Thursday, April 7, 2016

உங்கள் சம்பளத்தின் ஒவ்வொரு ரூபாயிலும் அரசியல் இருக்கிறது தமிழ் சினிமா கலைஞர்களே!

“உனக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...?” - இது நம் அனைவருக்கும் பிடித்தமான வசனம். இதை வெறும் நகைச்சுவை வசனமாக மட்டும் கடந்து சென்றுவிட முடியாது. நம் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் விஷயங்களில் இதைப் பொருத்தி பார்த்துக் கொள்ள முடியும் என்பதுதான் இதன் தனிச் சிறப்பு. இப்போது இந்த வசனம் மிகச் சரியாக நடிகர் சங்கத்துக்கு பொருந்துகிறது. ஆம். சாமானியனின் வாழ்வாதார பிரச்னைகளை துச்சமாக மதித்த, மதிக்கின்ற நடிகர்கள்,  அவர்களுக்கொரு பிரச்னை என்றவுடன் கொந்தளிக்கிறார்கள். 

கலைஞனுக்கு அரசியல் வேண்டாமா...?
இங்கு அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. நான் அரசியல் என்று குறிப்பிடுவது கட்சி அரசியலையோ, தேர்தல் அரசியலையோ இல்லை. நீங்கள் தினமும் காலையில் விழித்து பல் துலக்க துவங்குவதிலிருந்தே, உங்களுக்கும் அரசியலுக்குமான தொடர்பு துவங்கி விடுகிறது.  வேப்பங் குச்சியை பிடுங்கிவிட்டு, நம் கைகளில் பற்பசையை திணித்ததில் ஒரு வணிக அரசியல் இருக்கிறது.கேப்ப்க் களி மறைந்து நம் உணவு தட்டை நூடுல்ஸ் ஆக்கிரமித்து பின் இப்போது நவ தானியங்கள் உடலுக்கு மிக நல்லது என்று சொல்வதில் ஒரு உணவரசியல் இருக்கிறது. நாம் உடுத்தும் உடை எத்தனை நீர் நிலைகளை அழித்தது என்பதில் சூழலியல் அரசியலும், பெரு நிறுவனங்களின் அரசியலும் ஒளிந்து இருக்கிறது. ஆகையால், இங்கு அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை உயர்திரு திரைக் கலைஞர்களே. 

ஆனால், நீங்கள் இது எதையும் கணக்கில் கொள்ளாமல், “காவிரி பிரச்னை உள்ளிட்ட விஷயங்களில் அரசாங்கம்தான் செயல்பட வேண்டும். அரசியல் விவகாரங்களில் கண்டிப்பாக நாங்கள் பங்கேற்க மாட்டோம்...” என்கிறீர்கள். அதாவது, திரை கலைஞனுக்கும், சாமானியனுக்கும் உள்ள தொடர்பு அந்த மூன்று மணி நேர சினிமா என்பது மட்டும்தான் என்பது உங்கள் வாதம். சரி. ஒரு பேச்சுக்கு உங்கள் வாதம் சரி என்று வைத்துக் கொண்டால் கூட, பின் இப்போது ஏன் நட்சத்திர கிரிக்கெட் விளையாடி, டிக்கெட் விற்பனை, விளம்பர வருமானம் என மக்கள் பணத்தில் நடிகர் சங்கக் கட்டடத்தைக் கட்ட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்...? உங்கள் அடிப்படை தேவைக்காகக் கூட ஒரு சாமானியனின் பாக்கெட்டில்தான் கை விடுவீர்கள் என்பது எவ்வகை நியாயம். 

பாலனுக்கு உதவுவது மட்டுமில்லை அரசியல்:
உங்களை தட்டையாக விமர்சித்துவிடவும் முடியாது. மழை வெள்ளத்தின் போது மக்களுக்காக உங்கள் கரம் நீண்டது உண்மைதான். தஞ்சை விவசாயி பாலனுக்கு விஷால் உட்பட உங்களில் சிலர் பண உதவி செய்தீர்கள். மகிழ்ச்சிதான். ஆனால், இதை நீங்கள் கணக்கு காட்டி தப்பித்துவிட முடியாது.  இது போன்ற மனிதாபிமான உதவிகள் வரவேற்கதக்கதுதான் என்றாலும், இது ஒருபோதும் போதுமானதாக இருக்கப் போவதில்லை. விவசாயி பாலன்களின் சிறு கடனுக்கு பின்னாலும், விஜய் மல்லையாக்களின் பெரும் வாரா கடன்களுக்குப் பின்னாலும், ஒரு மிகப் பெரிய அரசியல் இருக்கிறது. ஒரு வேளை நீங்கள் அதைக் கண்டித்து அழுத்தமான கருத்துக்களைத் தெரிவித்து இருந்தீர்களானால், நீங்கள் நிச்சயம் நிஜ கதாநாயகனாக உயர்ந்து இருப்பீர்கள். ஆனால், நீர் வளத்தைச் சுரண்டும் குளிர்பான விளம்பரங்களில் நடித்துக் கொண்டே, பாலனுக்காக  கண்ணீர் வடிப்பதை எந்த கணக்கில் சேர்ப்பது?   

’எங்களுக்குத்தான் அரசியல் வேண்டாம் என்கிறோமே... நாங்கள் சாதாரண கலைஞர்கள்.ஏன் எங்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்...?’ என்பது உங்கள் வாதமாக இருக்குமாயின், அதை எங்களால் ஒருபோதும் நிச்சயம் எற்றுக்கொள்ள முடியாது. உங்களை பற்றி நீங்களேதான் ஒரு பிம்பத்தை கட்டமைத்தீர்கள்; அதை சாமானிய ரசிகனை நம்ப வைத்தீர்கள். நீங்கள் ரசிக மன்றங்களை ஊக்குவித்தீர்கள். உங்கள் திரைப்பட விளம்பர பதாகைகளில் பால் அபிஷேகம் செய்யும் போது ரசித்தீர்கள். சொல்லப்போனால் அந்த சாமானிய வெள்ளந்தி ரசிகன், உங்கள் ஒவ்வொரு பிரச்னையிலும் துணை நின்றிருக்கிறான். உங்களைத் தவறாக பேசியவர்களைக் கொலை கூட செய்திருக்கிறான். இதையெல்லாம் தடுத்து, உங்கள் ரசிக மன்றங்களை கலைத்து, நான் வெறும் சினிமா கலைஞன் மட்டும்தான், ’எனக்கு வேறு எந்த சமூக பிரக்ஞையும் இல்லை’ என்று சொல்லி இருப்பீர்களாயின், அவன் உங்களிடம் எதையும் எதிர்பார்க்கப் போவதில்லை. ஆனால், நீங்கள் அதையெல்லாம் செய்யாமல், மீண்டும் உங்களுக்கொரு பிரச்னை என்றவுடன், அவனைப் பயன்படுத்திக் கொள்ள, அல்லது அவனை மேலும் சுரண்ட நினைப்பது எவ்வகை நியாயம் என்று நீங்களே உங்கள்  ரசிகர்களுக்கு விளக்குங்கள்! 

அண்டை மாநிலங்களிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்:
அண்டை மாநிலங்களில், எந்த சமூகப் பிரச்னை என்றாலும், அங்கு முதலில் ஒலிப்பது கலைஞர்களின் குரலாகத்தான் இருக்கும். குறிப்பாக மலையாள சினிமா கலைஞர்கள். அவர்கள் சினிமாவில் மட்டும் சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில்லை. அவர்கள் சினிமாவிற்கு வெளியேயும் சமூகப் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் மக்களுடன் மக்களாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் மக்களின் பிரச்னைகளை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அதை சினிமாவிலும் பிரதிபலிக்க முடிகிறது. அங்கு ஒரு நிகழ்வில் அமைச்சர் கலந்து கொள்கிறார். அவர் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர். குத்து விளக்கு ஏற்றுவது தம் மதத்துக்கு எதிரானது என்று குத்துவிளக்கு ஏற்ற மறுக்கிறார். ஆனால், அதை அந்த மேடையிலேயே நடிகர் மம்முட்டி கண்டிக்கிறார். இந்த அளவிற்கு அவர்களால் தைரியமாக செயல் படமுடிகிறது. அவர்கள் அட்டைக்கத்திகளாக இருப்பதில்லை.  

மலையாள திரை உலகம் மட்டுமில்லை, அதிகம் வளர்ச்சி அடையாத கன்னட திரை உலகத்தினரும்  சமூக பிரச்னைகளுக்கு அழுத்தமாக குரல் கொடுத்து வருகிறார்கள். (அதற்காக இனவெறி, மொழி வெறி போராட்டங்களை இங்கு நியாயப்படுத்தவில்லை!) ஆனால், நீங்கள் உங்களை நீங்களே தேவ தூதர்களாக கருதி, மக்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டீர்கள். அதனால்தான் சென்னையில் நடந்த ஹிதேந்திரன் கதையை டிராஃபிக்காவும், மதுரை நாராயண கிருஷ்ணன் கதையை உஸ்தாத் ஓட்டாலாகவும் மலையாள கலைஞர்கள் முந்திக் கொண்டு எடுக்கிறார்கள்.  

திருட்டு டிவிடியும், சினிமா டிக்கெட்டும்:
திருட்டி டிவிடிகளுக்கு எதிராகப் பொங்கும் கலைஞர்களே... உங்களின் கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இங்கு கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்ட பின்பும், சினிமா டிக்கெட் விலை குறையாமல் இருக்கிறதே, அதற்காக எப்போது பொங்கப் போகிறீர்கள்...? கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டால், நியாயமாக டிக்கெட் விலை குறைய வேண்டும். ஆனால், இங்கு எல்லா படங்களுக்கும் ஒரே விலைதான். கேளிக்கை வரி ரத்து செய்யப்படாத பாபநாசம் படத்திற்கும் 120 ரூபாய் டிக்கெட் தான், கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்ட காக்கா முட்டைக்கும் அதே 120 தான்.
 படப்பிடிப்புக்குச் செல்லும் இடமெல்லாம், திருட்டு டிவிடிக்கு எதிராக காவல் துறையில் புகார் அளிக்கும் விஷால் அவர்களுக்கு, சென்னை திரையரங்கங்கள் அடிக்கும் கொள்ளை பற்றி தெரியாதா... இல்லை அவர் திரையரங்கத்திற்குச் செல்லாமல், திருட்டு டிவிடியில்தான் படம் பார்க்கிறாரா...? உங்கள் ரசிகன் இதனால் நேரடியாகப் பாதிக்கப்படுகிறான். உங்களுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. ஆனால், உங்களுக்கொரு பிரச்னை என்றவுடன், அவன் பாக்கெட்டிலேயே தஞ்சமடைவது என்ன நியாயம்...?

முதலில் கொஞ்சம் இறங்கி வாருங்கள். மக்களோடு மக்களாக இருங்கள். அவர்களின் பிர்ச்னைகளை புரிந்து கொள்ளுங்கள். அதை தீர்க்க வழிகள் இருக்கிறதா என்று பாருங்கள். முடியவில்லையா, காந்தி, “Exhibit the Injustice" என்பார். அதாவது தமக்கு நேரும் அநீதியை பொது வெளிக்கு எடுத்துச் செல்வது. அது உங்களால் இயலும். மக்களுக்கு நடக்கும் அநீதிகளை எந்த சமரசமும் இல்லாமல் பேசுங்கள். பின்பு வாருங்கள், நீங்கள் கஷ்டப்பட்டு கிரிக்கெட் ஆட வேண்டும் என்று இல்லை. மக்கள் நீங்கள் கேட்காமலேயே பணத்தை வாரிக் கொடுப்பார்கள். 

 உங்கள் ரசிகனாக இருக்கிறான் என்கிற ஒரே காரணத்திற்காக, அவனை மேலும், மேலும் சுரண்டாதீர்கள். இது நீங்கள், உங்கள் ரசிகனுக்கு செய்யும் பச்சைத் துரோகம்

No comments:

Post a Comment