசிரியர் வேடம் என்றாலே பஞ்சகச்ச வேட்டியோ, நாமமோதான் ஒப்பனை (make-up). எண்பதுகள் வரைக்கும் அப்படித்தான்.

ஆனால், இன்றைக்கு அரசு அலுவலகங்களில் சென்று பார்த்தால் தெரியும், எத்தனை விதமான சாதி - சமயங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு கலந்து பணிபுரிகிறார்கள் என்பது. அந்த அளவுக்குப் பல்லாயிரக்கணக்கானோர் இட ஒதுக்கீட்டின் மூலம் முன்னுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட சாதிகளின் மக்கள்தொகைப்படி பார்க்கும்பொழுது முன்னுக்கு வந்தவர்களின் எண்ணிக்கையை விட வராதவர்களின் எண்ணிக்கை கூடுதல், அவ்வளவுதான். அதற்காக, இட ஒதுக்கீட்டால் பலன் இல்லை என்பதில்லை.

கேள்வி (8): எவ்வளவுதான் படித்தாலும், உயர்ந்தாலும் அதனால் ஒருவரின் சாதி மாறிவிடுவதில்லை, குறிப்பிட்ட சாதி சார்ந்த அடக்குமுறைகளுக்கு அவரும் ஆளாகத்தான் வேண்டியிருக்கிறது எனும்பொழுது இட ஒதுக்கீடு எதற்காக?

பொதுமக்கள் மட்டுமில்லை அரசு, இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் தலைவர்கள் போன்றோர் கூடத் தவறு செய்யும் இடம் இதுதான்.

இட ஒதுக்கீடு என்பது சாதியத்தையும், அதன் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்காக என்பதுதான் பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால், அது பிழை! சாதி காரணமாக மறுக்கப்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய இரண்டே இரண்டு உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இட ஒதுக்கீடு. அந்த வகையில் அது சரியாகத்தான் பலனளித்து வருகிறது. தொடர்ந்து அதற்கான தேவையும் இருந்தே வருகிறது. ஆனால், இட ஒதுக்கீடு எனும் ஒன்றை மட்டுமே வைத்து சாதி அடிப்படையிலான எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து விட முடியும் என நினைத்தால் அது மிகப் பெரிய மூடநம்பிக்கை!

கேள்வி (9): மற்ற சாதிகளுக்கெல்லாம் இட ஒதுக்கீடு வழங்குவது போல முற்பட்ட சாதிகளுக்கும் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்கி விட்டால் இப்படி எந்தச் சர்ச்சைக்குமே இடமில்லாமல் போகும் இல்லையா?

மற்ற சாதியினரின் இன்றைய கீழ் நிலைக்குக் காரணமே முற்பட்ட சாதியினர்தான். அப்படியிருக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் முன்னுரிமையை அவர்களுடைய பாதிப்புக்குக் காரணமானவர்களுக்கும் எப்படி வழங்க முடியும்?

மேலும், பல தலைமுறைகளாகக் கல்வியே கற்காதவர்கள் என்பதால்தான் குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மதிப்பெண், வயது, கட்டணம் என எல்லாவற்றிலும் தளர்வு (relaxation) வழங்கப்படுகிறது எனும்பொழுது தலைமுறை தலைமுறையாகப் படித்த சாதிகளிலிருந்து வருகிற முற்பட்டோருக்கு எந்தக் காரணத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அளிக்க முடியும்?


கேள்வி (10): பின்தங்கிய மக்கள் முன்னுக்கு வர வேண்டும்தான். ஆனால், அதற்காக முற்பட்ட சாதியினர் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?

இன்று இருக்கும் இட ஒதுக்கீட்டு முறை அமலுக்கு வரும் முன், சாதியைக் காரணம் காட்டிப் பெரும்பாலான மக்களைக் கல்விப் போட்டியிலிருந்து அறவே ஒதுக்கிவிட்டு, கல்வியைத் தங்களுக்கு மட்டுமே உரிய தனிச் சொத்தாகவே பல நூற்றாண்டுகளாகத் துய்த்து (அனுபவித்து) வந்தனர் முற்பட்ட பிரிவினர். அப்படியோர் அட்டூழியமான இட ஒதுக்கீட்டின் பலனை அத்தனை காலமாகப் பெற்று வந்தவர்கள், அதைச் சரி செய்வதற்கான இந்த இட ஒதுக்கீட்டுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியது கடமை இல்லையா?


Equality Vs. Reservation

எனக்குத் தெரிந்து இட ஒதுக்கீட்டுக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகள் இவ்வளவுதான்.

சுருக்கமாகச் சொன்னால், பிறப்பைக் காரணம் காட்டிப் பல தலைமுறைகளாக உரிமை மறுக்கப்பட்டவர்களுக்குத் திடீரென அந்த உரிமைகளைத் திருப்பி வழங்கும்பொழுது, அவற்றைப் பெற்றுக் கொண்டு மற்றவர்களோடு சரிநிகராகப் போட்டியிட அவர்களால் முடியாது என்பதால் அவர்களுக்காக நெறிமுறைகளையும், வரம்புகளையும் ஓரளவு தளர்த்திக் கொண்டு முன்னுரிமை அளிப்பதற்குப் பெயர்தான் இட ஒதுக்கீடு. சிலருக்கு முன்னுரிமை தருவது என ஆகி விட்டாலே அதனால் சிலருக்குப் பாதிப்பும் ஏற்படத்தான் செய்யும். அது தவிர்க்க முடியாதது. ஆனால், அதனால் ஒரேயடியாக அவர்களின் வாழ்க்கைத்தரமே பாதிக்கப்பட்டு விடுவதில்லை எனும்பொழுது தங்களோடு சேர்ந்து வாழ்கிற சக மனிதர்களான தாழ்த்தப்பட்டோருக்காக முற்பட்டோர் விட்டுக் கொடுப்பதே மனிதத்தன்மை.

இவ்வளவுக்குப் பிறகும், இட ஒதுக்கீடு தவறானது என யாருக்காவது தோன்றினால், அவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி!
இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் நீங்கள் அப்படியொரு சட்டம் கொண்டு வருவதற்குக் காரணமான சாதி அமைப்பைத் தவறு என ஏற்றுக்கொண்டு அதிலிருந்து வெளியே வர முன்வருவீர்களா?
ஏன் இப்படிக் கேட்கிறேன் என்றால், சாதி காரணமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களை முன்னுக்குக் கொண்டு வரத்தான் இட ஒதுக்கீடே. ஆக, சாதி ஒழிந்து விட்டாலே இட ஒதுக்கீட்டுக்கான தேவையும் இல்லாமல் போகும். எனவே, முற்பட்ட வகுப்பினர் தங்களுக்கு சாதி தேவையில்லை எனப் புறக்கணித்து, சாதிய அமைப்பிலிருந்து வெளியே வந்தால் அவர்களைப் பின்பற்றி மற்றவர்களும் வெளியேறுவார்கள். அதன் தொடர்ச்சியாக, சில தலைமுறைகளில் சாதி என்பதே முற்றிலும் ஒழிந்து போகும். அதற்குள் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி எல்லா சாதியினரும் முன்னேறியும் விடுவார்கள் என்பதால், இட ஒதுக்கீட்டையும் எடுத்து விடலாம்.

ஆனால், இட ஒதுக்கீட்டைத் தவறு எனக் கூறும் முற்பட்டவர்கள் அதற்கான தேவையை ஏற்படுத்தும் சாதிய அமைப்பிலிருந்து மட்டும் வெளியே வருவதில்லை. சாதி தவறுதான், அதனால் ஏற்றத்தாழ்வு ஏற்படுவது உண்மைதான் என்பவற்றைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்காத அவர்கள் அப்படிப்பட்ட சாதி அமைப்பிலிருந்து வெளிவருவதற்கு மட்டும் விரும்புவதில்லை. இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவதாகக் கருதுபவர்களே தங்கள் சாதிய அடையாளத்தை உதற முன்வராதபொழுது இட ஒதுக்கீட்டால் பலன் பெறுபவர்கள் எப்படி அதை விட்டு வெளிவருவார்கள்?

இப்படி எல்லோரும் சாதி முத்திரையைத் தங்கள் நெற்றியில் சுமந்தபடியே திரிந்து கொண்டிருந்தால் சாதி உயிர் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும். சாதி உயிரோடு இருக்கும் வரை அதன் காரணமாக விளையும் ஏற்றத்தாழ்வுகளும் இருந்து கொண்டேதான் இருக்கும். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடும் இருக்கத்தான் செய்யும்.

ஆகவே, முற்பட்ட சாதியினரே புரிந்து கொள்ளுங்கள்! இட ஒதுக்கீட்டை அப்புறப்படுத்துவது அரசின் கையிலோ, அதனால் பலனடைபவர்களின் கையிலோ, வேறு யார் கையிலுமோ இல்லை. உங்கள் கையில்தான் இருக்கிறது! அதன் பின் உங்கள் விருப்பம்! 

Saturday, May 19, 2018

சிவப்பு  பாடல்கள் 


இந்திய திரை இசையில் இது ஒரு புதிய முயற்சியே!
முழுக்க முழுக்க சிவப்பு இசையை ஹிப் ஹாப்  பாணியில் 
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார் 
ஒரு சாதாரண இசை ரசிகனால் 
இந்த பாடல்கள் 
கம்யூனிஸ்ட் கட்சி, மகஇக, தமுஎச, மாவோயிஸ்ட் ஆகியோரின் இன்ன பிற இயக்கங்களின் பிரச்சார பாடல்களாக புரிந்து கொள்ளப்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

ஆனால் 
கறுப்பர் இன மக்கள் தங்கள் இருப்பை எதிர்ப்பை காட்ட 
கலையை  கையிலும் குரலிலும் காட்டி 
ஒரு புதிய இசை வடிவத்தை (ஹிப்ஹாப்) கொண்டுவந்தனர் 
இன்றுவரை அது உலகெங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது 

அதே போல திரைக்கலையை
மக்கள்  விடுதலைக்கான  மகத்தான ஊடகமாக 
பயன்படுத்துவர்களால்தான் 
இது போன்ற ஒரு இசைத்தொகுப்பை 
வெளியிட முடியும் 
அதனால் இது ஒரு புதிய முயற்சியே 

எனக்கு இந்த பாடல்களை கேட்கும் போது 
கவிஞர் இன்குலாப் எழுதிய பாடல்களாகவே தோன்றியது 
பரவாயில்லை இன்குலாப் இன்னும் சாகவில்லை...
எப்படியோ யார்மூலமாகவோ 
தன்னை கொஞ்சம் மிச்சம் விட்டே சென்றுள்ளார் 

ஒரு காதல் பாடலைத்தவிர மற்ற அனைத்து பாடலும் 
சிவப்பும், உழைப்பும், உரிமையும் பெருங்குரலெடுத்து
நாடி நரம்புகளில் பரவி ரீங்காரமிடுகிறது.

ஒரு காதல் பாடலைத்தவிர 
பெரிய ஞானமுள்ள இசை எதுவும் எந்த பாடலிலும் 
தெரியாவிட்டாலும்.
சொல்லவந்த கருத்தை தூக்கி சுமக்கவே 
இசை நடந்து வருகிறது. 

ஞானமுள்ள இசை இல்லையென்றாலும் 
"யார்வச்சது யார்வச்சது ஓன் சட்டமடா 
இங்கு வாழ்வென்பதும் சாவென்பது நெலமட்டுமடா "

பாடல் அருமை அருமை அருமையிலும் அருமை 
இந்த பாடலில் வரும் டோலாக்கும், தபேலாவும் 
அடி பின்னி பெடலெடுக்கிறது...
அந்த பாடகரின் குரல் அதைவிட 
வழுக்கி உயர்ந்து நெகிழ்ந்து தவழ்ந்து உரத்து 
ஓங்கி ஒலிக்கிறது...
இந்த பாட்டில் பக்தி பாடலைப்போல 
மகுடிக்கு ஆடும் பாம்பைப்போல 
பஜன் பாடல் போலவே ஒலிக்கிறது 
ஆம் 
அநீதிக்கு எதிரான சிந்தனையும் பக்தி போல்தான் 
போர்க்குரலும் பஜனை போல்தான் 
தலைக்குள் ரீங்கரித்துக்கொண்டே இருக்கும்  
ஒலித்துக்கொண்டே இருக்கும் 
வார்த்தைகளாய் வாய்வழியே வெடித்துக்கொண்டே இருக்கும் 

நிக்கல் நிக்கல் பாடல் 
படத்தில் ஸ்டெர்லைட் காப்பர் திட்டத்தை 
நினைவு படுத்தினால் நன்றாக இருக்கும் என்று 
ஒரு நப்பாசை.

இந்த படம் எப்படியிருந்தாலும் இருக்கட்டும் 
இந்த பாடல் காட்சிகளில் ரஜினி அவர்கள் நடித்தாலே போதும் 
அவர் உடல்மொழியும் பாணியும் புதிய பரிமாணத்தை 
நமக்கு காட்டும் என்பது நிச்சயம் 

கடைசியாக 
மகேந்திரன் படங்களில் 
மற்றும் வெகு குறைவான 
பழைய  படங்களில் 
தளபதி படத்தில் 
கபாலியில் 
ஒரு நல்ல நடிகராக ரஜினியை பார்த்தது.

ஏனெனில் 
நம் ரசனையால் 
சீரழிக்கப்பட்ட 
சீரழிந்த 
ஒரு நல்ல கலைஞன் 
ரஜினிகாந்த் 

மீண்டு வா 
மீண்டும் வா 
கலைஞனே 
ரஜினிகாந்தே

Friday, April 20, 2018

காவிகள்......கொடும்பாவிகள் 

பள்ளிகளில் பாலியல் கல்வி (Sex Education) கொண்டுவர முதலில் எதிர்ப்பு தெரிவிப்பது இந்த ஹிந்துத்துவா சக்திகள்தான், காதலர் தினம் வந்தால் காதலர்களை விரட்டி விரட்டி  அடித்து துவைப்பதும் இதே காவிக்கபோதிகள்தான், 
ஏன்னா புள்ளங்க கெட்டு போய்ருமாம், இவர்களுக்கு பாலியல் கல்வின்னா. பள்ளிக்கூடத்துல ஆம்பளையும் பொம்பளையும் சேர்ரதப்பத்தி சொல்லிகுடுப்பாய்ங்கன்ற நெனப்பு.  
காதலிச்சால் சாதிகள் ஒழிஞ்சுடும் அது அது ஆழியக்கூடாதுல 

ஆமாஆமா புள்ளங்க் கெட்டுத்தா போய்ரும்.  
ஏன்னா வெள்ளக்காரங்க எப்ப பாத்தாலும் முத்தங்குடுத்துகிட்டு யார்வேணாலும் யார்கூடவேணாலும் படுத்துகிட்டு திரியுறவிங்கனு தான நெனக்க பழகிருக்கோம்.. 
நம்ம ஒழுங்கானவங்கனு 
சொல்வதெல்லாம் உண்மைலிருந்து
சமையல் மந்திரம்வரைக்கும்...தெரிஞ்சுக்கலாம். 
அமைதிப்படை... இப்டித்தான் இலங்கையில நமது சகோதிரிகளை மகள்களை செஞ்சதுன்னா இப்ப வரைக்கும் நம்ம பயலுகளே நம்ப மாட்டேங்குறாய்ங்க

இன்னொரு பாப்பாவை இப்டி செஞ்சாலும் என்னா செய்ய போறோம் 

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமைல ங்கொய்யால ஒரு கமிஷன் அமச்சு... ஒம்பாதியரம் பக்கத்துக்கு அறிக்கை தயார் பண்ணி... 
அதை சகாயம் அய்யா கொடுத்த 30ஆயிரம் பக்க அறிக்கை போல 
புட்டத்தை தொடைக்க வச்சுக்க போறோம்.  

மதத்தையும் சாதியையும் புடிச்சு தொங்கிகொண்டிருக்கும் 
எங்க நாடு இந்து யா வாழ்க!வாழ்க!

தேம்பி அழுகிறது தேசம்!

ஓவியங்கள்: ஹாசிப்கான், ரவி
நன்றி: ஆனந்த விகடன் 
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க, ‘செல்வமகள் சேமிப்புத்திட்டம்’   தொடங்கிய நரேந்திர மோடியின் ஆட்சியில்தான் இந்தியாவின் இரு மாநிலங்களில், இரு சிறுமிகள் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு சம்பவத்திலும் ஏதோ ஒருவகையில் பா.ஜ.க-வினர் சம்பந்தப்பட்டிருப்பது, தேசமெங்கும் ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் எழுப்பியிருக்கிறது. 

 எட்டு வயது காஷ்மீர் சிறுமியின் மரணம், ஒவ்வொருவர் மனசாட்சியையும் உலுக்கியிருக்கிறது. ஆனால், குற்றம் இழைத்தவர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் போன மனசாட்சியற்றவர்களோ, இப்போது  அந்தச் சிறுமியின் பெற்றோர் சார்பாக வாதிடும் வழக்கறிஞர் தீபிகா எஸ்.ராஜாவாட்டையும் வன்புணர்வு செய்துவிடுவோம் என்று அச்சுறுத்தியிருக்கிறார்கள்.  

 ஜனவரி 10-ம் தேதி மதியம் 12:30 மணிக்கு , எப்போதும்போல மேய்ச்சல் நிலங்களுக்கு அந்தச் சிறுமியோடு சென்ற குதிரைகள் மாலை நான்கு மணி வாக்கில் வீடு திரும்பின. ஆனால், அழைத்துச் சென்ற சிறுமி மட்டும் வீடு திரும்பவேயில்லை. அது அவளுக்கு நன்கு பரிச்சயமான காடுதான். ஆனாலும் அவள் தொலைந்துபோனாள்.

பொழுது கழிந்த பின்னும், குழந்தையைக் காணவில்லையே என்ற பதற்றத்தில் காட்டில் சல்லடை போட்டுத் தேடியும் அவளது பெற்றோரால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘யாரேனும் குழந்தையைக் கடத்தியிருக்கக்கூடும்’ என்று கருதியவர்கள் புகார் அளிக்கச் சென்றபோது காவல்துறை அதிகாரி முன்ஷி, புகாரைப் பதிவு செய்யாமல் இழுத்தடித்தார். இரண்டு நாள்களுக்குப் பிறகு, 12-ம் தேதிதான் புகார் பதிவுசெய்யப்பட்டது.

அதற்குப்பிறகும், காவல்துறை மெத்தனமாகத்தான் தேடியிருக்கிறது. ஜக்தீஷ்ராஜ்  என்ற பழங்குடி இளைஞர் தன் குதிரையைத் தேடிக் காட்டுக்குள் சென்று வந்தபிறகு கொடுத்த தகவலின்பேரில்தான் 17ம் தேதி வாக்கில் கடுமையான காயங்களோடு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள் அந்தச் சிறுமி. கத்வா மாவட்ட மருத்துவமனையில்  பிரேதப் பரிசோதனை முடித்து, குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சௌதா என்ற இறுதி நிகழ்வின்போது, சிறுமியின் மரணத்துக்காக நீதி கேட்டுக் குரலெழுப்பியவர்கள் மீது தடியடி நடத்தவும் தயங்கவில்லை காவல்துறை.

கிராமத்துப் பெண் ஒருவர், ‘சாஞ்சிராம்  பட்வாரி என்பவரின் வீட்டிலிருந்து சிறு குழந்தையின் அழுகுரல் கேட்டபடியே இருந்தது’ என்ற தகவலை அந்தச் சிறுமியின் தாயாரிடம் கூற, விசாரணை வேறு திசையில் திரும்பியது.காவல்துறையின் மோப்ப நாய், சாஞ்சிராம் பட்வாரி என்பவரின் மாட்டுக்கொட்டிலுக்கே சென்றது.

சாஞ்சிராம் பட்வாரி ஓய்வுபெற்ற அரசு அதிகாரி மற்றும் தேவிஸ்தான் கோயிலின் நிர்வாகி. காவல்துறை அதிகாரிகள் தீபக் கஜூரியா, சுரீந்தர்குமார் உள்ளிட்ட எட்டுப் பேர் இந்தக் குற்றத்தை இழைத்ததாகக் கைது செய்யப்பட்டார்கள். இந்தக் கொடுமை நடந்தது தேவிஸ்தான் கோயிலில். ஐந்து நாள்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி, காட்டில் தூக்கிவீசப்பட்டிருக்கிறாள்.

இந்தக் கொடூரத்துக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டியதுதான் மனித அறம். ஆனால், மத அடையாளத்தை முன்னிறுத்தி,  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ‘இந்து ஏக்தா மஞ்ச்’ என்ற இந்துத்துவ அமைப்பு பேரணி நடத்தியது. பேரணியில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள்  பா.ஜ.க-வைச் சேர்ந்த காஷ்மீர் வனத்துறை அமைச்சர் சௌத்ரி லால் சிங், தொழில்துறை அமைச்சர் சி.பி.கங்கா உள்ளிட்டவர்கள். 

ஆணாதிக்கத் திமிர், அதிகார போதை, மதவாத அரசியல் என்று பல விஷயங்கள் இந்த அநீதி ஆதரவின் பின்னே உள்ளது. அத்துடன் பழங்குடி மக்களுக்கு எதிரான மனநிலையும் இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவரான சாஞ்சி ராம், பழங்குடியினரை அச்சுறுத்தி அவர்கள் இனி ஊருக்குள் வராதபடி செய்ய விரும்பினார் என்று முதல் தகவல் அறிக்கையிலேயே குறிப்பிடப் பட்டிருக்கிறது.

இறந்துபோன அந்தச் சிறுமி பகர்வால் என்னும் இஸ்லாமிய நாடோடிப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். வட இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் பெருவாரியாக உள்ள குஜ்ஜார் என்ற சமூகத்திலிருந்து கிளைத்தவர்கள். பஞ்சத்திலிருந்து தப்பிக்கவும், மேய்ச்சல் நிலத்தைத் தேடியும் இடம்பெயர்ந்து மலைப்பகுதிக்கு வந்த இந்தச் சமூகத்தினர், இடம்பெயர்வதை இயல்பாகக் கொண்டுள்ளனர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொடர்ச்சியாகவே இந்தியா முழுவதிலும் பழங்குடியினர் காடுகளிலிருந்து அகற்றப்படும் சூழலில், காஷ்மீர்க் காடுகளிலிருந்து பகர்வால் இனத்தவரை வெளியேற்றும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

இந்தியா முழுக்கப் பழங்குடிகளுக்கென இருக்கும் ‘வனவுரிமைப் பாதுகாப்புச் சட்டம் 2006’ சிறப்பு அந்தஸ்து காரணமாகக் காஷ்மீரில் செல்லுபடியாகாது. காஷ்மீரத்துப் பழங்குடிகள் இந்தச் சட்டத்தை ஜம்முவுக்கும் நீட்டிக்க வேண்டுமென நீண்டகாலமாகக் கோரிக்கை வைத்துவருகிறார்கள். ‘அப்படி நீட்டிக்க வேண்டுமானால், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று பா.ஜ.க கூறுகிறது.  

எப்படி இருந்தபோதும் குரலற்றவர்களாக, கோரிக்கைகள் கவனிக்கப்படாதவர்களாக, புறக்கணிப்பின் வெம்மையில் தள்ளப்பட்டவர்களாக இந்த எளிய மக்கள் இருக்கிறார்கள். சிறுமியின் இறுதி அடக்கம் நடந்த கிராமத்துக்கு, குடிநீர் வினியோகம் ஒரு வாரத்துக்கு நிறுத்தப்பட்டது. கால்நடைகள் தண்ணீரின்றி வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அதிகார வர்க்கம் முடிந்தவரை தன் பலத்தைப் பிரயோகித்துப் பார்த்தபின்னும், நீதியின் வெளிச்சம் கசிந்துதான், இப்போது இந்தச் சம்பவம் தேசம் முழுவதும் விவாதமாய் மாறியிருக்கிறது. 

இன்று அந்தச் சிறுமி இயற்கையோடு கலந்து புல்லாகவும் பனியாகவும் மாறிவிட்டாலும்  நீதிக்கான  குரல் எழுப்ப வேண்டியது, இந்தியாவில் வாழும் எல்லாச் சிறுமிகளுக்காகவும்தான்.

இது காஷ்மீர் அவலம் என்றால் உத்தரப்பிரதேசத்துத் துயரமும் நெஞ்சம் கனக்கச் செய்வது. 

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் ஒரு சிறுமி, உதவி கேட்டு  பா.ஜ.க எம்.எல்.ஏவான குல்தீப் சிங்கிடம் சென்றிருக்கிறார். உதவி கேட்டு வந்த சிறுமியை எம்.எல்.ஏ மற்றும் சகோதரர் உட்பட சிலர் கூட்டாகச் சேர்ந்து வன்புணர்வு செய்திருக்கிறார்கள். தான் வன்புணர்வு செய்யப்பட்டோம் என்று அந்தச் சிறுமியும் அவர் குடும்பமும் குறுகிப்போய் மூலையில் உட்கார்ந்துவிடவில்லை. செய்தவர்கள் செல்வாக்குள்ளவர்கள் என்றாலும் சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையில் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்திருக்கிறார்கள்.  புகாரைத் திரும்பப் பெறச் சொல்லி அந்தச் சிறுமியின் தந்தையை எம்.எல்.ஏ-வின் அடியாட்கள் தாக்கியிருக்கிறார்கள்.

இதையும் புகாராகக் காவல்நிலையத்தில் கூறியிருக்கிறார்கள். பல நாள்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இருந்தாலும் அந்தக் குடும்பம் சளைக்கவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டுக்கு முன் சென்று நீதி கேட்டுப் போராடுகிறார். ஒருகட்டத்தில் சலிப்படைந்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். உடனே காவல்துறையினரால் அந்தச் சிறுமி அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்.

அதன்பிறகு நடந்ததுதான் அநீதியின் உச்சம்.  அச்சிறுமியின் தந்தை மீது, பழைய வழக்கு ஒன்றின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து,  போலீஸ் காவலில் அழைத்துச் செல்கிறார்கள்  காவல்துறையினர். போலீஸ் காவலில் இருந்த அந்தச் சிறுமியின் தந்தை இறந்துபோனதால், இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தான் பாதிக்கப்பட்டு,  தந்தையையும் இழந்த அந்தச் சிறுமி செய்த தவறு உதவி கேட்டு எம்.எல்.ஏ - விடம் சென்றது மட்டுமே. 

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சமீபத்தில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் சிங், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், நீதித்துறை மீதும் கடவுள் மீதும் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் கூறியிருக்கிறார். காதலர் தினத்தை எதிர்ப்பது, ‘கலாசாரத்தைக் காப்போம்’ என்று முழங்கி கேளிக்கை விடுதிகளில் நுழைந்து பெண்களை அடித்து உதைப்பது, திரைப்படங்களுக்கு மிரட்டல் விடுப்பது என்று கலாசாரக் காவலர்களாய்த் தங்களை முன்னிறுத்துக் கொள்ளும் பா.ஜ.க-வைச் சேர்ந்த  எம்.எல்.ஏ ஒருவரே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதும், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. அமைச்சர்களே ஊர்வலம் போவதும், ‘இதுதானா நீங்கள் காப்பாற்ற விரும்பும் கலாசாரம்?’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றன.

2010-ல் பா.ஜ.க எம்.எல்.ஏ த்விவேதியால் தான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக ஒரு பெண் குற்றம் சாட்டி, யோகி ஆதித்யநாத்துக்கு எழுதிய கடிதம் உ.பி. மீடியாக்களில் பரபரப்பாக  விவாதிக்கப்பட்டது, பிரச்னையின் தீவிரத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. 

 காஷ்மீரிலும் உத்தரப்பிரதேசத்திலும் மட்டும் அநீதியின் கரங்கள் தீண்டி நின்றுவிடவில்லை. தொடர்ச்சியாகவே இந்தியாவின் பல பகுதிகளிலும் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது.

சாதி, மதம், அரசியல் எல்லாவற்றையும் தாண்டி, இந்தச் சிறுமிகள் செய்த தவறு இந்தியாவில் பிறந்ததும், பெண் குழந்தையாக இருப்பதும்தானா?


ந்தியாவில் உள்ள 30% சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். அதாவது, தற்போது பதவியிலிருக்கும் 1581 பேர்மீது  கிரிமினல்  வழக்குகள் இருக்கின்றன. அதில், 3 எம்.பி, 48 எம்.எல்.ஏ என 51 பேர் பெண்கள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள். அதில் 4 பேர் மீது வன்புணர்ச்சி வழக்குகள் உள்ளன.

பா.ஜ.க 34 வழக்குகளோடு முன்னணியில் இருக்க, சிவசேனை 7 பேருடன் இரண்டாவது இடத்திலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் 6 இடங்களோடு மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.

இந்தியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி...

 2016 - 1,06,958 குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் இந்தியா முழுவதும் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் 222 ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்றவை.

  2016 - 1775 குழந்தைகள் கொலை செய்யப்பட்டி ருக்கிறார்கள்.

காஷ்மீரில் பதிவான குழந்தைகள் கொலை மட்டும் - 6.

கடத்தப்பட்ட குழந்தைகள்: 

இந்தியா முழுவதும் - 54,723.  

ஜம்மு -காஷ்மீர் - 168.

Tuesday, April 17, 2018

நியூட்ரினோ - ஏற்கலாமா... எதிர்க்கலாமா?

இரா.கலைச்செல்வன், படம்: வீ.சக்தி அருணகிரி

காலை நேரம். சூரிய ஒளி ஜன்னல் வழி ஊடுருவுகிறது. கோடுகளாய் விழும் அந்தச்  சூரிய ஒளிக்கதிரில் பல லட்சம் துகள்கள் தெரியும். இந்தக் காட்சியை அறிவியலோடு பொருத்திப் பார்த்தால் நியூட்ரினோவை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த உலகில் இருக்கும் எதுவும் எல்லாமும் அணுக்களால் ஆனவை. முதலில் ‘அணு’தான் உலகிலேயே சிறிய துகள் என்று நம்பப்பட்டது. பின்னர், அணுவினுள் புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய மூன்று துகள்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.  உல்ஃப்கேங்க் பாலி என்ற விஞ்ஞானி அணுவில் துகள்கள் மட்டுமல்ல, நியூட்ரினோ என்ற அணு உள்துகள்களும் (Sub Atomic Particles) இருக்கின்றன என்று கண்டுபிடித்தார்.  பூமியின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவிலும் கிட்டத்தட்ட 60 லட்சம் நியூட்ரினோ துகள்கள் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன.

உலகின் மிகச் சிறிய துகள் நியூட்ரினோதான் என்பதால் ஒளியின் வேகத்தில், சமயத்தில் ஒளியைவிடவும் வேகமாக ஊடுருவிச் செல்லும். நியூட்ரினோவைப் பிடித்து ஆராய்ச்சி செய்தால் பல அறிவியல் முடிச்சுகளை அவிழ்க்கலாமே என்ற எண்ணத்தில், உலகின் முக்கிய வல்லரசு நாடுகள் பலவும் நியூட்ரினோ ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன. 

இந்தியாவிலும் ஒரு நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க இந்தியா முழுக்கச் சுற்றியது ஆராய்ச்சியாளர் குழு. இமயமலையில் தொடங்கி, குஜராத், கோவா எனப் பல இடங்களைப் பரிசீலித்து இறுதியாக நீலகிரி மாவட்டத்தின் சிங்காரா பகுதியைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், அங்கு முதுமலைப் புலிகள் காப்பகம் இருப்பதால், அனுமதி மறுக்கப்பட்டது.  இறுதியாகத் தங்கள் ஆராய்ச்சிக்குத் தேவையான சார்னோகைட் பாறைகள் (Charnockite Rock) உள்ள தேனி மாவட்டம், பொட்டிபுரம் பகுதியிலிருக்கும் அம்பரப்பர் மலையைத் தேர்ந்தெடுத்தார்கள். அங்குதான், நியூட்ரினோ ஆராய்ச்சி மையமான  ஐ.என்.ஓ (India-based Neutrino Observatory) அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. 

என்னதான் திட்டம்?

அம்பரப்பர் மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ தூரத்துக்குக் குடைந்து, இரண்டு லாரிகள் ஒரே சமயத்தில் செல்லும் அளவிற்கான அகலத்தோடும், 20 மீட்டர் உயரத்திலும் ஒரு பெரிய குகை அமைக்கப்படும்.  மலையின் நடுப்பகுதியில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். ஆய்வுக்கூடத்தின் ஒரு பகுதியில், 51 ஆயிரம் டன் எடைகொண்ட,  உலகின் மிகப்பெரிய காந்தத்தால் ஆன ‘அயர்ன் கலோரிமீட்டர்’ (Iron Calorimeter) எனும் நியூட்ரினோ உணர்கருவி (Nutrino Detector) அமைக்கப்படும். நியூட்ரினோக்களை இந்தத் தடுப்புகளின் உதவியோடு தடுத்து நிறுத்தி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.  இதுதான் திட்டத்தின் அடிப்படை. 

ஐ.என்.ஓ அமைக்க 2011-ம் ஆண்டு ஜூன் 1 அன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது. ‘சூழலியலுக்குப் பெரும் சீர்கேட்டை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது’ என்று, முதன்முதலாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்தார் வைகோ. இந்தத் திட்டம் குறித்த ஆவணங்களைச் சூழலியலாளர்கள் ஆராயத் தொடங்கியபோது, முதல் கட்டத்திலேயே அவர்களுக்கான அதிர்ச்சி காத்திருந்தது. இந்தத் திட்டத்தைப் பிரிவு 1 (E) கீழ் விண்ணப்பித்திருந்தது ஐ.என்.ஓ. அதாவது, அணு மற்றும் அணுக்கழிவு மேலாண்மைப் பிரிவு.  இந்தியா முழுவதிலுமிருந்து அணுக்கழிவு களை இங்கு கொண்டு வந்து கொட்டவிருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டுப் போராடத் தொடங்கினார்கள். ஆனால், அது எழுத்தர் செய்த பிழை (Clerical Error) என்று சாதாரணமாகக் கூறிக் கடந்தது ஐ.என்.ஓ. இருந்தும் பிரச்னை தீரவில்லை.

“நாங்கள் தேச நலனுக்கோ, அறிவியல் வளர்ச்சிக்கோ எதிராகக் கண்ணை மூடிக் கொண்டு இந்தத் திட்டத்தை எதிர்க்கவில்லை. திட்டம் குறித்த விஷயங்களை வெளிப்படையாக மத்திய அரசு சொல்ல மறுப்பதால், எங்களுக்கு எழும் சந்தேகங்களைத் தொடர்ந்து கேள்வி களாக எழுப்புகிறோம்” என்று தொடர்ந்து பேசத் தொடங்கினார் ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன். 

“நியூட்ரினோவை ஏதோ ஓர் அபாயகரமான பொருள் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இந்தத் திட்டத்தின் நோக்கம்தான் எங்களுக்குப் பல கேள்விகளையும் பயத்தையும் ஏற்படுத்துகிறது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமாவோடு ‘உயர் ஆற்றல் இயற்பியல்’ (High Energy Physics) ஆராய்ச்சி ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பொருட்டு, 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மொத்தம் 6 திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் ஐ. என். ஓ. இத்தனை ஆண்டுகளில் மற்ற 5 திட்டங்களும் இன்னும் அறிக்கை யாகக்கூடத் தயாராகவில்லை. ஆனால், நியூட்ரினோவிற்கு மட்டும் அரசு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது?

ஐ.என்.ஓ-வின் திட்ட அறிக்கையில், முதல் சில வருடங்களுக்கு இயற்கையான நியூட்ரினோக்கள்  (Natural Neutrinos) ஆராய்ச்சி செய்யப்படும். பின்னர், செயற்கை நியூட்ரினோக்கள் (Artificial Lab Made Neutrinos) ஆராய்ச்சி செய்யப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

ஃபெர்மி போன்ற வெளிநாட்டு ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து, நியூட்ரினோக்கள் கற்றைகளாக (Muon Colliders) நம்  ஆராய்ச்சிக் கூடத்திற்கு அனுப்பப்படும். அந்த நியூட்ரினோக்களைப் பிடித்து ஆராய்ச்சி செய்து, அந்த முடிவுகளை நாம் அந்த ஆராய்ச்சிக் கூடங்களுக்குக் கொடுக்க வேண்டும். இயற்கையான நியூட்ரினோ குறித்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஆனால், இந்த ‘மியூவான் கொலைடர்ஸ்’ (Muon Colliders) கதிரியக்கத் தன்மைக்கொண்டது. ஓர் ஆராய்ச்சிக்கான மூலப்பொருள் கதிரியக்கத் தன்மைகொண்டதாக இருக்கும்போது, அதை ஆராய்ச்சி செய்யும் கூடத்திலும் அதன் தாக்கம் ஏதாவது ஏற்படுமோ என்கிற பயம் இருக்கவே செய்கிறது. எல்லாவற்றிற்கும்மேல், இந்த ஃபெர்மி லேப் உடனான ஒப்பந்தம் குறித்த எந்தத் தகவல்களையுமே மத்திய அரசோ, ஐ. என். ஓவோ எங்குமே குறிப்பிடவில்லை. ஃபெர்மி ஆராய்ச்சிக் கூடத்தின் இணையதளத்திலிருந்து இந்தத் தகவல்களை நாங்கள் பெற்றோம். இந்த விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைக்க வேண்டிய காரணம் என்னவிருக்கிறது?

அம்பரப்பர் மலைப் பகுதியைச் சுற்றி வைகை, முல்லைப் பெரியாறு உள்பட 12 நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே அணைகளால் அழுத்தப்பட்டிருக்கும் இந்தப் பகுதியில், இப்படியான ஒரு சுரங்கத்தைத் தோண்டும்போது எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று ஆராய்ச்சியாளர்கள் வாய்மொழியாகச் சொல்வதைக் காட்டிலும், தகுந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறோம். காரணம், சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியின் க்ரான் சாசோ (Gran Sasso) எனும் நியூட்ரினோ மையத்தில் இதுபோன்ற ஒரு சுரங்கத்தைக் கட்டும்போது, நீரியியல் பூகம்பம் ஏற்பட்டது” என்று எச்சரிக்கிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன். 

இது குறித்து, மும்பையில் இருக்கும் ஐ.என்.ஓ திட்ட இயக்குநர் விவேக் டத்தாரைத் தொடர்பு கொண்டு பேசினேன்.

“இது நம் தேசத்திற்கே பெருமையைத் தேடித் தரும் திட்டம். இது தமிழ்நாட்டில் வருவதற்குத் தமிழர்கள் பெருமைகொள்ள வேண்டும். இன்றைக்கு இருக்கும் நவீன  தொழில்நுட்பங்களைக் கொண்டு ஒரே ஒரு சுரங்கத்தை இங்கு அமைக்கவிருக்கிறோம். சின்ன அதிர்வலைகளைக் கூட அது ஏற்படுத்தாது. 

நாங்கள் எதையும் இங்கு மாசுபடுத்தப் போவதுமில்லை. வெட்டப்படும் கற்களில் 10% தான் நாங்கள் எடுத்துக்கொள்வோம். 90% தமிழக அரசுக்குத்தான். அதை அவர்கள் விற்று, வருமானம் ஈட்டிக்கொள்ளலாம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதே அமெரிக்காவிற்காகத் தான் என்பதுபோலெல்லாம் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். அமெரிக்க நிறுவனங்களோடு கூட்டு வைத்திருப்பது உண்மைதான். ஓர் அறிவியல் ஆராய்ச்சி என்றால், பல உலக நாடுகளோடு இணைந்து வேலை செய்யத்தான் வேண்டும். இதெல்லாம் பெரிய பிரச்னையா? 

அணு ஆயுதங்களை நியூட்ரினோக்கள்மூலம் கண்டறிந்து அதை வெடிக்கவும் செயலிழக்கவும் வைக்க முடியும். இது ஆபத்தானது என்றும் பிரசாரம் செய்கிறார்கள். அந்தக் கருத்து பொய்யில்லை. ஆனால், அது இன்று வரை ஒரு தியரி அளவில்தான் இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.இப்படி எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டேயிருந்தால் இங்கு எதையுமே செய்யாமல், வளராமல் அப்படியே இருக்க வேண்டியதுதான்...” என்றார் கோபத்துடன். 

அறிவியலின் பயணம் மேல்நோக்கி முன்னேறலாம். ஆனால் அது அறத்துக்கு எதிர்த்தி சையில் அமைந்துவிடக்கூடாது. நியூட்ரினோ திட்டத்தில் வெளிப்படைத்தன்மை ஏன் இல்லை என்ற கேள்விகள்தான் சந்தேகங்களையும் போராட்டங்களையும் இன்னும் வலுவாக்குகிறது.

Tuesday, April 10, 2018

நேர் கோணல்

கற்பனை: கொஸ்டின்குமார்
நன்றி: ஆனந்த விகடன் 

நிருபர்: சார் வணக்கம். ‘மத்திய அரசு தமிழகத்துக்குப் போதுமான நிதி வழங்கலை’னு கோபப்பட்டுச் சொல்லி யிருந்தீங்களே?

ஓ.பன்னீர்செல்வம்: கோபப் பட்டா? சத்தமா சொல்லி டாதீங்க சார். சொன்னேன்னு சொல்லுங்க, அவ்ளோதான்!

நிருபர்: அப்போ உங்களுக்குக் கோபம் வராதா சார்?

ஓ.பன்னீர்செல்வம்: யார்கிட்ட என்ன கேள்வி கேட்டீங்க, கோபமாவது, எனக்காவது?

நிருபர்: அப்போ சசிகலாவை எதிர்த்துக் கோபப் பட்டீங்களே?
ஓ.பன்னீர்செல்வம்: அது தர்மயுத்தம். ‘தர்மயுத்தம்னா கோபப்படணும்’னு சொன்னாங்க.

நிருபர்: யார் சார் சொன்னது?
ஓ.பன்னீர்செல்வம் : அது...அதுவந்து... நடப்பது அம்மா ஆட்சி!

நிருபர்: என் கேள்விக்கு இது பதில் கிடையாதே?

ஓ.பன்னீர்செல்வம் : பதில் சொல்ல முடியாத கேள்வி களுக்கு எல்லாம் இனிமே இதுதான் பதில்.

நிருபர்: மோடி சொல்லிதான் கட்சியை இணைச்சீங்களாமே?

ஓ.பன்னீர்செல்வம்: யார் சொன்னது?

நிருபர்: நீங்கதான் சார் சொன்னீங்க.

ஓ.பன்னீர்செல்வம்: ஓ, நானேதான் சொன்னேனா! அப்போ சரியாதான் இருக்கும்.

நிருபர்: அப்போ உங்க தர்மயுத்தத்தை வழிநடத்தினது மோடிதானே?

ஓ.பன்னீர்செல்வம்: இருக்கலாம். யுத்தம்னா யாராவது வழிநடத்திதான் ஆகணும். மகாபாரத யுத்தத்தைக் கிருஷ்ணன்தான் வழிநடத்தினார்.

நிருபர்: உங்க கட்சிப் பிரச்னையை இன்னொரு கட்சிக்காரர் தீர்க்கிறது தப்பில்லையா?

ஓ.பன்னீர்செல்வம் : யுத்தத்தில சரி, தப்புன்னு எதுவும் கிடையாது.
நிருபர்: தப்பு, சரி எதுவும் இல்லாத யுத்தத்துக்கு தர்ம யுத்தம்னு ஏன் பேர் வெச்சீங்க?

ஓ.பன்னீர்செல்வம்: அது... அதுவந்து... நடப்பது அம்மா ஆட்சி!
நிருபர்: ரைட்டு! ஆமா, இந்த தர்மயுத்தம் காவிரிப் பிரச்னைக்காக எல்லாம் பண்ண மாட்டீங்களா?

ஓ.பன்னீர்செல்வம்: அதான் உண்ணாவிரதம் இருக்கப் போறோமே?

நிருபர்: அது எதிர்க் கட்சிக்காரங்க, எம்.எல்.ஏவே இல்லாத கட்சிக் காரங்ககூட இருப்பாங்க. உங்க எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் ராஜினாமா பண்ணலாமே?

ஓ.பன்னீர்செல்வம்: எங்களுக்கு ராஜினாமால்லாம் பண்ணத் தெரியாது. யாராவது பதவியைப் பிடுங்கினாத்தான் உண்டு. அப்படித்தானே சசிகலா குடும்பம் என் பதவியைப் பிடுங்கிச்சு?

நிருபர்: முதல்வர் பதவியைக் கொடுத்ததும் சசிகலாதானே?

ஓ.பன்னீர்செல்வம்: அதுக்கு முன்னால அம்மா ரெண்டுதடவை என்னை முதல்வர் ஆக்கினாங்களே, ஆனா நான்தான் முதல்வர்னு அப்போ நானே சொல்ல மாட்டேன்!

நிருபர்: அதான் ஊருக்கே தெரியுமே, அப்போகூட ஜெயலலிதாவைத்தானே ‘மக்களின் முதல்வர்’னு சொன்னாங்க. அவங்க மக்களுக்கு முதல்வர்னா நீங்க யாருக்கு முதல்வர்?

ஓ.பன்னீர்செல்வம்: அவங்க மக்களோட முதல்வர், நான் அரசாங்கத்துக்கு முதல்வர்!

நிருபர்: அப்போ மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தம் இல்லையா?

ஓ.பன்னீர்செல்வம்: எங்க ஆட்சியைப் பார்த்துமா இப்படி ஒரு கேள்வி?

நிருபர்: ஆமா, நீங்க பொசுக்கு பொசுக்குன்னு ஜெயலலிதா காலில் விழுந்தீங்களே? ஏன், சசிகலா காலில்கூட விழுந்தீங்களே?

ஓ.பன்னீர்செல்வம்: காலில் மட்டுமா விழுந்தேன்? கார் டயர்ல விழுந்தேன், ஹெலி காப்டரைப் பார்த்துக் கும்பிடு போட்டேன். கட்சிப் பணி களைக் குறைச்சு மதிப்பிடாதீங்க சார்!

நிருபர்: இதெல்லாம் பெருமையா, கடமை, கடமை. ஆமா இப்படிக் காலில் விழுறதை நினைச்சு நீங்க வெட்கப்பட்டதில்லையா?
ஓ.பன்னீர்செல்வம்: வெட்கமா, அதெல்லாம் வேற டிபார்ட்மென்ட். ‘பதவி வரும்போது பணிவு வர வேண்டும்’னு எம்.ஜி.ஆரே பாடியிருக்கார்!

நிருபர்: அடுத்த வரியில ‘துணிவு வரவேண்டும்’னும் பாடியிருக்காரே?
ஓ.பன்னீர்செல்வம் : அதுவேற பாடியிருக்காரா? முதல் வரியில சொன்னதை எடுத்துக்கிட்டாதான் வாழ்க்கையில முன்னேற முடியும்.

நிருபர்: அதுசரி, ஜெயலலிதா ஜெயிலுக்குப் போனப்போ அழுதுகிட்டே பதவியேற்றீங்க. அவங்க இறந்தபிறகு பதவி யேற்றப்போ சிரிச்சுக் கிட்டே பதவியேற்றீங்களே?

ஓ.பன்னீர்செல்வம்: ‘உள்ளே அழுகிறேன், வெளியே சிரிக்கிறேன்’னு எம்.ஜி.ஆரே பாடியிருக்கார் சார். 

நிருபர்: அது சிவாஜி பாட்டாச்சே?

ஓ.பன்னீர்செல்வம்: அதுவேறயா? ஸாரி டங் ஸ்லிப் ஆயிடுச்சு. ‘சிலர் சிரிப்பார், சிலர் அழுவார். நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்’னு எம்.ஜி.ஆர். பாடியிருக்கிறாரே?

நிருபர்: அதுவும் சிவாஜி பாட்டுதான் சார்.

ஓ.பன்னீர்செல்வம்: அது...அதுவந்து... நடப்பது அம்மா ஆட்சி!

நிருபர்: நான் கரெக்டான எம்.ஜி.ஆர் பாட்டு சொல்லவா சார்? ‘ சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!’

(கோபம் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் ஆழ்கிறார்)