Monday, February 3, 2025

ரஜினிகாந்தும்  தமிழக அரசு மருத்துவமனையும் 

திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு , Aortic aneursym ஏற்பட்டது, அதற்கான சிகிச்சை முடிந்து நேற்று நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் .

அதைப்பார்த்த பலரும் " காசு இருப்பவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு போலாம்.

காசு இல்லாத ஏழைகள் அரசு மருத்துவமனைக்குத் தான் போகனும். அங்கே இந்த நோயை கண்டுபிடிப்பார்களா ? சரியான சிகிச்சை கிடைக்குமா ?  என்று கமெண்ட் செய்தனர்.

நேற்று மதியம் ஒரு முதியவர், காய்ச்சல் சளி இருமலுக்கு சிகிச்சை பெற என் கிளினிக் வந்திருந்தார்.

கையில் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சைப்பெற்ற நோட்டை வைத்திருந்தார் .

அதை வாங்கி பார்த்ததில் , எனக்கு பயங்கர ஆச்சர்யம்.

Diagnosis : Aortic aneursym with hematoma என்று எழுதியிருந்தது.

திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்பட்ட அதே aortic aneurysm என்ற நோயை, இந்த முதியவருக்கு திருவாரூர் அரசு மருத்துவமனையில் diagnosis செய்து, சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அனைத்து வகையான நோய்களும் diagnose செய்யப்படும். அதற்குரிய சிறப்பு சிகிச்சையும் வழங்கப்படும்.

2014ல் நான் கிளினிக் தொடங்கிய சமயத்தில் Vildagliptin 50mg என்ற சுகர் மாத்திரையின் விலை ₹25 .

தற்போது அதே மாத்திரை, வடுவூர் PHC ( அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்) வாங்கி சாப்பிடுவதாக ஒரு பாட்டி தனது நோட்டைக் காட்டினார். அதில் VILDAGLIPTIN 50MG என்று எழுதியிருந்தது.

கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் PRO PL என்ற பவுடரின் விலை ₹695.

B PROTIN, D PROTIN போன்ற உலக பிரசித்தி பெற்ற பவுடர்களை தயார் செய்யும் BRITISH BIOLOGICALS எனப்படும் நிறுவனத்தின் தயாரிப்பு தான் இந்த PRO PL பவுடர்.

இதைத்தான் தமிழக அரசு இலவசாமாக, பாட்டில் பாட்டிலா தராங்க.

- Dr Suriya Prakash Post

வாசித்ததில் நேசித்தது


சாக்ரடீஸை படியுங்கள்' என்ற போது நீங்கள் கிரேக்கனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'கார்ல் மார்க்ஸை படியுங்கள்'என்ற போது நீங்கள் யூதனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸை படியுங்கள்' என்றபோது நீங்கள் ஜெர்மானியனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'விளாடிமிர் லெனினை படியுங்கள்" என்றபோது நீங்கள் ரஷ்யனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'எர்னஸ்டோ சே குவேராவை படியுங்கள்' என்றபோது நீங்கள் அர்ஜென்ட்டினியனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'ஜான் லாக்கை படியுங்கள்' என்ற போது நீங்கள் சுதந்திரவாதியா? என்று கேள்வி எழுப்பவில்லை

'ஃபிடல் காஸ்ட்ரோவை படியுங்கள்' என்றபோது நீங்கள் கியூபனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'நெல்சன் மண்டேலாவை படியுங்கள்' என்ற போது நீங்கள் தென் ஆப்பிரிக்கனா? என்று கேள்வி எழுப்பவில்லை..

'ஃப்ரெட்ரிக் டக்ளஸ், ஆபிரகாம் லிங்கனை படியுங்கள்' என்ற போது நீங்கள் அமெரிக்கனா? என்று கேள்வி எழுப்பவில்லை..

'மார்ட்டின் லூதர் கிங்கை படியுங்கள்' என்ற போது நீங்கள் நீக்ரோவா? என்று கேள்வி எழுப்பவில்லை..

'சார்லஸ் டி கோளலை படியுங்கள்' என்ற போது நீங்கள் பிரெஞ்சுக்காரனா? என்று கேள்வி எழுப்பவில்லை..

'வில்லியம் வாலஸை படியுங்கள்' என்ற போது நீங்கள் ஸ்காடிஷ்ஸா?' என்று கேள்வி எழுப்பவில்லை..

'மாவோ சேதுங்கை படியுங்கள் என்ற போது நீங்கள் சீனனா? என்று கேள்வி எழுப்பவில்லை..

ஆனால்

தன் வாழ்நாளில் 46 லட்சம் புத்தகங்களை வாசித்த, உலகின் மிகப்பெரிய வடிவிலான அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த, 15000 பக்கங்களை எழுதி 55க்கும் மேற்பட்ட புத்தகங்களாக வெளியிட்ட, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் பகுத்தறிவு பொதுவுடைமையை போதித்த, காலனி ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியாவிற்காக போராடிய, சாதிமத ஆதிக்க ஒடுக்குமுறையை எதிர்த்து இந்தியாவிற்குள் போராடிய..

'பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் M.A., Ph.D., M.Sc., D.Sc., Barrister-at-Law, L.L.D., D.Litt. அவர்களை படியுங்கள்' என்றால் மட்டும்

ஏன் நீங்கள் தலித்தா?' என்ற மூர்க்கத்தனமான கேள்வி எழுகிறது?

நன்றி: முனைவா் ம. குமரவேல்
அம்பேத்கர் நினைவலைகள்


நம் எல்லோரையும் குறித்த பெரும்பாலான முக்கியத் தகவல்கள் இணையவெளியில் கசிந்து கிடக்கின்றன. உங்கள் பிறந்த தேதி, ராசி, நட்சத்திரம், உங்களது பத்தாவது மதிப்பெண் எல்லாம் சரியாகச் சொன்னாலும் போன் அழைப்புகளை நம்ப வேண்டாம்.

டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளைத் தவிர, எந்த வங்கிப் பணியாளரும் வாடிக்கையாளரை போனில் தொடர்பு கொள்ள மாட்டார்கள். அப்படியே அழைத்தாலும் பணம் அனுப்பச் சொல்லிக் கேட்கவே மாட்டார்கள். சிக்கலில் இருக்கிறேன் என்று பணம் கேட்டு நண்பரிடம் இருந்துவரும் உள்பெட்டி செய்தி அனைத்துமே மோசடிதான். 

பணம் வேண்டும் என்றால் நண்பர்கள் போனில் அழைப்பார்களே தவிர வெறும் செய்தி அனுப்ப மாட்டார்கள். 

பணம் தர வேண்டும் என செல்பேசியில் வரும் எதையும் நம்பாதீர்கள். ‘நீங்கள் வீட்டுக்கு வாருங்கள் பேசுவோம், அல்லது உங்கள் அலுவலகத்திற்கு நானே நேரில் வருகிறேன்’ எனச் சொல்லுங்கள்

ஒருவரிடமிருந்து பணத்தை உடனடியாக மோசடி செய்ய வேண்டுமெனில் அவரை யோசிக்கவிடாமல் செய்ய வேண்டும், இதற்கு இரண்டு உத்திகள் போதுமானவை. முதலாவது அவருக்கு அதீத பயம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும். 

உங்கள் வங்கிக் கணக்கு இன்றுடன் முடக்கப்படுகிறது, நீங்கள் வருமான வரி ஏமாற்றியதால் கைது நடவடிக்கை தொடங்குகிறோம், உங்கள் மகன்/மகள் விபத்தில் சிக்கிவிட்டார், போதைப் பொருள் வழக்கில் அரெஸ்ட் செய்திருக்கிறோம். உங்கள் புகைப்படம் வெளியில் வந்தால் மொத்தச் சமூகமும் சிரிக்கும் என இவையெல்லாம் முதல் உத்தி. போலி லோன் செயலிகளின் கலெக்‌ஷன் பணியாளர்கள் இதைவிட மார்பிங் புகைப்படங்களை அனுப்பி மிரட்டுவார்கள் ஆனாலும் துளி பயமின்றி, காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.

உங்களுக்கு போனஸ் வந்திருக்கிறது, பரிசு விழுந்திருக்கிறது, ஒரு ரூபாய் இன்வெஸ்ட் செய்தால் நூறு ரூபாய், க்ரிப்டோ முதலீடு,  வீடியோவை லைக் செய்தால் காசு, ஸ்க்ரீன் ஷாட் அனுப்பினால் காசு என சதுரங்க வேட்டை வகையில் அழைப்புகள் வந்தாலே உஷாராகிவிட வேண்டும்

இந்தச் சிறிய தொகையை மட்டும் செலுத்தினால் போதும், இத்தனை லட்சம் உங்களுக்குச் சொந்தம்’ என வரும் அத்தனை அழைப்புகளும் மோசடிதான்.

நம்மைப் பணக்காரனாகவோ, அதிர்ஷ்டசாலியாகவோ ஆக்குவதற்காக எந்த நிறுவனமும் தொடங்கப்படுவதில்லை என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும்.

ஒருவேளை மோசடியில் சிக்கிக்கொண்டீர்கள். முதல் முறை பணத்தை இழந்துவிட்டீர்கள் என்றால், ‘இழந்ததை மீட்கிறேன்’ என மீண்டும் மீண்டும் மோசடியாளர்களுக்குப் பணம் அனுப்புவதை நிறுத்துங்கள்.

‘சிறிய தொகை... இதைத் தந்தால் போதும், முந்தைய தொகையும் சேர்த்து கிடைத்துவிடும்’ எனத் தொடர்ந்து பணம் கேட்டுப் பெருந்தொகையை மோசடி செய்வதுதான் நவீன மோசடிகளில் மாறாமல் இருக்கும் ஓர் உளவியல் உத்தி.

முதலில் முதலீடு செய்த ஐம்பதாயிரத்தை மீட்க மீண்டும் ஒரு ஐம்பதாயிரம், இப்போது ஒரு லட்சத்தை மீட்க மீண்டும் ஒரு லட்சம் என உங்கள் கவனத்திற்கு வராமலே ஐந்து லட்சத்தை இழந்திருப்பீர்கள். சிறுகச் சிறுக சேமித்தால் எப்படிப் பெரும் பணம் சேருமோ, அதுபோலவே சிறுகச் சிறுக இழந்தாலும் பெரும் பணம் இழப்பு நேரும்,

ஆகவே மோசடியில் ஒருமுறை பணம் இழந்துவிட்டால், புகார் தந்துவிட்டு ‘போனது போனதுதான்’ எனக் காவல்துறை நடவடிக்கைக்காகக் காத்திருங்கள். மோசடியாளர்கள் மீண்டும் அழைத்துப் பணம் கேட்டு மிரட்டுவார்கள், கெஞ்சுவார்கள், கோபமூட்டுவார்கள், அவர்களது எண்ணை பிளாக் செய்துவிடுங்கள். முதல்முறை இழந்த மன வலி இருக்கத்தான் செய்யும். ஆனால், இரண்டாவது முறை, மூன்றாவது என அனுப்ப அனுப்ப, மொத்தக் கையிருப்பும் கரைந்து வாழ்வு விரக்தியாகிவிடும்.

அதுபோலவே சமூகத்தை இணைத்திருக்கக் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களே இப்போது விலகியிருக்கக் காரணமாக இருக்கின்றன. சதா நேரமும் மொபைலில் மூழ்கிக் கிடப்பதால் அருகில் இருக்கும் மனிதர்கள் தெரிவதில்லை. தெரியாத விஷயங்களுக்குப் பணம் அனுப்பும்போது, ஒரு நண்பரிடமாவது கேட்டு, அதுகுறித்த தெளிவுபெற்ற பிறகு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்.

மேலும் எத்தனை சட்டங்கள் வந்தாலும், தண்டனைகள் கடுமையானாலும், இந்த இணைய வேதாளங்கள் விக்ரமாதித்தனைப் போல நம் முதுகில் அனுதினமும் ஏறத் துடித்துக்கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் மோசடி அழைப்புகள் மூலம் உங்களைக் குறி வைப்பார்கள். அழைப்பை ஏற்ற முதல் நொடியில், ‘ஆளை விடு சாமி, இது மோசடி' என நீங்கள் இனம் கண்டு கொள்ளவேண்டும் 

விழிப்புணர்வே மோசடிகளுக்கு எதிரான ஓர் ஆயுதம்! 

Saturday, August 31, 2024

தேங்கிய நீர்  பாக்டீரியாக்களின் பண்ணை 



நாம், நம் உடல் தகுதி (Fitness) குறித்து அக்கறை காட்டுகிறோமா?

இந்தியாவில் வசிப்பவர்களில் பாதிப் பேர் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாமலும், உடல் தகுதி இல்லாமலும் இருக்கிறார்கள்’ என்று ‘லான்செட்’ எனும் பிரபல மருத்துவ ஆய்விதழ் ஓர் அதிர்ச்சித் தகவலைத் தந்திருக்கிறது. 

ஆண்களில் 42 சதவிகிதம் பேரும், பெண்களில் 57 சதவிகிதம் பேரும் உடல்ரீதியாகச் செயலற்றவர்களாக இருக்கிறார்கள். 

உடல் செயல்பாடு இல்லாத இந்த நிலைமை 2000-ல் 22.3% என இருந்தது. 2022-ல் இது 49% என்று உயர்ந்தது. இந்த நிலைமை நீடித்தால், 2030-ல் இந்தியாவில் 60% பேர் போதுமான உடல் தகுதி இல்லாமல், பலவித நோய்களின் பிடியில் சிக்கிக்கொள்வார்கள்’ என்று அந்த ஆய்வறிக்கை கவலைப்படுகிறது.

இந்த ஆய்வின்படி, போதுமான உடல் உழைப்பும் உடல் செயல்பாடும் இல்லாத மக்கள் வசிக்கும் 195 உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த 25 வருடங்களில் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்களும் பக்கவாத பாதிப்புகளும் 50% அதிகரித்திருக்கின்றன. 

நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 10 கோடியாகவும், நுரையீரல் நோயாளிகளின் எண்ணிக்கை 5.5 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது. 

2016-ல் மட்டும் 2.8 கோடி பேர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கிறார்கள். 1990-ல் புற்றுநோயால் இறந்தவர்கள் 5.5 லட்சம் பேர். இந்த எண்ணிக்கை இப்போது 10.6 லட்சமாக உயர்ந்திருக்கிறது. 

இந்தப் பேராபத்துகளுக்கு, உடல் செயல்பாடு குறைந்துள்ளதும் ஒரு முக்கியக் காரணம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடல் இயக்கம் ஏன் அவசியம்?

‘வளர்ந்தவர்கள் அனைவருக்கும் தினசரி 45 நிமிடம் நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் பயிற்சி உள்ளிட்ட ஒரு காற்றலைப் பயிற்சி (Aerobic exercises) அவசியம். அல்லது வாரத்துக்கு 150 நிமிடம் முதல் 300 நிமிடம் வரை நடைப்பயிற்சி அவசியம்' என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிது. 

குழந்தைகளுக்கும், வளரிளம் பருவத்தினருக்கும் தினமும் 60 நிமிடம் உடற்பயிற்சி தேவை. கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அம்மாக்களுக்கும்கூட இது பொருந்தும். இதன்படி செய்தால், அவர்கள் உடல் தகுதி பெறுவது மட்டுமல்லாமல், மனநலமும் உறுதியாகும். வாழ்க்கைத் தரம் உயரும். 

உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, உடல் பருமன், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றாநோய்களைத் தவிர்க்கலாம். 30% அகால மரணங்களைத் தடுக்கலாம். 8% மனச்சோர்வு மற்றும் மறதி நோயிலிருந்தும் தப்பிக்க முடியும். 

மூத்தோருக்கு எலும்பும் தசைகளும் வலிமை பெற்றுவிடும் என்பதால், நடை தள்ளாட்டமும் தரையில் விழுவதும் தடுக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்படும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம்.


தற்போதைய வாழ்க்கைமுறை மாற்றங்களும் உடல் செயல்பாடு குறைந்து போனதற்குக் காரணம்'' என்கிறார், உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார மேம்பாட்டு இயக்குநர் டாக்டர் ருடிகர் க்ரெச். ‘‘

அமர்ந்தே பார்க்கும் வேலைகள் அதிகமாகி வருகின்றன. ஊரடங்கில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தபோது, ஆன்லைன் ஷாப்பிங்கில் இறங்கினோம். 

இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைப்பேசி பொத்தானைத் தட்டி, ஊறுகாயிலிருந்து ஸ்மார்ட் போன், டிவி வரை எல்லாவற்றையும் வரவழைத்து விடுகிறோம். கடைக்கு நடந்து செல்வதைக் குறைத்துக் கொண்டோம்.

கொரோனா காலத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல், கைப்பேசியைக் கொடுத்து, இணையவழி கற்றலுக்குப் பழக்கப்படுத்தினோம். அவர்கள் கைகளிலிருந்து கைப்பேசியை இப்போது வாங்க முடியவில்லை. வெளியில் விளையாடச் செல்லும் வழக்கத்தைக் கைவிட்டார்கள். 

பெரியவர்கள் ‘வீட்டிலிருந்து வேலை’ செய்ய ஆரம்பித்தோம். கொரோனா முடிவுக்கு வந்த பின்னும், நிறுவனங்கள் ‘வீட்டிலிருந்தே வேலை’ கோட்பாட்டை நம் தலையில் கட்டின. வெயிலில் அலைந்து திரிந்து வேலை செய்வதை ஒப்பிடும்போது அமர்ந்தே வேலை செய்வது சுலபமாகத் தோன்றலாம். ஆனால், இது நம் ஆரோக்கியத்துக்குக் குழி பறிக்கிறது என்பதை எத்தனை பேர் உணர்கிறோம்?’' 

காத்திருக்கும் ஆபத்துகள்

உடல் செயல்பாடு குறைவதால் மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, மறதி நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் தாக்குவது அதிகரிக்கும். மார்பகப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றால் அகால மரணங்கள் அதிகரிக்கும்

2020-க்கும் 2030-க்கும் இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் 50 கோடி மக்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவார்கள். 

Saturday, September 2, 2023

 குழந்தைகளைக் கவனியுங்கள்!


இணையம் என்பது கட்டற்ற பெருவெளி. அதில் தேடுதல் கடினம். ஆனால், தடயம் எப்போதும் உண்டு. ஒருமுறை பதிவு செய்துவிட்ட எதையும் எளிதாக அழித்துவிடாது. ஒரு பக்கம் மத்திய அரசு சமூக வலைதளப் பக்கங்களுக்குத் தரும் நெருக்கடிகளுக்கு எதிராக கருத்துச் சுதந்திரத்தின் பக்கம் நிற்க வேண்டியதிருக்கிறது. இன்னொரு பக்கம், இப்படியான வசவுச் சொற்களால் சூழும் அபாயங்களை எதிர்த்தும் குரல் எழுப்ப வேண்டியதிருக்கிறது. இணைய பாலியல் அத்துமீறல்களும், வசவுச் சொற்களும் எந்தச் சூழலிலும் கருத்துச் சுதந்திரத்தில் வராது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளுதல் அவசியம்.

சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் மதுமிதாவிடம் பேசினேன். ‘‘முதலில் நாம் இந்த விஷயத்தில் குழந்தைகளைக் குறை சொல்ல முடியாது; கூடாது. ஏனெனில், அவர்களுமே இத்தகைய பிரச்னைகளில் தங்களை அறியாமலே பாதிக்கப்பட்டவர்கள்தான். அனைத்துமே பெற்றோர்களின் வளர்ப்பில்தான் இருக்கிறது. அவர்கள் ஒரு பக்குவப்படும் மனநிலைக்கு வரும்வரையில் (டீன் ஏஜ் தாண்டும் வரை) அவர்களைக் குற்றவாளிகளாக்குவது அபத்தம். குடும்பத்திலும் சமுதாயத்திலும் நடக்கும் விஷயங்கள்தான் ஒரு குழந்தையை உருவாக்குகின்றன. தனக்கான தனித்துவம் உருவாகும் வரை, ஒரு குழந்தை கற்றுக்கொள்வது எல்லாமே இந்த மாதிரியான புறக்காரணிகள் மூலம்தான். ஆரோக்கியமான மனநிலையை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களிடம் ஒரு விஷயத்தைத் திணிப்பதால், இங்கு எதுவும் மாறப்போவதில்லை. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மனநலம் சார்ந்த விஷயங்களையும் சேர்த்துக் கற்றுத்தருவது அவசியம்.

CyberSpace என்பது நம்மால் கற்பனை செய்ய முடியாதது. வதந்திகள் செய்திகளாக வருவது தொடங்கி, எல்லா ஆபத்துகளுமே இணையவெளியில் அதிகம். நேரில் ஒருவர் இதுமாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபடும்போது, அவரை நாம் கண்காணிக்க முடியும். அதுவொரு தொடர்ச்சியான நிகழ்வா, அல்லது ஒருமுறை மட்டுமே நடந்த அசம்பாவிதமா, அதிலிருந்து எப்படித் தப்பிப்பது போன்றவற்றை ஒருமாதிரி கணிக்க இயலும். ஆனால், இணையவெளியில் இது சாத்தியமில்லாத ஒன்று. அநாமதேய நபர்கள் அதில் அதிகம். இந்த எல்லாவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். குழந்தைகளைத் தனிமையில் அதிக நேரம் விடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் Private Space என்பது முக்கியம்தான் என்றாலும், அதிக நேரம் தனிமையில் இருப்பது, அதுவும் அந்த வயதில் ஆபத்தானது. குழந்தைகளிடம் சின்னச் சின்ன விஷயங்கள் பற்றி உரையாடுங்கள். அவர்களிடம் ஒரு சூழலைக் கொடுத்து, அதுகுறித்துக் கருத்துக் கேளுங்கள். பெற்றோர்கள் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டிய நேரமிது.

சிறுவர்களின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். திடீரென கோபப்படுவார்கள். தொடர்ச்சியாக இணையத்தில் சில விஷயங்களைப் பார்ப்பதுகூட இதற்கான காரணிகளாக இருக்கலாம். PUBG, free fire போன்று வன்முறையைத் தூண்டும் விளையாட்டுகள் இங்கு எக்கச்சக்கம். ஒரு குழந்தை எத்தனை மணி நேரம் இந்த விளையாட்டுகளுக்கு ஒதுக்குகிறது என்பதையும் யோசிக்க வேண்டும். பெற்றோர்கள் சில விஷயங்கள் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். அந்தரங்க உறுப்புகள் பற்றிப் பேசக்கூடாது என்கிற காலத்தை எல்லாம் நாம் கடந்து பல யுகங்கள் ஆகிவிட்டது. இப்போது யாரும் பிரவுசிங் சென்டர் செல்வதுமில்லை. எல்லாமும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. குழந்தைகளுக்கு இணையாக பெற்றோர்களும் அப்டேட் ஆக வேண்டிய சூழலிது. செமினார், புத்தகங்கள் என இன்னும் அவர்களுக்கு விளக்கவுரை கொடுத்துக்கொண்டிருப்பது வீண். பத்து வயது வரை, தன் அப்பாதான் சூப்பர் ஹீரோ என நம்பும் ஒரு சிறுவன், அதன் பின் தன் அப்பா நல்லவர் என நம்ப ஆரம்பிப்பது முப்பது வயதைக் கடந்த பின்னர்தான். இடைப்பட்ட காலத்தில்தான் எல்லாமும் தலைகீழாக மாறிவிடுகின்றன. நல்லதைக் கண்டாலே வெறுத்து ஒதுக்கும் காலமது.

நான் பெரிய ஆள்’ என்கிற நிலையிலிருந்து குழந்தைகளை அணுகுவதே தவறானது. அதுவும் எதிர்மறைக் கருத்துகள் எளிதாகச் சென்றடையும் இக்காலத்தில், இம்மாதிரியான அணுகுமுறை தவறான பாதைக்கே இட்டுச் செல்லும். ‘சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக்கூடாது’ என முற்றிலுமாக அவர்களுக்கு நீங்கள் தடா சொன்னால், வேறு வழிகளில் அவர்களால் இதை எளிதாகவே அணுக முடியும். அதில் பாதிப்பு இன்னும் அதிகம். முதலில் பெற்றோர்கள், குழந்தைகளின் மொழியைப் புரிந்துகொள்ளுதல் அவசியம். ‘எம்டன் மகன்’ டைப் அப்பாவில் இருந்து யாரையும் சட்டென எஸ்.பி.பி பாணி அப்பாவாக மாறச் சொல்லவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் இருக்கும் நல்லதோடு, கெட்டவற்றையும் சொல்லிப் புரியவையுங்கள்’’ என்கிறார் அவர்.

ஒரு சிறுவன் செய்யும் தீய செயலை ஆயிரம் பேர் ஊக்குவிக்கும்போது, அவனுக்கு அதில் இருக்கும் தவறு கண்ணைவிட்டு மறைந்து, மரத்துப்போகும். ஆகவே பெற்றோர்களே, உரையாடத் தொடங்குங்கள்

 கலைஞர் எனும் பேராளுமை

இந்தியாவில் கலைஞருக்கு நிகரான ஆட்சியாளர்கள் மிகச்சிலரே. கலைஞரின் பலம் பெரியாரின் சமூகநீதி சிந்தனைகளையும் அண்ணாவின் அரசியல் சிந்தனைகளையும் முற்றாகச் செரித்து தனது ஆளுமையின் பகுதியாக்கிக்கொண்டதுதான். அவரால் எந்த நிலையிலும் இவர்களின் சிந்தனைப் புலம் துறந்தோ, மறந்தோ இயங்கவே முடிந்ததில்லை. அரசியல் சமரசங்களிலும் அவர்களின் அடிப்படைகளை அவர் கைவிட்டாரில்லை.


ஆட்சியாளராக கலைஞரின் சாதனைகளைப் பட்டியலிட முயல்வது வியர்த்தம். ஒற்றை வரியில் சொல்லலாம். இன்று தமிழ்நாடு கண்டிருக்கும் அரசியல், சமூகப் பொருளாதார மாற்றங்களின் ஒவ்வொரு இழையிலும் அவரது பங்களிப்பு இல்லாமல் இருக்கவே இருக்காது. 
மாநில சுயாட்சி, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், 
ஜாதி மறுப்பு திருமணங்களுக்குச் சலுகை, 
மகளிர் 30% (இப்போது 50%) உள்ளாட்சி ஒதுக்கீடு சிறப்புரிமைகள், 
மூன்றாம் பாலினத்தவர் அங்கீகாரம், 
துறைசாரா தொழிலாளர் நல வாரியங்கள் என்று அது நீளும். 

மாற்று ஆட்சியாளர்களது ஓரிரு மக்கள் நலம் சார்ந்த முன்னெடுப்புகளைச் செழுமைப்படுத்துவதே அவர் பாணி/ பணி. குறிப்பாக சமூகநீதி- இடஒதுக்கீடு தளத்தில் அவர் செய்த மாற்றங்கள் பெரிது. உண்மையைச் சொன்னால் சமூகநீதிக் கோட்பாட்டின் வேரில் வெந்நீர் ஊற்ற முனைந்த பிற ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, மக்களைத் திரட்டியும், சட்டப் போராட்டங்களை நடத்தியும் தடுத்தவர் கலைஞர். ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தபோது செயல்பட்டும், ஆட்சியில் இல்லாதபோது ஆட்சியாளர்கள் பெரியார்/ அண்ணா கோட்பாடுகளை விட்டு விலகியபோது தடுத்தும் ஐம்பதிற்கும் மேலான ஆண்டுகளாக ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தொடர்ச்சியை உறுதி செய்தவர் கலைஞர்.

சமூகநீதி ஆட்சியென்பதால் ஒரு சாராருக்கு மட்டுமான ஆட்சியல்ல கலைஞருடையது. 

பொது விநியோகத் திட்டம், 

பேருந்துகள் அரசுடைமையாக்கம், 

கூட்டுறவுத்துறை விரிவாக்கம், 

கிராமப்புறம் முழுதும் ஆரம்ப சுகாதார மையங்கள், 

மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி, 

அனைத்து ஜாதியினருக்குமான சமத்துவபுரம், 

தொழில்துறை வளர்ச்சிக்காக ஐம்பது கிலோமீட்டருக்கு ஒரு தொழிற்பேட்டை, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், 

ஸ்பிக் போன்ற அரசு-தனியார் கூட்டுத்துறை, 

எல்காட், 

மாநில அரசின் கணினிக் கொள்கை, 

சென்னை - மதுரை - கோவை என டைடல் பார்க்குகள், 

கிராமப்புற மாணவர்களுக்கு சலுகை, 

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை, 

தமிழில் கற்றோருக்கு முன்னுரிமை... 

இலவசங்கள் என இழித்துரைத்துவிட்டு இன்று இந்தியாவே பின்பற்றும் திராவிட மாடல் ஆட்சிக்கு வலுவான அடித்தளமிட்டவர் கலைஞர் எனும் திராவிட சிந்தனைச் சிற்பியே. வாய் ஓயாமல் பெரியார், அண்ணா பெயரை உச்சரித்து ஈரமுள்ள / நன்றியுள்ள மக்கள் நெஞ்சில் தனக்கும் அவர்களுக்குமான நீங்காத இடம் பிடித்தவர் கலைஞர்.

Sugar Free - Health free 

உடல் பருமனாக இருப்பவர்கள், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுடன் வாழ்பவர்கள் சர்க்கரை கலந்த பானங்கள் குடித்தாலோ, உணவுகளைச் சாப்பிட்டாலோ, அவர்களது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். அதனால் இன்சுலின் எதிர்ப்பு நிலை இன்னும் அதிகமாகும். எனவே அவர்கள் சர்க்கரை அல்லாத செயற்கை இனிப்புச் சுவைகூட்டிகளை உணவிலும் பானங்களிலும் கலந்து உட்கொள்வது வழக்கம். இவை தங்களுக்கு ஆரோக்கியமானவை என்றும், நன்மை தருபவை என்றும் இவர்கள் நம்பிவந்தனர். இந்த நம்பிக்கையைத் தகர்த்திருக்கிறது, சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்.


‘குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் உடல் பருமனைக் குறைப்பதற்கோ, நீரிழிவு போன்ற தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கோ சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் பயன் தருவதில்லை. இவற்றால் உடலுக்குப் பாதகமான விளைவுகள் உருவாகக்கூடும். இவற்றைத் தொடர்ந்து உபயோகிப்பதால் நீரிழிவு மற்றும் இதய நோய் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் தன்மையும் அதிகரிக்கிறது' என்கிறது அந்த அறிவுறுத்தல்.

சுகர் ஃப்ரீ
‘கலோரி இல்லாதது' என்றும் ‘சுகர் ஃப்ரீ' என்றும் அடையாளப்படுத்தி, இனிப்புச் சுவையைக் கூட்டுவதற்காக சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் பல உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. ஜீரோ கலோரி உணவுகள்/பானங்கள், சாக்லேட்கள், பபுள் கம், ஸ்வீட் வகைகள், கேக்குகள், பிஸ்கட்டுகள், பிரெட் போன்றவற்றிலும் இவை சேர்க்கப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தால் சாக்கரின், அஸ்பார்டேம், அசிசல்ஃபேம், சுக்ராலோஸ், நியோடேம், ஐசோமால்டோஸ் போன்ற சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை கலக்கப்பட்ட உணவை உண்ணும்போதும், பானங்களைப் பருகும்போதும், உடல் எடை ஏறாது என்றும் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்காது என்றும் நம்பி மக்கள் இவற்றை நுகர்கின்றனர்.

ஆனால், கலோரிகள் இல்லாத இத்தகைய இனிப்புச் சுவை கூட்டப்பட்ட உணவுகளையும் பானங்களையும் உட்கொள்ளும் ஒருவர், இவற்றில் வரம்பு மீற அதிக வாய்ப்புள்ளது. இதுவரை இத்தகைய இனிப்புச் சுவைகூட்டிகளை வைத்துச் செய்யப்பட்ட ஆய்வுகளில், இவை பாதுகாப்பானவை என்று அறியப்பட்டாலும், வரம்பு மீறி தொடர்ந்து நீண்ட நாள்கள் இவற்றை உட்கொள்ளும்போது கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளுக்கும் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடும் என்பது தெரியவந்துள்ளது.

இத்தகைய கலோரி இல்லாத உணவுகளை உண்பதால் ஒருவருக்கு வயிறு நிரம்பாத நிலையே இருக்கும். அதனால் அவர் மேலும் பசி கொண்டு மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதற்கு வாய்ப்பு அதிகம். அதிலும் சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் சேர்க்கப்பட்ட ஸ்வீட், கேக், பானங்களால் பிரச்னை இல்லை என்று நம்பி அவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது உடலில் மாவுச்சத்து அளவு அதிகரித்து அதனால் உடல் பருமன் மற்றும் நீரிழிவு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.

இந்த இனிப்புச் சுவைகூட்டிகளில் நாம் உண்ணும் இயற்கையான சர்க்கரையைவிட 200 முதல் 13,000 மடங்கு வரை அதிக தித்திப்பு இருக்கிறது. இவை கலந்த உணவுகளை உண்பதன் மூலம் மூளையில் இனிப்புச் சுவைமீது எப்போதும் ஒருவித போதைத் தன்மை இருந்துகொண்டே இருக்கும். இதன் விளைவாகத் தொடர்ந்து இனிப்பை உண்ணும் உந்துதல் ஏற்பட்டபடி இருக்கும். இந்த உந்துதலால், இவற்றைத் தொடர்ந்து பருகுவதும் உண்பதும் தொடரும். எடையும் கூடும், நீரிழிவும் கட்டுப்பாடற்றுப் போகும்.

ஒருவர் எடையைக் குறைக்க எண்ணினால் அல்லது நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினால், சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி, தேன், பனங்கற்கண்டு ஆகியவற்றை நிறுத்துவதுடன் செயற்கையான சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகளையும் கட்டாயம் நிறுத்த வேண்டும். இனிப்புச் சுவை தரும் அனைத்து உணவுகளையும் முழுவதுமாக நிறுத்துவதன் மூலம் மட்டுமே மூளையை சர்க்கரை உந்துதல் இல்லாதபடி முழுவதுமாக டீ-அடிக்‌ஷன் செய்ய முடியும். மாறாக சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதால் க்ரேவிங் அதிகமாகவே செய்யும்.

இனிப்பு க்ரேவிங் ஏற்படுவதைத் தவிர்க்க புரதச்சத்தும், நன்மை செய்யும் கொழுப்புச்சத்தும் நிரம்பிய உணவுகளான முட்டை, மாமிசம், மீன், பயறு வகைகள், கடலை, பனீர் போன்றவற்றை உண்ணலாம். புரதச்சத்து மிக்க உணவுகளை உண்ணும்போது அவை இரைப்பையில் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் வயிறு நன்றாக நிரம்பும். அடிக்கடி பசிக்காது என்பதால் மீண்டும் மீண்டும் உண்ணும் தேவையும் இருக்காது. தினசரி ஒரு மணி நேரமேனும் வாக்கிங், சைக்கிளிங் போன்ற உடல் உழைப்பு செலுத்துவதன் மூலம் இன்சுலின் எதிர்ப்பு நிலையைச் சரிசெய்ய முடியும்.

சுகர் ஃப்ரீ
மெக்னீசியம் குறைபாட்டினால் அதிக இனிப்பு உண்ணும் உந்துதல் ஏற்படக்கூடும். மெக்னீசியம் சத்து நிரம்பிய நட்ஸ் வகைகள், சியா விதை, பூசணி விதை, கீரை வகைகள், வாழைப்பழம், அவகாடோ, மீன்களை உண்பதன் மூலம் இந்த உந்துதலைக் கட்டுப்படுத்த முடியும். இனிப்புச் சுவையுடன் சத்துகளும் வேண்டுமென்றால், அவ்வப்போது மிதமான அளவில் பழங்கள் உண்பது நல்லது. பழங்களிலும் வரம்பு மீறுவது நன்மையன்று. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் அதிகம் பழுக்காத பதத்தில் பழங்களை உண்பது சிறந்தது.


சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் மூலம் நன்மையைவிடத் தீமைகளே அதிகம் என்பதால், அவற்றைக் கைவிடுமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.